மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 17 நவம்பர், 2012

விசாலம் அக்கா - அதீதத்தில்...

அதீதம் இணைய இதழில் வெளியான எனது 'விசாலம் அக்கா' என்ற சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதீதத்தில் வெளியாகும் மூன்றாவது சிறுகதை இது. 
கதையை வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கு நன்றி.

-----------------------------------------------------------------------------------------------------------

நல்ல உறக்கத்தில் இருந்த என்னை திடுக்கிட்டு விழிக்க வைத்தது கனவு. நெஞ்சு படக் படக்கென அடித்துக் கொள்ள எழுந்து அமர்ந்தேன். தண்ணீர் அருந்தினால் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கும் என்பதால் அருகில் இருந்த ஜக்கை எடுத்து தண்ணீர் அருந்தினேன். கொஞ்சம் படபடப்பு குறைந்தது. சின்ன வயதில் என்னைப் பாதித்த நபர்களை அவ்வப்போது நினைப்பதுண்டு. எங்க வீட்டில் வேலை பார்த்த கருப்பண்ணன், பால்கார வீராயி, மீன்காரி முனிம்மா, எனக்கு ரொம்ப பிடித்த விசாலம் அக்கா என எல்லோரும் கனவில் வந்து செல்வார்கள். அடுத்த நாள் கனவில் வந்தவரின் நினைவுகள் எனக்குள் எட்டி எட்டிப் பார்க்கும் அதன்பின் நான் அவர்களை மறந்துவிடுவேன் என்பதே உண்மை.  ஆனால் இன்று வந்த கனவு ஏனோ என் மனதை கஷ்டப்படுத்தியது.  கொஞ்ச நேரம் அப்படியே உட்காந்திருந்தேன். படபடப்பு குறைய  என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் படுத்தேன்.
கண்களை மூடியபடி வந்த கனவை மீன்டும் மீட்டிப் பார்த்தேன். கனவில் வந்த விசாலம் அக்கா என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “பாப்பா, நான் ரொம்ப கஷ்டப்படுறேன்”னு அழுகுறா… மறுபடி மறுபடி அதையே மீட்டிப் பார்க்க எனக்கு ஒண்ணுமே புரியலை… விசாலம் அக்காவுக்கு என்னமும் ஆகியிருக்குமோ இப்ப எங்க இருக்கு என்ன பண்ணுது என்று யோசித்து விடை கிடைக்காமல் சரி கனவுதானே என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு உறக்கதை அணைத்துக் கொள்ள கண்களை மூடினேன். உறக்கம் வருவதற்குப் பதில் விசாலம் அக்காவின் நினைவுகள் மெல்ல எட்டிப் பார்த்தன.
எங்க பிரேமா அத்தை கல்யாணத்துக்கு முறுக்குச் சுடத்தான் விசாலம் அக்கா எங்க வீட்டுக்கு முதன்முதலில் வந்தாள். எப்பவும் பொன்னம்பல மாமாதான் விசேசங்களுக்கு முறுக்கு சுடுவார். எங்க ரெண்டு குடும்பத்துக்குள்ளயும் சின்னதா ஒரு வருத்தம் சரியா பேசிக்கிறதில்லை. அதனால பாட்டி முறுக்கு சுட ஆளு வேணுமின்னு எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருந்தாங்க. மீன்கார முனிம்மாக்காதான் கூட்டி வந்துச்சு.
