மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 30 ஜூன், 2014

கலையாத கனவுகள் - ஒரு ஞாபகப் பார்வை

பார்வைக்குள் போகுமுன் முகம் அறியாவிட்டாலும் மனம் அறிந்த மூத்த வலைப்பதிவர் அம்மா திருமதி. கோமதி நடராஜன் அவர்கள் உடல்நலக் குறைவால் இறைவனடி சேர்ந்ததாக மனோ அண்ணா மற்றும் ராமலெஷ்மி அக்கா ஆகியோரின் பதிவில் பார்த்தேன். அம்மாவின் ஆத்மா சந்தியடைய நம் அனைவரின் சார்ப்பாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

னசு வலைத்தளத்தில் முதன் முதலாக ஒரு தொடர்கதை ஆரம்பிக்கலாம் என்று எழுந்த எண்ணம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் சிலர் எழுதுறேன் எழுதுறேன்னு சொல்றே... எப்படா எழுதப்போறே என்று கேட்டதும் சரி படிக்க ஆளிருக்கு அப்ப எழுதலாம்ன்னு ஆரம்பிச்சதுதான் 'கலையாத கனவுகள்'.

ஆரம்பிக்கும் போது 30 பகுதிகளுக்குள் முடித்து விட வேண்டும் என்று ஆரம்பித்தது. கதையின் போக்கில் போய் நான் ஊருக்கு விடுமுறைக்குப் போகும் வரை 63 பகுதிகள் கடந்துவிட்டது. எல்லோரும் வாசிக்கிறார்களா... படிப்பவர்களுக்குப் பிடிக்கிறதா... தொடர்வோமா அல்லது நிறுத்தி விடுவோமா... என்ற சிந்தனைகளை எல்லாம் தொடர்ந்து வாசிக்கும் யோகராஜா அண்ணா, ஜெயக்குமார் ஐயா, தனிமரம் நேசன் என சிலரின் தொடர் வருகை சிறையிலிட்டுவிட்டன.

கல்லூரியில் ஆரம்பமாகும் சாதாரண காதல் கதைதான். குடந்தை ஆர்.வி. சரவணன் அண்ணன் போன்றெல்லாம் ஆர்ப்பாட்டமாக எழுத முடியவில்லை, இருப்பினும் நானும் தொடர்கதை எழுதுகிறேன் என்று எழுத ஆரம்பித்த கதை, சில இடங்களில் அட நீயும் நல்லாத்தான்டா எழுதுறே என எனக்கு நானே அட போட வைத்த பகுதிகளையும் உள்ளடக்கி நகர்ந்து நிற்கிறது.

ராமகிருஷ்ணன் (ராம்கி) - இவன் கதையின் நாயகன். ஏழைக் குடும்பத்தில் பிறந்து அம்மாவின் கனவுகளை நனவாக்க கல்லூரிக்கு வருகிறான். கல்லூரியில் அவனுக்கு ஏற்படும் பிரச்சினைகள், காதல் என கதை இவனை முன்னிருத்தியே நகர்கிறது.

புவனா - கல்லூரியில் எதற்கும் பயப்படாத புதுமைப்பெண். ராம்கியுடன் காதல் கொள்கிறாள். கல்லூரி ரவுடியான அண்ணன், ரவுடித்தனத்துக்கு பெயர்போன சித்தப்பா, எதற்கெடுத்தாலும் பயந்து திட்டும் அம்மா, எதையும் கண்டு கொள்ளாமல் இவள் மேல் பாசங்காட்டும் அம்மா என இவர்களைக் கடந்து ராம்கியுடன் காதல் கொள்கிறாள்.

வைரவன் - புவனாவின் அண்ணன் - கல்லூரியில் ரவுடியாக இருந்து சட்டக்கல்லூரியில் பயில்கிறான். தற்போது ரவுடித்தனம் குறைந்தாலும் எதற்கும் விட்டுக் கொடுக்கும் மனம் இன்னும் வரப்பெறாதவன்.

நாகம்மா - ராம்கியின் அம்மா. கிராமத்து வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவள். மகள் சீதாவை அண்ணன் மகனுக்குக் கொடுத்துவிட்டு அவள் வாழ்க்கை சிறப்பா இல்லை என்று வருந்தியவள். அது சரியாக மூத்த மருமகள் இவளை எதிர்த்துப் போய்விட. சின்னவனான ராம்கியின் காதலுக்கு முதலில் எதிர்ப்பாய் இருந்து தற்போது கொஞ்சம் மாறுதலாகியிருக்கிறாள்.

