மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 16 நவம்பர், 2011

மனசின் பக்கம்: த்ரீ இன் ஒன் (3 in 1)



மூணாவது வருசத்துல அடியெடுத்து வச்சாச்சு... மனசு வலையில் மட்டும் 200 நண்பர்களின் நட்பையும் வாசிப்பையும் பெற்றது மகிழ்வைத் தருகிறது. எனது தொடரும் எழுத்துக்கும் தொடரும் நட்புக்கும் காரணகர்த்தா நீங்களே... எல்லாருக்கும் நன்றி... நன்றி.. நன்றி.

***********************************

1. சவால் மற்றும் வம்சி

திரு. ஆதி, திரு. பரிசல்காரன் மற்றும் யுடான்ஸ் திரட்டி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. முடிவுகளுக்கு முன்னால் அனைத்துக் கதைகளுக்குமான விமர்சனம் இரண்டு பதிவுகளாக பகிரப்பட்டது. சென்ற முறை விமர்ச்சித்த விதம் வித்தியாசமானதாக இருந்ததால் சுனாமியாய் தாக்குதல்கள் இருந்தன. ஆனால் இந்த முறை கதை மட்டுமே விமர்சிக்கப்பட்டது. அதுவும் முடிந்தவரை நாசூக்காக. மிகவும் அருமையான விமர்சனங்கள்.

இந்த சவாலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்

முதல் இடம் : திரு. ஆர்விஎஸ் / திரு. பினாத்தல் சுரேஷ்

இரண்டாம் இடம் : திரு. ஜேகே / திரு. நந்தா குமாரன்

மூன்றாம் இடம் : திரு. இளா / திரு. சி.பி.செந்தில்

வெற்றி பெற்ற அறுவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சவால் ஒன்றுக்கு கதை எழுதுவது என்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. இருப்பினும் இந்த சவாலை சவாலாக எடுத்துக் கொண்டு கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

சவால் சிறுகதை குறித்த பரிசல்காரனின் பதிவில் நண்பர் நடராஜ்,

ஒரு செம டவுட். இந்த ஃபோட்டோவில் உள்ளது போல் ஒருவர் ரெண்டு துண்டு சீட்டையும், ஒரு இன்கமிங் காலையும் பார்ப்பது போல் காட்சி வரவேண்டுமா, இல்லை, அந்த 2 துண்டு சீட்டில் இருப்பது மட்டும் கதையில் வந்தால் போதுமா?

ஆமா, இந்த டவுட் ஏன் யாருக்கும் வரல? ‘  என்று கேட்டிருந்தார்.

உண்மைதான்... நான் உள்பட பெரும்பாலானோர் துண்டுச் சீட்டு வாசகங்களை மட்டுமே பிரதானமாக்கி எழுதியிருந்தோம். மொபைலில் விஷ்ணு இன்பார்மர் என்ற பெயர் வருவதை கவனிக்கத் தவறிவிட்டோம். இருப்பினும் போட்டியை சிறப்பாக நடத்திய நண்பர்களுக்கும் அவர்களுக்கு உதவிய நடுவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

சவால் சிறுகதைப் போட்டி முடிவுக்குப் பின் அனைவரின் எதிர்பார்ப்பும் வம்சியின் சிறுகதைப் போட்டிக்கான முடிவின் மீதுதான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இதில் சவால் எதுவும் இல்லை... போட்டிக்கதைக்கு களமும் சொல்லப்படவில்லை. பதிவராக இருக்க வேண்டும் மற்றும் 2011ல் பதிவிடப்பட்டிருந்தால் போதும் என்பதை மட்டுமே சொல்லியிருந்தார்கள். அதனால் நாம் ரசித்து எழுதியதை அனுப்பியிருக்கிறோம். வெல்லப்போகும் நண்பர்களின் எழுத்துக்களை வம்சியின் வெளியீட்டில் பார்க்கலாம்... இன்னும் பதினைந்து நாளில் வெற்றிக்கனியை தட்டப்போகும் பதிவர்கள் யார்... யார்... என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

*********

2. கோவை கவியரங்கத்துக்கு கவிதை அனுப்பியாச்சா கவிஞர்களே...