என்ன முனிம்மா முறுக்கு சுட ஆள் கூட்டியார சொன்னா சின்ன புள்ளய கூட்டியாந்து இருக்கே… சும்மா சுட்டுப் பாக்க ஆள் கேக்கலை ஒரு கல்யாணத்துக்கு செய்யணும்… இவ செஞ்சிருவாளான்னு பாட்டி சந்தேகமாக் கேக்க… என்ன ஆத்தா அப்புடிக் கேட்டுப்புட்டே… விசாலத்தோட கைப் பக்குவத்துக்குப் பக்கத்துல யாரும் நிக்கமுடியாது தெரியுமா… இவ சுத்துற முறுக்கை சாப்பிட்டுப் பார்த்தா அப்புறம் இவதான் வேணுமின்னு கேப்பே அப்படின்னு முனிம்மா சொல்ல, என்னமோ போ பேசிப்பேசி மீன் விக்கிற உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா என பாட்டி சலித்துக் கொண்டாள்.
மாவைப் பிசையும் விசாலம் அக்காவைப் பார்த்தேன்… முப்பத்தஞ்சு வயசுக்குள்தான் இருக்கும். கண்டாங்கி சேலையை நாட்டுக்கட்டு கட்டியிருந்தாள். பெரிய கொண்டையும் வட்டப் பொட்டுமாய் அக்மார்க் கிராமத்துப் பொம்பளையாய் தெரிந்தாள். யாருடனும் பேசாமல் மாவைப் பிசைவதில் கவனம் செலுத்தினாள். தலையைத் தூக்கும் போது எங்களைப் பார்த்து உதடு பிரியாமல் சிரித்தாள். அவளின் கழுத்தில் மஞ்சள் இழந்த நூல் கயிறு கிடந்தது.
ஏன்டியம்மா உனக்கு கல்யாணம் ஆயிருச்சில்ல… வீட்டுக்காரன் என்ன பண்றான் என்ற பாட்டியின் கேள்விக்கு ஏறிட்டுப் பார்த்து சிரித்தாள். என்னடி ஆத்தா பேச காசு கேட்பே போல கலகலன்னு பேசிக்கிட்டு வேலை பார்த்த வேலை போறது தெரியாது…. அலுப்பும் இருக்காதுல்ல என்று பாட்டி சொல்ல என்ன பெரியம்மா கேட்டே கண்ணாலம் ஆயிருச்சான்னா அதெல்லாம் ஆயி முடிஞ்சு போச்சும்மா என்றபடி வேலையை தொடர்ந்தாள்.
என்னடி சொல்றே… ஆயி முடிஞ்சு போச்சா… அப்படின்னா நீ இப்போ புருசன் கூட இல்லையா… என்ன? என அம்மா கேட்கவும் எங்களை எல்லாம் ஏறிட்டுப் பார்த்தவள் எங்க வூட்டுல கடனவொடன வாங்கி கஷ்டப்பட்டு என்னய கட்டிக்கொடுத்தாங்க… மொத ராத்திரி அன்னைக்கே அந்த ஆளு புல்லா குடிச்சிட்டு வந்தான்… எங்க சாதி சனத்துல நண்டு சிண்டு எல்லாம் குடிக்குதும்மா அதனால நான் அதை பெருசா எடுத்துக்கல… ரெண்டு மாசம் நல்லாத்தான் போச்சு… அதுக்கப்புறந்தான் தெரியும் அந்தாளுக்கு பக்கத்தூருல கூத்தியா இருக்கது… என்ன செய்ய… நாயா கத்திப் பாத்தேன்… சண்ட போட்டுப் பாத்தேன்… என்னால முடியல… அவன் அதுக்கு அப்புறம் அவளை வீட்டுக்கே கூட்டியாந்து ஒண்ணா இருக்கச் சொன்னான்… அவளும் இளிச்சுக்கிட்டு வந்தா… நான் வெளிய வந்துட்டேன். ஆயி அப்பன்கூட இருந்தாலும் அவுகளுக்கு பாரமா இருக்க கூடாதுன்னு இப்படி வேலக்கிப் போறேன்… எதோ வருமானம் வருது…” அவள் பேச்சை நிறுத்தியதும் சினிமாவுல மாதிரி கண்ணு கலங்கியிருக்கான்னு ஊடுருவிப் பார்த்தேன் ஆனால் அது தீர்க்கமாய் இருந்தது.

தொடர்ந்து படிக்க இங்கே  சொடுக்குங்கள் உறவுகளே...


-'பரிவை' சே.குமார்

திங்கள், 12 நவம்பர், 2012

தீபாவளி நினைவுகள்....




