மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 31 டிசம்பர், 2012

2012.... 2013



கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றில்
நல்லவற்றை எடுத்துக் கொண்டும்...
கெட்டவற்றை விரட்டி விட்டும்
புத்தாண்டுக்குள் அடியெடுத்து வைப்போம்....

இயற்கையின் வழியான அழிவுகளை
தடுக்க நம்மால் இயலாது...
இயன்றவரை நல்லதே நினைப்போம்...
நல்லதே செய்வோம்...

தில்லி சகோதரிக்கு நிகழ்ந்த
கொடுமைக்காக வெட்கப்படுவோம்...
வேதனையோடு இனி இதுபோல்
நடக்கவிட மாட்டோம் என
சபதம் செய்வோம்...

அரக்க குணத்தையும்
அராஜக செயல்களையும்
அடியோடு ஒழிப்போம்...
நம் சத்தியம் காப்போம்...

சாதி மத சண்டைகள்...
தண்ணீர் பிரச்சினைகள்...
பாலியல் வன்முறைகள்...
அரசியல் அக்கிரமங்கள்

அனைத்தும் ஒழித்து
அமைதியான வாழ்வை
எல்லோருக்கும் கொடுக்கட்டும்...
பிறக்கும் புத்தாண்டு 2013....


போய் வா இரண்டாயிரத்துப் பனிரெண்டே...
வருக வருக இரண்டாயிரத்துப் பதிமூன்றே...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...



கீழே இருக்கும் லிங்க் நண்பர் ஸ்டார்ஜன் அவர்கள் அனுப்பியது. இதை கிளிக்கி நீங்களும் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்...



புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
'பரிவை' சே.குமார்

திங்கள், 24 டிசம்பர், 2012

சச்சின் என்னும் சகாப்தம்..!


கிரிக்கெட் என்றால் நினைவில் வரும் பெயர் சச்சின்... சச்சின் மட்டுமே.... இந்தியாவில் மட்டுமல்ல.... உலக அளவில் கிரிக்கெட் அறிந்தவர்கள் உச்சரிக்கும் பெயர் சச்சின்.

கிரிக்கெட்டில் எத்தனை எத்தனையோ வீரர்கள் உலகெங்கும் இருந்தாலும் எல்லாரும் விரும்பும் வீர்ராக, களத்தில் சிங்கமாக திகழ்ந்த வீரர் சச்சின். எப்படிப்பட்ட வீரர் பந்து போட்டாலும் விளாசக் கூடிய திறமை படைத்தவர் சச்சின். 

படிக்கும் காலத்தில் சச்சினின் தீவிர ரசிகனாக இருந்தவன் நான். இன்றும் சச்சின் ஆட்டம் என்றால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பார்க்கக் கூடியவன்தான். எந்தப் பத்திரிக்கையில் சச்சின் போட்டோ வந்தாலும் அதை எடுத்து வைக்கும் அளவுக்கு சச்சின் பைத்தியம் பிடித்தவர்களில் நானும் ஒருவன்.

சாதனைகளுக்காகவே பிறந்தவன் சச்சின்... கிரிக்கெட்டில் அவர் படைத்திருகும் சாதனைகள்தான் எத்தனை... எத்தனை...  அத்தனையும் எட்ட முடியாத சாதனைகள்தான்... அவரது சாதனைகளை தகர்க்க இன்னுமொரு சச்சின் பிறந்து வரவேண்டும் என்பதே உண்மை.

ஆடுகளத்தில் அவர் நின்றால் எதிர் அணிக்கு கிலி பிடித்துக் கொள்ளும் என்பதே உண்மை. சச்சினிடம் பிடித்த இன்னொரு விஷயம் அவரை அவுட் ஆக்கிவிட்டு அவருக்கு முன் கத்திக் கொண்டு ஓடினாலோ குதித்து அவரை பார்த்து கிண்டல் பண்ணினாலோ மைதானத்துக்குள் அவர் எதுவும் பேசமாட்டார். ஆனால் அடுத்த போட்டியில் அவரை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்.

ஜிம்பாப்வேயின் ஒலாங்கோ சில போட்டிகளில் சச்சினை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கிவிட்டு ஆட்டம் போட ஆரம்பித்தார். ஒலங்கா என்றாலே சச்சினுக்கு உதறல் எடுக்கும் என்ற விமர்சனமெல்லாம் வர ஆரம்பித்தது. ஒரு போட்டியில் பந்து வீச வந்த ஒலங்கோவின் பந்து ஆறுக்கும் நாலுக்கும் இடையில் மாட்டி சின்னாபின்னமாகியது. நான்கு ஓவர் போட்டவர் சச்சின் அவுட்டான பின்னர்தான் வந்தார். 

ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வார்னேயின் பந்தை சச்சின் விளாசியதை வார்னே இன்னும் மறக்கவில்லை. இலங்கையின் முரளிதரன் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம் ஆனால் சச்சின் அவருக்கு சிம்ம சொப்பனம்.

தான் அவுட் என்று தெரிந்தால் நடுவர் சொல்லும் முன்னரே வெளியேறும் சொற்ப வீரர்களில் சச்சினும் ஒருவர். ரன் குவிப்பில் சச்சினுக்கு நிகர் சச்சினே... 

ஜாம்பவான் சச்சின் சாதனைகள் பல புரிந்த போது தூக்கி வைத்து கொண்டாடிய பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் அவர் சில போட்டிகளில் விளையாடாத போது விமர்சிக்க ஆரம்பித்தனர். நேற்று கூட ஒரு தமிழ் பத்திரிக்கையில் வழியாக ஓய்வை அறிவித்தார் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. என்ன கொடுமை பாருங்கள். எத்தனை கேவலமான செய்திகள், கமெண்டுகள்... இவ்வளவுக்கும் சாதனை நாயகன் சச்சின் எந்த கருத்தும் சொல்லவில்லை. மௌனத்தையே பதிலாக அளித்தார். 

அவரின் இந்த முடிவு அவரது சொந்த முடிவாக இருந்தாலும் கேலிகளும் கிண்டல்களும்தான் ஒரு மாவீரனை இப்படி ஒரு முடிவெடுக்க வைத்துள்ளது என்பதே உண்மை. இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எப்படிப்பட்டவரும் கடைசியில் அசிங்கப்பட்டு கேவலப்பட்டுத்தான் வெளியே போவார்கள். இதற்கு உதாரணங்களாக கங்குலி, திராவிட், லெட்சுமணன்  என அடுக்கிக் கொண்டே போகலாம். அசிங்கங்கள் அரங்கேற பிள்ளையார் சுழி போடப்பட்ட போதே சச்சின் அசிங்கப்பட்டு போகக்கூடாது என்று கடவுளை வேண்டிய கோடானுகோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.

சச்சினின் ஓய்வுக்குப் பிறகு அவர் 50வது சதத்தை பூர்த்தி செய்திருக்கலாம். இப்போது ஓய்வு எடுத்திருக்க வேண்டாம் என்று ஆளாளுக்குப் பேசுகிறார்கள். முன்பு வெளியேறு என்று சொன்ன நாக்கு இன்று ஏன் வெளியேறினாய் என்கிறது. ஆமாம் நரம்பில்லாத நாக்குத்தானே எப்படியும் பேசும். திடீரென ஓய்வை அறிவித்து எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் சிங்கம் சிங்கம்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் சச்சின்.

சச்சின் இல்லாத இந்திய அணியில் இனி என்ன ஆகும் என்பதை பாகிஸ்தானுடனான ஒருதினப் போட்டியில் தெரிந்துவிடும். சச்சின் இல்லாதது உலக அணிகளுக்கு கொஞ்சம் அல்ல அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க சச்சின் விலகியிருக்கிறார். தொடர்ந்து சொதப்பும் சிலர் இன்னும் அணிக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சச்சினுக்குப் பிறகு தோனியில் தலையும் உருள ஆரம்பித்திருக்கிறது. நடப்பவைகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

சச்சின் கிரிக்கெட் என்னும் மதத்தின் கடவுள்... அவர் ஓய்வு அறிவித்தாலும் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காமல்தான் இருப்பார் என்பது எல்லாரும் அறிந்ததே....

சச்சினின் ஓய்வுக்காலம் குடும்பத்தாருடன் சந்தோஷமாகவும் மனதுக்கு நிறைவாகவும் அமையட்டும்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 20 டிசம்பர், 2012

மழையில் உன் வாசம்


இரவின் அமைதியைக்
கிழித்தது எங்கயோ
விழுந்த இடியின் ஓசை..!

தூறலாக ஆரம்பித்து
சட்டென ஆர்ப்பரித்துப்
பெய்ய ஆரம்பித்த
பேய் மழையின் சப்தம்
தூக்கத்தை தூர விரட்டியது...

மழைக்கு அலறும்
மாமரத்து ஆந்தை...
பெருங்குரலில் குறைத்தபடி
படுக்க இடம் தேடி
ஒடிவரும் வீட்டு நாய்...

பேய் மழையாவுல பெய்யுது
என்றபடி ஓட்டில் வடியும்
மழைத் தண்ணீரை பிடிக்க
நனைந்தபடி குடங்களை
வைக்கும் அம்மா...

நாற்றங்காலில் வீசிய
உரம் நாசமாகிப் போச்சே...
என்றபடி கட்டிலிலிருந்து
எழுந்து அமரும் அப்பா...

மழை பெய்யுதா...
காலையில பெய்யக்கூடாதா
லீவாவது கிடைக்கும்
போர்வைக்குள் முனங்கியபடி
பத்தாவது படிக்கும் தங்கை...

மழையின் வேகத்தில்
இடிக்கும் இடியில்
எங்கோ முறிந்து விழும்
மரத்தின் ஓசை...

ஒழுகும் கசாலைக்குள்
படுக்க முடியாமல்
குரலெழுப்பும் பசு...

மழையின் சாரலையும்
மண்ணின் வாசத்தையும்
அனுபவித்த மனசுக்குள்

முந்தைய மழைநாளில்
உன் துப்பட்டா குடைக்குள்
நடந்து வந்த ஞாபகக்கீற்று
மின்னலாய்...

-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 18 டிசம்பர், 2012

காதல் நெஞ்சம்



முன் எப்போதும் இல்லாமல்
இப்போதெல்லாம்
கோபம் கொள்கிறாய்...

எப்போதும் சீண்டிப் பார்க்கும்
உன்னை இப்போதெல்லாம்
சீறலோடுதான் பார்க்க முடிகிறது....

தாமதமாக வீட்டில் நுழைந்தால்
யார் கூட சுத்திட்டு வாறே...
என்ற வார்த்தை அம்புகள்
தைக்கும் போது

காத்திருந்து காதலித்த
நாட்கள் கண் முன்னே
காட்சியாய் விரிந்து மரிக்கிறது...

எது செய்தாலும்
என்ன இது என்ற
ஒற்றை வார்த்தையில்
சிரித்து ரசித்த நாட்கள்
மழை நேரத்து
மண்வாசனையாய்
மனசுக்குள் நுழைந்து
கண்களில் இறங்குகிறது ...

