மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 24 ஆகஸ்ட், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள்-10

முந்தைய பதிவுகளைப் படிக்க...

                                                 பகுதி-1        பகுதி-2        பகுதி-3       
                                               
                                                 பகுதி-4        
பகுதி-5        பகுதி-6      



***********************
10. நெஞ்சுக்குள் காதல் விதை

முன்கதைச் சுருக்கம்.

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் கிராமத்து ஏழை மாணவன் ராம்கி கல்லூரியில் சேர்கிறான். அங்கு மாணவி புவனாவின் அறிமுகம் கிடைக்கிறது. நண்பர்கள் காதல் என்று ஏற்றிவிடுகிறார்கள். அவள் கல்லூரி ரவுடி வைரவன் தங்கை என்று தெரிய வருகிறது. இதற்கிடையே ராம்கியின் அக்காவுக்கு பிடிக்காத மாமா மகன் ரவுடி முத்துராசுக்கு அவளைக் கட்டி வைக்க அம்மா முடிவு செய்கிறாள். புவனா அவனை அடிக்கடி எதேச்சையாக சந்திக்கிறாள். ஆனந்தவிகடனில் புவனாவின் கவிதை வந்திருப்பதால் அதை வாங்கி அவளது பெயரில்லாததால் அவளிடம் கோப்ம் கொள்கிறான். அவள் புனைப்பெயரில் எழுதுவதாக சொல்லிச் செல்ல, அவனருகில் புவனாவின் அண்ணனும் கல்லூரி ரவுடியுமான வைரவன் வந்து வண்டியை நிறுத்துகிறான். 

வைரவனைப் பார்த்து மிடறு விழுங்கினான் ராம்கி.

"என்னடா ராம்கி... படிப்பெல்லாம் எப்படிப் போகுது?"

"நல்லாப் போகுதுண்ணே... ரொம்ப நாளா உங்களைப் பார்க்கவே முடியல..."

"நான் இங்கதான் இருக்கேன் எங்க போறேன்... நீ படிப்பாளி... பொண்ணுங்க எல்லாம் உன்னோட பேச காத்திருக்கும் போது நா எங்க உன் கண்ணுக்குத் தெரியப் போறேன்..."

"அதெல்லாம் இல்லண்ணே... எங்க கிளாஸ் பொண்ணுங்ககிட்டக்கூட பேச மாட்டேன்... என்னைப் போயி..."

"எல்லாந் தெரியுண்டா... பர்ஸ்ட் இயர்ல ஒரு பொண்ணு... அது பேரு கூட... ரமணா... சேச்சே... புவனாவாமே... அடிக்கடி பேசுறியாம்... பசங்க சொன்னாங்க..."

"அண்ணே... அதெல்லாம் இல்ல... காரைக்குடியில கட்டுரைப் போட்டி இருக்குன்னு தமிழய்யா சொன்னதால ரெண்டு பேரும் பேச நேர்ந்தது... அம்புட்டுத்தான் மத்தபடி அவங்ககிட்ட பேசுறதுக்கு நான் காரணமெல்லாம் தேடிப் போகல... அது போக அவங்க உங்க தங்கச்சிங்கிறதும் எனக்குத் தெரியும்...." பேச்சை நிறுத்தினான்.

