மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மனசின் பக்கம் : வெயிலுக்கு அஞ்சான் கலைக் குழந்தை

ங்கு சுட்டெரித்த வெயிலின் கடுமை இரண்டு நாட்களாக குறைந்திருக்கிறது. காலையில் வேர்க்க விறுவிறுக்க நடந்து செல்லும் நிலை மாறி கொஞ்சம் காற்று அடிக்கிறது. மதியம் வரும் போதும் அந்தளவுக்கு சூடு இல்லை என்றே சொல்லலாம். போன வாரத்தில் இரண்டு நாட்கள் 52 டிகிரிக்கும் மேல் இருந்தது. மாலையில் வெப்பக்காற்றின் தன்மையும் கொஞ்சம் மாறியிருக்கிறது. முன்னர் வெளியே சென்றால் மழையில் நனைந்தது போல்தான் அறைக்குத் திரும்ப வேண்டும். தற்போது அடிபம்பில் தண்ணீர் அடித்துப் பிடித்துக் குளித்தது போல் பட்டும்படாமலும்தான் வேர்க்கிறது. 

லையாத கனவுகள் தொடர்கதையை நாமும் தொடர் எழுதிப் பார்க்கலாம் என விளையாட்டாய் ஆரம்பித்து 77 பகுதிகள் வளர்ந்து விட்டது. இந்தத் தொடரைப் பொறுத்தவரை ஒரு சிலரின் ஊக்கத்தின் பேரில்தான் இத்தனை பகுதிகளைக் கடந்திருக்கிறது என்பது உண்மை. இன்னும் இரண்டு மூன்று பகுதிகளில் முடித்து விடலாம் என்று நினைத்திருக்கிறேன். இந்தத் தொடரை முன்கூட்டியே திட்டமிட்டு நகர்த்தவில்லை என்று பதிவிடுகிறேனோ அப்போதுதான் அந்தப் பகுதியை எழுதுவேன். இதுவரை இரண்டு பகுதிகளைக் கூட ஒரே நேரத்தில் எழுதியதில்லை.  பெரும்பாலும் இரவில் பதிவிடுவதால் சமையல் முடித்து சாப்பிட்டு படுக்கப் போகும் போது எழுதி அப்போதே பதிவிடுவேன். இதில் எழுத்துப் பிழைகள் இருக்கலாம்... கதை கூட பல இடங்களில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கலாம். ஒரு சிலருக்கு கதையின் போக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம். இப்படி எத்தனையோ இருக்கலாம்கள் இருந்தாலும் இது எனது கன்னி முயற்சிதான். கதைக்கு எனது சகோதரர்கள் யோகராஜா, தனிமரம் நேசன், கரந்தை ஜெயக்குமார் ஐயா, மேனகா சத்யா அக்கா மற்றும் சிலர் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகிறார்கள். இவர்களைத் தவிர குடந்தையூர் சரவணன் அண்ணன் உள்ளிட்ட சிலரிடம் கதை குறித்த உண்மையான கருத்தைக் கேட்டிருக்கிறேன். கலையாத கனவுகள் எல்லோர் மனதையும் தொட்டதா இல்லையா என்பதை உறவுகளின் விமர்சனங்கள் மூலமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

ங்கள் ஊரில் விவசாய நிலம் எல்லாம் கருவை மரங்கள் நிறைந்து பார்க்கவே பரிதாபமாகக் காட்சியளித்தது. கடந்த சில வருடங்களாகவே பக்கத்து ஊர் கோவில் மாடுகளுக்குப் பயந்தே விவசாயம் செய்யாமல் விட்டு விட்டதால் வந்த வினை இது. கண்மாய் நிறைந்தாலும் வாய்க்காலில் தண்ணீர் ஓடி வருடங்களாகிவிட்டது. இப்போது கருவை மரங்களை ஒழிக்கும் இயக்கம் ஒன்று எங்கள் ஊரில் கருவை மரங்களை வெட்டி தூரைப் பறித்து எடுத்துச் செல்கிறோம் என வந்திருப்பதாக அம்மா சொன்னார்கள். எப்படியோ விவசாய நிலங்கள் கருவையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டால் சரி.

சூர்யாவின் அஞ்சானுக்கு வலையுலகம் கொடுத்த வரவேற்பில் அதிர்ந்து போய் அந்தப் பக்கம் போகாமலே அஞ்சி ஒதுங்கியாச்சு. ஒரு நல்ல நடிகனுக்கு ஏன் மாஸ் ஹீரோ ஆகணுமின்னு ஆசை. இதெல்லாம் நமக்கு சரியா வராதுன்னு தெரிஞ்சிருந்தும் நடிச்சிட்டு அப்புறம் பேட்டியில எல்லாரும் படத்தைப் பார்த்துட்டுப் பேசுங்கன்னு சொன்னா எப்படி... விரும்புறவன் பணம் கொடுத்துப் பார்க்கப் போறான்... நீங்க படம் எடுத்துட்டுட்டீங்கன்னு எங்க காசுல படம் பாத்து அது குப்பையா இருந்தாலும் வசூல் வேட்டை காட்டணும்ன்னா எப்படிங்க சிவக்குமாரின் புதல்வரே. இதுல லிங்குச்சாமி அவர்கள் இது குழந்தைகளுக்கான படம்ன்னு வேற போட்டி கொடுக்கிறாரு... சமந்தாவை உரிச்சி வச்சிருக்கிறதும்... பொட்டுப் பொட்டுன்னு சுடுறதுமா குழந்தைகளுக்கான படம்.? இதை நான் கேக்கலை... படம் பார்த்த நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். அவரது கேள்வி நியாந்தானுங்களே.