முத்தம் கிடைக்காமல்
முயன்றும் முடியாமல்
தவித்த போது
ஒரு முத்தம் வாங்க
காத்திருந்த நேரத்தில்
பல முத்தங்கள் பெற்ற
சந்தோஷ தருணத்தை
மீட்டிப்பார்த்து ஆறுதல்படுகிறது
முத்த எச்சம் எதிர்பார்த்த கன்னம்...

அப்போது கிடைத்த சந்தோஷம்
இப்போது கனவாகிப் போச்சு...
எப்போதும் எதாவது
ஒன்றால் நீ சாடும் போது
காதலித்தது தவறோ
என்று மனசில் தோன்றி
மறைந்தாலும்
காதல் நெஞ்சில்
நீ இன்னும் பூவாகத்தான்
பூத்திருக்கிறாய்...

-'பரிவை' சே.குமார்

சனி, 17 நவம்பர், 2012

விசாலம் அக்கா - அதீதத்தில்...

அதீதம் இணைய இதழில் வெளியான எனது 'விசாலம் அக்கா' என்ற சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதீதத்தில் வெளியாகும் மூன்றாவது சிறுகதை இது. 
கதையை வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கு நன்றி.

-----------------------------------------------------------------------------------------------------------

நல்ல உறக்கத்தில் இருந்த என்னை திடுக்கிட்டு விழிக்க வைத்தது கனவு. நெஞ்சு படக் படக்கென அடித்துக் கொள்ள எழுந்து அமர்ந்தேன். தண்ணீர் அருந்தினால் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கும் என்பதால் அருகில் இருந்த ஜக்கை எடுத்து தண்ணீர் அருந்தினேன். கொஞ்சம் படபடப்பு குறைந்தது. சின்ன வயதில் என்னைப் பாதித்த நபர்களை அவ்வப்போது நினைப்பதுண்டு. எங்க வீட்டில் வேலை பார்த்த கருப்பண்ணன், பால்கார வீராயி, மீன்காரி முனிம்மா, எனக்கு ரொம்ப பிடித்த விசாலம் அக்கா என எல்லோரும் கனவில் வந்து செல்வார்கள். அடுத்த நாள் கனவில் வந்தவரின் நினைவுகள் எனக்குள் எட்டி எட்டிப் பார்க்கும் அதன்பின் நான் அவர்களை மறந்துவிடுவேன் என்பதே உண்மை.  ஆனால் இன்று வந்த கனவு ஏனோ என் மனதை கஷ்டப்படுத்தியது.  கொஞ்ச நேரம் அப்படியே உட்காந்திருந்தேன். படபடப்பு குறைய  என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் படுத்தேன்.
கண்களை மூடியபடி வந்த கனவை மீன்டும் மீட்டிப் பார்த்தேன். கனவில் வந்த விசாலம் அக்கா என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “பாப்பா, நான் ரொம்ப கஷ்டப்படுறேன்”னு அழுகுறா… மறுபடி மறுபடி அதையே மீட்டிப் பார்க்க எனக்கு ஒண்ணுமே புரியலை… விசாலம் அக்காவுக்கு என்னமும் ஆகியிருக்குமோ இப்ப எங்க இருக்கு என்ன பண்ணுது என்று யோசித்து விடை கிடைக்காமல் சரி கனவுதானே என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு உறக்கதை அணைத்துக் கொள்ள கண்களை மூடினேன். உறக்கம் வருவதற்குப் பதில் விசாலம் அக்காவின் நினைவுகள் மெல்ல எட்டிப் பார்த்தன.
எங்க பிரேமா அத்தை கல்யாணத்துக்கு முறுக்குச் சுடத்தான் விசாலம் அக்கா எங்க வீட்டுக்கு முதன்முதலில் வந்தாள். எப்பவும் பொன்னம்பல மாமாதான் விசேசங்களுக்கு முறுக்கு சுடுவார். எங்க ரெண்டு குடும்பத்துக்குள்ளயும் சின்னதா ஒரு வருத்தம் சரியா பேசிக்கிறதில்லை. அதனால பாட்டி முறுக்கு சுட ஆளு வேணுமின்னு எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருந்தாங்க. மீன்கார முனிம்மாக்காதான் கூட்டி வந்துச்சு.
என்ன முனிம்மா முறுக்கு சுட ஆள் கூட்டியார சொன்னா சின்ன புள்ளய கூட்டியாந்து இருக்கே… சும்மா சுட்டுப் பாக்க ஆள் கேக்கலை ஒரு கல்யாணத்துக்கு செய்யணும்… இவ செஞ்சிருவாளான்னு பாட்டி சந்தேகமாக் கேக்க… என்ன ஆத்தா அப்புடிக் கேட்டுப்புட்டே… விசாலத்தோட கைப் பக்குவத்துக்குப் பக்கத்துல யாரும் நிக்கமுடியாது தெரியுமா… இவ சுத்துற முறுக்கை சாப்பிட்டுப் பார்த்தா அப்புறம் இவதான் வேணுமின்னு கேப்பே அப்படின்னு முனிம்மா சொல்ல, என்னமோ போ பேசிப்பேசி மீன் விக்கிற உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா என பாட்டி சலித்துக் கொண்டாள்.
மாவைப் பிசையும் விசாலம் அக்காவைப் பார்த்தேன்… முப்பத்தஞ்சு வயசுக்குள்தான் இருக்கும். கண்டாங்கி சேலையை நாட்டுக்கட்டு கட்டியிருந்தாள். பெரிய கொண்டையும் வட்டப் பொட்டுமாய் அக்மார்க் கிராமத்துப் பொம்பளையாய் தெரிந்தாள். யாருடனும் பேசாமல் மாவைப் பிசைவதில் கவனம் செலுத்தினாள். தலையைத் தூக்கும் போது எங்களைப் பார்த்து உதடு பிரியாமல் சிரித்தாள். அவளின் கழுத்தில் மஞ்சள் இழந்த நூல் கயிறு கிடந்தது.
ஏன்டியம்மா உனக்கு கல்யாணம் ஆயிருச்சில்ல… வீட்டுக்காரன் என்ன பண்றான் என்ற பாட்டியின் கேள்விக்கு ஏறிட்டுப் பார்த்து சிரித்தாள். என்னடி ஆத்தா பேச காசு கேட்பே போல கலகலன்னு பேசிக்கிட்டு வேலை பார்த்த வேலை போறது தெரியாது…. அலுப்பும் இருக்காதுல்ல என்று பாட்டி சொல்ல என்ன பெரியம்மா கேட்டே கண்ணாலம் ஆயிருச்சான்னா அதெல்லாம் ஆயி முடிஞ்சு போச்சும்மா என்றபடி வேலையை தொடர்ந்தாள்.
என்னடி சொல்றே… ஆயி முடிஞ்சு போச்சா… அப்படின்னா நீ இப்போ புருசன் கூட இல்லையா… என்ன? என அம்மா கேட்கவும் எங்களை எல்லாம் ஏறிட்டுப் பார்த்தவள் எங்க வூட்டுல கடனவொடன வாங்கி கஷ்டப்பட்டு என்னய கட்டிக்கொடுத்தாங்க… மொத ராத்திரி அன்னைக்கே அந்த ஆளு புல்லா குடிச்சிட்டு வந்தான்… எங்க சாதி சனத்துல நண்டு சிண்டு எல்லாம் குடிக்குதும்மா அதனால நான் அதை பெருசா எடுத்துக்கல… ரெண்டு மாசம் நல்லாத்தான் போச்சு… அதுக்கப்புறந்தான் தெரியும் அந்தாளுக்கு பக்கத்தூருல கூத்தியா இருக்கது… என்ன செய்ய… நாயா கத்திப் பாத்தேன்… சண்ட போட்டுப் பாத்தேன்… என்னால முடியல… அவன் அதுக்கு அப்புறம் அவளை வீட்டுக்கே கூட்டியாந்து ஒண்ணா இருக்கச் சொன்னான்… அவளும் இளிச்சுக்கிட்டு வந்தா… நான் வெளிய வந்துட்டேன். ஆயி அப்பன்கூட இருந்தாலும் அவுகளுக்கு பாரமா இருக்க கூடாதுன்னு இப்படி வேலக்கிப் போறேன்… எதோ வருமானம் வருது…” அவள் பேச்சை நிறுத்தியதும் சினிமாவுல மாதிரி கண்ணு கலங்கியிருக்கான்னு ஊடுருவிப் பார்த்தேன் ஆனால் அது தீர்க்கமாய் இருந்தது.

தொடர்ந்து படிக்க இங்கே  சொடுக்குங்கள் உறவுகளே...


-'பரிவை' சே.குமார்

திங்கள், 12 நவம்பர், 2012

தீபாவளி நினைவுகள்....




சின்ன வயதில் தீபாவளி வருகிறது என்றாலே இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று நாட்காட்டியில் நாட்களை தினமும் எண்ணி எண்ணிப் பார்த்து இன்னும் ஒரு மாதம்... பத்து நாள்... ஒரு வாரம்... இரண்டு நாள்... நாளை என்று சந்தோஷத்தை சுமந்து கொண்டாடிய அந்த தினங்களை மறக்க முடியுமா?

பத்து நாளைக்கு முன்னரே முறுக்குக்கும் அதிரசத்துக்கும் மாவு தயார் பண்ணி வைத்து மூன்று நான்கு நாட்களுக்கு முன்னர் அதிரசம் முறுக்கு எல்லாம் செய்து வைக்கும் அம்மா முறுக்குச் சுடும் போது அவருக்கு உதவுவது போல் அருகில் இருந்து அரைவேக்காடாய் எடுத்துக் கொடுக்கும் முறுக்கை அனைவரும் சந்தோஷமாய் சாப்பிட்டு மகிழ்ந்த தினத்தை மறக்க முடியுமா?

வீட்டில் தீபாவளிக்கு என புதுத்துணிகள் எடுத்த போதும் வெளியூரில் வேலை பார்க்கும் அண்ணன் அங்கிருந்து தைத்துக் கொண்டு வரும் சட்டை டவுசருக்காக அண்ணனின் வரவை எதிர் நோக்கி காத்திருந்த தருணங்களை மறக்க முடியுமா?

அதிகாலையில் அப்பா தலை முதல் கால் வரை நல்லெண்ணெய்யை சொத சொதவென தேய்த்து விட புலி மார்க் சீயக்காய் தூளை டம்ளரில் கொட்டிக் கொண்டு கண்மாய்க்குப் போய் குளித்து முனியய்யா கோவிலில் சாமி கும்பிட்டு வீடு திரும்பம் அந்த சந்தோஷத்தை மறக்க முடியுமா?

புதுத் துணிகளை உடுத்தியதும் மாரியம்மன் கோவில் வாசலில் கூடி ஒருவருக்கு ஒருவர் புதுத் துணிகளைப் பார்த்து மகிழ்ந்து வெடிகள் போட்டு கொண்டாடிய நாளை மறக்க முடியுமா?