சின்ன வயதில் தீபாவளி வருகிறது என்றாலே இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று நாட்காட்டியில் நாட்களை தினமும் எண்ணி எண்ணிப் பார்த்து இன்னும் ஒரு மாதம்... பத்து நாள்... ஒரு வாரம்... இரண்டு நாள்... நாளை என்று சந்தோஷத்தை சுமந்து கொண்டாடிய அந்த தினங்களை மறக்க முடியுமா?

பத்து நாளைக்கு முன்னரே முறுக்குக்கும் அதிரசத்துக்கும் மாவு தயார் பண்ணி வைத்து மூன்று நான்கு நாட்களுக்கு முன்னர் அதிரசம் முறுக்கு எல்லாம் செய்து வைக்கும் அம்மா முறுக்குச் சுடும் போது அவருக்கு உதவுவது போல் அருகில் இருந்து அரைவேக்காடாய் எடுத்துக் கொடுக்கும் முறுக்கை அனைவரும் சந்தோஷமாய் சாப்பிட்டு மகிழ்ந்த தினத்தை மறக்க முடியுமா?

வீட்டில் தீபாவளிக்கு என புதுத்துணிகள் எடுத்த போதும் வெளியூரில் வேலை பார்க்கும் அண்ணன் அங்கிருந்து தைத்துக் கொண்டு வரும் சட்டை டவுசருக்காக அண்ணனின் வரவை எதிர் நோக்கி காத்திருந்த தருணங்களை மறக்க முடியுமா?

அதிகாலையில் அப்பா தலை முதல் கால் வரை நல்லெண்ணெய்யை சொத சொதவென தேய்த்து விட புலி மார்க் சீயக்காய் தூளை டம்ளரில் கொட்டிக் கொண்டு கண்மாய்க்குப் போய் குளித்து முனியய்யா கோவிலில் சாமி கும்பிட்டு வீடு திரும்பம் அந்த சந்தோஷத்தை மறக்க முடியுமா?

புதுத் துணிகளை உடுத்தியதும் மாரியம்மன் கோவில் வாசலில் கூடி ஒருவருக்கு ஒருவர் புதுத் துணிகளைப் பார்த்து மகிழ்ந்து வெடிகள் போட்டு கொண்டாடிய நாளை மறக்க முடியுமா?

பெரியக்கா திருமணத்துக்குப் பிறகு தீபாவளிக்கு வரும் அத்தான் கொண்டு வரும் வெடிகள் நிறைந்த பெட்டிகளுக்காக அக்கா இன்னும் வரவில்லை என்று வாசலில் காத்திருந்த நாட்களை மறக்க முடியுமா?

அருகில் நிற்பவனுக்குத் தெரியாமல் மாட்டுச் சாணியில் அணுகுண்டை புதைத்துப் பற்ற வைத்து வெடிப்பதில் கிடைத்த சந்தோஷத்தையும் கொட்டாச்சிக்குள் அணுகுண்டை வைத்து வெடிக்கும் போது சிதறிய கொட்டாச்சி உயரப் பறப்பதில் கிடைத்த சந்தோஷத்தையும் பாட்டிலில் வைத்து விட்ட ராக்கெட் சீறிப் போவதில் கிடைத்த சந்தோஷத்தையும் மறக்க முடியுமா?

வெடித்து முடித்து கிடக்கும் குப்பைகளை ஒன்றாக்கி அவற்றை பற்ற வைக்கும் போது வெடிக்காத வெதி குதூகலித்ததை மறக்க முடியுமா?

இப்படி எத்தனையோ மறக்க முடியாத நினைவுகளை சுமக்க வைத்த தீபாவளி தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளும் காசுக்கு வாங்கிய இனிப்புக்குள்ளும் அடங்கிவிட்டது என்றாலுடிகள் அதற்குள் இருந்து வெடிக்கும் போது எல்லாருமாக சேர்ந்து ஓவென கத்ம் கிராமத்தில் கொண்டாடும் தீபாவளியில் கிடைக்கும் சந்தோஷம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

இன்று....