ன்று நண்பர் ஒருவருடன் பேசும் போது எனக்கு இன்னொரு குழந்தை வேணும்ன்னு ஆசைங்க... ஆனா என்னோட மனைவிக்கு விருப்பமில்லை... அவளைப் பொறுத்தவரை ஜாலியா இருக்கணும்... சும்மா குழந்தை குட்டீங்கன்னு பெத்துக்கிட்டு கஷ்டப்படக்கூடாதுன்னு சொல்லுவா... முதல் குழந்தையே ரொம்ப யோசனையோடதான் பெத்துக்கிட்டா.... இப்ப நானும் சரி ஒண்ணு போதும்ன்னு முடிவுக்கு வந்துட்டேன்னு சொன்னார். ரெண்டாவது வேணுங்க... இப்பவே பசங்களுக்கு உறவு முறையெல்லாம் மறந்துருச்சு.... ஒண்ணு மட்டும் வச்சிருந்தா பின்னால அதுக்கு உறவுகளே இல்லாமப் போயிடும்... கூட ஒண்ணு இருந்தா கஷ்டமோ நஷ்டமோ நமக்குன்னு ஒரு உறவு இருக்குன்னு உரிமையோட பேச முடியும் என நான் சொன்னதும் உண்மைதாங்க... ஆனா என்னோட மனைவிக்கு அதுல விருப்பம் இல்லைங்க என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

சென்ற வாரத்தில் பஹத் பாசில் நடித்த 'கடவுளின் சொந்த நாடு (God's Own Country) படம் பார்த்தேன். ஒரு தீர்ப்பு நாளில் நடக்கும் மூன்று கதைகள்தான் படம். மூன்று கதைகளும் ஒரு புள்ளியை நோக்கி நகர்கின்றன. ஆரம்பத்தில் மெதுவாகச் செல்லும் கதை அதில் பயணிக்கும் கார்களைப் போல மெல்ல மெல்ல வேகமெடுத்தது. மிகப் பிரமாதம் என்று சொல்லும் அளவுக்கு இல்லாவிட்டாலும் படம் பார்க்கலாம் ரகமே. பஹத்துக்கு இதில் அதிகம் நடிப்பில்லை என்றாலும் இது போன்ற சிறிய கதாபாத்திரங்களை துணிந்து ஏற்று நடிக்கிறார் என்பது பாராட்டுக்குரியது. மலையாளத்தில் இன்னும் சில வருடங்களில் மிக முக்கியமான நடிகராக இருப்பார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

-மனசு தொடர்ந்து பேசும்
-'பரிவை' சே.குமார்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் -77

முந்தைய பதிவுகளைப் படிக்க... 



77. வாழ்க்கைப் பயணம் தொடங்கியது

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். காதல் விவகாரம் பூதகரமாக ஒவ்வொரு பக்கமும் கிளம்ப, ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக சிந்தித்து அடுத்த காரியங்களில் இறங்க.... ராம்கியின் நண்பர்கள் போட்ட திட்டத்தின்படி புவனா அம்மா ஆசியுடன் வீட்டை விட்டுக் கிளம்பினாள்.

இனி...

வைரவனின் பைக்கைப் பார்த்ததும் புவனா சற்றே அதிர்ச்சி அடைந்தாள். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் நடந்தாள். வாசலுக்கு வந்த அம்மாவுக்கோ ஐய்யய்யோ இவன் வாறானே... என வயிற்றில் புளியைக் கரைத்தது.

வண்டியை அவளருகில் நிறுத்தியபடி "தோட்டத்துக்குத்தானே குளிக்கப் போறே... நானும் அங்கதான் வர்றேன்... இரு கொண்டு போய் விடுறேன்" என்றான்.

"இ... இல்ல... நா... கம்மாக்குப் போறேன்..." என்றாள்.

"என்னது கம்மாய்க்கா... அதான் தோட்டத்துல மோட்டார் போட்டு தண்ணி கொட்டுது... கம்மாயில அந்த கலங்குன மண்டித் தண்ணியில துணி தொவச்சி குளிக்கணுமா?"

"டேய் அவதான் கம்மாய்க்குப் போறேன்னு சொல்றாள்ல... அப்புறம் என்னடா..?"

"சரி... தோட்டத்துக்கு அப்படியேதான் போறேன்... அவள கம்மாக்கரையில எறக்கிவிட்டுட்டுப் போறேன்...."

"அவ போயிக்குவாடா... பொம்பளப்புள்ளங்க குளிக்கிற எடத்துக்கு நீ எதுக்கு?"

"அங்க குளிக்கிறவளுங்களைப் பாக்கப் போறேன்... அட ஏம்மா நீ வேற... அவள பத்திரமா அங்க விட்டுட்டுப் போறேன்னு சொல்றேன்... ஏய் ஏறுடி..."  அதட்டலாய் சொன்னான்.

"டேய்..."

"அம்மா விடுங்க... அதான் கொண்டு போய் விடுறேன்னு சொல்லுதுல்ல... இம்புட்டு நாள் இல்லாத பாசம் இன்னைக்காவது வந்திருக்கே... எங்கண்ணன் வண்டியில கொண்டாந்து விட்டான்னு சொல்லலாம்ல்ல..." என்றபடி ஏறினாள்.

"சரிடி... பாத்துப் பத்திரமாப் போ..." தாய் மனசு வலியோடு வழி அனுப்பியது.

"ஆமா... கொண்டு போய் வயக்காட்டுல சாய்ச்சு விடப்போறேன்... போம்மா... சும்மா மகளைத் தாங்காமா..." என்றவன் வண்டியைக் கண்மாய் நோக்கிச் செலுத்தினான்.

