மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)

Related image

கிருஷ்ணபுரம்...

கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுதி வருகிறார் அவ்வூரைச் சேர்ந்த சித்து. இந்த வலைப்பூ ஊரின் அன்றாட நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறது என்றாலும் குறிப்பாக ஹரியின் வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றியே வருகிறது.

ஹரியேட்டன் (மம்முட்டி) என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் ஹரி மனைவியை இழந்தவன்... பல வருடங்களாக வெளிநாட்டில் இருந்து விட்டு ஊருக்கு வருகிறான். அவனின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும் இளவட்டம் ஆராவார வரவேற்பைக் கொடுக்கிறது. அதன் பின் அவனைவிட வயது குறைந்த இளவட்டங்களுடன் சேர்ந்து கொண்டு டீக்கடை, குடி என ஆட்டம் போட்டுக் கொண்டு திரிகிறான். இடையிடையே அந்தப் பசங்களின் காதலையும் பெண்ணின் வீட்டாருக்கு வித்தியாசமான முறையில் தெரிய வைத்து சேர்த்து வைக்கிறான். 

ஹரியின் அப்பாவான நெடுமுடி வேணு சாதாரண கிராமத்து மனிதராக வாழ்ந்திருக்கிறார். பையன் சம்பாதித்த பணத்தை இரட்டிப்பாக்கும் விதமாக நகையைப் பிணையமாகப் பெற்று வட்டிக்கு கொடுத்து வருகிறார்.

ஊருக்குள்ள நாலு பேரு தலையில தூக்கி வச்சி ஆடுன்னான்னா மூணு பேருக்கு அது பிடிக்காது... இது கேரளத்தில் மட்டுமல்ல... தமிழகத்திலும்... உலகெங்கிலும்தானே... அப்படித்தான் பஞ்சாயத்துத் தலைவர் லாலு அலெக்ஸ்க்கும், அவர் சார்ந்த மனிதர்களுக்கும் வேண்டாதவரானாகிறான் ஹரி. அவனைப் பலி வாங்கச் சந்தர்ப்பம் கிட்டும் எனக் காத்திருக்கிறார்கள் எதிரிகள்.

ஹரி இல்லாதவருக்கு கொடுத்து உதவ நினைக்கும் குணம் கொண்டவன் என்பதால் அவனின் உதவியால் வாழ்கிறது அவனுக்கு மிகவும் விருப்பமான மாஸ்டரின் குடும்பமும் தன் மனைவியின் அனியத்தி (தங்கை) குடும்பமும். இந்த உதவிகளைக் கூட பெண்களுக்காகவே அவன் செய்கிறான் என்பதுதான் உள்ளூர் பேச்சாக இருக்கிறது... காரணம் உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் மாஸ்டருக்கு இரண்டு பெண்கள், அனியத்தியோ கைம்பெண்.

இவனைப் பற்றியும் நாட்டார் அவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பற்றியும் அறிந்த சப் இன்ஸ்பெக்டரான நீனா (ஷாம்னா காசிம்) வலிய வந்து பேசி நட்பாகிறாள். அதே நேரத்தில் ஹரியின் பள்ளிக்கால தோழி ஸ்ரீஜெயா (ராய் லெட்சுமி) கணவரைப் பிரிந்து ஊருக்கு வருகிறாள். அவளைப் பார்த்ததும் ஹரியுடன் சுற்றும் இளவட்டங்கள் ஏத்திவிட, சின்ன வயதில் காதல் கடிதம் கொடுத்து ஏற்றுக் கொள்ளப்படாத காதலைப் புதுப்பித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அதுவும் கைகூடி வருகிறது. நீனாவின் ஆசை கைவிட்டுப் போகிறது.

ஹரிக்கு பெண்களுடன் தொடர்பு உண்டு என்பதான அரசல்புரசலான பேச்சுக்களை உண்மையாக்கும் விதமாக அனியத்தி வீட்டிலிருந்து இரவில் வருதல், மாஸ்டர் வீட்டில் மழை நாளில் தங்குதல் போன்ற நிகழ்வுகள் அமைகின்றன. இதனால் அவனின் எதிரிகள் மட்டுமின்றி அவனுடன் சுற்றும் இளவட்டங்களும்... ஏன் சப் இன்ஸ்பெக்டர் நீனாவும் கூட அவனைப் பெண் பித்தன் என்ற வட்டத்துக்குள் நிறுத்துகிறார்கள்.

கதையின் திருப்பமாக மாஸ்டரின் மூத்த மகள் ஹேமா (அனு சித்தாரா) தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்படும் போது மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கூற, காரணம் யார் என்பது கேள்விக்குறியாய்... 

ஹரியாக இருந்தால் ஒரு வழி பண்ணி விடலாம் என்பதால் கர்ப்பத்துக்கு யார் காரணம் என அறியத் துடிக்கிறது கிருஷ்ணபுரம் பஞ்சாயத்து. 

அம்மாவின் மிரட்டலுக்குப் பயந்து ஹரிதான் என்று சொல்லி விடுகிறாள் ஹேமா... ஹரியை தன் மாப்பிள்ளை ஆக்கத் துடித்துக் கொண்டிருப்பவள்தான் ஹேமாவின் அம்மா என்பதை கர்ப்பத்துக்கு முன்னேயான சில காட்சிகள் சொல்லி விடுகின்றன.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் எதிரிகளுக்கும் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் கிடைத்துவிட, இதுதான் சமயம் என ஹேமாவைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஹரியுடன் சுற்றிய இளவட்டங்களும், அப்பாவும் கூட அதையே விரும்புகிறார்கள்.

தான் குற்றமற்றவன் என்று சொல்லி, ஹேமாவுடன் பேச முயற்சிக்கும் ஹரியைத் தடுத்து விடுவதுடன் ஹேமாவையும் ஊர் கடத்தி விடுகிறார் மாஸ்டரின் மாஸ்டர் பிளான் மனைவி.  

இதற்கிடையே நான் உன்னையறிவேன்... சந்தேகிக்கமாட்டேன் என்று சொல்லும் ஸ்ரீஜெயாவைத் திருமணம் செய்து கொள்ளலாமென  பதிவாளர் அலுவலகம் வரச்சொல்லி விட்டு அப்பாவுடன் அங்கு காத்திருக்கிறான் ஹரி. ஊரே அந்த திருமணத்தை எதிர்த்து நிற்க, நீனா காவலாக நிற்கிறாள். வருவாள் என எதிர்பார்த்த ஸ்ரீஜெயாவோ அடமானம் பிடித்து ஹரி வீட்டில் வைத்திருந்த நகைகளை லவட்டிக் கொண்டு பறந்து போய் விடுகிறாள்... ஒரு கடிதத்தை ஹரிக்காக பதிவாளர் அலுவலகம் அனுப்பிவிட்டு..

ஒரு பெண்ணைக் கெடுத்தவன் என்ற அவமானத்துடன் ஊராரின் நகைகளையும் இழந்தவனாகி ஊர் முன் இரட்டைக் குற்றவாளியாகிறான் ஹரி. 

அவன் மீது நம்பிக்கை கொண்ட நீனா மட்டும் அவ்வப்போது அவனுக்காக பேசி, அவனை ஏமாற்றியவர்களைக் கண்டுபிடிக்க கடைசி வரை களத்தில் நிற்கிறாள்.

கர்ப்பத்துக்கு ஹரிதான் காரணம் என்று சொன்ன ஹேமாவைச் சந்தித்தானா..?

நகைகளுடன் ஓடிய ஸ்ரீஜெயாவை கண்டுபிடித்து நகைகளை மீட்டானா..?

சப் இன்ஸ்பெக்டர் நீனாவுடன் காதல் ஏற்பட்டதா..?

ஊராரின் நகைகளைத் திருப்பிக் கொடுத்தானா..?

பஞ்சாயத்துத் தலைவர் ஹரியைப் பலி வாங்கினாரா..?

இப்படி நிறையக் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும் போது படம் முடிவுக்கு வரத்தானே செய்யும்... அப்படித்தான் வந்தது 2.15 மணி நேரங்களுக்கு மேல் மென்று விழுங்கியபடி...

