மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 ஏப்ரல், 2019

மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்

விடுமுறை தினத்தில் பொழுது போகலைன்னா என்ன பண்ணுவோம்... எதாவது படம் பார்ப்போம்... அப்படித்தான் அந்த 'ஒரு அடார் லவ்' மலையாளப் படத்தையும் பார்க்க நேரிட்டது.

பள்ளிக் கூடப் பிள்ளைகளுக்கு காதல் செய்யக் கற்றுக் கொடுக்கும் படம்... இப்படிப் படங்கள்தான் படிக்கும் பிள்ளைகளை அறியாத வயதில் காதல் என்னும் கத்திரிக்காய்க்குள் விழ வைக்கின்றன... அருமையான படங்களைக் கொடுக்கும் மலையாளத்தில் அரிதாய் வந்திருக்கும் நச்சுச் செடி இந்தப் படம்... நல்லவேளை தனிமையில் சந்திக்கும் போது பாடலுடன் முடித்துக் கொண்டார்கள். பள்ளிக்கூட வகுப்பறை, படிக்கட்டுக்கள் என எல்லா இடத்திலும் முத்தமழை பொழிந்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை... எத்தனை அபத்தமாய் படமெடுக்கிறார்கள் இந்தக் கலாச்சார காவலர்கள்.

படம் வெளிவரும் முன்னரே பிரியா வாரியரின் கண் அசைவு மிகப் பிரசித்தி பெற்றிருந்தது... ஆனால் படமும் பிரியாவும்...? ஆமா அதென்ன சிகை அலங்காரம்...? வாந்தி எடுத்தது போல... இவர்தான் நாயகி என தயாரிப்பாளரோ / இயக்குநரோ போராடி வாய்ப்பைக் கொடுத்தார்களாம்... அப்படி என்ன அழகைப் பார்த்து விட்டார்கள்... பாவம் இனி பிரியாவுக்கு வாய்ப்பு வருமோ...?

நாயகியாய் நடிக்க வேண்டிய நூரின் ஷெரிப் நாயகனின் தோழியாய்... கிடைத்த கேப்பில் எல்லாம் அடித்து ஆடியிருக்கிறார்... செம.. அடுத்த படத்தில் நாயகியாய் நடிப்பதாய் செய்திகள்... பின்னே... அந்தச் சிரிப்பும் சீரான நடிப்பும் எல்லாரையும் கண்டிப்பாக ஈர்க்கும்தானே..!  இனி தமிழிலும் உடனே புக் பண்ணுவார்கள் பாருங்கள்... அடித்துக் கொண்டாலும் ஆச்சர்யமில்லை... ரஜினி மட்டும் அடுத்த பட நாயகியாக நூரின் வேண்டுமென கேட்காமல் இருக்க இறைவன் கருணை வேண்டும்.

படம் முடியும் போது பிரியாவைப் பின்னுக்குத் தள்ளி மனம் முழுவதும் நூரின் மட்டுமே நிற்கிறார்.

அட ஏன் அப்படி ஒரு முடிவு படத்தில்...?

Image result for நூரின் ஷெரிப்

சம்பந்தமே இல்லாத இறுதிக்காட்சி கடுப்பைத்தான் கொடுத்தது... அதிலும் பத்து நிமிடத்துக்கு மேல பின்னணிப் பாடலுடன்... நம்பியார் காலத்துப் படம் போல நாயகனும் நாயகியும் செல்லும் இடம் தெரிந்து வில்லன்கள் வருவது... முடியல...

துள்ளுவதோ இளமை தனுஷ் மாதிரி... ரோஷனுக்கு டபுள் தமாக்காதான்... பிரியாவோட உதடுகளில் விளையாடுகிறான்... நூரினும் கொஞ்சலோ கொஞ்சல்.

இப்படியான படங்கள்... அதாவது ஒரு அடார் லவ், 90ML போன்றவை சமூகத்தை சீர் திருத்த வந்த, கலாச்சாரத்தை காப்பாற்ற வந்த படங்கள்... இன்றைய இளம் இயக்குநர்களுக்கு ஏன் சாதியும், சிறுவயதுக் காதலும், காமமும் மட்டுமே கண்ணுக் தெரிகிறது என்பதுதான் தெரியவில்லை.

இது ஒரு அட்டு லவ் படம்... தயவு செய்து பதின்ம வயதுப் பிள்ளைகளைப் பார்க்க விடாதீர்கள்.

*********

ழுத்து அடைந்திருக்கும் இடம் மகிழ்வைக் கொடுத்தாலும் பயத்தையும் கொடுக்கிறது. அவனவன் புத்தகங்களாய் போட்டுக் கொண்டிருக்க, பொருளாதார சூழலின் நிமித்தம் பிரசுரங்களின் பக்கம் செல்லாத போதும் சேமித்த எழுத்தை வாசித்த நண்பர்கள் அது குறித்து எழுதும் போதும் பேசும் போதும் உண்மையிலேயே சங்கோஜமும் சங்கடமுமே எனக்குள்.

என்னடா இப்படி பேசுகிறார்கள்...? இவனே எழுதுங்க... பேசுங்கன்னு சொல்றானோன்னு யாரும் நினைப்பார்களோங்கிற எண்ணமும் வராமல் இல்லை... பேசப் பயம் எனக்கு என்பவன்தான் நான் என்ற போதிலும் எழுத எப்பவும் யோசிப்பதில்லை... ஆன இப்ப மற்றவர்கள் எழுதவதைப் பார்த்து இன்னும் நல்லா எழுதணுமோங்கிற எண்ணம் எழத்தான் செய்கிறது. எனக்கே தெரியாமல் என்னையும் உள்ளிழுத்து இது மாதிரிப் பகிரும் உறவுகள்தான் என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். என் எழுத்து எப்படியோ சிலரையேனும் கவர்கிறதே என்பதே சந்தோஷம்தான். மகிழ்ச்சி இராஜாராம் (இது ஒரு வாரம் முன்பு முகநூல் அவர் பகிர்ந்தது அப்படியே கீழே).

ஆமா அவரு அப்படி எந்தக் கதையை மகளிடம் சொல்லியிருப்பார்...? யோசிங்க... இறுதியில் சொல்றேன்....

அண்ணே மாலை வணக்கம்!

முதல் தொகுப்பு முடிந்து அடுத்த தொகுப்பை ஆரம்பித்து விட்டேன், பத்து முடிந்தது.

படித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு கதையை வாசித்துக் கொண்டிருக்கும்போதே அக்கதையை முடித்தவுடன் என் மகளுக்கு சொல்ல வேண்டுமென நினைத்தேன். 

பள்ளி விடுமுறையென்பதால் நல்ல நித்திரை போல மாலை ஐந்து மணிக்கு மேல்தான் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது, அலைபேசில்தான் சொன்னேன். சொல்வதற்கு முன் உங்களுக்கு எங்கெங்கு சந்தேகம் இருக்கிறதோ அதை கேட்கலாம், கேட்டு முடிந்தவுடன் கதையைப் பற்றி உங்கள் கருத்தையும் சொல்லலாம் என்றேன். 

கதை சொல்ல தொடங்கி... சொல்லிக் கொண்டிருக்கும்போதே கதை கேட்கும் சத்தம் கூட எனக்கு கேட்கவில்லை....

என்னம்மா...கேட்குதா..?

சொல்லுங்க கேட்குது என்றார்.

கதை சொல்லி முடிந்தவுடன், 

சூப்பர் கதைப்பா...

நல்லா இருக்கு... 

எங்க படிச்சீங்க..?

நல்லா இருக்கே...

யாரும்...சொன்னாங்களா..?

நீங்களாவே சொல்றீங்களா? 

அடுக்கிய கேள்விக்கு பதில் சொல்லுமுன்னே...அக்கதைக்கு ஒரு நீதியையும் சொல்லிவிட்டு..என் நண்பர்களுக்கும் சொல்வேன் என்றார். பிறகு நான் அக்கதையை எங்கு படித்தேன், யார் எழுதியது என்பதை பற்றிய விவரணைகளை தகப்பனும், மகளும் ஒரு பத்து நிமிட உரையாடல் நீண்டது.

இதுவும் எழுத்தின் வெற்றிதான்....

ஆனால் இக்கதையின் மூலம் ஆசிரியர் அண்ணன் நித்யா குமார் அவர்கள் யாருக்கு.. என்ன சொல்ல முற்பட்டாரோ? ஆனால் ஒரு ஒன்பது வயது சிறுமி ஒரு கதையைக் கேட்டவுடன் இது எனக்கான கதையென்றும் அதற்கான நீதியையும் சொல்வதும் வெற்றிதானே 

வாசிக்கும்போதே நம்மை கூட்டிச்செல்லும் எழுத்துநடை அருமை.....

இக்கதையையும் ஒலிவடிவில் கேட்க அருமையாக இருக்கும்... பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

இதுபோன்ற கதைகளை வாசிக்க தந்தமைக்கு மிக்க நன்றிண்ணே!

என்ன கதையின்னு தெரிந்ததா...?

ம்... ஆமா அதேதான்...

சுபஸ்ரீ மிஸ் அடிச்சாங்களா..?

ஒரு குழந்தையிடம் சொல்லப்பட்டு, அவரும் ரசித்திருப்பதில் ரொம்பச் சந்தோஷம். இனி எழுதும் கதைகள் இன்னும் நன்றாக எழுத வேண்டுமே என்ற கவலையை விதைத்திருக்கும் பகிர்வு இது.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

சனி, 20 ஏப்ரல், 2019

மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்

முனைவர் நௌஷாத்கான்...

எழுத்தில் சிகரம் தொட வேண்டுமென தொடர்ந்து பறந்து கொண்டிருப்பவர்... 

இதுவரை 18 புத்தகங்கள் போட்டிருக்கிறார். அதில் 11 புத்தகங்கள் மணிமேகலைப் பிரசுரம் மூலமாக. இன்னும் 4 புத்தகங்கள் அச்சில் இருக்கிறது. 40 புத்தகங்கள் போடுவதற்கான கதையும், கவிதையும் இவரிடம் இருக்கிறது.

தினமும் கதைகளும், கவிதைகளுமாக எழுதிக் கொண்டேயிருப்பவர். எழுத்தே மூச்சாய்... எழுத்தே உயிராய்... எழுத்தே உணர்வாய்... தினமும் எழுத வேண்டும் என்ற நினைப்புடனே வலம் வருபவர்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: Nowsath Khan, அமர்ந்துள்ளார், தாடி மற்றும் குளோஸ் அப்

ஒவ்வொருவரின் நியாயப் பக்கங்கள்

நிறம் மாறும் மனிதர்கள்!

நாளைய பொழுதும் உன்னோடுதான்!

என்ற தனது மூன்று புத்தகங்களை வாசிக்கச் சொல்லி என்னிடம் கொடுத்தார்.

ஓவ்வொருவரின் நியாயப் பக்கங்களை மட்டும் முழுவதுமாக வாசித்தேன்... மற்ற இரண்டும் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை.

நல்ல கதைகள் மூலம் நல்லதை விதைக்க முடியும் என்கிற எண்ணத்தோடான கருக்களையே கதையாக்க முயற்சித்திருக்கிறார். அதற்காகவே அவரைப் பாராட்டலாம். 

ஒவ்வொருவரின் எழுத்துப் பாணியும் ஒவ்வொரு விதமாக இருக்கும்... ஒருவரைப் போல் மற்றவர் எழுத முடியாது... அப்படி எழுத நினைத்துத் தோற்றவர்களே அதிகம். சிலர் வரலாறுகளை கதைக்குள் லாவகமாகச் சொருகுபவர்களாகவும், சிலர் செய்திகளைக் கதைக்குள் சொருகுபவர்களாகவும் சிலர் வெறும் கதை சொல்லிகளாகவும் இன்னும் இன்னுமாய் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய்... நௌஷாத்தோ கருத்துச் சொல்வதைக் களமாகக் கொண்டிருக்கிறார்.

இப்படிக் கருத்துச் சொல்லுதல் என்பது... அதாவது ஒவ்வொரு கதையின் முடிவிலும் நீதி சொல்லுதல் என்பது குமுதம், ஆவியில் வரும் ஒரு பக்கக் கதைகளில்  காணலாம். அப்படித்தான் இவரின் ஒவ்வொரு கதைக்குப் பின்னும் கட்டாய நீதி சொல்லுதல் இருக்கிறது.

பெரும்பாலும் பார்த்த... கேட்ட... வாசித்த... விஷயங்களைத்தான் கதையாக எழுதியிருக்கிறார். சில உண்மைச் சம்பவங்களையும் கதையாக்கியிருக்கிறார். அவற்றைப் படிக்கும் போது நமக்கு அது கதையாகத் தெரியவில்லை... அப்பட்டமாக அந்த உண்மைச் சம்பவத்தை நினைவில் நிறுத்துகிறது. இது சமீபத்தில் அவர் எழுதிய டிக்-டாக் பரிதாபங்கள் என்ற கதை வரை தொடர்கிறது என்றே சொல்லலாம்.

