மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

புத்தக விமர்சனம் : கொலைஞானம் (நாவல்)

கொலைஞானம்-

மருத்துவர் சூ.மா.இளஞ்செழியன் அவர்கள் எழுதி, கேலக்ஸி பதிப்பக வெளியீடாக, ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வெளியான நாவல் இது. கதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியிருந்தாலும் எழுத்தாளருக்கு இது முதல் நாவல். தான் பிறந்த நாகர்கோவில் பகுதியைக் கதையின் களமாக எடுத்துக் கொண்டிருப்பதால் எதையும் அவர் வலிந்து திணிக்காமல் வாசிப்பவரை ஈர்த்துக் கொள்ளும்  எழுத்தில் கதை இயல்பாகப் பயணிப்பது சிறப்பு.

ஆசிரியர் உரையில், ’60 லட்சம் வருடங்களுக்கு முன்பு பரிணாமத்தின் படிகளில் மனிதன் ஏறி வந்தான் என்ற போதிலும் ‘மாடர்ன் மேன்’ எனப்படும் ஹோமோ சேப்பியன்ஸ், இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருப்பது என்னவோ இரண்டு லட்சம் வருடங்களாகத்தான். இந்த நீண்ட காலகட்டத்தில் வெறும் 5000 வருடங்களுக்கான வரலாறு மட்டுமே இதுவரை பதியப்பட்டுள்ளது’ என்று ஆசிரியர் சொல்லியிருப்பதில் இந்த நாவல் பேசக்கூடிய களம் நமக்குப் புரிந்து விடுகிறது.


மதிப்புரை எழுதியிருக்கும் மருத்துவர் சென்பாலன், ‘நிலத்தின் வரலாற்றைக் கதையாகச் சொல்வதற்கு அந்த நிலத்தில் இருந்து வந்த ஒருவரால்தான் முடியும். சோழ வரலாற்றை பலநாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கண்டறிந்தனர். ஆனால் அவற்றை வைத்து புதினம் புனைய, நெடுங்கதைகள் எழுத தமிழர்களால் மட்டுமே முடியும். அப்படிச் செய்ய வேண்டியது ஒரு வகையில் கடமையுமாகிறது.’ என்று எழுதியிருக்கிறார். அது உண்மைதான், நம் மண்ணின் கதையை, வரலாறை நம்மளைத்தவிர வேறு யாரால் சிறப்பாக எழுதிவிட முடியும்.

இந்த நாவலில் கடந்தகால வரலாற்றுடன் நிகழ்காலத்தில் நடக்கும் கதையையும் இணைத்து விறுவிறுப்பான புனைவாக, மருத்துவர் எழுதிய முதல் நாவல். வரலாற்றுப் புதினங்கள் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவையாக இருக்கும், அதிலும் விறுவிறுப்பான கதைக்களமாக இருந்தால் இன்னும் அதிகமான எதிர்பார்ப்போடு நம்மைக் கவரும். அப்படித்தான் இருக்கிறது இந்த நாவல்.

மாலிக்கபூர் தென்பகுதியைப் பிடிக்கும் விதமாகச் சிதம்பரம் கோவிலைத் துவம்சம் செய்து மதுரை நோக்கித் தனது பெரும் படையுடன் வருவதை அறிந்து அவரை எதிர்ப்பதற்குத் தயாராகி, அவரிடம் தோற்று மதுரையை விட்டு ஓடிய பாண்டியர்கள் தென்காசி, கேரளம் எனத் தனித்தனியாகப் பிரிந்து வாழ ஆரம்பிக்கிறார்கள். காலங்கள் கடந்து செல்லும் போது அவர்கள் என்ன ஆனார்கள்..? அவர்களின் வாரிசுகள் எங்கே போனார்கள்…? என்பதை எல்லாம் சமகால மாந்தர்களுடன் இணைத்துக் கதை சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. வரலாற்று நாயகர்களைக் கொண்டு வந்து இப்போதைய மாந்தருடன் இணைத்திருப்பது கதையோட்டத்தில் உறுத்தலில்லாமம் அத்தனை அழகாகப் பொருந்திப் போகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருவர் பெயரைச் சொல்லி, ஒரு கோவிலை ஆரம்பித்து அதன் மூலம் கோடிகளில் சம்பாதிப்பதை இப்போது பல குழுக்கள் செய்து வருகின்றன. அப்படித்தான் வரலாற்றில் எதிரிகளால் கொல்லப்பட்ட ஒருவரை வைத்து, அதுவும் குதிரையில் வரும் கருப்பரைப் போல் வெள்ளைக் குதிரையில் அமர்ந்து இருக்கும் அறிவாசான் எனச் சொல்லி, அந்தக் கோவிலை தமிழகமெங்கும் கிளை பரப்ப வைத்துச் சம்பாரித்து வரும் ஒரு அமைப்புக்கும் கதைக்குமான தொடர்பைச் சொல்லி, வரலாற்று நாயகன், அவனின் வழித்தோன்றல்கள், அவனை வைத்து பணம் பார்க்கும் மனிதர்கள் என மூன்று புள்ளியை மிக அழகான கோலமாக மாற்றியிருக்கிறார் எழுத்தாளர். இதில் அந்தக் கோவில் பற்றி நாவலின் பல இடங்களில் வரும்போது உண்மையிலேயே இப்படி ஒரு கோவில் இருக்கும் போல அதைத்தான் இவர் தோலுரித்துக் காட்டுகிறாரோ எனத் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.

நாவலில் வரலாற்றுத் தகவல்கள், அறிவியல் தகவல்கள், மருத்துவத் தகவல்கள், இடங்கள், கடைகள், ரோடுகள், கல் மண்டபங்கள், அரண்மனைகளாய் இருந்து இப்போது சுற்றுலாத் தலங்களாக இருக்கும் இடங்கள், உணவுகள் என எல்லாவற்றையும் மிக விரிவாகப் பேசியிருந்தாலும் கதைக்குத் தேவையான இடத்தில் தேவைக்கு அதிகமாய் சேர்க்காமல் சேர்த்திருப்பதால் வரலாற்றை நான் சொல்கிறேன் பார் என்றும் நான் எழுதுவதே வரலாறு என்றும் எதையும் அள்ளித் திணித்து மூச்சுத் திணற வைக்கும் வேலையை இளஞ்செழியன் செய்யவில்லை. போதும் போதுமெனத் தகவல்களைத் தள்ளாமல் போதுமான தகவல்களுடன் கதையை நகர்த்தியிருக்கிறார்.

