மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 30 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : இது மக்களின் தீர்ப்பு

'எதிர்பாராததை எதிர்பாருங்கள்...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'அங்க என்ன முடிவோ அதுதான்...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'நான் மக்கள் பிரதிநிதியே...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'அவங்க நீங்க இருந்தது போதும்ன்னு நினைச்சிட்டாங்க...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'மக்கள் மனசை வென்றுவிட்டாய்...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'வெற்றியாளனாக வேண்டியவன் நீ...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'எனக்கே அதிர்ச்சியாய்த்தான் இருக்கு...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'அவங்களோட முடிவு எப்பவும் எப்படியும் மாறலாம்...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'ஆமாம் இது மக்களின் தீர்ப்பு...'

'ஆமாம்... ஆமாம்... இது மக்களின் தீர்ப்பு மட்டுமே....

'ஆமாங்க... ஆமா... இது மக்கள் தீர்ப்பு... நான் மக்களின் பிரதிநிதி...'

'மாற்றம் ஒன்றே மாறாதது... மக்கள் தீர்ப்பு மாறும்...'

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், மேடையில் உள்ளார்
மல் நல்ல நடிகன் சினிமாவில் மட்டும் அல்ல... பிக்பாஸ் மேடையிலும் சிறந்த நடிகனே. மரியாதை மிகுந்த கமலஹாசன் மக்கள் மீது பலி போட்டுத் தப்பிப்பதை இம்முறை மிகச் சிறப்பாகக் கையாளுகிறார். மய்யம் ஆரம்பித்தவர் மய்யமாக நிற்க முடியாமல் இடதும் வலதுமாக இறங்கி ஏறிக் கொண்டிருப்பதில் தான் சிறந்த அரசியல்வாதி என்பதை அழகாக நிரூபித்திருக்கிறார்.

எல்லா இடங்களிலும் பலிகடா மக்கள்தான்... தர்ஷனுக்குப் பதக்கத்தைப் போடாமல் லாஸ்லியாவுக்குப் போடச் சொன்ன போதும் நீயே போட்டக்கண்ணு ஷெரினிடம் சொன்ன போதும் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தவர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தார்கள். உடனே கமல் பேச, விஜய் டிவி ஏற்பாடு செய்திருக்கும் ஆட்கள் கைதட்டினார்கள்... பின்னர் கொஞ்சமே கொஞ்சமாக ஒரு கைதட்டல் அரங்கேறியது... மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்த வெளியேற்றம் இது.

ஒவ்வொரு முறையும் மக்கள் வாக்குக்கு எதிரான முடிவை விஜய் தொலைக்காட்சி எடுக்கும் போதெல்லாம் கமல் எடுப்பது மக்களின் தீர்ப்பு இது என்ற வரிகளைத்தான். அதை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார்... மக்களுக்காக நான்... மக்களாலயே நான் என ஜெயலலிதா சொல்லிச் சொல்லி மக்குகளின் தலையில் நம்மைக் கட்டிச் சென்றதைப் போல.

இந்த பிக்பாஸ் வீட்டில் ஆரம்பம் முதல் போட்டிகளில் திறமையாக விளையாண்டவனும் ஓரளவுக்கு நேர்மையாய் இருந்தவனும் தர்ஷன் மட்டுமே. இந்த வாரத்தில் கூட எல்லாப் போட்டிகளிலும் வெற்றியாளன் அவனே. மக்களின் ஓட்டு ஒருக்காலும் அவனுக்கு எதிராய் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

கவின் வேளியே போக வேண்டிய சூழல் இருந்ததை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பிக்பாஸ், லாஸ்லியாவை இறுதிப் போட்டிக்கு... ஏன் வெற்றியாளராகக் கூட கொண்டு வருகிறேன் என என ஒப்பந்தம் போட்டிருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. யோசித்துப் பாருங்கள்... திறமையாளர்கள் எல்லாம் வெளியில் போக லாஸ்லியா அம்பது லட்சத்தை வாங்கி வின்னர் என அழுது நிற்பதையும் கவின் அணைத்து நிற்பதையும்.. எத்தனை மோசமான நொடிகளாய் இருக்கும் அவை.

தன் திறமையை எல்லாம் வெளிப்படுத்தி, ஆரம்பம் முதலே நல்லா விளையாண்டவனுக்கு வெற்றி நோக்கிச் செல்ல இடமில்லை... வாக்களிக்கவில்லையாம்... கவின் ஆர்மி லாஸ்லியாவுக்கு ஓட்டுப் போட்டுவிட்டார்களாம். லாஸ்லியா கவினுடன் பேசுவதை சேரனைப் போல் தர்ஷனும் எதிர்த்தானம்... அதனால்தான் அவனுக்கு வாக்கு இல்லையாம்... தமிழகமெங்கும் கவின் ஆர்மி மட்டுமே இருக்கு போல... அது சரி ஒரு ரியாலிட்டி ஷோவில் நல்லவனுக்கு வாக்களிக்காமல் காதல் களியாட்டம் நடத்தியவர்களுக்கு வாக்களிக்கும் நாம்தானா நாட்டுக்கு உருப்படியான தலைவரைக் கொடுத்து விடப்போகிறோம்..? எத்தனை வருடம் ஆனாலும் நமக்கெல்லாம் எடப்பாடிகளே வாய்க்கும்.

தன்னளவில் எல்லாருக்கும் நல்லவனாக இருந்தவனை வெளியேற்றி மக்களுக்கு காதல் செய்வது எப்படி..? அதுவும் இரவு பகலாக கார்த்திகை மாசத்து நாய்களாக வெயிலில் கிடந்து காதலிப்பது எப்படி..? மைக்கை அமத்திவிட்டு இருட்டுக்குள் இருந்து பேசுவது மற்றவர்களுக்குக் கேட்காமல் காதலிப்பது எப்படி..? கக்கூஸில் காதல் செய்வது எப்படி..? பெத்தவங்களுக்குப் பெப்பே காட்டிட்டு காதலிப்பது எப்படி..? அடுத்தவள் காதலித்தவனை தன்னவனாக்கிக் கொள்ளுதல் எப்படி..? எனக் கலாச்சார வகுப்பெடுத்து, காதல் செய்வீர்... கண்ணியம் காப்பீர் எனச் சொன்ன கலாச்சார காவலாளி லாஸ்லியாவை உள்ளே வைத்திருத்திருக்கும் விஜய் டிவிக்கு சம்பாத்தியமும் டிஆர்பியுமே முக்கியம்.

கவின் வெளியேறியதால் லாஸ்லியாவுக்கு அவனின் வாக்குகளும் கிடைக்க, இறுதிக்குத் தேர்வாகியிருக்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், ஷெரினும் இப்போது மக்கள் செல்வாக்கில் உயர்ந்து நிற்கிறார் என்றாலும் ஆரம்பம் முதல் மக்கள் செல்வாக்குப் பெற்றவன், இவன்தான் வெல்வான் என உறுதியாய் நம்பியவனை... என் கணிப்பு தர்ஷன் என்பதாகவே இருந்தது... தான் போகமாட்டோம் என தெள்ளத் தெளிவாய் மனதில் நினைத்திருந்தவனை வெளியேற்றியது விஜய் டிவியின் சாணக்கியத்தனம்... அதையும் ஏற்று மக்கள் தீர்ப்பு... மகேசன் தீர்ப்பு... என கமல் பேசியது கோமாளித்தனம்... எதிர்பாராததை எதிர்பார்ப்போம்... லாஸ்லியாவே வெற்றியாளர்.