தீபாவளி கொண்டாடினீர்களா... சந்தோஷமாக கொண்டாடுங்கள்... என்று போனில் கேட்டு வாழ்த்து சொல்லிவிட்டு எப்பவும் போல் வேலைக்கு கிளம்பும் வெளி நாட்டு வாழ்க்கையில் பண்டிகை தினங்களின் நினைவுகள் பசுமையாய் மனசுக்குள் சாரலை தூவச் செய்தாலும் வெற்றிடங்களை நிரப்ப முடியாமல் இதயம் இலக்கின்றி துடிக்கிறதை மறுக்க முடியவில்லை. 



புத்தாடையும் பலகாரமும்...
வெடிகளும் மத்தாப்பும்...
விருந்து உபச்சாரமுமாய்...
தித்திக்கும் தீபாவளி 
கொண்டாடும் உறவுகள்
அனைவரின் இல்லத்திலும்
சந்தோஷம் குடிகொண்டு
அன்பும் அமைதியும் 
எப்போதும் வீற்றிருக்க
வாழ்த்துகிறோம்....

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

-'பரிவை' சே.குமார். 

செவ்வாய், 6 நவம்பர், 2012

சுந்தரமாமா


(தினத்தந்தி குடும்பமலர் (04/11.2012) இதழில் வெளியான எனது சுந்தரமாமா சிறுகதையின் முழுவடிவம் இங்கே. குடும்பமலரில் நிறைய பத்திகளாய் நீக்கி ஒரு பக்கத்தில் போட்டிருந்தார்கள். பிரசுரித்த ஆசிரியர் குழுவுக்கு நன்றி.)
குடும்ப மலரில் படிக்க ---



********************

(கதைக்கு குடும்பமலரில் போட்டிருந்த படம்)


அடிக்கடி வரும் சுந்தரமாமா இப்பல்லாம் வருவதேயில்லை. என்னாச்சு இந்த மாமாவுக்குன்னு தெரியலை... சுந்தரமாமாவுக்கு குடும்பமெல்லாம் இல்லை... அப்பாகூட வேலை பார்த்தாங்க அப்ப ஏற்பட்ட பழக்கத்தால அவருக்கு நாங்க உறவானோம். விடுமுறை நாள்ல எங்க வீட்லதான் இருப்பாரு. மாமா பாக்குறதுக்கு அழகா நல்லா சிவப்பா இருப்பாரு.  ராமராஜன் மாதிரி மீசை வச்சிருப்பாரு... நெற்றி நிறைய விபூதி வைத்து அதன் மேல் அழகாக குங்குமம் வைத்துதான் வெளியில வருவாரு... அவரு நெற்றியில் அது இல்லாம பாத்ததில்லை. அம்மாவை தங்கச்சியின்னு தான் சொல்லுவாரு... அப்பாவை இவனே என்றுதான் கூப்பிடுவார். அக்காவை பாப்பான்னும் என்னைய ராஜான்னுதான் கூப்பிடுவாரு... எல்லார் மேலயும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். மாமாவுக்கு கெட்ட பழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் கும்பகோணம் வெத்தலையை சிவக்கச் சிவக்க போட்டுக்கிட்டே இருக்கணும்.