பெரியக்கா திருமணத்துக்குப் பிறகு தீபாவளிக்கு வரும் அத்தான் கொண்டு வரும் வெடிகள் நிறைந்த பெட்டிகளுக்காக அக்கா இன்னும் வரவில்லை என்று வாசலில் காத்திருந்த நாட்களை மறக்க முடியுமா?

அருகில் நிற்பவனுக்குத் தெரியாமல் மாட்டுச் சாணியில் அணுகுண்டை புதைத்துப் பற்ற வைத்து வெடிப்பதில் கிடைத்த சந்தோஷத்தையும் கொட்டாச்சிக்குள் அணுகுண்டை வைத்து வெடிக்கும் போது சிதறிய கொட்டாச்சி உயரப் பறப்பதில் கிடைத்த சந்தோஷத்தையும் பாட்டிலில் வைத்து விட்ட ராக்கெட் சீறிப் போவதில் கிடைத்த சந்தோஷத்தையும் மறக்க முடியுமா?

வெடித்து முடித்து கிடக்கும் குப்பைகளை ஒன்றாக்கி அவற்றை பற்ற வைக்கும் போது வெடிக்காத வெதி குதூகலித்ததை மறக்க முடியுமா?

இப்படி எத்தனையோ மறக்க முடியாத நினைவுகளை சுமக்க வைத்த தீபாவளி தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளும் காசுக்கு வாங்கிய இனிப்புக்குள்ளும் அடங்கிவிட்டது என்றாலுடிகள் அதற்குள் இருந்து வெடிக்கும் போது எல்லாருமாக சேர்ந்து ஓவென கத்ம் கிராமத்தில் கொண்டாடும் தீபாவளியில் கிடைக்கும் சந்தோஷம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

இன்று....

தீபாவளி கொண்டாடினீர்களா... சந்தோஷமாக கொண்டாடுங்கள்... என்று போனில் கேட்டு வாழ்த்து சொல்லிவிட்டு எப்பவும் போல் வேலைக்கு கிளம்பும் வெளி நாட்டு வாழ்க்கையில் பண்டிகை தினங்களின் நினைவுகள் பசுமையாய் மனசுக்குள் சாரலை தூவச் செய்தாலும் வெற்றிடங்களை நிரப்ப முடியாமல் இதயம் இலக்கின்றி துடிக்கிறதை மறுக்க முடியவில்லை. 



புத்தாடையும் பலகாரமும்...
வெடிகளும் மத்தாப்பும்...
விருந்து உபச்சாரமுமாய்...
தித்திக்கும் தீபாவளி 
கொண்டாடும் உறவுகள்
அனைவரின் இல்லத்திலும்
சந்தோஷம் குடிகொண்டு
அன்பும் அமைதியும் 
எப்போதும் வீற்றிருக்க
வாழ்த்துகிறோம்....

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

-'பரிவை' சே.குமார். 

செவ்வாய், 6 நவம்பர், 2012

சுந்தரமாமா


(தினத்தந்தி குடும்பமலர் (04/11.2012) இதழில் வெளியான எனது சுந்தரமாமா சிறுகதையின் முழுவடிவம் இங்கே. குடும்பமலரில் நிறைய பத்திகளாய் நீக்கி ஒரு பக்கத்தில் போட்டிருந்தார்கள். பிரசுரித்த ஆசிரியர் குழுவுக்கு நன்றி.)
குடும்ப மலரில் படிக்க ---



********************

(கதைக்கு குடும்பமலரில் போட்டிருந்த படம்)


அடிக்கடி வரும் சுந்தரமாமா இப்பல்லாம் வருவதேயில்லை. என்னாச்சு இந்த மாமாவுக்குன்னு தெரியலை... சுந்தரமாமாவுக்கு குடும்பமெல்லாம் இல்லை... அப்பாகூட வேலை பார்த்தாங்க அப்ப ஏற்பட்ட பழக்கத்தால அவருக்கு நாங்க உறவானோம். விடுமுறை நாள்ல எங்க வீட்லதான் இருப்பாரு. மாமா பாக்குறதுக்கு அழகா நல்லா சிவப்பா இருப்பாரு.  ராமராஜன் மாதிரி மீசை வச்சிருப்பாரு... நெற்றி நிறைய விபூதி வைத்து அதன் மேல் அழகாக குங்குமம் வைத்துதான் வெளியில வருவாரு... அவரு நெற்றியில் அது இல்லாம பாத்ததில்லை. அம்மாவை தங்கச்சியின்னு தான் சொல்லுவாரு... அப்பாவை இவனே என்றுதான் கூப்பிடுவார். அக்காவை பாப்பான்னும் என்னைய ராஜான்னுதான் கூப்பிடுவாரு... எல்லார் மேலயும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். மாமாவுக்கு கெட்ட பழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் கும்பகோணம் வெத்தலையை சிவக்கச் சிவக்க போட்டுக்கிட்டே இருக்கணும்.

மாமாவுக்கு ரெண்டு மூணு வருடத்துக்கு முன்னால பக்கத்துல வேற ஊருக்கு மாத்திட்டாங்க. அப்பவும் வாராவாரம் வந்து எங்களைப் பாத்துட்டுத்தான் போவாரு. இப்ப சில மாசமா போன் பண்ணுறதும் இல்லை வர்றதும் இல்லை. போன் அடித்தால் உபயோகத்தில் இல்லையின்னு வருது. எங்க போனாரு... என்ன ஆனாருன்னு தெரியலை. அம்மா அப்பாகிட்ட கேட்டப்போ அப்பா எங்களை எல்லாம் ஒரு பார்வை பாத்துட்டு அவன் வரலையின்னா இப்ப என்னா... கூடப்பொறந்த பொறப்பா என்னன்னு கோபமா கேட்டாரு. அப்பத்தான் எனக்கு மாமாவுக்கு என்னாச்சுன்னு அப்பாவுக்கு தெரிஞ்சிருக்குன்னு தோணுச்சு... யார்கிட்ட கேக்கலாம்... அம்மாகிட்ட கேட்க முடியாது அவங்களே இப்பத்தான் டோஸ் வாங்கியிருக்காங்க... அக்காகிட்ட கேட்டாலும் அவளுக்கு தெரியப் போவதில்லை. அது ஒரு புத்தகப் புழு. ஆனா எனக்கு மாமா வேணும்ன்னு தோணிச்சு.... அதனால அப்பாகிட்டதான் கேக்கணுமின்னு முடிவு பண்ணினேன்.

அன்று மாலை நான் காலேஜ்ல இருந்து வரும்போது அப்பா வீட்டுக்குப் பின்னால தோட்டத்துல செடிகளுக்கு தண்ணி பாச்சிக்கிட்டு இருந்தாரு. அக்கா இன்னும் வரலை... அம்மா அடுப்படிகுள்ள இருக்கிறதை அங்கிருந்து வரும் பாத்திரத்தோட சத்தமே சொன்னது. இதுதான் மாமாவைப் பத்தி அப்பாகிட்ட கேக்க சரியான சமயமுன்னு தோண நானும் தோட்டத்துப் பக்கம் போனேன்.

"என்னப்பா தண்ணி பாச்சுறீங்களா?"

"வா சரவணா... இப்பத்தான் வாறீயா? அக்கா வரலையா?"

"ம்... அக்காவுக்கு காலேஜ்ல ஏதோ பங்ஷன் இருக்குன்னு சொன்னுச்சு... வர லேட்டாகுமுன்னு அம்மாகிட்ட சொல்லிட்டுப் போச்சு..."

"சரி... ஏதாவது சாப்பிட்டியா?"

"இல்லப்பா..."

"ஏய் வளரு... தம்பி வந்துட்டான் பாரு... அவனுக்கு சாப்பிட எதாவது கொடு... காபியிருந்தா கொண்டாந்து கொடு..." என்று வீட்டுக்குள் இருக்கும் அம்மாவுக்கு குரல் கொடுத்தார்.

"அப்பா..." நான் மெதுவாக இழுத்தேன்.

"என்னப்பா..."

"நம்ம சுந்தரமாமா...இப்பல்லாம் வர்றதேயில்லை"

அப்பா பதில் சொல்லாமல் என்னை கேள்விக்குறியோட பார்த்தார்.

"என்னப்பா... அவரு எங்க இருக்காரு... ஏன் இங்கு வர்றதேயில்லை.... அவருக்கு என்னாச்சுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு... சொல்லுங்கப்பா... எங்ககிட்ட பாசத்தை காட்டிட்டு இப்ப அவரு வறாம இருக்கது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா... அவருக்கும் நம்மள விட்ட உறவு இல்லதானேப்பா..."

"உனக்கு எதுக்கு இப்ப அவரைப் பற்றி கவலை... படிக்கிறதுல இன்னும் நல்லா படிக்கணுமின்னு கவலைப்படு சந்தோஷம்... அதை விட்டுட்டு எதுக்கு உனக்கு தேவையில்லாத கவலை" தண்ணியை செடிக்கு விட்டபடி கேட்டார்.

"அவருக்குன்னு கடைசி வரைக்கும் நாமதான் உறவுன்னு நீங்கதானே சொன்னீங்க... அப்புறம் இப்ப ஏம்ப்பா அத்துப் பேசுறீங்க?"

"அத்துப் பேசலைப்பா... இங்க இருக்கும் வரை நாம உறவா இருந்தோம்.  இப்ப அவரு வேற ஊருக்குப் போயி ரெண்டு மூணு வருசமாச்சு... அங்க நம்மள மாதிரி அவருக்குப் புதிய உறவு கிடைச்சிருக்கலாம்...  அதான் நம்மள மறந்துட்டு அவங்ககூட உறவாகியிருப்பாரு... இது இயற்கைதானே..."

"இல்லப்பா... நீங்க பொய் சொல்லுறீங்க...மாமா அப்படிப்பட்ட ஆள் இல்லை... உங்களுக்கும் அவருக்கும் எதாவது பிரச்சினையா இருக்குமோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு" எனக்கு பொறுமையில்லாமல் கோபமாக கேட்டேன்.

அப்பா சிரித்தார். கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. "என்ன பிரச்சினை...ம்... எங்க ரெண்டு பேருக்கும் சொத்துத் தகறாரா என்ன...  அட போப்பா நான் சொன்னதுதான் உண்மை...நீ பத்தாவது வரை டான் போஸ்கோவுல படிச்சே... பதினொண்ணு பன்னெண்டு செவன் டேய்ஸ்ல படிச்சே.. இப்ப இஞ்சினியரிங் அண்ணாமலையில படிக்கிறே... இப்ப சொல்லு டான் போஸ்கோவுலயும் செவன் டேய்ஸ்லயும் உன் கூட படிச்சதுல எத்தனை பேரு இன்னும் பிரண்டா இருக்காங்க... அது மாதிரித்தான் இந்த உறவும்... புரியுதா?"