"ஹா...ஹா... அதெல்லாம் தெரியுமா..." என்றபடி தோளில் கைபோட்டு "இங்க பாரு ராம்கி அவளைப் பற்றி எனக்குத் தெரியும் எல்லார்க்கிட்டயும் சோசியலாப் பழகுவா... ஆனா நெருப்பு... எங்க ஜாதிப் பொண்ணுங்களுக்கே இருக்க தைரியம் அதிகம்... அதனால அவளைச் சந்தேகப்படலை... அதே மாதிரி நீயும் கஷ்டப்படுற குடும்பத்துல இருந்து வந்திருக்கேன்னு தெரியும்... எதோ உன்மேல எனக்கு தனியா பிரியம் இருக்கு... உன்னப் பத்தியும் தெரியும். இருந்தாலும் அடிக்கடி ரெண்டு பேரும் பேசினா கதை கட்டிவிட நிறையப் பேரு இருப்பாங்க... எந்தங்கச்சி என்னதான் போல்டானவளா இருந்தாலும் அவளும் பொண்ணுதானே நாளைக்கு அவ படிப்பு பாதிக்கப்படக்கூடாது... என்ன சொல்றது புரியுதா... பிரண்ட்லியா பேசுங்க.... எங்க வீட்ல வந்து பேசிக்கிட்டு இரு... வெளியிடங்கல்லயும் காலேசுலயும் பேசுறதை குறைச்சுக்க... நாளைக்கு எதாவது சிக்கல் வந்துச்சின்னா நாந்தான் உங்கிட்ட பேசுற மாதிரி இருக்கும்... இனி நீங்க ரெண்டு பேரும் காலேசுக்குள்ள ஐயாவோட இருக்கும் போது பேசுறது தவிர மத்த நேரம் அந்த மரத்தடிக்கிட்ட நின்னு பேசினாங்க... இந்த மரத்தடிக்கிட்ட நின்னு பேசினாங்கன்னு எந்தச் செய்தியும் என் காதுக்கு வரக்கூடாது... அவகிட்டயும் சொல்லிடுறேன்... சரியா..."

"சரிண்ணே... ஐயா கூப்பிடச் சொல்லி அவங்க வந்து சொன்னதாலதான் அவங்களோட பேச வாய்ப்பு வந்திச்சு... இனி அவங்களுக்கும் எனக்கும் பேசுறதுக்கு என்ன இருக்கு... நீங்க சொல்றது உண்மைதான்னே படிக்கணுமின்னு கனவோட வந்த எங்களுக்கு படிப்பைத் தவிர வேற எதுலயும் கவனம் போகாதுண்ணே... நீங்க நம்பலாம்... " என்றான்.

"எனக்கு உன்னைப் பற்றி தெரியும்... ஆனா வயசு அப்படி... பாத்துக்க... சரி வரவா?" என்றபடி வைரவன் சிகரெட்டை பற்ற வைத்தபடி கிளம்ப, ராம்கியின் இதயம் நெருப்புப் பற்றிக் கொண்டது.

****

"மாமா எப்ப வந்தீங்க?"
 
"வா ராமு... இப்போத்தான் வந்தேன்...பக்கத்து ஊருக்கு கேதத்துக்கு வந்தேன்... அப்படியே பாத்துட்டுப் போயிடலாம்ன்னு வந்தேன்... காலேசெல்லாம் எப்படியிருக்கு.... நல்லாப் படிக்கிறியா...?"

"நல்லா படிக்கிறேன் மாமா... முத்து மச்சான் எப்படியிருக்கார்..?"

"ம்... இருக்கான்... அவனுக்கென்ன ஊர் மேயுறதுதானே வேல..."

"ம்... அக்கா... அம்மால்லாம் இல்லையா...?"

"அம்மா மாட்டைப் பாக்கப் போயிருக்காம்... சீதா தண்ணி தூக்கப் போயிருக்கு..."

"அப்புறம் மாமா... அம்மா அன்னைக்கு ஒரு சேதி சொன்னாங்க..." 

"என்னது...!?"

"சீதாவை முத்து மச்சானுக்கு..." மெதுவாக இழுத்தான்.

"ஆமா ரெண்டு பேருந்தான் பேசி முடிவு பண்ணினோம்... அவனுக்கும் ஒரு கால்கட்டைப் போட்டுட்டா திருந்திருவான்னு பட்டமங்களம் சோசியர் சொன்னாரு... சரி நம்ம புள்ளயவே கட்டி வச்சிட்டா நல்லதுன்னு பாத்தேன்..."

"ம்..."

"ஏம்ப்பா... சீதாவுக்கு விருப்பமில்லையா...?"