மாமாவுக்கு ரெண்டு மூணு வருடத்துக்கு முன்னால பக்கத்துல வேற ஊருக்கு மாத்திட்டாங்க. அப்பவும் வாராவாரம் வந்து எங்களைப் பாத்துட்டுத்தான் போவாரு. இப்ப சில மாசமா போன் பண்ணுறதும் இல்லை வர்றதும் இல்லை. போன் அடித்தால் உபயோகத்தில் இல்லையின்னு வருது. எங்க போனாரு... என்ன ஆனாருன்னு தெரியலை. அம்மா அப்பாகிட்ட கேட்டப்போ அப்பா எங்களை எல்லாம் ஒரு பார்வை பாத்துட்டு அவன் வரலையின்னா இப்ப என்னா... கூடப்பொறந்த பொறப்பா என்னன்னு கோபமா கேட்டாரு. அப்பத்தான் எனக்கு மாமாவுக்கு என்னாச்சுன்னு அப்பாவுக்கு தெரிஞ்சிருக்குன்னு தோணுச்சு... யார்கிட்ட கேக்கலாம்... அம்மாகிட்ட கேட்க முடியாது அவங்களே இப்பத்தான் டோஸ் வாங்கியிருக்காங்க... அக்காகிட்ட கேட்டாலும் அவளுக்கு தெரியப் போவதில்லை. அது ஒரு புத்தகப் புழு. ஆனா எனக்கு மாமா வேணும்ன்னு தோணிச்சு.... அதனால அப்பாகிட்டதான் கேக்கணுமின்னு முடிவு பண்ணினேன்.

அன்று மாலை நான் காலேஜ்ல இருந்து வரும்போது அப்பா வீட்டுக்குப் பின்னால தோட்டத்துல செடிகளுக்கு தண்ணி பாச்சிக்கிட்டு இருந்தாரு. அக்கா இன்னும் வரலை... அம்மா அடுப்படிகுள்ள இருக்கிறதை அங்கிருந்து வரும் பாத்திரத்தோட சத்தமே சொன்னது. இதுதான் மாமாவைப் பத்தி அப்பாகிட்ட கேக்க சரியான சமயமுன்னு தோண நானும் தோட்டத்துப் பக்கம் போனேன்.

"என்னப்பா தண்ணி பாச்சுறீங்களா?"

"வா சரவணா... இப்பத்தான் வாறீயா? அக்கா வரலையா?"

"ம்... அக்காவுக்கு காலேஜ்ல ஏதோ பங்ஷன் இருக்குன்னு சொன்னுச்சு... வர லேட்டாகுமுன்னு அம்மாகிட்ட சொல்லிட்டுப் போச்சு..."

"சரி... ஏதாவது சாப்பிட்டியா?"

"இல்லப்பா..."

"ஏய் வளரு... தம்பி வந்துட்டான் பாரு... அவனுக்கு சாப்பிட எதாவது கொடு... காபியிருந்தா கொண்டாந்து கொடு..." என்று வீட்டுக்குள் இருக்கும் அம்மாவுக்கு குரல் கொடுத்தார்.

"அப்பா..." நான் மெதுவாக இழுத்தேன்.

"என்னப்பா..."

"நம்ம சுந்தரமாமா...இப்பல்லாம் வர்றதேயில்லை"

அப்பா பதில் சொல்லாமல் என்னை கேள்விக்குறியோட பார்த்தார்.

"என்னப்பா... அவரு எங்க இருக்காரு... ஏன் இங்கு வர்றதேயில்லை.... அவருக்கு என்னாச்சுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு... சொல்லுங்கப்பா... எங்ககிட்ட பாசத்தை காட்டிட்டு இப்ப அவரு வறாம இருக்கது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா... அவருக்கும் நம்மள விட்ட உறவு இல்லதானேப்பா..."

"உனக்கு எதுக்கு இப்ப அவரைப் பற்றி கவலை... படிக்கிறதுல இன்னும் நல்லா படிக்கணுமின்னு கவலைப்படு சந்தோஷம்... அதை விட்டுட்டு எதுக்கு உனக்கு தேவையில்லாத கவலை" தண்ணியை செடிக்கு விட்டபடி கேட்டார்.

"அவருக்குன்னு கடைசி வரைக்கும் நாமதான் உறவுன்னு நீங்கதானே சொன்னீங்க... அப்புறம் இப்ப ஏம்ப்பா அத்துப் பேசுறீங்க?"

"அத்துப் பேசலைப்பா... இங்க இருக்கும் வரை நாம உறவா இருந்தோம்.  இப்ப அவரு வேற ஊருக்குப் போயி ரெண்டு மூணு வருசமாச்சு... அங்க நம்மள மாதிரி அவருக்குப் புதிய உறவு கிடைச்சிருக்கலாம்...  அதான் நம்மள மறந்துட்டு அவங்ககூட உறவாகியிருப்பாரு... இது இயற்கைதானே..."