அப்பா சொல்வது உண்மைதான்..பத்தாவது வரை படிச்சவங்கள்ல யாருடனும் இப்ப தொடர்பு இல்லை... பன்னெண்டாவதுல என்னோட படிச்சதுல சாமினாதனும் பிரேமும் மட்டும்தான் என்னோட இப்ப படிக்கிறங்க... மத்தவங்கள்ல சிலர் மட்டும் இப்ப தொடர்பில் இருக்கிறார்கள்... இதுக்கும் மாமாவோட உறவுக்கும் வித்தியாசமில்லையா? இதோட அதை ஒப்பிட முடியுமா?

"அப்பா இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்... அது சின்னப்பிள்ளங்க உறவு... மாமா நம்மகிட்ட அப்படி பழகலை... நம்மளை உறவாத்தான் நினைச்சாரு... உதறிட்டுப் போறவரு இல்ல அவரு..."

"என்ன அப்பாவும் பிள்ளையும் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கீங்க..." மணக்கும் காபியுடன் வந்த அம்மா கேட்க,  "ஒண்ணுமில்ல... காஞ்சுபோன ரோஜாவைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தான்... வேற செடி வாங்கி வைக்கணுமின்னான்... அதான்.."

"ஆமாங்க நான் கூட சொல்லணுமின்னு நினைச்சேன்... நல்ல பட்டு ரோஜா செடியா ரெண்டு வாங்காந்து வைக்கணும்... நாளைக்கு வரும்போது வாங்கிட்டு வாங்க... சரி தண்ணி பாச்சினது போதும் ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள வாங்க"

"ம்... வாறோம் போ..."

"என்ன சரவணா... அப்படி பாக்குறே...?"

"நீங்க எதையோ மறைக்கிறீங்கப்பா...அம்மாகிட்ட நீங்க பொய் சொன்னதுல இருந்தே தெரியுது... உங்களுக்கு மாமாவைப் பற்றி தெரியும்..."

"வா... உள்ள போகலாம்..." என் பதிலை எதிர்பார்க்காமல் கைகால்களை கழுவிவிட்டு வீட்டுக்குள்ள போனார். நானும் பின்னால் போனேன்.

அதன்பிறகு இது பற்றி அப்பா எதுவும் பேசவில்லை... தனது கவனத்தை தொலைக்காட்சிப் பக்கமாக திருப்பிக் கொண்டார். சே... எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்க இந்த அப்பாவை என்ன பண்ணலாம். எப்பவும் இந்த அப்பா இப்படி இருந்ததில்லை பிரண்ட்லியாத்தான் பழகுவாரு...ஆனா மாமா விசயத்துல மட்டும் அவரு நடந்துக்கிறது எனக்குப் புரியலை. பேசாமல் எனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டேன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் கூடுதலாக தூங்கி எழுந்தேன். அப்பா குளித்து சாமிகும்பிட்டு பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் "சரவணா...குளிச்சிட்டு சாப்பிட்டுக் கிளம்பு.. நாம வெளியில பொயிட்டு வரலாம்." என்றார்.

எங்கே என்று கேட்க நினைத்து கேட்காமல் கிளம்பினேன். கொஞ்ச தூரம் போனதும் "என்னப்பா... அப்பா மேல கோபமா?" என்று பேச்சை ஆரம்பித்தார்.

நீங்க மாறிட்டீங்கப்பான்னு சொல்ல நினைத்து "இல்லப்பா" என்றேன்.

"என்ன செய்யிறது... சில விசயங்களை குடும்ப நலன் கருதி மறைக்க வேண்டியதாப் போகுது... சில விசயங்கள் மறைச்சு வைக்கிறதால மனசை அரிக்கிறது தெரிஞ்சும் மத்தவங்களோட சந்தோஷத்துக்காக அதை தாங்கிக்க வேண்டிய கட்டாயம்... அதனால தெரிஞ்சவங்க அதை மனசுக்குள்ளே அடைச்சிடுறாங்க... "

அப்பா சொல்வது எனக்கு ஒண்ணும் புரியலை... அவரைப் புரியாமல் பார்த்தேன். அவரே தொடர்ந்தார். "உங்க சுந்தரமாமா எனக்கு நண்பனா வந்தான். சாதாரணமாக நம்ம வீட்டுக்குள்ள வந்தவன் நம்மள்ல ஒருவனா ஆயிப்போனான். அண்ணன் தம்பி உறவுகள் இல்லாம இருந்தவன் உங்கம்மாவுக்கு அண்ணனாவும் உங்களுக்கு மாமாவாகவும் மாறிப்போனான். என்ன செய்ய எல்லா உறவும் நிலைப்பதில்லையே... அவனும் அது மாதிரித்தான்..." அப்பா நிறுத்த எனக்கு என்ன சொல்வதுன்னே தெரியலை.

"இப்போ மாமா எங்கப்பா..?"

"அவனுக்கு என்னாச்சு... ஏன் வரலையின்னு உங்ககிட்ட சொல்லி இருந்தா உங்க சந்தோஷம் எல்லாம்  போய் இருக்கும்... ஏன் எதையும் தாங்குற நிலையில இல்லாத உங்கம்மா இதயம் நின்னே போயிருக்கும்... அவ எனக்கு வேணும்... உங்க சந்தோஷம் எப்பவும் போல தொடரணும்...  இது என்னோட ஆசை மட்டுமில்ல சரவணா உங்க மாமா எனக்கிட்ட கேட்டதும் இதுதான்... அவன் பெரிய மனுசன்டா அவனுக்குள்ள இருந்த அவ்வளவு பெரிய விசயத்தை மறைச்சிக்கிட்டு சந்தோஷமா இருந்திருக்கிறான்... "

நான் அப்பாவை பார்க்க, "சில மாசத்துக்கு முன்னால  டிரீட்மெண்டிக்காக இங்க வந்தவன் என்னைப் பார்த்து ஆஸ்பிடல்ல அட்மிட் ஆனவன் உங்களை பாக்க மறுத்துட்டான்... அதுக்கப்புறம் அவன் என்ன ஆனான்னு..." அப்பா பேசாமல் நிறுத்தினார்.

அவர் நிறுத்தினார் என்பதைவிட பெச முடியாமல் தவிக்கிறார் என்பது அவர் பின்னால் இருந்த எனக்கு நல்லா தெரிந்தது. "அப்பா இப்ப மாமா எங்கே"" என்று நான் கேட்பதற்கும் அப்பா சுடுகாட்டு வாசலில் வண்டியை நிறுத்துவதற்கும் சரியாக இருந்தது.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 25 அக்டோபர், 2012