படத்தின் இடையிடையே சௌதியில் ஒரே அறையில் தங்கி இருக்கும் கிருஷ்ணபுரத்து சன்னி வெய்னும் அனன்யாவும் இந்த வலைப்பூவை வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் எதற்காக இந்தக் கதையில் என்று ஆரம்பத்தில் தோன்றிய கேள்விக்கு இறுதிவரை பதிலில்லை... குட்டநாடன் வலைப்பூவை வெளிநாட்டிலும் வாசிக்கிறார்கள் என்று காட்டுவதற்காகவோ... அதற்கு எதற்கு சன்னியும் அனன்யாவும்... புரியலை.. கேரளத்தில் ஒருவர் கூட வலைப்பூவை வாசிப்பதாக காட்டப்படவில்லை.

இடைவேளை வரைக்கும் 'வீடு' படத்தை விட ரொம்ப மெதுவாக நகரும் திரைக்கதை... தொடர்ந்து பார்க்க வேண்டுமா என்று தோன்ற வைக்கலாம்...  வைக்கும்... வைத்தது.

இடைவேளைக்குப் பின்னர் கதையில் சின்னச் சின்னச் முடிச்சுக்கள் விழ ஆரம்பிக்க, வேகமெடுக்கும் திரைக்கதை இறுதிவரை அதே வேகத்தில் பயணிப்பது ஆறுதல்.

பாடல்கள் அருமை. இசை ஸ்ரீநாத். பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு அருமை.

ராய் லெட்சுமியை பிக்பாஸ் யாஷிகாவை சேலையால் அழகாக்கியது போல் சேலையில் அழகாக காட்டியிருக்கிறார்கள். சமீபகால மம்முட்டி படங்களில் அவருக்கு சரியான ஜோடி ராய் லெட்சுமிதான் என்பதை இதிலும் நிரூபித்திருக்கிறார்.

பல வெற்றிப் படங்களின் திரைக்கதை ஆசிரியரான சேது, தனது முதல் இயக்கத்தில் திரைக்கதையில் குறிப்பாக முதல் பகுதியில் ரொம்பவே சறுக்கிப் பார்ப்பவரை சலிப்படைய வைத்திருப்பது ஏனோ..?

அடுத்த படத்தில் இச்சறுக்கலைச் சரி செய்வார் என்று நம்பலாம்.

மம்முட்டி ரசிகர்கள் பலமுறை பார்க்கலாம். மற்றவர்கள் முதல்பாதி பார்க்கும் பொறுமை இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.

இந்தப் பாடலைக் கேளுங்கள்... உங்களுக்கும் பிடிக்கும்..


-'பரிவை' சே.குமார்.

சனி, 22 செப்டம்பர், 2018

நாட்குறிப்பு : அவளும் கவிதையும் கூட அரியரும்

கல் மின்னிதழ் 'நாட்குறிப்பு' போட்டிக்கு எழுதியது. எழுதிய போதே சத்யாவிடம் இது நாட்குறிப்பு மாதிரியில்ல ஜி... சிறுகதை மாதிரி இருக்குன்னு சொன்னாலும் சும்மா அனுப்புங்க என்றார். அது தேர்வாகாது என்பது தெரியும்... ஏன்னா முன்னப் பின்ன செத்தாத்தானே சுடுகாடு தெரியும்ன்னு ஊரில் சொல்வது போல் முன்னப் பின்ன டைரி எழுதியிருந்தா எப்படி எழுதுறதுன்னு தெரியும்... நாம அதெல்லாம் எழுதுவதே இல்லை.... பின்ன எப்படி...? சரி விடுங்க வெற்றி பெற்றவர்களை வாழ்த்தும் அதே நேரத்தில் அந்த நாட்குறிப்பில் நிறைய மாறுதல் செய்து சிறுகதையாகவும் இல்லாமல் நாட்குறிப்பாகவும் இல்லமால் கதைக்குறிப்பாக இங்கு பகிர்ந்தாச்சு. இனி படிச்சி திட்டவோ... கொட்டவோ வேண்டியது உங்க கடமை...


வம்பர்-25, 1996

கல்லூரி விடுமுறை என்றாலும் வீட்டிலும் இருந்த நாள் எப்போதும் இல்லை. இன்றைய நாள் காலையும் அப்படித்தான் கிளம்பினேன் எனது அட்லஸ் சைக்கிளில். வயல்ல பூச்சி மருந்து அடிக்கணும்... வெயில்ல அடிச்சாத்தான் பயிருல சாரும் என்ற அப்பாவின் கத்தலைக் காதில் வாங்காமல்.

நண்பர்கள் சங்கமிக்கும் ஓடியன் சலூன் வாசலில் சைக்கிளை நிறுத்தி பேருந்து நிலையத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது நண்பர்கள் நவநீ, திருநா, ஆதி, அண்ணாத்துரை, சேவியர் என ஒவ்வொருவராய் பேருந்தில் வந்து இறங்கிச் சங்கமித்தார்கள், ராம்கி என்னைப் போல் அவனது புதிய ஹெர்குலிஸ் சைக்கிளில் வந்து சேர்ந்தான்.

“மாப்ள இன்னைக்கு ரிசல்ட் வருதுல்ல...” என்றான் நவநீ.

“ஆமாடா... இதுவரைக்கும் அரியர்ஸ் இல்லை... இது பிப்த் செமஸ்டர்... இதுல மேஜர் பேப்பர் வேற... அரியர் விழுந்தா சிக்ஸ்த்ல எடுத்துட முடியுமான்னு பயமாயிருக்குடா” என்றான் ராம்கி.

“ரிசல்ட் மத்தியானந்தான் வரும்... படத்துக்குப் பொயிட்டு மத்தியானம் காலேஜ்க்குப் போகலாம்” என்றான் ஆதி.

“படத்துக்கா... நா வரல பங்காளி... எனக்கு வேல இருக்கு.... வரும் போது அப்பா வேற மருந்தடிக்கணும்ன்னு சொன்னார்” வேகமாக மறுத்தேன்.

“மாப்ள... நீ மருந்தடிச்சிட்டாலும் இன்னேரம் கருப்பையா உன்னையத் திட்டமுடியாம அம்மாவை நாலு வாங்கு வாங்கிட்டு மருந்தடிக்கிற மிஷினைத் தூக்கிக்கிட்டு கிளம்பியிருப்பாரு... ஏலே நீ எங்க போவேன்னு எனக்குத் தெரியும்... சுப்ரமணி வாத்தியார் வீடு போவே... அவரு இந்நேரம் காலேஜ்ல இருப்பாரு.... அங்க உன்னக்கென்ன வேலைன்னு எங்களுக்குத் தெரியும்... இன்னைக்கி நீ எங்க கூட வர்றே... மவனே இல்லேன்னா காலேஜ் திறந்ததும் உன்னோட மேட்டரை ஓபன் பண்ணி நாறடிச்சிருவோம்...”  என்றான் நவநீ.

“வரலைன்னா விடு மாப்ள... சுப்ரமணி சாருதானே காலேஜ்க்குப் போயிருப்பாரு... அம்மா  வீட்டுலதானே இருப்பாங்க... ரெண்டு மூணு நாளா அவங்களைப் பாக்கலை... அதான் பாத்துட்டு அப்படியே காலேஜ் வந்துடுறேன்...”

“இங்கேருடி... நீ எந்த அம்மாவைப் பாக்கப் போவேன்னு தெரியும்... சுப்ரமணி சாரு வீட்டு அம்மாவை சாயந்தரம் போய் பாத்துக்கலாம்... இப்ப நாம சினிமாப் போறோம்... காலேஜ் அப்பத்தான் வகுப்பைக் கட் அடிக்க மாட்டேன்னு நீயும் ராம்கியும் முறுக்குவீங்க... இப்ப என்ன... லீவுதானே... எங்க கூட படம் பாக்க வந்தா என்ன...” சிகரெட்டைப் பற்ற வைத்தபடி பேசினான் சேவியர்.

“அட ஏன் பங்காளி நீ வேற... அப்படியெல்லாம் இல்ல... சாயந்தரம் போ முடியாது... வீட்டுக்கு லேட்டாப் போனா அப்பா கத்துவாரு... சும்மாவே கோவத்துல இருப்பாரு... அதான் இப்பவே பொயிட்டு வரலாமுன்னு...” இழுத்து மழுப்பினேன்.

“சரி... பங்காளி நீங்க போங்க... விடுங்கடா... அவராவது வாழ்ந்துட்டுப் போறாரு...” என்றான் திருநா.

“இது நல்லாயிருக்கே... எப்பப் பார்த்தாலும் நம்மளவிட இவனுக்கு சுப்ரமணி சாரு வீடுதான் பெரிசாப் போச்சு...” குதித்தான் அண்ணாத்துரை.

