மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜூன், 2015

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி...கிடைத்ததா?

ண்ணாம் நம்பர் பெல்ட்டின் அருகில் நின்ற நான் வேகவேகமாக ஆறாம் நம்பர் பெல்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் ஒருவித பதட்டம் கலந்த பயத்துடன்...

அங்கே ஒரு சிறிய அலுவலகம்... நடுநாயகமாக சூடான் பெண் ஒருவர் அமர்ந்திருக்க அவருக்கு அருகே பிலிப்பைனைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் பக்கத்தில் ஒரு அரபிப்பெண் அமர்ந்திருந்தார்கள். நான் நேராக சென்று சூடானியிடம் என்னோட பெட்டி காணாமப் போச்சு... யாரோ மாத்தி எடுத்துக்கிட்டுப் பொயிட்டாங்க... அதே மாதிரி பெட்டி ஒண்ணு அங்க இருக்குன்னு சொன்னேன். உடனே இப்பத்தானே வந்தே... பதட்டப்படாதே... புகார் கொடுத்துட்டுப் போ... வந்துரும் என்றார். புகார் கொடுத்துட்டுப் போறது பிரச்சினை இல்லை... அதுல என்னோட சான்றிதழ் இருக்கு... நான் அபுதாபி போகணும்... திரும்ப எப்ப வந்து... எப்ப வாங்குறது என்றேன். உடனே இங்க யாராவது சொந்தக்காரங்க இருந்தா புகார் பேப்பரைக் கொடுத்துட்டுப் போ... அவங்க வாங்கிக் கொடுத்துருவாங்கதானே என்றார். சரி என ஆமோதித்தேன்.

மீண்டும் அவர் ரெண்டும் ஒரே மாதிரி பேக்கா? என்று கேட்டு ஒண்ணு செய்யி வெளியில போயிப் பாரு... யாராவது வச்சிருப்பாங்க... இல்லேன்னா திரும்பி வா என்றார். உடனே வெளியே ஓடினேன். அந்தக் கடைசியில் இருந்து இந்தக் கடைசி வரைக்கும் ஓடினேன்... எல்லோரும் நிக்கிறானுங்க.. என்னோட பெட்டியை எடுத்த புண்ணியவானை மட்டும் காணோம். சரி இனி இங்க நின்னு வேலையில்லையென மறுபடியும் சூடானியை தேடிப் போனா செக்யூரிட்டி உள்ள போகமுடியாதுன்னு சொல்லிட்டான். அப்புறம் அவனுக்கிட்ட விவரம் சொல்ல, அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் இருந்த போனைக்காட்டி அதை போயி எடுத்தியன்னா அவங்களுக்கு ரிங்க் போகும். உன்னைய வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க என்றார். 

அங்கிருந்து அவன் காட்டிய இடத்துக்கு ஓடி போனெடுக்க அவர்கள் பேச, அவர்களிடம் மீண்டும் கதை சொல்ல கொஞ்ச நேரத்தில் அதற்கு அருகில் இருந்த வாயிலின் வழியாக ஒருவர் வந்து கூப்பிட மீண்டும் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்து உள்ளே சென்றேன். அப்போது அந்த தமிழர் வந்து என்ன இல்லையா என்றார். இல்லைங்க மறுபடியும் ஒரு பார்வை பார்க்கட்டுமா என்றேன் ஒரு நப்பாசையில்... இல்லைங்க நான் உள்ளயே போயிப் பார்த்துட்டு வந்துட்டேன். உங்க பேக் இல்லை. நீங்க புகார் கொடுத்துட்டுப் போங்க என்றார்.

சரி ஆனது ஆச்சு... இனி என்ன செய்ய புகார் பண்ணிட்டுப் போவோம் என அவர்களிடம் சென்றேன். என்னைப் பார்த்ததும் என்ன கிடைக்கலையா என்றவர், சரி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆபீசுக்கு போன் பண்ணி தொடர்பு எண் இருக்கான்னு கேட்போம் என்றார். அருகிலிருந்த பெண்ணிடம் சொல்ல அவரோ டேக் (Tag) நம்பர் வேண்டும் என்று சொல்லி என்னை அந்தப் பெட்டியில் இருக்கும் நம்பரைக் குறித்து வா என்றார். உடனே ஒண்ணில் இருந்து ஆறுக்கு ஓடினேன். பேரையும் நம்பரையும் எழுதிக் கொண்டு ஓடிவந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். அவர் ஏர் இந்தியாவுக்கு அழைத்து விசாரிக்க அவர்களோ இன்னொரு நம்பர் அதாவது Sequential Number வேணுமின்னு சொல்லிட்டாங்க. உடனே ஓடிப்போயி பேக்கையே தூக்கிக்கிட்டு வந்தேன். போன் செய்த பெண்ணைக் காணோம். அங்கே ஒரு லெபனானி அதிகாரி அமர்ந்திருந்தார்.

நான் சொல்லும் முன்னே பிலிப்பைனிப் பெண் விவரம் சொல்ல, அவர் ஏர் இந்தியாவுக்கு அழைத்தார். அவர்கள் துபாய் தொடர்பு எண் இல்லை என்றும் இந்தியா எண்தான் இருக்கு என்றும் சொல்லி நம்பரைக் கொடுத்தார்கள். என்னிடம் உனது போனில் இருந்து தொடர்பு கொள் என்றார். ஐயா சாமி ஊருக்குப் போயி நாப்பது நாளைக்கு மேலாச்சு. போன்ல இங்க கூப்பிடத்தான் காசிருக்கு.. ஊருக்கெல்லாம் கூப்பிடணுமின்னா கார்டு போட்டாத்தான் முடியும்ன்னு சொல்ல, அப்ப புகார் கொடுத்துட்டுப் போ என்றார். பின்னர் என்ன நினைத்தாரோ அவரே போன் பண்ணிட்டு சுவிட்ச் ஆப்ல இருக்கு... புகார் கொடுத்துட்டு போ என்று சொல்லி அதில் என்னென்ன இருந்தது என விவரமாகக் கேட்டு  எனது போன் நம்பர் விவரம் எல்லாம் போட்டு புகார் பதிவு பண்ணி ஒரு பேப்பரைக் கொடுத்து உங்க பெட்டி வந்ததும் போன் பண்றோம். வந்து வாங்கிக்கிட்டுப் போங்க என்றார்.

சரி என தலையாட்டிவிட்டு கிளம்ப, அந்த சூடானி வெளியில மறுபடியும் போய்ப்பாரு... ஒருவேளை அவங்க வந்திருந்தா கூட்டிக்கிட்டு வா... என்று சொல்லி அனுப்பினார். என்னடா இப்படி ஆச்சே... சான்றிதழ் எல்லாம் இருக்கேன்னு கவலையோட வந்தேன். வெளியே வந்து எவனாவது நிக்கிறானான்னு தேடினா ரெண்டு பேரு நம்ம பேக்கை வச்சிக்கிட்டு திருவிழாவுல காணாமப் போன பிள்ளைங்க மாதிரி நின்னானுங்க... போயி புடிச்சி ஏன்யா நீ பாட்டுக்கு எடுத்துக்கிட்டுப் பொயிட்டே... ரெண்டு மணி நேரமா நாயா அலையிறேன்னு சொன்னதும் இல்லைங்க எந்தம்பி அவசரத்துல மாத்தி எடுத்துக்கிட்டு வந்துட்டான்... சாரிங்க என்றான் அண்ணன்காரன். ஏங்க உங்க தம்பிதான் கொட்டையெழுத்துல பேரெழுதி வச்சிருக்காரே பின்ன எப்படிங்க... நல்ல ஆளுங்க... சரி விடுங்க... நல்ல நேரத்துல வந்தீங்க... இல்லேன்னா கவலையோட அபுதாபி போயிருப்பேன்னு சொல்ல எப்படி உள்ள போறதுன்னு கேட்டானுங்க... வாங்கன்னு மீண்டும் போன்... அந்தத் தமிழர் வந்து சொன்னேன்ல கெடச்சிருச்சு பாருங்க என்று கூட்டிச் சென்றார்.

அந்த சூடானி பாத்துட்டு கிடைச்சிருச்சா... சேம் சேம் பேக்கா... என்று சொல்லிச் சிரித்தவர். உம்பேரை எழுதிட்டு இப்படி எடுத்துக்கிட்டுப் பொயிட்டியே என்று அவனைப் பார்த்து சத்தம் போட்டார். சாரிங்க அவசரத்துல மாறிடுச்சு என்றான். இனிமே வரும் போது அவசரப்படாம உன்னோட பேக்கை எடுத்துக்கிட்டுப் போகணும் அடுத்தவங்க பேக்கை எடுக்கக்கூடாது என்றார் சிரித்துக் கொண்டே. பின்னர் புகாரை திரும்பப் பெற்று கையொப்பம் இட்டுக் கொடுக்க, அவனிடம் பேக்கை திறந்தியா என்று அந்த சூடானி கேட்க இல்லை என்றான். உடனே நீ திறந்து உன்னோட பொருட்கள் இருக்கான்னு பாரு... குறிப்பா சான்றிதழ் பைல் இருக்கான்னு பாரு என்றார். 

நானும் திறந்து பார்த்து இருக்கு என்று சொல்லவும் அவனைப் பார்த்து நீ போ என்றார். உடனே அவன் நன்றி சொல்லிக் கிளம்ப, எங்களுக்கு நன்றி சொல்றது இருக்கட்டும் அவருக்கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டுப் போ... ரெண்டு மணி நேரத்துக்கு மேலாச்சு இந்நேரம் அபுதாபியே போயிருப்பாரு...  என்று சொல்லி என்னிடம் எங்கிருந்து வாறீங்க என்று கேட்டார். இந்தியா, தமிழ்நாடு என்றதும் மத்த ஆளுங்க மாதிரி கிருகிருன்னு (பேசிக்கிட்டே இருப்பது) கத்தாமல் ரொம்பப் பொறுமையா இருந்தாரு... இவரு ரொம்ம்ம்ம்ப்ப்ப நல்லவருன்னு சொல்ல அவனும் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றான். 

இதுக்கு இடையில ஊருக்கும் வேற சொல்லியாச்சா... மனைவியிடம் இருந்து போன் மேல போன் பெட்டி கிடச்சிருச்சும்மான்னு சொன்னதும்தான் அவருக்கு நிம்மதி. பின்னர் நான் பஸ் மாறி.. மாறி... அபுதாபி வந்து சேர பதினோரு மணி ஆயிருச்சு... வந்ததும் குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடினேன்.

நம்ம நிலைதான் இப்படின்னா... ஊருக்கு வந்திருந்த அண்ணன் சிங்கப்பூருக்கு திங்கள்கிழமை போச்சு... அதோட பெட்டியும் இதே கதையில மாறி, புகார் பண்ணி... இவனுக வந்து வாங்கச் சொன்னானுங்க... அவனுங்க அழகா அன்று மாலையே அலுவலகத்துக்குக் கொடுத்து விட்டுட்டானுங்க... நான் என்னண்ணே போயாச்சான்னு கேட்டா உன்னைய மாதிரியே நானும் பெட்டியை தொலச்சிட்டேம்ப்பான்னு சொல்லிச் சிரிக்கிறார். இது எப்படியிருக்கு...

-'பரிவை' சே.குமார்.

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி


ந்த முறை ஊரில் இருந்து வரும்போது கொண்டு வந்த பெட்டி மாறிய கதையை பகிர்ந்துக்கலாம் என்றுதான் இந்தப் பகிர்வு.

எப்போது ஊருக்குச் சென்றாலும் திரும்பி வரும்போது சந்தோஷ மனநிலை இருப்பதில்லை என்பதை குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வாழும் எல்லோரும் மறுப்பதில்லை. எனக்கும் எப்போதும் அதே நிலைதான் என்றாலும் இந்த முறை இங்கு... அங்கு... என கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் குடும்பத்துடன் செலவிட்டு விட்டு தனியாக திரும்புவதென்பது மிகப்பெரிய கஷ்டமாக இருந்தது. எப்பவும் கைப்பை போக, லக்கேஜில் எனக்கு உறவினர்களுக்கு என பொருட்கள் கொண்டு வருவேன். இந்த முறை சோகமே உருவாக வரும் நிலை என்பதால் எதுவும் வாங்கவில்லை. மனைவி வற்புறுத்தியும் எதுவும் வாங்க விரும்பவில்லை.

எனவே கைப்பையில் எனக்கும் உறவுகளுக்குமான பொருட்களை எடுத்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்துக்கு ஐத்தானுடன் வந்து சேர்ந்தேன். உள்ளே நுழைந்ததும் மிஷினில் பையை சோதனை செய்த அதிகாரி உள்ள என்னமோ இருக்கு... திறங்க பாக்கணுமென்றார். மாம்பழம், டிரஸ், இனிப்புக்கள் என்னோட சான்றிதழ்கள் இருக்குன்னு சொன்னாலும் திறக்கச் சொல்லி நின்றார். எனவே திறந்து காண்பிக்க, மின்சாதனம் எதுவும் வச்சிருக்கீங்களா? காட்டுதே... அப்படின்னு மறுபடியும் கேட்டார்... இல்லைங்க இதுதான் இருக்கு என்று சொல்லவும் சரி போங்க என்றார். 

எடை போட்டு நமக்கான பயணச்சீட்டு கொடுக்குமிடத்தில் எடை போட்ட பையன் கையில கொண்டு போறதை விட கொஞ்சம் எடை கூடுதலா இருக்கு நீங்க லக்கேஜ்ல போட்டுடுங்க என்றதும் எப்பவும் போல் சரி என்று சொல்லிவிட்டேன். அது பூட்டியிருப்பதால் சான்றிதழ்களுக்கு பிரச்சினை இல்லை என்ற தைரியத்தில் கொடுத்துவிட்டு ஐத்தானுக்கு கைகாட்டி போகச் சொல்லிவிட்டு இமிக்கிரேஷன் பக்கம் சென்றேன். திருச்செந்தூருக்கு மொட்டை போட்டிருந்ததால் அடையாளம் தெரியலைன்னு திருப்பி விடமாட்டானான்னு ஒரு நப்பாசையுடன் இரவு ஒரு மணிக்கு கிளம்பும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்க்காக 11.30 முதல் காத்திருந்தேன்.

ஒரு வழியாக ஒரு மணிக்கு விமானம் கிளம்பியது. பின்னர் தூக்கம்தான்... திடீரென விமானப் பணிப்பெண் எல்லோரையும் உசுப்பி விட்டு சாப்பிட கொஞ்சம் இடியப்பம், ஒரு லட்டு, சின்ன பப்ஸ், குருமா மாதிரி கடலை போட்டது கொஞ்சம்... அப்புறம் இமயமலை அடிவாரத்தில் எடுத்த தண்ணீர் என்ற கதையுடன் பெயர் பொறிக்கப்பட்ட, குடிக்கவே முடியாத அலண்ட தண்ணீர் கொடுத்தார். அந்த நேரத்தில் எவன் சாப்பிடுவான்... அதுவும் இடியப்பம்... பெரும்பாலானோர் வாங்கி வச்சிட்டு மீண்டும் தூங்க ஆரம்பிக்க நானும் அப்படியே.