வாசித்த கதைகளில் கருத்துச் சொல்லுதல் என்பது சில கதைகளின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விடுவது அலுப்பைத் தருகிறது. இது இப்போது எழுதும் கதைகளில் இல்லை எனலாம். நெருடா போன்றோர் திட்டிக் கொண்டே இருப்பது கூட மாற்றத்துக்கான வழிதான்... இந்தப் புத்தகங்களில் இருக்கும் கதைகளுக்கும் தற்போதைய எழுத்துக்கும் மாறுதல் இருக்கிறது... இன்னும் மாற வேண்டும்... மாற்றங்கள் மட்டுமே எழுத்தை கொண்டு செல்ல வேண்டிய இடத்துக்கு கொண்டு செல்லும்.

இந்தப் புத்தகங்களில் இருக்கும் கதைகளுக்கான களம் சிறப்பானது... சொல்லியிருக்கும் விதமும் ஆங்காங்கே கருத்துப் புகுத்தலுமே கதையோடு ஒன்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகிறது என்பதே உண்மை. இந்தக் குறையும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக களைக்கப்பட்டு வருவதை சமீபத்திய கதைகள் காட்டுகின்றன. அந்த வகையில் பாராட்டலாம்.

எழுத்தில் சாதிக்கணும்... புகழ் பெற வேண்டும்... குறிப்பாக சினிமாவில் காலூன்ற வேண்டும் என்ற ஆவல், வலி, வாழ்க்கை, கனவு என எல்லாவற்றையும் எழுத்தாக்கச் சொல்கிறது.  இந்த எண்ணமும் வேகமுமே கருவில் இருக்கும் அடர்த்தியைக் கதையில் கொண்டு வரமுடியாமல் செய்துவிடுகிறது என்பதையே இக்கதைகள் காட்டுகின்றன...  

நௌஷாத்கான்... இங்கு பனிரெண்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு இரவில் கிடைக்கும் சொற்ப நேரத்தில்தான் தன் எழுத்தை உயிர்ப்பிக்கிறார். இந்த நாட்டில் பனிரெண்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு, அதன் பிறகு அறைக்கு வந்து குளித்துச் சாப்பிட்டு மற்ற நண்பர்களுக்குத் தொந்தரவில்லாமல் கதை, கவிதை எழுதுதல் என்பது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை... அதைச் சாத்தியமாக்கி நிறைய எழுதும் இவர் அதற்காக தன் தூக்கத்தைத் தொலைத்து இருக்கிறார் என்பதுதான் உண்மை... தொலைத்தவைகளைத் தேடும் கதைகளே அதிகமாய் வருவதும் தனிமை கொடுக்கும் வலியால்தான் என்பதுதான் நிதர்சனம்.

பேசும் போது உங்களிடம் பேசியதில் எனக்குச் சில கதைகளுக்கான 'நாட்' கிடைத்து விட்டது என்று சொல்லும் இவர் அவற்றை எல்லாம் கதையாக்கி விடுவதில் திறமைசாலிதான் என்றாலும் கதையிலும் யாருடன் பேசினாரோ அவர்களையே கதாபாத்திரமாக அலைய விடுவது அவ்வளவு சிறப்பானதாக இருப்பதில்லை... பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதை பலமுறை நாங்கள் சொல்லியிருக்கிறோம்... சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம்... ஏனோ அவ்வப்போது அப்படியான கதைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

வெளிநாட்டுக் காசு ஒன்றும் அட்சய பாத்திரம் மூலமாக வருவதில்லை என்பதை யாரும் உணர்வதில்லை... தகப்பன் இல்லாமல் தானே கையூன்றி... இங்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தையும் பார்த்து... தன் கனவையும் நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் நௌஷாத்தை, பணத்துக்காக அழகாகப் பயன்படுத்தியிருக்கின்றன பிரசுரங்கள்... எத்தனை அபத்தமான புத்தக வடிவமைப்பு... மிகப்பெரிய பிரசுரம்... அட்டைப்படமாய் நடிகர்களின் படங்களைப் போட்டு... சாமர்த்தியமாக தங்களின் பெயரை வெளியட்டையில் போடாமல்... பல லட்சங்களைச் சுருட்டியிருக்கிறார்கள். ஒருவனை ஏமாற்றிப் பிழைத்தல் எத்தனை கேவலமானது. அதுவும் கனவுகளோடு அலைபவனின் கனவைக் காசாக்கிப் பார்க்கும் எண்ணம் எப்படி அவர்களுக்கு வந்தது..? இதில் யார் தவறு அதிகம் என்று பார்க்க முடியவில்லை... தானே தேடி விளக்கில் விழுந்த விட்டில் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தூண்டில்காரனின் புழுவின் வாசத்தில் சிக்கிய மீனாய்த்தான் தெரிகிறார். 

தங்களிடம் புத்தகமாக்கலாம் எனக் கொடுத்த கதைகளில் இவை இவை நல்ல கதைகள்.... இவற்றை இப்படி மாற்றினால் இன்னும் சிறப்பாகும் எனச் சொல்லி, அப்படிச் செய்திருந்தால் அவர் வெளியிட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் சில குறைந்திருக்கலாம்... ஆனால் சிறப்பான கதைகளை எழுதி, எழுத்தாளனாய் தனக்கான இடத்தை எப்போதோ அடைந்திருக்க முடியும். இனியேனும் இத்தவறுகள் நிகழாது பார்த்துக் கொண்டார் என்றால் நிச்சயம் சிறப்பான இடத்தை அடைவார் என்பது என் நம்பிக்கை. பார்த்துக் கொள்வாரா என்பதை அவர்தானே தீர்மானிக்க வேண்டும்.

கதைகளைக் கொடுங்கள் புத்தகமாக்கலாம் என்றவுடன் ஏதோ நம்பிக்கையில் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு வருடக் கணக்கில் காத்திருத்தல் என்பது வேதனை... சும்மா வந்து விடுவதில்லை இந்தப் பணம்... வாழ்க்கையையும் நிம்மதியையும் தொலைத்து, எல்லாவற்றையும் இழந்து வாடும் வாழ்க்கையின் வலிகளை நிறைத்துத்தான் வருகிறது என்பதை ஏனோ அவர்கள் புரிந்து கொள்ளவில்லை... இவரும் அவர்களின் கைப்பாவையாய்... தலையாட்டிப் பொம்மையாய் இருந்துவிட்டது அவர்களுக்கு மேலும் சுலபமாகிவிட்டது... பணம் காய்க்கும் பேரிச்சையாகிவிட்டார்... முடிந்தவரை அறுவடை செய்திருக்கிறார்கள்.

நல்ல கதையை எழுதி தலைப்பை ஆபாசமாக வைக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்... அதுதான் நிறையப் பேரை வாசிக்க வைக்கிறது என்று சொல்வது எல்லாம் ஏற்க முடிவதில்லை. நல்ல கதையாக, ஈர்க்கும் எழுதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வாசகர்களைச் சென்றடையும் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். ஆபாசத் தலைப்புக்களே பலரை உள் நுழைய யோசிக்க வைக்கும் என்பதே உண்மை.

பிரதிலிபி போன்ற தளங்கள் இவரை நட்சத்திர எழுத்தாளர்களில் ஒருவராய் வைத்திருக்கின்றன...வாழ்த்துக்கள். ஆனால் அந்த ஹிட்ஸ்க்கள் என்னவோ தன்னை உயரத்தில் நிறுத்தியிருப்பதாக நினைப்பது அறியாமை. ஹிட்ஸ் மட்டுமே எழுத்தை முன்னிறுத்தும் என்ற நம்பிக்கையை மனசுக்குள் மிகப் பெரிதாய் அவருக்கு இருக்கிறது. ஹிட்ஸ்கள் அந்தத் தளங்களை வாழ வைக்குமே ஒழிய... எழுதுபவனை அல்ல என்பதை உணர வேண்டும். அதிலிருந்து முதலில் வெளிவரவேண்டும்... எழுத்துத்தான் தன்னைப் பற்றி பேச வைக்க வேண்டும் என்பதை அவர் மனதில் நிறுத்த வேண்டும் என்பதே என் ஆவா.

முதல் கதையே நிறையக் கருத்துக்களுடன் கட்டுரையாகப் பயணித்தால் அடுத்த கதைகளுக்கும் யாரும் பயணிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து புத்தகங்களை வடிவமைக்க வேண்டும்... இன்னும் சிறப்பான கதைகளுடன் நல்ல புத்தகங்கள் எழுதி, தன் ஆசையை... கனவை... அவர் அடைய வேண்டும் என்பதே என் ஆசையும் பிரார்த்தனையும்...

இப்போது நான்கு புத்தகங்கள் அச்சில் இருக்கின்றன... அதிலிருக்கும் கதைகள் எல்லாம் பேசப்பட வேண்டும். பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை.

இழப்புக்களை மனதில் நிறுத்தி, புகழ் மாயையில் இருந்து விடுபட்டு நல்ல கதைகளை எழுத வாழ்த்துக்கள்.

என்னடா இவன் புத்தகம் குறித்து எழுதச் சொன்னா... இப்படி எழுதியிருக்கிறான்னு தோன்றலாம்...  மனதில்பட்டதைச் சொல்வதில் என்னிடம் எப்போதும் தயக்கம் இருப்பதில்லை... அப்படித்தான் இதுவும்... இந்த மனநிலைதான் பலருக்குப் பிடிக்காமல் போகக் காரணமாகவும் இருக்கிறது என்றாலும் என் எண்ணம் எப்போது மாற்றுப் பாதையிலோ... முகமலர்ச்சிக்காக வாழ்த்தி எழுதவோ முயல்வதில்லை என்பதை என்னை அண்ணனாய் நினைத்து எல்லாம் சொல்லும் தம்பி நௌஷாத் அறிவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஒன்றே ஒன்றுதான் புகழை மட்டும் விரும்பாதே... எவ்விதமான  விமர்சனம் என்றாலும் ஏற்றுக் கொள்... கதையை அரதப் பழசு... கேவலம் என்று திட்டினாலும் அதை உரமாக எடுத்துக் கொள்... நான் எழுதினேன்... நீ எப்படிப் பேசலாம் என்ற மனநிலைக்குள் வந்துவிடாதே... விமர்சனங்களே உன் எழுத்தைப் பட்டை தீட்டும் என்பதை மறக்காதே... உன் எழுத்தை விமர்சகர்கள் முன் வை... விமர்சகர்கள் எப்படிப் பேசலாம் என எதிர் விவாதம் செய்யாதே... விமர்சனத்தால் நீ பட்டை தீட்டப்படுவாய்... இதிலிருக்கும் தவறுகளை அடுத்த கதையில் திருத்திக் கொள்ள அது வாய்ப்பாக அமையும்.

கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும்... இனி நடக்க இருப்பவை நல்லதாய் அமையட்டும்.

சிகரம் தொட வாழ்த்துக்கள் நௌஷாத்...
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

சினிமா : நெடுநல்வாடை

Image result for nedunalvaadai hd images
நெடுநல்வாடை... பேரே நல்லாயிருக்குல்ல... படமும்தான்... கிராமத்துக்குள்ள ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு...

ஒரு கிராமத்துக் கிழவனின் வாழ்க்கைக் கதை என்பதாய்த்தான் எனக்குப்பட்டது. 

வீட்டை விட்டு ஒருவனுடன் ஓடிப்போன மகள், காதல் கசந்து இரண்டு குழந்தைகளுடன்  போக இடமின்றி அப்பனைத் தேடி வருகிறாள். அவள் ஓடிப்போன போது பட்ட துயரத்தைவிட 'அய்யா' என வயலில் விழுந்து கதறும் போது அதிகமாக வலிக்கிறது அந்தக் கிழவனுக்கு.

போக்கத்தவளை வீட்டுக்கு கூட்டி வர, மதினி ஏற்றுக் கொள்கிறாள்... அண்ணன்காரன் அடித்து விரட்ட நினைக்கிறான்... அவனின் பயமெல்லாம் சொத்தில் பாதியைக் கொடுத்துருவாரோங்கிறதுதான்... ஓடிப்போனவள் கொடுத்த வலியைத் தூக்கிக்கிட்டு அலைபவனாய் கொடூர வார்த்தைகளை வீசிக் கொண்டேயிருக்கிறான். அதனாலேயே அப்பனுக்கும் மகனுக்கும் பிரச்சினை துளிர் விட ஆரம்பிக்கிறது.

தனது பேரனை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வரணும் என்பதற்காகவே பாடுபடுகிறார்... அவன் பேரில் மகனுக்குத் தெரியாமல் பணம் போட்டு வைக்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டையும் மகள் பேரில் எழுத, மகனின் கோபம் இன்னும் அதிகமாகிறது. அப்பனுக்கும் மகனுக்கும் சண்டை வலுக்கிறது.

அப்பன் இல்லாதவன்... ஒரு வீடு வாசல் இல்லாதவன்... எனச் சொல்லும் மாமனுக்கு முன் படித்து, நல்ல வேலைக்குப் போய் வீடு வாசல்ன்னு பேரன் நல்ல நிலையை அடையணுங்கிற தாத்தாவின் கனவை நோக்கி ஓடுகிறான் பேரன் இளங்கோ... மாமா மீதான கோபமும் அவனுள் தகிக்கிறது. அதனாலேயே முகத்தில் சந்தோஷமின்றித் திரிகிறான்.