மணி - புவனாவைக் கட்டிக்கொள்ள ஆசைப்படுபவன். ரவுடி என்பதைவிட கூலிக்கு கொலை செய்யப் போகும் ஆள். அப்படி ஒரு கோஷ்டியிடம் வாங்கிய வெட்டில் வீட்டில் முடங்கிக் கிடப்பவன்.

சரவணன், பழனி, அண்ணாத்துரை, சேவியர், அறிவு - இவர்கள் எல்லாம் ராம்கியின் நண்பர்கள். ராம்கியின் காதலுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வோம் என அவனிடம் சொல்லி அப்படியே நடப்பவர்கள்.

சேகர் + காவேரி - இருவரும் தற்போது திருமணமான இளஞ்சோடி,  ராம்கியின் மச்சான் சேகர். ராம்கிக்கு எல்லாவகையிலும் உதவிகரமானவன்.

சீதா + முத்து - ராம்கியின் அக்காவும் அவளது கணவனும் - அடாவடித்தனம் செய்து ராம்கியின் நண்பர்களால் திருந்தியவன். தம்பியின் காதலுக்கு உதவ நினைக்கும் பாசக்கார அக்கா.

ராசு - ராம்கியின் அண்ணன், அம்மா பிள்ளையாக இருந்து பொண்டாட்டிதாசனானவன். சிங்கப்பூரில் இருக்கிறான்.

தமிழய்யா - ராம்கியும் புவனாவும் பெரும்பாலான பொழுதை கழிப்பது இவர் வீட்டில்தான். அம்மாவுக்கும் இருவரும் செல்லம். இவர்களின் காதல் தெரிந்தவர்.

இளங்கோ, சிவா, புவனாவின் அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா என நிறையப் பேர் இருக்கிறார்கள்.

ஆமா, ஒருத்தரை மறந்துட்டேன் பார்த்தீங்களா... அதுதான் மல்லிகா, ராம்கியின் வகுப்புத்தோழி. முதலில் இவளைத்தான் விரும்புகிறானோ என புவனாவைச் சந்தேகப்பட வைத்தவள். இப்போது ராம்கியின் காதலுக்கு உதவி புவனாவுக்கு நல்ல தோழியாகிப் போனவள்.

என்னடா எல்லாரையும் அறிமுகம் செய்யுறேன்னு பாத்தீங்களா? மறுபடியும் தொடர்கதையை தொடர்ந்து விரைவாக முடிக்கலாம் என்ற எண்ணம்தான். நன்பர் தனிமரம் நேசன் அவர்கள் என்ன கதைய மறந்துட்டீங்களா.. இல்ல நிறுத்திட்டீங்களான்னு கேட்டார். எனவே மீண்டும் இவர்களின் காதலோடு பயணித்து அவர்களின் சந்தோஷத்தோடு தொடர்கதைக்கு ஜகா வாங்கிக்கலாம்ன்னு முடிவு எடுத்தாச்சு.

அதனால நாளைக்கு புதன்கிழமை என்பதால் 64-வது பகுதி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 29 ஜூன், 2014

கிராமத்து நினைவுகள் : திருவிழா நிகழ்வுகள்

சொந்த பந்தங்களுடன் சேர்ந்து விழாக்கள் கொண்டாடுவது என்றாலே அனைவருக்கும் சந்தோஷமான நிகழ்வாகத்தான் இருக்கும். எப்பவுமே ஊரில் திருவிழா என்றால் எல்லாரும் ஒரிடத்தில் கூடுவது என்பதால் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும். எங்கள் ஊரில் 2011ம் ஆண்டு செவ்வாய்க்குப் பிறகு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்ததால் இரண்டு வருடங்களாக திருவிழாக் கொண்டாடவில்லை. 
(எங்கள் ஊர் அம்மன் ஆலயம் - கும்பாபிஷேகத்தின் முன்பு எடுத்தது)

கோயில் கட்டிய பிறகு நடந்த முதல் செவ்வாய் திருவிழா என்பதாலும் இதுவரை கோயில் கணக்கு வழக்குகளைப் பார்த்த சித்தப்பாவிடம் இருந்து கணக்கு இன்னொருவர் கைக்கு வந்த முதல் வருட திருவிழா என்பதாலும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று புதிய கணக்காளர் நிறைய திட்டங்களைத் தீட்டினார்.