இறங்கியாச்சு... பஸ்ஸில் ஏறி இமிக்கிரேஷன் போனா சந்தையில நிக்கிற மாதிரி கூட்டம்... அதுல நீந்தி எல்லாம் முடிந்து லக்கேஜ் எடுக்கப் போனா... கன்வேயர் பெல்ட்டில் வந்தவற்றை பேர் பார்த்து நிறையப் பேர் எடுத்துக்கிட்டுப் போக... பலர் காத்திருந்தோம்... ஒவ்வொரு ஆளாகப் போக ஆரம்பிக்க... எனக்கு என்னடா இது இன்னும் நம்ம பேக் வரலையே என்ற குழப்பத்துடன் காத்திருந்தேன். கூட்டம் காலி... அப்போதுதான் ஒரு பேக் வந்தது... என்னோட பேக் போல... இருந்தாலும் இது நம்ம பேக் இல்லையே என ஒரு முறை சுத்த விட்டேன்.. பின்னர் எதுவும் வராததால் ஒரே மாதிரி இருக்கவும் மாத்தி எடுத்துக்கிட்டுப் போயிட்டானுங்களோன்னு அந்த பேக்கில் ஒட்டியிருந்த ஏர்போர்ட் பேப்பரில் பேரைச் பார்க்க குருசாமி திவாகர்ன்னு இருந்துச்சு... ஆஹா.... மாத்திக் கொண்டு பொயிட்டான்டான்னு பார்த்தா... பேக்குல திவாகர்ன்னு கொட்டை எழுத்துல எழுதி வச்சிருக்கான் அந்த அறிவாளி.

சான்றிதழ்கள் எல்லாம் இருக்கேன்னு ஒடிப்போயி ஒரு அரபிக்கிட்ட என்னோட பேக் மிஸ்ஸாயிடுச்சுடான்னு சொன்னே... ஒகே... நோ பிராப்ளம்ன்னு சொல்லிட்டு ஒருத்தனைக் காட்டி அவன் இந்தியன் அவனுக்கிட்ட கேளு உதவுவான்னு சொன்னான். உடனே அந்த மலையாளிக்கிட்ட போயிச் சொன்னேன். அவன் அருகிருந்த நம்ம தமிழனிடம் சொல்ல, ஒண்ணும் பயமில்லைங்க... தினம் தினம் இது நடக்கிறதுதான்... தெரியாம மாத்தி எடுத்திருப்பாங்க... வந்துரும்... அந்தா அந்த ஆறாவது பெல்ட் இருக்குல்ல அதுக்குப் பக்கத்துல ஆபீஸ் இருக்கு... அங்க புகார் பண்ணுங்க... என்றார். சான்றிதழ் எல்லாம் இருக்குங்க அதான் பயமா இருக்கு என்றதும் ஒண்ணும் பிரச்சினை இல்லை... அந்தாளோட பேக் இங்கதானே இருக்கு... கண்டிப்பா வருவாங்க... போங்க போயி புகார் பண்ணிட்டுப் போங்க என்றதும் ஒண்ணாம் நம்பர் பெல்ட்டின் அருகில் நின்ற நான் வேகவேகமாக ஆறாம் நம்பர் பெல்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

(மீதிப் பகிர்வு மாலை...)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 12 ஜூலை, 2013

தொட்டிப் பாலம் - கேமரா சண்டை

நாங்கள் நாகர்கோவில் போயிருந்த போது தொட்டிப்பாலம் சென்றதையும் அங்கு ஒரு பெண்ணுடன் சண்டை போட நேர்ந்தது என்பதையும் போன பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா. எதற்காக சண்டை... ஏன் சண்டை போட்டோம் என்பதை இப்போது பார்க்கலாம்.


நாங்கள் சென்ற அம்பாஸிடர் புதிய வண்டியல்ல... கதவில் கண்ணாடி என்பது இருக்கு... ஆனா இல்லை ரகம்தான். எதுவும் இல்லாததால் கைப்பைகளை மட்டும் காரில்வைத்துச் சென்றோம்... கேமராவில் சார்ஜ் இல்லை என்பதால் அதையும்  கைப்பையிலேயே வைத்துச் சென்றோம்... நுழைவுச் சீட்டு எடுத்து உள்ளே சென்ற பிறகு, ஸ்ருதி, விஷாலை என் மனைவி பாத்ரூம் கூட்டிச் சென்றார். நாங்கள் நின்று கொண்டிருக்க, நண்பனின் மனைவி 'கார் சன்னல் சரியில்லை... கேமராவை எடுத்து வருகிறேன்' என்று சொல்லி எடுத்து வரச் சென்றார்.

அதைக் கவனித்த அங்கு கடை வைத்திருக்கும் பெண், 'சார்... கேமராவுக்கு டிக்கெட் வாங்கணும்... இல்லைன்னா உள்ள கொண்டு போக விடமாட்டேன்' என்றார்.

நான் சொன்னேன் ' பேட்டரியில சார்ஜ் இல்லைம்மா... போட்டோ எடுக்க முடியாது... சும்மா கொண்டு போறதுக்கு எதுக்கு டிக்கெட்' என்றேன்.

'அதெல்லாம் தெரியாது... டிக்கெட் வாங்கிக்கிட்டுத்தான் போகனும்' என்றார்.

'இந்தாம்மா... சார்ஜ் இல்லாத பேட்டரிய கழட்டி நீயே வச்சுக்க... வந்து வாங்கிக்கிறேன்'

'சார் டிக்கெட் வாங்குங்க... வியாக்கியானம் பேசாம...' என்றதும் நண்பன் கோபமாக 'வியாக்கியானம் பேசுறமா... தெரியுமா?'  என்றார்.

'டிக்கெட் வாங்குகன்னா... எதுக்கு சார் வீணாவுல பேச்சை வழக்குறீங்க?' என்றார் அந்தப் பெண்மணி.

நான் உடனே 'இந்தாம்மா கேமரா... நீ வச்சிக்க... வண்டியில பாதுகாப்பில்லை... வந்து வாங்கிக்கிறேன்' என்றேன்.

'நல்ல வண்டியியல வந்திருக்கணும்... ஒட்ட வண்டியியல வந்தா... டிக்கெட் வாங்கு... சும்மா பேசாமா...'  அந்தப் பெண் எகிறலோடு ஒருமைக்குத் தாவினாள்.

'என்ன வாங்கு... வா.. போவா... என்ன நெனச்சிக்கிட்டே... யார்க்கிட்டே பேசுறே..?' என நண்பன் கோபமானான். அப்போது அங்கு வந்த அந்தப் பெண்ணின் சங்கிலி போட்ட மகன், 'என்ன கத்துறே...?' என்று வார்த்தைகளை விட்டான்.

நண்பனின் மனைவி 'என்னம்மா பேசுறீங்க... அவன் வேற கத்துறீங்கங்கிறான்... இந்தக் காசு ஒண்ணும் பெரிசில்ல... கேமரா யூஸ் பண்ணப் போறதில்லை... அதுக்கு எதுக்கு வாங்கணும்... சும்மா தூக்கிக்கிட்டுப் போறதை... இங்க வச்சிட்டுப் போறோம்... இந்தாங்க நீங்களே வச்சிக்கங்க... வந்து வாங்கிக்கிறோம்...  அதுக்கு எதுக்கு இப்படி சண்டைக்கு வாறீங்க...' அப்படின்னு கேக்க,

'ஏய்... நீ போ... என்ன குதிக்கிறே?' என்றான் சங்கிலித் தம்பி.

சாதாரணமாகவே நண்பனுக்கு கோபம் வரும்,கல்லூரிப் புரபஸரான தனது மனைவியை அந்நியன் ஒருவன் 'வா...போ...' என்று பேச, அவனை நோக்கி 'என்னடா என்ன சொன்னே... செட்டையை ஒடிச்சிருவேன்... யாருக்கிட்ட என்ன பேசுறே...?' என்று வேகமாகினார்.

அப்போது இடையில் வந்த நுழைவுச்சீட்டு கொடுப்பவர், 'அந்தம்மா... கான்ட்ராக்ட் எடுத்து இருக்கு.. அதான் கோபப்படுது... விடுங்க சார்... சீட்டை வாங்கிக்கிட்டு பேசாம போங்க' என்றார். எல்லாம் கூட்டுக் களவாணி போல. 

'எதுக்கு சார் வாங்கணும்?' என்றேன் நான். அதற்கு அவர் பதில் சொல்லும் முன் 'சரி சார்... அந்தம்மா பேசுறாங்க சரி... நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்... இவன் யாரு சார் இடையில... வா... போன்னு பேசிக்கிட்டு... பொழந்துபுடுவோமுன்னு சொல்லி வையிங்க...' கோபமான நண்பன் விடவில்லை.

'ஏய் எதுக்கு தொண்டத்தண்ணிய வேஸ்ட் பண்றே... டிக்கெட் வாங்கிக்க... போ... போ...' பையன் துள்ளினான். 

அவனது பேச்சில் சூடான நண்பர் அவனை அடிக்க ஓடினார். நாங்கள் 'விடுங்க.. அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் எனத் தடுத்தோம். அப்போது பார்த்து நுழைவுச் சீட்டு கொடுப்பவர் ' என்ன ஓவராப் போறிங்க... இங்க இருந்து திரும்பிப் போக முடியாது பாத்துக்கங்க...' என்று எல்லா சுற்றுலாத் தளங்களிலும் சொல்லும் டயலாக்கை ரகுவரன் மாதிரி சொல்ல எனக்கு சிரிப்பு வந்தது, அய்யாக்களா டயலாக்கை மாத்துங்கப்பா...

"என்ன... திரும்பிப் போக முடியாதா... வா போட்டுப் பாப்போம்... ' என அவரை பிடித்து நண்பர் இழுக்க, நாங்களும் சத்தம் போட்டுவிட்டு நண்பரை சமாதானப்படுத்தி, கேமராவை காரிலேயே வைத்துவிட்டு பாத்ரூம் போனதுக்கு தலைக்கு இரண்டு ரூபாய் அவளிடமே அழுதுவிட்டு பாலத்துக்கு சென்றுவிட்டு திரும்பினோம்.

வரும் போது நண்பர் மறக்காமல், 'நான் நாகர்கோவில்தான்  போட்டுப் பாக்குறதுன்னா... பாக்கலாம்... திரும்பவும் வாறேன்... பாப்போம்... நீயா நானான்னு...' என்று சொல்ல நுழைவுச் சீட்டு வாலை ஓட்டுக்குள் நுழைத்துக் கொள்ள, கேமரா சீட்டு தரையில் எதையோ தேட, சங்கிலித் தம்பி நெகத்துல அழுக்கு எடுத்துச்சி. இவர்களாகவே டிக்கெட்டுகளை தயார் பண்ணி வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள் என்பது அங்கு மற்றவர்களிடம் பேசிய போது தெரிந்தது... உண்மையான்னு தெரியலை... எங்களை மாதிரி அவங்களும் சண்டை போட்டிருப்பாங்க போல.

இங்கு மட்டுமல்ல பெரும்பாலான சுற்றுலா தளங்களில் நடக்கும் கொள்ளைதான் இது. எதிர்த்துக் கேட்டால் இங்கிருந்து போயிடுவியான்னு ஒரு மிரட்டல் வேறு... இதெல்லாம் எத்தனையோ எடத்துல பாத்தாச்சு.... நாங்கெல்லாம் பனங்காட்டு நரி... சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

-'பரிவை' சே.குமார். 

செவ்வாய், 15 மே, 2012

கண்ணாடி போட ரத்தம் கொடுங்க...

இன்று என்னுடன் பணி புரியும் பாகிஸ்தான் நண்பர் கண் வலிக்கிறது... கண்ணாடி சரியில்லைன்னு நினைக்கிறேன்... இன்று மாலை கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார். உடனே என் மனதில் ஊருக்கு வந்த போது கண் மருத்துவமனை சென்றது ஞாபகத்தில் வர அதையும் ஒரு பதிவாக்கிட்டோமுல்ல...

கணிப்பொறி பயன்படுத்துவதால் அடிக்கடி தலைவலி வருவதால் டாக்டர் பரிந்துரையின் பேரில் டே-நைட் (பகலிரவு!?) கண்ணாடி பயன்படுத்தி வந்தேன். சென்ற முறை ஊருக்கு செல்வதற்கு முன்னர் கீழே விழுந்து சிதறிவிட்டது. இங்கு விசாரித்தால் யானை விலை சொன்னார்கள். சரி ஊருக்குப் போறோமே அங்க போயி நல்லதா வாங்கிப் போட்டுக்கலாம் என்று நினைத்து இங்கு வாங்கும் எண்ணத்தை மூட்டைகட்டியாச்சு.

ஊருக்குப் போனதும் ஒரு நாள் நகரின் பிரபல கண் மருத்துவமனைக்கு சென்றேன். சென்ற முறையும் அங்குதான் பரிசோதனை செய்து கண்ணாடி வாங்கினேன். அதனால் மீண்டும் அங்கு சென்றேன். நான் சென்ற போது நல்ல கூட்டம். பெயர் சொல்லி... பழைய அட்டை இருக்கா என்ற கேள்விக்கு இல்லை என்று சொல்லி புதிதாய் அட்டை ஒன்று பெற்று அருகில் இருந்த சேரில் அமர்ந்தேன்.

நானும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து இருக்கிறேன்... இருக்கிறேன்... இருந்து கொண்டே இருக்கிறேன்... எனக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் முதல் கட்ட பரிசோதனை பண்ணிவிட்டு இரண்டாவது சோதனைக்கான அறை முன்னர் ஆஜராகிவிட்டனர். பொறுமை இழந்த எனக்குள் இருந்த குமார், என்னம்மா... எவ்வளவு நேரம் இங்க இருக்கிறது... பின்னால வந்தவங்களை எல்லாம் கூப்பிடுறே... நான் இருக்கது உனக்கு தெரியலையா... என்று கொதித்து குமுறினான். இருங்க சார் அடுத்தது நீங்கதான் என்றாள். என்னைப் போல் ஒரு பெரியவரும், ஒரு பாட்டியை கூட்டி வந்த் பேத்தியும் சத்தமிட... அடுத்தடுத்து நாங்கள் அழைக்கப்பட்டோம்.

நானும் உள்ளே சென்றேன். சேரில் அமர்ந்து கண்ணில பரிசோதனை கண்ணாடி வைத்து நம்பரை வாசிக்க சொன்னுச்சு. நல்லாத்தாய்யா வாசிச்சேன்... ஒத்த கண்ண மூடி சொல்லிட்டு உடனே அடுத்த கண்ண தொறந்து இத மூடி படிங்கன்னு சொலலும் போது கண்ணு மங்கலாகுமா இல்லயா அதுதான் நடந்துச்சு... மங்கலா இருக்குன்னு சொன்னேன் பாருங்க... உடனே அந்தப் புள்ள ஒரு புத்தகத்தை எடுத்து அதுல இருக்கதுல சின்ன எழுத்த எடுத்து வாசிங்க பாப்போமுன்னு சவால் விட்டுச்சு... நாம யாரு விடுவோமா... சரியா வாசிட்டுட்டோமுல்ல... அப்புடியும் அந்தப் புள்ள விடலைய்யா... உடனே ஒரு கண்ணாடிய மாட்டி இப்ப படிங்கன்னு சொல்லுச்சு... அதையேதான் படிச்சேன்... ஆனா அந்தப்புள்ள கண்ணாடி போட்டு படிச்சப்போ வேகமா படிச்சீங்க... உங்களுக்கு பார்வை பிரச்சினை இருக்கு... அதுக்கு இந்த கண்ணாடி போடணுமுன்னு ஒரு நம்பரை அட்டையில எழுதுச்சு... அம்மா தாயே கண்ணெல்லாம் நல்லாத்தான் இருக்கு... எனக்கு சும்மா படிச்சப்போவும்  அப்புறம் கண்ணாடி போட்டு படிச்சப்போவும் ஒரே மாதிரித்தான் இருந்துச்சு... பவரெல்லாம் கிடையாது... கணிப்பொறி பயன்படுத்துறதால கண்ண பரிசோதனை பண்ண வந்தேன்னு சொன்னதும் அந்தப் பொண்ணு சரியின்னு சொல்லிட்டு எழுதுன நம்பரை அழிச்சிட்டு எல்லாம் நல்லாயிருக்குன்னு எழுதிருச்சு.