Related image

இதற்கிடையே உள்ளூரில் அவனுடன் படிக்கும், சிறுவயது முதல் நட்பாய் இருக்கும் அமுதாவுடன் மோதலில் ஆரம்பித்து காதலில் முடிகிறது... தாத்தாவின் காதுக்குச் செய்தி வர, பேரனுக்கு அவன் எப்படி இந்த ஊருக்கு வந்தான் என்பதை எடுத்துச் சொல்லி, வேலைக்குப் போய் சம்பாரித்து இருக்க ஒரு வீடு, தங்கச்சி கல்யாணம் என அவன் முன் நிற்கும் தேவைகளைச் சொல்லி காதலுக்கு கட்டை போடுகிறார்.

தாத்தாவின் கனவைச் சுமக்கும் இளங்கோ தன்னைச் சுமக்கும் அமுதாவையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தவிக்கிறான்... கோபமாய் அவளைத் திட்டுவிட்டு விலக் நினைப்பவன் ஒரு கட்டத்தில் மீண்டும் அணைத்துக் கொள்கிறான்... அவர்களின் காதலும் தொடர்கிறது... 

சென்னைக்கு சொற்பச் சம்பளத்தில் வேலைக்குச் செல்கிறான். அமுதாவின் அண்ணன் தங்கையின் காதல் விவரம் தெரிந்து திருமணம் நிச்சயம் பண்ணுகிறான்... பேரனுக்காய் அமுதாவின் அண்ணனிடம் பேசப்போய் அவமானப்பட்டுத் திரும்புகிறார் தாத்தா.

காதல் பிரச்சினைக்காகவே வயலில் பாதியை விற்றாவது பேரனை வெளிநாட்டுக்கு அனுப்ப நினைக்கிறார். அவனோ அமுதாவை எப்படியும் அடைந்தே தீருவேன் எனத் திரிகிறான். எங்கே மகன் சொல்வதைப் போல ஆத்தா மாதிரி இவனும் கூட்டிக்கிட்டு ஓடி தன்னைத் தலைகுனிய வச்சிருவானோன்னு பயப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் அமுதாவின் அண்ணன் இளங்கோவை அடித்துக் கொல்ல முயற்சிக்கிறான்.

அமுதாவின் அண்ணனிடம் இருந்து தப்பித்தானா..?

வெளிநாடு சென்றானா...?

தாத்தாவின் கனவை நிறைவேற்றினானா..? 

காதலியைக் கரம் பிடித்தானா...? 

தங்களை மதிக்காத தாய் மாமனுடன் கூடினானா..?

இப்படி பல கேள்விகளுக்கு விடை படத்தைப் பார்த்து முடிக்கும் போது தெரியும்.

ஒரு கிராமத்து வாழ்க்கையின் வலியைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்வகண்ணன். கிராமத்து வாழ்க்கை எப்போதும் பட்டாடை கட்டி ஆடுவதில்லை... இதுதான் எதார்த்தம்... இந்த எதார்த்தம் எழுத்தாகவோ காட்சியாகவோ மாறும் போது அதில் ஆனந்தம் இருப்பதில்லை... அழுகையே அதிகமிருக்கும்... அதுதான் மன நிறைவைக் கொடுக்கும்... அதைக் கொடுத்திருக்கிறது நெடுநல்வாடை. 

எந்தச் ஜிகினாவும் சேர்க்காமல் இப்படி ஒரு அழகிய படத்தை எடுத்த இயக்குநருக்கும் , தோழனுக்குத் தோள் கொடுக்க ஒன்றாய் நின்று பணம் போட்ட அந்த 50 தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.

Related image

கிழவனாக வாழ்ந்திருக்கிறார் பூ ராம்...  என்ன ஒரு நடிப்பு... அப்படியே ஊரில் வயல்களில் மண்வெட்டியுடன் திரியும் கரிய உருவ மனிதர்களைக் கண் முன் நிறுத்தியிருக்கிறார். அறிமுக நாயகன் இளங்கோவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் அறிமுக நாயகி அஞ்சலி நாயரும் கிராமத்துத் துறுதுறு பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்... வந்து போகும் நடிகையாக இல்லாமல் அருமையாக நடிக்கவும் செய்திருக்கிறார்... தொன்னூறுகளின் கிராமத்து நாயகிகளை நினைவில் நிறுத்துகிறார். மாமனாக வரும் மீம்கோபி, ஊர்க்காரராக கிழவனுடனேயே திரியும் ஐந்து கோவிலான், அம்மாவாக வரும் செந்திகுமாரி, வில்லனாக... நாயகியின் அண்ணனாக வரும் அஜய் நடராஜ் என எல்லாப் பாத்திரங்களுமே மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

பூ ராமை தமிழ்ச் சினிமா இன்னும் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நெடுநல்வாடை அவருக்குச் சிறந்த படமாக மட்டுமின்றி, விருதுகளை வென்று கொடுக்கும் படமாகவும் அமையும் என்பது உண்மை.

காட்சிகளில் அவ்வளவு எதார்த்தம்... அதேபோல் நடித்திருப்பவர்கள் பலர் அறிமுகம் என்றாலும் துளி கூட மிகையாக நடிக்காமல் எதார்த்தமாய் நடித்திருப்பது படத்தின் வெற்றி... இப்படி இவர்களைப் பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் பலமும்... வெற்றியும் எனலாம்.
இசை அறிமுகமாக ஜோஸ் பிராங்க்ளின்... பின்னணி இசை மட்டும் கொஞ்சம் சோர்வைத் தருகிறது எனலாம்... ஆனால் பாடல்களில் இசை அருமை. பாடல் வரிகள் வைரமுத்து... கருவாத்தேவா பாடலின் வரிகள் கதை சொல்கிறது. காசி விஸ்வநாத் தனது ஒளிப்பதிவில் நெல்லையின் சிங்கிலிப்பட்டி கிராமத்தையும் அழகிய, பசுமையான வயல்வெளிகளையும் மிகச் சிறப்பாக உள்வாங்கியிருக்கிறார்... கிராமத்து வீடுகளும்... தெருக்களும்... வயல்வெளியும்... வெல்லம் தயாரிக்கும் இடமும் நம்மோடு கதாபாத்திரமாகவே பயணிக்கின்றன.

இயக்குநரின் தாத்தாவின் கதைதான் என்பதாய் இறுதியில் முடித்திருக்கிறார். வாழ்க்கைக் கதை என்பது எப்போதுமே சற்று கூடுதல் சுவையைக் கொடுக்கும் என்பதை நெடுநல்வாடை நிரூபித்திருக்கிறது.

படத்தில் சொல்லப்படும் சமூகத்தில் ஓடிப்போன மகளை உடனே ஏற்றுக் கொள்வார்கள் என்பது சற்று யோசிக்கக் கூடியதே. முறுக்கிக் கொண்டு திரியும் மாமனை கதாபாத்திரம் இறுதிவரை வராதது ஏனோ..? ஒரே சாதி எனும் போது தன் தங்கையைக் கொடுக்க மறுத்து அண்ணன் சொல்லுக் காரணம் அரதப்பழசானது என சில விஷயங்கள் எதிராய்த் தோன்றினாலும் நெடுநல்வாடை சிறப்பாகவே வந்திருக்கிறது.

அருமையானதொரு படம்... வாய்ப்பிருப்பவர்கள், விருப்பம் உள்ளவர்கள் பாருங்கள்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 15 ஏப்ரல், 2019

யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்


தேவா சுப்பையா...

இந்தப் பெயரை வலைப்பதிவரெல்லாம் மறந்திருக்க முடியாது. Warrior என்னும் தளத்தில் மிகவும் ரசனையான படைப்புக்களைப் பகிர்ந்து வந்தவர்தான் இவர். இப்போது தனது இயங்கு தளத்தை முகநூலுக்கு மாற்றிக் கொண்டு காதல் சொட்டும் வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறார். 

தேவா அண்ணனுடன் கிட்டத்தட்ட பத்தாண்டு சிநேகம்... படைப்புக்களின் எழுத்து நடை ஒரு மாவட்டத்தின் சுவாசமாக இருப்பதால் ஒட்டிக் கொண்ட உறவு இது. இன்னும் என்பதைவிட இறுதிவரை தொடரும் உறவாகத் தொடர வேண்டும். தனது தளத்தில் எழுதிய காதலே சுவாசமாக என்னும் தொடர் கட்டுரைகளையும் மற்றும் சில சிறுகதைகளையும் 'சுவாசமே காதலாக' என்ற காதல் கட்டுரைகளாகவும் 'யாரோ எழுதிய கதை' என்ற சிறுகதைத் தொகுப்பாகவும் வெளியிட்டிருக்கிறார்.

சுவாசமே காதலாக முழுக்க முழுக்க காதல் வடியும் கட்டுரைகள்... வார்த்தைகள் எல்லாமே தேனாய் உருகி காதலாய் ஓடுபவை... அதைக் கொண்டாட இங்கு ஒரு கூட்டமே இருக்கிறது. 

கொண்டப்பட வேண்டும் என நான் நினைக்கும் கிராமத்து எழுத்து... அதிலும் குறிப்பாக மண்ணின் மணத்துடன் எழுதும் எழுத்து... இன்னும் குறிப்பாக சிவகங்கை மண்ணின் மாந்தர்களின் பேச்சு வழக்கு என சிறுகதைகள் முன்பே வாசித்திருந்த போதிலும் புத்தகமாக என்னை எடுத்து வாசி என்றது.

தேவாவின் எழுத்து இலக்கணமாய்... இலக்கியமாய்... ரசனையாய்... எப்போதும் நம்மை  ஈர்த்து உள் வாங்கிக் கொள்ளக் கூடியது. அப்படியிருக்க நம்மை வாஞ்சையுடன் அணைத்துக் கொள்ளும் நடையுடனும் சிந்திக்க வைக்கும் வரிகளுடனும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களுடனும்  இன்னும் நெருக்கமாய் வந்திருக்கிறது இச் சிறுகதைத் தொகுப்பு.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 11 கதைகள்... இதில் 'யாரோ எழுதிய கதை', 'முகமற்றவனின் மொழி' எனச் சில கதைகள் என்னை விட்டு கொஞ்சம் தள்ளியே நின்றாலும் 'சில்லறைப் பாக்கி', 'செவபாக்கியம் ஆயா', 'பேய் புடிச்சிருச்சு', 'தேனு' என பல கதைகள் நமக்கு மிகவும் நெருக்கமாய்... குறிப்பாக இக்கதைகள் என்னை ஈர்க்கக் காரணம் அதில் கையாளப்பட்டிருக்கும் கிராமத்து மொழி.

கிராமத்து வாழ்க்கையை... அவர்களின் எதார்த்த நிலமையை... பூசி மெழுகிச் சொல்லாமல் அதன் போக்கில்... எப்படி இருக்கிறதோ... அப்படிச் சொல்லும் போது பெரும்பாலும் சோகமே தூக்கலாகத் தெரியும்... அதுதான் உண்மையும் எதார்த்தமும்... என்ன சோகமாய்... அழுகாச்சி கதை எழுதுறேன்னு என்னைப் பலர் கேட்டதுண்டு... வாழ்க்கைக் கதைகள் எப்போதும் ஜிகினா பூசிக் கொண்டு நிற்பதில்லை... அவை வாழ்வின் வலிகளைச் சுமந்து கொண்டுதான் நிற்கும் என்பதே உண்மை.

அப்படியான கதைகள் தான் செவபாக்கியம் ஆயாவும் தேனுவும்... ஊருக்கு ஒரு அடாவடி பண்ணுறவன் இருக்கிற மாதிரி... ஆம்பளையாட்டாம் எல்லாத்துலயும் நாந்தான்னு முதல்ல நிக்கிற பொம்பள ஒண்ணு இருக்கும்.... எதுக்கும் அஞ்சாது... ஏர் ஓட்டும்... நாற்றுப்பாவும்... பறிக்கும்... உரம் போடும்... கட்டடிக்கும்... பொணையல் விடும்...  நெல்லுத் தூத்தும்...எரவா மரங்கட்டி தண்ணி இறைக்கும்... நல்லது கெட்டதுக்கு முன்னால நிக்கும்... சண்டையின்னு வந்துட்டா 'அடியே அவுசாரி முண்ட'ன்னு சேலையைத் தூக்கித் சொருகிக்கிட்டு அடிக்க ஓடும்... அப்படி ஒருத்தியான செவபாக்கியம்... ஒரு குடும்ப சாம்ராஜ்யத்தக் கட்டி ஆண்ட செவபாக்கியம்... சாகக் கிடக்கும் போது வீட்டை ஒட்டித் தனியே வாரமிறக்கி... அதில் கட்டப்பட்ட சிமிண்ட் திண்டில் கிடக்கும் போது கூட , நடைபொடையா இருக்கும் போது ஆடிய ஆட்டத்தை மறக்காது பேசிக் கொண்டே இருக்கிறது.