வைகாசி மாதம் ஒன்றாம் தேதி அன்று கோயில் கரகம் எடுப்பதற்கும் மற்ற வேலைகளுக்கும் சீட்டுப் போட்டோம். அப்போது கோயில் உண்டியலில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும் என்று புதிய கணக்காளர் சொல்ல, உண்டியல் சாவி அப்பாவிடம் இருந்தது அப்பாவோ மதுரையில் இருந்தார். அப்படியும் அவரிடம் கேட்டு சாவியைக் கொண்டு வந்து கொடுத்தேன். ஆனால் அவர்களால் திறக்க முடியவில்லை. அப்போது சித்தப்பா, உண்டியல் இருக்கட்டும்ப்பா... அண்ணன் நாளைக்கு வந்திரும்... எப்பவும் அண்ணனும் இளையர்வீட்டு அம்மானும் உண்டியலைத் திறந்து எண்ணி அழகா கணக்க கொண்டாந்து கொடுத்துடுவாங்க... அதை விட்டுட்டு மற்ற வேலையைப் பாருங்கப்பா என்றதும் புதிய கணக்காளர் எல்லாருக்கும் முன்னாடித்தான் திறக்கணும் என்று சொன்னார். உடனே நான் இப்ப திறக்கலையில்ல... நாளைக்கு அப்பா வந்ததும் சாவியை கொண்டாந்து தரச் சொல்றேன். நீங்களே வச்சிக்கிட்டு எல்லாருக்கும் முன்னாடி திறங்க என்று சொல்லிவிட்டேன். அதன்படி மறுநாள் வந்த அப்பா சாவியைக் கொண்டு போய் கொடுத்துவிட கணக்காளரின் கண்ணுக்கு நான் வில்லனானேன்.

(சாமிக்கரகம் எடுத்த மச்சான்)

சாமிக் கரகம் எனது மச்சான் (அப்பாவின் தங்கை மகன்) சக்திக்கு விழுந்தது. காப்புக்கட்டி தினம் கரகம் எடுத்தல், முளக்கொட்டு, சுண்டல் பாணக்கம் விநியோகம் என சந்தோஷமாய் மூன்று நாட்கள் கழிய, வெள்ளிக்கிழமை மாலை விளக்குப் பூஜை வைத்திருந்தோம். எப்பவும் விளக்குப் பூஜைக்கு போடப்படும் கொட்டகை காற்றடித்தாலும் விளக்குகள் அணையாத வண்ணம் அமைக்கப்படும். இந்த முறை புதிய கணக்காளரும் அவரின் உதவியாளர்களும் கொட்டகைக்காரனை மாற்றுகிறோம் என்று எவனோ ஒருவனைக் கொண்டுவர கொட்டகை சிரித்தது... காற்றில் விளக்குகள் அணைய சுற்றி பழைய பேனர்களையும் துணிகளையும் கட்டி விளக்குப் பூஜையை முடித்தோம்.  புதிதாக வந்த ஐயர் மிகவும் சிறப்பாக பூஜையை நடத்திக் கொடுத்தார்.

திங்கள் இரவு கரகம், முளக்கொட்டு எதுவும் இல்லாததால் சாமி கும்பிட்டதும் மறுநாள் பால்குடம் எடுப்பவர்களுக்கு காப்புக் கட்டி முடிந்ததுன் வாழைமரங்கள், தோரணங்கள் எல்லாம் கட்டுவது வழக்கம். அப்போது சுரேஷ் மாமா காபி என்று ஒன்று போட்டுக் கொடுப்பார். அதையும் குடித்து விட்டு இரவு இரண்டு மணி வரை முத்துப்பாண்டியின் நகைச்சுவை நக்கல்களை ரசித்தபடி, குழாய் ரேடியோவில் குறைந்த சப்தத்தில் வைத்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே தோரணங்களை கட்டி முடித்தோம். 

(துண்டு போர்த்தச் சென்று குறத்தியிடம் மாட்டிய சுரேஷ் மாமா)

செவ்வாயன்று காலையில் பால்குடம் சிறப்பாக நடந்து முடிந்தது. இம்முறை முதன் முதலில் விஸ்வண்ணன் மகன் வேல் போட்டு வந்தான். இனி அடுத்த முறை வேல் போடுவோர் எண்ணிக்கை கூடினாலும் கூடலாம். பின்னர் ஆடு வெட்டுதல், சமையல் வேலைகள் என நானும் தம்பியும் பிஸியாகிவிட்டோம். சமையலுக்கு இப்போதெல்லாம் விறகு அடுப்பு பயன்படுத்துவதில்லை என்பதால் கேஸ் அடுப்பு வாடகைக்கு எடுத்தோம். அது தொடர்பாக தனிப்பதிவே போடலாம். அப்புறம் பேசுவோம். 