அடுத்த அறைக்கு சென்றதும் அங்கிருந்த பெண், 'உங்களுக்கு இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை பண்ணனும்' என்றார். என்னடா இது கண்ண பரிசோதிக்க வந்த இரத்தம் நீரெல்லாம் எடுக்குறாங்கன்னு... இதெல்லாம் எதுக்கும்மா என்றேன். டாக்டர் உங்களுக்கு பண்ணச் சொல்லியிருக்கிறார் என்றாள். அடப்பாவி மக்கா... வாசல்ல இருந்து பாதித்தூரம் வந்திருக்ககேன்... டாக்டர் அறைப் பக்கமே இன்னும் போகலை அப்புறம் எப்படி டாக்டர் நம்மளை பார்த்தார் என்று நினைத்தபடி... கண்ணாடி போடனுமா வேண்டாமான்னு பாக்க வந்தா இதெல்லாம் எதுக்கு தேவையில்லம்மா... என்று பேசியதும் அந்தப் பெண் சார் சத்தம் போடுவார்... நீங்க அவரு கேட்டா சொல்லிடுங்க என்றாள்.

ஊருக்கு வாறதுக்கு முன்னாலதான் கால் வலிக்கு எல்லா பரிசோதனையும் பண்ணியிருக்கு... அவரு கேட்டா நான் சொல்லிக்கிறேன்னு வெளியில வந்துட்டேன்... வாறவங்களைப் பூராம் அங்க கொண்டு போயி இரத்தம் நீருன்னு கெடா வெட்டிருறாங்கய்யா. ஸ்... அப்பா இப்பவே கண்ணக் கட்டுதேன்னு நெனச்சுக்கிட்டு தலய ஒரு சிலுப்பு சிலுப்பிக்கிட்டு நடக்கிறது நடக்கட்டுமுடா இன்னும் பாதிக் கிணறுதான் பாக்கி நடடா சிங்கமேன்னு  போயி அடுத்த அறையில உக்காந்து மனைவியிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன்.

மறுபடியும் இரத்தம் கேட்ட புள்ள கூப்பிட, டாக்டர் இரத்தம் எடுக்காம விடாதேன்னு கண்டிசன் போட்டுட்டாரோ என்று நினைத்தபடி சென்றேன். பிரஷர் பார்க்கிறேன் என்று பார்த்துவிட்டு உங்களுக்கு சுகர் இருக்கா என்றதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. வரும் போது விட்டம்மா வீட்ல சுகர் இல்லைன்னு சொல்லி வாங்கியாறச் சொன்னாங்க... அதையே இன்னும் வாங்கலையே... அப்புறம் எப்படி நமக்கிட்ட சுகர் இருக்குமுன்னு ஆத்தா உனக்கு எம்மேல அப்படி என்னத்தா கோபம்... நல்லாயிருக்கவனைப் பார்த்து சுகர் இருக்கா... உப்பு நீர் இருக்கான்னு பீதியக் கெளப்புறே என்று கேட்டதும் மற்றொரு பெண் வந்து மீண்டும் பார்த்து எல்லாம் சரியா இருக்குன்னு சொல்லி போய் உக்காருங்க... டாக்டரை பாக்க வரிசையா கூப்பிடுவாங்கன்னு சொல்லிச்சு. ரத்தம் கொடுக்கமாட்டேன்னதும் அந்தப் புள்ளக்கி கோபம் போல... என்ன ஒரு கொலவெறி... அடி ஆத்தி...

கடைசியாக டாக்டர் பரிசோதித்து எல்லாம் சரியா இருக்கு... ஒண்ணும் பிரச்சினை இல்ல... கணிப்பொறி பயன்படுத்தும் போது மட்டும் போட்டுக்கிறதுக்கு ஒரு கண்ணாடி எழுதி தாறேன் அதை வாங்கி போட்டுக்கங்கன்னார். அங்கயே டிசைன்ஸ் பாத்து ஆர்டர் கொடுத்துட்டு வந்தேன்.

அப்புறம் மூன்று நாட்கள் கழித்து போய் வாங்கி வந்தேன். வீட்டிற்கு வந்து பார்க்கிறேன். ஒரு பக்கம் சரியான முறையில் மாட்டாமல் பிசிறு வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது. போய் கேட்டால் அங்கிருந்த பெண் சொன்ன பதிலென்ன தெரியுமா... இதெல்லாம் ஒண்ணும் பண்ணாது சார். நல்லா லாக் ஆகியிருக்கு. அப்படியே வச்சிக்குங்கன்னு அழகா சொல்லிடுச்சு. திரும்ப வாங்கி சரி பண்ணனுமின்னா மறுபடியும் திருப்பி அனுப்பி சரி பண்ணி வாங்கனும் எதுக்கு வேலயத்த வேலையின்னு பதில் சொல்லி திருப்பி அனுப்பியாச்சு.

இதை எதுக்கு சொல்ல வாறேன்னா கிராமத்துல இருந்தோ (நானும் கிராமத்தாந்தான்) அல்லது படிப்பறிவில்லாத அல்லது வயதான யாராவது வந்தால் எல்லா பரிசோதனைகளும் செய்து (ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை எல்லாருக்கும் தேவையா?) பணம் பறிக்கத்தானே செய்வார்கள். அவங்களை சொல்லியும் குற்றமில்லை... டாக்டர் சீட்டுக்காக லட்சங்களை கொடுத்து படித்து வந்து அவற்றை வட்டியும் முதலுமா எடுக்கனுமே... நாமதான் கொஞ்சம் சூதனமா இருக்கணும். டாக்டர்கிட்ட போகும் போது வீட்ல கொஞ்சம் விவரம் தெரிஞ்ச ஆளை கூட்டிக்கிட்டு போகணும். இல்லையின்னா மணிபர்ஸ்க்கு பிரசவம் பாத்து அனுப்பிடுவாங்கய்யா.

-'பரிவை' சே.குமார்

படங்கள் : கூகிள்

புதன், 7 ஏப்ரல், 2010

தங்கமலரும்... அறை மாறிய நிஜக் கதையும்..!

அலை - 1
எனது மழலை இதயம் சிறுகதை சிறுவர்களுக்காக தினத்தந்தி நாளிதழில் வெள்ளியன்று இலவச இணைப்பாக வெளிவரும் தங்கமலர் ஏப்ரல்-2ந்தேதி பதிப்பில் வெளிவந்திருந்தது. சிறுவர்களுக்கான இதழில் வெளியிட்ட ஆசிரியருக்கும் தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி.

அலை - 2
நண்பர் ஸ்டார்ஜனின் வலைப்பூவில் சில புல்லுருவிகள் புகுந்து சேட்டைகள் செய்திருப்பதாகவும் அதனால் அவருக்கு ஏற்பட்ட் மனவலி குறித்தும் இன்று காலை அவரது வலையில் பார்த்தேன். நமக்குள் இருக்கும் முகம் தெரியா நட்புக்குள் நண்பர்கள், தோழிகள், சகோதரர்கள், சகோதரிகள், அம்மாக்கள் என எத்தனையோ உறவு முறைகள்...

எல்லாம் நமக்குள் ரத்த சம்பந்தத்தால் வந்தது என்றால் நிச்சயமாக இல்லை. நமக்குள் இருக்கும் பகிர்தலே காரணம். அப்படியிருக்க கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி பின்னூட்டம் இட  நினைக்கும் கயவர்கள் தயவு செய்து தங்களுக்கென ஓரு வலை விரித்து அதில் என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். உங்களுக்கும் நட்பு கிடைக்கும் உங்களைப் போலவே. தயவு செய்து நல்ல குடும்பத்துக்குள் நாறவாயன் நுழைய வேண்டாம். இதனால் நண்பருக்கு எத்தனை மனவேதனை...!

அவரது நட்பில் உள்ள பெண்கள் பார்த்திருந்தால்...? இனிமேலாவது இது போன்ற பின்னூட்டங்களை தயவு செய்து போடாதீர்கள். ஸ்டார்ஜன் அருமையான எழுத்தாளர். அவரது பகிர்வுகள் அனைத்தும் அருமையானவை. அவர் யாரையும் தாக்கியோ தூற்றியோ எழுதியதில்லை... அப்படியிருக்க அவருக்கேன் இப்படி...?

வலைச்சரத்தில் பட்டயை கிளப்பியதால் வந்த கோபமா என்ன...? யாரா இருந்தாலும் நண்பர்களே இனி இதுபோல் வேண்டாமே..!

அலை - 3
நாங்கள் அறை மாறிய கதை எங்களுக்கு சொல்ல முடியாத மனவலியைத் தந்தது. பிப்ரவரி மாத இறுதியில் நாங்கள் நீண்ட நாட்களாக தங்கியிருந்த கட்டிடம் உடைக்கப்படப்போவதாக நோட்டீஸ் கொடுத்ததால் நாங்கள் வேறு அறை தேடும் பணியில் தீவிரமானோம்.

புரோக்கர்கள் என்ற பெயரில் கொள்ளைக் கூட்டம் ஒன்று அபுதாபியில் அலைவது அப்பொழுதுதான் தெரிந்தது. அறை பிடித்துக் கொடுத்தால் அவருக்கு 1000 அல்லது 2000 திர்ஹாம் கமிஷன் வெட்ட வேண்டுமாம். என்ன செய்ய... நாங்கள் இருந்தது இக்கட்டான நிலையில் எனவே அவர்களிடமும் சொல்லி தேடினோம்.

அதற்குள் நண்பர் மூலமாக கமிஷன் இல்லாமல் ஒரு அறை கிடைத்தது. மார்ச் 2ஆம் தேதி எங்கள் பழைய கட்டிடத்தத்தில் மின்சாரம் எங்கள் தளத்தில் மட்டும் துண்டிக்கப்பட்டது. எனவே அவசர அவசரமாக மாற்றினோம். புதிய அறை நல்ல விசாலமானது. எங்கள் ஆறு பேருக்கு அதிக இட வசதியுடன் இருந்தது. ஆனால் கழிப்பறை மிகவும் மோசமாக இருந்தது. மலையாளிகள் பயன்படுத்தி வந்தனர். சுத்தம் செய்வது என்பது அவர்களுக்கு தெரியாது போலும். அவ்வளவு மோசம்.

கிச்சன் மற்றும் கழிப்பறையில் இருந்து எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே எந்த நேரமும் மழைக்காலத்தில் மாட்டுக் கசாலைக்குள் தேங்கி நிற்கும் மூத்திரம் போல இருந்து கொண்டே இருக்கும். அழகான பால்கனி. நல்ல காற்று அதிலெல்லாம் குறையில்ல.

நாங்கள் போன நேரமோ என்னவோ தெரியவில்லை நாங்கள் போகும்போது இயங்கிக் கொண்டிருந்த லிப்ட், மூன்று நாளில் மூச்சை  நிறுத்திக் கொண்டது.  அதை சரி செய்யும் எண்ணம் கட்டிட உரிமையாளருக்கு எழவில்லை. காரணம் அதுவும் இடிக்கப்பட இருக்கும் கட்டிடமாம். போதுமுடா சாமி...!
கடந்த ஒரு மாதமாக பழனிமலை நடை பயணம்தான், தினமும் ஏறினோம்... இறங்கினோம்... இதனால் வலை (Internet) வாங்கும் எண்ணம் ஏனோ தடையானது. அதனால்தான் தமிங்கிலத்தில் அலுவலகத்தில் இருந்து அவசர... அவசரமான பின்னூட்டங்கள்.

மீண்டும் அறை தேடும் படலம் ஆரம்பிக்குமோ என்று மனசுக்குள் கிலி ஏற்பட ஆரம்பிக்கும் போது உறவினர் ஒருவர் தனது மனைவியை பிரசவத்தின் காரணமாக இந்தியா அனுப்புவதால் அந்த அறையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார். அவரிடம் வினவ, ஏப்ரல் 2ந்தேதி ஊருக்கு செல்ல இருப்பதால் மாறிக்கொள்ளலாம் என்றார்.
அவர் மூலமாக அந்த பிளாட்டின் உரிமையாளரிடம் பேசினால் எதோ வேலைக்கான நேர்முகத்தேர்வு போல் ஆயிரத்தெட்டு கேள்விகள். அதில் தாண்டி வந்தால் நான் கு பேர்தான் தங்கணும், சிகரெட் தண்ணி கூடாது என்ற கட்டுப்பாடுகள். எல்லாம் ஓகேயானதும் மீண்டும் அறை மாற்ற வேலைகள்.  உறவினர் சொல்லிவிட்டு மனைவியை கொண்டுவிட பத்து நாள் விடுமுறையில் சென்று விட்டார்.

இந்த முறை மூன்று மாடிகள் படிகளில் பொருட்களை இறக்கினோம். 29" தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ், கட்டில்கள் எல்லாம் படியின் வழியாக... ஸ்... அப்பாடா என்று புது அறைக்கு வந்தபோது மீண்டும் பிரச்சினை.  வந்த முதல் நாள் மூட்டைப்பூச்சி மருந்து அடிக்கிறோம் என்றார்கள் அப்படியே போட்டுவிட்டு வெளியில் தங்கிவிட்டு மாலை திரும்பினால் நாளைதான் அடிக்கிறோம் என்றார்கள்... வந்ததே பாருங்கள் கோபம்...? ம்.... என்ன செய்ய... நமக்கு அறை வேணுமே... அதனால் அடங்கியது மனசின் எரிமலை...

சரி சாவியை கொடுங்கள் நாங்கள் படுப்பதற்காகவாவது இடம் ஒதுக்கிக் கொள்கிறோம் என்றால் கிச்சன் சாவியை மானேஜர் வாங்கிக் கொண்டுவிட்டார். பேச்சிலர்கள் சமைக்க அனுமதியில்லையாம் என்றான் எங்கள் சாவியை கொடுத்தவன்... மானேஜர் மலையாளி, அவனுக்கு நாங்கள் வருவது பிடிக்கவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது.

அதற்கு மேல் அடங்கியிருக்க, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அமைதி காத்து குடும்பம் நடத்தும் அவரா நாம... நமக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல... அது வாய் வழியாக சற்று வேகமாக இறங்க, இதை எதிர்பார்க்காத சாவியை கொடுக்க வந்த நண்பர் முதலாளிகிட்ட பேசுங்க... என்றார். அவரிடம் சற்று மரியாதை கலந்த சூட்டோடு பேசினோம். அவர் எங்களுக்கு கிரீன் சிக்னல் காட்டினார்.