தேனு மாதிரி ஒரு அயித்த மக இல்லைன்னா கிராமத்துல பொறந்ததுக்கு என்ன அர்த்தம் இருந்துடப் போகுது. அந்தப் பாசம்... வாஞ்சையான பேச்சு... விடுமுறையில் ஊருக்கு வந்த மாமன் மகனுக்குப் பார்த்துப் பார்த்து சமைத்துப் போடுதல்... மாடு மேய்க்க கூட்டிப் போதல்... என வயதில் மூத்தவராக இருந்தாலும் பிரியத்தில் சோடை போகாத அயித்த மகளோ மாமன் மகளோ இப்படி ஒருவர் கண்டிப்பாக இருக்கக் கூடும். தன் பிரியத்துக்குரிய தேனுவின் மரணத்துக்கு உடைந்து அழுகின்ற அந்த 'நான்' என்னும் மனிதனுக்குள் இருக்கிறது அவளின் வெள்ளந்தியான அன்பின் பிடிமானம்.

ஊர்ல பேய் பிடிச்சி அதுக்குத் துணூறு போட்டு ஓட்டுறதைப் பார்த்தா சிரிப்புதான் வரும்... பேய் கோழி ரசம் கேக்குறதும்... சிகரெட்டுக் கேக்குறதும்... ரசிக்க வச்சாலும் ராத்திரியில முழிப்பு வந்த பின்னாடி தூங்க விடாம எல்லாத்தையும் மனசுக்குள்ள ஊர்வலமாக் காட்டி 'கருப்பா...'ன்னு மனசுக்குள்ள வேண்டிக்க வைக்காம போகாது. இந்தப் பேய் புடிச்சுருச்சு கதையில பூசாரி கோடாங்கி அடிச்சி பேய் ஓட்டுறாரு... எங்கூருல எல்லாம் ஊர்ல சாமியாடுற யாராச்சும்தான் துணூறு போடுவாங்க... அதுக்கு கட்டுப்படலைன்னாத்தான் பூசாரி வரைக்கும் போகும்... அப்படி பேய் புடிச்சதா நடிக்கிற மருமககிட்ட மிதி வாங்குற சேவாத்தாவை நினைச்சி சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்.

அப்படித்தான் சில்லறைப் பாக்கியும்... பஸ்ல பணத்தைக் கொடுத்துட்டு டிக்கெட் பின்னால எழுதிக் கொடுத்துட்டு கண்டக்டர் போகும் போதும் வரும் போது மொகத்த மொகத்தப் பாக்குறது இருக்கே... அதை அனுபவிச்சிருக்கணும்... அப்பத்தான் அந்த நிலமையை ரசிக்க முடியும்... கல்லூரியில் படிக்கும் போது நண்பன் ஒருவனுக்கு எழுதிக் கொடுத்ததை கண்டக்டர் மறந்துட்டுப் போயிட, மருதுபாண்டியர் செட்டுல போயி  டிக்கெட்டைக் காட்டி வாங்கி வந்ததை ஞாபகத்தில் நிறைத்தது. அப்படி எழுதாமல் தாரேன் சார் என்ற கண்டக்டரிடம் அவன் காசை வாங்கினானா இல்லையான்னு ரசிச்சுப் படிக்க வச்ச கதை இது.

இப்படித்தான் நிலா, உமான்னு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதமாய்... எந்தக் கதையும் வாசிக்கும் போது என்னடா இது என யோசிக்க வைக்கவில்லை என்பதே எழுத்தாளரின் எழுத்தின் வெற்றி. மிகச் சிறப்பான சிறியதொரு சிறுகதைத் தொகுப்பு இது.


முன்னுரை எழுதியிருக்கும் கவிதாயினி மனுஷி பாரதி, 'பிரதேசத் தன்மை கொண்ட படைப்புக்கள் தமிழில் இன்னமும் எழுதப்படாத களங்களாகத் தேங்கி நிற்கிறது. நம் அடையாளத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிற தலைமுறை இப்போது உருவாகியிருக்கிறது. நம் மொழி அடையாளம், பண்பாட்டு அடையாளங்கள் குறித்த பிரக்ஞையற்ற தலைமுறைக்கு நம் மக்களை, அவர்களின் வாழ்க்கையைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை கதை சொல்லிகளுக்கு இருக்கிறது. அவை நிலம் பெயர்ந்து போன மனங்களில் படிந்துகிடக்கும் நினைவேக்கங்களின் வழியேதான் சாத்தியப்படக்கூடும்' என்று சொல்லியிருக்கிறார்.

உண்மைதான்... கிராமத்து வாழ்க்கையை... அந்த மக்களின் மனங்களை... அவர்களின் நேசத்தை... இப்படியான கதைகளின் மூலமேனும் நம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்... அது என்ன எழவெடுத்த அழுகாச்சி கதையாக இருந்தாலும் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லிச் செல்ல வேண்டும் என்பதே என் ஆசையும்... அதனால்தான் என் களங்கள் எல்லாமே கிராமங்களையே சுற்றி வருகிறது. 

ஆசிரியர் தனது என்னுரையில் 'புரிந்து கொள்ள முடியாத இவ்வாழ்வைப் புரியாமலேயே அணுகுவது எவ்வளவு உன்னதமானதோ அப்படியாய், சிவகங்கை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து நீண்ட இந்தக் கிளை தன்னை - தன் மூதாதையர்களின் வேர் அறிவித்துக் கொள்ள விரும்புவதாய் ஓர் உத்தேசமாய்க் கருதிக் கொள்ளுங்கள். எழுத்து நோக்கி நீண்டு கொண்டேயிருக்கும் கரங்களுக்குச் சொந்தக்காரன், சில புத்தகங்களை எழுதியவன், இன்னும் சில புத்தகங்களை எழுதித் தீர்க்க ஆவல் கொண்டவன் என்பதாயும் என் அடையாளம் வரையறுக்கப் படலாமென்றாலும்... காலத்தின் கைகளில் தன்னை முழுமையாய்க் கொடுத்தவன் நான் என்றுதான் என் பிரக்ஞை என்னை எனக்கு அறிமுகம் செய்கிறது' என்று சொல்லியிருக்கிறார்.

தேவா அண்ணன்  எப்படியான எழுத்துக்கு மாறினாலும் அவ்வப்போதேனும் தனது களமாக தம் மக்களின் வாழ்க்கைக் கதைகளை எழுதி வர வேண்டும் என்பது அன்பான வேண்டுதலாய். 

வாழ்த்துக்கள் அண்ணா.

யாரோ எழுதிய கதை
தேவா சுப்பையா
ஒரு துளிக் கவிதை வெளியீடு
விலை : ரூ.70 /-
-'பரிவை' சே.குமார்.

சனி, 13 ஏப்ரல், 2019

'மணல் பூத்த காடு' - விமர்சனக் கூட்டம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 30 பேர், Sanyo Daphne Pallikar, Suresh Babu, Tamilselvan Siva, Balaji Baskaran, Sheik Mohamed Sulaiman, Firdhous Basha, Dheva Subbiah, ஷோபியா துரைராஜ், Sasikumar Ssk மற்றும் 8 பேர் உட்பட, புன்னகைப்பவர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்

மீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழும முன்னெடுப்பில் முஹம்மது யூசுஃப் அண்ணனின் 'மணல் பூத்த காடு' விமர்சனக் கூட்டம் வெள்ளி மாலை ஆசிப் அண்ணாச்சியின் வீட்டில் நடைபெற்றது.  இது 'ஆபாசக் குழுமம்' என முகம் மறைத்துச் சிலர் பேசினாலும் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு கூடுகையின் மூலம் வார நாட்களின் அயற்சியைப் போக்கும் 'ஆசுவாச'மான குழுமமாகத்தான் இது இருக்கிறது என்பதே உண்மை. இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் எப்படிப்பட்டது எனினும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் இருப்பதுதான் சிறப்பு.

மணல் பூத்த காடு (நீளமா இருக்குதானே... இனி மபூகான்னு அண்ணாச்சி சொல்ற மாதிரி எழுதுவோம்...) - சௌதி பற்றி அறியாத செய்திகளைத் தாங்கிப் பயணிக்கும் நாவல். அது குறித்தான பார்வையை முன் வைக்கும் முன் 448 பக்கங்கள் கொண்ட நாவலை முழுவதுமாய் வாசித்து விமர்சனம் செய்வதுதான் நல்லது என்பதால் பேசியவர்களில் பலர் நாவலை மட்டுமின்றி அதன் ஊடாக இன்னும் தேடுதல் வேட்டையாகப் பலவற்றை வாசித்து வந்து மிகச் சிறப்பாகப் பேசினார்கள்.

எப்பவும் போல் அண்ணாச்சி அழகு தமிழில் விழாவை ஆரம்பிக்கும் முன்னர், சசி அண்ணனின் மகன் எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் உண்டு... இந்த மாதிரி நிகழ்வுகளில் நானும் கலந்துக்கணும்ன்னு அப்பாக்கிட்ட கேட்டேன் என்றபடி, ரொம்ப சங்கோஜப்பட்டு இன்னைக்கு வேண்டாமே என கொஞ்சலாய்க் கேட்டவன், வற்புறுத்தலுக்காக 'சத்தம் போடாதீங்கடா'ன்னு ஆரம்பிச்சதும் ஆடிப் பொயிட்டேன்... அப்புறம்தான் அது எம்.ஜி.ஆர். குரலுக்காக பேசியதுன்னு தெரிந்தது... என்னைய மாதிரி பலரும் ஆடியிருக்கலாம். அவனை நம்மாளுக பிலிப்பைனி மபூகா பற்றிப் பேசினா எப்படியிருக்கும்ன்னு சொல்லுன்னு கேட்டதுக்காக, பிலிப்பைனி மாதிரிப் பேசி எனக்கு மபூகா பற்றி எனக்கு எதுவும் தெரியாதுய்யா... ஆளை விடுங்கன்னு சொல்லி முடிச்சிக்கிட்டான். அருமை... தொடரட்டும்... வாழ்த்துக்கள்.

இன்னும் சிலர் வர வேண்டியுள்ளதால் அண்ணாச்சி நீங்க பாடுங்கன்னு... எல்லாரும் சொல்ல தனது செல்போனில் தான் பாடி சேமித்து வைத்திருந்த 'வெத்தல போட்ட சோக்குல...' பாட்டைப் போட்டுவிட்டு, நாந்தான் பாடுறேன் கேளுங்கன்னுட்டு அவரு வெளியில் போய்விட்டார்.

எப்பவும் போல் தமிழ்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பிக்க, தமிழில் இது ஒரு முக்கியமான நாவல், இதைப் பற்றி முதலில் என்னிடம் சொன்னவன் பிரபு கங்காதரன்தான்... யூசுஃப் என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்ன போது எனது வேலைப்பளூவின் காரணமாக அதிக நாட்கள் எடுத்துக் கொள்வேன் என்று சொன்னதும் எவ்வளவு நாள் ஆனாலும் முழுவதும் வாசித்துச் சொல்லுங்க எனச் சொன்னதாகவும், தான் வாசித்து எழுத்துப் பிழைகளையும் சரி செய்து கொடுக்க இரண்டு மாதங்கள் ஆகியது என்றார். 

'காளி' விமர்சனக் கூட்டத்தில் சசி அண்ணன் அடுத்த முறை தொடக்க ஆட்டக்காரர் என்பதிலிருந்து எனக்கு விலக்கு வேண்டும் என்று கேட்டதால் நெருடா தான் இறங்குவதாகச் சொல்லியிருந்தார். அதன்படி நெருடாவைக் கேட்க, அவர் நான் பின்னால் இறங்குகிறேன் வேற யாருக்காச்சும் வாய்ப்புக் கொடுங்க என்று சொல்லிவிட, திடீரென களமிறக்கப்பட்ட எந்த நிலையிலும் அடித்து ஆடும் 'கரும்புனல்' சுரேஷ் அவர்கள், நாவலுக்காக யூசுஃப் அண்ணனின் உழைப்பைப் பாராட்டினார். கவிதை, சிறுகதை, நாவலுக்கென்று ஒரு வடிவம் இருக்கிறது... அந்த வடிவத்தின்படி எழுதினால்தான் அது முற்றுப்பெறும். அந்த வடிவம் மபூகாவில் இல்லை என்றவர், நாவலில் பல மொழிகள் பயன் படுத்தப்பட்டிருப்பதால் ஒரு வறட்டுத் தன்மை இருக்கிறது என்றும் என்னுடைய கரும்புனல் நாவல் நடக்கும் களம் முழுக்க முழுக்க இந்தி பேசும் பகுதி என்றாலும் தமிழில்தான் கொடுத்தேன் என்றும் சொன்னார். இறுதியாக யூசுஃபுக்குத்  தயவு தாட்சண்யம் பார்க்காமல் கத்திரி வைக்கும் எடிட்டர் கண்டிப்பாய் தேவை என்றார். 