"அதெல்லாம் இல்ல மாமா... அம்மா சொன்னாங்க அதான் கேட்டேன்..."

"ம்... ஊரு மேயுறாந்தான்... தெரியுது.... நம்ம சாதிசனத்துல யாரும் பொண்ணு கொடுக்கமாட்டான் அதான் நம்ம புள்ளயின்னா எல்லாத்தையும் பொறுத்துப் போகுமில்ல..."

"..." ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்த ராம்கி மனசுக்குள் 'ஒரு பொறுக்கிக்கு உங்க பிள்ளையை கட்டுவீங்களா?' என்ற கேள்வி எழ. 'சீதா வாழ்க்கை போன பரவாயில்லையா மாமா' என்று கேட்க நினைத்து மாமாவைப் பார்த்தபோது

"வாண்ணே... எப்பவந்தே...உள்ள உக்காரச் சொல்லலையா... எங்க போனா அவ..." வாயெல்லாம் பல்லாக சுப்பிக்கட்டை தூக்கிக் கொண்டு வந்தாள் நாகம்மா.

"எதுக்கு சத்தம் போடுறே... சொக்கு செத்துப் பொயிட்டானுல்ல அதை கேக்க வந்தேன். சரி வந்ததுதான் வந்தோமே அப்படியே உங்களையும் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன். கேதகார வீட்டுக்குப் பொயிட்டு வந்ததால உள்ள போகலை... சீதா காபி கொடுத்துட்டு அம்மா வந்துருவாங்க... நாம்போயி நல்ல தண்ணி எடுத்துக்கிட்டு வாறேன்னு சொல்லிட்டுப் போச்சு..."

"சரி அடி பைப்புல ரெண்டு வாளி அடிச்சு ஊத்திக்கிட்டு வாங்க... டேய் மாமாவ கூட்டிக்கிட்டுப் போடா... அதுக்குள்ள நான் எதாவது செஞ்சுடுறேன்... இவுகளும் ஊரு சுத்திட்டு இப்பத்தான் வாறாக..."

"இல்லத்தா.... எனக்கு வேல கெடக்குது... இருந்து சாப்பிட்டுக்கிட்டு எல்லாம் இருக்க முடியாது. என்னப்பா ஊரு சுத்துறியா... படிப்புல கவனமிருக்கட்டும்..."

"அதெல்லாம் இல்ல மாமா... அடுத்த வாரம் ஒரு போட்டி இருக்கு அதுக்கு தயார்ப் பண்ண தமிழய்யா வீட்டுக்குப் பொயிட்டு வந்தேன்..."

"அதானே... உன்னைய குறை சொல்ல முடியுமா?... ஆத்தா அவன அவம்போக்குல விடு... அதெல்லாம் படிச்சிருவான்"

"ம்... இவர நம்பித்தான் இருக்கோம்... பெரியாளா ஆயி எல்லாருக்கும் ஒதவியா இருப்பாங்கிற கனவோட..."

கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு 'பெரியமாப்பிள்ளை பொங்கலுக்கு வருமில்ல... அப்ப எல்லாம் பேசிக்கலாம்ன்னு...' சொல்லிட்டு கிளம்ப, ராம்கி அவருக்குத் தெரியாமல் அம்மாவை கோபமாகப் பார்த்தான்.

மாமா கிளம்பியதும் "என்னம்மா நீ... அவரே மகன ஊரு மேயுறான்னு சொல்றாரு... நீ என்னமோ..."

"ஓ வேலயப்பாரு எனக்கு புத்தி சொல்ல வேண்டாம்..." என்றபடி அடுப்படிக்குள் நுழைந்தாள்.

பின்னாலே வந்த ராம்கி, "சீதா எதுக்கும்மா இந்த வெயில்ல எதுக்குத் தண்ணிக்குப் போனா..."

"ம்.. எல்லாரு வீட்லயும் பயலுகதான் போறாய்ங்க... இங்கதான் நீங்க காலேசுப் படிக்கிறியல்ல... தண்ணி மண்ணியெல்லாம் தூக்க மாட்டிய..."