தன் மனவருத்தத்தை மறைத்து அழுது நின்ற ஷெரினுக்கு ஆறுதல் சொன்னதும்... எப்பவும் பேசும் நாந்தான் போகணும் வசனத்தை வாராவாரம் அழகாய் மெருகேற்றி ஒவ்வொரு முறையும் அறுபது தடவை சொல்லும் லாஸ்லியாவுக்கு ஆறுதல் சொன்னதும் அழுத முகினுக்கு... முடியாதென பிக்பாஸிடம் கேள்வி கேட்ட சாண்டிக்கு என ஆறுதல் சொல்லி, போலியாய் சிரித்து... பொய்யாய் மகிழ்ந்து... மனச்சுக்குள் பெரும் சுமையுடன்... பெரும் குழப்பத்துடன்... நல்லா விளையாடாமல் இருந்திருந்தால் ஒருவேளை இறுதிக்குச் சென்றிருக்கலாமோ என்ற எதிர்மறை எண்ணத்துடன் வெளியேறிய தர்ஷனின் கண்ணாடிக்குள் இருந்த கண்ணில் சிரிப்பில்லை... மகிழ்ச்சியில்லை... கண்ணீர் இல்லை... ஆனால் வேதனையும் வலியும் விரவிக்கிடந்தது.

கவின் போட்ட திட்டப்படியே நடக்கிறது என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தர்ஷனுக்குச் சங்கு ஊதியிருக்கிறார்கள். ஏன் லாஸ்லியாவுக்கு ஊதியிருக்கலாமேன்னு நமக்குத் தோணலாம்... ஆனாலும் ஊதமாட்டோமே... லாஸ்லியாதானே மிகச் சிறப்பாக டிஆர்பியை உயர்த்தியவர்... அவரில்லையேல் காதல் கண்றாவிகள் ஏது..? ஆர்மிகள் ஏது..? குடுமிபிடி சண்டைகள் ஏது..? மரியாதைக்குரிய நபர்களை சந்தேகித்த கணங்கள் ஏது..? அப்பனின் ஆக்ரோஷம் ஏது...? அம்மாவின் கண்ணீர் ஏது...? கவினின் தியாகம் ஏது..? (தியாகம்ன்னு சொல்றானுக... எனக்கெல்லாம் அதில் நம்பிக்கையில்லை)... இத்தனை ஏதுகளுக்காக மொய்க்கு மொய் திரும்பி வைக்க வேண்டாமா...?

ஷெரினைப் போகச் சொல்லியிருக்கலாமே... இருக்கலாம்தான்... அப்படி அவரைப் போகச் சொன்னால் கவின் நான் போட்ட திட்டப்படியே அவெஞ்சர்ஸ் அணி இறுதிப் போட்டியில் என இறுமாப்புடன் பேட்டி கொடுத்திருப்பான்... ஆரம்பம் முதலே இவர்களின் திட்டங்களைத் தட்டிக் கேட்காமல் தட்டிக் கொடுத்தவர்கள், இதே இறுதிப்போட்டி என்றாகும் போது தங்கள் தொலைக்காட்சிக்குப் பேர் கெட்டுப் போகலாமென முடிவெடுத்தே... கோவிலுக்கு வெட்ட வேண்டிய ஆட்டுக்குப் பதிலாக பக்கத்தில் படுத்திருந்த ஆட்டைப் பிடித்து வெட்டியிருக்கிறார்கள். எல்லாமே சுயநலக் கணக்குத்தான்.... கூட்டிக் கழிச்சிப் பார்த்தா நமக்கு தப்பான விடை வரலாம்... ஆனால் விஜய் டிவிக்கு அதுவே சரியான விடையாகத் தெரியும்.

வெளி வந்தவனின் மனநிலைக்கு கமல் மருந்திடுவது போல் பேசினாலும் புண்ணாகியதே அவர்தானே... பின்னே என்ன மருந்திட்டு என்ன பயன்..? தனக்காக அழுத உண்மையான ரசிகர்களையும், வாக்களித்த உண்மையான மனிதர்களையும் பெற்று தர்ஷன் மனநிறைவோடுதான் வெளியேறியிருக்கிறான்... மேடையில் நின்று இவனே வெற்றியாளன் என கமல் கைபிடித்துத் தூக்கி, அம்பது லட்சத்தைக் கொடுப்பதைவிட, மக்களின் மனங்களை வென்று, தனது வெளியேற்றத்துக்காக கண்ணீர் சிந்துபவர்களைப் பார்த்து வெளியேறிய தருணமே வெற்றி பெற்றா தருணம். தர்ஷன் வென்றுவிட்டான்... அவனின் ஆசைப்படி தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் அமரும் நாயகனாய் மாற வாழ்த்துக்கள்.

ஊருக்கு உபதேசம் சொல்லும் கமல், இதைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் இருக்கக் காரணம் வாங்கும் பணமே... லாஸ்லியாவுக்குச் சாமரம் வீசுவதையும் கவினுக்கு கால் அமுக்கி விடுவதையும், சாண்டிக்குச் சாதம் ஊட்டி விடுவதையும் தவிர கமல் வேறொன்றும் பெரிதாய்ச் செய்துவிடவில்லை இந்தச் சீசனில்... தர்ஷனின் வெளியேற்றம் எனக்கே அதிர்ச்சியாய்த்தான் இருக்கு... எல்லாமே மக்கள்தான் என அசால்டாக மக்கள் மீது பலி சுமத்த ஆரம்பித்திருக்கும் கமல், மக்கள் மாற வேண்டும்... ஊழல் அரசியல்வாதிகளைத் தூக்கி வீச வேண்டும் என்று பேசுவதெல்லாம் அபத்தம்... முதலில் வாங்கும் பணத்துக்காக சுயம் இழக்காமல் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள் கமல். பின்னர் வீசலாம் மக்களுக்கு அறிவுரைகளை...

கமல் ரசிகனாய் அவர் மீது மிகப்பெரிய கோபம் கொள்ள வைத்த நிகழ்வு தர்ஷனின் வெளியேற்றம்... இனி என்னதான் பொங்கிப் பொங்கல் வைத்தாலும் வேகாத அரிசி வேகாததுதான்... விஜய் டிவிக்காரன் என்ன செய்யப் போகிறான்...? லாஸ்லியாவுக்குத் தூக்கிக் கொடுத்து கவினை அழைத்து அருகமர்த்தி, இலங்கையில் இருந்து வந்திருக்கும் மரியதாஸிடம் உங்ககிட்ட சொன்னமாதிரி உங்க மக ஜெயிச்சிட்டா, அவ விரும்பின மாதிரி இவரை உங்க மாப்பிள்ளையாக்கிக்கங்க என கமல் வாயால் சொல்ல வைத்து மேடையிலேயே சம்பந்தம் பேசி முடித்து விடுவார்கள்.

அதன் பிறகு விஜய் டிவியில் எந்த ஒரு போட்டி நிகழ்ச்சியென்றாலும் சிறப்பு நிகழ்ச்சி என்றாலும் கவினும் லாஸ்லியாவும் தவறாமல் கலந்து கொண்டு நம் கழுத்தை அறுப்பார்கள். 

நேற்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இன்னைக்கு சிக்கன் பிரியாணி வேணும்ன்னு பிக்பாஸ்கிட்ட கேட்டுக்கிட்டு நிப்பானுங்க... எஞ்சியிருக்கும் மிகச் சிறந்த போட்டியாளர்கள்.

முகனே வெல்ல வேண்டும் என்று மனசு நினைக்கிறது... ஷெரினும் வரலாம்... நம்ம நினைக்கிறதா நடக்கும்... எதிர்பாராததை அல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அடுத்த வாரமும் கமல் கவனமாய்ச் சொல்வார்...