"டேய் எல்லாம் சரியா நடக்குமாடா..?" பதட்டமாய்க் கேட்டான் அறிவு.

"அதெல்லாம் புராப்பர் பிளான்... மல்லிகா சொன்ன மாதிரி பதினோரு மணிக்கு கம்மாய்க்கு வர்ற புவனா, வெளிய போற மாதிரி வயக்காட்டுப் பாதையில வந்து முத்துவயல் ரோட்டுல ஏறிடுவா... ஆள் அதிக நடமாட்டம் இல்லாத அந்த ரோட்டுல நாம கார்ல பிரச்சினைங்கிற மாதிரி சும்மா ஒரு செட்டப்போட நிப்போம்.. மத்தியானம் பதினோரு மணிக்கு மேல கொளுத்துற வெயில்ல ஒரு ஈ, காக்காய் கூட இந்தப்பக்கம் வராது... வந்த வேலையை சுலபமா முடிச்சிட்டு கிளம்பிக்கிட்டே இருக்கோம்... எதுக்கு உனக்குப் பயம்?"

"நீ என்னவோ இந்தத் தொழில்ல பி.ஹெச்.டி பண்ணுன மாதிரி பேசுறே... இது பர்ஸ்ட் டைம்மா... எங்களுக்கு சும்மா உதறலா இருக்கு..." என்றான் சரவணன்.

"போங்கடா பயந்தாங்கொள்ளிகளா... இப்படி பயப்படுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா பேசாம பழனியைக் கூட்டிக்கிட்டு வந்திருப்பேன்..."

"பயமில்லைடா... முத தடவை... அதுவும் ஒரு பொண்ணைத் தூக்குறது அதான்... பழனியைத்தான் புதுக்கோட்டைக்கு போகச் சொல்லிட்டியே... அவனுக்கு சொந்தக்காரன் காரை ரெடி பண்ணச் சொல்லி... அப்புறம் எதுக்கு இந்தப் பேச்சு... நடப்பதெல்லாம் நடக்கட்டும்... விதி யாரை விட்டது..." என்றான் அறிவு.

"சரி... புலம்பாம ஆகுற காரியத்தைப் பாருங்க... புவனா வர்ற நேரம் ஆயிருச்சு..."

"என்னம்மா தம்பி... சரியாப் பண்ணிடுவானா... அண்ணிக்கு இதுனால எதுனாச்சும் பிரச்சினை வருமா?" பரிதவிப்பாய்க் கேட்டாள் சீதா.

"எனக்கும் பயமா இருக்குடி... சும்மா திரிஞ்சபய இன்னைக்கு ஒரு பொண்ணைக் கடத்திக்கிட்டுப் போற அளவுக்கு வந்திருக்கான்னா... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை... கண்டிப்பா அவ இவங்கூட ஓடிப்பொயிட்டான்னு தெரிஞ்சா எல்லாருக்கும் பிரச்சினைதான்... எனக்கு பதக்குப் பதக்குன்னு இருக்கு... இப்படி வந்து உங்க வீட்ல ஒளிஞ்சி கெடக்க வேண்டியிருக்கு... ஒரு நா... ஒரு பொழுது ஆட்டு மாட்டைப் போட்டுட்டு வந்திருப்பேனா... உங்கண்ணனுக்கு வெவரந் தெரிஞ்சா என்ன சொல்லப் போறானோன்னு மனங் கருகுதுடி..."

"இப்ப நான் புள்ளத்தாச்சியா இருக்கேன்... என்னைய பாக்க வந்தேன்னு ஊரு நம்பிடும்... அண்ணன் கேட்டா அப்ப விவரம் சொல்லிக்கலாம்... இப்ப அதுக்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்... இங்க மாமாகிட்ட லேசா சொல்லி வையுங்க... நாளைக்குப் பிரச்சினையின்னு எதாவது வந்தா அவருதான் பேசணும்.. அப்ப எங்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லலைன்னு கத்துவாரு..."

"என்னடா தோட்டத்துக்குப் போறேன்னு சொன்னே? திரும்பி வந்துட்டே?" வீட்டிற்குள் நுழைந்த வைரவனிடம் பதட்டமாய்க் கேட்டாள் அம்மா.

"ஏம்மா நா இங்க வந்தது பிடிக்கலையா?" என்றபடி சோபாவில் அமர்ந்தான்.

"தங்கச்சி... கம்மாக்கரை... யாராச்சும் குளிக்கிறாளுங்களா?" சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கேட்டாள்.

"நீங்க போகும்போதே குளிக்கிறதைப் பாக்கப் போறியான்னு கேட்டியலா... அதனால யார் குளிக்கிறான்னு பாக்கலை... அப்புறம்..." வேண்டுமென்றே நிறுத்தி அம்மாவை ஊடுருவினான்.

"அப்புறம்ன்னா...?" அம்மா எதிர்க் கேள்வி கேட்டாள்.

"அண்ணங்கிற மொறைக்கு என்னால ஆன பணம் கொடுத்து அனுப்பி வச்சிட்டு  வந்திருக்கேன்... என்ன எந்தங்கச்சி கல்யாணத்துல எவ்வளவோ பண்ணனும்... ஊரே வியக்கிற மாதிரி கல்யாணம் பண்ணனுமின்னு நினைச்சேன்... ஆனா இன்னைக்கு கொல்லைப் பக்கமா கொண்டு போய் விட்டுட்டு வந்திருக்கேன்... அதாம்மா கஷ்டமா இருக்கு..." சொன்ன வைரவனின் கண்ணில் இருந்து கண்ணீர் இறங்கியது.

"தம்பி... " அம்மா அதிர்ச்சியானாள்.