"இல்லப்பா... நீங்க பொய் சொல்லுறீங்க...மாமா அப்படிப்பட்ட ஆள் இல்லை... உங்களுக்கும் அவருக்கும் எதாவது பிரச்சினையா இருக்குமோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு" எனக்கு பொறுமையில்லாமல் கோபமாக கேட்டேன்.

அப்பா சிரித்தார். கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. "என்ன பிரச்சினை...ம்... எங்க ரெண்டு பேருக்கும் சொத்துத் தகறாரா என்ன...  அட போப்பா நான் சொன்னதுதான் உண்மை...நீ பத்தாவது வரை டான் போஸ்கோவுல படிச்சே... பதினொண்ணு பன்னெண்டு செவன் டேய்ஸ்ல படிச்சே.. இப்ப இஞ்சினியரிங் அண்ணாமலையில படிக்கிறே... இப்ப சொல்லு டான் போஸ்கோவுலயும் செவன் டேய்ஸ்லயும் உன் கூட படிச்சதுல எத்தனை பேரு இன்னும் பிரண்டா இருக்காங்க... அது மாதிரித்தான் இந்த உறவும்... புரியுதா?"

அப்பா சொல்வது உண்மைதான்..பத்தாவது வரை படிச்சவங்கள்ல யாருடனும் இப்ப தொடர்பு இல்லை... பன்னெண்டாவதுல என்னோட படிச்சதுல சாமினாதனும் பிரேமும் மட்டும்தான் என்னோட இப்ப படிக்கிறங்க... மத்தவங்கள்ல சிலர் மட்டும் இப்ப தொடர்பில் இருக்கிறார்கள்... இதுக்கும் மாமாவோட உறவுக்கும் வித்தியாசமில்லையா? இதோட அதை ஒப்பிட முடியுமா?

"அப்பா இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்... அது சின்னப்பிள்ளங்க உறவு... மாமா நம்மகிட்ட அப்படி பழகலை... நம்மளை உறவாத்தான் நினைச்சாரு... உதறிட்டுப் போறவரு இல்ல அவரு..."

"என்ன அப்பாவும் பிள்ளையும் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கீங்க..." மணக்கும் காபியுடன் வந்த அம்மா கேட்க,  "ஒண்ணுமில்ல... காஞ்சுபோன ரோஜாவைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தான்... வேற செடி வாங்கி வைக்கணுமின்னான்... அதான்.."

"ஆமாங்க நான் கூட சொல்லணுமின்னு நினைச்சேன்... நல்ல பட்டு ரோஜா செடியா ரெண்டு வாங்காந்து வைக்கணும்... நாளைக்கு வரும்போது வாங்கிட்டு வாங்க... சரி தண்ணி பாச்சினது போதும் ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள வாங்க"

"ம்... வாறோம் போ..."

"என்ன சரவணா... அப்படி பாக்குறே...?"

"நீங்க எதையோ மறைக்கிறீங்கப்பா...அம்மாகிட்ட நீங்க பொய் சொன்னதுல இருந்தே தெரியுது... உங்களுக்கு மாமாவைப் பற்றி தெரியும்..."

"வா... உள்ள போகலாம்..." என் பதிலை எதிர்பார்க்காமல் கைகால்களை கழுவிவிட்டு வீட்டுக்குள்ள போனார். நானும் பின்னால் போனேன்.

அதன்பிறகு இது பற்றி அப்பா எதுவும் பேசவில்லை... தனது கவனத்தை தொலைக்காட்சிப் பக்கமாக திருப்பிக் கொண்டார். சே... எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்க இந்த அப்பாவை என்ன பண்ணலாம். எப்பவும் இந்த அப்பா இப்படி இருந்ததில்லை பிரண்ட்லியாத்தான் பழகுவாரு...ஆனா மாமா விசயத்துல மட்டும் அவரு நடந்துக்கிறது எனக்குப் புரியலை. பேசாமல் எனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டேன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் கூடுதலாக தூங்கி எழுந்தேன். அப்பா குளித்து சாமிகும்பிட்டு பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் "சரவணா...குளிச்சிட்டு சாப்பிட்டுக் கிளம்பு.. நாம வெளியில பொயிட்டு வரலாம்." என்றார்.