இது மக்கள் தீர்ப்பு என்பதை.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : கமலும் கவினும் கூடவே காதலியும்

'லியா நான் எதுக்காக வெளியே வந்தேன்னு உங்களுக்கு ஓரளவுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்...'

'அண்ணே... நாம ரெண்டு பேரும் சேர்ந்து போட்ட திட்டம் போக... நானே தனியா ஒரு திட்டம் போட்டேன்...'

'மச்சான் ஷெரினு என்னையா வெறுத்துட்டியா...?'

'என்னைய எல்லாரும் ஒல்லியாயிட்டேன்னு சொல்றீங்க... தர்ஷ்தான் ரொம்ப ஒல்லியா இருக்கான்..'

'முகன் கவலைப்படாதே... வெளியில வந்ததும் பார்க்கலாம்...'

'லியா எதையும் நினைக்காம விளையாடுங்க... இன்னும் ஒரு வாரம்தான்...'

'நீ வெற்றியோட வரணும்ன்னுதான் உங்கப்பாவோட ஆசை... அதை நினைச்சி விளையாடு லியா...'

'நான் ரொம்ப நல்லாயிருக்கேன்டா... நீ உடம்பைப் பார்த்துக்கடா...'

'திட்டமெல்லாம் தப்பான வார்த்தையில்லையாம்... அது நல்ல வார்த்தைதானாம்...'

'அவங்க வீட்டுலயும் பார்ப்பாங்கதானே... அதான் மரியாதையா...'

'சோகத்துல இருந்த மாதிரி இருந்துச்சு...'

'ஆமா சோகத்துல இருக்கும் போது கண்டிப்பாச் சாப்பிடணும்...'

'நானும் லியாவும் சேர்ந்து செஞ்ச உருளைக்கிழங்கு பொறியலை சாப்பிடவே இல்லை சார்...'

'இந்தச் செக்கை எடுத்துக்கிட்டு பேங்குக்குப் போயிடாதேடான்னு சொல்றீங்க...'

'நான் எதுக்காக இந்த முடிவுக்கு வந்தேன்னு ஓரளவுக்குச் சொல்லிட்டேன்...'

'ஆமா நண்பர்கள் இறுதிப் போட்டிக்கு வரணும்ன்னு முடிவெடுத்துட்டு அவங்களையே நாமினேட் செய்ய முடியாது சார்... அதான் செய்யலை...'

'வெளியில எல்லாமே சரியா இருக்கு...'

'முடி வெட்டுனேப்பா... அதான்....'

'பிக்பாஸ் எபிசோடெல்லாம் திருப்பிப் பார்க்க மாட்டேன்... எப்பவும் போல உங்களோட நட்பாயிருப்பேன்...'

'சின்னச் சின்னதா பார்த்தேன்... சாண்டிண்ணே நீ சூப்பரு... வெளியே வா...'

'சீரியலும் ஒரு ரியாலிட்டி சீரியலும் ஒரே மாதிரியானது இல்லைன்னு புரிஞ்சிக்கிட்டேன்...'

'எனக்கான இடம் ஒரளவு உறுதியாயிருக்கும் போது மற்றவங்களுக்கு அவங்களுக்கான இடத்தைக் கொடுக்கணுன்னு முடிவு பண்ணினேன்...'

'லியா... டேக் கேர்... நல்லா விளையாடுடா... இன்னும் ஒரு வாரம்தாம்ப்பா இருக்கு...'

'லியா... உங்களுக்காக வெளியில காத்திருப்பேன்டா...'

'LIYA I'M WAITING'

Related image

'பொட்டு மேல பொட்டு வைச்சு...' மாதிரி சட்டை மேல சட்டை போட்டு ஆண்டவர் தரிசனமே... உறவு முறைகளைப் பற்றி சின்னதாய் ஒரு பேச்சு... அக்கா அமெரிக்கா போனபோது கல்கத்தாவில் இருந்து போனில் கூப்பிட்டப்போ அழுது கதறிய கதை சொல்லி, லாஸ்லியாவுக்கு மற்றவர்கள் எப்படி ஆறுதலாய் இருந்தார்கள் என்பதைச் சொல்லி, வெள்ளிக்கிழமையைப் பாருங்கன்னு சொல்லிட்டு, உள்ளாற பொயிட்டாரு...

பாவம் அவருந்தான் என்ன பண்ணுவாரு... எதுவுமில்லாத டீக்கடையில எத்தனைநாள்தான் தண்ணியை மட்டும் வச்சி ஆத்திக்கிட்டு இருப்பாரு... ஒரு பரபரப்பான போட்டியில்லை... போராட்டங்கள் இல்லை... சிக்கன் தின்னியளா... பிரியாணி தின்னியளா... ரொம்ப நேரம் அழுவீங்கன்னு பார்த்தா உருளைக்கிழங்கைத் தின்னுக்கிட்டு இருக்கீங்க... தூங்கி எந்திரிச்சியளா... பாட்டுப் பாடுனியளா... பல் தேய்ச்சீங்களா... படுத்து உறங்கினீங்களான்னா கேக்க முடியும்.

வெள்ளிக்கிழமையை பாருங்கன்னு வெசனத்தோட சொல்லிட்டு வெள்ளையடிக்கப் போயிட்டார்.

97ம் நாள் காலை திருப்பள்ளியெழுச்சியாய்...
'ச்சல்மார்... 
பத்தும்மணி வாக்குல பச்சயப்பாஸ் ரோட்டுல 
ஷாட்டு ஸ்கேட்டுப்போ ஜென்னீஃபர் 
அடிதடி நடக்கல வெட்டுக்குத்து விழுகுல 
அழகுல பார்க்குறா ஜென்னீஃபர் 
செல்லமே தங்கமே மெல்லமா பாரடி 
செத்துக்கித்துப் போவேன்டி 
நீ சரிசரின்னும் ஒரு முறை சொன்னா 
சத்தியம்மா பொழைப்பேன்டி 
அப்பப்போ ஹிப்புல்ல சம்மரும் வின்டர்தான் 
வென் டிட் லைக் மை கம் பேபி 
ச்சல்மார் ...'

அப்படிங்கிற தேவி படப்பாடல், எல்லாரும் ஆடினாங்க.. என்னய்யா எல்லாரும் எல்லாரும்ன்னு.. இருக்க அஞ்சு பேரும் ஆடுனாங்கன்னு சொல்லித்தொலைய வேண்டியதுதானே.

மத்தியானம் வரைக்கும் என்ன பண்ணுனானுங்கன்னு தெரியாது... முதல் நாள் கோல் போட்டு கோழி செயிச்சவங்களுக்கு பார்சல் வந்திருந்தது... ஷெரின் தூங்கிக் கொண்டிருக்க, அவரை எழுப்பி தர்ஷன் இப்படித் தொட்டு இப்படிச் சாப்பிடணும்ன்னு ஊட்டிவிட்டான். எல்லாரும் சாப்பாட்டில் கவனமாய் இருக்க, லாஸ்லியா மட்டும் ஏய் பிக்பாஸ் உன்னோட போட்டோ அனுப்புய்யான்னு கேமராக்கிட்ட போயி கேட்டாங்க.

கொஞ்ச நேரத்துல பிக்பாஸ் போட்டோ அனுப்ப, எல்லாருக்கும் ஆர்வம்... வேகவேகமாப் பிரிச்சானுங்க... விஷாலை இருட்டுக்குள்ள நிப்பாட்டி எடுத்த மாதிரி ஒரு போட்டோ... பிக்பாஸ் முகத்தைக் காட்டமாட்டாராம்... எல்லாரும் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாங்க... ஆஹா... நூடுல்ஸ்ன்னு அதிலும் சாப்பாட்டைத் தேடினான் தர்ஷன். என்ன பிக்கி இப்படிப் பண்ணிட்டே... எம்புட்டு ஆவலா இருந்தேன்னு லாஸ்லியா சோகமாயிட்டாங்க.