"பயப்படாதீங்கம்மா... அவங்க பிளானைச் சொல்ல அவங்க டீம்ல எனக்கும் ஆள் இருக்கும்மா... அதெல்லாம் இப்ப எதுக்கு... நீங்க சொன்னப்புறம் நானும் யோசிச்சேன்... அம்பது அறுவது வருசம் வாழப்போறவ ஏன் அவளுக்குப் பிடிச்சவனோட வாழக்கூடாது... நாம பாக்குறவனோட மனசு ஒத்துப் போகமா வாழ்நாளெல்லாம் கண்ணைக் கசக்கிக்கிட்டு நின்னா நாம எப்படி நல்லா இருக்க முடியும்ன்னு யோசிச்சேன்... அதான் இந்த முடிவு... இந்நேரம் கார்ல ஏறிப் போயிருப்பா... அவ கூட சண்டையெல்லாம் போட்டிருக்கேன்... ஏன் அடிச்சேயிருக்கேன்... ஆனா அவ இனி இங்க வரமாட்டான்னு நினைக்கிறப்போ வலிக்குதும்மா..."

"வைரவா எனக்கும் அந்த வலிதான்டா... ஆனா அவ எங்கயோ சந்தோஷமா இருப்பால்ல... அது போதுண்டா... அந்த இளங்கோ எதாவது பிரச்சினை பண்னினா...."

"அவன் ஒரு செத்த பாம்பு... அவனை நான் பாத்துக்கிறேன்... விடுங்க..."

"புவனா விசயமா உங்க அப்பாக்கிட்ட மெதுவாப் பேசி அவளை நம்ம கூட சேத்துறணும்டா..."

"அப்பாக்கிட்ட பேசி... அட போங்கம்மா... விவரம் தெரிஞ்சா அந்தாளு அருவாளோட அலையிறாரா இல்லையான்னு பாருங்க... பத்தாததுக்கு சித்தப்பன் வேற சேந்துருவான்... இனி விசயம் ஊருக்குத் தெரிஞ்சு நாம அவமானப்பட்டு நிக்கும் போது பாத்துப் பாத்து வளத்த அப்பாவுக்கும் வலிக்கும்தானேம்மா... எம்புட்டுச் செல்லங்கொடுத்தார்... அவரால இதை சீரணிக்கவே முடியாதும்மா.... எப்படி தாங்கப்போறாருன்னு நினைச்சா கவலையா இருக்கும்மா..."

"எனக்கும் ஒண்ணும் புரியலைடா... போகச் சொல்லிட்டேன்... ஆனா இனி அப்பாக்கிட்ட... எப்படி..." அழுதாள்.

"அதை நான் பாத்துக்கிறேன்... அப்பா வரும்போது நீங்க ஒரு மூலையில உக்காந்து அழுங்க போதும்..."

புதுக்கோட்டையில் பழனி தயாராக வைத்திருந்த சொந்தக்காரனின் அம்பாஸிடர் புவனாவை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி போய்க் கொண்டிருந்தது . காருக்கு உள்ளே புவனா அழுது கொண்டிருந்தாள்... அண்ணாத்துரை ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். 

தே நேரம்...

கடையில் புவனாவின் சித்தப்பாவும் அப்பாவும் மாப்பிள்ளை வீடு வர்ற அன்னைக்கு விருந்தில் என்னென்ன போடலாம் என சிட்டை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது போன் வர, எடுத்து அலோ என்றவர் எதிர்முனையில் வைரவன் என்று தெரிந்ததும் "என்ன தம்பி" என்றார்.

"அப்பா புவனா நம்மள ஏமாத்திட்டு அந்தப் பையன் கூட பொயிட்டா" என்றான் அழுகையோடு.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளந்தி மனிதர்கள் : 1. முனைவர் மு.பழனி இராகுலதாசன்.



ந்த வெள்ளந்தி மனிதர்கள் பதிவில் என் வாழ்வில் நான் நினைத்துக் கூடப் பார்க்காமல் கிடைத்த மிகப் பெரிய உறவுகளைப் பற்றி பகிரலாம் என்று நினைக்கிறேன். எத்தனை எத்தனை உறவுகள்... எப்படிப்பட்ட உறவுகள்... அவர்களைப் பற்றியெல்லாம் ஒரு முறை அல்ல வாழ்நாளில் பலமுறை அசை போடலாம். இவர்கள் எல்லாம் இப்படித்தான் வாழனும் என வாழ்க்கைப் பாடத்தைப் போதித்தவர்கள். இவர்களுடன் பழகிய காலங்களில் இவர்களின் குடும்பத்தில் செல்லப்பிள்ளைகளாக வலம் வந்தோம் என்பதை நான் மட்டுமல்ல என் நட்புக்களும் சந்தோஷமாகச் சொல்வார்கள். 

ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதும் இவரைப் பார்க்க வேண்டும் அவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் எழும். ஆனால் ஊருக்குப் போனதும் வேலைகள் ஒவ்வொன்றாகக் கூட அவற்றை முடித்து நிமிரும் போது ஒரு மாதம் ஓடிவிடும். சரி அடுத்த முறை பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் மீண்டும் திரும்பி வந்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. 

வெள்ளந்தி மனிதர்களில் முதலில் வருபவர் எனது கல்வித்தந்தை எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியர். முனைவர் மு.பழனி இராகுலதாசன் அவர்கள்.