திருவிழாவிற்கு சொந்த பந்தங்கள் வர ஊரே ஜே.. ஜே... என்றிருந்தது. இரவு வாணவேடிக்கை, கரகம் எடுத்தல் என ஆட்ட பாட்டமாக நகர்ந்தது. கரகாட்டக் குழுவினர் வந்திறங்கினர். வந்ததும் அவர்கள் அலங்காரம் செய்வதற்கென போட்டிருந்த கொட்டகை எங்களுக்கு வேண்டாம் மொட்டை மாடியில்தான் அலங்காரம் செய்வோம் என்று சொல்ல இளங்கோ மச்சான் என்னைக் கூப்பிட்டு மாடிதான் வேணுமாம் என்று சொல்ல ஓட்டுவீட்டு மாமாவிடம் அனுமதி பெற்று அவரது வீட்டு மாடிக்குப் போகச் சொன்னோம். அப்பவே அந்தப்புள்ள (அதாங்க குறத்தி... அப்படிச் சொல்லக்கூடாதாம்... நோட்டீஸில் கூட ராணி என்றுதான் போடச் சொன்னார்கள்) பார்வையே சரியில்லை.

(பால் குடத்துக்கு காப்புக் கட்டிக் கொள்ளும் இளங்கோ மச்சானும் மாப்பிள்ளையும்)

கரகாட்டம் ஆரம்பிக்க வேண்டும் மேளக்காரரில் ஒருவர் அடித்த தண்ணியில் எழுந்திருக்க முடியவில்லை... அவரை ஒரு வழியாக கிளப்பி, ஆட்டத்தை ஆரம்பித்தார்கள். அப்புறம் என்ன நம்ம பயலுக எல்லாரும் குறத்தியிடம் சிக்கி சின்னாபின்னம் மாயிட்டானுங்க... பெரிசுக சிலதும் மாட்டி தலையில துண்டைப் போட்டுக்கிட்டு வீட்டுக்கு ஓடிருச்சுகளாம்... மறுநாள் கதைகதையா சொன்னார்கள். இளங்கோ மச்சான் காபி போட்டு கொடுத்துக் கொண்டு திரிய  எப்பவும் சீக்கிரம் தூங்குற தங்கச்சிதான் எங்க நம்மாளு கரகாட்டக் குரூப்போட போயிடுவாரோன்னு கொட்டக் கொட்ட முழிச்சிருந்ததாம். மறுநாள் அண்ணே... இவுகதான் முன்னாடி திரிஞ்சாகன்னு சொல்லிச் சொல்லி சிரித்தது.

மறுநாள் காலை கருப்பர் கோயிலில் சாமி கும்பிட்டு வந்து கரகம் எடுத்துக் கொண்டு போய் கண்மாயில் இறக்கிவிட்டு கரகம் எடுத்த மச்சானை ஊர் வழக்கப்படி கொண்டு போய்விட்டு அவர்கள் கொடுத்த மேங்கோ ஜூஸை ஒரு டம்ளருக்கு  இரண்டு டம்ளர் பருகி, பின்னர் கோவில் வந்து ரேடியோ, பூ அலங்காரம், கொட்டகை, வேளார் என பட்டுவாடா முடித்து சாமியின் கரகத்தில் பயணித்த வெள்ளி வேல், அம்மனின் காப்புக்கட்டு மஞ்சள் என சில பொருட்களை ஏலம் விட்டு, வேலுக்காக இந்த முறை நாங்கள் 40000 வரை கேட்டுப் பார்த்தோம். ஓட்டு வீட்டு மாமா 52001க்கு எடுக்க போட்டி எதற்கு அடுத்த வருடம் எடுக்கலாம் என்று நினைத்து விட்டுவிட்டோம்.

(இரவு வீடு வீடாக சென்று கரகம் தூக்கி வரும் போது - வெள்ளை வேஷ்டி சட்டையில் அடியேன்)

பின்னர் காழாஞ்சி பிரித்து எல்லாருக்கும் கொடுத்து வீடு வந்து சேரும் போது (நம்ம வீடு கோயிலுக்கு மிக அருகில்) இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. கொஞ்சம் பூசலும்... நீயா நானாவுமாக இருந்தாலும் சின்னச் சின்ன தகறாருகள் வந்து மறைந்தாலும் திருவிழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. திருவிழா முடிந்த எட்டாம் நாள் விடையாற்றி சிறப்பாக கும்பிட்டு முடிக்கப்பட்டது.  இதுவரை கோயில் பணத்தை வங்கியில் போட்டு வந்தார்கள். இந்த முறை வட்டிக்கு கொடுக்க வேண்டும் என புதிய கணக்காளரும் இன்னும் சிலரும் விருப்பப்பட ஒருசிலர் எதிர்ப்பாளராக மாற வேண்டிய நிலை. அப்படியிருந்தும் எதிர்ப்பாளர்கள் இல்லாமல் கூட்டம் போட அது அடிதடி வரைக்கும் போய் அம்மனின் எண்ணப்படி பணம் பங்கு பிரிக்க முடியாமல் போய்விட்டதாம். 