எங்கே என்று கேட்க நினைத்து கேட்காமல் கிளம்பினேன். கொஞ்ச தூரம் போனதும் "என்னப்பா... அப்பா மேல கோபமா?" என்று பேச்சை ஆரம்பித்தார்.

நீங்க மாறிட்டீங்கப்பான்னு சொல்ல நினைத்து "இல்லப்பா" என்றேன்.

"என்ன செய்யிறது... சில விசயங்களை குடும்ப நலன் கருதி மறைக்க வேண்டியதாப் போகுது... சில விசயங்கள் மறைச்சு வைக்கிறதால மனசை அரிக்கிறது தெரிஞ்சும் மத்தவங்களோட சந்தோஷத்துக்காக அதை தாங்கிக்க வேண்டிய கட்டாயம்... அதனால தெரிஞ்சவங்க அதை மனசுக்குள்ளே அடைச்சிடுறாங்க... "

அப்பா சொல்வது எனக்கு ஒண்ணும் புரியலை... அவரைப் புரியாமல் பார்த்தேன். அவரே தொடர்ந்தார். "உங்க சுந்தரமாமா எனக்கு நண்பனா வந்தான். சாதாரணமாக நம்ம வீட்டுக்குள்ள வந்தவன் நம்மள்ல ஒருவனா ஆயிப்போனான். அண்ணன் தம்பி உறவுகள் இல்லாம இருந்தவன் உங்கம்மாவுக்கு அண்ணனாவும் உங்களுக்கு மாமாவாகவும் மாறிப்போனான். என்ன செய்ய எல்லா உறவும் நிலைப்பதில்லையே... அவனும் அது மாதிரித்தான்..." அப்பா நிறுத்த எனக்கு என்ன சொல்வதுன்னே தெரியலை.

"இப்போ மாமா எங்கப்பா..?"

"அவனுக்கு என்னாச்சு... ஏன் வரலையின்னு உங்ககிட்ட சொல்லி இருந்தா உங்க சந்தோஷம் எல்லாம்  போய் இருக்கும்... ஏன் எதையும் தாங்குற நிலையில இல்லாத உங்கம்மா இதயம் நின்னே போயிருக்கும்... அவ எனக்கு வேணும்... உங்க சந்தோஷம் எப்பவும் போல தொடரணும்...  இது என்னோட ஆசை மட்டுமில்ல சரவணா உங்க மாமா எனக்கிட்ட கேட்டதும் இதுதான்... அவன் பெரிய மனுசன்டா அவனுக்குள்ள இருந்த அவ்வளவு பெரிய விசயத்தை மறைச்சிக்கிட்டு சந்தோஷமா இருந்திருக்கிறான்... "

நான் அப்பாவை பார்க்க, "சில மாசத்துக்கு முன்னால  டிரீட்மெண்டிக்காக இங்க வந்தவன் என்னைப் பார்த்து ஆஸ்பிடல்ல அட்மிட் ஆனவன் உங்களை பாக்க மறுத்துட்டான்... அதுக்கப்புறம் அவன் என்ன ஆனான்னு..." அப்பா பேசாமல் நிறுத்தினார்.

அவர் நிறுத்தினார் என்பதைவிட பெச முடியாமல் தவிக்கிறார் என்பது அவர் பின்னால் இருந்த எனக்கு நல்லா தெரிந்தது. "அப்பா இப்ப மாமா எங்கே"" என்று நான் கேட்பதற்கும் அப்பா சுடுகாட்டு வாசலில் வண்டியை நிறுத்துவதற்கும் சரியாக இருந்தது.

-'பரிவை' சே.குமார்.