குலசேகர பாண்டியன், வரகுண பாண்டியன் குறித்த செய்திகளுடன் ஆரம்பிக்கும் கதை நிகழ்காலம், கடந்தகாலம் என மாறி மாறிப் பயணித்து ஒரு புள்ளியில் இணைந்து இன்னும் வேகமாக முடிவை நோக்கிப் பயணிக்கிறது. கதையின் ஆரம்பத்தில் இரவு நேரத்தில் அடித்துப் பெய்யும் மழையில் தனது நண்பரான அகமதுவின் அழைப்பின் பேரில் ஒரு தோள்பட்டையில் அடிபட்டு வந்தவனைப் பார்க்கப் போகும் மருத்துவர் சித்து, ரோடெங்கும் மழை நீர் நிரம்பி இருக்க, பாதை சரியாகத் தெரியாத காரணத்தால் சற்றே ஒதுங்கலாம் என நினைத்து ரோட்டோரத்தில் காரை நிறுத்துகிறார். அவர் நிறுத்தும் இடத்தில் இருக்கும் பாழடைந்த கல் மண்டபத்தில் ஒதுங்க நினைப்பவர் தனது தொல்லியல் ஆராய்ச்சிப் புத்தியில் – ‘தொல் உலகின் தோழர்கள்’ என்ற அமைப்பையும் ‘Comrades of Zomies’ என்ற ஆன்லைன் பத்திரிக்கையும் நண்பர்களுடன் சேர்ந்து நடத்துவதால் ஆராயும் மனப்பாங்கு வரத்தானே செய்யும் – அதனுள் போகிறார். அவர் பின்னே கதை நம்மையும் இழுத்துச் செல்கிறது.

அவரைக் காணவில்லை எனத் தன் அண்ணனான நாகர்கோவில் எஸ்.பி. அருள் ஜெயராஜ்க்கு சிந்து போனில் சொல்ல, அவரைத் தேடும் படலம் ஆரம்பமாகி, கல் மண்டபம் வந்து, அதற்குள் இருக்கும் பாதாள அறைக்குள் விழுந்து கிடக்கும் சித்துவுடன் ஒரு மனிதனையும் மிருகத்தையும் ஒன்றாக வைத்திருக்கும் சவப்பெட்டி ஒன்றும் மீட்கப்பட கதை சூடுபிடிக்கிறது.

சித்தார்த், சிந்து, எஸ்.பி அருள் ஜெயராஜ், மருத்துவர் ரிச்சர்ட், மருத்துவர் அகமது, மருத்துவர் அலெக்ஸ், ஹேடஸ் என்ற இராஜசிம்ம நரசிங்கன், தேஜிந்தர், இன்ஸ்பெக்டர் குமரகுரு, குலோத்துங்கன், நீலகண்டன், வெங்கட சுப்பிரமணியன், குமரேசன் மற்றும் சிலருடன் பயணிக்கும் கதை விறுவிறுப்பாக நகர்வதற்கு நாகர்கோவில், லண்டன், வெள்ளறடை என்ற செம்பொன்சிறை, கேய்மன் தீவுகள், திட்டுவிளை, ஆரல்வாய்மொழி என்ற இடங்களும் காரணிகளாய் அமைகின்றன.

கதையின் போக்கில் இவர் குற்றவாளியா..? அவர் குற்றவாளியா…? என்ற யோசனை நமக்குள் எழுந்து கொண்டே இருந்தாலும் இவரல்ல… அவரும் அல்ல… அது வேற ஆள் என நகர்த்தி இறுதியில் எல்லாருமே இங்கிருந்து வந்தவர்கள்தான் என்பதாய் முடித்திருக்கிறார் கதையின் ஆசிரியர்.

இது அவரின் முதல் நாவல் என்று சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள். அத்தனை சிறப்பான  எழுத்து… எவ்வளவு விபரங்கள்… விபரணைகள்.

கதையாசிரியர் ‘evaluation the greatest show on earth’, ‘plunder of faith’ போன்ற புத்தகங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார். அதிலும் குறிப்பாக ‘plunder of faith’ கதையோடு தொடர்பு கொண்டு வருவதால் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கதையுடன் பயணிக்கிறது. காவல்துறைக்கு அதிகம் வேலை இல்லை என்பதால், மச்சினான நாகர்கோவில் எஸ்.பி. அருள் ஜெயராஜை கூத்தங்குளம் திருவிழா பாதுகாப்புக்கு என எழுத்தாளர் ஆரம்பத்திலேயே அனுப்பினாலும் ‘மலையேறிப் போனாலும் மச்சினன் உதவி தேவை’ங்கிற மாதிரி அவ்வப்போது வந்து ‘நான் கூத்தங்குளம் போறேன்’ என்பதை ‘நானும் ரவுடிதான்’ என்பதைப் போல சொல்லிச் செல்ல வைத்திருக்கிறார்.

கதையாசிரியருக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும் போல எடுத்துக்காட்டுகள் எல்லாமே சினிமா, சினிமா நடிகர்களை வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் கதைக்குள் போவதற்கு முன் முன்கதைச் சுருக்கத்தில் மாலிக்கபூர் படையெடுப்பு, பாண்டியர் பற்றிய செய்திகள் எனக் கொஞ்சம் வரலாற்றுக் கதையை நமக்குத் தந்து விடுகிறார். அதேபோல் நாவல் முடிந்ததும் பின்கதைச் சுருக்கமாக சித்து, ஹேடஸ் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறார்.

விறுவிறுப்பாக நகரும் நாவலின் முடிவு விரைந்து முடிக்கப்பட்டது போல் தெரிகிறது. சாமி பேரைச் சொல்லிக் கொள்ளை அடிக்கும் கும்பல் உடனே எல்லாம் மனம் மாறிவிடாது. இங்கே தன் அதிகாரத்தைக் காட்டும் சுப்பிரமணியன், ஹேடஸை எதிர்கொள்ளும் முதல் சந்திப்பிலேயே விழுந்து விடுவது தமிழ் சினிமாபோல் இருந்தது. ஒரு சவப்பெட்டியும் அது கதை சொல்லும் காலமும் காவல்துறைக்குப் பெரும் சவாலாக இருந்தாலும் கதையின் ஆரம்பத்தில் வந்து மொத்தத்தையும் மருத்துவர்களிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் விட்டு விட்டு ஹாயாகப் போய்விட்டு இறுதியில் அப்ப நாங்க கேசை முடிச்சிக்கலாமான்னு வரும் காவல்துறையில் குமரகுரு ரொம்பக் கறாரானவர் என்று சொல்வதைப் பூர்த்தி செய்யும் விதமாக குமரகுரு எதையும் செய்யாமல் பெயராய் மட்டுமே – ஆரம்பத்தில் பேசுவது தவிர- இருப்பதைப் பார்த்து இவருக்கு எதுக்கு இத்தனை பில்டப்பு கங்குவா மாதிரின்னு தோணியதைத் தடுக்க முடியவில்லை. இவருக்குப் பதில் நானும் கதையில் இருக்கேன் என அடிக்கடி தலைகாட்டும் எஸ்.பி கூடங்குளம் போகாமல் விசாரித்திருக்கலாம்.