ஷெரினுக்கு ஸ்பா ஆட்கள் வந்து விவசாயத்துக்கு வயலைத் தயார் பண்ற மாதிரி பண்ணிட்டுப் போனாங்க... நாய்க்குட்டி மாதிரி முடியை மாத்தியிருக்கானுங்கன்னு தர்ஷன் கிண்டல் பண்ணினான். ஸ்பாவுக்கு முன்னால பார்க்க அழகாயிருந்தார் ஷெரின்... ஸ்பாவுக்கு அப்பறம்... 'ப்ப்ப்பா'ன்னு இருந்துச்சு.

ஏர்டெல் எக்ஸ்டிரீமுக்காக ஒரு டாஸ்க்...

தர்ஷனும் லாஸ்லியாவும் ஒரு கோஷ்டி... சாண்டியும் ஷெரினும் ஒரு கோஷ்டி... முகன் நடுவர்... தர்ஷன் நடித்துக்காட்ட லாஸ்லியா கண்டுபிடிக்கணும். சூது கவ்வும்க்கு எதுக்குடா அப்படி ஒரு நடிப்பு... லாஸ்லியாவால கண்டு பிடிக்க முடியலை... சாண்டி நடித்துக் காட்டியதில் தமிழில் இதுக்கு என்ன என்பதில் ஏற்பட்ட சிக்கலால் தடுமாறித் தடுமாறி ஷெரின் கண்டுபிடித்தார்... பாவம் ரஜினி முருகன்... படாதபாடு பட்டார். சாண்டி அணி வெற்றி... இருவருக்கும் ஏர்டெல் எக்ஸ்டிரீம் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

லவிஸ்டா இன்ஸ்டண்ட் காபிக்கான டாஸ்க்... 

காபி மக்குல மறக்க முடியாதவங்களுக்கு எழுதுங்கன்னு சொன்னாங்க... ஒவ்வொருத்தரும் தங்களோட வாழ்வில் பின்னிருந்து முன்நிறுத்தியவர்களைப் பற்றி எழுதி வாசித்தார்கள். 

இறுதி நாட்களைச் செமை ஜாலியாக் கழிக்கிறானுங்க.. சிநேகனெல்லாம் பாவம் வெயில்ல போட்டுக் கொன்னெடுத்தானுங்க... இவனுகளுக்கு நேரா நேரத்துக்குத் திங்க அனுப்பிட்டு... தூங்கினாலும் எழுப்பாம... சும்மாவே சுத்திவர வச்சிருக்கானுங்க... எல்லாப்பயலும் ஒரு சுத்து பெருத்துட்டானுங்க... தீனி அப்படி.

லாஸ்லியா... கடந்த இரண்டு நாட்களாக... அதாவது கவின் போனதுக்குப் பின் ஆரம்ப நாட்களில் இருந்த லாஸ்லியாவாக மாறியிருக்கிறார்... அந்த முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி... துள்ளலாட்டம் எல்லாமே க.போவுக்கு அப்புறம்தான்... கவின் தன்னை ரொம்ப நல்லாப் பார்த்துக்கிட்டார்ன்னு சொன்னாலும் அவனைப் பொறுத்தவரை கைவிட்டுப் போயிடக் கூடாதென அழுத்திப் பிடித்து வைத்திருந்தான்... சோசியக்காரனின் கூண்டுக்குள் இருக்கும் கிளியின் நிலையில்தான் இருந்தார். எதிலும் அவனை மீறி கலந்து கொள்ள முடியாமல் தவித்தார். இப்போது பனை மரப்பொந்தில் இருக்கும் சுதந்திரக் கிளிபோல் பறந்து, பாடித் திரிகிறார்... நாதாரிப்பயலே கவினு... நீ நல்லவனெல்லாம் இல்லைடா.. நயவஞ்சகன்.

ஆண்டவர் வந்தார்... அகம் டிவி வழி அகத்துக்குள் போனார். கவினைத் தேடினார்... என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க என்றார்... அப்புறம் வெளிய வாங்க உங்களுக்கெல்லாம் எடப்பாடி மாதிரி எதிர்பாராத வாழ்க்கை காத்துக்கிட்டு இருக்குன்னு சொன்னார். போன சீசன் பெண்கள் எல்லாம் பட புரோமோசனுக்காக வந்தது விஜய் டிவி வருமானத்துக்காகத்தான் என்பதை மறைத்து அது தப்பில்லை... அவங்க மாதிரி நீங்க வருவீங்கன்னு சொன்னார். இதுவரைக்கு இதையெல்லாம் சொன்னதில்லை... வெளியே வந்து பாருங்க... அப்பப் புரியும்ன்னார்.. சாண்டியை நகைச்சுவை நடிகனாவாய்ன்னு சொல்லாமல் சொன்னார்... லாஸ்லியாவுக்கு ரவிக்குமார் வாய்ப்புக் கொடுப்பார்ன்னு சொல்லாமல் சொன்னார்.... கடைசி வரைக்கும் ரவிக்குமாருக்கு யார் வாய்ப்புக் கொடுப்பான்னு சொல்லவேயில்லை.

அப்பறம் அகம் டிவியை ஆப் பண்ணிட்டு மேக்கப் போடப் பொயிட்டார்.

ஏன் போனேன்...?

எதுக்குப் போனேன்...?

அப்படின்னு கவின்தானே சொல்லணும்ன்னு சொல்லி, கவினை மேடைக்கு அழைத்தார். வட்டிக்குக் கொடுப்பவன் கையை மடிச்சி விடுற மாதிரி... தமிழக முதல்வர்கள் மடிச்சி விடுற மாதிரி... மளிகைக் கடை அண்ணாச்சி மடிச்சி விடுற மாதிரி... சட்டையை ஏத்தி மடிச்சிவிட்டு மேடையேறினான் கவின்.

இதுக்கு அப்புறம் என்ன நடந்திருக்கும்ன்னு நினைக்கிறீங்க... மைக் கொடுக்கப்பட்டது... பேசுங்க கவின்னு சொன்னதும் கன்னியாகுமரியில ஆரம்பிச்சி... காளையார்கோவில் வந்து... மதுரை போயி... மன்னார்குடியைப் பிடித்து.... தஞ்சாவூருக்குத் தாவி.... திருச்சியில திரும்பி... வேலூருக்கு வேகமெடுத்து... கோயம்புத்தூருல கொண்டாடி... பழனியில படுத்திருந்து... திருப்பூருக்குள்ள போயி.... கும்பகோணத்துல குளிச்சி... வேதாரண்யத்துல வெளிய வந்து... காஞ்சிபுரத்துல கஞ்சி குடிச்சி... பாண்டிச்சேரியில பல்லாக்குழி ஆடி... சென்னையில செல்பி எடுத்து அப்படியே மறுபடியும் கன்னியாகுமரி நோக்கிப் பயணப்பட்டான்.

கமலுக்கு கண்ணைக் கட்டிருச்சு... கமல் சார்.... உள்ள போயி கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க... முடிஞ்சா தூங்குங்க... அவரு முடிச்சதும் எழுப்புறோம்ன்னு கமலை பிக்பாஸ் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.