அடுத்ததாய் களம் இறங்கிய தேவா அவர்கள் அந்த எழுத்துத் தன்மை உள் வாங்கிக் கொண்டதால் இரண்டு நாளில் முடித்ததாகவும், காபாவை மலை உச்சியில் இருந்து அனீஸ் பார்க்கும் போது ஆடு பார்த்ததையும் சிலாகித்துப் பேசியவர், மணல் மீது யூசுஃப்புக்கு எவ்வளவு காதல் இருக்கக் கூடும் என்றார்.இது நாவலாய் இல்லை இது ஒரு ஆவணம் என்றார். இஸ்லாத்துக்கும் தமக்குமான தொடர்புகளைச் சுட்டிக் காட்டிப் பேசினார். நாவலில் பல கதாபாத்திரம் இருந்தும் அது அனீஸின் பின்னே சுற்றுவதை மட்டுமே சொல்லாமல், ஒவ்வொருவரின் பார்வையிலும் பயணித்திருக்கலாம் என்றவர், இறுதியில் நீங்கள் சிங்கம் உங்களைக் கூண்டில் அடைக்கப் பார்ப்பார்கள் அதில் அடைந்து விடாமல் சிறை உடைத்து வெளியில் வாருங்கள் என்றார்.

தேவாவைத் தொடர்ந்து இறங்கிய நூருல் அமீன் அவர்கள், சௌதியைப் பற்றி படித்ததும் தனக்கு துபையை மீண்டும் ஒரு முறை சுற்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று தோன்றியதாலேயே இங்கு இன்னும் சிலகாலம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார். தேவா பேசியதையும் மேற்கோள்காட்டிப் பேசினார். தான் எடுத்துக் கொள்ளும் உணவு செரித்துப் பின் தாய்ப்பாலாக கொடுத்தால்தான் சிறப்பு, அப்படியில்லாமல்  வாந்தியாய் எடுத்தால் எப்படி என்றவர் மபூகாவில் ஆசிரியர் வாந்தியாய் எடுக்கவில்லை என்றாலும் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்றார். திருச்சியில் இருக்கும் பேராசியர் நண்பருக்கு புத்தகத்தை அனுப்பியதாகவும் அவர் வாசித்து சிறப்பாக இருப்பதாகவும் சொன்னதுடன் அவரின் மாணவர் ஒருவர் அடுத்த ஆண்டு மபூகாவை தனது முனைவர் ஆய்விற்கு எடுக்க இருப்பதாகவும் சொன்னார். நீண்ட உரையாடல் என்றாலும் மிகச் சிறப்பாய் பேசினார். 

அடுத்ததாகக் களம் இறங்கிய சசி அவர்களும் ஆசிரியரின் உழைப்புக்கும்  தேடுதலுக்கும் வாழ்த்துச் சொன்னார். கவிதை, சிறுகதை, நாவல் என்பதற்கு இவர் ஒரு வடிவம் காட்டினார். கவிதையை தேனின் ஒரு துளியாய் இருக்க வேண்டும் என்றும் சிறுகதையை நீரோடை போலிருக்க வேண்டும் என்றும் நாவலைக் காட்டாறாய் இருக்க வேண்டும் என்று சொன்னார். நாவலில் நாயகன் நடந்து கொண்டே இருக்கிறார். அவன் லாடம் கட்டிய குதிரையாய் நடந்து கொண்டே இருப்பதாய் யூசுப் சொல்லியிருக்கிறார் அது லாடம் அல்ல சேனை கட்டிய குதிரை என்றவர், தனது அப்பத்தா சிவாஜி படம் நல்லாயிக்கும் என தியேட்டருக்கு அழைத்துச் சென்று டிக்கெட் கிடைக்காமல் மீண்டும் நடந்தே வீட்டுக்கு கூட்டியாந்ததை நாவலுடன் ஒப்பிட்டுப் பேசிய போது அரங்கில் சிரிப்பலை. நிறையப் பக்கங்கள் இருந்தாலும் என்னை முழுமையாகப் படிக்க வைத்தது நாவலின் எழுத்து நடை என்றார். மேலும் எனக்கு ஏனோ ஒரு வீட்டுக்குள் நகரும் டூலெட்டை விட பரியேறும் பெருமாள் பிடித்திருந்தது என்றவர், மபூகா காட்டாறாய் இல்லை அது கால்வாயாகத்தான் இருந்தது என்றார். இறுதியில் முத்தாய்ப்பாய் மணல் பூத்த காடு... கனவுப் பிரியனைத் தேடு... என்று சொல்லி தனது உரையை எப்பவும் போல் அழகு தமிழால் பேசி முடித்துக் கொண்டார்.

அடுத்து வந்த கௌசர் அவர்கள் இந்தப் புத்தகத்தைக் கொடுங்க ரெண்டு மூணு நாள்ல வாசிச்சிருறேன் என வாங்கும் போதே இரண்டு மாதமாவது ஆகும் என்றார்கள். அப்படியென்ன இருக்கு என யோசித்து வாங்கினால் 448 பக்கம், நானெல்லாம் அவ்வளவாக வாசிப்பவன் இல்லை என்றாலும் வாசிக்க வேண்டும் என்பதால் செல்போன் லைட்டை ஆன் பண்ணி நெஞ்சில் போட்டுக் கொண்டு படித்தேன், சில நேரங்களில் புத்தகம் மூக்கில் எல்லாம் விழுந்தது என்றார். இவ்வளவு விளக்கம் தேவை இல்லை என்றவர் மிஷினின் நம்பர் முதக் கொண்டு எல்லாமுமா சொல்ல வேண்டும் என்றார். பதினெட்டுப் பாகம் முடித்த நான் இங்கு வந்தபின் 40வது பாகத்தைப் படித்தேன். அதுவும் அதே செய்திகளுடனும் நடையுடனுமே போகிறது என்றவர் தான் சௌதி சென்ற போது விமான நிலையத்தில் நடந்த கூத்தை விவரித்தார். 

அடுத்ததாகப் பேச வந்த கவிமதி அவர்கள், ஒட்டு மொத்தமான எல்லா நிகழ்வுகளுக்கும் வஹாபியிசக் கொள்கைகளையே குற்றம் சொல்லக்கூடாது. நிறைய நல்ல நிகழ்வுகளும் வஹாபியிசத்தால் நடந்திருக்கிறது என்றார். வஹாபியிசக் கோட்பாடுகள் அது குறித்து விரிவான அறிதல் இல்லாதவர்களின் தவறான வழிகாட்டுதலால் இன்று மாறிக் கிடக்கிறது என்றார். கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கும் வஹாபியிஸத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றார். எங்க ஊரில் வேறு வேறு தினங்களில் ரமதான் கொண்டாடப்படுகிறது. நான் இந்த வருடம் ரமதான் இல்லைடா என்று கூட அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். அப்போது அவர்கள் என்னை எப்படிப் பார்த்திருப்பார்கள்... எனக்கு என்ன கொடுத்திருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா என்றார். முஸ்லீம் கொள்கைகளை தீவிரமாகக் கடைபிடித்த ஒரு குடும்பத்தில் பிறந்து 23 வயதில் சௌதி போனவன், அங்கு கடைபிடிக்கப்படும் கொள்கைகளை பார்த்து வியந்தேன் என்றார், தலை வெட்டு இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது... ஆறு மாதம் முன்னர் வேலைக்காரப் பெண்ணான இலங்கைச் சிறுமியின் தலை வெட்டப்பட்டது எல்லாருக்கும் தெரியும் என்ன பொது வெளியில் கூடாது என்பதால் சிறைச்சாலையிலேயே வைத்துச் செய்தார்கள் என்றதுடன் தான் வேலை பார்த்த போது வேலை முடிந்து திரும்புவதற்குள் தலை வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பதையும் நினைவு கூர்ந்தார். இன்னும் நிறைய சௌதி குறித்தும் வஹாபியிஸம் குறித்தும் பேசினார். 

மபூகா பற்றி ஆண் விமர்சகர்களே பேசிக் கொண்டிருந்ததால் அண்ணாச்சி ஜெசிலா அவர்களை அழைத்தார். எல்லாரும் பேசிட்டாங்க... அதையேதான் நானும் திரும்பப் பேசணும்... சுவராஸ்யமில்லை... நாவல் வடிவமில்லை... செய்திகள் அதிகமிருக்கு என திரும்பத் திரும்ப அதையே சொல்லணுமா என்றவர்,  எனக்கு மபூகா பிடித்திருந்தது. அந்த இயந்திரத்தின் நம்பர் கொடுத்ததில் என்ன தவறு. நான் எப்பவுமே தேடல் உள்ளவள்... எல்லாவற்றையும் குறித்து வைத்துள்ளேன்... கூகிளில் தேடி அதன் விபரம் அறிந்து கொள்வேன் என்றார். அப்போது சுரேஷ் குறுக்கிட்டு அதுக்காக 23எப் சீட்டில் பயணித்தேன் என்பதெல்லாம் ஓவர் என்றார். அதென்ன கடிதங்களுக்கு மட்டும் மொழி நடை மாறுது... என்று கேட்டவர், ஒருவேளை அது தனியாக எழுதிச் சேர்த்ததால் இருக்குமோ என ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். தனது அம்மாவும் கொஞ்சம் வாசித்ததாகவும் அவருக்கும் பிடித்திருப்பதாகவும் சொன்னவர் செய்திகள் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

துவக்க ஆட்டக்காரராக களமிறங்க இருந்து கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்ட நெருடா அழைக்கப்பட்ட போது, கீழே பிரியாணி வந்திருக்கிறது போய் எடுத்து வாருங்கள் என ராஜாராம், நௌஷாத்துடன் என்னையும் அனுப்பினார் பாலாஜி. எடுத்து வருவதற்குள் என்ன பேசினார் என்பது தெரியாது என்றாலும் நாவலில் உள்ள நுண் அரசியலை, உருவ வழிபாடு கூடாது என்பதால் கற்களை உடைத்ததை, வஹாபியிசத்தை தோற்றுவித்தது யார்..?, அதனால் என்ன நிகழ்ந்தது..?, பிரிட்டீஷ்காரனின் வருகையால்தான் வஹாபிஸம் வந்ததா..? என புத்தகத்தைப் படித்து அதன் ஊடான தேடுதலில் தான் அறிந்தவற்றைப் பற்றி மிக நீண்ட விவாதத்தை முன் வைத்தார். பேசியவர்களில் தீவிர ஆராய்ச்சி செய்து பேசியது நெருடா மட்டுமே. இப்படித் தேடிப் படித்திருக்கிறாரே என்ற வியப்பே மேலிட்டது. மிகச் சிறப்பான பேச்சு... மபூகாவுக்குள் பயணிக்காமல் அவருக்கு பிடித்த, நெருடலாய் இருந்த விஷயங்களைப் பேசினார். மகேந்திரன் 'சித்தப்பு நீ எப்ப மபூகா பற்றிப் பேசுவே..?' என வாட்ஸப்பில் தட்டி விட்டார் என்றாலும் கம்யூனிசக் கொள்கை கொண்டவரின் விரிவான பார்வை இப்படியாய் இருந்ததும் சிறப்புத்தான். வாழ்த்துக்கள்.

அண்ணாச்சி வெளியில் சென்ற தருணத்தில் மைக் பிடித்த பாலாஜி சான்யோ நீங்க பேசுறீங்களாவெனக் கேட்டபோது அண்ணாச்சி இல்லையே என யோசித்தவரை, அவர் வரட்டும் நீங்க வந்து பேசுங்க என அழைத்தார். 

சான்யோ பேசும் 'கிளியோபாட்ரா ஏன் செத்தாள்...? விஷம் அருந்தி என்கிறார்கள்... பாம்பைக் கடிக்கவிட்டு என்கிறார்கள்... எப்படி செத்திருப்பாள் என ரெண்டு மூணு நாளாவே யோசித்து அதற்கான தேடலில் இருக்கிறேன் என்றவர் மபூகாவை கண்டிப்பாக நான் நான்கைந்து முறைக்கு மேல் படிப்பேன் என்றார். எனக்கும் தேடுதல் ரொம்பப் பிடிக்கும் என்றவர். விரிவான தகவல்களுடன் சொல்லியிருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று வாதிட்டார். மேலும் யார் என்ன சொன்னாலும் நீங்க அடுத்த நாவலும் இதேபோல் தகவலுடன் எழுதுங்க என்றார். இவர் பேசும் போது விமர்சனக் கூட்டத்துக்கே விமர்சனம் பண்றீங்களா... நாவலைப் பற்றிப் பேசுங்கன்னா இங்க பேசுனவங்க சொன்ன கருத்துக்களை வைத்துப் பேசுறீங்க என கௌசர், சுரேஷ், தேவா போன்றோர் சத்தம் போட்டனர்.  சிரித்துக் கொண்டே எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது என்றார்.

'காளி' எழுதிய கவிஞன் பிரபு பேசும்போது இந்த நாவல் வெளிவரும் முன்னர் நானும் அண்ணனும் இது குறித்து நிறையப் பேசியிருக்கிறோம். கவிதை, சிறுகதைக்கு எல்லாம் என்னய்யா வடிவம் இருக்கு... ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை... இப்படித்தான் இருக்க வேண்டும்... இந்த வடிவத்துக்குள் வரவேண்டும் என்றெல்லாம் சொல்லக்கூடாது. இது நாவல்தான்... எவ்வளவு உழைப்பு இருக்கு தெரியுமா இதில் என்றெல்லாம் பேசியவர், அனீஸ் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் எல்லாமே என்னைக் கவர்ந்தவை... அதில் அத்தனை காதல் இருக்கு.... குறிப்பாக ரெண்டாவது கடிதத்துக்கும் என்னுடைய காளி கவிதைக்கும் ஒரு தொடர்பு இருக்கு... அதை மீண்டும் வாசித்து யாராவது என்ன தொடர்புன்னு சொல்லுங்க பார்ப்போம்... வேறொன்னும் பேசுவதற்கு இல்லை என முடித்துக் கொண்டார்.