பின்னர் மேனேஜரிடம் சாவி வாங்கி (அவன் முகத்தில் அணை கட்டியது போலிருந்தது) எல்லாம் சரி செய்து சமைத்து சாப்பிட்டு அறையில் தங்கியாச்சு. பக்கத்துல மலையாளக் கரையாளுங்க, இப்ப பாத்ரூமை குத்தகை எடுத்து உள்ள தூங்குறாங்க போல ... சரி ஆகிறது ஆகட்டும்... போகப் போக நாம எல்லாரையும் பாத்துக்கலமுன்னு மனசை தேத்திக்கிட்டு இருக்கோம். வலை (internet) வாங்கிட்ட நாம பொழப்பு நல்ல போகும்... பார்க்கலாம்.

--'பரியன் வயல்' சே.குமார்

வெள்ளி, 22 ஜனவரி, 2010

வெற்றுடம்புடன் விளைநிலம்



ன்று கதிர்களால் காதலிக்கப்பட்ட எம் வயல்கள் இன்று கருவேல மரங்களின் கட்டுப்பாட்டில்... எங்கு நோக்கினாலும் வயல்களும் விவசாய காலத்தில் பயிர்களுமாக காட்சியளித்த எங்கள் கிராமத்தின் அடையாளம் தொலைந்து வெகு காலமாகிவிட்டது. அடுத்த வயலைக் காணமுடியாத அளவுக்கு கருவேல மரங்களும்... மக்கிய முள்ளுமாய்.

ஒரு காலத்தில் எங்கள் ஊரில் எல்லோர் வீட்டிலும் காளை மாடு இருக்கும். பருவ மழை தொடங்கியதும் ஏர் பிடித்து வயலில் உழுது தொளி அடித்து நாற்றுப் பாவி விடுவோம். மழை அதிகரித்து கண்மாய் நிறைந்தால் அந்த வருடம் பஞ்சமில்லை என்ற நிம்மதி. அதுவும் கண்மாக்குள் இருக்கும் முனியய்யா கோவில் வன்னி மரத்தைச் சுற்றிப் பெருகி முனியய்யாவின் இருப்பிடம் தண்ணீருக்குள் மறைந்தால் கண்டிப்பாக நல்லா விளையும் என்ற நடைமுறை கணக்கு ஒன்று உண்டு.

பார்த்துப் பார்த்து உரமிட்டு பயிர் வளர்ந்ததும் அதைப் பறித்து நடுவார்கள். அதற்கு நாற்றுப் பறித்தல் என்று பெயர். பயிரை பறித்து சிறுசிறு முடிகளாக கட்டி, வேறொரு இடத்தில் பெண்கள் நடுவார்கள். அதற்கு நடவு என்று பெயர். நடவுக்கு வரும் பெண்களுக்கு விதவிதமான சமையல், காபி, பலகாரம் எல்லாம். ரோட்டோரத்தில் நாற்று முடி ஒன்றை வைத்து பாட்டுப்பாடி காசு வாங்கும் அந்தப் பெண்களின் சந்தோஷம்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது.

பயிர் வளர வளர அதை பார்த்துப் பார்த்து சந்தோஷப்பட்ட அந்த தினங்கள்... இப்ப நினைத்தாலும் மனசுக்குள் மழைக்காலம். நட்ட பயிர் நேரே நிமிர்ந்து வளர ஆரம்பித்தால் கருநடை திரும்பிருச்சு என்றும் கருக்கூட ஆரம்பித்தால் பொதி கட்டிருச்சு என்றும் விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளும் அந்த சந்தோஷ தருணங்கள் இப்போது எங்கள் கிராமத்தில் இல்லை.

கதிர் அறுத்து... கட்டு சுமந்து... நெல் அடித்து... அதை தூற்றி... பிணையல் விட்டு... வைக்கோலை... வைக்கோல் படப்பு என்று அழைக்கப்படும் இடத்திற்கு கொண்டு செல்லும் வரையான அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.

பசுமையான இந்த வாழக்கையை எனக்கு அளித்த கிராமம் இன்று பசுமையிழந்து... பொட்டில்லாத முகமாக பொலிவிழந்து கிடக்கிறது. காரணம்... இயந்திரமாகிவிட்ட உலகத்தில் வயலை உழ மணிக்கு இவ்வளவு காசு என்று டிராக்டர்கள் குவிந்துவிட்டன. அதனால் மாட்டிற்கான தேவை குறைய, வீடுகளில் மாடும் குறைந்தது.

நாற்றுப்பாவி நட்டு... எதுக்கு ரெட்டைச் செலவு டிராக்டரை விட்டு உழுதுட்டு விதச்சு விட்டா அறுக்குறதுக்கும் மிஷின் வந்தாச்சு அப்புறம் என்ன ஆளைத்தேடி அலைய வேண்டாம் என்ற எண்ணம் எங்கள் ஊரில் எல்லோர் மனதிலும் வந்த நேரம் விவசாய வேலை குறுகினாலும் விவசாயம் மடியவில்லை என்ற எண்ணம் அதிக நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.




அதிக விலை கொடுத்து உரங்களை வாங்கி பயிருக்கு இட்டு பொதியான சமயத்திலோ அல்லது கதிர் அறுக்கும் சமயத்திலோ பக்கத்து ஊரில் இருக்கும் கோயில் மாடுகள் நாசமாக்க, நாங்கள் அடைந்த அந்த துக்கம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

அதற்காக வயல்களில் குடில் அமைத்து மார்கழிக் குளிரில் எங்கப்பா உள்பட விவசாயிகள் எல்லாம் அவர்களது வயல்களில் இரவில் போய் படுத்தது காவல் இருந்தது. அதுவும் அருகில் சுடுகாடு இருக்க எங்கப்பாவும் சின்னய்யாவும் தத்தம் வயல்களில் இரவு நேரத்தில் படுத்த அந்த நாட்கள் அவர்களுக்கு விவசாயத்தின் மீது இருந்த காதலை பறை சாற்றியது. அப்பா இல்லாத நாட்களில் அம்மா என்னையும் தம்பியையும் போய் பார்த்து வரச்சொல்வார்கள். போவோம் என்றா நினைத்தீர்கள் பாதி தூரம் போய் டார்ச லைட்டை அடித்துப் பார்த்துவிட்டு ஒடி வந்து விடுவோம்.

கோயில் மாடுகளை நிர்வாகம் ஒன்றும் செய்யாத காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் கரைந்தது. இன்று விளைநிலங்கள் எல்லாம் வேலிக்கருவை என்று செல்லமாக அழைக்கப்படும் கருவேல மரங்களின் காடாக மாறிவிட்டது.

ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த் வயல்கள் இப்போது முள்கள் சூழ்ந்து பரிதாபமாய்....

காரணம்... இளைஞர்கள் எல்லாம் வேலை தேடி வெளி நாடுகளில் தஞ்சம்... ஓடி ஓடி விவசாயம் செய்தவர்கள் எல்லாம் காலத்தின் கட்டாயத்தில் முதிர்ச்சி என்னும் விவசாயத்தில்... பலர் பூமி விவசாயம் பொய்த்ததால் மேலே போய்விட்டார்கள். என்ன செய்ய...

பணம் இருக்கும் தோட்ட விவசாயிக்கு மின்சார சலுகை வழங்கும் அரசு சிறிய விவசாயிகளை கண்டு கொல்வது இல்லை என்பதே நிதர்சன உண்மை. உரத்திற்கு மானியம் என்பார்கள் ஆனால் மானியம் யாருக்கு என்பது அவர்களுக்கே வெளிச்சம். சினிமாக் காரனுக்கு தமிழ் பேர் வச்சா வரி விலக்கு கொடுக்கும் அரசு, விவசாயம் செய்தால் என்ன தருகிறது?

விவசாயம் எப்படி செய்வது என்பது விவசாயியின் மகனான எனக்குத் தெரியும் என்பது சந்தோஷம் ஆனால் என் வாரிசுகளுக்கு...?

நகரத்தை ஒட்டி இருக்கும் விளை நிலங்களெல்லாம் வீடுகளாக மாறி வரும் வேளையில் கிராமத்து நிலங்கள் பயனின்றி பாழ்பட்டு வருகின்றன.

என் சிறுவயதில் அழகிய சிற்றூறாக இருந்த என் கிராமம் போன்ற பல கிராமங்கள் இன்று பொலிவிழந்து எதோ ஒரு காட்டிற்குள் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன என்பதே உண்மை.

காலப் போக்கில் விவசாயம் என்றால் என்ன என்பது கல்வெட்டில் மலர்ந்தாலும் ஆச்சரியமில்லை.

-சே.குமார்.

புதன், 13 ஜனவரி, 2010

இளமைப் பொங்கல்


பொங்கல்... நினைத்தாலே தித்திக்கும் ஒரு திருநாள்... பட்டணத்தில் வசிப்போருக்கு எப்படியோ என்னைப் போன்ற விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு பொங்கல் ஒரு மகிழ்வான திருநாள். அந்த இனிய திருநாளை கடந்த இரண்டு வருடமாக கொண்டாட முடியாமல் அரபு நாட்டில் பணம் என்னும் மோசக்காரனின் வலையில்...

ம்... இந்த தினத்தில் என் பொங்கல் அனுபவங்களை எழுதலாமே என்று நினைத்து திரும்பிப் பார்த்ததன் விளைவே இந்த கட்டுரை. இதை எழுத உட்கார்ந்த போது உடன் பிறப்புகள் மற்றும் ஊர் சொந்தங்களுடன் பொங்கல் கொண்டாடிய மகிழ்ச்சி.

பொங்கல் என்றால் பள்ளிக்கு குறைந்தது மூன்று நாட்கள் விடுமுறை கிட்டும். விடுமுறைக்கு முதல் பள்ளியில் மாலை மாவுருண்டை, முறுக்கு எல்லாம் சத்துணவு மூலம் கொடுப்பார்கள். நல்லாயிருக்கோ இல்லையோ நாளை பொங்கல் என்ற தித்திப்பில் இனிக்கத்தான் செய்யும்.

முதல் நாள் இரவே மறுநாள் பொங்கல் வைக்க இருக்கும் அடுப்பு, பானைகள், வீடு முழுவதும் அக்கா, அம்மா எல்லோரும் கோலம் போடுவார்கள். அவர்களுடன் அவர்களுக்கு இணையாக கோலம் போட்ட சந்தோஷம் இன்னும் மனசுக்குள் உதட்டில் ஒட்டிய பொங்கச்சோறாய்..!

காலையில் எழுந்து குளித்து ரெடியாகும் போது அப்பா, 'தம்பி வயலுக்கு போய் நெல்மணியும் அருகம்புல்லும் பறிச்சுக்கிட்டு வாடா' என்றதும் சிறுவயதில் வயலுக்கு ஓடி பறித்து வந்த சந்தோஷம் இன்னும் குற்றாலச் சாரலாய்..!

அருகம்புல் பிள்ளையார் பார்வையில் நெல்மணியை பானையின் கழுத்தில் கட்டி வீட்டு வாசலில் அடுப்பு வைத்து பொங்கல் வைத்தபோது பால் பொங்கிவரும் சந்தோஷம் மனசுக்குள் இன்றும் பொங்கியபடி..!

கேலி முறைக்காரர்கள் (அத்தை மாமா பசங்க) 'என்ன பால் பொங்குச்சா... கால் வீங்குச்சா...' என்று கேட்கும் அந்த சந்தோஷ வார்த்தைகள் இன்னும்
மனசுக்குள் இளமையாய்..!

தை முதல் நாள் வீட்டுப் பொங்கல் முடிந்து மறுநாள் நமக்காக வாழ்வை அர்ப்பணிக்கும் உயிரினங்களான மாட்டுப் பொங்கல். அப்பா... எங்கள் கிராமத்தில் மட்டுமல்ல எல்லா கிராமத்திலும் மாட்டுப் பொங்கல் சிறப்பான சந்தோஷமான திருநாள்.

எங்கள் ஊர் கருப்பர் கோவில் எதிரே ஊர் மொத்தமும் கூடி பொங்கல் இட்டு மகிழும் அந்த சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. காலையில் கண்மாயில் அனைத்து வீட்டு மாடுகளும் குளிப்பாட்ட கூடி நிற்கும். மாட்டை குளிப்பாட்டி புது மூக்குக்கயிறு, பிடிகயிறு போட்டு கொம்பில் காவி அடித்து உடம்பு முழுவதும் பொட்டு வைத்து கரும்பு, பனங்கிழங்கு கட்டி பொங்ககுழிக்கு கொண்டு செல்ல தயார் செய்வோம்.

தற்போது டிராக்டர்கள் மற்றும் அறிவியல் வளர்ச்சியாலும் வைத்து பார்க்க முடியாத காரணத்தாலும் பல வீடுகளில் மாடுகள் இல்லை.

காலை பத்து மணிக்கு பொங்கல் வைக்கும் இடத்தை சுத்தம் செய்ய கிளம்புவோம். மண்வெட்டி, அருவாள் எடுத்துக் கொண்டு பாதை சுத்தம் செய்து பொங்கல் குழி தயார் செய்து இருபுறமும் கம்பு நட்டு வைக்கோல் பிரி விட்டு மாவிலை, வேப்பிலை சொருகி கட்டி வைப்போம். பின்னர் பொங்கல் வைக்கும் இடத்தின் மேலபுறத்தில் கட்டம் போட்டு வைப்போம். அதற்கு வீடு என்று பெயர்.

பின்னர் அனைவரையும் கிளப்பி வரிசையாக கருப்பர் கோவில் நோக்கை பயணிப்போம். அங்கு பொங்கலிட்டு இறக்கி வைத்து விட்டு மாடுகளை பிடித்துக் கொண்டு வர வீட்டிற்கு வருவோம். அப்போது புதுத்துணி அணிந்து கொள்வோம்.

மாடுகளை மரங்களில் கட்டிவிட்டு கருப்பருக்கு அலங்கார வேலை நடக்கும். பின் மரக்காப் படியில் புறமடை (கண்மாயில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கட்டப்பட்டிருக்கும் மதகின் பின்புறம்) தண்ணீர் எடுத்து அதில் எல்லார் வீட்டு பொங்கலிலும் கொஞ்சம் எடுத்துப் போட்டு எங்கள் பெரிய ஐயா சீனி எதோ மந்திரம் சொல்லி மந்திரிப்பார். அவர் இறப்புக்குப் பின்னர் எங்க அப்பா அந்த பணியை செய்கிறார். என்ன சொல்வீர்கள் என்று கேட்டால் எல்லோரும் நல்லா இருக்கணுமுன்னு சொல்லுவேன் என்பார்.

முன்பு தயார் செய்த வீட்டில் நாலு மூலையிலும் பரங்கிப்பூ வைத்து உள்ளே பறங்கி இலை போட்டு எல்லார் வீட்டுப் பொங்கலும் எடுத்துப் போட்டு பரங்கிக்காய், அவரைக்காய் எல்லாம் போட்டு தயார் செய்த கறியை கொட்டி கிளறி வைத்துவிட்டு மாடுகளுக்கு திட்டிக்குழி சோறு தீட்ட கிளம்புவோம்.

சித்தப்பாவும், வேறு ஒருவரும் மந்திரித்த தண்ணீரை எடுத்துக் கொள்ள, நெருப்பு போட்ட மண்பானையை இளையர் வீட்டு ஐயா எடுத்துக் கொள்வார். "பட்டி பெருகப் பெருக... பால் பானை பொங்கப் பொங்க... பொங்கலோ பொங்கல்..." என்று கத்தியபடி மாடுகளுக்கு சோறு தீட்டப்படும்.