அடுத்து வீட்டுக்குள்ள போவோம் சார் வீட்டம்மணியைப் பார்க்க அப்படின்னு கவின் காலைத் தூக்கிக்கிட்டு நிக்க, அகம் டிவி வழியே போவோம்ன்னு கமல் சொல்லிட்டார். கவினைப் பார்த்ததும் எலும்பைப் பார்த்த எங்கவீட்டு ரோஸி மாதிரி லாஸ்லியா முகமெல்லாம் சந்தோஷ அலை... 
'அப்பனாத்தா பார்த்தாலென்ன... 
அக்கா தங்கை பார்த்தாலென்ன... 
அத்தான் உன்னைப் பார்க்கயிலே... 
போன உயிரும் வந்ததய்யா...' 
என்கிற மனநிலையில் சந்தோஷமா உக்கார்ந்திருந்துச்சு... முகமெல்லாம் பிச்சிப்பூ மாதிரி சிரிப்புச் சிதறிக்கிடந்தது.

கமல் பக்கத்துல நிக்கிறாரா...? அந்தாளு பாட்டுக்க நிக்கட்டும்... இந்த மேடை எனக்கானது... நான் பேசிக்கிட்டே இருப்பேன்னு கவின் மறுபடியும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை போய் அப்புறம் காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வந்து... மறுபடியும் கன்னியாகுமரியில இருந்து காஷ்மீர் போய்... மறுக்கா மறுக்கா போய் வந்துக்கிட்டு இருந்தான்... கமல் மறுக்க முடியாமல் மறுதலிச்சிக்கிட்டு நின்னார். இந்தப் பயணத்தில் பேசியவையே ஆரம்ப வரிகள்...

கவினுக்கிட்ட இருக்க திறமையின்னுதான் அதைச் சொல்லணும்... எதிராளி பேசவேண்டியதையும் தானே பேசி, அதுக்குப் பதிலும் சொல்வதை திறமை என்று சொல்லாமல் வேறென்ன சொல்லமுடியும். பேசிக்கிட்டே இருந்தான்... கமல் கிட்டவே இருந்தார் பேசவேயில்லை... 

'காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்திடும் இனிய சீதனம்... '

அப்படின்னு கவினும் லாஸ்லியாவும் டூயட்டே பாடிக் கொண்டிருந்தார்கள். கமலஹாசன் மீண்டும் துயில் கொள்ளப் போகலாமான்னு யோசிச்சிக்கிட்டு நின்னாரு.

பேட்டரி தீர்ந்த ரேடியோ மாதிரி கவின் மெல்ல... கமல் இங்கயே நிற்கிறாரான்னு யோசிச்சபடி சப்தத்தைக் குறைக்க, அப்பாடா... ஆட்டத்தின் இறுதிப் பந்தாச்சும் நமக்கு வந்துச்சேன்னு தோணியுடன் விளையாடும் ஜடேஜா மாதிரி மனசுக்குள்ள நினைச்சி சிரிச்சிக்கிட்டார் கமல்.

இதை விட்டா இப்ப முடிக்கமாட்டான்... கெடைச்ச கேப்புல கெடா வெட்டிடலாம்ன்னு யோவ் பிக்பாஸ் அகம் டிவியை அமத்துய்யான்னு சொன்னா... அந்தாளு லாஸ்லியாவை முழுத் திரையிலும் கொண்டு வந்து வைத்துவிட்டு, 
'காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்...' 

என அவர் ஒரு பக்கம் காதல் வளர்த்துக் கொண்டிருந்தார். யோவ் கட் பண்ணுய்யான்னா நீ என்னடான்னா அந்தப்பக்கமா ஒரு கதையெழுதிக்கிட்டு இருக்கேன்னு கட் பண்ணச் சொன்னார் கமல்.

வீட்டுல கோழி வளர்த்தா எத்தனை கோழியிருந்தாலும் அதிலொரு கோழி எல்லாத்தையும் விரட்டிட்டு இரையைத் தின்னும்.. சேவல்கள் கூட அருகே வரப்பயப்படும். மாடு வளர்த்தீங்கன்னா அதுல ஒரு மாடு நாட்டாமையா இருக்கும்... யார்க்கிட்ட வைக்கோல் கிடந்தாலும் எட்டித் தின்னும்... ஆடு வளர்த்தீங்கன்னா அதுல ஒரு ஆடு எல்லா ஆட்டையும் மிரட்டி வச்சிருக்கும்... அப்படித்தான் கவின்.... எத்தனை பேர் இருந்தாலும் எல்லாரையும் ஓராமத் தள்ளிவிட்டுட்டு ஒய்யாரமா மேடையில் வீற்றிருப்பான்.

'நீ உள்ள இருக்கும் போதுதான் யாருக்கும் புரியாமப் பேசினே... வெளியில போயும் அப்படியே பேசுறியே... ஈஈஈஈஈஈ' அப்படின்னு லாஸ்லியா சொன்னுச்சு. புரியாமப் பேசியும் சிகப்புக் கதவுக்கிட்ட மணிக்கணக்குல கெடந்திருக்கியன்னா வேற லெவல்தான் போங்க.

அதென்ன ஒருக்கா நீங்கன்றிங்கோ... அப்பால நீன்றிங்கோ... மறுக்கா வாடான்றீங்கோ என கமல் கலாய்த்ததும் அவங்க வீட்டில பாப்பாங்கதானே சார்ன்னு கவின் சொன்னதும் ஓ...ஆஆஆ... அதுன்னு கமல் சொன்னது செம. அதேபோல் என்ன பயந்து பயந்து பேசுறீங்க... நான் என்ன அப்பாவான்னு சொன்னதும் செம.

கமலைப் பொறுத்தவரை கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு எப்பவும் அதிக ஆதரவு காட்டுபவர்தான். கவினை பெரும் தியாகி என்ற நிலையில் நேற்று உயர்த்தினார்... அந்த வீட்டுக்குள் அவன் பண்ணிய தப்பெல்லாம் மறைத்து தியாகியாக்கிவிட்டார். அதேபோல் லாஸ்லியாவை அழுது தன் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்குப் பாராட்டினார். கவின் - லாஸ்லியா காதலுக்கு உரமாய், உயிராய் இருந்தார்.

ஒரு வழியாக கவினிடமிருந்து மைக்கைப் பறித்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.

அப்புறம் முகன் தவிர நால்வரில் யாரைக் காப்பாற்றலாம்ன்னு சொன்னதும் தர்ஷனைச் சொன்னாங்க, சாண்டி தீவிரமா நின்னாரு... நீங்க காப்பாத்தப்படுகிறீர்கள் என்றதும் தர்ஷனை மறந்து லவ் யூ கண்ணம்மான்னு பொண்டாட்டிக்குப் பொயிட்டார். அப்படியே ஓட்டுப் போட்ட மக்களுக்கும் ஒரு கும்பிடைப் போட்டு வைத்தார். இறுதிப் போட்டிக்கு ரெண்டாவதாய் சாண்டி நுழைந்திருக்கிறார். 

என்னைக் காப்பாத்து... என்னைக் காப்பாத்துன்னு சொன்ன வெண்ணை... இறுதி போட்டிக்குப் பொயிட்டேன்னு சொன்னதும் என்னை இறக்கி விட்டுட்டியேடான்னு தர்ஷன் அமர்ந்திருந்தான். கவினுக்கு விழும் ஓட்டெல்லாம் இனி நமக்குத்தான்.... நாம நாட்டு மக்களுக்கு ஏதோ நல்லது செய்திருக்கிறோம் என இறுமாப்புடன் இருந்தார் லாஸ்லியா. நம்மளைத்தான் அனுப்புவானுங்க போலன்னு ஷெரின் சோகமாய் இருந்தார்.

நாளைக்குப் பார்ப்போம்ன்னு கமல் காரைக் கிளப்பிட்டார்....