கோவையில் நடக்கும் கின்னஸ் சாதனை கவியரங்கத்திற்கு கவிதை அனுப்ப விரும்பும் நண்பர்கள் கூடிய மட்டும் விரைவாக மூன்று கவிதைகள், உங்கள் போட்டோ மற்றும் முகவரியுடன் நேரடியாகவோ அல்லது நண்பர் தமிழ்காதலன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வையுங்கள். வாசிக்கப்படும் உங்கள் கவிதைக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படும். இது குறித்த விவரம் அறிய கீழே உள்ள சுட்டியை தட்டி பார்த்துக் கொள்ளுங்கள்...


உங்கள் மனசினை தட்டி கவிதைகளை பறக்கவிடுங்கள்.

*********

3. ஊருக்குப் போறேன்... ஊருக்குப் போறேன்...

ஆமாங்க... முக்கியமான விசயமே இதுதானே... இல்லயா பின்ன... என்னன்னா... எங்க கம்பெனி புராஜெக்ட்ஸ் முடிஞ்சிருச்சு... இப்போ வேலையில்ல... கறக்குற வரைக்கும்தான் வச்சிக்குவாங்க... சும்மா வச்சு வைக்கலப் போடுவாங்களா என்ன... அதனால ஊருக்குப் போறேன்னு கேக்குறப்பல்லாம் முடியாதுன்னு சொன்னவங்க... சொல்லுறவங்க... இப்ப நீ போ, நீ போன்னு எல்லாரையும் விரட்டிட்டாங்க... என்னையும்தான்...

நாளைக்கு இரவு விமானத்தில் திருச்சி நோக்கி பயணம்... நாளை மறுநாள் மனைவி, மக்களுடன் காரைக்குடியில்... டிசம்பர் 22 வரைக்கும் அங்கதான்... இந்த முறை முடிந்தளவு பதிவுலக நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

டிசம்பர் 25 புது புராஜெக்ட் ஆரம்பிக்கலாம் என்று 80% நம்பிக்கையுடந்தான் 22ந்தேதி வரச்சொல்லி அனுப்புகிறார்கள். பார்க்கலாம். புது புராஜெக்ட் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். அப்ப ஊருக்கு அனுப்பமாட்டார்களாம்... இப்பவே சொல்லியாச்சு...

அப்புறம் புராஜெக்ட் அபுதாபி(ABU DHABI)யில்  இல்லை அலைன் (AL AIN)... அதனால வந்ததும் ஜாகையை அலைனுக்கும் மாத்தணும். தங்க அறை பார்க்க வேண்டும்... என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆசியா அக்கா அலைனில்தான் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க ஆசை. கண்டிப்பாக நடக்கும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

அப்புறம் ஊருக்குப் போனா எழுதுறது சிரமம்... ஏன்னா டிசம்பர் 5 மனைவியின் தங்கை திருமணம். அதனால் வேலைகள் சரியாக இருக்கும். என்ன இப்ப நிறைய எழுதுறியாக்கும் இதுல பில்டப் வேறன்னு நினைப்பீங்க... எழுதுறேனோ இல்லையோ முடிந்தளவு வாசிக்கிறேன்.

அப்புறம் எனது கதைகளை புத்தகமாக்க வேண்டும் என்று எனது கல்வித் தந்தை பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு ஆசை. என்னை எழுத்தாளனாக்கிப் பார்த்தவரல்லவா... கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்துப் பிழைகள், தலைப்புகள் என திருத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேறுகிறதா என்று தெரியவில்லை... தற்போது இருக்கும் குடும்ப சூழலில் எனக்குள் அப்படி ஒரு எண்ணம் இல்லை. தேவகோட்டை போய் அவரைப் பார்த்தால்தான் தெரியும்... பார்க்கலாம்.

இப்ப எதுக்கு இதெல்லாம்... ஊருக்கு போற சந்தோஷம் மட்டுமே இருக்கட்டுமுன்னு நீங்க சொல்றது கேக்குது... ஓகே... சந்திப்போம்.

-பரிவை’ சே.குமார்

வியாழன், 10 நவம்பர், 2011

நீ வருவாயென...



(நன்றி : இளையராஜா)

எப்போதோ நீ சொன்னது
இப்போதும் மனசுக்குள்...

எப்போதோ நீ கொடுத்தது
இப்போதும் பாதுகாப்பில்...

எப்போதோ நீ கேட்டது
இப்போதும் ஞாபகத்தில்...

எப்போதோ நீ பார்த்தது
இப்போதும் குறுகுறுப்பாய்...

எப்போதோ நீ சிரித்தது
இப்போதும் காதுக்குள்...