Displaying ayya.jpg

படிக்கும் காலத்தில் பல விஷயங்கள் பேசி மகிழ்ந்த இடம்தான் எங்க தமிழய்யா வீடு. அப்போது வேறு வீட்டில் குடியிருந்தார்கள். மாலை நேரம் எங்களுக்கு அங்குதான் கழியும். விடுமுறை நாட்களும் அப்படியே. எனக்கு அப்போது தொண்டையில் உள்நாக்கு வளர்ந்து அடிக்கடி பிரச்சினை வரும். காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவரைப் பார்த்தால் சரி ஆகும் என என்னை வாராவாரம் கூட்டிச் சென்று காண்பித்து சரி பண்ணியவர் ஐயா, மேலும் மாத்திரை சாப்பிடும் போது காபி, டீ குடிக்க வேண்டாம் என மருத்துவர் சொல்ல மேகலாவிடம் எனக்கு மட்டும் ஸ்பெஷலாக பால் போட்டுக் கொடுக்கும்படி அம்மாவிடம் சொல்லச் சொல்வார். எத்தனை பேர் இருந்தாலும் எம்புள்ள காபி, டீ குடிக்கக்கூடாது என பால் மட்டுமே காய்ச்சிக் கொடுப்பார் அம்மா. அந்த அன்பு அம்மாவிடம் இன்றும் தொடர்கிறது. இப்போது போனாலும் எனக்கு அம்மா கொடுப்பது காபி, டீ அல்ல பால்தான்... 

எப்ப ஊருக்குப் போனாலும் ஐயா வீட்டுக்கு அடிக்கடி சென்று அவர்களுடன் அமர்ந்து பேசி அம்மா கையால் கொடுக்கும் பாலோ, பலகாரமோ சாப்பிட்டு ஐயாவுடன் கொஞ்சம் இலக்கியம் நிறைய குடும்ப விஷயங்கள் பேசி மகிழ்வேன். என்னைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் எனக்குத் தாய் தந்தையர்தான். எனது வீட்டு விசேசங்கள் என்றால் இருவரும் வந்துவிடுவார்கள். இந்த முறை வீட்டில் நிகழ்ந்த சின்ன விழாவிற்கு அழைத்தபோதே அம்மா நான் வந்துவிடுவேன். உங்க ஐயாதான் இப்ப எங்கும் போவதில்லை. ஆனா நம்ம வீட்டுக்கு கண்டிப்பா வரச்சொல்லுறேன் என்றார்கள். அப்பவே ஐயா எனக்கு ஒரு வேலை இருக்குய்யா முடிச்சிட்டு கண்டிப்பாக வாறேன் என்றார்.

விழா அன்று அம்மா மட்டுமே வந்தார். ஐயா வருவாக எனச் சொல்லிச் சென்றார். ஆனால் அன்று அவர் வரவில்லை. மறுநாள் காலை எங்கள் வீட்டிற்கு ஐயா வந்தார். எப்பவும் போல் அதே சைக்கிள்... அதே புன்னகையுடன் வந்தார். அவர் அமர்ந்த நாற்காலிக்கு அருகில் தரையில் நானும் என் மனைவியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்தத் தருணங்கள் மிகவும் சந்தோஷமானவை. பேச்சின் இடையே மனைவி கொடுத்த காபியை உறிஞ்சியபடி நேற்றிலிருந்து உங்க அம்மா 'குமார் வந்து சொல்லிட்டுப் போச்சுல்ல... பொயிட்டு வாங்க' என என்னையப் போட்டு நச்சரிக்கிறாங்க. 'அதான் நீங்க பொயிட்டு வந்துட்டீங்கள்ல அது போதும்' எனச் சொன்னாலும் அவங்க விடலை. ஏன்னா அம்மாவுக்கு குமார் மேல ரொம்பப் பாசம் என என் மனைவியிடம் சொன்னார்.

ஸ்ருதிக்கு பாரதியார் கவிதைகள், ஆங்கிலக் கதைப் புத்தகம், டிராயிங் நோட்டு என எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பார்த்த விஷால் அவரிடம் 'தாத்தா அதுக்கு மட்டும் எல்லாம் கொண்டாந்து கொடுத்திருக்கீங்க... எனக்கு மட்டும் எதுவுமே கொடுக்கலை' என அவரிடம் நேரிடையாகக் கேட்க அடுத்த முறை உனக்கு வாங்கி வருகிறேன் என்றவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது கையில் வைத்திருந்த பைக்குள் தேடி சிவப்பு, ஊதா என இரண்டு பேனாக்களை எடுத்துக் கொடுத்தார். அவர் கையில் இருந்து பேனா பெருவது பெரிய விஷயம். பெரும்பாலும் யாருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்க மாட்டார். கல்லூரியில் படிக்கும் போது எனக்கு மை ஊற்றி எழுதும் பேனா ஒன்று கொடுத்தார். அது இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அதைச் சொன்னதும் வெண்ணிற தாடிக்குள் வெள்ளந்தியாய்ச் சிரித்தார்.

அப்புறம் நித்யாவிடம் நான் நிறையப் பேருக்கு கல்யாண வாழ்த்துப்பா எழுதி மேடையில வாசிச்சிருக்கேன். ஆனா எனக்கு ரொம்பப் பிடிச்சது உங்களுக்கு வாசிச்ச வாழ்த்துப்பாதான் என்றவர் எங்கள் திருமணத்தில் அவர் வாழ்த்துப்பா வாசித்ததற்குப் பின்னே நிகழ்ந்த நிகழ்வுகளைச் சொன்னார். வாழ்த்துப்பா வாசித்து முடித்து கீழே இறங்கினால் இலக்கிய மேகம் சீனிவாசன் வந்து என் காலைத் தொட்டு வணங்கி ஐயா வாழ்த்துப்பா ரொம்ப அருமையா இருக்கு... எல்லாருக்கும் எழுதினதைவிட குமாருக்கு எழுதியது ரொம்பச் சிறப்பா இருக்கு... குமார் மட்டும் ரொம்பப் ஸ்பெஷலா? என்று கேட்டார். அதற்கு என் பிள்ளைகள் இருவருமே அருமையான பிள்ளைகள்... அதுதான் பாடலும் அருமையாக வந்திருக்கிறது என்று சொன்னேன் என்றார். இன்னும் அந்த வாழ்த்துப்பா பேப்பரை பத்திரமாக வைத்திருப்பதாகச் சொன்னார். இதைவிட எங்களுக்கு வேறென்ன சந்தோஷம் வேண்டும்,