நிறைய விசயங்கள் பேசப்படும் நாவலில் இன்னும் கொஞ்சம் பொறுமையாக பிழை திருத்தம் செய்திருக்கலாம் என்று தோன்றியது என்றாலும் கதையோட்டத்தில அது பெருங்குறையாகத் தெரியவில்லை. அடுத்த பதிப்பு வரும்போது இக்குறை நீக்கப்படும் என்று நம்புகிறேன்.

மற்றபடி மருத்துவர் அடித்து ஆடியிருக்கிறார். 221 பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விடலாம்… ஆம் கையில் எடுத்தால் கீழே வைக்க விடாத எழுத்து… சிறப்பு… எழுத்தாளரான மருத்துவருக்கு வாழ்த்துகள்.

--------------------------------------------
கொலைஞானம் (நாவல்)
சூ.மா.இளஞ்செழியன்
கேலக்ஸி பதிப்பகம்
பக்கம் – 221
விலை – ரூ. 250
--------------------------------------------

நன்றி : Bookday.in (பாரதி புத்தகாலயம்)

Book day.in இணைய இதழில் 17/12/2024 அன்று வெளிவந்தது

-பரிவை சே.குமார்

புதன், 18 டிசம்பர், 2024

புத்தக விமர்சனம் : கதலி (நாவல்)

 


தலி-

எழுத்தாளர், கவிஞர் சிவமணி அவர்களின் முதல் நாவல் 'கதலி'. இதுவரை இவர் கவிதை மற்றும் சிறுகதை நூல்களை வெளியிட்டிருக்கிறார். கதலி மூலம் கவிஞர், சிறுகதை எழுத்தாளரில் இருந்து நாவலாசிரியராய் மலர்ந்திருக்கிறார்.

ஒரு கதாபாத்திரத்தின் மனசு பேசுவதை வைத்து ஒரு நாவல் எழுதுதல் என்பது மிகப்பெரிய விசயம், அதை மிக அருமையான நாவலாக மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் சிவமணி அவர்கள்.

சில மரணங்கள் ரசித்து, ருசித்து, வாழ்ந்து நிகழ்ந்திருக்கும். சில மரணங்கள் வாழாமலே வாழ்ந்து மரணப் படுக்கையில் வீழ்ந்திருக்கும். ஒருவேளை மரணத்துக்குப் பிறகோ இல்லை மரணம் அடைவதற்கு முன்பு இருக்கும் மனநிலையைப் பதிவு செய்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையையும் பதிவு செய்து இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் இந்நாவலின் ஆசிரியர், அப்படித்தான் கதைக்களம் இருக்கிறது.

உடம்புக்கு முடியாமல் ஒரு பக்கம் கை கால் இழுத்துக் கொள்ள, வாயும் கோணி பேச முடியாத நிலையில் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்படும் படும் சுந்தரத்தின் மனசுக்குள் நிகழும்  எண்ண ஓட்டங்களே 153 பக்க நாவலாய் விரிந்திருக்கிறது. குழந்தைப் பருவத்தில் அம்மாவை இழந்து, அப்பா வேறு கல்யாணம் செய்ததால், அந்தக் குடும்பத்தின் வேண்டுகோளின்படி பெரியம்மாக்களிடம் வளர்ந்து, அதன்பின் அப்பாவின் இறப்புக்குப் பின் அவரின் இரண்டாந்தாரமான செல்லம்மாவை அம்மாவை ஏற்று அவளிடம் ஒட்டிக் கொள்ள, சின்னய்யா தன்னோடு இருவரையும் அழைத்துச் சென்ற, தன் மகனாய் வளர்க்கும் சுந்தரத்தின் மனசுதான் நமக்கு நாவல் முழுவதும் கதை சொல்கிறது.

சின்னய்யாவை, சின்னம்மாவை, தன்னை வளர்த்த இருளாயி, ராமாயி, மனைவி பார்வதி, வேலைக்காரன் முத்தைய்யா என ஒவ்வொருவருடனும் தனக்கான வாழ்வியல் தொடர்பையும், அவர்களை, அவர்கள் உயிருடன் இருக்கும் காலத்தில் தான் நன்றாக கவனித்துக் கொள்ளவில்லை, அவர்கள் மனம் மகிழும்படி நடந்து கொள்ளவில்லை என்ற எண்ணத்தையும், அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற அவாவையும் ஒரு சேர நம்மிடம் கடத்தி விடுகிறார் சுந்தரம்.

அவரின் மகன் அறிவுமதி, மகள் வேதவள்ளி ஆகியோர் அவரை மருத்துவமனையில் வைத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் கதை நகர்த்தலுக்கு உதவவில்லை என்றாலும் அவர் அவர்களிடம் சொல்ல நினைப்பதை மனசுக்குள் பேசிப் புழுங்க வைத்திருக்கிறார் எழுத்தாளர். அறிவு ஆரம்பத்தில் மருத்துவமனையில் சத்தம் போடுகிறான். அதன் பின் அவன் பணத்துக்காக கஷ்டப்படுவானே என சுந்தரம்தான் வருந்துகிறார். 

தன் நினைவுகளில் பலவற்றைக் கொண்டு வரும் சுந்தரம் மனிதர்களைத் தவிர்த்து திருவிழா, விவசாயம் போன்றவற்றைப் பற்றியும் பேசுகிறார். கதலி வித்தியாசமாய் பயணிக்க சுந்தரமே காரணமாகிறார்.

நாவலின் நூறாவது பக்கத்துக்குப் பின் சுந்தரம் வேறொரு உலகத்துக்குள் பயணிக்க ஆரம்பிக்கிறார். அதுவரை சுந்தரத்தின் நினைவுகளாய் பயணிக்கும் கதையை, கதையாசிரியர் தான் சொல்ல ஆரம்பிக்கிறார். அந்த உலகத்தில் தான் யார் யாரிடம் அன்பு செலுத்தத் தவறினேன் என்று நினைத்துப் புலம்பினாரோ அவர்களையெல்லாம் சந்திக்கிறார். அவர்கள் அங்கும் அதே அன்புடன் இருக்கிறார்கள். அவர்களிடம் தான் செய்யத் தவறியதைச் சொல்லிப் புலம்புகிறார்.  