எப்போதோ...
எப்போதோ...
எல்லாமே எப்போதோ...

விட்டுச் சென்றாய்...
விலகிச் சென்றாய்...
விலகாத உன் ஞாபகங்களை
எனக்குள் விதைத்துச் சென்றாய்...

பசுமையாய் எனக்குள்
பாதுகாப்பாய் எல்லாமே...

அப்போது வருவாய்...
இப்போது வருவாய்...
என எப்போதும்
நம்பிக்கையாய்...

-‘பரிவை’ சே.குமார்

திங்கள், 7 நவம்பர், 2011

கிராமத்து நினைவுகள் : பொன்வண்டும் சில்வண்டும்

கிராமத்து நினைவுகள்தான் எத்தனை சுகமானவை... நிறைய நினைவுகளை எழுத்தாக்கினாலும் இன்னும் எழுதச் சொல்லும் சுவை அந்த வாழ்க்கையில் இருந்ததை... இருப்பதை மறக்க முடியாது.

சின்ன வயதில் ரசித்துச் செய்த சேட்டைகளாக இல்லாவிட்டாலும் கண்மாய்க்குள் போட்ட ஆட்டம், கூட்டாஞ்சோறு, கபடி, திருவிழாக்கள் என சந்தோஷித்த நாட்கள் அயிரை மீன் குழம்பு போல மனசுக்குள் ஆக்கிரமித்துத்தான் இருக்கிறது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் பொன்வண்டும் சில்வண்டும் எங்களிடம் பட்டபாடு இருக்கிறதே... அப்ப்பப்பா... வெயில் காலத்தில் பொன்வண்டும் மழைக்காலத்தில் சில்வண்டும் எங்கள் ஊரில் ஏராளமாக இருக்கும்.



பொன்வண்டு தகதகக்கும் நிறத்தில் மின்னும் தலையுடன் நீண்ட மீசையுமாக இருக்கும். இறக்கைக்கும் தலைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கத்திபோல இருக்கும். அதில் இலைகளை வைத்தால் வெட்டிவிடும். சில நேரங்களில் தவறுதலாக விரலை வைத்தால் ரத்தம் வரும் அளவுக்கு படக்கென்று பிடித்துவிடும்.

பள்ளி விடுமுறை நாட்களில் கொள்ளையில் இருக்கும் வாகை மரங்களில்தான் தவம் இருப்போம். வாகை மரத்தின் இலைகளில் தொங்கிக் கொண்டிருக்கும். மரத்தில் ஏறியும் கல்லை விட்டு எறிந்தும் பிடிப்போம். சில நேரங்களில் பிடிப்பதற்காக கஷ்டப்பட்டு மரத்தில் ஏறி அருகில் செல்லும் போது பறந்து அடுத்த மரத்துக்குப் போய்விடும். அது பறக்கும் போது ஒருவித சப்தம் வரும். அதை வைத்தே அது எங்கு செல்கிறது என்பது தெரிந்துவிடும். ஓடி... விழுந்து... காலில் முள் குத்தி என்ன கஷ்டப்பட்டாலும் எப்படியும் பிடித்து வந்துவிடுவோம்.

சாமுண்டரி பாக்ஸில் தவிடு போட்டு அதன் மேல் வாகை இலையை போட்டு அதற்குள் அடைத்து வைப்போம். சில நேரங்களில் டப்பாவை திறந்ததும் பறந்து ஓடிவிடும். இருத்தும் பத்திரமாக வைத்து பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் கொண்டு போவோம்.

பொன்வண்டு சிறியதாக சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என கலர்க்கலராய் முட்டையிடும். அந்த முட்டையில் விளக்கெண்ணையை தடவி வெயிலில் வைத்தால் குஞ்சு பொறிக்கும் என்ற வழிவழியாய் வந்த வாய்ச்சொல்லை நம்பி எண்ணையை தடவி வெயிலில் காத்திருந்த நாட்கள் எல்லாம் உண்டு. கடைசிவரை அப்படி ஒன்று நிகழ்வதேயில்லை.

பொன்வண்டின் கழுத்தில் நூலை கட்டி (பல நேரங்களில் அறுத்துவிடும்) வேகமாக சுத்தினால் அழகிய சப்தத்துடன் பறக்கும். பொன்வண்டு எல்லாருடைய புத்தகப் பைக்குள்ளும் வாகை இலையை சாப்பிட்டபடி வலம் வந்த நாட்கள்தான் எத்தனை இனிமையானவை.