“அவரு வீட்டுலதான் ரெண்டு பேரும் சந்திக்கிறது மாப்ள... அப்பத்தானே யாருக்கும் சந்தேகம் வராது...’ நக்கலாய்ச் சொன்னான் ராம்கி.

“நீ இன்னைக்கு எங்க கூட வர்றே... படம் பாக்குறோம்... தங்கச்சியை நாளைக்குப் பார்த்துக்கலாம்...” தோளில் கை போட்டு இறுக்கினான் நவநீ.

இதற்கு மேல் இவர்களுடன் சண்டை போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்து மனசே இல்லாமல் அவர்களுடன் சரஸ்வதி தியேட்டருக்குள் நுழைந்தேன்.

கல்லூரி வாழ்வில் முதல் இரண்டு ஆண்டை விட மூன்றாம் ஆண்டு வந்த போது நிறைய சினிமா பார்க்கிறோம் வீட்டுக்குத் தெரியாமல். பெரும்பாலும் மதிய வகுப்புக்கள் இருப்பதில்லை... எங்களுக்கான இருக்கைகள் லெட்சுமி, அருணா, சரஸ்வதி என மூன்று தியேட்டர்கள் காத்திருக்க ஆரம்பித்தன. சில நேரங்களில் சித்தப்பா, அண்ணன் என சிலரைப் பார்த்து நாற்காலிக்குள் பதுங்கியதும் உண்டு என்றாலும் ஊருக்குள் நம்மைக் கடந்து போகும் போது ‘என்ன படம் நல்லாயிருந்துச்சா’ என்று கேட்கவும் செய்வார்கள்.

டிக்கெட் வாங்கி உள்ளே சென்று அமர, அதிக கூட்டமில்லை. எங்கள் வகுப்புத் தோழி மல்லிகா அம்மாவுடன் வந்திருந்தாள். எல்லாரும் சொல்லி வச்சி வருவீங்களோ... இன்னைக்கு ரிசல்ட் மத்தியானம் காலேஜ் வருவீங்கதானே என்றபடி அம்மாவுடன் கடந்து சென்றாள்.

திரையில் ரொம்ப நாளா பார்க்கணும்ன்னு நினைத்த ரத்தக் கண்ணீர் ஓட்த் தொடங்கியது.

இடைவேளையில் ராம்கி இரண்டு ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டு மல்லிகா இருக்கைக்கு ஓடினான். அவர்கள் இருவரும் காதலிப்பது போல் தோன்றினாலும் இதுவரை சொல்லிக் கொள்ளவில்லை. ராம்கியின் நோட்டில் மல்லிகா என்ற பெயர் பல இடங்களில் ஆக்கிரமித்திருந்தது. ஒருமுறை மல்லிகாவின் நோட்டை வாங்கியபோது அதில் ‘ராமல்லி’ என்று பல இடங்களில் எழுதியிருந்தாள்.

எம்.ஆர். ராதா அள்ளி அள்ளி கொடுத்தேனடி காந்தா என கதறிக் கொண்டிருக்க, சுப்ரமணி சார் வீட்டுக்கு வந்து காத்திருந்து திரும்பிச் சென்றிருப்பாளே என்ற நினைப்பு என் மனசுக்குள் கதறிக் கொண்டிருந்தது.

மதியம் கல்லூரிக்குச் செல்லும் போதே எதிர்பட்ட நண்பன் ரிசல்ட் வந்திருச்சு... கேவிஎஸ் மட்டும்தான் இருக்காரு எனச் சொல்லிச் சென்றான்.

நாம இதுவரை வகுப்பில் முதல் மாணவன் என்ற மிதப்பும் எல்லாத்திலும் பாஸாகி இருப்போம் என்ற செருக்கும் ஒருங்கே எனக்குள். மற்றவர்கள் பயந்து கொண்டிருப்பதைப் பார்த்து கேலி செய்தேன்.

கேவிஎஸ் சாரைப் பார்க்க தமிழ், ஆங்கிலம் மற்றும் எங்கள் துறை ஆசிரியர்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்த போது எதிர்ப்பட்ட சுப்ரமணி சார், ‘என்னங்கய்யா ரிசல்ட் பாக்கவா... பாத்துட்டு வாங்க... உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி வச்சிருக்கேன்...’ என்றபடி அலுவலகம் பக்கம் சென்றார்.

‘என்ன சந்தோஷமான செய்தி...?’ என்ற கேள்வி யோசனையில் முளை விட, அதே சிந்தனை மெல்ல வளர ஆரம்பித்தது.

“என்ன மாப்ள... உனக்கும் தங்கச்சிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாரா..?”  காதுகடித்தான் நவநீ.

“ஆளைப்பாரு... மூதேவி... ரிசல்ட் என்னன்னு முதல்ல பார்ப்போம்...” என அவனை முதுகில் செல்லமாய் அடித்தேன்.

"வாங்க... எங்கடா உங்க குரூப்பைக் காணோமேன்னு பார்த்தேன்" என்ற கேவிஎஸ் ‘ஆமா என்னாச்சு ஏன் இப்படி எனக் கேட்டார்’ என்னைப் பார்த்து.

எனக்கு என்ன என்று விளங்காமல் முழித்தேன். மார்க்கைச் சொல்லச் சொல்ல குறித்துக் கொண்டே வந்தேன். மேஜர் பேப்பரில் ஒன்றில் பெயிலாகியிருந்தேன். எனக்கு ஒன்றுமே புரியலை... இது எப்படி ஆச்சு... ஆங்கிலத்தில் எல்லாம் அரியர் விழலை.. எப்படி... அதுவும் ஏ.வி.சார் சப்ஜெக்ட்டில்.

"ஏன் ஒழுங்கா எழுதலையா..?" என்றவரிடம் "நல்லாத்தான் சார் எழுதினேன்"என்றேன் கண்களில் தழும்பும் நீருடன்.

"சரி... விடுங்க... ரீவால்யூவேசன் போடுவோம்... என்ன இந்த முறை உங்க இடத்தை மல்லிகா பிடிச்சாச்சு... சிக்ஸ்த்ல மீண்டும் முதலிடம் பிடித்தால் டிபார்ட்மெண்ட் சர்டிபிகேட்டும் பணமும் கிடைக்கும்... சரி விடுங்க... எது நடக்கணுமோ அது நடக்கத்தானே செய்யும்" என்றார் ஆறுதலாய்.

மற்றவர்களுக்கு மார்க் சொல்லி முடித்தவுடன் "நாளைக்கு வாங்க... ரீவால்யூவேசனுக்கு பணம் கட்டிருவோம்" என்றார்.

அப்போது அங்கு வந்த சுப்ரமணி சார், "தம்பி எப்படி மார்க் வாங்கியிருக்காக..." என்றார்.

"ஒரு பேப்பர் போச்சு... அதான் எப்படின்னு எனக்கு குழப்பமா இருக்கு... படிப்பு விஷயத்துல தப்புச் சொல்ல முடியாது... ஏதோ தவறு நடந்திருக்கு... அதான் நாளைக்கு ரீவால்யூவேசன் போடுவோம்ன்னு சொல்லியிருக்கேன்" என்றார்.

"ம்... தம்பிக்கு மார்க் போச்சுன்னு கவலையிருக்கும்... அதே சமயம் அவர் எழுதின கவிதை தாமரையில வந்திருக்கு...  சந்தோஷமான செய்தியில்லையா..." என புத்தகத்தை கேவிஎஸ் சாரிடம் கொடுத்தார் சுப்ரமணி சார்.

"அது சரி... கவிதை வந்திருக்கா... எங்களுக்கு ரொம்ப நாளைக்கு இவங்க ஒரு நல்ல செட்... படிப்பு... இலக்கியம்... விளையாட்டுன்னு எல்லாத்துலயும்... இவரும் இவரோட மற்ற துறை நண்பர்களும் நடத்துற கையெழுத்துப் பிரதி அருமையில்லீங்களா..." என்ற கேவிஎஸ் சார் வாங்கி வாசித்து விட்டு "அருமை... அருமை..." என்றபடி சுப்ரமணி சாரிடம் கொடுக்க, அவரோ  என்னிடம் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு "சாயந்தரம் வீட்டுக்கு வாங்க... நேத்தே அம்மா உங்களக் காணுமின்னு கேட்டுக்கிட்டு இருந்தாக" என்றார்.