மனிதன் : கருப்புசாமி




அவரை எனக்கு இதற்கு முன் தெரியாது. எனது உறவும் இல்லை. தினசரி எதிரெதிரே சந்திப்பவர்களை தொடர்ந்து சில நாட்கள் சந்தித்தால் முதலில் ஒரு சிறு புன்னகை... அப்புறம் மலர்ந்த சிரிப்பு... பிறகு ஒரு ஹலோ... பின்னாளில் 'எப்படியிருக்கீங்க' என ஆரம்பித்து சில நாட்கள் பார்க்காமல் போனால் எந்த பாதிப்பும் இன்றி மீண்டும் புதிதாக பார்ப்பவரிடம் ஒரு புன்னகையில் ஆரம்பிக்கும் தண்டவாளப் பயணமாப் போகும் வாழ்க்கையில் இவரை புகுத்திப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு பந்தம்... உறவாகிப் போன நட்பு... பாசம் என்னும் வலையை பாசாங்கு காட்டி விரிக்கும் உறவுகள் எத்தனையோ இருக்க என்னில் எதுவும் எதிர் பார்க்காமல எனக்குள் புகுந்த நட்பு இது.
நான் எங்கள் கம்பெனியின் ஒரு வருட பணிக்காக அந்த அரசு அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்து மூன்று  நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் அவரைப் பார்த்தேன். நான் வேலை பார்க்கும் அலுவலகத்தின் அருகில் இருக்கும் மீட்டர் வழங்கும் பிரிவில் ஆபீஸ் பாயாக இருக்கிறார். என்னைப் போல் இவரும் வேறொரு கம்பெனியில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்தான். அவரின் கம்பெனி கொடுக்கும் சொற்ப சம்பளம் கண்டிப்பாக போதாது என்பது எல்லாருக்கும் தெரியும். ஊரில் சித்தாளாக போகும் ஒரு ஆள் ஒரு நாள் 250,300 ரூபாய் வாங்குகிறார்கள் ஆனால் இவர் வேலை பார்க்கும் கம்பெனி கொடுக்கும் ஒரு நாள் கூலி அதைவிட ரொம்ப ரொம்ப குறைவு. இவரைப் போல் நிறைய நண்பர்கள் இதுபோல் கஷ்டப்படத்தான் செய்கிறார்கள். ஊரில் பையன் துபாயில் இருக்கிறான் என்ற பெருமை மட்டும்தான் மிச்சம். இவர்களின் கண்ணீர் யாரும் அறிவதில்லை. இங்கு காலை 6 மணிக்கு வந்து மதியம் 3 மணி வரை வேலை. அதன் பிறகு இரண்டு மூன்று வீடுகளில் பகுதி நேர வேலை என எல்லாம் முடித்து அவர் தங்கியிருக்கும் இடம் செல்ல இரவு 10 மணிக்கு மேலாகும். அப்புறம்தான் துணி துவைக்கிறது, சாப்பாடு எல்லாம். இவர் மட்டுமல்ல அந்தக் கம்பெனியில் எல்லாருடைய வாழ்க்கையும் இப்படித்தான். 
வழக்கம் போல் நான் நடந்து வந்து அலுவலக கேட்டருகே வரும் போது தனது காரை நிறுத்திவிட்டு என்னுடன் பேசியபடி வந்த கேரளாவைச் சேர்ந்த அண்ணன், இவர் எதிர்படவும் என்ன சாமி... என்று மலையாளத்தில் நலம் விசாரித்தார். இவரும் மலையாளத்தில் பேசிவிட்டு எனக்கும் கை கொடுத்துச் சென்று விட்டார். மதியம் வேலை முடிந்து வெளியே வரும் போது என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தார். பின்னர் 'சேட்டா நாட்டுல எவட?' அப்படின்னு கேட்டார், நான் காரைக்குடி அறியுமான்னு கேட்டேன். நீங்க காரைக்குடியான்னு தமிழுக்கு தாவினார். நான் ஆமா என்றதும் சரியாப் போச்சு போங்க நான் மேலூருக்குப் பக்கம் என்று கைகளைப் பிடித்துக் கொண்டார். காலையில அவரு கூட வந்ததால நீங்க மலையாளியோன்னு நினைச்சேன் என்று சிநேகமாக சிரித்தார். நானும் உங்களை அப்படித்தான் நினைச்சேன் என்றேன். பிறகு சில விசாரிப்புக்கள்... அவருக்கு வண்டி வர சென்று விட்டார்.
மறுநாள் நான் வரும் போது எனக்காக காத்திருந்து கூப்பிட்டுப் பேசினார். பின்பு ஒரு சகோதரன் போல குடும்பம் விசாரிப்புக்கள்... அவரின் குடும்பக் கதைகள் எல்லாம் சொன்னார். சரி ஒரு பத்து மணி போல வாங்க என்றார். பத்து மணிக்குப் போனால் ரெண்டு பிரட் சாண்ட்விச் ரெடியாக வச்சிருந்தார். போனதும் சாப்பிடச் சொல்லி ஒரு அருமையான காபி போட்டுக் கொடுத்தார். சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கதைகள் பேசிவிட்டு கிளம்ப தினமும் வரணும் நான் சாப்பிட எதாவது ரெடி பண்ணி வைக்கிறேன் என்றார். அட போங்கண்ணே நீங்க வேற... எவனாவது பாத்துட்டு உங்காளுக்கிட்ட சொன்ன அம்புட்டுத்தான். தேவையில்லாத வேலை எதுக்கு நேரம் இருக்கும் போது வந்து பாத்துட்டுப் போறேன்.. ஆனா சாப்பிடன்னு வரமாட்டேன் என்றதும் அட சும்மா வாங்க என்றார். நான் அவரைப் பார்க்கப் போகும் போதெல்லாம் காபி, டீ, சாண்ட்விச் என எதாவது கொடுக்காமல் இருக்கமாட்டார்.
என் மனைவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது நான் அவரைப் பார்க்கவில்லை என்றாலும் போன் பண்ணி எப்படி இருக்காங்க... பேசினீங்களா என்று விசாரிக்கத் தவறமாட்டார். அவருக்கு மகன் பிறந்த போது எனக்கு போன் பண்ணி உடனே வாங்க... எனக்கு பையன் பொறந்திருக்கான் அப்படின்னு சந்தோஷமாக சொன்னார்.  முதலில் இரண்டு பெண் குழந்தைகள் மூன்றாவதாய் பையன் ரொம்ப சந்தோஷமாக இருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு பையனுக்குப் பேர் கார்த்தின்னு வச்சாச்சு என்றார். என்ன்ண்ணே நியூமரலாஜி பாத்து வச்சிக்களா என்றதற்கு அட போங்க நீங்க வேற பிறப்புச் சான்றிதழ்ல கார்த்தின்னு கொடுத்துட்டு வேற பேர வச்சோமின்னா நாளைக்கு அவனுக்கு ரெண்டு பேரால பிரச்சினை வரும். அதுக்கு எங்க அண்ணனே சாட்சி அப்படின்னு அந்தக் கதையை வெள்ளந்தியாக சொல்ல ஆரம்பித்தார். பின்பு ஊர் நிலவரங்கள் எல்லாம் என்னிடம் பேசினார்.
இப்படியாக எனக்குள் அண்ணனாக இறங்கியவர்தான் இந்த கருப்புசாமி, வீடு கட்டுவது குறித்தும் அதில் இருக்கும் சின்ன பிரச்சினைகள் குறித்தும் என்னிடம் கேட்கத் தவறுவதில்லை. என்ன பிரச்சினை வந்தாலும் வீடு வேலை நல்லா முடியும் கவலைப் படாதீங்க அப்படின்னு தைரியம் சொல்லி நிறைய பேசுவார். எனக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருக்கும் முசிறியால் பிரச்சினை வந்தபோது அவனை விட்டுதள்ளுங்க... அவனெல்லாம் ஒரு மனுசன்னு நம்ம போக்குல போங்க என்று ஆறுதல் சொல்லி மனசை லேசாக்கினார். 
இன்று காலை அவரை சந்திக்கப் போனபோது எப்போதும் உற்சாகமாக வரவேற்ப்பவர் லேசாக சிரித்தார். என்னண்ணே வருத்தமா இருக்காப்ல இருக்கு என்ன எதுவும் பிரச்சினையா என்றேன். இல்ல ஒரு பெங்காளி வந்து ஜெராக்ஸ் கேட்டான். சரி பாவமுன்னு எடுத்துக் கொடுத்துட்டேன். அப்பன்னு பார்த்து இந்த களவாணிப் பய வந்துட்டான். (அவரு இருக்கும் அலுவலகத்தின் பெரிய ஆள் - சரியான முசுடு) யாருக்கு எடுக்குறேன்னு கேட்டான். நான் இவரு கேட்டாரு அதான்ன்னு சொன்னதும் வேணுமின்ன வேற எங்கயாவது போயி எடுக்கச் சொல்லு. இங்க எதுக்கு எடுத்துக் கொடுக்கிறேன்னு கத்திட்டான். சை ஏண்டா எடுத்தோமுன்னு ஆயிருச்சு... அப்படின்னு புலம்பினார். சரி விடுண்ணே... இதெல்லாம் ஒரு மேட்டரா என்ன அப்படின்னு சொன்னதும்... இது ஒரு வித்தியாசமான உலகம் அவனவன் அவனவன் வேலையைப் பாத்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்கணும். இங்க எவனும் எவனுக்காகவும் இறங்கிப் போகவே இல்ல எதிர்பார்த்துக்கிட்டு இருக்கவோ கூடாது அப்படின்னு சொன்னார். அப்புறம் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்திட்டு வந்தேன்.
இந்த உறவு.... எனக்கு சாப்பாடு கொடுத்தார்... எனது கஷ்டத்துக்கு மருந்தாக இருந்தார் என்று மட்டும் நினைக்க வைக்கும்  உறவல்ல... எங்கோ பிறந்து இங்கு வந்து தமிழால் மட்டுமே இணைந்த உறவு... எனக்கு ஒரு நல்ல நண்பனாக... அண்ணனாக கிடைத்த உறவு.... ரயில் சிநேகம் , பேருந்து நட்பு போல பயணிக்கும் காலத்தில் மட்டும் பாச ஊற்று ஊறாமல் இனி தொடரும் எனது காலங்களில் இவரின் நட்பும் என்னுடனே பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. டிசம்பர் வரை இந்த ஆபீஸ்.. அப்புறம் வேறு இடம் வேறு அலுவலகம்... மாறும் பயணத்தில் மறக்க முடியா சில நட்புக்கள் இருக்கும், அந்த நட்பில் கருப்புசாமி அண்ணன் என் குடும்ப நட்பாக... இல்லை உறவாக இருக்க வேண்டும். அதுவே எனது ஆசை.
கருப்பு அண்ணன் போல முகம் பார்க்காமல் அண்ணனாய்... தம்பியாய்... அக்கா... தங்கைகளாய் எத்தனை உறவுகள் எல்லாமே என்றும்  நீடிக்க வேண்டும் என்பதை நான் இறைவனிடம் கேட்கும் ஒன்று.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