இதே ஐயாதான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கடைசியில் எங்கள் வகுப்பில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் பேசும் போது 'மேகலாவோ மேவியதோர் அண்ணன் என்கிறாள்... வாசகனோ தனக்கு வாய்த்த தம்பி என்கிறான்... இல்லத்தாளோ இனிய மகன் என்கிறார்... பிறகு நான் என்ன சொல்ல... எனச் சொன்னார். அந்தத் தந்தையின் பாசம் அன்று முதல் இன்று வரை மாற்றுக் குறையாமல் மலர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இப்படியான மனிதர்களை எல்லாம் என் வாழ்வில் கிடைக்கச் செய்த இறைவனுக்குத்தான் முதலில் நன்றி சொல்லணும். ஐயாவை முதன் முதலில் சந்திக்க வைத்து என்னை ஐயா எழுத்தாளனாக்க அடி எடுத்துக் கொடுத்த முருகனை இங்கு நினைத்துக் கொள்கிறேன்.

வெள்ளந்தி மனிதர்கள் வரிசையில் அடுத்து பதிவில் எனது அன்பிற்குரிய ஆசான். புலவர் ம. சவரிமுத்து ஐயா அவர்களுடனான உறவு குறித்துப் பார்க்கலாம்.

-தொடர்வார்கள்...
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

அவளுக்கான கவிதை



கவிதை வேண்டும் என்றாள்...

கண்ணோடு கண் நோக்கினால்
கண்டிப்பாய் காதல் என்பர்
மனம் நோக்கா மாந்தர் என்றேன்...

காதலும் இருக்கு
கவிதையும் கிடக்கு
காதல் விடுத்து
சமூகம் கவிதையாகட்டும்
சொல்லிச் சிரித்தாள்
சொல்லாமல் ரசித்தேன்...

பேருக்கும் செயலுக்கும்
பொருந்தாமல் பொருந்திப் போகும் 
போக்கற்ற மாந்தர்களென
பொதுவாய் ஆரம்பித்தேன்...

மற்றவரைப் பற்றி 
நமக்கெதற்கு என்றாள்
சமூகத்தைக் கவிதையாக
வடிக்கச் சொன்னவள்...

ஊர்வம்பே பேசாதவள் நீ...
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்...

கஷ்டத்தில் எட்டி நின்று
கைகொட்டிச் சிரித்து
வெற்றியில் என்னவன்
என நெருக்கமாய்
நின்று சிரிக்கும் சிலர்...

முடிக்கவில்லை...
உனக்கு என்னாச்சு...
கவிதை கேட்டால்
கண்டபடி உளறுகிறாய்....

கண்ணே...
கண்மணியே...
கற்கண்டே...
இதுதான் உளறல் பெண்ணே...

உண்மை உரைத்தேன்...
உளரலாய்த் தெரிகிறது...
இதுதான் பெண்ணே
உலகம் என்றேன்...

சிரித்தவள்...
உன் மனநிலை
மாறட்டும் மறுபடியும்
வருகிறேன் கவிதைக்காக...
என்றபடி முகத்தில்
முத்தத்தால்
சிறுக்கிச் சென்றாள்...

விட்டுச் சென்ற 
முத்த ஈரம் 
முகத்தில் சிரிக்க
அவளுக்கான கவிதை
அருவியாய் வந்தது...
-'பரிவை' சே.குமார்.

புதன், 20 ஆகஸ்ட், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 76

முந்தைய பதிவுகளைப் படிக்க... 



76. தாய் உதவியோடு கிளி பறந்தது

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். காதல் விவகாரம் பூதகரமாக ஒவ்வொரு பக்கமும் கிளம்ப, ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக சிந்தித்து அடுத்த காரியங்களில் இறங்க.... ராம்கியும் புவனாவும் நண்பர்கள் உதவியுடன் வீட்டை விட்டுக் கிளம்பும் நாளை முடிவு செய்தனர்.

இனி...

'நாளைக்கு காலையில தயாரா இரு' என மல்லிகா சொல்லவும் புவனாவுக்கு படபடப்பு அதிகமானது. நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது. முகமெல்லாம் வேர்த்தது. 

"என்னடி சொல்றே... நாளைக்கேவா?" மெதுவாகக் கேட்டாள்.

"ஆமா... "

"...."

"என்னடி... இங்க தைரியமாப் பேசினே... இப்ப என்னாச்சு பேச்சைக் காணோம்... என்ன பயமா?"

"இல்லடி... அது... அம்மா இருக்காங்க... விரிவாப் பேச முடியாது... அப்புறம் பேசலாம்டி..." என்றபடி போனை வைத்தாள்.

"என்னம்மா... யாரு போன்ல...?" என்றபடி அடுப்படியில் இருந்து கரண்டியுடன் வந்தாள் அம்மா.

"அது... மல்லிகாதான் பேசினாம்மா"

"என்ன உனக்கு முகமெல்லாம் வேர்த்திருக்கு... எதாவது பிரச்சினையா?"