இறுதியில் சுந்தரத்துக்கு என்ன ஆனது..? நினைவு தப்பியதா..? இல்லை தன் நோயில் இருந்து மீண்டு வந்தாரா..? அல்லது வேறு உலகத்துப் பயணத்தில் தன்னை அங்கேயே இருத்திக் கொண்டாரா...? என்பதை நாவல் பேசுகிறது.

எழுத்தாளர் சிவமணி இந்தப் புத்தகத்தை சென்ற ஆண்டு ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் கொடுத்தார். கொஞ்சம் வாசித்து, அதன்பின் மாறிமாறி அடித்த நிகழ்வுகளால் வாசிக்காமலேயே இருந்தது. என்னைப் பொறுத்தவரை யார் புத்தகம் என்றில்லை; வாங்கி வந்தால் அதை வாசித்து விடுவது வழக்கம். அதைக் குறித்து எழுதுவது எழுதாதது எல்லாம் விருப்பத்தின் பேரில் அமையும். குறிப்பாக நண்பர்களின் புத்தகங்களுக்கு எழுதுவது கூடாது என்ற முடிவெடுத்தபின் வாசித்தாலும் எழுதுவதில்லை.

இந்தப் புத்தகத்தைக் கொடுத்த எழுத்தாளர், வாசித்து எதாவது சொல்லியிருக்கலாமே என நினைத்திருக்கலாம். என் புத்தகங்களை வாங்கியவர்களில் பலர் அது எப்படியிருக்குன்னு சொல்லாமல் இருக்கும் போது எனக்கும் தோன்றும் எண்ணம் இவருக்கும் தோன்றாமலா இருந்திருக்கும். இருந்தாலும் கொடுத்ததற்கு மரியாதை கொடுக்கும் விதமாக வாசித்து முடித்து நம் கருத்தைச் சொல்வதே சிறப்பு என்பதால் இரண்டு நாட்களில் வாசித்து முடித்தேன்.

நிறைவான நாவல்... நண்பர்களின் புத்தகங்களில் இதைச் செய்திருக்கலாமே என்று சொல்லப் போனால் இவன் யாரு இதைச் சொல்ல என்ற பேச்சுக்கள் வருவதாலேயே குறைகள் இருந்தாலும் சொல்வதில்லை என்பதைவிட ரொம்ப நாளைக்குப் பிறகு எழுத்தாளர் சிவமணி - இவர் கூட நண்பர்தான் - அவர்களின் புத்தகத்துக்கு எழுதியிருக்கிறேன். எனக்கு கதையோட்டத்தில் சுந்தரம் பேசிக் கொண்டே வரும்போது ஒரிரு பாராக்கள் மட்டும் ஆசிரியர் பார்வையில் அவ்வப்போது நகர்ந்தது கதையோட்டத்தை தடுப்பதாய் தெரிந்தது, இது என் வாசிப்பின் போதுதான்... நீங்கள் வாசிக்கும் போது உங்களுக்கு இது பிடித்துப் போகலாம், வேறு எதாவது தோன்றலாம். அது அது அவரவர் வாசிப்பின் போது நிகழ்வதாகத்தான் இருக்கும்.

வட்டார வழக்கு நாவல் முழுவதும் நிரவிக் கிடக்கு.

கதலி வாசிங்க... வித்தியாசமான நாவல்.

------------------------------------------------------
கதலி (நாவல்)
எழுத்தாளர் : சிவமணி
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
பக்கம் : 153
விலை : 180
------------------------------------------------------

பரிவை சே.குமார்.

புத்தக விமர்சனம் : மயக்கம் என்ன

யக்கம் என்ன-

மலையாள எழுத்தாளர் கீதா மோகன் எழுதிய ‘மத்து’ என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள் ‘மயக்கம் என்ன’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்த நூலை கேலக்ஸி பதிப்பகம் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டது.

புதன், 25 செப்டம்பர், 2024

கேலக்ஸி விழா : கதைப்போமா

கேலக்ஸி கலை இலக்கிய குழுமத்தின் மாதாந்திரக் கூட்டம் சென்ற சனிக்கிழமை (21/09/2024) அன்று மாலை துபை ப்ரோ ஆக்டிவ் எக்செல் கன்சல்டன்சி அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாதக் கூட்டத்தில் வாசித்ததைப் பகிர்ந்து கொள்ளும் 'கதைப்போமா' உடன் இலங்கை எழுத்தாளர் ஐயா காப்பியக்கோ அவர்களின் ஒரு காப்பிய நூல்களின் வெளியீடும் இருந்ததால் நிகழ்வு மிகச் சிறப்பானதாக மாறிப் போனது.

திங்கள், 23 செப்டம்பர், 2024

கேலக்ஸி நிகழ்வு : இருபெரும் காப்பியங்கள் வெளியீடு

னிக்கிழமை (21/09/2024) மாலை துபை ப்ரோ ஆக்டிவ் எக்செல் கன்சல்டன்சியில் நடைபெற்ற கேலக்ஸி கலை இலக்கிய குழுமத்தின் மாதாந்திர கூட்டத்தின் முதல் நிகழ்வாக இலங்கை எழுத்தாளர், அன்பின் ஐயா காப்பியக்கோ திரு. ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் இரண்டு காவிய நூல்களின் வெளியீடு நடைபெற்றது.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

சினிமா விமர்சனம் : கொட்டுக்காளி

கொட்டுக்காளி-

இந்தப் படம் நல்லாயில்லை என்றும், இது விருதுக்கென எடுக்கப்பட்ட படம் இதை எப்படி வெகுஜன சினிமாக்களுடன் களமிறக்கலாம் என்றும் ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்கும் போது விகடன் மிகச் சிறப்பானதொரு விமர்சனத்தை அளித்திருக்கிறது. இந்தக் கதை பெரும்பாலும் நகர மக்களிடம் எடுபடாமல்தான் போகும். அவர்களுக்கு மருந்து எடுத்தல், விபூதி போடுதல் போன்றவற்றில் நம்பிக்கை இருப்பதில்லை. இதைப் பற்றி யோசிப்பதும் இல்லை. இந்த வாழ்க்கையை வாழ்ந்த, அனுபவித்த மக்களிடம் மட்டும் இந்தப்படம் எடுபடும். இவ்வளவு தூரம் மருந்தெடுக்கவோ துணூறு போடவோ போவார்களா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. எங்கள் ஊரில் இருந்து ராமநாதபுரத்துக்கு அருகில் வரை சென்று வந்தவர்களும் உண்டு. இப்படியான வாழ்க்கை இன்னமும் தென் தமிழகக் கிராமங்களில் உயிர்ப்போடு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

சினிமா விமர்சனம் : உள்ளொழுக்கு (மலையாளம்)

ள்ளொழுக்கு

படத்தின் முக்கிய கதாபாத்திரமே மழைதான். படத்தின் ஆரம்பம் முதல் மழை சாரலாய், தூறலாய், பேய் மழையாய் அடைமழை பெய்து கொண்டே இருக்கிறது. முழங்கால் தண்ணீருக்குள் கதாபாத்திரங்கள் நடந்து திரியும் போது அவர்களுடன் நாமும் மழையில் நனைந்து கொண்டே பயணிப்பது போல் இருக்கிறது.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

புத்தக விமர்சனம் : சமவெளி

 மவெளி-

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு.