வெளியில் வந்ததும் நண்பர்கள் பாராட்டியபடி, "உனக்கென்ன அரியர் விழுந்தா வாத்தியாரே ரீவால்யூவேசன் போடுறேன்னு சொல்றார். எங்க மார்க்கை சொல்லும் போது எதாவது சொன்னாரா பாத்தியா..?’ என்று நவநீ சொல்ல, ‘எப்பவுமே பங்காளி மேல கேவிஎஸ்க்கு அதிக பாசம்... எனக்கும்தான் அரியர் விழுந்திருக்கு... பணம் கட்டுறேன்னு சொல்ல வேண்டாம்... ரீவால்யூவேசன் போடுங்கன்னு கூட சொல்லலை..." என்றான் திருநா.

"கேவிஎஸ்க்கு மட்டுமா இன்னொரு எஸ்க்கும் பாசம்தானே மாப்ள மேல" சிரித்தான் நவநீ.

"அட ஏண்டா... இப்ப அரியர் விழுந்திருக்கேன்னு எனக்கு வருத்தமா இருக்கு... நீங்க வேற..."

"அதெல்லாம் பாஸ் பண்ணிடலாம்... நீ வேணா பாரேன் ரீவால்யூவேசன்லயே பாஸ் பண்ணிருவா... விடு... உன்னோட கவிதை புத்தகத்துல வந்திருக்கு... அதுவும் தாமரையில... பின்ன என்ன... மகிழ்ச்சியா இரு பங்காளி" என்றான் ஆதி.

நண்பர்களுடன் சாப்பிட்டு அரட்டை அடித்து விட்டு சுப்ரமணி சார் வீடு சென்ற போது எனக்கு முன்னே வந்திருந்த அவள் முறைத்தாள்.

சாரி சொல்லி சமாதானப்படுத்தி கவிதை வந்ததைச் சொன்னபோது அந்த கண்ணில் அவ்வளவு மகிழ்ச்சி... கவிதை வந்ததற்கு என்னைவிட அவளே அதிகம் சந்தோஷப்பட்டாள்... குதித்தாள்... குதூகலித்தாள்... கை பிடித்துக் குலுக்கினாள்.

மெல்லச் சொன்னேன் அரியர் விவரத்தை...

“எப்படி இப்படி...? நல்லாத்தானே எழுதியிருப்பே... சரி விடு... ரீவால்யூவேசன்ல பாத்துக்கலாம்” என ஆறுதல் சொன்னாள்.

நான் ஒன்றும் பேசாமல் இருக்க, என்னருகே நெருக்கமாய் அமர்ந்து ‘சும்மா மனசைப் போட்டு அலட்டிக்காதே... விடு... உன்னோட கவிதையை அச்சில் பாக்கயிலே எம்புட்டு சந்தோஷம் தெரியுமா...?’. உண்மையான மகிழ்வோடு சொன்னவள் எதிர்பாராத தருணத்தில் என் கன்னத்தில் முத்தமிட்டாள். அவளிடமிருந்து கிடைத்த முதல் முத்தம்.

வாசலில் சுப்ரமணி சார் சைக்கிளை நிறுத்தும் சப்தம் கேட்டு சற்றே தள்ளி அமர்ந்தோம்.

அவருடனும் அங்கு வந்த வேறு நண்பர்களுடனும்ம் பேசிக் கொண்டிருந்து விட்டு வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது இரவு எட்டு மணி. அப்பா எடுத்துவிடுவது போல் பார்த்தார். அம்மாவோ ஊரைச் சுத்திட்டு வா... வீடு தங்காதே... என்று கத்தினார்.

‘என்ன படம் பார்த்தே..?’ மெல்லக் கேட்டபடி கடந்தான் தம்பி.

அவனுக்குப் பதில் சொல்லாது அரிக்கேன் விளக்கொளியில் கவிதையை வாசிக்க ஆரம்பித்தேன். கவிதை முழுவதும் அவளே தெரிந்தாள்.

இதோ அவள் குறித்தும் இன்றைய நாள் குறித்தும் டைரியில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய தினம் கவிதை வந்ததற்கு மகிழ்வதா...? அரியர்ஸ் விழுந்ததற்கு வருந்துவதா..?  கேள்விக்குறியோடு முடித்து டைரியை மூடுகிறேன். வெளியில் மழை பெய்வதற்கான மின்னலும் இடியும் பலமாய்.

முத்த ஈரம் காய்ந்த கன்னத்தைத் தடவிக் கொண்டேன். மழை இரவு மகிழ்வாய்...

-'பரிவை' சே.குமார்.



புதன், 19 செப்டம்பர், 2018

சினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்)

Image result for theevandi

தீவண்டி...

மலையாளத்தில் தீவண்டி என்றால் இரயில் என்பதை அறிவோம்... நம்ம ஊர்ல சிகரெட் இருந்தாத்தான் வேலை ஆகும் என எழுந்தது முதல் கக்கூஸ்  முதல் படுக்கைக்குச் செல்லும் வரை ஊதித் தள்ளுபவரை  சுத்த தமிழ்ல 'செயின் சுமோக்கர்'ன்னு சொல்லுவோம்ல அப்படிப்பட்ட ஆளைச் சுற்றிப் பிண்ணப்பட்ட கதை என்பதால் படத்தின் பெயரே 'தீவண்டி' என்பதாய்.

பினீஸ் தாமோதரன் என்ற பெயர் இருந்தாலும் படம் முழுவதும் 'தீவண்டி'யாய் டொவினோ தாமஸ். கர்ணனும் கவச குண்டலமும் மாதிரி டொவினோவும் சிகரெட்டுமாய்... அதனால் திரையெங்கும் புகை... அம்மன் படத்துக்கு நம்மூரு தியேட்டர்ல சாம்பிராணி போட்ட மாதிரி.

காலையில் எழும்போதே காபி எங்கே என்று எழுபவர்களைப் போல் சிகரெட் பாக்கெட்டைத் தேடியபடியே எழுகிறார் டொவினோ. 150 சிகரெட் பிடித்து ஒருவன் சாதனை பண்ணியிருக்கிறான் என்பதை நண்பன் சொல்ல, காதலி மேல் உள்ள கோபத்தில் அந்த சாதனையை நான் முறியடிக்கிறேன் என பதினாறு பாக்கெட் சிகரெட்டை ஓரே சமயத்தில் பிடித்து நண்பர்கள் மத்தியில் சாதனையாளராகிறார். 

அடித்துப் பெய்யும் மழை நாளில் மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே பிறந்து, செத்துப் போயிருச்சு என வெள்ளைத் துணியில் சுற்றி பெஞ்சின் மீது வைத்து விட்டுப் போக, மாமன் பிடிக்கும் சிகரெட் புகையினால் முகத்தில் லேசான மாற்றம் தெரிகிறது. மனசுக்குள் மகிழ்ச்சி மழை அடிக்க மழலையின் முகத்தில் புகையை ஊதுகிறார் மாமா... குழந்தை அதை உள்வாங்கி மெல்ல அழ ஆரம்பிக்கிறது.

அந்தக் காட்சியின் பின்புலத்தில் உலகத்தில் சிகரெட் வாசனையில் உயிர் பெற்ற இரண்டாவது குழந்தை இது என்று சொல்கிறார்கள். முதலாவது ஆளான பாப்லோ பிக்காசோ, தன் மாமா ஊதிய சிகரெட்டால்தான் உயிர் பெற்றாராம். அதை அப்படியே உருவி வைத்து விட்டார் இயக்குநர். இனி நம்மாளுக பிறந்த குழந்தை அழலையே என்றதும் சிகரெட் வாங்கி வாங்க என்று சொல்லாமல் இருந்தால் சரி.

வளர் பருவத்தில் பிடித்துத் தூக்கிப் போட்ட சிகரெட்டை எடுத்து சுவைத்துப் பார்க்கிறான். பின்னர் மாமாவுக்கு சிகரெட் வாங்குகிறான்... அது தனக்குமானதாய்.... இரண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாய் ஆகிவிட... பள்ளிப் பருவத்தில் பாழடைந்த வீட்டுக்குள் சிகரெட் சுவையை அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இரவில் வெளியில் வந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போது போலீஸில் மாட்டி, காவல் நிலையத்தில் வைத்து வீட்டார் முன் உண்மை வெளிப்பட, சிகரெட் பிடித்துக் கொள் என்ற அனுமதி கிடைக்கிறது. பின்னர் சிகரெட்டும் கையுமாய் அலைய ஆரம்பிக்கிறான்.