"அதெல்லாம் இல்லம்மா... சும்மாதான்... என்னன்னு தெரியலை ஒரு பக்கமா தலை வலிக்கிதும்மா..." என்றவாறு அம்மா தோளில் சாய்ந்தாள். அவளை அறியாமல் கண்ணீர் வடிந்து அம்மாவின் ஜாக்கெட்டில் இறங்கியது.

"என்னாச்சும்மா... எதுக்கு அழுகுறே...?" மகளின் கண்ணீர் பட்டதும் தாய் மனம் துடித்தது.

"ஒண்ணுமில்லம்மா..."

"என்னாச்சு... தலைவலி அதிகமா இருக்கா... இரு சாந்திக்கிட்ட மாத்திரை இருக்கும் வாங்கிட்டு வந்து சூடா காபி போட்டுத் தாரேன் குடிச்சிட்டுப் படு... சரியாயிடும்..."

"வேண்டாம்மா... காபி கொடுங்க போதும்..." என்றாள்.

"என்ன புவிம்மா... என்னாச்சு.... என்ன இவ்வளவு சோர்வாயிட்டே... அப்படி போன்ல மல்லிகா என்ன சொன்னா..."

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... அவ வீட்டுக்கு வாறியான்னு கேட்டா... சாயந்தரம் பாக்கலாம்ன்னு சொன்னேன்..." என்றவாறு சிறுகுழந்தைபோல அம்மா மடியில் படுத்துக் கொண்டாள்.

"காபி கேட்டே... இப்படி படுத்துக்கிட்டா காபி எப்படி போடுறது...."

"கொஞ்ச நேரம் இப்படியே படுத்துக்கிறேம்மா... ப்ளீஸ்..."

"என்னம்மா என்னாச்சு இன்னைக்கு... ஆமா அந்தப் பையன் வந்திருக்கானாமே... அவனைப் போயி பாத்தியா... அவன்தான் இப்ப போன் பண்ணினானா?" அம்மா அடுக்கிக் கொண்டே போக பேசுவது அவள்தான என யோசித்த புவனா அடக்க முடியாத அழுகையோடு அவளைப் பார்த்தாள்.

"என்னாச்சும்மா.... எதுக்கு அழுகுறே... அந்தப் பையன் எதாவது சொன்னானா...? இப்ப பாக்க வரச்சொன்னானா?"

"இல்லம்மா... இப்ப பேசினது அவரில்லை... மல்லிகாதான்..."

"என்னடா அம்மா இப்படிப் பேசுறேன்னு நினைக்காதே... நீ அந்தப் பையனோட பழகினது எனக்குப் பிடிக்கலைதான்... நீங்க ரெண்டு பேரும் படிப்பு முடிஞ்சு உங்க ஆசியோடதான் கல்யாணம் பண்ணுவோம்ன்னு சொன்னப்பக் கூட நான் இது நீடிக்காதுன்னு நினைச்சேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் இன்னும் அதிகமான அன்போடத்தான் பழகுறீங்கன்னு இப்ப தெரிஞ்சிக்கிட்டேன். எனக்குள்ளயும் சாதி, கவுரவம் எல்லாம் இருக்கு. இந்த சாதியைத் தூக்கி எறிஞ்சிட்டு... கட்டுன புருஷனை விட்டுட்டு... பெத்த மகனை எதிர்த்துக்கிட்டு உங்க கல்யாணத்தை நடத்தி வைக்க பாழாப்போன மனசு இடங்கொடுக்கலை... இப்ப இருக்க சூழல்ல எல்லாருக்கும் உங்க காதல் தெரிஞ்சாச்சுன்னு நினைக்கிறேன்... உங்கப்பாவும் சித்தப்பாவும் தீவிரமா உன்னோட கல்யாண வேலையில இறங்கியாச்சு... உங்க அண்ணன் அவன் போக்குல எதோ தப்பாப் பண்ணிக்கிட்டு இருக்கான்... நீ அந்தப் பையன் கூட இருந்தாத்தான் சந்தோஷமா இருப்பே... நாங்க பார்க்கிற வரனெல்லாம் உன்னோட வாழ்க்கையை அழிச்சிடும்ன்னு எனக்கு நல்லாத் தெரியும்... எங்களுக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாலும் நீ சந்தோஷமா இருப்பேன்னு சொல்ல முடியுமா? நீ கஷ்டப்படுறதையோ இல்ல உன்னைய அழிச்சிக்கிறதையோ என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது... அதனால..."

அம்மா பேசிக்கொண்டே போக அவளைக் கண்ணீரோடு ஏறிட்டாள் புவனா, அவள் தொடர்ந்தாள்.

"நீயும் அவனும் சேரணும்... நாங்க சேர்த்து வைக்கிறதுங்கிறதெல்லாம் நடக்காத காரியம்... அதனால அந்தப் பையன் கூட பேசி எங்கிட்டாவது கண்கானாத இடத்துல போயி சந்தோஷமா இருங்க... என்னடா இவ இப்படிப் பேசுறான்னு பாக்குறியா... நீ எங்கயாவது சந்தோஷமா இருந்தால எனக்குப் போதும்... இந்த சாதி, சனங்க, அவமானம் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு வாழ்ந்து செத்துப் போயிடுவேன்... உங்கப்பா எடுக்கிற முடிவால நீ தவறான முடிவெடுத்துட்டா... நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சிக் கூடப் பாக்க முடியலை... நீ எங்கயாவது சந்தோஷமா இருக்கணும்... அது போதும் எனக்கு..." சொன்ன போது அம்மாவின் கண்ணீர் அவள் முகத்தில் வழிந்தது.

"அம்மா..." என்று அவள் மடியில் முகம் புதைத்து அழுதாள். 