பாலாஜி அவர்கள் பேச ஆரம்பிக்கும் போது நாவலைப் பற்றிப் பேசணுமா... இல்லை இங்கு பேசியவர்களைப் பற்றிப் பேசணுமா எனக் கேட்க, நாவலைப் பற்றிப் பேசுங்க என்றதும் நானும் பயணத்தைக் கொண்டாடுபவன் என்பதால்  நாவலை வாசிக்கும் போது நான் குருஷேத்திரம், தில்லி என சுற்றி வந்தேன் என்றவர் படிப்பு முடிந்து முதலில் வேலைக்குச் சேர்ந்ததும் நான் சென்றது தில்லி என்றும், தன்னைக் கூட்டிப் போனவன் விட்டுவிட்டு வேறு வேலையாகச் செல்ல, இந்தி தெரியாத ஊரில் சாப்பாடு வாங்கக் கூட தான் பட்ட கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டார். நம்ம ஊரில் இட்லி வாங்கினால் சாம்பார், சட்னி கட்டிக் கொடுத்துருவாங்க... ஆனா சப்பாத்திக்கு பாஜியும் காசு கொடுத்து வாங்கணும் என்பதை அங்குதான் தெரிந்து கொண்டேன் என்றார். மேலும் தமிழ் ஆட்களே இல்லாத ஊரில் ஒரு ராணுவ வீரன் தமிழ்ப் பாடலை விசிலில் பாடிக்கொண்டு சென்றதைக் கேட்டு தான் அடைந்த சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டார். எனக்கு இந்த சந்திப்பிழை, ஒற்றுப்பிழை எல்லாம் தெரியாது என்பதால் 'ப்' போட்டானா, 'ண்' போட்டானான்னு எல்லாம் யோசிக்கலை... எனக்கு பிடித்த களம் என்பதால் அனீஸ் கூட பயணப்பட்டேன் என்றார். கடுமையான கத்திரி வேணுமாம்... அப்படி கத்திரிபோட்டிருந்தா மூணு பக்கத்துல முடிஞ்சிருக்குமேய்யா என்றார். இன்னும் நிறைய உருக்கமாய்ப் பேசியவர் இறுதியில் நல்லாச் சமைச்சவளுக்கு வளையல் போடணும் என்பதால் இந்த மோதிரத்தை அண்ணனுக்குப் போடுறேன் என யூசுஃப் அண்ணனுக்கு மோதிரம் அணிவித்து முத்தமும் கொடுத்தவர் உணர்ச்சிப் பெருக்கில் கண் கலங்கினார். உணர்ச்சிகரமாகப் பேசினாலும் அவரது பேச்சில் இழையோடும் நகைச்சுவை கடந்து இரண்டு விமர்சனக் கூட்டத்திலும் மிஸ்ஸிங்... அது ஏனோ...? சிங்கத்தை சிறையிட்டது யாருய்யா... நகைச்சுவையாய் பேசவும் ஒருவர் வேண்டும் என்பதை மனதில் கொள்வோம்.

பணி நிமித்தம் தாமதமாக, ரொம்பச் சோர்வாக வந்த அசோக் அவர்கள்,  நான் அதிகம் பேச முடியாது என்றதுடன் மைக்கும் வேண்டாம் எனச் சொல்லி ஒரு விரிவான பார்வையை தன் பேச்சின் மூலம் கொடுத்தார். நிறைய விஷயங்களைத் தவறென்றதுடன், சுற்றிக் காட்டுபவனுக்கும் பயணப்படுபவனுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொன்னார். சுற்றுலாப் பயணிகளுக்குச் சுற்றிக்காட்ட உதவியாக வருபவன் அந்த ஊரில் உள்ள முக்கிய இடங்களுக்கு மட்டுமே கூட்டிச் செல்வான். அதே நேரம் பயணப்படுபவன் என்றால் அந்த ஊர் முழுவதும் சுற்றுவான்... மண், மக்கள், மொழி, வாழ்க்கை முறை என எல்லாவற்றையும் தேடித்தேடி பார்ப்பான். மபூகாவில் நீங்க சுற்றித்தான் காட்டுகிறீர்கள்... அந்த மக்களைப் பற்றியோ அவர்களின் வாழ்க்கை முறை பற்றியோ பேசவில்லை... ஏன் உள்ளூர் ஆட்கள் என மூவரை மட்டுமே சொல்கிறீர்கள்... மற்றவர்கள் எல்லாமே வெளியூர்வாசிகள்தான். எங்கு சென்றாலும் இடங்களை மட்டுமே பேசுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை வைத்தார். இஸ்தான்புல் பற்றிய நாவலில் அங்கிருக்கும் ஒவ்வொரு வீதியும் பற்றி சொல்லப்பட்டிருக்கும்... அதனுடன் நான் மதுரையை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன் என்றெல்லாம் மிக விரிவாய்... சோர்வை நீக்கிப் பேசினார்.

அண்ணாச்சி அவர்கள் பேசும் போது இதை ஏன் நான் முக்கியமான நாவல் என்கிறேன் என்பதற்கான விளக்கத்தைச் சொன்னார். கணேசகுமாரனின் பார்வை குறித்து விரிவாகப் பேசினார்... வாசகனின் பார்வையில் அது சரியான விமர்சனமே என்றார். சுரேஷ் கூட கணேசகுமாரனின் கருத்துக்கள் பெரும்பாலானவற்றில் நானும் ஒத்துப் போகிறேன் என்றார்.  சுவராஸ்யம் இல்லை என்பது வாசகனின் மனநிலை... ஆழப்படித்தால் இதிலிருக்கும் நுண் அரசியல் புரியும் என்றார். சுவராஸ்யம் இல்லை என்பதாய் எதைச் சொல்கிறீர்கள்..? நாவல் இல்லை என எப்படிச் சொல்லலாம்...? என விரிவாய்ப் பேசி விளக்கம் கொடுக்க, தாங்கள் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என்பதால் எங்கள் கருத்துக்களைக் குறை சொல்கிறீர்கள் என சுரேஷ், தேவா எனப் பலரும் எதிர்க்குரல் கொடுக்க, விவாதம் சற்றே காரசாரமானது. நான் யூசுஃப்புக்காக கம்பு சுத்துறேன்னு நெனைக்காதீங்கய்யா எனச் சொல்லி, சௌதி குறித்தான வித்தியாசமான பார்வையை மபூகா முன் வைக்கிறது என்றும் எங்களிலும் பல பிரிவுகள் இருக்கத்தான் செய்யுது என்றெல்லாம் தன் அழகு தமிழில், காந்தக் குரலில் பேசி, யூசுஃப் விளக்கமாய்ப் பேசுவார் என முடித்துக் கொண்டார்.

யூசுப் அவர்கள் முன் முடிவோடு வந்து விட்டார் போல... இப்படித்தான் பேச்சு இருக்கும்... இதற்கு இப்படியான பதில் கொடுக்க வேண்டும் என எழுதிய குறிப்புடனே வந்து விட்டார். அங்கு பேசிய எல்லாருக்குமான பதிலை தன் நீண்ட உரையில்... கிட்டத்தட்ட அரைமணி நேரம் (அவர் பேசியதை முழுவதுமாய் வீடியோ எடுத்தவன் என்பதால் அவர் பேசிய நேரத்தைச் சொல்ல முடிகிறது) மிக விரிவாய்ப் பேசினார்... இப்படியான பேச்சுத்தான் அவரின் சிறப்பு. இந்தப் புத்தகம் எழுத தான் எப்படியெல்லாம் உழைத்தேன் என்றும், இதை எழுத எது அடிப்படைக் காரணமாக அமைந்தது என்றும், சின்னச் சின்ன விஷயங்களுக்காக பல படங்களை பார்த்தேன் என்றும், பல புத்தகங்களை வாசித்தேன் என்றும் சொன்னார். நாவலில் என்ன என்ன செய்ய வேண்டும் என ஒரு முன் முடிவு எடுத்ததையும் சொன்னார். டாக்குமெண்ட் பிக்சன் வகையில் நாவல் எழுதுவது எவ்வளவு சிரமம் என்பதையும் புனைவாய் எழுதுதல் எவ்வளவு சுலபம் என்பதையும் சொன்னார். அடுத்த நாவல் புனைவாய் எழுதுவதாய்ச் சொன்னார். அதில் கூட தான் தகவல் கொண்டாடி என்பதால் சிந்துபாத் பற்றிய செய்திகளை இணைக்க இருப்பதாகவும் அதற்கான தேடலில் இருப்பதாகவும் சொன்னார். சௌதி குறித்து தமிழில் எழுதப்பட்ட மூன்றாவது நாவல் மபூகா என்றார். பயணக் கட்டுரைகள் எழுதிய மாலன் கூட சௌதி பற்றி எழுத மாட்டேன் என்று சொன்னார் என்பதையும் சொன்னார். இன்னும் விரிவாய், விளக்கமாய்ப் பேசினார். அவரின் முழுப் பேச்சையும் வாசிக்க அவரின் முகநூல் பதிவைப் பாருங்க.

நூருல் அமீன் எழுதிய புத்தகத்தை வாசித்து கருத்தைச் சொல்லுங்க என இலவசமாகக் கொடுத்தார். அவர் எடுங்க... எடுங்க... என நிற்க, எல்லாரும் பிரியாணி வாசத்தில் மயங்கிக் கிடந்தார்கள்... புத்தகமா... சோறா... என்றபோது சோறுதான் முக்கியமென பிரியாணிக்குள் புகுந்துவிட்டாலும் விழா முடிவில் பலர் புத்தகத்தைப் பெற்றுச் சென்றார்கள்.

பர்னிச்சரை யாருமே உடைக்கலையே எனக் கவலைப்படும் அண்ணாச்சி ஏனோ நேற்று அப்படியான கவலைக்குள் போகவே இல்லை... ஒவ்வொருவரின் பேச்சுக்குப் பின்னரும் நீண்ட விளக்கம் கொடுத்தது புதுமையாய் இருந்தது... மபூகாவுக்காக மட்டுமில்லாமல் இந்த முறையை எல்லா விமர்சனக் கூட்டத்திலும் தொடர்ந்தால் நலம்... கம்பெடுத்துக் கொடுக்கும் அண்ணாச்சி இறுதியில் இறங்கி ஆசிரியர் சார்பாய் கம்பு சுற்றியது ஏனோ என எல்லாருக்குமே ஒரு கேள்வி மனசுக்குள்... மற்றபடி எப்பவும் போல் அண்ணாச்சியின் அன்பும்... அணைப்பும்... குறிப்பாய் அந்த அழகு தமிழும் எல்லாருக்கும் கிடைத்தது. எப்பவும் போலவே புத்தகங்களைப் பாதுகாத்துக் கொண்டார்.

ஒரு தடவை கை கொடுத்ததுடன் ஓடிப்போங்கடா என பாலாஜி விரட்டியதால் நீண்ட நேரம் நிற்காது சற்று முன்னதாகவே அபுதாபியை அடைந்தோம். வரலை என்று சொன்னாலும் நீ வந்துதான் ஆகவேண்டுமென என் இருப்பிடம் வந்து அழைத்துச் செல்லும் பால்கரசு என்றும் நன்றிக்குரியவர். போகும் போதும் வரும்போது பல விஷயங்களைப் பேசிக் கொண்டு செல்ல இந்த முறை இராஜாராம், நௌஷாத், தங்கை சுடர்விழி என பயணமும் பண்பட்டதாகவே அமைந்தது. 

தன் புத்தகங்களைக் கொண்டு வர, லட்சங்களைத் தொலைத்து எழுத்தில் சாதிக்க நினைக்கும் நௌஷாத்தின் கதை உண்மையிலேயே மனசுக்கு வலியைக் கொடுத்தது. எதற்காக இவ்வளவு பணம் கொடுத்து ஏமாற வேண்டும்... ஹிட்ஸும் சர்டிபிகேட்டுக்களுமே நம் எழுத்தின் பாதையைத் தீர்மானித்து விடும் என நினைத்து பணத்தைச் செலவழித்து நிற்பது எத்தனை அபத்தமானது... எழுத்துக்கான இடத்தை அந்த எழுத்தே பெற வேண்டுமேயொழிய குடும்பச் சூழலில் இப்படியான செலவு என்பது எதற்காக என்ற வருத்தம் என்னுள் இன்னும் நிறைந்தே நிற்கிறது. அவன் நினைத்த இடத்தைச் ஜெயிக்க வேண்டும் என்பதே பிரார்த்தனையாகவும் இருக்கிறது.