தண்டவாளப் பூக்கள்



"என்னடி... ரெண்டு நாளா ஒரு மாதிரி இருக்கே... எப்பவும் இருக்க கலகலப்பு இல்லாம எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கே... பன்னெண்டு மணியானாலும் டிவியை ஆப் பண்ணாம பார்ப்பே... ரெண்டு நாளா டிவி கூட பாக்கலை... என்னாச்சுடி... என்ன பண்ணுது..."
"ஒண்ணுமில்லம்மா.... நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்..."
"சும்மா சொல்லாதடி... பெத்தவளுக்கு தெரியாத பிள்ளை நல்லாயிருக்கா இல்லையான்னு... உனக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா என்ன... எதா இருந்தாலும் சொன்னாத்தானே தெரியும்... என்னமோ ஒரு பிரச்சினை உனக்குள்ள இருக்கு.... அதான் ஒரு மாதிரி இருக்கே... என்னான்னு சொல்லுடி..."
"அய்யோ... அம்மா நான் எது மாதிரியும் இல்லை எப்பவும் போல உங்க பொண்ணு நந்தினியாத்தான் இருக்கேன்... போதுமா?"
"ஏண்டி நல்லா இருக்க பிள்ளையை ஒரு மாதிரி இருக்கேன்னு சொல்லி உடம்புக்கு நோவு வர வச்சிருவே போல... இப்ப என்ன உன்னோட பிரச்சினை... அவ டிவி பாக்கலைங்கிறதா.... உன்னைய மாதிரி நாடகங்களை கட்டிக்கிட்டு அழுகாம அவளாவது இருக்கட்டுமே... டிவி பாக்காம இருக்கது நல்லதுதானே... காலேசுக்கு கிளம்புற பிள்ளைக்கிட்ட ஏதாவது சொல்லி வருத்தப்பட வைக்காம சும்மா இரு..."
"ஆமா இவுகளுக்கு மகளை ஒரு வார்த்தை சொல்லிட்டா கோபம் பொத்துக்கிட்டு வந்திரும்... ரெண்டு நாளா அவ ஆளே நல்லாவேயில்லை.... சொல்லப் போனா என்னய கிறுக்கச்சி ஆக்கிருவீங்க.... வேலைக்குப் பொயிட்டு வந்து பாக்குற உங்களுக்கும் வீட்ல இருந்து பாக்கிற எனக்கும் வித்தியாசம் இல்லையா... சும்மா எல்லாத்துக்கும் அவளுக்கு செல்லம் கொடுக்காதீங்க... சொல்லிப்புட்டேன்..."
"இங்கபாரு அவ நல்லாத்தான் இருக்கா... அவளுக்குன்னு நாம இதுவரைக்கும் எதாவது குறை வச்சிருக்கோமா என்ன... அவளுக்கு ஒரு பிரச்சினையின்னா நமக்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறா சொல்லு... சரி நீ காலேசுக்கு கிளம்பும்மா... உங்கம்மா சும்மா நொய்  நொய்யின்னு எதாவது சொல்லிக்கிட்டே இருப்பா"
"சரிப்பா..... அம்மா பை..." என்றபடி வேகமாக ஓடினாள். இதற்கு மேல் நின்றால் அம்மாவும் அப்பாவும் அவளுக்காக சண்டையை தொடர வேண்டியிருக்கும் என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.
*****
ல்லூரிக்குள் நுழைந்த நந்தினி ஏனோ வெறுமையாக உணர்ந்தாள். மனதுக்குள் ஏதோ ஒரு உணர்வு அழுத்தத்தைக் கொடுத்தது. வகுப்பறைக்கு எப்பவும் போல் சென்றவளுக்கும் முதல் பாடவேளையே மனசு வகுப்பிற்குள் இல்லாமல் எங்கோ தனியாகப் போய் அமர்ந்து விட்டது. அதற்கு மேல் இருக்க முடியாது என்று நினைத்தவள் தோழியிடம் தலை வலிக்கிறது லேடீஸ் ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கிறேன். மேடம் கேட்டா சொல்லிடு என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். கொண்டு வந்த புத்தகதை லேடீஸ் ரூமில் வைத்துவிட்டு அதற்குப் பின்னால் விளையாட்டு திடலில் இருக்கும் உட்காரும் கல்லில் போய் அமர்ந்தாள்.
இதே கல்லில் அமர்ந்திருக்கும் போதுதான் ராகேஷ் முதன் முதலில் அவளிடம் காதலை சொன்னான். அன்று நந்தினி இந்தக் கல்லில் அமர்ந்து அசைன்மெண்ட் எழுதிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ராகேஷ் அவளிடம் எப்பவும் போல் பேசிவிட்டு மெதுவாக 'நந்து... நான் ஒண்ணு சொன்னா என்னை தப்பா நினைக்க மாட்டியல்ல..' என்றான். 'என்னடா நீ நம்ம ரெண்டு பேரும் சின்னப்பிள்ளையில இருந்து பிரண்ட்... உன்னைய நான் இதுவரைக்கும் தப்பா நினைச்சிருக்கேனா என்ன... ஏன் இப்படி ஒரு வார்த்தை கேட்கிறே... என்ன சொல்லப் போறே சொல்லு...' என்றாள்.
அவன் தயங்கித் தயங்கி மெதுவாக அவள் மீதான தன் காதலைச் சொன்னான், அவனைப் பார்த்து சிரித்தாள். அவள் மனம் அவளது காதலை ஏற்க்க மறுத்தது. எல்லாரையும் மாதிரித்தான்டா நீயும் இருந்திருக்கே... என்று சொல்லிவிட்டு அவனது பதில் என்ன என்பதைக்கூட கேட்காமல் அங்கிருந்து கிளம்பினாள். ராகேஷ் ஒன்றும் சொல்ல முடியாமல் விக்கித்துப் போய் நின்றான்.
தொடர்ந்து வந்த நாட்களில் அவனைப் பார்ப்பதைக் கூட தவிர்த்தாள். பல நாட்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளுக்குள்ளும் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிக்க அவனிடம் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள். அதன்பிறகு கல்லூரி வளாகத்துக்குள் ஒரு காதல் ஜோடி சுதந்திரமாக வலம் வந்தது.
சந்தோஷமாக போன அவர்களின் காதல் பயணத்தில் சில நாள் முன்னர் சிக்கல் ஆர்ம்பித்தது. எப்பவும் போல் கல்லூரி முடிந்து அவனுக்காக காத்திருந்தாள். வேகமாக வண்டியில் வந்தவன் 'நந்து உங்கிட்ட முக்கியமா பேசணும்.... வண்டியில ஏறு பார்க் போகலாம்... அங்க தனியா இருந்து பேசலாம்' என்றதும் 'என்ன விளையாடுறியா நான் பார்க்குக்கு எல்லாம் வரலை... எதுவா இருந்தாலும் இங்க சொல்லு நான் வீட்டுக்கு கிளம்பணும்' என்று தனது சைக்கிளை தள்ளியபடி பேசினாள். அவனும் தனது வண்டியை ஆப் பண்ணிவிட்டு அவளுடன் வண்டியை தள்ளியபடி நடக்கலானான்.
"நந்து... எங்க வீட்ல எனக்கு நிச்சயம் பண்ணப் போறாங்க..." மெதுவாக அவன் சொன்னதும் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்றாள்.
"எ.. என்ன?"
"ஆமா நந்து எங்க மாமா பொண்ணு உனக்குத் தெரியுமே சரண்யா... அவளுக்கும் எனக்கும்  நிச்சயம் பண்ணி வைக்கப் போறாங்களாம்"
"இன்னும் நீ படிப்பே முடிக்கலை... அவ இப்பத்தானே லெவன்த் படிப்பா... அதுக்குள்ள என்ன அவசரம்?" பதட்டமில்லாமல் கேட்டாள்.
"மாமா இருந்தப்போ அப்பா சொன்னாராம் சின்னவனுக்குத்தான் உன் பொண்ணுன்னு... அவரு இறந்ததும் எங்க நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்னா என்ன பண்றதுன்னு அத்தைக்குப் பயம் வந்திருச்சாம்... அப்பாகிட்ட நாம நினக்கிறதுக்கு மாறா நம்ம பிள்ளைங்க நினைச்சிட்டா என்னண்ணே பண்றது... நாளைக்கு ராகேஷ் எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா அப்ப நான் என்ன பண்றதுன்னு கேட்க... உடனே அப்பா இப்படி ஒரு ஏற்பாடை செய்திட்டாரு..."
அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் அவனே தொடர்ந்தான். "இப்ப நிச்சயம் பண்ணிட்டு நான் படிப்ப முடிச்சதும் கல்யாணம் வைக்கலாம்ன்னு இருக்காங்க..."
"...."
"என்ன நந்து நீ எதுவுமே பேச மாட்டேங்கிறே?"
"இதுல என்ன பேசணுமின்னு நினைக்கிறே... பேசினது உங்க வீட்ல... உனக்கும் சரண்யா மேல ஒரு கண்ணுதானே... அவளையே கட்டிக்க..."
"என்ன சொல்றே நீ... இதுக்குத்தான் லவ் பண்ணினோமா?"
"அப்ப நீ வீட்ல சொல்லியிருக்கணும்... நான் ஒருத்திய லவ் பண்றேன்... அவளைத்தான் கட்டிப்பேன்னு..."
"எப்படி நந்து... இப்போ சொன்னா தேவையில்லாத பிரச்சினை வரும்... யாருடா அதுன்னு கண்டிப்பா கேப்பாங்க... அப்ப நான் உன் பேரை சொல்ல வேண்டி வரும்... வீணாவுல உன் மேல உயிரையே வச்சிருக்கிற உங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் பிரச்சினை வரும். இது போக அத்தை மொத்தமா அத்துக்கிட்டுப் போயிருவாங்க..."
"இவ்வளவு யோசிக்கிற நீ இதை லவ் பண்றேன்னு சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்... சரி... சொல்லப் பயமா இருந்தா எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை... தாராளமாக அவளையே கட்டிக்க..."
"இங்க பாரு நந்து... அவளைக் கட்டிக்க... அவளைக் கட்டிக்கன்னு சொல்றியே.... அப்படி அவளைக் கட்டுறதா இருந்தா உன்னைய காதலிச்சு இருக்க மாட்டேனே... சரி நீ டென்சனா இருக்கே நந்து... நான் சொல்றதை கோவப்படாம கேளு."
"என்ன..?"
"நாம எங்கயாவது போயி கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்ச நாள் கழிச்சு வந்தால் எல்லாம் சரியாகும்"
"எதுக்குடா உனக்கு இப்படி புத்தி போகுது?"
"வேற என்ன பண்றது சொல்லு... ரெண்டு வீட்லயும் சம்மதம் வாங்கி நாம கல்யாணம் பண்ண முடியாது... சாதி நம்ம காதலுக்கு எதிரியாயிடும்... இல்லேன்னா நிச்சயம் பண்றபடி பண்ணட்டும். மேரேஜ்க்கு முன்னால நம்ம காதலை சொல்லி நிறுத்தப் பாக்கலாம்... அதுலயும் ஒத்துக்கலைன்னா ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கலாம்"
"ஓடிப்போறேன்... ஓடிப்போறேன்னு சொல்லுறியே... ஓடிப்போயி... இப்ப ஓடினா நம்ம படிப்பும் போகும்.... லைப்பும் போகும்... சரி நீ சொல்ற மாதிரி படிப்பு முடிச்சிட்டு காதலை சொல்லி கல்யாணத்தை நிறுத்தப் பார்த்து அதுவும் நடக்கலைன்னு நாம அப்ப ஓடினாலும் வேலை வெட்டி இல்லாம குடும்பம் நடத்த முடியுமா? நீங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டிங்க இந்தாங்க வேலையின்னு கூப்பிட்டு கொடுப்பாங்களா என்ன... இல்ல நண்பர்கள் உதவுறதுக்கும்... ஒரு பாட்டுல பெரிய லெவலுக்கு வர்றதுக்கும் இது என்ன சினிமாவா...சும்மா ஓடிப்போவோம்... ஓடிப்போவோமுன்னு... புரியாம பேசாதடா"
"அப்ப உன் முடிவுதான் என்ன.."
"இதுல என்னோட முடிவு என்ன இருக்கு... எனக்கா மாப்பிள்ளை பார்த்திருக்காங்க... உனக்குத்தான் நிச்சயம் நீதான் முடிவு பண்ணனும்..."
"நந்து ப்ளீஸ் என்னைக் கொல்லாத..."
"நான் கொல்றேனா... நீ ஒண்ணு செய்யி நம்ம காதலைக் கொன்னுட்டு உங்க வீட்ல நிச்சயம் பண்ற சரண்யாவை கட்டிக்க... நான் வாறேன்... பை..."
"நந்து..."
"அவனது கத்தலை பொருட்படுத்தாமல் சைக்கிளில் ஏறி மிதிக்கலானாள்.
'சை... புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாளே...' என்று நினைத்து தரையில் உதைத்தவன் "சை... என்ன இவள் யாரோ லவ் பண்ணின மாதிரி பேசிட்டுப் போறாள்... சரி டென்சனா இருக்கா... விட்டுப் பிடிப்போம்... ரெண்டு நாள்ல சரியாகும்..' என்று நினைத்தபடி பேசாமல் அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.

நினைவில் இருந்து மீண்டவள் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள். அப்பா அம்மாவா... இல்லை ராகேஷான்னு பார்த்தா எனக்கு அப்பா அம்மாதான் முக்கியம்... ஆனா அவன் காதலிக்கிறேன்னு சொன்னப்பவே முடியாதுன்னு மறுத்திருக்கணும்... அவன் மனசையும் கெடுத்த பாவம் என்னைத்தான் சேரும்... இருந்தாலும் நான்தான் உலகம் என்று இருக்கவங்களை தவிக்க விட்டுட்டு இவனே உலகமுன்னு நம்பிப் போனா இரண்டு பேரையும் கொன்ன கொலைகாரியாயிருவேன்... வேண்டாம்... இதயத்தில் நுழைந்த காதலுக்காக தொப்புள் கொடி உறவை தவிக்க விடணுமா என்ன... இந்தக் காதல் மரித்தால் சில காலம் வலியிருக்கும்... பரவாயில்லை நம்ம பிள்ளை நல்லா படிக்குமின்னு அனுப்புன அப்பா அம்மாவை ஏமாத்திட்டு காதலிச்சதுக்கு தண்டனையா இதை ஏத்துக்கிறேன்... அப்பா இல்லாத அந்தப் பொண்ணு நல்லாயிருக்கணும்... ராகேஷ்கூட நிச்சயம் ஆகி அவனையே நினைச்சு வாழப்போறவளை கல்யாணத்தப்போ நாங்க லவ் பண்றோமுன்னு சொல்லி அவ கனவை கலைக்கனுமா... அது நியாயமா... இல்ல அவளுக்கும் ராகேஷூக்கும் கல்யாணம் நடக்கணும். ராகேஷ் கொஞ்சம் கொஞ்சமா மாறி அவளை நல்லாப் பாத்துப்பான். அவன் நல்லவன்... என்று நினைத்தபடி கல்லில் இருந்து எழுந்தவள் மனதை கல்லாக்கிக் கொண்டு சுடிதாரில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டியவள் காதலையும் அங்கயே விட்டுச் சென்றாள்.