படத்தின் ஆரம்பத்தில் சிகரெட் குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கென்றார்கள். டோரண்டில் பார்க்கும் போது டொவினோ சிகரெட் பிடிக்கும் போதெல்லாம்.... அதுவும் பதினாறு பாக்கெட் சிகரெட்டை அடுக்கி வைத்து மொத்தமாய் வாயில் வைத்து புகையை கப்...கப்பென விடும் போது பெண்களின் சத்தம் காதை பிளக்கிறது... அப்ப சிகரெட் பிடிப்பதை பெண்கள் விரும்புகிறார்கள் என்கிற போது நாயகி மட்டும் முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் சிகரெட்டை நிறுத்து என்கிறாளே ஏன்..?

சரி விடுங்க... தீவண்டியினாலே பிடிக்காத சூரஜ் வெஞ்சரமூடுவின் மகள் சம்யுக்தாவிற்கு சின்ன வயது முதலே அவன் மீது காதல்... அந்தக் காதலைச் சொல்லி, அது திருமணம் நிச்சயம் வரை செல்கிறது. முத்தம் கொடுக்க முயலும் போது முதல் சிகரெட்டை நிறுத்து என்கிறாள் மனைவி ஆகப்போகும் காதலி... நிறுத்திடலாமே முத்தத்தை என்கிறான் தீவண்டி. அப்படிப்பட்டவன் தாலியை சிகரெட் பாக்கெட்டில் வைத்து மாமனார் வீட்டில் காட்டக் கொண்டு செல்ல, மங்களகரமான பொருளை எதில் வைத்து எடுத்து வருகிறாய் என மூளும் கோபத் தீயில் திருமணம் தடைபடுகிறது.

Related image

இதற்கிடையே அரசியல் ஒரு பக்கமாகப் பயணித்து வருகிறது, இடைவேளைக்குப் பின் அது தீவண்டியோடு பயணப்பட ஆரம்பிக்கிறது.

ப்ளூவேல் விளையாட்டு அடிமை டிரைவரால் விபத்துக்குள்ளாகிறார் எம்.எல்.ஏ, அவர் பிழைக்க மாட்டாரென அந்த இடத்துக்கான போட்டியில் பொண்ணு கொடுக்க இருந்த மாமனும் அக்காவின் கணவனும்... அந்த இடத்தில் அக்காவின் கணவனுக்காக பேசுகிறான் தீவண்டி... 

வார்த்தை முற்றி பெண் கொடுக்க இருந்த மாமன் நீ சிகரெட் பிடிக்காமல் இத்தனை நாள் இருந்தால் நான் விட்டுக் கொடுக்கிறேன் என்கிறார். அவர் மனசுக்குள் இப்படியேனும் தீவண்டி மாறினால் மகளின் திருமணத்தை நடத்தலாம் என்ற நப்பாசையும் இருக்கிறது. உதட்டு முத்தம் கூட வேண்டாம் சிகரெட்டை முத்தமிடுவேன் என்றவன் அக்காவின் கணவனுக்காக முடியாத சவாலுக்கு ஒத்துக் கொள்கிறான். அந்த சவாலை சமாளிக்க அவன் படும்பாடு... அதைப் பார்த்தால் ரசிக்கலாம்.

தான் எப்படியும் தேர்தலில் சீட் வாங்க வேண்டும் என்பதால் ஒரு தீவில் அவனை கொண்டு போய் இறக்கி விடுகிறான் அக்கா கணவன்... அங்கு சிகரெட் இல்லை... இரண்டு தடியர்கள் கிடாருடன் உட்கார்ந்து 'தீவண்டி...' 'தீவண்டி...' எனப் பாடுகிறார்கள். அங்கிருந்து அவனை வெளியில் கொண்டு வர காதலியின் தகப்பன் ஆட்களை அமர்த்துகிறான். அவனுக்கும் எப்படியும் தானே சீட் வாங்கி விட வேண்டும் என்ற ஆசையும் இருக்கத்தான் செய்கிறது. பின்னே கோடிகளில் மிதக்க யாருக்குத்தான் ஆசையிருக்காது.

அக்கா கணவன்... காதலியின் அப்பா... ஜெயிக்கப் போவது யார்..? என்ற கேள்வியோடு இறுதிக் காட்சிகள் நகர்கிறது. இவர்களின் எண்ணத்தில் மண்ணைப் போட்டானா... இல்லை சிகரெட் வேண்டான்டாங்கிற எண்ணம் கொண்டானாங்கிறதுதான் படத்தின் முடிவு.

மிகச் சிறந்த படமெல்லாம் கிடையாது... நகைச்சுவை, காதல், கொஞ்சம் அரசியல் என பயணிக்கும் படம் சிகரெட் புகையால் நிரம்பி நிற்கிறது. ஒரு தடவை ஜாலியாப் பாக்கலாம். தீவண்டியாய் ஜொலித்திருக்கும் டொவினோ, அவருக்கு இணையாய் முதல் படம் என்பது தெரியாமல் நடத்திருக்கும் சம்யுக்தா, நகைச்சுவை மட்டுமல்ல குணசித்திரம், வில்லன் என எதுவாகினும் நான் சிறந்த நடிகனே என்பதை நடிப்பால் சொல்லும் சூரஜ், மாமாவாக வருபவர், நண்பர்கள் என எல்லாருக்காகவும் பார்க்கலாம்.

நம்ம கமல் என்னய்யா கமல்... சம்யுக்தா உதட்டை இங்கிலீஸ் படத்துல மாதிரி உருஞ்சி எடுத்துடறான் டொவினோ... அப்ப இந்த பொம்பளப் புள்ளங்கதாய்யா அந்தக் கத்துக் கத்துக... நல்ல வளர்ச்சி... இதைச் சொன்னா ஆணாதிக்கவாதின்னு சொல்லுவாங்க...

இயக்குநர் பெல்லினிக்கு முதல் படம் என்றார்கள். தோல்விப் படமாக இல்லாமல் கொடுத்திருக்கிறார். அடுத்த படத்தில் இன்னும் ஜொலிப்பார் என நம்பலாம். இசை படத்துக்கு வலு சேர்க்கிறது.

தீவண்டி... வேகமாகப் போகவில்லை என்றாலும் மெதுவாகவும் போகவில்லை.

ஒரு முறை பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வெள்ளந்தி மனிதர்கள் : 12. பாலாஜி பாஸ்கரன்

Image may contain: Balaji Baskaran, smiling, outdoor and close-up

2015-ல் வெள்ளந்தி மனிதர்கள் என்ற தலைப்பில் தொடர்ந்து என் வாழ்வில் மறக்க முடியாத மதிப்புமிக்க பலரைப் பற்றி எழுதியிருக்கிறேன். அதைத் தொடர வேண்டும் என முடிவெடுக்க வைத்தவர் சகோதரர் பாலாஜி பாஸ்கரன்.

இவருடனான முதல் சந்திப்பு கனவுப் பிரியன் அண்ணனின் 'சுமையா' விமர்சனக் கூட்டத்தில்... 

ஆளாளுக்கு சுமையா குறித்துப் பேசிக் கொண்டிருக்க, பிரியாணியை பாத்திரத்தில் இருந்து தட்டில் எடுத்து வைத்துக் கொடுப்பதில் ரொம்பத் தீவிரமாய் இருந்தார். என்னருகில்தான் இருந்தார் என்றாலும் ஒரு சிறு சிரிப்பு மட்டுமே எங்கள் நட்பின் தொடக்கமாய்... நான் பெரும்பாலும் யாருடனும் உடனே பேசி விடமாட்டேன். அப்படியே வளர்த்துட்டாங்கன்னு சொல்லமுடியாது.. வளர்ந்துட்டேன்... இனியா மாறப் போகுது. 

பாத்திரத்தில் இருந்த பிரியாணி தட்டுக்கு மாறிய போது பேச்சு பேச்சாக இருந்தாலும் தட்டுக்கள் காலியாகிக் கொண்டே இருந்தன... சுண்டலும் அப்படியே... 'என்னய்யா இது கடைசியில நமக்கு பிரியாணி இல்லாமப் போச்சு... எங்கேய்யா வச்ச பிரியாணியெல்லாம்...' அப்படின்னு மனுசன் புலம்ப ஆரம்பிக்க, கோவில்ல பிரசாதம் கொடுக்கப் போறவனுங்க கடைசியில் பிரசாத வாளியே மிஞ்சும் என்பதால் தனியாக எடுத்து வைத்துக் கொள்வதைப் போல் மனிதருக்கு சூதனமாப் பொழைக்கத் தெரியலையே என்று நினைத்தபடி 'இனி கூவி என்னத்துக்கு... விடுங்க' என்றேன். எனக்கும் பிரியாணி கிடைக்காத வெறுமையில்.