புதன், 14 ஆகஸ்ட், 2024

'காளையன்' ஒரு உணர்வுப் புயல் - சதீஷ் குமார்

'காளையன்' நாவல் குறித்து  சகோதரர் சதீஷ் குமார் அவர்கள் தனது விரிவான பார்வையை முகநூலில் பகிர்ந்திருந்தார். இந்த நாவலை அவரின் அமெரிக்கப் பயணத்தின் போது விமானத்தில் நான்கு மணி நேரத்தில் தொடர் வாசிப்பில் முடித்திருந்தார். அப்போதே எனக்குத் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பியிருந்தார். அமெரிக்காவில் இருந்து துபை வந்து, இங்கிருந்து இந்தியா செல்ல இருந்த இடைப்பட்ட நேரத்தில் சிறிய பதிவொன்றை எழுதிவிட்டு, செல்போனில் நீண்ட நேரம் சாக்காடு, காளையன் பற்றிப் பேசினார். 

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

சினிமா விமர்சனம் : ஜமா

மா-

தன் அப்பாவை ஏமாற்றிப் பறித்துக் கொண்ட ஜமாவை - தெரு நாடகக் குழு - தான் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கும் தெருக்கூத்து ஆட்டக் கலைஞனான கதை நாயகன் அதில் வெற்றி பெற்றானா என்பதைக் காதல், ஏமாற்றம், தெருக்கூத்து, அந்தக் கலைஞர்களின் வாழ்வியல் எனக் கலந்து கட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.

புத்தக விமர்சனம் : கமழ்ச்சி

மழ்ச்சி-

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் கதைகளில் வரும் கதைநாயகர்கள் அல்லது நாயகிகளின் உள்ளுணர்வுகளையும், அவர்களைச் சுற்றி நிகழ்பவற்றையும் மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். அப்படி அவர் நடமாடவிட்டிருக்கும் கதாபாத்திரங்களை நாம் 'கமழ்ச்சி'யிலும் பார்க்கலாம், அவர்களுடன் பயணிக்கலாம்... வாழலாம்.

சனி, 3 ஆகஸ்ட், 2024

வாத்தியார் விமர்சனக் கூட்டம் - வீடியோ

சென்ற சனிக்கிழமை மாலை துபையில் 'வாத்தியார்' சிறுகதைத் தொகுப்புக்கு முதல் விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. எதிர்சேவை, பரிவை படைப்புக்கள் போன்ற சிறுகதைத் தொகுப்புக்களுடன் ஒப்பிடும் போது இது சற்றே வித்தியாசமான தொகுப்பு என்று சொல்லலாம்.

திங்கள், 29 ஜூலை, 2024

'வாத்தியார்' - விமர்சனக் கூட்டம்

னிக்கிழமை (27/07/2024) மாலையை இனிமையாக்கிய கேலக்ஸியின் இரண்டு நிகழ்வுகளில் முதலாவதாய் 'மூக்குக் கண்ணாடி' வெளியீடு முடிந்தபின் இரண்டாவதாய் எனது 'வாத்தியார்' சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் நடைபெற்றது.

திங்கள், 1 ஜூலை, 2024

சினிமா விமர்சனம் : கோளம் (GOLAM) - மலையாளம்

கோளம்-

அலுவலக வேலை நேரத்தில் கம்பெனி முதலாளியில் ஒருவர்  கழிவறைக்குள் இறக்கிறார். அவரின் இறப்பு இயற்கையானதே என்பதை நம்பும் விதமாக எல்லாமே இருந்தாலும் ஏ.எஸ்.பிக்கு மட்டும் இது ஒரு கொலை எனத் தோன்ற எல்லாரிடமும் விசாரிக்கிறார். விசாரணையின் முடிவில் அவருக்குத் தெரிய வருவது என்ன என்பதுதான் படத்தின் கதை.

ஞாயிறு, 30 ஜூன், 2024

சினிமா விமர்சனம் : கருடன்

ருடன்-

நட்பு... நட்புக்குள் துரோகம் என்னும் நாம் பார்த்து ரசித்த கதைகளின் வரிசையில்தான் இப்படமும் என்றாலும் அதைச் சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார்கள்.

ஞாயிறு, 23 ஜூன், 2024

புத்தக விமர்சனம் : தீரா நதி

'இன்னும் தீ தான் தெய்வம்

நீர் தான் வாழ்வு'

சனி, 22 ஜூன், 2024

புத்தக விமர்சனம் : அவர் தான் மனிதர்

வர் தான் மனிதர்-

லெனின் நினைவு நூற்றாண்டு வெளியீடாக காலம் பதிப்பகத்தில் வந்திருக்கும் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களின் மிகச் சிறிய புத்தகம் இது.

ஞாயிறு, 16 ஜூன், 2024

மனசு பேசுகிறது : காலம் சொல்லும் பாடம்

காலம் சொல்லும் பாடம்.

காலம் அதன் போக்கில் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நாம் வேண்டுமானாலும் இன்னும் அப்படியே இருப்பதாய் நினைத்துக் கொள்ளலாமே ஒழிய வயது ஏறிக்கொண்டேதான் போகிறது என்பதை மறக்கவோ மறைக்கவோ முடியாது.

திங்கள், 19 பிப்ரவரி, 2024

'கணியன் பூங்குன்றனார் விருது' - ஜெசிலாபானுக்குப் பாராட்டு விழா

ன மகிழ்வும் மன நிறைவும் கொடுக்கும் நிகழ்வுகள் எப்போதும் மனதை விட்டு அகல்வதில்லை. அப்படியான ஒரு நிகழ்வு நேற்றைய குளிர் மாலையில், துபை லாவண்டர் ஹோட்டலில் கேலக்ஸி குழுமம் நிகழ்த்தியது. ஆம் தமிழக அரசின் 'கணியன் பூங்குன்றனார் விருது' பெற்ற சகோதரி ஜெசிலாபானு அவர்களுக்கு அமீரகத்தில் நடத்தப்பட்ட முதல் பாராட்டு விழாதான் அது.