-'பரிவை' சே.குமார்

புதன், 3 அக்டோபர், 2012

ஒலி மூலமாக ஒளி காண்கிறார் ஓர் அமெரிக்கர்


(இது புதிய தலைமுறையில் வெளிவந்த கட்டுரை...  நண்பர் ஒருவர் மூலமாக படித்ததில் பிடித்ததால் பகிர்ந்துள்ளேன்)


நம் எல்லோருக்குமே தெரிந்த அறிவியல் உண்மை இது. வவ்வால்களுக்கு பார்வை இல்லை. ஆனாலும் அவை அடர்த்தியான இரவுகளில் கூட, அனாயசமான வேகத்தில் இரைதேடி பயணிப்பதை கண்டிருக்கிறோம். ஒலி அலைகளை எதிரொலித்து தன்னுடைய புவியியல் சவாலை அவை எதிர்கொள்கின்றன. இதை ஆங்கிலத்தில் echolocation என்கிறார்கள்.

நாற்பத்தியாறு வயது டேனியல் கிஷ் அமெரிக்கர். இவர் பிறந்து பதிமூன்றே மாதங்கள் ஆனபோது கேன்சர் நோயால் முற்றிலும் பார்வை இழந்தார். எக்கோலொகேஷன் முறையில் பார்வையுள்ளவர்களுக்கு இணையாக அன்றாட வாழ்வியலை மேற்கொள்கிறார். இவரே தன்னிச்சையாக, யாருடைய ஆலோசனையுமின்றி பார்வை சவாலை எதிர்கொண்ட முறை இது. இவரது இந்த தன்மையை ஒரு சினிமா ஹீரோவுக்கு சித்தரித்து, தமிழில் ‘தாண்டவம்’ என்கிற படம் வெளியாக இருக்கிறது. அப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னைக்கு வந்திருக்கிறார் டேனியல்.

‘புதிய தலைமுறை’ உடனான பிரத்யேக உரையாடலுக்கு ஒப்புக்கொண்டவரை நட்சத்திர ஓட்டல் அறையில் சந்தித்தோம். யாருடைய உதவியுமின்றி டேனியல் தனியாகதான் தங்கியிருக்கிறார். துணைக்கு யாரையும் ஊரில் இருந்து அழைத்து வரவில்லை. அவர் பார்வையற்றவர் என்கிற எண்ணமே ஓட்டல் பணியாளர்களுக்கு சற்றும் ஏற்படவில்லை. பார்வையற்றவர்கள் வழக்கமாக குளிர்கண்ணாடி அணிவார்கள். அவர்கள் மற்றவர்களை பார்த்து பேசும்போது விழி வேறு திக்கை நோக்கும் என்பதால் உரையாடல் சிரமமாக இருக்கும் என்பதற்காக இந்த ஏற்பாடு. டேனியல் நம் கண்களை நேருக்கு நேராக பார்த்துப் பேசுகிறார். “நீங்கள் ஒளி மூலமாக உலகை எதிர்கொள்வதைப் போல, நான் ஒலி மூலமாக எதிர்கொள்கிறேன். இரண்டுமே ஆற்றல்தான். இவற்றுக்கிடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. ஒளிக்குப் பதிலாக ஒலி. அவ்ளோதான்”

பார்வையற்றவர் என்று நினைத்து அவரை யாரேனும் தொட்டுப் பேசினால் கோபப்படுகிறார். “எப்போதும் மற்றவரை இப்படி தொட்டு தொட்டுதான் பேசுகிறீர்களா? நீங்கள் எதிரே சோஃபாவில் அமர்ந்திருப்பது எனக்கு நன்றாக தெரிகிறது. அங்கிருந்தே பேசுங்கள்” என்று செல்லமாக கடிந்துக் கொள்கிறார். புகைப்படங்களுக்கு இயல்பாகவே ‘போஸ்’ கொடுக்கிறார். “இடது பக்கம் திரும்புங்கள், லேசாக வலது பக்கம்” என்று நம் புகைப்படக்காரரின் கோரிக்கைகளுக்கு மிகச்சரியாக செவிசாய்க்கிறார்.

“சிறுவயதில் தூக்கம் எனக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. பார்வையற்றவனுக்கு எது பகல், எது இரவு என்று தெரியாது இல்லையா? பல நாட்களில் என் பெற்றோர் இரவுகளில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நான் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். இரவுகளில் கேட்கும் ஒலி மிக மிக துல்லியமானதாக இருக்கும். அவற்றை அடையாளம் கண்டு வித்தியாசம் உணர்ந்து, ஒவ்வொரு ஒலிக்கும் கற்பனையில் ஒரு தோற்றம் கொடுக்க ஆரம்பித்தேன். எதையாவது கண்டதுமே உங்கள் மூளைக்குள் ஒரு ‘இமேஜ்’ எப்படி தோன்றுகிறதோ, அதுமாதிரியே எதையாவது கேட்டதும் என் மூளைக்குள்ளும் ஒரு ‘இமேஜ்’ உருவாகிறது.

என் வீட்டுக்குப் பின்னால் நான் விளையாட நீளமான வராந்தா மாதிரியான பகுதி இருந்தது. அது என்னுடைய ராஜ்ஜியம். அந்த வராந்தாவுக்கு அந்தப் பக்கமாக பெரிய காம்பவுண்டுச் சுவார். இங்கே விளையாடும்போது ‘சீட்டி’ அடித்து ஒலியெழுப்பி, அது சுவரில் பட்டு எதிரொலிப்பதை ஆர்வமாக கவனிப்பேன். நாளாக நாளாக இம்மாதிரி சீட்டியடித்து, எனக்கும் எதிரில் இருக்கும் ஏதோ பொருட்களுக்குமான தூரத்தையெல்லாம் சுலபமாக கணிக்க ஆரம்பித்தேன். நாளாக, நாளாக இந்த திறமை எனக்குள் வளர்ந்துக் கொண்டே போனது. பெற்றோரின் அபரிதமான ஆதரவும் இருந்ததால் ஒரு கட்டத்தில் நான் இந்த விஷயத்தில் ‘மாஸ்டர்’ ஆகிவிட்டேன்.

பள்ளி, கல்லூரிகளுக்கு போகும்போதெல்லாம் நான் மற்ற மாணவர்களைப் போல சாதாரணமாகவே இருந்தேன். பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடம் தேர்ந்தெடுத்து சிறப்பாக தேறினேன். எனக்கு கார், மோட்டார் பைக் ஓட்டத் தெரியாதே தவிர, சைக்கிளை சிறப்பாக ஓட்டத் தெரியும். சைக்கிளை வைத்து மலைகூட ஏறுவேன் தெரியுமா?”

பேசிக்கொண்டே லேப்டாப்பை திறந்து வேகமாக ஏதோ பணிகளை கவனிக்க ஆரம்பித்தார்.

“லேப்டாப்பெல்லாம் பயன்படுத்துகிறீர்களா?”

“இரண்டுவகையான லேப்டாப்புகளை பயன்படுத்துகிறேன். ஒன்று நீங்கள் பயன்படுத்தும் அதே ஆப்பிள் வகை லேப்டாப். இதில் ஆணைகளை எல்லாம் ஒலியாக மாற்றும் சிறப்பு மென்பொருள் இருக்கிறது. இதைவைத்துதான் என் வேலைகளை பார்த்துக் கொள்கிறேன். ‘தாண்டவம்’ படம் தொடர்பாக உங்கள் ஆட்கள் என்னோடு முழுக்க முழுக்க ஈமெயில் மூலமாகதான் பேசினார்கள். இது தொடர்பாக மட்டுமே கிட்டத்தட்ட இருநூறு ஈமெயில்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். இன்னொரு வகை லேப்டாப் பார்வையற்றவர்களுக்கானது. இது எப்படி இயங்குகிறது என்று உங்களுக்கு சொல்லி புரியவைக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை”

“இந்த லேப்டாப்பின் வடிவத்தை நீங்கள் மனதுக்குள் எப்படி உணர்கிறீர்கள்?”

“ஒரு வடிவத்தை நீங்கள் உணர்வதற்கும், நான் உணர்வதற்கும் நிச்சயமாக வித்தியாசமிருக்கிறது. நீங்கள் சொல்வதைப் போல செவ்வகம், சதுரம், வட்டம் என்றெல்லாம் நான் உணர்ந்துக் கொள்வதில்லை. என் மனதுக்குள் ஒவ்வொரு பொருளுக்கும் நான் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘இமேஜ்’ வேறானது. தனித்துவமானது. ஆனால் செயற்கையாகவோ, இயற்கையாகவோ உலகில் அமைந்திருக்கும் எல்லாவற்றையுமே நான் உங்களுக்கு இணையாக புரிந்துகொள்கிறேன் என்பதுதான் மேட்டர்”

“பேஸ்புக், ட்விட்டர் மாதிரியான சமூகவலைத் தளங்களில் இயங்குகிறீர்களா டேனியல்?”

“உருப்படியாக பயன்படுத்துவதற்கே நேரம் போதவில்லை. இதெல்லாம் வேறா? மின்னஞ்சலை வாசித்து பதில் சொல்லவே சரியாக இருக்கிறது. ஆனால் எனது நிறுவனத்துக்கு ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் கணக்கு உண்டு”

‘வேர்ல்ட் ஆக்சஸ் ஃபார் ப்ளையண்ட்’ என்கிற லாபநோக்கில்லாத நிறுவனத்தை பண்ணிரெண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் டேனியல். உலகமெங்கும் வாழும் பார்வையற்ற குழந்தைகளின் திறனை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம். சுயமாகவே தான் கண்டறிந்த எக்கோலொகேஷன் முறையை, இதுவரை குறைந்தபட்சம் 500 பார்வையற்றவர்களுக்கு போதித்திருக்கிறார் இவர். வாழும் அதிசயம் என்பதால் இவரது முறை குறித்து பல்கலைக்கழகங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, இவரது மூளை எக்கோலொகேஷன் க்கு ஏற்றவாறாக மாற்றம் கண்டிருப்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

“எங்கள் ஊர் எப்படியிருக்கிறது?”

“பார்ப்பவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்பவரிடம் கேட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். ஏற்கனவே ஒருமுறை கொல்கத்தா சென்றிருக்கிறேன். மற்ற நகரங்களை ஒப்பிடும்போது உங்கள் சென்னை ரொம்ப அமைதியான நகரம். ஒலிமாசு குறைவு. அன்பாகவும், பண்பாகவும் நடந்துக் கொள்கிறீர்கள். கய்யா முய்யாவென்று கத்தாமல் அமைதியாக பேசுகிறீர்கள். சாந்தமான சுபாவம் கொண்டவர்கள் தமிழர்கள்” ஜில்லென்று நம் தலையில் டன் கணக்காக ஐஸ் வைத்தார் டேனியல்.