மூன்று சுத்து முடித்து திட்டிக்குழியின் அருகில் பானை உடைக்கப்படும் அனவரும் விழுந்து கும்பிட்டு விட்டு திட்டிக்குழி சோறு வாங்கி கேலிக்காரருக்கு தீட்டுவது உண்டு. நிறைய மிளகாய் இருக்கும் அதை அப்படியே முகத்தில் தேய்த்து.... அப்பா... அது ஒரு சந்தோஷ தருணம்.

வருடா வருடம் ஓட்டு வீட்டு மாமாதான் எல்லோரிடமும் அதிகம் மிளகாய் பூச்சு வாங்குவார். பின்னர் சந்தோஷமாக சாமி கும்பிட்டு வீட்டுக்கு வருவோம்.

சாப்பிட்டதும் அருகில் நடக்கும் மஞ்சு விரட்டு அல்லது எருதுகட்டு பார்க்க குழுவாய் சைக்கிளில் பயணம்.

இனிப்பின் முடிவில் ஆதங்கம்:

படிக்கும் காலத்தில் பொங்கல் வாழ்த்து அட்டைகளை ஒருவருக்கு ஒருவர் அனுப்பி, தபால் காரரின் வருகைக்காக காத்திருந்து வாங்கி பிரித்துப் படித்து அடைந்த சந்தோஷம் செல்பேசியில் வரும் ஒற்றை வரி வாழ்த்திலோ இணையத்தில் அனுப்பப்படும் வாழ்த்து மெயில்களிலோ கிடைக்காமல் போய்விட்டதே.

எல்லோரும் கூடி கொண்டாடிய பொங்கல் வேலை நிமித்தம் தனித்தனியே குக்கரில் கொண்டாடப்படும் ஒரு நாளாகிவிட்டதே.

விளைத்துச் செழித்த வயல்களெல்லாம் கருவேல மரங்கள்...
நிறைந்து கிடந்த கண்மாய் வெடிப்புக்களோடு...

இளமைப் பொங்கல் மீண்டும் வர... எலோரும் இன்புற்றிருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

-சே.குமார்.

சனி, 9 ஜனவரி, 2010

துபாய்: உலகின் உயர்ந்த கட்டிடத்தின் அருகில்...



சில நாட்களுக்கு முன் உலகின் உயர்ந்த கட்டிடமான ப(பு)ர்ஸ் துபாய் (இப்ப ப(பு)ர்ஸ் கலீபா - BURJ KHALIFA) பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 6000க்கும் மேற்பட்ட வி.ஐ.பிக்கள் முன்னிலையில் திறப்புவிழாக் கண்டது. இது குறித்து வலை நண்பர்கள் பலர் பதிவு எழுதி இருக்கிறார்கள்.

நம்ம கட்டுரை அது குறித்து மட்டுமல்ல, ஒரு நாள் துபாய் பயணம் குறித்த சில தகவல்கள் பற்றிய கட்டுரை இது. நேற்று (வெள்ளி) விடுமுறை தினம் என்பதால் காலையில் மெதுவாக எழுந்து குளித்துவிட்டு காலை சாப்பிட ஏதாவது செய்யலாம் என்று நினைத்த போது வாரவாரம் செய்யும் உப்புமா மனதிற்குள் வந்து மிரட்டியது. எனக்கு உப்புமா என்றால் 'உப்பு'மாதான். எனவே அறையில் இருந்த மக்ரூணியை (நம்ம சேமியா போல் பெரிய சைஸ்) தயார் செய்தேன்.


அப்போது அண்ணாவிடம் இருந்து போன் துபாய் கோவிலுக்குப் போக வேண்டும் ரெடியாகு என்றார். வேகமாக சாப்பிட்டுவிட்டு அறை நண்பர்களை சாப்பிடச் சொல்லிவிட்டு அவசரமாக அறையிலிருந்து இறங்கினேன்.

சிறிது நேரத்தில் அண்ணா குடும்பம் அவர்களது காரில் வந்தது அவர்களுடன் நான் ஏறிக்கொண்டேன். மற்றொரு நண்பரின் காரில் விசிட்டில் வந்திருக்கும் இலங்கை நண்பரின் குடும்பம் வர துபாய் நோக்கி பயணித்தோம்.


காலை 12 மணிக்கு கோவிலுக்கு சென்றோம். துபாயில் இருக்கும் சிவன் கோவில், இது ஒரு கட்டிடத்தில்தான் இருக்கிறது. கோபுரங்கள் உயர்ந்த கோவில் அல்ல. நாங்கள் சாமி கும்பிட சென்றபோது அங்கே ஐயப்ப குரு பூஜை நடந்தது. அதில் சில நிமிடங்கள் இருந்து தீபம் பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.

ஐயப்ப பூஜை காரணமாக சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் கொடுத்தார்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து தேரா துபாய் செல்லும் படகில் ஒரு திர்ஹாம் கொடுத்து பயணம் செய்து சந்தோஷப்பட்டனர் இலங்கை நண்பரின் குடும்பத்தினர்.

பின் அங்கிருந்தி கிளம்பி திருமணத்திற்காக இந்தியா செல்ல இருக்கும் நண்பரை பார்த்து வாழ்த்துச் சொல்வதற்காக கராமா சென்றோம். அவரை பார்த்துவிட்டு கிளம்ப நினைத்தபோது அவர் சாப்பிட்டுவிட்டுதான் போகணும் என்று கட்டாயப்படுத்த அஞ்சப்பரில் பிரியாணி சாப்பிட்டோம்.



அங்கிருந்து கிளம்பி துபாய் மால் போகலாம் என்று வந்தால் வரும்வழியில் நிதிமையம் அருகில் வந்தபோது துபாய் மெட் ரோ இரயிலில் பயணித்துப் பார்க்கும் ஆசை வந்தது. உடனே பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு சாலையை கடக்க அமைக்கப்பட்டிருக்கும் நடை மேடை (முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அழகாக அமைக்கப் பட்டிருக்கிறது) மூலம் ஸ்டேசனை அடைந்தோம். அங்கிருந்து விமான நிலையம் சென்று திரும்ப நுழைவுச்சீட்டு வாங்கி இரயிலில் ஏறினோம்.


இயக்குவதற்கு மனித சக்தி இல்லாமல் தானே இயங்கும் இரயில் அது. துபாயின் சுற்றுவட்டாரத்தை பார்த்தபடி பயணிக்கும் அருமையான பயணம். விமான நிலையத்தில் இறங்கி சுற்றிவிட்டு மீண்டும் திரும்பினோம்.

நேராக துபாய் மால்... அதற்கு அருகில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான ப(பு)ர்ஸ் கலீபா. அருகில் சென்று ரசித்தோம்... அண்ணாந்து பார்த்தால் அப்பா...... தலை சுத்துது போங்க. அருகில் இருக்கும் வானளாவிய கட்டிடங்களெல்லாம் புழுக்களாய். அய்யோ... கொள்ளை அழகு.


 அந்த அழகை கொள்ளை கொள்ளும் விதமாக அதற்கு எதிரே நீர் நிறைத்து சிறிய குளம்போல் அமைத்து அதில் அழகான நீரூற்று  (நல்ல தமிழில் இப்படி சொல்லலாமா...? சொல்லுங்களேன்-Water Foundain) அமைத்து ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒருமுறை பாடல் ஒன்று ரம்மியமாய் ஒழிக்க இயக்கப்படுகிறது. அப்போது தண்ணீர் உயரக்கிளம்பி நடனமிடுவது கண்கொள்ளாக்காட்சி. இதை ரசிக்க கூட்டமாய் பல்வேறு மொழி பேசும் மக்கள். நாங்கள் வர மனமில்லாமல் மூன்று முறை ரசித்தோம் என்றால் பாருங்களேன்.

ப(பு)ர்ஸ் கலீபாவுக்கு எதிரே அழகிய ஓட்டல் ஒன்று அலங்கார விளக்கின் ஒளியில் அப்ஸரசாக காட்சியளித்தது என்னைக் மிகவும் கவர்ந்தது.


ஒருவழியாக துபாய் மாலுக்குள் நுழைந்தோம். மி........கப் பெ........ரிய மால், நேரமின்மை காரணமாக ராட்சஸ மீன் தொட்டியில் வளர்க்கப்படும் மீனை மட்டும் ரசித்துவிட்டு கிளம்பினோம்.

அபுதாபி சாலையை பிடித்து வரும்போது மின்னொளியில் பொருளாதார சிக்கலில் சிக்கித்தவித்தாலும் அழகிய மின்னொளியில் அழகாய்தான் இருந்தது துபாய். விரைவில் சிக்கலில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.


அபுதாபி எல்கையை அடைந்த போது தாய்வீட்டிற்கு திரும்பும் புதுமணப்பெண் போல் மனசுக்குள் மகிழ்ச்சி.அபுதாபி சாலையில் இருக்கும் அட்நாக் பெட் ரோல் பங்கில் சாப்பிட்டுவிட்டு அண்ணா குடும்பமும் இலங்கை நண்பர் குடும்பமும் ஒரு காரில் பயணிக்க, நானும் அறை நண்பரும் குளிர் காற்றை அனுபவித்தபடி அறைக்கு திரும்பும்போது இரவு 11மணியாகியிருந்தது.

குறிப்பு: ப(பு)ர்ஸ் எதற்காக என்றால் சிலர் பர்ஸ் கலீபா என்றும் சிலர் புர்ஸ் கலிபா என்றும் அழைப்பதால் எது சரி என்ற விவாதம் வரவேண்டாமே என்பதால்தான்.

-சே.குமார்

சனி, 26 டிசம்பர், 2009

துபாய் 'குளோபல் வில்லேஜில்' ஒருநாள்...




நேற்று விடுமுறை தினம் என்பதாலும் அறை நண்பர் ஒருவர் கிறிஸ்துமஸ் விருந்து கொடுத்ததாலும் எங்கள் அறையில் கொண்டாட்டமாக இருந்தது. மாலையில் எங்காவது செல்லலாம் என்று முடிவு செய்தோம். எங்கு செல்வது என்ற யோசனையில் எல்லோரும் இருந்தபோது நண்பர் ஒருவர் துபாய் குளோபல் வில்லேஜ் போகலாம் என்றார். உடனே எல்லோரும் ஓகே அங்கே போகலாம் என்றனர்.

மாலை நான்கு மணிக்கு கிளம்புவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நான்கு மணிக்கு அண்ணா வண்டியில் அவரது குடும்பமும் இலங்கை நண்பர் குடும்பமும் வர நாங்கள் ஐந்து பேர் நண்பர் வண்டியிலும் குளோபல் வில்லேஜ் நோக்கி பயணமானோம்.


நீண்ட பயணத்தின் முடிவில் குளோபல் வில்லேஜை அடைந்தோம். அங்கு இறங்கிய போது நேரம் 5.50 ஆகியிருந்தது. காரை பார்க் செய்துவிட்டு நான்காவது நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல டிக்கெட் எடுக்க நின்றபோது லேசாக மழை தூற ஆரம்பித்தது. உடன் வந்த நண்பர் ஒருவர் 'என்னப்பா நம்ம வந்த நேரம் மழை வருது. உள்ள ஒதுங்க இடம் இருக்காது. பார்த்துக்கிட்டு வாங்கலாம்' என்றார். 'மழை வராது வாங்குங்க' என்று நண்பர் ஒருவர் சொல்ல டிக்கெட் எடுத்து உள்ளே சென்றோம்.

உள்ளே... ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மனிதர்களின் சங்கமம்... எங்கு பார்த்தாலும் ஒரே கூட்டம். உலக நாடுகளின் சங்கமம் ஒரே இடத்தில்... கொள்ளை அழகு. ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி அரங்கங்கள். அங்கே அந்த நாட்டுப் பொருட்களின் விற்பனை. உலகில் உள்ள எல்லா பொருட்களும் ஒரே இடத்தில்...

நாங்கள் முதலில் சென்றது இந்தியா அரங்கம். (முதல் மரியாதை நம்ம நாட்டுக்குத்தானே...) கோட்டை போல் அமைக்கப்பட்டிருந்த நுழைவாயிலின் மேல் நமது தேசியக்கொடியை பார்த்ததும் 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை என் மனதிற்குள் வந்து செல்ல.. என்னை அறியாமல் சந்தோஷம் குடி கொண்டது.


இந்திய அரங்கில் காஷ்மீர் சால்வைகள், ஆடைகள் எல்லாம் இருந்தது. அதை பார்த்துக் கொண்டு வந்தபோது சிறு பிள்ளைகளை வைத்து சுற்றிவிடும் ராட்டினம் ஒன்று இருந்தது. அதை கையால் இயக்கிக் கொண்டிருந்தவர் ஒரு பாகிஸ்தானி என்பது முக்கியமானது. மற்ற கடைகளில் எல்லாம் பெரும்பாலும் மலையாள வாடை அடித்தது.

அங்கிருந்து வெளியில் வந்து அடுத்த அரங்கத்திற்குள் நுழையும் முன்னர் இயற்கை உபாதையை குறைக்க கழிப்பிடம் தேடி சென்றோம். சத்தியமா சொல்லுறேங்க... அந்த ஜன நெருக்கடியிலும் அவ்வளவு சுத்தமா, நாற்றமில்லாமல் எப்படி வச்சிருந்தாங்க தெரியுமா?. நம்ம ஊர்ல பேருந்து நிலையத்துல காசு வாங்கிக்கிட்டு உள்ள விடுவாங்க. ஆனா அதுக்குள்ள போக முடியாது. சினிமா தியேட்டர்லயும் அதே நிலை...

பின்னர் சௌதி, சீனா, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர்,நேபாள், ஆப்பிரிக்கா, லெபனான், தாய்லாந்து என்று எல்லா நாட்டு அரங்கத்திற்குள்ளும் சென்று பார்த்து ஒரு சில பொருட்கள் வாங்கியும் வந்தோம். சீனாவும் பாகிஸ்தானும் அருகருகில்... (இந்தியா கவனிக்க வேண்டிய விசயம்...)


போகும்போது கூட்டத்தில் யாராவது காணாமல் போய்விட்டால் செல்பேசியில் அழைத்து எங்கிருக்கிறாய் என்று விசாரித்தால் நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்.. நீ எந்த நாட்டில் இருக்கிறாய்? என்று பதில் வரும். பத்து திர்ஹம் கொடுத்து டிக்கெட் எடுத்துவிட்டு சிங்கப்பூரில் இருக்கிறேன்... பிலிப்பைனில் இருக்கிறேன்... என்றால் எப்படிங்க.

இதற்கு இடையில் நடந்து செல்லும் போது கேரளாவில் இருந்து வந்திருந்த வாத்தியக்குழுவினரின் அதிரடி கச்சேரி.

அதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்க இளைஞர்களின் அதிரடி நடனம். அப்பா... நம்ம பிரபுதேவா எல்லாம் கிட்ட நெருங்கமுடியாது என்ன நடனம்,,, ஒருவர் மீது ஒருவர் ஓடி வந்து ஏறுவது... சின்ன வளையத்துக்குள் மாறி மாறி தாண்டுவது... இருவர் கயிறு சுழற்ற மற்றவர்கள் கயிற்றில் படாமல் குதித்து ஆடியது... நெருப்பு விளையாட்டு என எல்லாமே சிலிர்க்க வைத்த நடன காட்சிகள்.