"அம்மா... நா போறேன்னு சொன்னப்போ போகவேண்டான்னு நீதான் சொன்னே... சரி நாளயில இருந்து நான் பொயிட்டு வாறேன்... அவ போக வேண்டாம்..." என்றபடி கயிற்றுக்கட்டிலில் ஏறிப்படுத்தான்.

"அந்த சேகரு உன்னயத் தேடி வந்தான்... அவனுக்கு என்னவாம்?"

"அம்மா ரெண்டு பேரும் ஒண்ணாத் திரிவோம்...அதான் கேட்டிருப்பான்..."

"அவங்கூட சுத்துறதை குறைச்சுக்க ஆமா... காவேரிக்கும் அவனுக்கும் எதோ இதுவாம்... நாளக்கி எவளாவது உன்னைய இதுமாதிரி சொல்லக்கூடாது ஆமா பாத்துக்க..."

"அய்யோ அம்மா... காவேரி அவனுக்கு சொந்த அத்தை பொண்ணு... நீ உங்க அண்ணன் மகனுக்கு கட்ட நினைக்கிற மாதிரி அவங்கப்பா அவனுக்குத்தான் காவேரியின்னு பேசி வச்சிருக்காரு... அவங்க பேசுறதுல என்ன பிரச்சினை இருக்கு... ஊரு நாலு விதமா பேசத்தான் செய்யும்... நமக்கென்ன... சாப்பாடு ரெடியாயிட்டா போடுங்க... சாப்பிட்டு அவனப் போயி பாத்துட்டு வாறேன்..." என்றவன் கையில் ராஜேஷ் குமாரின் கிரைம் நாவலை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தான்.

****
"எங்கடா போனே... வீட்டுக்கு வந்தா ஆளக்காணோம்..."

"காரைக்குடியில கட்டுரைப் போட்டி இருக்குல்ல...  மொத்தம் அஞ்சு தலைப்பு இருக்கு... எதாவது ஒண்ணு கொடுத்து எழுதச் சொல்லுவாங்களாம்... மரபுக்கவிதை போட்டியும் இருக்காம்... நமக்கு அதெல்லாம் தெரியாது... பேச்சுப் போட்டியின்னா ஓகே... கட்டுரை... எப்படியாவது பிரைஸ் வாங்கணும்டா..."

"ம்... உனக்கு என்னடா... அடிச்சு தூள் கிளப்பிடுவே..."

"ஆமா... நீயும் காவேரியும் எனக்குத் தெரியாம எங்கடா பழகுனீங்க... அம்மா சொல்லுது?"

"அடப்பாவி... இது வேறயா... அவளும் நானும் கீரியும் பூனையுமா இருக்குறது உனக்குத்தான் தெரியுமே... ரெண்டு நாள் முன்னாடி ஸ்கூல் முடிஞ்சு வாறப்போ அவ சைக்கிள் பஞ்சராயிடுச்சாம்... கடைக்கிட்ட நின்னா... மழ வேற லேசாத் தூறிச்சு... சரி பாத்து வைக்கட்டும் நாளக்கி வந்து எடுத்துக்கலாம்ன்னு சொல்லி கூட்டியாந்தேன்... அப்பவே எல்லாப்பயலும் ஒரு மாதிரி பாத்தாய்ங்க... அயித்த மகளக் கூட்டியாந்ததுக்கே இப்படின்னா... மத்தபுள்ளங்களை கூட்டியாந்திருந்தா இன்னேரம் கலியாணமே பண்ணியிருப்பாய்ங்க... நம்ம ஊருக்குள்ள எல்லாம் வேற சாதிப் பொண்ண காதலிக்கிறோம்ன்னு தெரிஞ்சாலே செங்கக்காலவாயில தூக்கிப் போட்டு எரிச்சிடுவாய்ங்கடா..."

"ஆமாடா... படிச்சமா... ஒரு வேலக்கிப் போனமான்னு இருக்கணும்..."