(நன்றி : புதிய தலைமுறை)

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

தெருக்கூத்து என்ற நாடகம்.



எங்கள் பகுதியில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் கோவில் திருவிழா என்றால் எதாவது ஒரு கலை நிகழ்ச்சி இருக்கும்... அது நாடகம் அல்லது கரகாட்டம், ஒயிலாட்டம் என எதாவது ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். திருவிழாவின் நிறைவு நாளில் விருந்து உபசரிப்புடன் விழாவை சிறப்பிக்க கலை நிகழ்ச்சிகள் வைப்பது என்பது தொடரும் மரபு. இந்த மரபு காலப்போக்கில் மாறியிருக்கிறதே தவிர நிகழ்ச்சி வைக்க வேண்டும் என்பதில் மாற்றம் வரவில்லை. சில வருடங்களுக்கு முன் திருவிழா தினத்தை அலங்கரிப்பதில் எங்கள் பகுதியில் முதலிடம் பிடித்திருந்தது கூத்து எனப்படும் நாடகம்தான். வள்ளி திருமணம், பவளக்கொடி, அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, அர்ச்சுனன் தவசு, தூக்குத் தூக்கி என ஏதாவது ஒரு நாடகம் வைப்பார்கள். பெரிய கோவில் திருவிழாக்களில் மூன்று நான்கு நாடகங்கள் கூட நடத்தப்படும்.
விழாவின் முக்கிய நாளன்று இரவு பத்துமணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிங்கார கலையரங்கில் நாடகம் நடத்தப்படும். ஆர்மோனியம் பின்பாட்டுடன் விடிய விடிய நடக்கும் நாடகத்தை காண வந்திருக்கும் கூட்டம் விடியும் வரை அமர்ந்து பார்க்கும் சிலர் நாடகம் பார்த்த இடத்திலேயே கிடந்து உறங்குவார்கள். பிரார்த்தனைக்காக நாடகம் வைப்பவர்கள் பெரும்பாலும் வள்ளி திருமணம்தான் வைப்பார்கள். ஏனென்றால் மற்ற நாடகங்கள் எல்லாம் சோகமாய் இருக்குமாம். சந்தோஷமானதாகதான் வைக்க வேண்டும் என்பதால் பிரார்த்தனைக்காரர்களின் தேர்வு வள்ளி திருமணம்தான்.
நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும் போது எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வள்ளி திருமணம் நாடகம் வைப்பதற்காக கோவிலுக்கு நேராக வயலில் உயர்வான வரப்புப் பகுதியில் சமன் செய்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. திருவிழா அன்று பகலில் சரியான மழை. இரவில் தென்னங்கீற்று, பனைஓலை போன்றவற்றை போட்டு அமர்ந்து நாடகம் பார்த்ததாக ஞாபகம். அதன் பிறகு நம்ம ஊருக்கு நாடகம் ராசியில்லை என்று ஒதுக்கிவிட்டார்கள். இருப்பினும் இன்றும் அந்த நாடகமேடை அமைந்த இடம் கூத்துப் பொட்டல் என்றால்தான் தெரியும். அதன்பிறகு திருவிழா பேச்சு வந்தால் நாடகம் வைக்க வேண்டும் என்று சொல்லியே நாங்கள் கல்லூரி வரும்வரை திருவிழா நடக்காமலே இருந்ததும் அதன் பிறகு நாங்கள் களத்தில் இறங்கியதும் தனிக்கதை.
சரி அந்தக் கூத்தை விட்டுட்டு இந்தக் கூத்துக்குள் வருவோம். நாடக நடிகர்களில் சிலருக்கு நல்ல பெயர் இருக்கும் 'எப்பா கண்டதேவியில அஞ்சாம் திருவிழாவுக்கு வள்ளி திருமணம் கூத்து வச்சிருக்காகளாம்... நம்ம மணி கடையில நோட்டீஸ் பாத்தேன்' என்று தேவகோட்டையில் இருந்து வரும் ஒருவர் சொன்னால் போதும் 'யாரு முருகன்?' என்று கேட்டு ஒரு கூட்டம் கூடும் இன்னார் என்றால் போதும் நாடகப் பிரியர்கள் வாயெல்லாம் பல்லாக 'அப்ப நல்லாயிருக்கும்' என்று சொல்வார்கள். முருகனுக்கு மணிமாறன், ஸ்ரீராம் என்றால் அப்ப தர்க்கம் நல்லாயிருக்கும் என்பார்கள். வள்ளியா கரூர் இந்திரா வரணும்ப்பா... மணிமாறனும் இந்திராவும் நடிச்சா அந்த நாடகம் அருமையா இருக்கும்... அதோட நாரதருக்கு இப்ப வந்திருக்கான்பாரு உருவாட்டி தமிழரசு அவனைப் போடணும்... ஆளு குட்டையா இருந்தாலும் போற இடமெல்லாம் பிச்சு உதறுரானாமே என்று பெரிசுகள் 'ஜொல்'லுவார்கள். அதேபோல் அரிச்சந்திர மயான காண்டம் என்றால் காமராஜ் நடிச்சாத்தாம்ப்பா நல்லாயிருக்கும் அப்படின்னு நடிகர்கள் பார்த்து நாடகம் பார்க்க கூட்டம் வரும்.
சரி... இந்த நாடகம் இப்போ என்னாச்சு... கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கிப் போகிறது என்றே சொல்லலாம். காரணம் என்னவென்றால் இப்ப திருவிழாக்களில் நாலு மணி நேரம் ஆர்க்கெஸ்ட்ரா வச்சி அதுல நாலு பேரை நடுவில் ஆடவிட்டு விழாவை சிறக்க வைத்துவிடுகிறார்கள். இரவு முழுவதும் விழித்து நாடகம் பார்க்க யாரும் விரும்புவதில்லை. மேலும் கரகாட்டம் என்ற ஒரு அற்புத கிராமியக் கலை நிகழ்ச்சி ஆபாசம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு இரட்டை அர்த்த வசனங்களோடு தன்னை மாற்றிக் கொண்டு வலம் வர ஆரம்பித்ததும் நாடகம் சற்றே எட்டி நின்று வேடிக்கை பார்த்தது. 
போட்டிக் களத்தில் குதிக்க நாடகமும் ஆபாசம் என்னும் ஆடையை கையில் எடுத்தது. ஆரம்பத்தில் பபூன், டான்ஸ் இருவரும் கரகாட்டத்தைவிட கேவலமாக ரெட்டை அர்த்த வசனங்களில் பேச, அதை பார்க்க ஒரு கூட்டம் கூடியது. பபூன் , டான்ஸ் முடிந்ததும் மேடைக்கு முன்பாக அமர்ந்திருக்கும் மக்கள் வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்துவிடும். நாடகக்காரர்கள் பார்த்தார்கள் முருகனையும் வள்ளியையும் அரிச்சந்திரனையும் சந்திரமதியையும் ஆபாச கூட்டுக்குள் அடைத்துவிட்டார்கள். இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நாடகம் என்ற கலை ஆபாச நிகழ்ச்சியாக மாறிப் போனது. 
இப்போதெல்லாம் இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளை திருவிழா நடத்துபவர்கள் விரும்புவதில்லை. நாலைந்து நாடகங்கள் நடத்தும் கோவில் திருவிழாக்களில்கூட ஆடல் பாடலும் ஆர்க்கெஸ்ட்ராக்களும் முக்கிய இடம் பிடிக்க நாடகம் என்பதை மறக்காமல் இருக்க போனால் போகிறது என்று ஒன்று மட்டும் நடத்தப்படுகிறது. எப்படியோ ஒரு சில இடங்களில் நாடகங்கள் நடத்தப்படுவதால் இன்னும் எங்கள் பகுதியில் நாடகக் கலை அழியாமல் காப்பாற்றப்படுகிறது என்பது சற்று சந்தோஷமான விஷயமே.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊரில் நாடகம் வைக்கலாம் என்று முடிவு செய்து வள்ளி திருமணம் வைத்தோம் வடிவேலு சொல்கிற மாதிரி ஆரம்பம் நல்லாத்தான் போச்சு... நல்ல கூட்டம் கூடியிருந்தது. கரகாட்டம் வைத்தாலே கூட்டம் வராத எங்கள் ஊரில் நாடகத்துக்கு எதிர்பார்த்தைவிட அதிகமான கூட்டம் வந்தது கண்டு எங்களுக்கே ஆச்சரியம். ஆனா நேரம் ஆக ஆக எல்லாரும் போயாச்சு... நாலஞ்சு ஆளுக மட்டும்தான் இருந்தாங்க... 
விழாக் கமிட்டிங்கிற பேர்ல இருந்த பெரிசுகள்ல எங்கப்பா, மெதுவா எங்க சித்தப்பாக்கிட்ட தம்பி இருக்கான்... எனக்கு உறக்கம் வருது என்று என்னைய கோர்த்து விட்டுட்டு தூங்கப் போக...  மெதுவாக ஒவ்வொரு ஆளா கழண்டுக்கிச்சு... எங்க ஐயா ஒருத்தரு, நான் எங்க சித்தப்பா, மச்சான், மாமன் என இன்னும் சிலரும் இருக்க முருகனா வந்தவருக்கு வெற்றிடத்தைப் பார்த்து எவ்வளவு நேரம்தான் மேயாத மானைத் தேடுறதுன்னு கஷ்டமாயிருச்சு... எங்க சித்தப்பாக்கிட்ட அண்ணே இதோட முடிச்சுக்குவோம்... யாருமே இல்லாத கடையில நான் எப்படி டீ ஆத்துறதுன்னு கேட்டாரு... சித்தப்பாவும் பாத்தாரு... அவரு சொல்றதுல ஒரு நியாயம் இருக்குன்னு சரியின்னு சொல்ல... ஆறு மணி வரைக்கும் கத்த வேண்டியவரு சந்தோஷத்துல மானையும் தேடலை மத்ததையும் பாக்கலை வேகவேகமாக வள்ளியை கட்டிக்கிட்டு பொயிட்டாரு. 
இன்றைய நிலமையில் கூத்துக் கலை அழிந்து வருவதற்கு சரியான வரவேற்பு இல்லாததுதான் முக்கியக் காரணம் என்றாலும் கால ஓட்டத்தில் கதைகளை குறைத்து இரட்டை அர்த்த வசனங்களை மட்டுமே நம்பி இன்று கலை இழந்து நிற்கிறது என்பதுதான் உண்மை... மேலும் இனி வரும் காலங்களில் யாரும் இரவு முழுவதும் விழித்து நாடகங்களைப் பார்க்கப் போவதில்லை... இப்போது திருவிழாக்களில் ஆடல் பாடல், ஆர்க்கெஸ்ட்ரா போன்றவை தலையெடுக்க ஆரம்பித்ததும் நாடகம் மற்றுமின்றி ஓயிலாட்டம் கரகாட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன என்பதே யதார்த்தம்.

-'பரிவை' சே.குமார்