அங்கிருந்து அப்படியே விளையாட்டு அரங்கம் வந்து சும்மா ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறி ஐரோப்பா அரங்கு சென்றபோது இலங்கை நண்பரின் குழந்தைகள் பசி எடுப்பதாக கூற, சாப்பாட்டு அரங்கிற்குள் சென்று இந்திய உணவகம் ஒன்றில் பசியாற நினைத்து ஆர்டர் செய்தோம். உணவு வருவதற்கு முன் பில்லை கட்டச்சொன்னார்கள். கட்டிவிட்டு கட்டத்தோசைக்காக காத்திருந்தோம்.


வந்ததுங்க தோசை.... எவ்வளவு பெருசு தெரியுமா..? ஊர்ல இட்லி மாவு தண்ணியா போச்சுன்னா எப்படி துணியில ஒட்டி ஓடா இருக்குமோ அந்த சைசு (பார்த்துட்டு வேண்டாமுன்னு சொல்லிறக் கூடாதுங் கிறதுக்காகத்தான் முன்னாலயே பில்லை வாங்கிட்டான்.) குழந்தைங்க பசியே ஆறலையின்னா பாருங்களேன். (இந்தியனா இதை என்ன சொல்றது.?. எங்க கதை கட்டத்துரைக்கிட்ட மாட்டின கைப்புள்ளமாதிரி ஆச்சுங்க...)

ஒருவழியா சுத்திட்டு மணி பார்த்தா நள்ளிரவு 12.30. ஒரு சில நண்பர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் அங்கிருந்து அபுதாபி நோக்கி கிளம்பினோம். துபாய் எல்லை தாண்டி ஒரு பெட் ரோல் பங்கில் வண்டியை நிறுத்தி சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.


  அபுதாபியில் சில மாதங்களுக்கு முன் பார்முலா ஒன் கார் பந்தயம் நடந்த யாஸ், சாதியத் வழியாக வரும் புதிய ஷேக் கலீபா பின் சையது நெடுஞ்சாலையில் 130கீமி வேகத்தில் வந்தபோது, வெளியே சற்று அழுத்தமாக பெய்திருந்த மழையின் காரணமாக ரோட்டில் கிடந்த தண்ணீர் காரின் சீற்றத்தால் மயில் தோகை விரித்தது போல் இருமருங்கிலும் எழும்பி அடங்கியபடி இருந்தது.
 
காரின் உள்ளே இரவு நேர பண்பலையில் ராஜாவின் இனிய பாடல்கள் இதமாய் ஒலித்துக்கொண்டிருந்தது.


(குறிப்பு: போட்டோ செல்பேசியில் எடுத்தது... சரியாக இல்லையென்றால் மனதிற்குள் திட்டுங்கள்.)

 
-சே.குமார்

புதன், 16 டிசம்பர், 2009

கல்லூரிக்காலம் -V


எனது முதல் கதைக்கு ஐயாவிடம் இருந்து ஐம்பது சதவிகித மார்க் கிடைத்ததால் சந்தோஷம் அடைந்தேன். நாமும் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் கவிதை எழுதுவதில் நாட்டம் போனது. ஆனால் சிறிய கவிதைகளை எழுதுவது எப்படி என்று தெரியவில்லை.நான் எழுதிய கவிதைகள் எல்லாமே நீளமாக இருந்தன.

அப்போதுதான் எனக்கும் முருகனுக்கும் ஒரு எண்ணம் உதித்தது, அது கையெழுத்துப் பிரதி ஒன்று ஆரம்பிக்கலாம் என்பதே. ஆவலுடன் அதற்கான ஆயத்தப்பணிகளில் இறங்கினோம். எனது நண்பர்கள் யாரும் வருவதாக இல்லை, முருகன் பக்கமும் அதே நிலை. என்ன செய்யலாம் என்று நினைத்தபோது, பெண்களுக்கு இடமளிக்கலாமே என்று சுபஸ்ரீ மற்றும் கனிமொழியை கைகாட்டினார் ஐயா. அவர்களிடம் பேசியதில் கனிமொழி மறுத்துவிட, சுபஸ்ரீ இணைந்து கொண்டார்.

நாங்கள் மூவரும் இணைந்து 'மனசு' என்ற பெயரில் கையெழுத்துப் பிரதி நடத்த முடிவு செய்து களத்தில் இறங்கினோம். அப்போது சுபஸ்ரீ வகுப்புத் தோழர்களும் எங்களின் நண்பர்களுமான அம்பேத்கார் மற்றும் இளையராஜா (நல்லா படம் வரைவான்) இருவரும் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று வந்தார்கள். மூவர் ஐவரானோம்.

அதன் பிறகு பிரபாகரன் என்ற நண்பரும் இணைந்து கொண்டார். முதல் பிரதி வெளிவருவதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டோம். மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவன் கேசவனும் அவரது நண்பர் நவனீதன் என்பவரும் 'தென்றல்' (பேர் சரியா என்று தெரியவில்லை) என்ற கையெழுத்துப் பிரதி நடத்தி வந்தனர். அவர்களது பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து அமர்களமாக முதல் பிரதி கொண்டு வந்தோம்.

கல்லூரி நூலகம், பொது நூலகம், துறைகள் சுற்றுக்கு, பெண்கள் ஓய்வறை, ஆசிரியர் குழுவுக்கு என ஐந்து பிரதிகள். முதல் முயற்சியில் பேராசிரியர்களின் பாராட்டுடன் வெற்றி பெற்றோம். எல்லோருக்கும் சந்தோஷம்.

அதன் பிறகு தொடர்ச்சியாக நிறைய கையெழுத்துப் பிரதிகள் வர ஆரம்பித்தன.

அதில் குறிப்பிடத்தக்கது எனது சகோதரர் பழனியப்பன் (தற்போது பத்திரிக்கை துறையில் நல்ல பொறுப்பில் இருக்கிறார்) தனது நண்பர்களுடன் இணைந்து நடத்திய 'ரோஜா', எல்லா கையெழுத்துப் பிரதியும் 40 பக்க நோட்டு வடிவில் இருக்க, ரோஜாவோ கிராப் நோட்டு வடிவில் வந்தது. பழனியின் கையெழுத்து அச்சில் வார்த்தது போல் இருக்கும். சும்மா சொல்லக்கூடாது அவரது எழுத்தில் ரோஜா அழகாய் மலர்ந்தது. (மனசுக்கு போட்டியாய் ரோஜா மலர்ந்தது என்றால் மிகையாகாது). பின்னர் மனசுக்கும் அவர்தான் அச்சுக்காரர் ஆனார். எனோ தெரியவில்லை நீண்ட நாட்கள் ரோஜா மலரவில்லை (ரோஜாவின் முள் நட்புக்குள் குத்தியதோ?)

மற்றொன்று நணபர் பரக்கத் அலி நடத்திய கவி'தா', (அவரது காதலி பெயர் என்று வதந்தி பரவியது. உண்மையா என்பது தெரியவில்லை). உன்மையை சொன்னால் நாங்கள் குழுவாக நடத்தியதை அவர் ஒருவராக நடத்திக் காட்டினார். கவி'தா' சார்பாக சிறுகதைப்போட்டி வைத்து அதில் வெற்றி பெற்ற கதைகளை தொகுத்து தேனப்பன் ஐயா மூலமாக புத்தகமாக கொண்டுவந்தார். அதில் முருகன், மற்றும் பழனியின் கதைகளும் பிரசுரமாயின என்பது சந்தோஷமான நினைவுகள்.

அதே நேரத்தில் கலையிலக்கியப் பெருமன்றத்திலும் உறுப்பினரானோம். ஐயா வசம் இருந்த தாமரை, செம்மலர், சுபமங்களா ஆகியவற்றின் ஏஜென்ஸி உரிமையை எங்களிடம் கொடுத்தார். ஒரு புத்தகத்துக்கு 25 பைசா கிடைக்கும். மன்றத்தில் உள்ள எல்லோருக்கும் புத்தகம் போட வேண்டும். புத்தகம் வந்துவிட்டால் போதும் அன்று மாலை கல்லூரி முடிந்ததும் சைக்கிளில் வீதிவீதியாக சுற்றுவோம். அதன் மூலம் காசு கிடைத்ததோ இல்லையோ மனசுக்கு நிறைவும், நல்லோர்களின் நட்பும் கிடைத்தது.

எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளிவந்து கொண்டிருந்த மனசுக்குள் விரிசல் வந்தது. யாரோ ஏதோ சொன்னார்கள் என ஆசிரியை குழுவில் இருந்து சுபஸ்ரீ விலகினார். அவரைத் தொடர்ந்து அம்பேத்காரும், பிரபாகரனும் விலகினர்.

அறுவர் குழு மூவர் குழு ஆனது. அதன் பிறகு ஒரு பிரதி மட்டுமே வந்தது என்று நினைக்கிறேன். அத்தோடு மனசுக்கு மூடுவிழா நடத்திவிட்டோம்.

பல வருடங்கள் கழித்து அதே கல்லூரியில் சுயநிதிப் பிரிவான கணிப்பொறியியல் துறையில் நானும், முருகனும் (இப்போது அதே கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியராக இருக்கிறான்) வேலை செய்த போது அப்போதைய முதல்வர் எங்களிடம் நீங்கள் நடத்திய மனசு போல் இப்ப உள்ள பசங்க நடத்த முன் வரமாட்டேங்கிறாங்க என்றார் (அப்போது எங்கள் கல்லூரியில் கையெழுத்துப் பிரதிகளே இல்லை).

அவர் அப்படி சொன்னது எங்கள் மனசுக்கு கிடைத்த வெற்றி என்றே நாங்கள் நினைத்தோம். அதன் பிறகு முருகன் அது போல் ஒரு பத்திரிக்கை கொண்டுவர முயற்சித்தான். கொண்டு வந்தானா தெரியவில்லை அதற்குள் நான் கல்லூரியில் இருந்து வெளியே வந்து விட்டேன்.

எனக்குள் என்றும் மறக்கமுடியாத பெயர் 'மனசு'. அதனால்தான் இந்த வலைப்பூவிற்கு அதே நாமகரணம். இப்போதும் மனசை நினைத்தாலே என் எண்ணங்கள் கல்லூரிக்குள் பட்டாம்பூச்சியாய் வலம் வர ஆரம்பித்துவிடும். ம்... அது ஒரு கனாக்காலம்.
 
-சே.குமார்

திங்கள், 14 டிசம்பர், 2009

அபுதாபியில் கனமழை




வியாழன் அலுவலத்தில் இருந்து திரும்பும் போதே வானம் கருமேகங்களுடன் காட்சியளித்தது. குளிர் சற்று கூடியிருந்தது. என்னுடன் வந்த கேரளா நண்பர் நாளை மழை வரும் என தெரிவித்தார். அதற்கு நான் சும்மா தூறல் வரும். இங்க எங்க ஊர்ல மாதிரி மழை வரப்போகுது என்றேன்.

வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலையில் சாவகாசமாக எழுந்தேன். வெளியில் வந்து பார்த்தால் லேசான சாரல் இருந்தது. கடந்த ஆறுமாதமாக தொடமுடியாத அளவிற்கு கொதித்த தண்ணீர் அன்று ரொம்பவே குளிர்ந்தது. அன்றுமாலை துபாயில் திரு.லியோனி பட்டிமன்றம் இருந்தது. அதற்கான இலவச டிக்கெட் எங்களிடம் இருந்தது (போன வாரம் துபாய் போனபோது உறவினர் ஒருவருடன் மதிய உணவருந்த அஞ்சப்பர் உணவகம் சென்றோம். எனது உறவினருக்கு உணவக நண்பர் பழக்கம் என்பதால் எத்தனை டிக்கெட் வேண்டும் என கேட்டு கொடுத்திருந்தார்). எனவே அண்ணா எனக்கு போன் செய்து துபாய் கிள்ம்புவோமா என்று கேட்டார். நான் மழை வருது இந்த மழையில துபாய் போகணுமா? என்றேன். மழை வராது வா போகலாம் என்றார்.

இந்த குளிரில் அபுதாபியில் இருந்து துபாய் செல்லவேண்டாம் என்று முடிவு செய்த நான் இல்லை அண்ணா நான் வரவில்லை என்றதும் அவர் குடும்பத்துடன் கிளம்பிச் சென்றுவிட்டார்.அங்கும் மழை பெய்ததாக அவர் போன் மூலம் தெரிவித்தார்.

நான் அறையை விட்டு எங்கும் செல்லவில்லை. அன்று முழுவதும் லேசான சாரலுடனே கழிந்தது. சனிக்கிழமையும் தூறலுடன் கழிந்தது. இரண்டு நாள் விடுமுறைக்குப்பின் ஞாயிறு காலை வேலைக்குப் போக எழுந்து குளிக்கச் சென்றால் வெளியே மழை சோவென்று கொட்டிக் கொண்டிருந்தது. வேலைக்கு கிளம்பியவர்கள் எல்லாம் மழையினால் எப்படி போவதென்ற யோசனையுடன் நின்றனர். மழை விடுவதாக தெரியவில்லை. வீதியெங்கும் வெள்ளமாய மழை நீர். அலுவலக காரில் செல்வோரெல்லாம் தலையில் பிளாஸ்டிக் கவரை மாட்டிக் கொண்டு கிளம்பினர்.

நான் சிறிது நேரம் பார்த்துவிட்டு போகலாம் என்று நினைத்து கணிபபொறியில் வலைப்பூக்களை மேய்ந்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் மழை விட்டதும் அவசர அவசரமாக கிளம்பினேன். ஒருவழியாக அலுவலகம் வந்து எனது கணினியை ஆன் செய்து அப்பாடா என்று உட்கார்ந்த போது வெளியில் மீண்டும் இருட்டத் தொடங்கியது. சிறிது நேரத்தில் 'சடச்சட' என்று பெய்த மழை அரைமணி நேரத்திறகு மேல் விடாமல் கொட்டித்தீர்த்தது.

எனது அலுவலகம் இரண்டாவது மாடி, நான் அமர்ந்திருக்கும் இடமோ ஒரு மூலையில்... எனவே மேலே இருந்து நான் மழையை ரசிக்க ஆரம்பித்தேன். மழைநீர் தெப்பமாக காட்சியளித்தது. மழை நீர் வடிவதற்குள் மதியம் மீண்டும் ஒரு மழை. நான் எழுந்து நின்று மழையை ரசித்துக் கொண்டிருக்கும் போது அருகில் வந்த எனது மேலதிகாரி (அவர் லெபனான்), 'இப்ப இந்தியா மாதிரி இருக்கா?' என்றார். நான் 'ஆம்' என்றதும் 'இந்தியா போல்தான் லெபனானும்' என்றார்.

மாலை அலுவலகம் முடிந்து கிளம்பும்போது மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது.நானும் எனது நண்பரும் மழையோடு கிளம்பினோம். இரவு விட்டுவிட்டு மழை பெய்தது.

கடந்த மூன்று நாட்களாக எப்போதாவது எட்டிப்பார்த்த சூரியன் இன்று காலை பாலைவனப் பூமியில் பளிச்சென்று தெரிந்தான்.

இன்று மழை இல்லை இருந்தும் வானம் ஒரு சில நேரங்களில் கருமேகங்களால் சூழப்படுகிறது. மழை பெய்யலாம்.

வியாழன், 10 டிசம்பர், 2009

கல்லூரிக்காலம் - IV

இது கொஞ்சம்... இல்ல அதிக நீளமான பதிவு... அறுவையா இருந்தாலும் பொறுமையா படிங்க... வாழ்த்துறவங்க ஓட்டப் போடுங்க. திட்ட முடிவு பண்ணிட்டா பின்னூட்டத்துல வாங்க. என்னை திருத்திக் கொள்ள வசதியா இருக்கும்.