திங்கிறதுக்கு வந்தாச்சு... தின்னானுங்க... கவின் சிலிம் ஆயிட்டானாம்... அழகாயிட்டானாம்.... போயி ரெண்டுநாள் முழுசா முடியலை.... இவனுக பேசுறதெல்லாம் கேக்க முடியலை... லாஸ்லியா முகத்தில் ஆயிரம் மின்னல்கள்...
'அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே...'
அப்படின்னு மனசுக்குள்ள பாடிமகிழ்ந்தார்.

இன்னைக்கு தர்ஷன் என்கிறார்கள்... அப்படியென்றால் கவினுடன் பிக்பாஸ் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி லாஸ்லியாவை முன்னிறுத்த எடுக்கும் முயற்சியாய் இருக்கும் என்றே தோன்றுகிறது.

இம்முறை மக்கள் ஓட்டெனச் சொல்லி நம்மளை முட்டாளாக்கி அவர்கள் சிறப்பாக நடை போடுகிறார்கள்... வரிசையாய் சென்றவர்களில் பலர் பிக்பாஸ் முடிவால் வெளியேற்றப்பட்டவர்களே ஒழியா மக்கள் ஓட்டுமில்லை... மண்ணாங்கட்டியுமில்லை...

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 28 செப்டம்பர், 2019

மனசின் பக்கம் : கோவேறு கழுதைகள் முதல் மரப்பாலம் வரை

Image result for கோவேறு கழுதைகள்
ழுத்தாளர் இமையம் எழுதிய 'கோவேறு கழுதைகள்' நாவலை வாசித்து முடித்தேன். ஆரோக்கியம் என்னும் வண்ணாத்தியின் வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றி முன்னும் பின்னுமாய் நகர்கிறது நாவல். ஊருக்கு ஒரு வண்ணாத்தியும் அம்பட்டையனும் குடியாய் இருந்தது ஒரு காலம். எங்க ஊரில் விவசாயம் இருக்கும் வரை இவர்களும் பக்கத்து ஊரில் இருந்து வருவார்கள். அழுக்கெடுத்துச் செல்வார்கள்... முடி வெட்டிவிட வருவார்கள். 

கதிர் அறுப்பு முடிந்ததும் இவர்களுக்கு ஆறு கதிருக்கட்டும் கொஞ்சம் பணமும் கொடுப்பார்கள். நல்ல வெளஞ்சிருக்க வயல்ல... ரெண்டரி சேர்த்து வச்சிக் கட்டி வைக்கச் சொல்வாரு எங்கப்பா... சிலரோ வண்ணானுக்குத்தானே... அம்பட்டையனுக்குத்தானேன்னு சின்னச் சின்னக் கட்டாக் கட்டுவாங்க... எல்லாம் முடிஞ்சி போச்சு... இப்ப யாராவது இறந்தா மூவாயிரம் நாலாயிரம் கொடுத்து தேவகோட்டையில் இருந்து இவர்களைக் கூட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது.

இதில் ஆரோக்கியத்தின் நிலமை எப்படி மாறி வருகிறது என்பதை அழகான வாழ்க்கைப் பாடமாய் நகர்த்திச் செல்கிறார். கோவேறு கழுதைகள் பொதி சுமக்க மட்டுமே என்பதைச் சொல்லும் கதைதான் 'கோவேறு கழுதைகள்'.

Image result for ishq malayalam movie
ஷென் நிகம், ஆன் ஷீட்டல் நடித்த இஸ்க் என்றொரு மலையாளப்படம்... இது காதல் கதை இல்லைன்னு சொல்லியிருப்பார்கள்... ஆம் அது காதல் கதை இல்லைதான்... காதலர்கள் ஒரு மருத்துவமனை வளாகத்துக்குள் இரவில் காரில் அமர்ந்து முத்தம் கொடுக்கும் போது வந்து வீடியோ எடுத்து, போலீஸ் என அவர்களை மிரட்டி, அவர்களுடனே பயணப்பட்டு பணம் பறித்து இன்னும் இன்னுமாய் நிறையச் செய்து விட்டு விலக, தன்னை வெளியில் நிறுத்தி உன்னிடம் என்ன செய்தான் என நாயகியிடம் நாயகன் கேட்க, விரிசல் விழுகிறது.

அதன் பின் அவன் அவளை என்ன செய்தான் என்பதை அறிய மீண்டும் மருத்துவமனை செல்லும் போதுதான் அவன் போலீஸ் இல்லை ஆம்புலன்ஸ் டிரைவர் என்று தெரிய, அவன் பண்ணிய அதே வேலையை நாயகன் அவன் குடும்பத்தில் செய்து அவனைப் பலி வாங்கி, வீரனாய் காதலி முன் போய் நின்று அன்று இரவு அவன் உன்னிடம் என்ன செய்தான் என்பது தெரியும் என்பதாய் நிற்க, என்னை ஒருவன் தொட வரும் போது இல்லாத ஆண்மை, இப்ப அங்கு என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்வதில் மட்டும் வந்திருக்கே என நாயகி அவனுக்குச் சொல்லும் முடிவுதான் கதை... சூப்பரான படம். முடிந்தால் பாருங்கள்.

Image result for நம்ம வீட்டுப் பிள்ளை
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை... சிவா கொஞ்சம் பெருத்திருக்கிறார்... சித்தப்பன் பெரியப்பன் மாமன் மச்சான் கதையுடன் அண்ணன், தங்கை பாசத்தைச் சொல்லும் மற்றொருமொரு படம்... சிவா படத்தில் காமெடியாச்சும் ரசிக்கும்படி இருக்கும்... இதில் சூரியின் மொக்கைக்கு முன் அவரின் மகனாக வரும் சிறுவனின் காமெடி நல்லாயிருந்தது அவ்வளவே. பாண்டிராஜ் இயக்குநராய் ஜெயிக்கவில்லை என்றுதான் எனக்குத் தோன்றியது. சமுத்திரகனி வரும் பிளாஸ்பேக் காட்சிகள் நல்லாயிருந்தது. 

Image result for மின் கைத்தடி
மின்கைத்தடி என்னும் புதிய இணைய மின்னிதழ் உதயமாகியிருக்கிறது. அதற்கு படைப்பு அனுப்பும் போது எழுத்தாளர் கமலக்கண்ணன் உங்கள் கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. முதல் இதழிலேயே பகிர்கிறேன் என்றார். அதன்படி பத்து நாட்களுக்கு முன்னரே பகிர்ந்து இதழ் நேற்றுதான் எல்லாருடைய பார்வைக்கும் வந்திருக்கிறது. அப்பா என்னும் அந்தக் கதையை வாசிக்க இங்கே சொடுக்குங்கள். உங்கள் கருத்தையும் தவறாமல் சொல்லுங்கள்.

Image result for தொரட்டி

தொரட்டி என்னும் ஒரு படம்... ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை என்றார்கள். கெட்ட சகவாசம் என்ன செய்யும் என்பதைக் காட்டுகிறார்கள். அழகான ஒரு கதைக்களம்தான்... நாயகனைவிட நாயகியே சிறப்பு... அருமையான நடிப்பு... வில்லனாய், அடியாளாய் பார்த்துப் பழக்கப்பட்ட எங்க பக்கத்து ஊரு அழகு இதில் ஆடு மேய்ப்பவராக, நாயகனின் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். சிலரைத் தவிர பெரும்பாலான நடிகர்களை தேவகோட்டைப் பகுதி கிராமங்களில் இருந்து பிடித்திருக்கிறார்கள். பாடல்களில் கிராமிய மணம்... கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் சிறப்பான படமாகக் கொடுத்திருக்கலாம்... இப்பவே தொரட்டி மனம் அள்ளச் செய்கிறது... இறுதியில் மனம் கனக்கச் செய்கிறது.