வியாழன், 15 பிப்ரவரி, 2024

புத்தக விமர்சனம் : தோப்பு (சிறுகதை தொகுப்பு)

 தோப்பு-

கேலக்ஸி பதிப்பகம் நடத்திய முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற ஐந்து கதைகளுடன் புத்தகத்திற்குத் தேர்வான பதிமூன்று கதைகளையும் சேர்த்து சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான சிறுகதைத் தொகுப்பு இது.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

சினிமா விமர்சனம் : நேரு (மலையாளம்)

 நேரு-

சனி, 3 பிப்ரவரி, 2024

சினிமா விமர்சனம் : மதிமாறன் (தமிழ்)

திமாறன்-

உருவக் கேலி பண்ணாதீர்கள் என்பதை அழுத்திச் சொன்னதுடன் அவர்களிடம் இருக்கும் திறமையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதையும் சொல்லியிருக்கும் படம் இது.

செவ்வாய், 23 ஜனவரி, 2024

சினிமா விமர்சனம் : கிடா

 கிடா-


மிழ்ச் சினிமாவின் துப்பாக்கிச் சத்தங்களுக்கு இடையே அவ்வப்போது வாழ்வியலைப் பேசும் உணர்வுப்பூர்வமான படங்கள் வருவதுண்டு. அப்படி வரும் படங்கள் வெற்றிப்படமாவதும், தியேட்டரில் நிற்பதும் கேள்விக்குறிதான் என்றாலும் சொற்பமே பார்த்தாலும் பார்த்தவர்களின் மனதுக்குள் சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து தன் வெற்றியைப் பறைசாற்றும். அப்படியானதொரு படம் இது.

வியாழன், 18 ஜனவரி, 2024

மனசு பேசுகிறது : ஐந்து வருடத்தில் ஏழு புத்தகங்கள்

ந்த முறை சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு புத்தகங்கள், அதுவும் இரண்டுமே நாவல் என்பதெல்லாம் என்னாலயே நம்ப முடியாத ஒன்று. இதையெல்லாம் சாத்தியமாக்கியது நட்புக்கள்தான். அன்று தசரதனிடம் கொண்டு சேர்த்த நட்புக்களால்தான் கலக்கல் ட்ரீம்ஸில் ஆண்டுக்கு ஒன்றாய் இந்தாண்டில் எனது ஐந்தாவது புத்தகமாய் 'காளையன்'.

அதேபோல் கேலக்ஸி பாலாஜி அண்ணனுக்கு என் எழுத்து மீது பெரும் நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையில் ஒரு கதாபாத்திரம் எல்லாக் கதையிலும் வரணும், உன்னால் முடியும் எழுது எனச் சொல்லி எழுதச் சொன்னதுதான் 'வாத்தியார்'. அதில் பதிமூனு கதையிலும் வாத்தியார் இருப்பார். அதன்பின் ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு நாவல் கொன்டு வர்றோம் எனச் சொல்லி எழுதச் சொன்னார். சில காரணங்களால் கொண்டு வர இயலாமல் போய் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருக்கிறது 'சாக்காடு'.

இந்த இரண்டு நாவல்களுமே 2021-ல் எழுத ஆரம்பித்து, 2022 கொடுத்த அடியில் எதுவுமே எழுதாமலேயே அந்த வருடம் கடந்து 2023-லிலும் பெரிதாக எதுவும் எழுதிவிடவில்லை. வாத்தியாருக்கான கதைகள் பாலாஜி அண்ணன் எழுதச் சொல்லி விரட்டியதாலேயே சாத்தியமானது. இருவரும் எழுதச் சொல்லி விரட்டியபோது கேலக்ஸிக்கு என எழுத ஆரம்பித்து இரண்டு அத்தியாயத்துடன் தொடராமல் விட்டிருந்த காளையனை தொடர்ந்து எழுதி, கிளைக்கதைகள் எழுதி இணைத்து கலக்கலுக்குக் கொடுத்து விட்டு, கலக்கலுக்கு என எழுத் இருந்த ஒரு சாவுக் கதைக்குள் நினைவுகளைச் சுமக்கும் மனிதனின் கதையைத் தனியே எழுதிச் சேர்த்து கேலக்ஸிக்குக் கொடுத்தேன்.

இப்ப என்ன எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் எனக் கேட்கும் நண்பர்களிடம் ஒரு சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு நகர்ந்து செல்கிறேன். காரணம் இந்த நாவல்களுக்குப் பின் வேறொன்றும் எழுதவில்லை, எழுத நினைக்கவுமில்லை.... இன்னும் சில நாட்களோ மாதங்களோ ஆகலாம் அடுத்து எழுத ஆரம்பிக்க.

2019 டிசம்பருக்கு முன் நம் எழுத்தில் ஐந்து வருடத்தில் ஏழு புத்தகங்கள் வரும் என்றெல்லாம், ஏன் நம் கதைகளைப் புத்தகமாக்குவோம் என்று கூட நான் நினைத்ததில்லை. எல்லாமே நடந்தது.... காரணம் தசரசன்.

கலக்கல் ட்ரீம்ஸ்க்குப் போகும் முன் அமீரகத்தில் ஒரு முயற்சி, அது தோல்வியில்தான் முடிந்தது. பணம் கொடுத்து புத்தகம் போடுவது என்பது நடக்காத காரியம் என்பதுடன் அப்படிப் புத்தகம் போட்டு எதுவும் சாதிக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை.

அமீரகத்தில் புத்தகம் கொண்டு வர முயற்சிகள் நடந்தபோது அணிந்துரை வேண்டுமென எனக்கு நெருக்கமான ஒரு பிரபலத்திடம் போய் நின்ற போது, கதைகளை வாங்கி வாசிக்கிறேன் என்று சொல்லிக் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் இழுத்துப் பின் இதில் சில கதைகள் மூடநம்பிக்கையைத் தூக்கிப் பிடிக்கின்றன என்று சொன்னதுடன் எனக்கு எழுத விருப்பமில்லை என்றார். இவ்வளவுக்கும் அவர் யார் கவிதை எழுதினாலும் அதற்கு அணிந்துரை எழுதிக் கொடுப்பதை அறிந்துதான் நான் கொடுத்தேன். மேலும் எனது கதைகளுக்கு அவர் கொடுக்கும் கருத்துக்களையும் மனதில் வைத்தே அவரிடம் கேட்டுச் சூடு பட்டுக் கொண்டேன். மூட நம்பிக்கை என இவர் சொன்ன கதைகள்தான் பலரால் பேசப்பட்டது. அந்தப் புத்தகம்தான் தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருதைப் பெற்றது. 