இரண்டாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கையில் எனது நண்பர்கள் வட்டம் இன்னும் இறுக்கமானது. நவநீயை தவிர மற்ற அனைவருக்கும் நான் பங்காளியானேன். நவநீ மட்டும் என்னை மாப்ள என்று அழைத்தான். என்னை மாப்ள என்றதால் மற்றவர்களுக்கு அவன் மாப்ளயானான்.

தினமும் கல்லூரிக்கு நாங்கள் செல்வதே ஒரு ஊர்வலம் போல் இருக்கும். ஆதி, திருநா, கண்ணன், நவநீ, முத்தரசு உள்ளிட்ட நண்பர்கள் பேருந்தில் வருவார்கள். நான் சைக்கிளில் வருவதால் அவர்களுக்காக பேருந்து நிலைய வாயிலில் காத்திருப்பேன். எனது நண்பர்கள் மற்றும் அவர்களுடன் வரும் மற்றதுறை நண்பர்கள் என ஒரு கூட்டமே கல்லூரி நோக்கி நடக்க ஆரம்பிக்கும். நான் எனது சைக்கிளில் இருபுறமும் திருநா மற்றும் நவநீ பிடித்துக் கொள்ள (ஓட்ட வேண்டியதே இல்லை... தள்ளியே கொண்டு போய் விடுவர்) காரசார விவாத்துடன் கல்லூரி சென்றடைவோம். (மாலையும் விவாதம் தொடரும்).

எங்களுக்கு போரடித்தால் முத்தரசுபாண்டியன் (நல்ல வழக்கறிஞர்) மற்றும் திருநா (கல்யாணத்துக்கு போனது. பிறகு நினைவில் உண்டு... தொடர்பில் இல்லை...) இருவரையும் எதாவது ஒன்றை ஆரம்பித்து கோர்த்து விட்டு விடுவோம். (அந்த வேலையைதான் நல்லா செய்வோமே...) அப்பா... காரசாரமான விவாதம் நடக்கும் (நமக்கும் நல்லா பொழுது போகும்). இருவரும் அரசியலை அலசி ஆராய்வார்கள் (நமக்கு அப்பல்லாம் அரசியல் தெரியாது. இப்பவும்தான்) அப்பவே நாங்க முடிவு பண்ணினோம் ரெண்டும் வழக்கறிஞராத்தான் வருங்கன்னு (அப்ப நாங்க என்னபாடு பட்டிருப்போம்) முத்தரசு வழக்கறிஞராகி எங்க எண்ணத்தை காப்பாத்திட்டான். ஆனா குடும்ப கஷ்டத்தினால திருநாவால மேல படிக்கலை (நிறைய பேருக்கு அமையும் வாழ்க்கைதான் அவனுக்கும்).

நாங்க யாரையும் லந்து அடிக்க மாட்டோம் ஆனா எங்களுக்குப் பேரு லந்துக் கோஷ்டி. அப்ப முதல்வரா பழனியப்பன் சார் இருந்தாருங்க. ரொம்ப............. பயந்தவருங்க (வடிவேலுக்காவது பிரேஸ் மட்டம் மட்டும்தான் வீக்.இவருக்கு மொத்தமும் வீக்...). அதனாலதானோ என்னவோ ஒரு பிரச்சினையில் சொல்லாமல் கொள்ளாமல் முதல்வர் பதவியை விட்டுட்டு ஓடிவிட்டார்.

ஏப்ரல் மாதம் ஒண்ணாம் தேதி (முட்டாள்கள் தினம்) உஜாலா சொட்டு நீலம் வாங்கி (மை அடிக்க) முதல்வர் பழனியப்பன் சாருக்கே அடித்திருக்கிறோம். அப்ப சந்தோஷமாக இருந்தது இப்ப நினைக்கும் போது வலிக்கிறது (சொல்லப்போனா அன்னைக்கு நாங்கதான் முட்டாள்களா இருந்திருக்கோம்).

தீபாவளிக்கு வெடி ரெடியானதும் முதலில் வெடிக்கும் இடம் எங்கள் கல்லூரியாகத்தான்  இருக்கும். விளையாட்டுத்திடல், கேண்டீன், மாணவிகள் ஓய்வறை, டாய்லெட், சைக்கிள் நிறுத்துமிடம் என எல்லா இடத்திலும் வெடிக்கும். வைத்ததும் வெடிக்கக்கூடாது என்பதற்காக ஊதுபத்தியில் கட்டி வைப்போம் (எல்லாம் முன்னோர் காட்டிய வழி) .அதற்காக வாங்கும் ஊதுபத்தி வாசனையில்லாததாக (குறைந்த விலைக்கு ) வாங்குவோம். முதல்வர் அறைக்குள் பின்புறம் ஒரு தடுப்பு இருக்கும் அதற்கு பின்பக்கமாக ஒரு சன்னல் உண்டு. அதற்குள்ளும் எங்கள் கூட்டணி வெடி வச்சதுன்னா பாருங்களேன்.

ஒருபுறம் நண்பர்கள், அரட்டை என்று நாட்கள் நகர்ந்தாலும் மறுபுறம் ஐயாவுடனான நட்பும் இறுகியது. ஒருநாள் முருகன் கதை ஒன்றை எழுதி ஐயாவிடம் கொடுத்தான். அதை வாங்கியபடி என்னய்யா நீங்க எதுவும் எழுதுவிங்களா? என்றார். "இல்லைய்யா... அதுக்கும் நமக்கும் வெகுதூரம்." என்றேன். "எழுதிப்பாருங்க வரும்" என்றார்.

அதன் பிறகு எனக்கும் தமிழ் மீது பற்று வந்தது. ஐயா எழுதிய புத்தகங்களையெல்லாம் வாசிக்கலானேன். ஒருநாள் கதை எழுதிப் பார்ப்போமே என்று 'மண்ணில் இந்த காதலின்றி...' பாட்டு வரிகளுடன் ஆரம்பித்து 'மனிதர் உணர்ந்து கொள்ள...' என்ற பாடலில் முடித்தேன் (என்ன செய்ய வயசு அப்படி...).

முருகனிடம் காட்டியபோது 'ஆஹா...ஓஹோ... என்று புகழ்ந்தான் (எனக்காக பொய் சொன்னான் என்று எனக்குத் தெரியும்). ஐயாகிட்ட காட்டு என்றான் நான் மறுத்துவிட்டேன். எனக்கு தெரியும் ஐயா நிச்சயம் நல்லாயிருக்குன்னு சொல்லமாட்டார். ஆனா முருகன் ஐயாவிடம் எனது கதையை போட்டுக் கொடுத்துவிட்டான். என்னய்யா நான் படிக்ககூடாதா? என்று வினவ, அப்படியில்லையா... நல்லாயில்லை... என்று இழுத்தேன். பரவாயில்லை கொடுங்க என்று வாங்கி படித்தவர். என்னிடம் "எழுத்து நடை நல்லாயிருக்கு...ஆனா காதல்.. கத்திரிக்காய்ன்னு வயசுக்கு தகுந்த மாதிரி எழுதாம வித்தியாசமாக எழுதுன்னிங்கன்னா நல்லாயிருக்கும் என்றபடி கதையை என்னிடம் கொடுத்தார்.

அவரது கையில் என் முதல் கதை பட்டதாலோ என்னவோ அதன் பிறகு நல்ல கதைகளை எழுத ஆரம்பித்தேன் (படிச்சவங்க சொல்லணுமுன்னு நீங்க சொல்லுறது கேக்குது என்ன செய்ய... எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்).

நம்ம கதையை படிச்சுட்டு முகம் தெரிஞ்சவங்க நிறைய பேரு நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்காங்க. எனது 'சிறுகதைகள்' வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த பிறகு நிறைய முகம் தெரியாத நண்பர்களிடம் இருந்து பாராட்டுக்கள்.

அதில் குறிப்பா நண்பர் 'நாடோடி இலக்கியன்' அவரது வலைத்தளமான 'நாடோடி இலக்கியன் பக்கத்தில்' பதிவர் அறிமுகத்தில் 'நொறுக்குத் தீனி' எனற தலைப்பில் எழுதியிருந்தார். அது......

"ஆரவாரமில்லாமல் அசத்தலான பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கும் மேலும் இரண்டு பதிவர்களை இந்த நொறுக்குத் தீனியில் குறிப்பிடுவதில் பெருமையடைகிறேன்.

ரகுநாதன்: இவரின் சுழற்பந்து என்ற சிறுகதையைத்தான் முதலில் வாசித்தேன். அருமையான நடையில் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார்.எல்லாவிதமான இடுகைகளும் எழுதுகிறார்.எழுத்து நடையால் எவ்வளவு பெரிய இடுகையானாலும் ஒரே மூச்சில் படிக்க வைத்துவிடுவார்.

சே.குமார்: கவிதை,சிறுகதை,நெடுங்கவிதைகள் எனப் பிரித்து மூன்று வலைப்பூக்களில் எழுதுகிறார். சிறுகதைகளுக்கு இவர் எடுத்துக் கொள்ளும் கதைக் களங்களும், உரையாடல்களும் மிக யதார்த்தமானதாகவும்,ரசிக்கும் படியும் இருக்கின்றன. இவரின் கவிதையொன்று,

விளைநிலம்:

விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..! "'

அடுத்தவங்களை பாராட்ட நல்ல மனது வேண்டும். என்னை அறிமுகம் செய்த இந்த முகம் அறியா நட்புக்கு நன்றி (என்னப்பு நம்ம சுயவிளம்பரம் சரிதானுங்களா..).

சரி... சரி... இவ்வளவு தூரம் இந்த மொக்கையை மேஞ்சுட்டிங்க... அப்படியே 'செந்தமிழ் பைந்தமிழ் மன்ற சிறுகதை' போட்டியிலயும் காலை விட்டிருக்கோம். கொஞ்சம் அங்க போயி பார்வைகள் கதையை படிச்சுட்டு கருத்த சொல்லிட்டுப் போங்களேன்.

கல்லூரிக்காலம் - V ல் சங்கமிப்போம்

செவ்வாய், 8 டிசம்பர், 2009

கல்லூரிக்காலம் - III

முதலாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை சந்தோஷம் , சங்கடம், அடிதடி, ஸ்டிரைக், ஐடிசி என கரைந்தது. விடுமுறைக்குப் பின்னர் இரண்டாம் ஆண்டில்... என்ன ஒரு சந்தோஷம் என்றால் அரியர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நட்பு பிரியாமல் ஒரே வகுப்பறையில்... (பள்ளிக்கூடத்தில் அப்படியில்லாமல்தான் பல நட்புகளை இழக்க நேரிடுகிறது இல்லையா?)

எனது நண்பர்கள் அண்ணாத்துரையும், சேவியரும் கல்லூரிக்கு அருகில் அறை எடுத்து தங்கி இருந்தனர். அவர்கள் சமைத்து சாப்பிட்டனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அறையில்தான் நான். (ஐயோ... சத்தியமா சாப்பாட்டுக்காக இல்லைங்க...) . தங்கும் அறையை அண்ணாத்துரை அந்த இடத்தில் எடுக்க வரலாற்றுச் சிறப்புமிக்க காரணம் ஒன்று உண்டு. அது அவனது காதலி தங்கிப் படித்த அக்கா வீட்டின் அருகில் என்பதே. (இப்ப இருவரும் குடும்ப பாரத்தை சுமக்கிறார்கள். வேறு வேறு குடும்பத்தில்...)

எனக்கும் வகுப்பறை தோழர்களுடன் மற்ற துறையிலும் தோழர்கள் கிடைத்தனர். இயற்பியல் துறையில் அம்பேத்கார் (இப்ப எம்சிஏ முடித்துவிட்டு பெங்களூரில் இருப்பதாக கேள்வி), இளையராஜா (உள்ளூரிலே கடை வைத்திருப்பதாக நண்பன் ஒருவன் சொன்னான்) , சுபஸ்ரீ, கனிமொழி (ஐயா இல்லத்தில் உருவான நட்பால் கிடைத்த நல்ல தோழியர்) , விலங்கியல் துறையில் பிரபாகரன், தமிழ்த்துறையில் சங்கர், ரவி(தற்போது ஆசிரியர்) , ஜஸ்டின் (தற்போது ஆசிரியர்) ,ரவி, முருகன் (தற்போது பேராசிரியர்) , சிவகுமார், ஆங்கிலத்துறையில் ரமேஷ் (ஆசிரியர்), சூசை மாணிக்கம் (நல்லா பாடுவான். கல்லூரியில் இவன் குரலுக்கென்று ரசிகைகள் உண்டு) , கண்ணன் (என் நண்பன் ஆதியால் கிடைத்த நல்ல நண்பன்) வணிகவியல் துறையில் சில நண்பர்கள். இதில் முருகன் தவிர மற்ற நண்பர்கள் தொடர்பில் இல்லை.

எங்கள் வகுப்பறை முதல்வர் அறைக்கு அருகில் இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கில பாட வேளைகளில் எங்களுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை மாணவர்களும் கலந்து விடுவர். அரட்டைக்கு கேட்கவா வேண்டும்.

தமிழ்த்துறையில் இருந்து எங்களுக்கு பாடம் எடுக்க வந்தவர்களில் ஆறுமுக ஐயா, நகைச்சுவை என்று எதாவது சொல்லி அவரே சிரிப்பார். நாங்கள் அனைவரும் ரொம்ப சீரியஸாக அவரையே பார்ப்போம். உடனே சிரிப்பை நிறுத்தி எங்களைப் பார்த்து சிரிப்பு வரலை என்று கேட்பார். அவர் சீரியஸாக பாடம் நடத்தும் போது திடீரென எல்லோரும் சிரிப்பார்கள். இது தினமும் தொடரும்.

சுந்தரமூர்த்தி ஐயா, இவர் பாடம் எடுக்கும் போது லண்டன் என்று யாராவது கத்தினால் போதும் மனுசனுக்கு கோபம் வரும் பாருங்க. அப்பா... ஒரே ருத்ரதாண்டவம்தான் போங்க. (எங்க முன்னோடிகள் சொல்லிச் சென்றார்கள். நாங்கள் தொடர்ந்தோம்... எதுக்கு கோபம் கொள்கிறார் என்பது யாருமே அறியாத சிதம்பர ரகசியம்)

சுப்பிரமணியன் ஐயா (RMS என்று சொல்லுவோம். பெயர் சரிதானா என்பது தெரியவில்லை) , இவரை பாடமே எடுக்க விடமாட்டார்கள். இவருக்கு தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முடி இருக்கும். ஒருநாள் அவர் சிரத்தையுடன் பாடம் எடுக்கும் போது ஒருவன் எழுந்து உங்க தலை முடியெல்லாம் எங்கய்யா என்று வினவ, கோபத்தில் வீட்டிலிருந்து கல்லூரி வரும் வழியில் புறா பொறக்கி தின்னுருச்சு என்றாரே பார்க்கலாம் வகுப்பில் எழுந்த சிரிப்பொலி அடங்க அதிக நேரம் ஆனது. அது முதல் அவரது பெயர் புறா பொறக்கியானது. (கல்லூரி சுவர், வகுப்பறை எல்லா இடங்களிலும் கல்வெட்டாய்...)