Image result for பிக்பாஸ்

பிக்பாஸ் எழுதுவது தெய்வக் குத்தம்... நீ எழுத வேண்டியதை எழுது என நெருங்கிய நட்புக்கள் சொல்லும் போது என்ன சொல்வதெனத் தெரியவில்லை. அது கார்ப்பரேட் சமாச்சாரமாகவே இருந்து விட்டுப் போகட்டும்... என் எழுத்தை அதன் மூலம் நான் இன்னும் செதுக்கும் வாய்ப்பாகத்தான் நினைக்கிறேன்... அதிக நகைச்சுவையாய் எனக்கு கதை எழுத வருவதில்லை... ஆனால் பிக்பாஸ் பதிவுகளை நகைச்சுவையாய் எழுதியிருக்கிறேன்... பிரதிலிபியில் நான் பதிவு போடவில்லை என்றால் ஏன் இன்னும் எழுதலை என்று கேட்க வைத்திருக்கிறது அந்த எழுத்து. பிக்பாஸ் எழுத ஆரம்பித்து இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட நட்புக்களை இணைத்திருக்கிறது. அண்ணன், தம்பி என உரிமையுடன் கருத்து மோதல் செய்யும் சகோதரிகளைக் கொடுத்திருக்கிறது. இது பெருமை என்பதில்லை... என் எழுத்தில் சிறுமையில்லை என்பதற்காகவே.

Image result for மரப்பாலம்
ரன் கார்க்கியின் மரப்பாலம் என்றொரு நாவல் வாசித்து முடித்து அது குறித்து விரிவாய் எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனசுக்குள் நிற்கிறது. இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. இரண்டாம் உலகப்போரில் சிங்கப்பூர் மலேசியாவில் சைனாவின் ஆதிக்கம், அங்கிருந்து பர்மாவுக்கு மரப்பாலம் கட்டுதல் என்னும் அருமையானதொரு நாவல்... நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார். முடிந்தவர்கள் வாசியுங்கள்.

-'பரிவை' சே.குமார்.

பிக்பாஸ் : வீடு கூட்ட வந்த ஐஸ்வர்யா

'பிக்பாஸ்... நான் ஒண்ணு கேட்கட்டுமா..?' - லாஸ்லியா.

'என்ன கேளுங்க..?' - பிக்பாஸ்.

'நான் ஒண்ணு உங்ககிட்ட கேட்கணும்...?'

'என்ன கவின் பத்திரமா வீட்டுக்குப் போயிட்டானான்னா... அதெல்லாம் போயிட்டான்...'

'இல்ல பிக்பாஸ்... அவன் கெடக்கான்... இப்ப நான் கேக்க நினைச்சது வேற...'

'சொல்லுங்க லோஸ்லியா...'

'என்னை உங்களுக்குப் பிடிக்குமா..?'.

மயான அமைதி... 

மறுமொழியில்லா அமைதி... 

தவளை கூட கத்தாத மழை இரவு போல அமைதி...

'என்ன பிக்பாஸ்.... பினாயில் குடிச்ச மாதிரி ஆயிட்டீங்க...'.

'ம்... என்னத்தைச் சொல்ல...'.

'பிடிக்குமா... பிடிக்காதா... அதைச் சொல்லுய்யா போதும்...'.

'எனக்குப் பிடிக்கும் லோஸ்லியா...'.

'ஆஹா... லவ் யூ பிக்பாஸ்...'.

'அய்யோ... எனக்குமா... கவின் கட்டையை எடுத்துக்கிட்டு வருவான் தாயீ...'.

'அவன் கெடக்கான் லூசுப்பய... நீ சொன்னேன்னு அஞ்சு லெட்டத்தை எடுத்துக்கிட்டு என்னைய அம்போன்னு விட்டுட்டுப் போன பயதானே...'.

'ம்... இருந்தாலும் என்னால அவன் அஸ்க்கீ வாய்ஸ்ல பேசுறதைக் கேட்க முடியாது தாயீ... உன்னைய எனக்குப் பிடிக்கும் தாயீ... எந்திரிச்சிப் போ தாயீ...'.

'ஆஹா... ஆத்தா நான் பாஸாயிட்டேன்... என்னைய பிக்பாஸ் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டார்...'.

Related image

கவின் சென்றதை நினைத்து அழுது கொண்டேயிருந்தார் லாஸ்லியா... விஜய் டிவி தன்னை வெளியேறச் சொன்னதை பொண்டாட்டிக்கிட்டயும் சொல்லலை போல... அதுவும் கதறி அழுத போதும் 'போகாதே... போகாதே... என் கனவா...' அப்படின்னு பாடவில்லை என்றாலும் பிரிவின் வலியில் புலம்பித் தீர்க்கிறார்.

எல்லாரும் ஆறுதல் சொல்கிறார்கள்... அப்பாவுக்காக விளையாடு... அம்மாவுக்காக விளையாடு.... தங்கச்சிக்காக விளையாடுன்னு ஆனா கவினுக்காக நான் விளையாடாமல் போறேன்னு நிக்கிது லாஸ்லியா. அப்புறம் ஒவ்வொருத்தராச் சொல்லிச் சொல்லி சமாதானப் படுத்தினார்கள். கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பியது போல் காட்டிக் கொண்டார்.

இரவு வீடு கூட்டுறதுக்காக ஐஸ்வர்யா தத்தாவை அனுப்பினார்கள். இதெல்லாம் ஒரு உடையின்னு மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்கும் பிக்பாஸை என்னவென்று சொல்வது..? டிஸ்கோ சாந்தி டவுசரைப் போட்டு மிச்சமிருந்த துணியை இடுப்பில் கட்டி தெருக்கூட்ட வைத்துக் கொண்டே வந்தார். இவர் வந்ததும் தன்னோட 'அலேகா' என்ற படத்தின் போஸ்டரை வெளியிடவே வந்தார். 

'பிக்பாஸ் நான் உங்களை லவ் பண்ணுது... இந்த பிக்பாஸ் வீட்டுல வந்ததுல எனக்கு 5 படம் வந்திருக்கு... இது முதல் படம்... இது இப்ப உள்ள காதலர்களுக்கான படம்... ' அப்படின்னு நிறையப் பேசினார். அவர் இருக்கும் போது நம்ம ஊரு மளிகைக் கடையில  சாமான் மடிக்கிற மாதிரி கூம்பு வடிவில் பேப்பரை கொடிக்கயிறு மாதிரி ஒன்றில் கட்டி வாயால் ஊதி ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்குக் கொண்டு போகணும்... தர்ஷன் வெற்றி பெற்றான்.

'ஐஸூ நீ அப்படியே பொயிட்டு கிச்சன் பக்கமா வா... நிறையக் குப்பை கிடக்குன்னு சாண்டி சொன்னது செம. நீ போகும் போது உன்னைய விட உன்னோட துணியை பாதுகாப்பா அனுப்பி வைக்கிறோம் என்றும் சொன்னார். பாட்டுப் போடும் போதே வரப்போறாது ஐஸ்வர்யான்னு தர்ஷன் சரியாகச் சொன்னான். 

ஐஸ்வர்யா வந்த போது லாஸ்லியாவின் பார்வையில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. பிக்பாஸ்க்கு என்னை ரொம்பப் பிடிக்கும் என்றதிலும் படத்தின் போஸ்டர் வெளியிட்டு ஐந்து படம் கையில் இருக்குன்னு சொன்ன போதிலும், போட்டிருந்த அரைகுறை உடையைப் பார்த்த போதிலும் லாஸ்லியாவின் முகத்தில் ஐஸ்வர்யா இடத்தில் தான் நிற்க வேண்டும் என்ற எண்ணம் ஓடியதைக் காட்டியது. இது மறுநாளே வெளிப்பட்டது.