குறிப்பு எடுக்காமல் இவ்வளவு விவரமா எழுதுறீங்களே... என என்னை ஆரத்தழுவி, உங்க விமர்சனத்தை நான் விரும்பிப் படிப்பேன்.... எழுதுங்க எனச் சொன்ன சசி அண்ணனுக்கு நன்றி. என் எழுத்துக்கான இடத்தை அது பிடித்து வைத்திருப்பதால்தான் இப்படியான உறவுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

மபூகா விமர்சனக் கூட்டம் குறித்து எழுதும் மனநிலை இல்லை என்பதே உண்மை... நௌஷாத் எழுதியதைப் பார்த்ததும் இனி நாமும் எதற்கு இதையே திரும்ப எழுத வேண்டும் என யோசித்தவனை நச்சரித்து எழுத வைத்தவர் இராஜாராம்... அவருக்கும் அவர் போட்ட பதிவில் வந்து எழுதச் சொன்ன நட்புக்களுக்கும் நன்றி.

அண்ணன் தம்பிகளுக்குள் புரிதலில் எப்போதேனும் சின்னச் சின்ன இடைவெளி வருதல் சகஜமே... அப்படியான இடைவெளி ஆரத் தழுவுதலில் சில நேரம் காணாமல் போய் விடுவதுண்டு... அப்படியான தழுவல் கிடைத்தது என்பதை இதயப் பூர்வமாக உணர்ந்தேன்... இடைவெளி உடைபடும் என நான் நம்புகிறேன். யூசுஃப் என்று எனக்கு எழுத வருவதில்லை... கனவு என்றேதான் வருகிறது... இங்கு யூசுஃபை நுழைக்க நிறைய சிரமப்பட்டேன்... இந்தக் குழுமத்துக்குள் வந்ததால் வந்த உறவில்லை இது.... கனவாய் போனில் ஆரம்பித்த உறவு... எனக்கு கனவுப்பிரியனாய்தான் தெரியும்... அப்படித்தான் இன்றும் அழைக்கிறேன்... அண்ணே... நீ இன்னும் எழுதணும்ண்ணே... சிகரம் தொடணும்... உன் வெற்றியில் நாங்கள் மகிழணும்... உன் மனதில் எப்போதும் நாங்கள் இருக்கணும்... செய்திகள் இல்லாது எழுதாதே... ஆனாலும் குறைத்துக் கொள்... மபூகா 300 பக்கத்துக்கு மேல் எல்லாருக்குமே அயற்சியைக் கொடுத்திருக்கும் என்பதே உண்மை. 

விழாவைச் சிறப்பாக நடத்த உறுதுணையாக நின்ற அண்ணாச்சி, பாலாஜி இருவரும் போற்றுதலுக்கு உரியவர்கள். பாராட்டுவோம்.

சுபான் அண்ணாச்சி இல்லாத நிகழ்வு என்றாலும் அந்தக் குறை தெரியாமல் தமிழ்செல்வன் அவர்களும் கிங்க்ஸ்லி அவர்களும் மிகச் சிறப்பாக தங்கள் பணியைச் செய்தார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... தமிழண்ணே உங்க பொண்ணு எம்பொண்ணை ஞாபகப் படுத்திக்கிட்டே இருந்துச்சுண்ணே...

மபூகா விமர்சனக் கூட்டம் மிகச் சிறப்பான நிகழ்வாய் அமைந்தது. நீண்டதொரு நிகழ்வில் எந்தச் சோர்வுமில்லாமல் பேசிய, கவனித்த அனைவருக்கும் நன்றி.

பேசியவர்களில் பெரும்பாலனோர் மூத்தவர்கள் என்றாலும் பதிவில் அண்ணன்... அண்ணன் என வருவதைத் தவிர்க்கவே பெயரை  மட்டும் போட்டிருக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்...

பதிவு மிகப் பெரியது... பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 11 ஏப்ரல், 2019

பூபகீதனின் எண்ணமும் ரெங்கநாயகியின் வாழ்க்கையும்

னது 50 கதைகளின் பிடிஎப் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும் தம்பியும் கவிஞருமான கரூர் பூபகீதன் முகநூலில் இட்ட பகிர்வு...

க்கத்து வீட்டுக்காரனையே பார்க்காமல் வாழும் இந்த ஆண்ட்ராய்டு யுகத்தில்....
நம்முன் எதிர்ப்படும் ஒவ்வொருவரின் முகம்கணித்து நாடி பிடித்து நுண் உணர்வுகளை வரிகளாக்குவது எல்லோருக்கும் சாத்தியப்படாவிட்டாலும்
அன்பு அண்ணண் நித்யா குமார் அவர்களுக்கு கைவந்த கலையென அவரின் சிறுகதைகளை படித்தால் தெரிந்துவிடும்...
எந்த கதையிலும் வார்த்தைகளுக்காக அவர் மெனக்கெடுவதில்லை... மாறாக வார்த்தைகளை ஊஞ்சலாக மாற்றுகிறார்... படிப்பவரை தாலாட்ட வைக்கிறார்...
அவர் கதைகளின் கதாபாத்திரங்கள் மென்மையாக பேசுகிறார்கள், எந்த இடத்திலும் அதிர்ந்துகூட பேசுவதில்லை... அவர்கள் வன்முறை பக்கம் போவதேயில்லை...
சாமானியனின் அல்லது குரலற்றவனின் அல்லது வக்கற்றவனின் வார்த்தைகளை நீங்கள் செவிமடுத்து கேட்டிருந்தால் புரியும்....
அவர்களின் இயலாமைகளை அவர்களின் மனப் போராட்டங்களை அப்படியே நம் கண் முன் நிறுத்தி ....
உயிருக்கும் உணர்வுக்குமுள்ள மதிப்பை கோடிட்டு காட்டுகிறார்....
எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கையை இன்னும் இன்னும் அதிகமாக எழுத வேண்டும்.
இதுவரை எழுதியுள்ளதை புத்தகமாக்கி... எளியவர்கள் கரங்களில் வலம்வரசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டு....
சில கதைகள் எப்படா முடியும் என்றிருக்கும்...
சில கதைகள் அடடா அதற்குள் முடிந்துவிட்டதே என்றிருக்கும்...
அண்ணணின் கதைகள் இரண்டாம் வகையை சார்ந்தது....
ஆனால் உண்மையில் முடிந்த இடத்திலிருந்துதான் அண்ணணின் கதைகள் தொடங்குகிறது நம் மனதுக்குள்...
ஒருமுறை படித்தால் தெரியும் உங்களுக்கு...
"மனசு" சும்மாயிருப்பதேயில்லை....

நன்றி பூபகீதன்.


**********
பிரதிலிபி 'இறைவி' சிறுகதைப் போட்டியில் எனது 'ரெங்கநாயகி'யும் களத்தில் நிற்கிறாள். இங்கு நீங்கள் வாசித்த கதையே சின்ன சின்ன மாற்றத்துடன்... 

தெருப்பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அவள் காதுக்கு வரவும் முதலில் ஆடிப் பொயிட்டா. 'ஒரு பொம்பள தனியா போராடிச் செயிச்சா ஏன் ஏத்துக்க மாட்டேங்கிறாங்க... நல்ல நண்பனா ஒரு ஆம்பள ஒதவக் கூடாதா..?. அது ஏன் ஒரு பொம்பளக்கி ஆம்பளயோ ஆம்பளக்கி பொம்பளயோ ஒதவியா இருந்தா தப்பாப் பாக்கச் சொல்லுது... இந்தச் சமுதாயத்துல பொரயோடிப்போன நெனப்புல இதுவும் ஒண்ணுதானே... இதுல நாமளும் மாட்டி ஒரு நல்லவனுக்கும் கெட்ட பேர வாங்கி கொடுத்துட்டோமே' என்று நினைத்த போது அவளுக்கு வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது.

'என்ன ரெங்கநாயகி எதோ யோசனயில இருக்கே போல...' என்றபடி எதிரில் வந்து அமர்ந்தான் நடராசு.

'வா ராசு... மனசு சரியில்ல... அதான்...' கலங்கிய கண் தெரியக் கூடாது என்பதற்காக குனிந்து கொண்டாள்.


'என்ன நம்மள எணச்சுப் பேசுறத கேட்டியாக்கும்' என்று அவன் கேட்டதும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

தொடர்ந்து வாசிக்க....


-'பரிவை' சே.குமார்.

சனி, 6 ஏப்ரல், 2019

அம்புயாதனத்துக் காளி - விமர்சனக் கூட்டம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: Prabu Gangatharan, புன்னகை, உட்புறம்
ம்புயாதனத்துக் காளி புத்தக விமர்சனக் கூட்டம் அமீரக எழுத்தாளர் மற்றும் வாசிப்பாளர் குழுமத்தின் முன்னெடுப்பில் எழுத்தாளர், கவிஞர் பிரபு அவர்களின் 'காளி பேரவை'த் தம்பிகளால் துபை ஸம்மிட் ஹோட்டலில் வெள்ளியன்று நடைபெற்றது.

அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழும விழாக்கள் எப்போதும் சோடை போவதில்லை... சொற்போர்களுக்குப் பஞ்சமிருப்பதில்லை... அதெல்லாம் இல்லாமல் காளிக்கு புகழாரமே அதிகம் சாத்தப்பட்டதால் சாத்தி வைக்கப்பட்டிருந்த மூங்கில் கம்புகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. எதிர்க் கருத்துக்கள் அதிகம் வைக்கப்படாதது எழுத்துக்குக் கிடைத்த வெற்றியே என்றாலும் அவ்விதமான கருத்துக்கள் இல்லாத மூன்று மணி நேரக்கூட்டம்  கொஞ்சம் அயற்சியாகவே இருந்தது. இந்தக் குறை அடுத்து வரும் மணல் பூத்த காடு, பழி போன்றவற்றில் சரி செய்யப்படும் என்பதாய் எடுத்துக் கொள்ளலாம்.

ஆசீப் அண்ணனின் குரலுக்கு ஒரு தனி அழகும் அமர்ந்திருப்பவரை வசீகரிக்கும் தன்மையும் உணடு. அது எல்லாக் கூட்டத்திலும் தொடரும் பாங்கு... இதிலும் அப்படியே... கோட்டெல்லாம் போட்டு வருவார் என்று எதிர் பார்த்தால்...  காளி கவிதைகள் என்பதாலோ என்னவோ... டீ சர்ட்டில் கலக்கலாய்...

ஆசிப் அண்ணன் விழாவினை எப்போதும் போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன்  தொடங்க, ஆசிரியை சோபியா வரவேற்ப்புரைக்காக வந்து பிரபுவை ஆபாசக் கவிஞனே என்றார்.  அம்புயாதனத்துக் காளியை ரொம்ப நேரமாகத் தேடி, சரியாகப் பிடித்துக் கொண்டார். அவருக்குப் பின்னே காளி குறித்தான தங்கள் விமர்சனப் பார்வையை ஒவ்வொருவராய் முன்வைத்தார்கள்.

எப்பவும் போல் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சசிக்குமார்  அடித்து ஆடினார்.  நிறைவான பேச்சாய் அமைந்தது. எல்லாக் கூட்டங்களிலும் நானே துவக்க ஆட்டக்காரன் என்பதால் என்னால் பின்னால் பேசுபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து அதை வைத்து அடித்தோ அல்லது தடுத்தோ ஆட முடியாது போகிறது  என்பதை முன் வைத்தார். அடுத்த ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரராக தான் களமிறங்குகிறேன் என நெருடா முன் வந்திருப்பதில் அவருக்கு மகிழ்ச்சியே.

பால்கரசு பேசும் போது இது வாழ்வியலோடு தொடர்புடையது என்றும் காளி கவிதைகளில் இருக்கும் நொச்சி,மஞ்சணத்தி, வேப்பம் பழம் என எல்லாவற்றையும் பற்றிச் சிலாகித்தார். ஓரிதழ்பூவில் அடித்து ஆடிய இவர், இங்கும் அடித்து ஆடுவார் என்ற நம்பிக்கையில் இரண்டாவதாக களமிறக்கி விடப்பட, இவரின் மிகச்சிறந்த தடுப்பாட்டத்தால் அண்ணாச்சிக்கு ஏமாற்றமே. மூக்கில் கம்புகளுக்கு வேலையில்லாது போனதே என்ற தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.

கனவுப்பிரியன் (யூசுப்)   பேச ஆரம்பிக்கும் போதே பந்த் அன்னைக்கு பஸ் ஸ்டாண்ட் போயி பார்த்திருக்கீங்களா... என ஆரம்பித்து, காளியின் அட்டைப் படத்தில் இருந்தே கொண்டாட வேண்டும் என்று சொல்லி ஒரு அழகிய கதையை காளி கவிதைகளுடன் சொல்ல ஆரம்பித்து பிரபுவை ஒருமையில் விளித்து பின்னர் மாகவியை அப்படி விளித்தல் அழகல்ல என்பதால் கவிஞர் எனப்பேசி வாழ்த்தி அமர்ந்தார்.