நம்ம ஊர் பக்கம்... அட அவரும் நம்ம பக்கந்தேன்... சூது வாது இல்லாதவம்ப்பா அவன்... வெகுளி... மனசுல எதையும் வச்சிக்கமாட்டான் அப்படின்னு சிலரை வைத்திருப்பார்கள்... அப்படிப்பட்ட மனிதர் இவர். மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்செல்லாம் பேசுவதில்லை... எதாயிருந்தாலும் பட்டுன்னு போட்டு உடைச்சிடுவாரு என்பதை இவரின் அடுத்தடுத்த சந்திப்புக்களும் எங்கள் வாட்சப் குழும கருத்துக்களும் சொல்லாமல் சொல்லின.

ஓரிதழ்ப்பூ விமர்சனக் கூட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் விக்கெட்டை இழக்காமல், ராகுல் திராவிட்டின் டெஸ்ட் போட்டி பேட்டிங் போல் அடித்து ஆடாமல் ஆடிக் கொண்டிருக்க, 'என்னய்யா இன்னும் விக்கெட் விழ மாட்டேங்குது...' எனக் காதைக் கடித்தார்... அது அடுத்திருந்த பால்கரசையும் சிரிக்க வைத்தது. மனிதரோ 'ஏய்யா சிரிக்கிறீங்க...பேசுறதைக் கேளுங்கய்யா...' என்றார் சிரிக்காமல்.

அந்தக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் திடீரென முன்னரே இறக்கி விடப்பட்டு அடித்து ஆடிய பாண்ட்யா மாதிரி, திடீர்ன்னு களமிறங்கிச் செம ஆட்டம்... நானே பேச்சாளன்... எனக்குப் பாரதியைத் தெரியும்...ஷெல்லியைத் தெரியும்... இலக்கியம்ன்னா இதுதான்யா... நீ எழுதுறதெல்லாம் எளக்கியமய்யா...  என்றெல்லாம் பேசாமல் மனதில் பட்டதை மடை திறந்த வெள்ளமென நகைச்சுவையாய்... அதுவும் முழுமையாக நகைச்சுவையாய் அரங்கம் சிரிப்பில் அதிர அள்ளிக் கொட்டினார். தொடக்க ஆட்டக்காரர் போராடிப் பெற்ற சதத்தை இவர் அதிரடியாய்ப் பெற்று பலத்த கைதட்டல்களுடன் சிறந்த ஆட்டக்காரராகவும் ஜொலித்தார்

சென்ற வார வெள்ளியன்று அபுதாபி வருகிறேன் என்று வாட்சப்பில் ஒரு தற்காலிக குழுவை உருவாக்கிச் சொன்ன போது நான் சந்திக்கச் செல்லும் எண்ணத்தில் இல்லை. நெருடாவும் அழைத்திருந்தாலும் போகும் எண்ணமின்றியே இருந்தேன். அதற்குக் காரணம் அவர் மீது கோபமோ வெறுப்போ இல்லை... கடந்த சில மாதங்களாக அடித்து ஆடும் வாழ்க்கைக் கிரிக்கெட்டில்... இங்கிலாந்தில் துவைத்து எடுக்கப்பட்ட இந்திய அணி போலான நிலை. அதனால் எதன் மீதும் பற்றற்றுப் பயணித்துக் கொண்டிருப்பதே நலமென நினைத்திருந்தேன்.

பத்துக்குப் பத்து அறையும்... கட்டிலும்... கணிப்பொறியும் தவிர்த்து  கொஞ்ச நேரம் சிரித்து வரலாமே என்ற நினைப்போடு  பேருந்தில் வருகிறேன் என்று சொன்ன நெருடாவுக்காக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்து , அவர் வரவில்லை என்பதால் மீண்டும் அறைக்கே பஸ் ஏறிவிடலாம்... உடம்பில் இருக்கும் நீரெல்லாம் வியர்வையால் காலியாகிவிடும் போலவே என நினைக்கும் போது பாலாஜியின் அழைப்பு வந்தது.

அந்த அழைப்பில்தான் நெருடாவெல்லாம் ஒரு மணி நேரம் முன்னரே வந்து பாலாஜியின் நகைச்சுவையை... கவனிக்க பெரும் எழுத்தாளர்கள் கூடியிருந்த இடத்தில் பேச்சு இலக்கியமாகத்தான் இருக்கும் என்றாலும் இங்கு அந்த இலக்கியத்தை விடுத்து நகைச்சுவையை என்றே சொல்லியிருக்கிறேன்... ஆம் பாலாஜியின் நகைச்சுவையை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கனவுப் பிரியன் அண்ணன் அறை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

நம்ம ஊர்ல வெயில்லு சுட்டெரிக்குதுன்னு சொல்லுவோமுல்ல... இங்க வெயில் சுட்டெல்லாம் எரிக்கவில்லை... நேரா எரிக்க மட்டுமே செய்தது... இதுலதான் வாழ்க்கையை ஓட்டுறோம் என்றாலும் பேருந்து நிலையத்தில் இருந்து கனவுப் பிரியன் அண்ணன் அறைக்குச் செல்வதற்குள் குளித்து... குளித்து... குளித்து முடித்திருந்தேன்... இனி வியர்க்க உடம்பில் ரத்தம் மட்டுமே இருக்கு என்ற நிலையில். வேர்க்க விறுவிறுக்க அங்கு செல்லும் போது பெட்ரோல் போட்ட கதை, பாவனா கதை எல்லாம் முடிந்திருந்தது.

அதன் பின் பாலாஜியின் ஆட்டம்தான்... மனிதர் எந்த ஒரு விஷயத்தையும்... அது மகிழ்வோ சோகமோ சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டே இருந்தார். நாங்கள்லாம் சிரித்தபடியே ரசித்துக் கொண்டிருந்தோம். ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரித்துச் சிரித்து கண்ணீரே வந்திருச்சு என்றார் நண்பரொருவர். அப்படித்தான் எல்லாருக்குமே.

மதிய உணவுக்குப் பின்னும் யாரையும் படுக்க விடவில்லை... சுபான் பாய் படுத்தபடி சிரித்துப் பார்த்து எழுந்து உட்கார்ந்து விட்டார். எத்தனையோ கதைகள்... கவிஞர்கள், இலக்கியவாதிகள், ஆர்வக்கோளாறுகள் பற்றியெல்லாம் அடித்து ஆடிக் கொண்டிருந்தார்.  

எல்லாருக்கும் சிரித்தபடியே இருக்க, கனவுப் பிரியன் அண்ணன் அறை நண்பர்கள் என்ன இவனுக இப்படிச் சிரிக்கிறானுங்க என்று மனசுக்குள் நினைத்து... திட்டியிருந்தாலும் வெளியில் எங்களின் சப்தத்தை கேட்டு வருத்தப்படவில்லை என்பதாய் காட்டிக் கொண்டிருந்தார்கள். அண்ணன் சொன்னபோது கூட ஏய் அதெல்லாம் இல்லை... என்று அகம் காட்டினார்கள். அகம் நல்லதாய் இருந்தது... புறம் எப்படியோ தெரியவில்லை.

அன்றைய பேச்சில் தஞ்சைப் பெரிய கோவில் 'நந்த' வனம்தான் அதிகம் பேசப்பட்டது என்றாலும் அந்த 'படுக்கை அறை' விவகாரம் மட்டும் திரும்பத் திரும்ப சிரிக்க வைத்தது. இலக்கியத்தை 'அங்க'தாய்யா வச்சிருக்கானுங்க என்ற வரி யோசிக்கத்தான் வைத்தது. நமக்கு இலக்கிய இலக்கணமெல்லாம் தெரியாது என்பதால் யோசனையை அறைக்குள்ளேயே விட்டு வந்தாச்சு. வச்சிருக்கவங்க 'அங்க'யே வச்சிக்கட்டும்.
  
அது எப்படிய்யா இந்த மனுசன் மட்டும் இப்படிச் சிரிக்க சிரிக்க பேசி... சுற்றியிருப்பவர்களை எல்லாம் சிரிக்க வைக்கிறார் என்பது மட்டும் ஆச்சர்யமாகவே இருந்தது. 