அதேபோல் மற்றொரு எழுத்தாளரான அண்ணன் ஒருவர் என் எழுத்தை மண் சார்ந்த எழுத்து எனச் சொல்லி எப்போதும் பாராட்டுவார். நான் எழுதித்தாரேன் என அவரே கேட்டு வாங்கினார், என்ன நினைத்தாரோ தெரியாது அழுகாச்சிக் கதைகளுக்கு நான் எழுதுவதில்லை எனச் சொன்னார். இந்த நிகழ்வுகள் வெறுப்பு மனநிலையை ஏற்படுத்தியபோது நானே எழுதுறேன்டா என என் நண்பன் தமிழ்க்காதலன் எழுதினான். அந்த நேரத்தில் இங்கு புத்தகம் கொண்டு வர இருந்த அமைப்பு பின்வாங்க, புத்தகங்கள் வெளிவரவில்லை.

இவர்கள் எல்லாம் இப்படிச் சொன்னதால் முதல் புத்தகமாக 2019-ல் 'எதிர்சேவை'-யை  தசரதன் கொண்டு வந்தபோது அணிந்துரை யாரிடமும் வாங்குவதில்லை என்பதே முதல் முடிவாய் இருந்தது. இதுவரை எந்தப் புத்தகத்துக்கும் அணிந்துரை வாங்கியதில்லை, வேரும் விழுதுகளும் நாவலுக்கு மட்டும் எங்க ஐயாவிடம் வாங்க வேண்டும் என வாங்கிப் போட்டோம். இப்போது வெளியிட்ட புத்தகம் வரை அணிந்துரை இல்லாமல்தான் வெளியிட்டிருக்கிறோம்.

இப்போது ஒரு எழுத்தாளனாய் ஓரளவுக்கு அறியப்பட்ட முகமாக மாறியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன். என்னால் எழுத முடியும் வரை எழுதிக் கொண்டே இருப்பேன். அவ்வளவே.


காளையனிலிருந்து சில வரிகள்...

“ஏம்ப்பா... மாடு புடிபடலப்பா... யாருப்பா அது மாட்டுக்காரரு... சொர்ணலிங்கம்தானே... ஏப்பா... மாட்டுக்காரங்க இருந்தா அதுமேல கயறு போடுங்கப்பா... அதப் புடிங்கப்பா... எப்பா ஆளுக இல்லேன்னா மாடு புடிக்கிறவுக ஒதுங்குங்கப்பா... அது பாட்டுக்கப் போவட்டும். அப்பறம் அதுக்கிட்ட ஒரண்ட இழுத்துக் குத்து வாங்குனா கமிட்டி பொறுப்பேற்காது... கமிட்டியோட அறிவிப்பு மாடு புடிபடல... புடிமாடு இல்ல.' எனக் கத்தினார் மைக்கில் பேசிக் கொண்டிருந்தவர்.

காளையனை விட்டுக் கூட்டம் ஒதுங்கியது.

மாடு பிடிபடவில்லை என்ற அறிவிப்பைக் கேட்டதும் வேனில் இருந்து கீழிறங்கி, வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு மீசையை முறுக்கி, அருகிலிருந்தவர்களிடம் 'காளயன் களத்துல ஜெயிச்சிட்டான். இனிமே அவனோட காலம். அவன் களத்துல நிக்கிற வரக்கிம் பிடிபடமாட்டான்' எனச் சிரித்தார் சொர்ணலிங்கம்.

'பிடிங்க பணம் தர்றேன்'னு சொன்ன புத்தூரணி முத்து, சொர்ணம் இருவரும் எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து நகர, 'பிடிபட்டா காசு தர்றேன்னு கொக்கரிச்சீங்க... இப்பச் சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் அவனப் பிடிச்சிட்டீங்கன்னா நா ஐயாயிரம் தர்றேன். பிடிச்சிப் பாருங்க' கத்தினார் சுந்தர்ராஜன்.

இருவரும் பதில் பேசவில்லை.

பாண்டி கயிறை எடுத்து காளையன் முதுகில் போட்டான்.

தன் இடத்தில் நின்று கொண்டிருந்த காளையன் அமைதியானது.

பாண்டி அருகில் போய் அதன் நெற்றியில் தடவிக் கொடுத்தான்.

தனது தலையை வைத்து அவனின் உடம்பில் உரசியது.

'வாடா' என்று சொல்லி அவனும் சுந்தர்ராஜனும் நடக்க, அதுவரை கோபத்தில் தகித்துக் கொண்டிருந்த காளையன் அமைதியாய், அம்மா பின்னே மெல்ல நடக்கும் குழந்தையாய் மாறி அடியெடுத்து வைத்தது.

*

காளையன், கலக்கல் ட்ரீம்ஸ், விலை.150/-

தொடர்புக்கு,

தசரதன்
கலக்கல் ட்ரீம்ஸ்
0091 98409 67484

****


சாக்காட்டிலிருந்து சில வரிகள்...

"கார்த்தி... கார்த்திதானே...?  என்னத்தா இருட்டுக்குள்ள..?"

"சும்மாதான் மாமா... ஒண்ணுக்குப் போலாமுன்னு..."

"அதான் பின்னால டாய்லெட் இருக்குதானே... அங்க போவேண்டியதுதானே..."

"கொஞ்சம் காத்தாட வெளிய போயிட்டு வரலாமுன்னுதான்... நம்மூருல என்ன பயம்...?" 

"இருட்டு ஏமத்துக்குப் பயப்படணும்த்தா... நாளு நட்சத்திரம் நல்லாயில்ல. நீ உள்ள இருக்க பாத்ரூமுல போ... இல்லேன்னா அந்தா அந்தப்பக்கம் மறைவாப் பொயிட்டு வா. வாசக்கதவத் தொறந்து வெளிய  போ வேணாம்..."

"சரி மாமா..." என்றபடி வடக்குப் பக்கம் போனாள்.

"ஆத்தா... தூக்கம் வரலன்னு இங்க வா. மாமாவுக்கும் தூக்கம் வரலதான்... என்னென்னவோ நெனப்பு... எல்லாத்துலயும் அம்மா. மனசெல்லாம் படபடங்குது...." என்றபடி சோம்பல் முறித்தார்.