இந்தக் குளறுபடிகள் எல்லாம் இல்லாது அடுத்த வருடம் அம்மனின் திருவிழா இன்னும் சிறப்பாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. 

-கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 27 ஜூன், 2014

தலையெழுத்து மாறுமா?


"வா... சரோஜா... நல்லாருக்கியா?"

"நல்லாருக்கேங்க்கா... நீங்க எப்புடியிருக்கீக... முத்துமீனா நல்லாருக்காளா?"

"ம்.. எங்களுக்கென்ன... நல்லாத்தேன் இருக்கோம்..."

"செரி... வா உள்ளற... புள்ளங்கல்லாம் நல்லாருக்காகளா?"

"நல்லாருக்குகக்கா..." என்றபடி உள்ளே வந்த சரோஜா "நீ இப்ப சந்தோஷமாத்தானேக்கா இருக்க... பாத்து ரொம்ப நாளாச்சேன்னுதான் இன்னக்கி கெளம்பி வந்தேன்..."

"எனக்கென்ன நல்லாத்தேன் இருக்கேன்... எந்தலவிதி கஷ்டப்பட்டுத்தான் வாழணுமின்னு இருக்கு... அத ஆரால மாத்தமுடியுஞ் சொல்லு... ஒக்காரு... காபி போட்டாறேன்..." என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தாள்.

பின்னாடியே வந்த சரோஜா "இப்பவும் உங்க வீட்டுக்காரர் அப்படித்தான் இருக்காராக்கா..." மெதுவாகக் கேட்டாள்.

அந்தக் கேள்விக்கு ஒரு உலர்ந்த புன்னகையை உதிர்த்து விட்டு "இது என்னடி கேள்வி... எருமை சேத்துல விழுகாம விலகிப் போனாத்தான் வித்தியாசமாத் தெரியும்... இவரெல்லாம் இப்புடியே வாழ்ந்துட்டு சாவணுமின்னு தலயில எழுதி அனுப்பிட்டான் அந்த ஆண்டவன்... அப்புறம் திருந்துவாரா என்ன... எப்பவும் போலத்தான்..."

"அங்க நீ பொம்பளப்புள்ளைய வச்சிக்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டுட்டேக்கா... பக்கத்துல இருந்த எங்களுக்கே உன்னோட நெலமை ரொம்ப வருத்தமா இருக்குங்க... இப்ப சாதி சனத்தை விட்டுட்டு... அங்காளி பங்காளி விட்டுட்டு... பழகுன எங்கள மாதிரி ஆளுகளை எல்லாம் விட்டுட்டு இப்படி வந்து தனியாக் கெடக்கியே அக்கா..."

"என்ன பண்ணுறது... எங்க சாதி சனத்துல காசு பணத்தை சேக்கப்பாப்பாங்களே ஒழிய குடிச்சிட்டு அழிக்க மாட்டாங்க... இவரு தப்பாப் பொறந்துட்டாரு... எல்லாத்தையும் அழிச்சிட்டு சாதி சனங்க முன்னாடி தெருவுல நிக்கிறதைவிட கண்கானாத இடத்துல காவயித்துக் கஞ்சி குடிச்சாலும் பரவாயில்லைன்னுட்டுத்தான் இங்க வந்தேன்..."

"ம்... நீ எடுத்தது சரியான முடிவுக்கா..."

"இங்க வந்து அந்த மனுசனால ஒரு பிரயோசனமும் இல்ல... எப்பவும் போல குடி மட்டுந்தான்... வேலா வேலைக்கு சாப்பிட வாரதுலாம் இல்ல... எந்த நேரமுன்னு கிடையாது.... பெரும்பாலும் ராத்திரிக்கு வந்து கொஞ்ச நேரம் ஆடிட்டு... ஒரு சில நாள் அடிச்சிட்டு..." அவளின் பேச்சை இடைத்த மறித்த சரோஜா, "இன்னமும் அடிக்கிறாராக்கா..." என்று சோகமாய்க் கேட்டாள்.

"குடிகாரனுக்கிட்ட அடிவாங்காத பொண்டாட்டி இருக்காளா என்ன... இப்ப அடிக்கிறதை கொறச்சிட்டாரு... முத்துமீனா எதுக்க ஆரம்பிச்சதால வாயில வந்த வார்த்தை எல்லாம் பேசி திட்டுறது மட்டுந்தான்..." என்று சிரித்தாள்.

"எப்படிக்கா உன்னால சிரிக்க முடியுது... இப்புடிப்பட்ட ஆளோட வாழாம தனியா வாழ்ந்திடலாங்க்கா... நானா இருந்தா அதைத்தான் செய்வேன்..."