அழகர் ஆற்றில் இறங்குவதைப் பற்றி பேசும் போது அழகு மலையானைக் காணச் சென்ற நாட்கள் நினைவில் ஆடிச் சென்றன. ஊரில் இருந்து திரும்பி வரும் முன்னர் ஏர் இந்தியாக்காரனால் பாதிக்கப்பட்டதைக் கூட நகைச்சுவையாய்ச் சொல்லிச் சிரிக்க வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நகைச்சுவையாய் பேசுவதெல்லாம் ஒரு வரம்... அதுவும் மற்றவர்களைச் சிரிக்க வைத்துப் பார்த்தல் என்பது மிகப் பெரிய கலையும் கூட. அது எல்லாருக்கும் வாய்த்து விடுவதில்லை... சிரிக்க வைக்கிறேன் என லியோனி, சூரி போன்றவர்கள் நம் வதையை வாங்குவதைப் பார்த்திருக்கிறோம். அப்படியில்லாமல் உண்மையிலேயே ரசித்துச் சிரிக்க வைக்கிறார். 

இந்த  மதுரை மண்ணோட தன்மையே தனித்தன்மைதான். அரிவாளும் எடுக்கும் அன்பும் செய்யும்... பாசக்காரங்கன்னா அம்புட்டுப் பாசக்காரனுகளா இருப்பானுங்க... பேருந்தில் இடமில்லாமல் நின்று வந்தவனுக்கு குரல் கொடுத்த கதைகள் பல பேசப்பட்டன. தேவர் ஜெயந்தி, குருபூஜைகள் என சாதிகளை தூக்கி தோளில் போட்டுக் கொள்ளும் இந்த மண்தான் சல்லிக்கட்டு பிரச்சினை போல் வேண்டிய நேரத்தில் எல்லாச் சாதிக்காரனையும் தோளில் கைபோட்டு ஒண்ணா நிக்க வைக்கும். திருவிழாக்கள், முளைப்பாரி, மந்தை  என நகைச்சுவைக்குள்ளும் சில  மண் சார்ந்த விஷயங்களைப் பேசினார். 

கல்லூரியில் சுடிதார் கதை சொல்லி, நீங்க படிச்ச போது இருந்த காலேசு இல்ல தம்பி இப்பன்னு டீக்கடைக்காரர் சொன்னதாய்ச் சொன்னபோது எங்கள் கல்லூரியும் மனதிற்குள் வந்து போனது. அதுவும் இப்ப பால்வாடி மாதிரித்தான் இருக்குன்னு கல்லூரி பியூன் ஒருமுறை என்னிடம் சொன்னார். அந்தப் பால்வாடியில்தான் என் நண்பர்கள் பேராசிரியர்களாய் இருக்கிறார்கள். புங்கை மரமெல்லாம் ஒடிபடாத கிளைகளுடன் நிற்பது வியப்பாய் இருக்கிறது.

அவர் மட்டுமே பேச, நாங்கள் எல்லாம் ரசித்துச் சிரிக்க... கனவுப் பிரியன் அண்ணன் அறையிலிருந்து சிரிப்பொலியை லிப்டில் இறக்கி, கல்கத்தா டீக்கடையில் அமர வைத்து... பூங்காவில் மரங்களுக்கு இடையே மகிழ வைத்து... மெல்ல அல் வத்பா மண் பாறைகளில் அமர்த்தி... மிகச் சிறப்பான நாளாக... மகிழ்வான நாளாக அனுபவித்தோம். ரசனையான பேச்சுக்கு முன்னே ரசிகனாய் நான்.

அமீரக தமிழ் வாசிப்பாளர் குழுமத்தில் இவர் போடும் 'அடி ஆத்தி' என்ற கருத்துக்களும் சில சமயங்களில் பதியும் குரல் ஆடியோக்களும் நம்மை ரசிக்க வைக்கும். 

மண்ணின் மனத்தோடு பேசும் இவரால் எல்லோரையும் மகிழ்வாய் வைத்திருக்க முடியும் என்பதை இவருடன் பழகிய, சந்தித்த மனிதர்கள் அறிவார்கள். அவர்களில் நானும் ஒருவனாய் இருப்பது மகிழ்வே...

பாலாஜி... சூதுவாதில்லா... நெஞ்சில் வஞ்சமில்லா... மதுரை மண்ணின் வெள்ளந்தி மைந்தர் என்பது மிகை அல்ல... உணமை..

-'பரிவை' சே.குமார்.

சனி, 1 செப்டம்பர், 2018

சினிமா : மேற்குத் தொடர்ச்சி மலை

Image result for மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை...

விஜய் சேதுபதியின் தயாரிப்பில்... இசைஞானியின் இசையில்... தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில்... லெனின் பாரதி இயக்கியிருக்கும் படம்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம்... அதுவும் சினிமாத்தனமில்லாத எதார்த்தத்துடன்...

ஆசை நிராசையாவது இந்தப் படத்தின் நாயகனுக்கு மட்டுமல்ல... எல்லா ஏழைகளுக்கும் அப்படித்தான்...

'காணி நிலம் வேண்டும் ' என்று பராசக்தியிடம் கேட்டான் நம் பாரதி, அப்படித்தான் தனக்கென ஒரு சிறு நிலமாச்சும் வேண்டும் என்ற அப்பாவின் ஆசை அவர் காலத்தில் கைகூடாவிட்டாலும் தன் காலத்திலேனும் கை கூட வேண்டும் என்று நினைக்கிறான் ரெங்கசாமி.

அப்பாவின் ஆசை போல் அவனின் ஆசையும் நிராசையானதா அல்லது வெற்றி பெற்றானா என்பதே படத்தின் கதை.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார மக்களின் வாழ்க்கையைப் பேசுகிறது படம். ஒரு நாளைக்கு நாலு முறை ஏலக்காய் மூட்டை சுமந்து மலைப்பாதையில் நடந்து கிடைக்கும் கூலியில் வாழ்க்கை நடத்தும் மக்களைக் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். அப்படியான வாழ்க்கையில் கிடைக்கும் பணத்தில்தான் உண்டு, உறங்கி, இடமும் வாங்கத் துடிக்கிறான் ரெங்கசாமி.

ரெங்கசாமி எல்லாருக்கும் பிடித்தவனாக... இரக்க குணமுள்ளவனாகக் காட்டப்பட்டிருக்கிறான் அவனின் ஆசையின் ஆணி வேரை ஆட்டிப் பார்ப்பதில் அவன் வணங்கும் இறைவனுக்கு அவ்வளவு ஆனந்தம். ஆம் கடவுள்கள் எப்போதும் ஏழைகளுடன்தானே அதிகமாக விளையாடுவார்கள்.

படத்தில் பிரபலங்கள் யாருமில்லை... எல்லாருமே அந்தப் பகுதி மக்கள்தான். பிரபலங்கள் இல்லாததால்தான் படம் பிரபலமாகியிருக்கிறது என்பதே உண்மை. தயாரிப்பாளர் விஜய் சேதுபதி தானே முதலில் நடிக்க நினைத்தார் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். அவர் அப்படி நினைத்திருக்க மாட்டார் என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை அப்படி நினைத்திருந்து... அதன்படி நடித்திருந்தால்... மேற்குத் தொடர்ச்சி மலை விஜய் சேதுபதி படங்களில் ஒன்றாக மாறியிருக்கும்.

படத்தின் கதை என்பது நீட்டி முழங்கும் படியாகவெல்லாம் இல்லை. நிலம் வாங்கத் துடிக்கும் ஒருவன் அதை அடைந்தானா இல்லையா என்பதுதான்... அதை ரெண்டு மணி நேரத்துக்கு இழுத்தால் டாக்குமெண்டரி ஆகிவிடும் என்பதை உணர்ந்தே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார மக்களின் வாழ்க்கையை பேசியிருக்கிறார் இயக்குநர். 

அந்த மக்களே நடித்திருப்பதால் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகச் சிறப்பாய் வந்திருக்கிறது. அவர்களின் பேச்சு மொழியும் உடல் மொழியும் நம்மை மேற்குத் தொடர்ச்சி மலையில் அவர்கள் பின்னே இழுத்துச் செல்கிறது.