பொன்வண்டு பற்றி தமிழ் விக்கிபீடியாவில்...

பொன்வண்டு (Sternocera) பூச்சி தொகுதியில் (Class Insecta), புப்ரெஸ்டிடெ (Buprestidae) என்ற உயிரியல் குடும்பத்தில், ஸ்டேர்னோசெரா (Sternocera) என்ற பேரினத்தை சேர்ந்த வண்டு வகைகளாகும்.

இவற்றின் உடலின் மேற்புற ஓட்டுப்பகுதி உலோகத்தைப் போல் மின்னும் தன்மை கொண்டதால் தமிழில் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. ஸ்டேர்னோசெரா பேரினத்தில் உலகெங்கும் சுமார் 56 வண்டினங்கள் (Beetle Species) உள்ளன.

இவ்வகை வண்டுகள் பொதுவாக தாவரவுண்ணிகளாகும்.



அடுத்ததாத பொன்வண்டுக்கு நேர்மாறான வண்டுதான் சில்வண்டு... அழகான உருவமில்லாமல் கருப்பாக வித்தியாசமாக இருக்கும். இது மழைக்காலங்களில் கருவமரத்தில் இருக்கும்... கத்திக் கொண்டேயிருக்கும். இதன் ரீங்காரம் இனிமையானது அல்ல... வீட்டில் யாராவது கத்தி அழுதாலோ அல்லது சப்தமாக கத்தினாலோ எதுக்கு சில்வண்டு மாதிரி கத்துறே என்பார்கள்.

இவற்றின் உடம்பில் இருந்து தண்ணி மேலில் பட்டால் பத்து வரும் என்பார்கள். இருந்தும் அதை பிடித்து கத்தவிட்டுப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம்... பிடித்துப் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு நல்லபிள்ளை போல் நாலு பேர் இருக்கும் போது அருகில் சென்று பாக்கெட்டை லேசாக அமுக்கினால் போதும் கத்த ஆரம்பித்துவிடும்.

பொன்வண்டைப் போன்று ராஜ மரியாதையெல்லாம் இதற்கு இல்லை. மரத்தடியில் விளையாடும் போதும்... கோவிலில் விளையாடும் போதும்... எங்களுடன் இருக்கும் சில்வண்டு வீட்டிற்கு வரும்போது மீண்டும் கருவமரத்தின் அருகில் விடப்படும்.

சில்வண்டு குறித்த குறிப்பு கிடைக்கவில்லை. சில்வண்டின் ஒரு இனமான மகரந்தம் காவும் சில்வண்டு குறித்த தகவல் மட்டுமே விக்கிபீடியாவில் கிடைத்தது.

சில்வண்டின் ஒரு இனமான மகரந்தம் காவும் சில்வண்டு குறித்து

ஓர்க்கிட் சில்வண்டு அல்லது மகரந்தம் காவும் சில்வண்டு (ஆங்கிலம்: Pollinating Cricket ;இலத்தின்: Glomeremus orchidophilus ) இதுவரை அறிந்த சில்வண்டு இனங்களுள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் ஒரேயொரு இனமாகும்.

வழமையாக சில்வண்டு இனங்கள் தாவரங்களைச் சேதப்படுத்துகின்றன, ஆனால் ஓர்க்கிட் சில்வண்டு ஓர்க்கிட் வகையொன்றில் மகரந்தச் சேர்க்கை நடாத்துகின்றது. அறியப்பட்ட தாவரங்களுள் முற்றாக இல்லாது போய்விடக்கூடிய தீவாய்ப்புக் கொண்ட ஆங்க்ரேக்கம் கடேட்டி (Angraecum cadetii) எனும் இன ஓர்க்கிட் தாவரத்தில் மட்டும் இந்தச் சில்வண்டு மகரந்தக்காவியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்பினால் 2011ம் ஆண்டுக்குரிய சிறந்த பத்து உயிரினங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2008இல் இவ்வுயிரினம் ரீயூனியன் தீவுப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

பொன்வண்டு மற்றும் சில்வண்டு குறித்த தகவல்களை வழங்கிய தமிழ் விக்கிபீடியாவுக்கும் படங்களை வழங்கிய கூகிளுக்கும் நன்றி.

சரிங்க... அடுத்த கிராமத்து நினைவுகளில் மீண்டும் ஒரு நினைவலையோடு சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்

படங்கள் உதவி : கூகிள்