"எனக்கு இந்த காதல் கீதல் எல்லாம் நம்பிக்கை இல்லை... என்ன காவேரியை வேண்டான்னு சொல்ற அன்னைக்குத்தான் இருக்கு... பெரிய பூகம்பமே வெடிக்கும்..."

"அவளுக்கு என்னடா... ஏன் வேண்டாங்கிறே...?"

"பாக்கலாம்... அவதான்னு விதியிருந்தா மாறவா போகுது... சரி அதை அப்போதைக்கு பாப்போம்... ஆமா சீதாவை முத்துக்கு கட்டப்போறேன்னு அயித்தை அப்பாகிட்ட சொன்னுச்சாம்... அதுக்கு என்ன கிறுக்காடா புடிச்சிருக்கு...."

"ஆமாடா... ரெண்டு நாளா சீதா அழுவுறா... இது பிடிவாதமா நிக்கிது... எனக்கும் மனசே சரியில்லை... அண்ணன் பொங்கலுக்கு வரயில பேசிக்கலாம்ன்னு பேசாம இருக்கமுடா..."

"ம்... பெரிய மச்சாங்கிட்ட சொல்லி நிப்பாட்டுற வழியைப் பாரு... கிளிய வளர்த்து பூனைக்கிட்ட கொடுக்க அயித்தைக்கு எப்படி மனசு வந்துச்சு..."

"அது அண்ணன் உறவுக்காக பாக்குது... அதுக்காக முத்துக்கு கட்டணுமாடா... சொன்னா எங்கிட்ட சண்டைக்கு வருது..."

"இப்ப நீ எதுவும் பேசாதே... பெரிய மச்சான் வந்ததும் பக்குவமா எடுத்துச் சொல்லி அயித்தைக்கு புரிய வையுங்க... ஆமா வீட்ல உன்னோட புத்தகத்தோட ஆனந்த விகடன் ஒண்ணு பார்த்தேன்... எடுத்து படிச்சேன்... அதுல கவிதைப்பிரியான்னு ஒரு பேரை ஸ்கெட்சுல ரவுண்ட் பண்ணியிருந்துச்சு... யார்டா அது?"

"என்னோட பிரண்ட்டுடா... காரைக்குடி போட்டிக்கு அவங்களும் வாறாங்க... கவிதை நல்லா எழுதுவாங்க... அவங்க கவிதை..."

"அவங்க பேரை நீ எதுக்கு ரவுண்ட் பண்ணுறே... என்னடா காதல் வந்திருச்சா என்ன... வேணான்டா நம்ம கனவுகளை அழிச்சிடும் பார்த்துக்க..."

"ஐயோ... அதெல்லாம் இல்லடா... எங்க காலேசுல படிக்கிறாங்க... எனக்கும் பிரண்ட்...  அவங்க கவிதைங்கிறதால ரவுண்ட் பண்ணினேன்... அம்புட்டுத்தான்..."

"ம்... பிரண்டா... அப்ப கவிதை முழுவதையும் ரவுண்ட் பண்ணியிருக்கனும்... அதென்னா பேரை ரவுண்ட் பண்ணியிருக்கே... சரி பிரண்டா இல்ல லவ்வரான்னு போகப்போகத் தெரியப்போகுது...."

"சும்மா இருடா.. பிரண்டுதான்... லவ்வுமில்ல கிவ்வுமில்ல" என்று மறுத்தவன் மனசுக்குள் கவிதைப்பிரியாவை மாற்றி புவனாராம் என்று எழுதிப் பார்க்க மனசு உயரப் பறக்க ஆரம்பித்தது.

(புதன் கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

கோமதி அரசு சொன்னது…

என்னடா காதல் வந்திருச்சா என்ன... வேணான்டா நம்ம கனவுகளை அழிச்சிடும் பார்த்துக்க..."//

எண்ணம்தான் பொழப்ப கெடுக்குது.

அருமையாக கதையை சொல்லி செல்கிறீர்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கோமதி அம்மா...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.