பழனி ஐயா, மற்ற துறை மாணவர்களிடம் எப்படியோ தெரியவில்லை. எங்கள் வகுப்பறையில் பாடத்துடன் பொது அறிவும் கலந்து கொடுத்து மாணவர்களை கட்டிப் போட்டிருந்தார் (ஐயா பற்றி இன்னும் நிறைய இருக்கு).

சிங்காரவடிவேலன் ஐயா, நல்ல கவிஞர். நம்ம குடும்பத்தில் ஒருவர் போல நடந்து கொள்வார். நல்லா நடத்துவார். சில காலம் முதல்வராகவும் இருந்தார்.

தேனப்பன் ஐயா, நல்ல இலக்கியவாதி, நகைச்சுவையுடன் பாடம் நடத்தும் கலை அறிந்தவர்.

எல்லோரிடமும் வகுப்பறையில் மாணவர்களாக (நாங்களெல்லாம் வாயே திறப்பதில்லை) நடந்து கொண்ட விதம் மோசமாக இருந்தாலும் பாடம் நடத்துவதிலோ பழகும் விதத்திலோ எங்கள் பேராசிரியர்கள் என்றைக்குமே எவரெஸ்ட்டாய்தான் இருந்திருக்கிறார்கள். (நம்ம அனுபவிக்கும் போதுதான் அவங்க கஷ்டம் நமக்கு புரியுது) .

ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் பெரிய திருவடி, வாசுதேவன், தண்ணீர்மலை என எல்லா பேராசிரியர்களுமே நல்லா நடத்தினார்கள். இன்றைக்கும் என் பேராசிரியர்களை மனதில் மரியாதையுடனதான் வைத்துள்ளேன்.

என் நண்பன் முருகன் தமிழ்த்துறை என்பதால் பழனி ஐயாவிடம் நல்ல நட்பு உண்டு. அவன் மூலமாக ஐயாவுடன் பழகும் வாய்ப்பு கிட்டியதுடன் அவர் வீட்டில் அவரது பிள்ளைகளில் ஒருவனாய் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே ஏற்கனவே ஒரு கூட்டம் இருந்தது. அந்த ஜோதியில் நானும் ஐக்கியாமானேன்.

கல்லூரிக்காலம் - IV ல் சங்கமிப்போம்

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

கல்லூரிக்காலம் - II

சில பல காரணங்களால் கல்லூரிக்காலம் இரண்டு எழுத நீண்ட நாட்களாகி விட்டது.

முதலாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை மிகவும் நன்றாக சென்று கொண்டிருந்தது. கல்லூரி வாழ்க்கைக்குள் செல்லும் முன்...

எனது துறை பேராசிரிய பெருமக்களைப் பற்றி சில வரிகள் (குரு மரியாதை...) பேராசிரியர் நா.சீனிவாசன் (துறைத்தலைவர்) - நாங்கள் கல்லூரியில் சேரும் முன்னர் முதல்வராக இருந்து நாங்கள் சேர்ந்த பொழுது சில காரணங்களால் நீக்கப்பட்டு (எங்க ராசி நல்ல ராசி...) நாங்கள் கல்லூரியில் இருந்து வெளியேறும் போது எங்கள் மாற்றுச் சான்றிதழில் முதல்வராக கையெழுத்துப் போட்டவர் (நாங்க ரொம்ப நல்லவங்க).

பேராசிரியர் கே.வி. சுப்ரமணியன் (செல்லமாக கேவிஎஸ்) - நடந்தே தான் கல்லூரிக்கு வருவார். எல்லோருக்கும் உதவும் நல்லகுணம் கொண்டவர். யாரையும் கடிந்து பேச மாட்டார். ஆரம்பம் முதலே என் மீது அதிக பாசம் கொண்டவர்.

பேராசிரியர் ஏ.வெங்கடாசலம் - நல்ல மனிதர். ஆமாங்க நாம இந்தா வர்றேன் சார் என்று சொல்லிச் சென்றால் (திரும்ப வரவில்லை என்றாலும்) வருகை பதிவில் கைவைக்கவே மாட்டார்.

பேராசிரியர் அமலசேவியர் - மிகவும் நல்லவர். எட்டாம் நம்பர் மீது அதிக பற்றுக் கொண்டவர். (அவரோட ஸ்கூட்டர் நம்பர் 0440ன்னா பார்த்துக்கங்க)

பேராசிரியர் சேவியர் - எங்கள் துறையின் கடைக்குட்டி (மேல சொன்ன பேராசிரியர்களிடம் படித்து அதே துறையில் வேலை). பசங்களுக்கு உதவ தயங்காதவர். தம்பி... என்று பாசத்துடன் அழைப்பவர்.

இவர்கள் போக இன்னும் தமிழ் மற்றும் ஆங்கிலம் எடுத்த பேராசிரியர்கள் பற்றி பின்னர் பார்க்கலாம்.

முதல் பருவத்தேர்வுகள் முடிந்து எல்லா பாடத்துலயும் தேர்ச்சி. (ஆங்கிலத்துல எழுதி அரியர் இல்லாம வெற்றி... சத்தியமா நம்ப முடியலைங்க...) எங்கள் நட்பு வட்டத்தில் ஒரு சிலர் தவிர மற்றவர்களுக்கு அரியர் இல்லை (நல்ல நட்பு).

அடுத்த பருவம் தொடங்கிய போது எங்கள் வகுப்பிற்குள் கோஷ்டி முளைத்தது. ஆறுமுகம் தலைமையில் சிவபாலமூர்த்தி (நம்ம ஆளுதாங்க) உள்ளிட்ட 5 நண்பர்கள் ஒரு கோஷ்டியும் (அடிதடிக்கு முன் நிற்கும் கோஷ்டி) இளங்கோ தலைமையில் ஒரு கோஷ்டியும் (அடியும் வாங்கும் கோஷ்டி) உருவானது. எங்க கோஷ்டி (அதிகம் ஆளு இருந்த கோஷ்டி) தனி. இரண்டு பக்கமும் பேசுவோம் (மத்தளம் மாதிரி).

எங்களை பேராசிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். சண்டை வரும் போது எங்களை வீட்டுக்குப் போகச்சொன்ன நாட்களும் உண்டு. (உண்மையை சொன்னா நாங்கள்ளாம் கைப்புள்ள மாதிரி...)

எங்க கூடப் படித்த தோழியருக்கும் எங்களை மட்டுமே பிடிக்கும். (உண்மையான நட்புங்க). நல்லா போச்சுங்க முதல் வருடம்.

முதல் வருடத்தில் எனக்கு மற்ற துறைகளிலும் முத்தான நட்பு கிடைத்தது. எனக்கும் தமிழ்த்துறை பேராசிரியர் பழனி ஐயாவுக்கும் இடையில் நண்பன் முருகன் மூலம் நட்பு ஏற்பட்டது. (இன்றுவரை அப்பா ஸ்தானத்தில் உரிமையுடன் தொடரும் நட்பு) ஐயா, முருகன், மற்ற நண்பர்கள், முதல் கதை, மனசு இதழ் பற்றி விரிவாக அடுத்த கட்டுரையில்... கல்லூரிக்காலம் இன்னும் பசுமையுடன் தொடரும்.

ஞாயிறு, 29 நவம்பர், 2009

கல்லூரிக்காலம் - I

கல்லூரிக்காலம்... அந்த நாட்கள்தான் எத்தனை இனிமையான நாட்கள். எங்கிருந்தோ வந்து எனக்குள் ஐக்கியமான நட்புகள்... எனது படைப்பு பத்திரிக்கைகளில் வெளிவந்தது... இலக்கியப் போட்டிகளில் வென்ற பரிசுகள்... எனக்குள் நுழைந்து என்னை மகன் போல் நடத்திய பேராசிரியப் பெருமக்கள்... இன்னும் எத்தனை எத்தனையோ அந்த வசந்த காலத்தில்...


பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேர காரணமாக இருந்தவர் எனது மூத்த அண்ணா. இல்லையென்றால் பனிரெண்டாம் வகுப்பு முடிக்குமுன்னரே எனது தந்தை எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் நூற்பாலையில் எனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டார். எனது அண்ணாவிடம் அழுது புலம்ப, அவர் நாங்கள்தான் படிக்கவில்லை (அவர் +2 வரை படித்தார். குடும்ப கஷ்டத்தால் மேல படிக்கவில்லை) அவங்க ரெண்டு பேரும் (நானும், தம்பியும்) நல்லா படிக்கட்டும் என்று சப்தம் போட, அப்பா அதற்கு மேல் ஒண்றும் சொல்லவில்லை.

ரிசல்ட் வந்ததும் கல்லூரியில் விண்ணப்பம் செய்தோம். கணிப்பொறியியல் துறைக்கும் விண்ணப்பித்தேன். 6000 ரூபாய் கட்டினால் இடம் தருவதாக தெரிவித்தனர். குடும்ப சூழல் இடம் தரவில்லை. (சில காலங்களுக்குப் பிறகு அதே கணிப்பொறியியல் துறையில் நான்கு வருடம் வேலை செய்து எனது ஆசையை தீர்த்துக் கொண்டேன்) கல்லூரியில் இடம் கிடைத்து. என்னுடன் படித்த நண்பர்கள் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் வேறு பாடப்பிரிவுகள், வேறு கல்லூரி என பிரிந்து சென்றனர்.

எனது கல்லூரி வாழ்வின் முதல் நாள் எனது அட்லஸ் சைக்கிளில் கிளம்பினேன்.வகுப்பறைக்கு சென்றால் எல்லோரும் புது முகம். எனக்கு கடைசி பெஞ்சில் உட்காரும் பழக்கம் இல்லை என்பதால் இரண்டாவது பெஞ்சில் அமர்ந்தேன். வகுப்பு தொடங்கிய போது என்னுடன் படித்த சிவபால மூர்த்தி வந்தான் (என்னுடன் ஒண்ணாப்பு முதல் கல்லூரி வரை படித்த நண்பன்). அப்பா ஒருத்தன் வந்துட்டான் என்று நினைத்த மனசு அவனுக்கு உட்கார இடம் கொடுத்தது. ஆனால் அவனோ ஒரு புன்னகையுடன் கடைசி பெஞ்சுக்கு போய்விட்டான். (மூன்று வருடங்கள் அவனுக்கும் எனக்குமான உறவில் அதிகம் பேசியதென்னவோ புன்னகை மட்டும்தான்.)

பிறகு மரியக்கண்ணு, தேவசகாயம் என எனது பள்ளித்தோழர்கள் வந்தனர். எனக்கு அருகில் அமர்ந்திருந்த்வர்கள் இருவரும் (அண்ணாத்துரை மற்றும் சேவியர்) எனக்கு அறிமுகமாயினர். எனக்குள் ஒரு புதிய நட்பு வட்டம் உருவாகியது. எங்கள் வகுப்பில் பத்து பெண்கள் உள்பட 33 பேர் சேர்ந்திருந்தோம் (பின்னர் 3 பேர் விலகி சென்றுவிட 30 ஆனோம்).

எல்லாக் கல்லூரியையும் போல எங்கள் கல்லூரியிலும் ராகிங் நடந்தது. பாடவேளை முடிந்து அடுத்த ஆசிரியர் வருவதற்குள் வந்து எங்களை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். அன்று மதியம் சாப்பாட்டு இடைவேளையில் ஒரு பெண்கள் குழு வந்தது, எல்லோரிடமும் பேரு என்ன அப்பா பேரு என்ன என்று கேட்டது. (அப்பா... காளிக் கூட்டம்) என்னிடம் கேட்க, அமர்ந்தபடி சொல்ல,எந்திரிடா என் டுபுக்கு என்றது ஒண்ணு... எழுந்து சொன்னேன். (ம்... என்ன செய்ய... அவள்கள் அனுபவித்ததன் எதிரொலி.... என்ன செய்யட்டும். ) பெண்களிடம் கேள்வி கேட்கும் போது பல புரியாத கேள்விகள். (ஹி.... ஹி.... இப்ப புரியும்) ஒருவழியாக சமாளித்தாயிற்று.

கல்லூரி முடிந்து வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தபோது நாலு பேர் வந்து எங்களை அப்படியே கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் முந்திரிக் காட்டுக்கு ஓட்டிச் சென்றனர். (பசங்களை மட்டும் தான்). அங்கு எங்களுக்கு முன்னர் பல பேர் ராகிங்கில் சிக்கி சீறழிந்து கொண்டிருந்தனர். என்னவோ தெரியவில்லை நான் சின்ன ஆளாக் இருக்கவும் என்னை பேர் கேட்டதோடு ஓரமாக நிற்க சொல்லி விட்டனர் (சத்தியமா உண்மைங்க. நம்பினால் நம்புங்க).

என்னுடன் வந்த மரியக்கண்ணு பெரிய ஆளா இருப்பான். அவனை எல்லோருக்கும் ஒரு யுனிவர்சிட்டி சல்யூட் அடி என்றனர். அவன் முழிக்க, ஒருவன் எழுந்து எப்படி என்று சொல்லிக் கொடுத்து அவனை அடிக்கச் சொல்ல, அவனும் அடித்தான். (கருமம்... கண்றாவி...).

இன்னொருவனை பாடச் சொல்ல, அவனும் 'ஆயிரம் நிலாவே வா...' என்ற பாடலை பாடினான். என்னடா ஆயிரம் நிலவைக் கூப்பிடுறே... சரி அப்படியே இற்ங்கு வரிசையில ஒரு நிலா வரைக்கும் வா என்று ஒருவன் கூற். 999 நிலவே வா... 998 நிலாவே வா... என்று ஒரு ஒரமாக நின்று அவன் பாடினான். ஒருவனை கோழி பிடிக்கச் சொன்னார்கள். அவனும் 'பேக்.. பேக்.. என்று ஓடினான். என்னும் எத்தனை..? (சில நாட்களில் அவர்களெல்லாம் நண்பர்களாக மாறினர்).

மறுநாள் காலை ஒரு கூட்டத்திடம் மாட்டிக் கொண்டோம். அவர்கள் சட்டையை இன் பண்ணி வந்தவர்களை எடுத்து விடச்சொன்னதோடு முதலாம் ஆண்டில் இன் செய்யக் கூடாது என மிரட்டல் வேறு விட்டனர். (நம்ம எப்பவும் இன் பண்றதேயில்லை. அதனால கவலையே படலை). இந்த மிரட்டல் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடித்தது என்பது வேற விஷயம்.

ஒருவன் ஒரு பொண்ணை (இரண்டாம் ஆண்டு மாணவிகளில் அழகான பெண் என்ற வர்ணனை வேறு) எனது வகுப்புத் தோழனிடம் காட்டி ரோஸ் கொடுக்கச் சொல்ல, அவனும் அந்த அண்ணன் கொடுத்ததாக சொல்லி கொடுத்து விட்டான்.(சில நாளில் ரோஸ் கொடுத்தவனுக்கும் வாங்கியவளுக்கும் லவ்விருச்சுங்க...)

ராகிங்கெல்லாம் முடிந்து கல்லூரி ஸ்டிரைக், அடிதடி எனத் தொடர்ந்த போது அண்ணாத்துரை, ராமகிருஷ்ணன், பிரான்சிஸ், முத்தரசு பாண்டியன், ஆதி ரெத்தினம், நவனீதன், திருநாவுக்கரசு, சேவியர் என புதிய நட்புவட்டம் உருவாகியது. இந்த நட்பு வட்டம் எனக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

கல்லூரிக்காலம் தொடரும்.

-சே.குமார்