"இது எனக்கு கிடைத்த வாழ்க்கை... என்ன செய்ய முத்துமீனாவுக்காக வாழ்றேன்... இந்தக் கஷ்டமே அவளுக்காகத்தான்... இப்ப காலேசு ரெண்டாவது வருசம் படிக்கிறா... எனக்கு மாதிரி வாழ்க்கை அமையாம அவளுக்கு நல்ல வாழ்க்கை அமச்சிக் குடுத்துட்டுப் பொயிட்டேனா... போதும்..."

"உன்னோட மனசுக்கு நல்ல வாழ்க்கை அமையுங்க்கா..."

"ம்..."

"ஆமா செலவழிவுக்கு எல்லாம் அம்மா வீட்ல எதாவது..." சரோஜா இழுத்தாள்.

"அடிப்போடி... அவனுகதானே... அதெல்லாம் எதிர்பாக்கலை... இந்த வீடு எங்க அப்பாவோட தங்கச்சி வீடுதான்... எங்க அயித்த மவன் பாரின்ல செட்டிலாயிட்டான். அதனால ஒரு பக்கத்துல எங்களுக்கு கொடுத்திருக்கான். வாடகை எல்லாம் இல்ல... வீட்டை பாத்துக்குவோம்ன்னு கொடுத்திருக்கான்... இப்ப கொஞ்சம் கடைகளுக்கு சீடை, முறுக்கு, போலி எல்லாம் போட்டுக் கொடுக்கிறேன்... எங்கொழுந்தனாரு முத்துமீனா படிப்புக்கு கொடுக்குறாரு... அவருக்கு பொம்பளப்புள்ள இல்ல பாரு... அதுனால அவ மேல ரொம்ப பாசம்... எம்புட்டு வேணுமின்னாலும் படித்தா அப்பா படிக்க வைக்கிறேன்னு சொல்லியிருக்காரு... அவரு பொண்டாட்டியும் நல்ல குணவதி... அதனால பிரச்சினையில்ல..."

"ம்... இருந்தாலும் இப்ப விக்கிற வெலவாசிக்கு இந்த பொழப்புல எப்படி காலம் ஓட்டமுடியுங்க்கா.... அதுவும் வயசுக்கு வந்த புள்ளய வச்சிக்கிட்டு... அதுக்கும் நாலு நல்லதக் கெட்டத வாங்கிப் போடணுமில்ல..."

"என்ன பண்ண ஓட்டித்தான் ஆகணும்... அவளும் கஷ்டம் புரிஞ்சு எதுவும் கேக்கிறதில்ல... அதுவும் போலி இன்னைக்குப் போட்டுட்டு நாளைக்கு போகும் போது விக்காம இருந்தா திருப்பி எடுக்கணும்... ஒருசில நாள் அதிகம் எடுக்க வேண்டியிருக்கும்... அன்னைக்குத்தான் வருத்தமா இருக்கும்... என்ன செய்ய... வாழ்க்கையை ஓட்டணுமே..."

"இருந்தாலும்... " என்று இழுத்தாள் சரோஜா.

"என்னோட கதய விடு... இரு கோழி வாங்கிக்கிட்டு வந்து சமைக்கிறேன் மத்தியானம் சாப்பிட்டுப் போகலாம்..."

"இல்லக்கா... மத்தியானம் புள்ளங்க வந்துருவாங்க... நம்ம வீடுதானே... இன்னொரு நாளைக்கி புள்ளகள கூட்டிக்கிட்டு வாரேன்... அப்ப இருந்து சாப்பிட்டுப் போறேன்...."

"பழகுன பழக்கத்துக்கு இம்புட்டுத்தூரம் வந்திட்டு சாப்பிடாமப் போனா எப்படிடி.."

"என்னக்கா சொன்னே பழகுன பழக்கமா... நானும் உனக்கு தங்கச்சிதாங்க்கா... கலியாணமான புதுசுல எனக்கு நீ செஞ்ச உதவியெல்லாம் மறக்குறவ நாயில்லக்கா... பழகுனவளாமுல்ல பழகுனவ... இனி அப்படியெல்லாம் சொல்லாதக்கா..." பொரிந்து தள்ளினாள்.

"செரிடி தப்புத்தான்... சாப்பிடச்சொன்னா மாட்டேங்கிறே... இந்தா இதுல சீடை முறுக்கெல்லாம் இருக்கு... பிள்ளைகளுக்கு கொடு..." என்று கொடுத்தாள்.