"எதாயிருந்தாலும் ரெண்டு பேரும் சீக்கிரம் முடிவெடுங்க... காலங்கடந்தா எல்லாம் மாறிடும்..." 

"ஏம்மா... நாங்க ரெண்டு பேரும் பெத்தவங்க சம்மதத்தோடத்தானே கல்யாணம் பண்ணனுமின்னு இருந்தோம். ஆனா இப்ப இந்த உலகம் எங்களையும் இந்த முடிவெடுக்க வச்சிருச்சேம்மா... அப்பாக்கிட்ட சொல்லி எங்களைச் சேத்து வைக்க உங்களால முடியாதாம்மா..."

"அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை... இந்த சாதி, மதமெல்லாம் இருக்க வரைக்கும் இப்படித்தான்... எங்கயாவது ஒண்ணு ரெண்டு நினைச்சபடி நடக்கலாம்... எல்லாம் நல்லதுக்குத்தாம்மா... அந்தப் பையன்கிட்ட பேசு... உடனே எங்கயாவது கூட்டிப் போகச்சொல்லு...."

"அம்மா... எப்படி இப்படி மாறினீங்கன்னு எனக்குப் புரியலை... இதுவரைக்கும் உங்களுக்குத் தெரிஞ்சா பிரச்சினை ஆயிடுமோன்னு சொல்லாம இருந்த விஷயத்தை இப்பச் சொல்றேம்மா.... நாங்க நாளைக்குப் போறதா இருக்கோம்மா... அது விஷயமாத்தான் மல்லிகா பேசினா... எல்லாருமே எனக்கு எதிர்ப்பா இருப்பீங்கன்னு சொல்லலை... ஆனா மல்லிகா சொன்னதும் உங்களை விட்டுட்டுப் போகணுமேன்னு எம்மனசு அடிச்சிக்கிச்சு அதான் உங்க மடியில படுத்து அழுதேன்..." கண்ணீரோடு சொன்னாள்.

"நல்லாயிருப்பீங்க... எதையும் வெளிய காட்டிக்காதே...." என்றவாறு மகளின் நெற்றியில் முத்தமிட்டவள் ஓவென்று கதறி அழுதாள்.

தேவகோட்டைப் பேருந்து நிலையம்.... இரவு 7.00 மணி...

சென்னை செல்லும் பேருந்தின் அருகே அண்ணாத்துரை, சரவணன், அறிவு மற்றும் ராம்கி நின்று கொண்டிருந்தனர்.

"இங்க பாருடா... நாளைக்கு காலையில பதினோரு மணிக்கெல்லாம் இங்கிருந்து புவனாவோட கிளம்பிடுவோம். புதுக்கோட்டை வந்து வேற வண்டி மாறிடுவோம். அப்புறம் திருச்சியில பிரண்ட் வீட்ல தங்கிட்டு அடுத்தநாள் டிரைன்ல சென்னை வருவோம்... நீ சேகர்கிட்ட பேசி மற்ற முடிவுகளை எடுத்துக்க... ஆமா அம்மாவை எங்க இருக்கச் சொல்லியிருக்கே?" கேட்டான் அண்ணாத்துரை

"அம்மாவை அக்கா வீட்டுக்குப் போகச் சொல்லிட்டேன்... மாடு ஆடுகளை சுமதி அக்கா பாத்துக்கும். அண்ணி அடிக்கடி போய் பாத்துப்பாங்க... அப்புறம் அம்மாவை அங்கிட்டே கூட்டிப் போயிடலாம்ன்னு நினைக்கிறேன்."

"பரவாயில்லை உனக்கு எல்லாரும் உதவுறாங்க... ஆமா அம்மாவைக் கூட்டிப் போகப்போறியா... நீ கூப்பிட்டாலும் அவங்க வரணுமில்ல..." - இது சரவணன்.

"பாக்கலாம்... எல்லாம் நல்லபடியா நடக்கும்தானே? பாவம்டா புவி... அவளுக்கு இதுல இஷ்டம் இல்லை... பெத்தவங்க சம்மதத்தோடதான் கல்யாணம்ன்னு சொல்லுவா... இப்ப எங்க காதலும் இப்படி ஆயிருச்சேடா..."

"ஆமாடா அவ வீட்ல ஒத்துக்கிட்டு உனக்கு கட்டி வைப்பானுங்கடா... அட ஏன்டா... அவனுகளே உன்னை வெட்டணுமின்னு திரியிறானுங்க... இங்க பாருடா சினிமாவுல கூட லவ்வை ஈசியா சேத்து வைக்க மாட்டானுங்க... வெட்டுக்குத்துத்தான் முதல்ல... அப்புறம்தான் சேருவானுங்க... சட்டுப்புட்டுன்னு ஒரு குழந்தையைப் பெத்துக்கிட்டீங்கன்னா எல்லாரும் வந்து சேந்துருவானுங்க... சரி கிளம்பு... சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்...." என அவனை பேருந்தில் ஏற்றிவிட்டான் அண்ணாத்துரை.

றுநாள் காலை முதலே புவனாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அப்பாவும் அண்ணனும் சென்றுவிட கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள். அம்மா தேற்ற, பதினோரு மணிக்கு அம்மாவிடம் ஆசி வாங்கிக் கொண்டு அவள் கொடுத்த துணி முட்டையுடன் கண்மாய்க்கு துவைக்கப் போவது போல் கிளம்பினாள்.

இதுவரை பட்டாம்பூச்சியாய் வலம் வந்தை வீட்டை விட்டுப் போகிறோம் என்ற நினைப்பு கண்ணீரை வர வைக்க, அழுவது தெரியாமல் துடைத்தபடி வாசலில் இறங்கிய போது வைரவனின் பைக் கேட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.