96ம் நாள் காலையில் 'எம்பேரு மீனாகுமாரி' பாடல் ஒலிக்க, எல்லாருமே ஆடினார்கள். சாண்டி சில நேரங்களில் ஆடும் ஆட்டம் மிகவும் ரசிக்க வைக்கும். நேற்றைய ஆட்டமும் அருமை.

அப்புறம் தோசை போட்டு அதில் நிலாவைக் காட்டிக் கொண்டிருந்தார். அதன் பின் எல்லாரும் ஜாலியாப் பாட்டுப்பாடிக்கிட்டு இருக்க, 'சைலன்ஸ்' எனச் சொன்ன பிக்பாஸ், லாஸ்லியாவை உள்ளே கூப்பிட்டு அடுத்த போட்டிக்கான அறிவுப்பைக் கொடுக்க, மனசுக்குள் வாசித்தார். 'ஏய் லூசு... மனப்பாடம் பண்ணிட்டியா...' அப்படின்னு கேக்கவும் தன்னோட டிரேட் மார்க் 'ஈஈஈ'யை காட்டினார். பின்னர் வாசித்துவிட்டு நான் ஒண்ணு கேட்கவான்னு சொல்லிட்டு என்னைப் பிடிக்குமான்னு கேட்க, எங்கே கவினுக்குப் போட்டியா என்னை நிப்பாட்டிருவாளோன்னு நினைச்சு ரொம்ப யோசிச்சி பிடிக்கும் என்றார்.

உடனே மகிழ்ச்சியில் குதித்து வெளியில் வந்து எல்லாரிடமும் சொன்னார். என்னடா நேத்து என்னையச் சொன்னே... இப்ப இவளைச் சொல்றேன்னு ஷெரின் கோபமாய் கத்த, அடுத்து ஒரு பாட்டும் பாடி உனக்குத்தான் ஐயான்னு சொன்னதும் ஷெரின் முதல்ல கதவைத் திறங்க... நான் போகணும்ன்னு ஜாலியாச் சொல்லிக்கிட்டு இருந்தார். லாஸ்லியாவின் இந்த வெளிப்பாடு ஜஸ்வர்யாவின் வருகையை ஒட்டியதுதானே ஒழிய, ஷெரினைச் சொன்னவன் என்னையும் சொல்லணும்ன்னு எல்லாம் இல்லை...

பிக்பாஸ் 'சத்தம் போடாதீங்கடா'ன்னு எட்டாப்புச் சார் மாதிரி கத்தினதை வைத்துக் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமையத்தில் சாண்டி 'சைலன்ஸ்... பிக்பாஸ் பேசும் நேரமிது'ன்னு பாடியது சிறப்பு. 

அடுத்து ஒரு போட்டி கார்டன் ஏரியாவில் ஒரு கண்ணாடி தொட்டிக்குள் கிடக்கும் சின்னச் சின்ன தெர்மாக்கோல் பந்துகளை பாக்சிங் கிளவுஸ் மாட்டிய கையால் அள்ளியெடுத்து அடுத்த பக்கம் இருக்கும் பவுலை நிரப்ப வேண்டும். இங்கும் தர்ஷனே வெற்றியாளன்.

அடுத்த போட்டி ஆக்டிவிட்டி ஏரியாவில் ஒரு கோல் போஸ்ட் எதிரே ஒரு பந்தை வைத்து கண்ணைக் கட்டிக் கொண்டு கோல் போட வேண்டும். அதுவும் என்னென்ன வேண்டும் என்பதை முன்னரே எடுத்தபடி கோல் விழுந்தால் கிடைக்கும் என்று சொல்ல ப்ரைடு சிக்கன், ஸ்பா, பிக்பாஸ் போட்டோ, புரோட்டா சிக்கன், ஹெட் மஜாஸ் என ஒவ்வொருவரும் எடுத்து கோல் போட, முகன் தவிர்த்து மற்றவர்கள் கோல் போட்டார்கள்.

முகனை எல்லாரும் கேலி பண்ண ஷெரின் இருக்கதாலதான் நான் முணு முறையும் தப்பாவே போட்டேன்னு சொன்னது சூப்பர். 

இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கடினமான போட்டிகள் எதுவுமின்றி , திங்கிறதுக்கு நல்ல அயிட்டங்களைக் கொடுத்து, இவர்களுடன் ஜாலியாக பிக்பாஸ் விளையாடிக் கொண்டிருக்க பார்க்கும் நமக்குத்தான் போரடிக்கிறது.

இண்டியாகேட் பாசுமதி அரியை நீங்க படாதபாடு படுத்திட்டீங்க... அதனால இன்னைக்கு நாங்களே உங்களுக்கு பிரியாணி தர்றோம்ன்னு சொல்லிக் கொடுக்க,  அய்... பிரியாணி... எங்கே புரோட்டா சிக்கன் என தர்ஷன் கேட்டுக் கொண்டே இருந்தான்.

இங்கிருந்து போனவர்களில் யாரை மிஸ் பண்ணுறீங்கன்னு   அடுத்த டாஸ்க், சேரனை ரொம்ப மிஸ் பண்ணுவதாகச் சொன்ன தர்ஷன், மறக்காமல் சாப்பாடு பற்றியும் சொன்னான்.... என்னடா இவன் தின்னிப் பண்டாரமான்னு எல்லாம் யோசிக்காதீங்க... எனக்கு திங்கப் பிடிக்கும் என்றால் சபை நாகரீகம் கருதி அதை மறைத்து மறைத்துப் பேச வேண்டியதில்லை... அதைத்தான் தர்ஷன் சொன்னான்.

ஷெரின் சாக்சியையும் கூடவே அபியையும்... சாண்டி கவினையும் முகன் அபியையும் லாஸ்லியா கவினைச் சொல்ல சேரன் மற்றும் அபியையும் சொன்னார். அருமையான ஒரு நிகழ்வு. நெகிழ்ச்சியான விஷயத்தைக் கையில் எடுத்து அழுது தீர்ப்பார்கள் என்று நினைத்த பிக்பாஸ்க்கு மனதில் உள்ளதை மட்டும் பேசி உணர்ச்சி வசப்படாமல் அழாமல் தங்கள் மனதில் இருப்பதைச் சொன்னார்கள்.

லாஸ்லியா எனக்குப் பிடிக்காதவன் மெல்ல மெல்ல பிடித்துப் போனவன் ஆனான் என்று சொன்னதும் தமிழ்ச் சினிமாவில் மருத்துவக் கல்லூரி படிக்கும் பெண், மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து ஒருவனை வெட்டிக் கொள்ளுபவனைப் பார்த்து முகம் சுளித்துப் பின் அவன் பின் சுற்றி காதலிப்பது போல்தான் தன்னுடைய கருத்தைச் சொன்னார். அவன் எனக்கு நல்ல நண்பன்...  இதை எல்லாரும் கொச்சைப்படுத்துறாங்க என்பதாய்ச் சொன்னதுதான் நகைக்க வைத்தது.

இருவரும் காதலித்ததும் வெளியில் போய் பேசிக்கலாம் என்ற போது நாலே எழுத்து வார்த்தைதான் அதை இங்கயே சொல்லுன்னு கவின் நின்றதும் எல்லாரும் பார்த்ததுதான்... நட்பு என்பதைவிட அது காதலாய் மாறி நின்றது என்பதைச் சொல்ல நினைத்து மனசுக்குள் புதைத்து வைத்துவிட்டு சிரித்து மழுப்பி நட்பென்றார். சரித்தான் இன்னும் ஒரு வாரத்துக்கு லாஸ்லியா ஆரம்பத்தில் இருந்த லாஸ்லியாவாக இருக்க வேண்டும் என்பதே நம் எண்ணமாய் இருந்து.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.