"எதுக்குக்கா இதெல்லாம்..." என்றபடி வாங்கியவள், "ரொம்ப நாளாவே வரணு ... வரணுமின்னு நெனச்சிக்கிட்டே இருப்பேன்... பாக்கியக்கா வரும்போதுகூட வர ஆசைதான்... ஆனா வீட்டுல வேல சரியா இருக்கேக்கா... அதான் முடியல... இப்பக்கூட பாக்கியக்காக்கிட்ட கேட்டுக்கிட்டு அயித்தைக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டுத்தான் வந்தேன்... அயித்தைக்கு என்னய விட்டா அளில்லையில்ல... அதுக்கு பின்னால பாக்கணுமின்னுதானே தம்பி மவளான என்ன மருமவளாக்குச்சு.... சரி.. வர்றேங்க்கா..." என்றபடி ஜாக்கெட்டுக்குள் கைவிட்டு பர்சை எடுத்து இரண்டு ஐநூறு ரூபாய்த்தாள்களை எடுத்து நீட்டினாள்.

"எதுக்கு இது...?"

"வச்சிக்கக்கா... என்ன அள்ளியா கொடுக்கிறேன்... அதிகமா கொடுக்கிற மாதிரி நானில்லை...  எதோ என்னால முடிஞ்சது..."

"சரோஜா... எனக்கு இதெல்லாம் பிடிக்காது... கஷ்டப்பட்டாலும் இன்னும் கையேந்துற நிலைக்கு வரலை... கொழுந்தனுமே முத்துமீனா படிப்புக்காக கொடுக்கிறதால வாங்கிக்கிறேன்...  இதெல்லாம் கொடுத்து என்னய கடங்காரி ஆக்கிடாதே..."

"ஏங்க்கா இப்புடி பேசுறே... எனக்கு உனக்கு எதாவது கொடுக்கணுமின்னு தோணுச்சு... அம்புட்டுத்தான்... தங்கச்சி கொடுத்ததா நினைச்சுக்க..." என்று கையில் அழுத்தினாள்.

"வே... வேண்டாம் சரோஜா... இப்படி பணம் வாங்கி பழக்கமில்லை... எனக்கு சங்கோஜமா இருக்கு..."

"வேண்டான்னு சொல்லாதேக்கா... ஒரு தங்கச்சி அக்காவுக்கு கொடுத்ததா நினைச்சிக்க... இந்தா..." என்று கையில் திணித்து விட்டு சரோஜா கிளம்ப, கமலம் கலங்கிய கண்களுடன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் அவளின் கணவன் குடிபோதையில் ரோட்டை அளந்து கொண்டு வந்தான். அவளை அறியாமல் கை வேகமாகப் பணத்தை தனது ஜாக்கெட்டுக்குள் திணித்தது.
-'பரிவை' சே.குமார்.

புதன், 25 ஜூன், 2014

மனசின் பக்கம் : கரகாட்டமும் கனவுகளும்

வியரசு கண்ணதாசனுக்கும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுக்கும் நேற்று பிறந்தநாள். வலைப்பக்கத்திலும் முகநூலிலும் நல்ல பகிர்வுகளைக் காண முடிந்தது. காலங்கள் கடந்தும் வாழக்கூடிய அற்புதமான பாடல்களை வாழ்வியல் தத்துவங்களுடன் கொடுத்துச் சென்றிருக்கிறார் கவியரசு. அவரது ஒவ்வொரு பாடலுக்கும் பின்னே அவரது வாழ்க்கையின் பிரதிபலிப்பு இருக்கும். அவரும் மெல்லிசை மன்னரும் கொடுத்த பாடல்கள் எத்தனை எத்தனை... அத்தையும் தேன் சொட்டும் பாடல்கள்... நான் நிரந்தரமானவன் என்று சொல்லி தனது எழுத்தை என்றென்றும் எல்லோரையும் நேசிக்க வைத்துச் சென்ற கவியரசுக்கும் நல்ல பாடல்களை அழகிய இசையால் ரசிக்க வைத்த மெல்லிசை மன்னருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை.... இருவரையும் வணங்குகிறேன்.

யக்குநர் இராம நாராயணன் காரைக்குடியில் இருந்து வந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய சாதனையாளர். மயில், குரங்கு, யானை, பாம்பு என நடிக்க வைத்த கலைஞர் அவர்.  எத்தனையோ கலைஞர்களை உருவாக்கியவர். விஜயகாந்தை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திய ஒரு சிலரில் இவர் முக்கியமானவர். இவரது இழப்பு திரையுலகத்திற்கு ஒரு பேரிழப்புத்தான். இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