"என்ன மாமா பண்ணுது... தண்ணி எடுத்தாரவா..?"

"ஏய் அதெல்லாம் ஒண்ணுமில்ல... நீ பொயிட்டு இங்க வா..."

"ம்..." எனச் சென்றவள் சிறிது நேரத்தில் திரும்பி வந்து சந்திரனுக்கு முன் நின்றபடி "ஆயா நினைவால தூக்கம் வரலயா மாமா...” என்றாள்.

“ஆத்தா... இப்டி உக்காருடா”

“பரவாயில்ல மாமா”

“அட உக்காருத்தா... நீ ஏம்புள்ளதானே... மரியாத எதுக்கு... சின்ன வயசுல இங்க மிதிச்சி, ஒண்ணுக்கு ரெண்டுக்கெல்லாம் எம்மேல போயி வளர்ந்த புள்ளதானே... உக்காரு...” என்றதும் அருகே அமர்ந்தாள். சந்திரன் தூக்கி வளர்த்த பிள்ளைகளில் கார்த்திகாவுக்கே முதலிடம். அவரின் நெஞ்சில்தான் பலநாள் தூங்கியிருக்கிறாள். ஆரம்பத்தில் படித்தது கூட ஆயா வீட்டில் இருந்துதான். 

"ம்... நீங்கள்லாம் தள்ளித்தள்ளி இருந்துட்டீங்க... உங்க சின்ன மாமானுங்க கூட தள்ளித்தான் இருந்தானுங்க... நாந்தான்... ம்ம்ம்ம்... நான்தான் கூடவே... அது கூடவே இருந்துட்டேன். எப்பவாச்சும் கோவத்துல ஏதாச்சும் கத்திட்டுப் போயிருவேன்... எனக்கும் மனசு கேக்காது, அதுக்கும் மனசு கெடக்காது. திரும்பி வரும்போது வாசல்லயே... ம்... வாசல்லயே உக்காந்திருக்கும். ம்ம்ம்ம்... ஒரு நா வெளியில ராத்தங்கிட்டா அவன் வரல... எப்ப வருவான்னு நச்சரிச்சிக்கிட்டே இருக்கும்... ம்ம்ம்ம்ம்... யாரு என்னய என்ன சொன்னாலும் அதுக்குப் படக்குன்னு கோபம் வந்துரும். அதோட நெனப்பு... இன்னக்கி அது மொகத்துல மண்ணள்ளிப் போடு... முடியல... மறக்குறதுதானே மனுசப்பொறப்பு... செத்தவங்க நெனப்பத் தூக்கிட்டா அலையப் போறோம்... கொஞ்சநாளக்கிச் சொமப்போமுல்ல... என்னமோ முடியல கார்த்தி..." கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

"என்ன மாமா இது... சின்னப்புள்ளயாட்டம்... ஆயா நம்ம எல்லாருக்கும் துணையாயிருக்கும்..." அவரின் முதுகில் கைவைத்து ஆதரவாய் தடவினாள்.

"ஆத்தா மாமா சொல்றத கேப்பேதானே...?"

"என்ன மாமா... நீங்க சொல்லி நா எப்பக் கேக்கல..."

"ம்... நீ ஓவியமுத்தா... ஓவியம்... ஆனா உன் நெலம..." பேச முடியாமல் நிறுத்திக் கொண்டார்.

"எனக்கென்ன மாமா... நீங்கள்லாம் இருக்கீங்க... பின்ன என்ன... நா... நா நல்லாத்தானே இருக்கேன்..." உடைந்தாள்.

"ம்... எங்காத்தா, அதான் உங்காயா உனக்குத் தொணக்கித் தொணயா நின்னு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கணும்... நீ ரொம்ப நல்லாயிருக்கணும்"

கார்த்திகா சிரித்தாள்.

"ஏந்த்தா சிரிக்கிறே... இப்புடியே இருக்க முடியுமா..? அது அந்தக் காலம் நினைவச் சொமந்துக்கிட்டு வாழ்ந்தது. அதுவும் பொம்பளங்க மட்டுந்தான்... ஆம்பளக்கி வருசந் திரும்பும் முன்னால அடுத்த பொண்டாட்டி..."

"அதெல்லாம் வேண்டாம்மாமா... இ... இ...இப்புடியே இருந்துடு...றேன்..."

சந்திரன் ஒன்றும் பேசவில்லை.

*

சாக்காடு, கேலக்ஸி பதிப்பகம், விலை ரூ.260.

தொடர்புக்கு...

புகாரி
வாட்ஸப் - +91 99944 34432

*

சென்னைப் புத்தகக் கண்காட்சி கலக்கல் ட்ரீம்ஸ் அரங்கு எண் 520, 521-ல்... நானும் ஒரு எழுத்தாளனாய்...



நன்றி. 

-பரிவை சே.குமார்.

செவ்வாய், 16 ஜனவரி, 2024

மனசின் பக்கம் : பொங்கலும் விஷாலும் பிக்பாஸும்

நேற்றைய பொங்கல் நாளில் காலையில் தங்கை கொண்டு வந்து கொடுத்த பொங்கலும் பருப்பும் சாப்பிட்டவனை, இரவு சாமி கும்பிடவும் விருந்துக்கும் தம்பி ஒருவர் அழைத்திருந்தார். ஊருக்குச் செல்லும் பாலாவை நானும் இராஜாராமும் துபையில் கொண்டு போய் விட்டுவிட்டு வர வேண்டியிருந்ததால் வீட்டுக்கு வருகிறேன்... சாப்பாடெல்லாம் வேண்டாம் எனச் சொல்லியிருந்தேன். 

செவ்வாய், 2 ஜனவரி, 2024

மனசு பேசுகிறது : அல் குத்ராவில் கிடாவும் பாட்டும்

சில நிகழ்வுகள் மனசுக்கு நெருக்கமாகவும், மகிழ்வாகவும் அமையும். அப்படியானதொரு நிகழ்வு சென்ற வருடத்தின் இறுதிச் சனிக்கிழமை (30/12/2023) மாலை அல் குத்ரா ஏரியில் நிகழ்ந்தது. ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்ட ஒன்று கூடல் நிகழ்வு அது. நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்து, மகிழ்வான, மனசுக்கு நெருக்கமான விழாவாக நடத்தி முடித்த பாலாஜி அண்ணன், சகோதரர் பிலால் அலியார், ஜெசிலா மேடம் ஆகியோருக்கு முதலில் நன்றி.