ஜெசிலா பேசும்போது சின்னப் புத்தகமாய் இருந்ததால் வாசிக்க எளிதாய் இருந்தது என்றும் தனக்கு கவிதைகள் பிடித்திருந்தது என்றும் பிரபு தன் பார்வையில் காளி குறித்து எழுதியதைப் போல் காளியின் பார்வையில் இருந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

'கரும்புனல்' சுரேஷ் தனக்கு இந்த கவிதை வடிவமும் கவிதையும் பிடிக்கவில்லை என்பதை ஆணித்தரமாக முன் வைத்தார். காளி கவிதைகளை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தன் கருத்துக்களை முன் வைத்து வெளிப்படையாகப் பேசினார். அதற்காக டீ சர்ட்டைக் கூட தேர்வு செய்து போட்டு வந்திருந்தார்.

நெருடா காளி கவிதைகள் குறித்து அதிகம் பேசாமல், எழுத்தாளனின் வேலை எழுதியதும் முடிந்து விட்டது. அதன் பின் விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் வைக்கும் உரிமை வாசகனுக்கு இருக்கு... அதை இப்படி எழுதாதே... அப்படி எழுதாதே... பதிவைத் தூக்கு... என்று சொல்லும் உரிமை எழுத்தாளனுக்கு இல்லை... வாசகன் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறான்... அவனுக்குத் தோன்றுவதை எழுதுவான் என்று பேசியதுடன் பிரபுவுக்கான தளம் சிறுகதையே என்பதால் அடுத்த புத்தகம் சிறுகதை நூலாக வரவேண்டும் என்றார்.

அவரின் பேச்சுக்குப் பின்னே ஆசிப் அண்ணன் நாற்காலிகள் நொறுக்குமா என்ற ஆவலுடன் தூபம் போட்டுப் பார்த்தார். யூசுப், அய்யனார், தேவா என விவாதத்தில் குதித்த போது விமர்சனத்துக்கும் ஒரு அழகியல் இருக்கு... அது குறித்து தனியாகப் பேசுவோம்... என முடித்துக் கொள்ள இப்போதும் மூங்கில் கம்புகள் முனை முறியாமல் காத்திருக்கும்படி ஆகிவிட்டது. என்ன கொடுமை காளி இது என அண்ணாச்சி விழாவைத் தொடர ஆரம்பித்தார்.

பின் வந்தவர்களில் திவ்யா காளியைப் படிக்கவில்லை என்று சொல்லி, பேசச் சொன்னதால் ஒரு சில கவிதைகளை இப்போதுதான் வாசித்தேன் என்றதுடன் ஒட்டக மனிதர்கள் குறித்தும் யூமாவாசுகிக்கு அனுப்பி வைத்ததையும் பற்றிப் பேசினார். ஒட்டக மனிதர்களுக்கு நாங்கள் மார்க்கெட்டிங் ஆட்கள் யாரையும் வைக்கவில்லை என்றாலும் யூமாவாசுகி வரை போய் இருக்கிறது என்பதே அதற்கான வெற்றிதான் என அண்ணாச்சி சொன்னார்.

தெரிசை சிவா காளி எப்படி உருவானாள் என்பதையும் தனக்கு அமீரகத்தில் முதல் விமர்சன மேடை என்றும் இந்த அட்டைப்படம் உன்னோட அடுத்த புத்தகத்துக்கானது என்றும் பேசினார்.  கௌசர் பேசும் போது காளியில் இருக்கும் அழகான, ஆழமான வார்த்தைகள் குறித்துப் பேசியதுடன் சாணி மிதிக்கும் போது கால் கொலுசின் முத்துக்கள் நட்சத்திரமாய் மின்னிதாய் எழுதியிருப்பதைச் சிலாகித்தார்.  

'காளி... தக்காளி' என ஆரம்பித்து இந்தப் புத்தகத்தை எங்கே என் தம்பி எடுத்துப் படித்துவிடுவானோ என்று மறைத்து வைத்தும் அவன் எடுத்து முதல் கவிதையை வாசித்து விட்டு ஒன்னும் புரியலை என்று சொல்லி வைத்து விட்டதாகச் சொன்னார் முஹம்மது பாட்சா.

சான்யோ பேசும் போது காளியைப் புகழ்ந்தாலும் என் 21 வயது அக்கா மகள் எடுத்துப் படித்து விட்டு இதற்கென்ன விளக்கம்... அதற்கென்ன விளக்கம் என்று கேட்டு விடுவாளோ என்று பயந்து என் வீட்டு லைப்ரரியில் வைக்கவில்லை என்றார். கவிமதி பேசும் போது பால்கரசு சொன்னது போல் அந்த வாசனை, பூக்கள், காய்களை வியந்தார். காளியை ரொம்பவே புகழவும் செய்தார். 

பாலாஜி எப்பவும் மதுரை மண்ணின் மனத்துடன் பேசி பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பார். அவர் பேச அழைக்கப்பட்டபோது ஆஹா சரவெடி காத்திருக்கு என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே என்றாலும் மதுரமாகத்தான் பேசினார்.

காளி புத்தகம் உருவாகக் காரணமாக பலர் இருந்தாலும் சாரு அமீரகம் வந்திருந்த போது அவருடன் தங்கிய இரவில் வாசித்துக் காட்டிய பிரபுவின் கவிதைகளை மீண்டும் அதிகாலையில் வாசிக்கச் சொல்லிக் கேட்டு இதை உடனே புத்தகமாக்க வேண்டும் என்று சொன்னதாய்ச் சொல்லி, அய்யனார் எழுதிய அணிந்துரையை வாசித்து, இதை ஆன்மீகக் கவிதை நூல் என்றும் சொல்லிச் சென்றார் தேவா.

அய்யனாரோ பாருங்க பக்கத்துல எப்படி பிறந்தநாள் விழாக் கொண்டாடுறாங்க... நாம இப்படிக் கொண்டாடுறோமா... தமிழ் கலாச்சாரம்ன்னு அதுக்குள்ளயே நிற்கிறோம் என்றார், காளி குறித்துப் பேசுவார் என்று பார்த்தால் அதான் அணிந்துரையிலேயே எல்லாம் சொல்லிட்டேனே இன்னும் சொல்ல என்ன இருக்கு என்பதாய் சிறு புகழாரத்துடன் முடித்துக் கொண்டார்.

பிரபு அண்ணனின் எழுத்து அருமை என்று சொல்லிய சுடர்விழி, இக்கவிதைகள் குறித்து தன் கணவனிடம் கூட விவாதிக்க எனக்குச் சங்கோஜமாக இருந்தது என்று சொன்னார். என்னதான் பெண்ணீயம், பெண்ணுரிமை பேசினாலும் கட்டுப்பெட்டித்தனம் என்று சொல்லப்படும் வட்டத்தை விட்டு என்னால் வெளிவர முடியவில்லை... அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறேன். என் பிள்ளைகளையும் அப்படித்தான் வளர்த்து வருகிறேன் என்றார்.

இவரின் பேச்சால் ஆஹா மூங்கில் கம்புக்கு வேலை வந்தாச்சுடா என மகிழ்ந்த அண்ணாச்சி, கம்பை எடுத்து நீட்ட, பிரபு அண்ணவோட எழுத்தை நான் குற்றம் சொல்லவில்லை... நடைமுறையைச் சொல்கிறேன் என அவர் ஜாகா வாங்கிவிட, கம்புக்கு வேலையில்லாது போச்சே என அண்ணாச்சியும் என்னைப் போல் பார்வையாளர்கள் சிலரும் வருத்தப்பட்டோம் என்பதே உண்மை.

காளி என்பவள் இப்போது உயிருடன் இருந்து இதை வாசிக்க நேரும் போது எனது உடலை இப்படி வர்ணித்திருக்கிறாரே... நியாயமா எனக் கேட்டால் உங்கள் பதில் என்னவாய் இருக்கும் என்ற கேள்வியையும் முன்வைத்தார் சுடர்விழி.

ஆசிப் அண்ணன் பேசும் போது குறுந்தொகையை மேற்கோள் காட்டி, சில வார்த்தைகளை விட்டுவிட்டு நம்மவர்கள் உரையெழுதியிருப்பதைச் சொல்லியதுடன் காமத்தை எழுதுவதில் பலருக்கு இருக்கும் தயக்கதை அய்யனாரும் பிரபுவும் உடைத்து எழுதி வருவது பாராட்டுக்குரியது என்றார். அத்துடன் பழியையும் காளியையும் கொண்டாட வேண்டும் என்றார்.

பிரபுவின் ஏற்புரையின் போது எல்லாருக்கும் நன்றி சொன்னதும் எல்லாரும் பேசிட்டீங்க... இதுக்கு மேல நான் என்ன பேச என்றவர், சுடர்விழியின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்பதே உண்மை என்றார். 

சுடர்விழியின் பேச்சு சிலருக்கு நாங்களெல்லாம் அப்படியில்லை என்பதாய்த் தோன்றியிருக்கலாம். கிராமத்துக் கட்டுப்பெட்டி நீங்கள் மட்டுமே என்றும் நினைத்திருக்கலாம். அப்படி நினைப்பவர்கள் 21 வயதுப் பெண் படித்து விடுவாளோ என்ற அச்சத்திலிருந்தும் தம்பி வாசித்து விடுவானோ என்ற எண்ணத்திலிருந்தும் வெளிவந்து விட்டேன் என்றும்... என் குழந்தைகளை எல்லாம் வட்டத்துக்குள் வைக்கவில்லை... என் வீட்டில் காளி எல்லாராலும் வாசிக்கப்படுகிறது என்றும் ஒத்துக் கொள்வார்களேயானால் இதைக்கூட ஒரு விவாதப் பொருளாக்கலாம்.

எந்த ஒரு நிகழ்வு என்றாலும் சுபான் அண்ணாச்சியின் போட்டோ இல்லாமல் நிறைவடையாது. என்னையெல்லாம் எடுக்க மாட்டீங்களே என்று சண்டை போடுவேன் என்பதாலேயே நேற்று நிறைய போட்டோக்கள் எடுத்திருக்கிறார். காலையில் எழுந்து பார்த்தால் எல்லாருடைய முகநூல் போட்டோவும் மைக்கோடதான் இருக்கு. எல்லாப் படங்களும் அருமை. அவரின் உழைப்புத்தான் விழாவைச் சிறப்பாக்குகிறது. ஒரு மேடையிலேனும் கண்டிப்பாக இவர் பாராட்டப்பட வேண்டும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 10 பேர், Jazeela Banu, Sudarvizhi Sethupathi Raja, Sanyo Daphne Pallikar, Dheva Subbiah, Prabu Gangatharan மற்றும் Nowsath Khan உட்பட, புன்னகைப்பவர்கள், கூட்டம், திருமணம் மற்றும் உட்புறம்

விழா நிகழ்விடத்தின் அருகில் நடந்த பிலிப்பைனிகளின் பிறந்தநாள் கொண்டாட்டமும் கைதட்டலும் காளி குறித்துப் பேசியவர்களுக்கு உற்சாகம் அளிப்பதாய் இருந்தது என்பதையும் சொல்ல வேண்டும்.

இன்னும் பலர் பேசியிருக்கலாம்... சிலரின் பேரும் தெரியவில்லை... புகழாரமே அரங்கை நிறைத்ததால் பாலுமகேந்திராவின் வீடு படம் பார்ப்பதைப் போல விறுவிறுப்பு இல்லாமல் இருந்ததால் பின்னால் போய் அமர்ந்துவிட்டேன்... பலரின் பேச்சை சரியாகக் கேட்கவும் இல்லை என்பதே உண்மை.

பிரபுவின்  காளி பாசறைத் தம்பிகள் ஏற்பாட்டில் இரவு உணவு சிறப்பு.... 

காளி புத்தகத்துக்கு அட்டைப்படம் வரைந்த கார்த்திகேயனை பலர் சிலாகித்துப் பாராட்டினர்.

முனைவர் நௌஷாத் காரில் வரும் போது கவிதைகளைக் குறித்துக் கொண்டதைப் பார்த்து விரிவாய்ப் பேசுவார் என்று நினைத்தால் பிரபுவுடன் தனியாகப் பேசிவிட்டதாகவும் இனி எழுத்தில் பேசுவேன் என்று சொன்னதும், அசோக் மற்றும் மகி போன்ற ஆளுமைகள் பேசாததும் வருத்தமே.

அடே யப்பா நாலஞ்சி வாட்டி கை கொடுத்துட்டேன்டா... கெளம்புங்கடா என பாலாஜி விரட்ட, நாங்கள் அபுதாபி நோக்கி புறப்பட்டோம்.

விழா சிறப்பாக முடிவடைந்தது. 

காளிக்கு கொண்டாட்டமாய் அமைந்தது. 

சமீபத்திய எழுத்துக்கள் மன வருத்தத்தைக் கொடுக்கும்படி அமைந்து விட்டதால் எழுதுவதில்லை என்றிருந்த என்னை ஏன் எழுதலை... எப்ப எழுதுவே என்ற பிரபுவின் கேள்வியே இப்போது எழுத வைத்தது. என் கவிதையை ஏன் வீட்டில் எல்லார் பார்வையிலும் படும்படி, எல்லாரும் படிக்கும்படி வைக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள் என்ற அவரின் கேள்வியும் என்னை இப்போதும் சுற்றிக் கொண்டேயிருக்கிறது.

-'பரிவை' சே.குமார்.