ஓடி ஓடி உழைப்பவனுக்கு எப்பவுமே முதலாளியும் சுற்றியிருப்பவர்களும் ஏமாற்றுக்காரர்களாய்த்தான் இருப்பார்கள். ஆனால் இதில் முதலாளி, கணக்கப்பிள்ளை, கங்காணி, சாக்கோ, பாய் என எல்லாருமே நல்லவர்களாக, அவன் தன் கனவை எப்படியும் நனவாக்கிவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

Image result for மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

பிழைக்க வந்தவன்... தன்னைத் தாங்கிய மக்களின் வயிற்றில் மெல்ல மெல்ல அடித்து விவசாய நிலங்களை எல்லாம் கார்ப்பரேட்டின் கைகளுக்கு லவட்டிக் கொடுக்கிறான்.  ஆரம்பத்தில் தக்காளிக் கூடையைத் தூக்கிக் கொண்டு வரும் அவன்தான் பின்னாளில் லோகு பில்டர், பினான்ஸ் என உயர்ந்து நிற்கிறான். ஏழைச் சனம் ஏழைச் சனமாகவே வாழ்கிறது.

தோட்டத் தொழிலாளர்களை சங்கத்தில் இணைத்து அவர்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் சகாவுவான சாக்கோ, அந்த மக்கள் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதால் திருமணமே செய்யாமல் வாழ்கிறான். அவனும் ஒரு நாள் அரிவாள் தூக்க வேண்டிய நிலமைக்கு கொண்டு வருகிறது பணமும் அதிகாரமும் அதன் பின்னே வாலாட்டிச் செல்லும் அரசியலும்.

ரெங்கசாமியின் நிலம் வாங்கும் கனவுதான் கதையா என்றால் அதுதான் கதை என்று கடந்து விட முடியாது. அந்த மக்களின் வாழ்வியலைப் பேசும் கதையில் கழுதைகளை வைத்து மூட்டை சுமந்து செல்லும் பெரியவருக்கு ஒரு கதை இருக்கிறது. யானையைக் கொல்வேனென பைத்தியமாய் மலை முகட்டில் சுற்றும் கிழவிக்குள் ஒரு கதை இருக்கிறது. இருமலுடன் வீராப்பாய் மலையேறும் பெருசிடம் ஒரு கதை இருக்கிறது. மலை முகட்டில் பேத்தியுடன் கடை வைத்து வாழும் கிழவிக்குள் ஒரு கதை இருக்கிறது... கம்யூனிஸ்ட் சாக்கோவின் பின்னே ஒரு கதை இருக்கிறது... இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் கதைகள் இருக்கின்றன... அவை போகிற போக்கில் சொல்லப்பட்டு விடுகின்றன.

ஒரு கனமான வாழ்க்கையை கண் முன்னே காட்டும் படத்தில் 'இன்னும் எம்புட்டுத் தூரம் போகணும்' என்பவரிடம் 'இந்தா அந்த மலை ஏறி இறங்கினா வந்துரும்' என்று சொல்வது... கழுதை மீது பொதி ஏற்றி வருபவரிடம் கிழவர் 'உனக்கு ரத்தம் செத்துப் போச்சு ' என்றதும் 'உந்தங்கச்சிக்கிட்ட வந்து கேட்டுப்பார்' என பதிலடி அடிப்பது... 'சீனி போதுமா..?' என ரெங்கசாமியிடம் கேட்கும் மகளிடம் 'எல்லாம் சரியாத்தான் இருக்கு நீ உள்ள போ' என அப்பா சொல்வது... '300 ஏலக்காய் நூறு மல்லிகைப் பூ..' என்றதும் வடை, பணம் என கையிலிருப்பதை வீசி எறியும் கங்காணி... 'எங்கே ஒரு தடவ எம்பேரச் சொல்லு' என்றதும் 'எம்புருஷன் பேருதான் உம்பேரு... இந்தா கையில எழுதி வச்சிருக்கேன் பாரு' எனச் சொல்லும் கிழவி... என படம் முழுவதும் நகைச்சுவை நிரவிக்கிடக்கிறது.

கம்யூனிஸம் பேசுவதால் அரிவாள் சுத்தியல் கொடியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவுக்குப் புதுசு... நாம் கட்சிச் சின்னங்களை சுவர்களில் காண்பிப்போம்... அரசியல் என்று வரும் போது சமகால அரசியல் மட்டுமின்றி... கடந்த கால அரசியலும் பேச மாட்டோம். மலையாளத்தில் சமகால அரசியலைப் பேசுவார்கள்... கட்சிக் கொடிகளைக் காட்டுவதுடன் அரசியலையும் கிழித்துத் தொங்கப் போடுவார்கள்.  அப்படி எல்லாம் தமிழ் சினிமாவில் காட்டினால்... கிழித்தால்... என்ன ஆகும் என்பதை நாம் அறிவோம். போராட்டங்களுக்குள் சிக்கி படம் காணாமல் போய்விடும்.

இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்கவே இந்தப் படத்தில் கம்யூனிஸம் பேச தமிழகத் தோழரைப் பயன் படுத்தாமல் சேர நாட்டுச் சகாவுவைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். விவசாய நிலத்தில் ரோடு வருதல்... அதனால் மக்களுக்கும் விவசாய நிலத்துக்கும் வரும் பாதிப்பு எனத் தைரியமாக நடப்பு அரசியல் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்லும் இயக்குநரைப் பாராட்டலாம்.

Image result for மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

படத்துக்கு இசைஞானியின் பின்னணி இசை மிகப்பெரிய பலம். 

மேற்குத் தொடர்ச்சி மலையும் நடித்திருக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பு. படத்தின் எடிட்டிங்கும் அருமை.

ஜூங்கா போன்ற படங்களை நட்புக்காக செய்கிறேன் என தன்னை அவ்வப்போது தொலைத்து விடும் விஜய் சேதுபதி, மேற்குத் தொடர்ச்சி மலை மூலம் உயரத்துக்குச் சென்றிருக்கிறார். புதுப்பேட்டையில் தனுசின் நண்பனாக வந்து... தென் மேற்குப் பருவக்காற்றில் 'யார்டா இவன்?' எனப் பேச வைத்து... தொடர்ச்சியாய் (அவ்வப்போது சறுக்கினாலும்) வெற்றிப் படங்கள் கொடுத்து... நடிகராய் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜெயித்து நிற்கும் விஜய் சேதுபதியின் தன்னம்பிக்கை பாராட்டுக்குறியது.

அந்தப் பகுதி மக்கள்தான் இதில் நடிகர்கள் எனத் தீர்மானித்து அதைச் செயல்படுத்தி, அவர்கள் பேச்சு மொழியிலேயே வசனத்தைப் பேச வைத்து, மிகச் சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் லெனின் பாரதிக்கு வாழ்த்துக்கள்.

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து.. கை தூக்கி விட்டு வாழும் அந்தக் கபடமில்லாத மக்களின் வாழ்க்கையை கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள் கதை மாந்தர்களான நிஜ மாந்தர்கள். முதல் முறை என்பதால் சிலருக்கு கேமராப் பயம் இருந்திருக்கிறது என்றாலும் அது ஒரு குறையாய் தெரியவில்லை அவர்களுடன் நாமும் சேர்ந்து நடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை ஒற்றையடிப் பாதைப் பயணத்தில்.

ரெங்கசாமியாக நடித்திருக்கும் ஆண்டனி சரியான தேர்வு... மனைவியாக வரும் காயத்ரி நிறைவு... இவர்களைப் போல் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பு...

மலையேறும் போது கடினம் தெரியாமல் இருக்க கல் எடுத்துச் சென்று மலை முகட்டில் இருக்கும் சிறு தெய்வத்திடம் சமர்ப்பிக்கும் காட்சி பார்க்கும் போது, பள்ளி நாட்களில் வயிறு வலி வந்ததும் கல்லெடுத்து பாக்கெட்டில் போட்டு வச்சிக்க... வலி நின்றுவிடும் என்று சொல்லி சரளைக் கல்லை இடுப்பில் செருகி வைத்து வலி குறைந்து விட்டதென நம்பிச் சிரித்த நாட்கள் ஞாபகத்தில் வந்து சென்றன.

இடம் வாங்க உதவும் பாய் கதாபாத்திரம் தென் தமிழக மக்கள் சாதிச் சண்டை போட்டுக் கொள்வார்களே தவிர மதம் என்னும் மதத்தை எப்பவுமே தூக்கிச் சுமப்பவர்கள் இல்லை... அவர்களுக்குள்ளான உறவு முறை இதுதான் என்பதைச் சொல்லியிருக்கிறது.

Image result for மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

தென் தமிழக கதைகளம் என்றால் 'எடுடா அருவாளை' என்று சொல்லும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வாழ்க்கையை படம் பிடித்து இருக்கிறார் இயக்குநர்.  

மொத்தத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை உலக சினிமா இல்லை என்றாலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய் உன்னத சினிமா.

-'பரிவை' சே.குமார்.