ங்கள் ஊரில் இந்த வருட மாரியம்மன் கோயில் செவ்வாய் புதிய வரவு செலவாளரின் மேற்பார்வையில் பல பிரச்சினைகளைத் தாங்கி பெரியளவில் வெடிக்காமல் சுமூகமாக முடிந்ததில் அனைவருக்கும் நிம்மதி. கோயில் கணக்கு வைத்திருப்பவர்தான் ஊர் தலைவர் என்பது போல் புதிய நிர்வாகி செயல்பட்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. எல்லா முடிவும் தன்னிச்சையாக எடுத்ததால் அனைத்திலும் குளறுபடியே மிஞ்சியது. இனி வரும் காலங்களில் அனைவரையும் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுத்து நல்ல நிர்வாகி என பெயரெடுப்பார் என்று நம்புகிறோம். சுற்றமும் நட்பும் அவரை சுயமாய் சிந்திக்க விட்டால் அவரும் நல்ல மனிதர்தான்.

ழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்தை இந்தளவுக்கு இதுவரை பார்த்தது இல்லை. அழகர் மலையான் மதுரைக்கு கிளம்பும் அன்று அழகர் மலை சென்று கோவிலுக்குள் சென்று கிளம்புவதை அருகே இருந்து பார்த்தோம். மறுநாள் எதிர்சேவைக்கு முன்னர் தல்லாகுளத்தில் அவரது பல்லக்கை அருகே நின்று தொட்டு வணங்கி ரசித்தோம். என் தோள் மீது அமர்ந்த விஷால் நம்ம சாமி... நம்ம சாமி என செல்போனில் வீடியோ எடுத்தான். ஆற்றில் இறங்கி அன்று மாலை மீண்டும் அண்ணாநகரில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி அழகு மலையானைத் தரிசித்தோம். இந்த முறை ஊருக்குச் சென்றதற்கு அழகு மலையானின் தரிசனம் கிடைத்தது பெரும் பாக்கியம்.

திருவிழாவிற்கு ஊரில் இளைஞர் மன்றம் சார்பாக கரகாட்டம் வைப்பதாக முடிவு செய்தோம். கரகாட்டம் வைக்க போலீஸ் அனுமதி உண்டா என்று கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ஸ்டேசனுக்குச் சென்றோம். எங்கள் ஊர் எந்தப் பிரச்சினைக்கும் போகாத ஊர் என்பதால் அங்கு எங்க ஊருக்கு என்று ஒரு நல்ல பெயர். இப்போ கரகாட்டத்துக்கு அனுமதி உண்டு என்று சொன்ன எஸ்.ஐ, முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். காப்புக்கட்டியதும் வாங்க என்றார். பின்னர் குறத்தியாக இன்னாரைக் கூட்டிவாங்க... அவ வாரான்னு சொன்னா கீழைச்சீமைக்காரனுங்க எல்லாம் கட்டுச் சோறு கட்டிக்கிட்டு உங்க ஊருக்கு வந்துருவானுங்க என்று சொன்னார். நாங்களும் அவர் சொன்ன பேரை விசாரிச்சோம்... அவ வந்தா ஊரை நாறடிச்சிருவா என்று சொன்ன அமைப்பாளர் இன்னொரு பேரைச் சொல்லி நல்ல பேர் இருக்கு... சூப்பரா ஆடுவா... என்றதும் சரி என்று சொல்லிவிட்டோம். திருவிழா அன்று இரவு கரகாட்டத்துக்கு நல்ல கூட்டம்... அவ போட்ட ஆட்டத்தைப் பார்த்து காவலுக்கு என வந்திருந்த போலீஸ்காரர் ஒருவர் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் இதைப் பார்க்க மாட்டான் என்று சொல்லிச் சொல்ல விஷாலைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போய்விட்டேன். பின்னர் அப்படி ஆடக்கூடாது எனச் சொல்லி நான்கு மணி வரை நடத்தினார்களாம்.

தேவகோட்டையில் மஹாலஷ்மி ஐயங்கார் பேக்கரி என்று உறவுகள் சிலர் இணைந்து ஆரம்பித்து வியாபாரத்தில் சக்கைப்போடு போட இன்னைக்கு அதற்குப் பக்கத்தில் லஷ்மி ஐயங்கார், இன்னொரு ஐயங்கார் என வர, சற்றே தள்ளி ராஜலஷ்மி ஐயங்கார் திறக்கப்பட ராமநகருக்கு அருகில் லஷ்மி ஐயங்காரின் கிளை வர, தேவகோட்டையில் ஐயங்கார் மயமாகிவிட்டது. வியாபாரத்தில் போட்டியிருக்கலாம்... ஆனால் பொறாமையால் இப்படி வரிசையாக கடைகள் வருவதால் யாருக்கு லாபம்? நண்பர் ஒருவர் விளையாட்டாகச் சொன்னார் லஷ்மியை கூறு போட்டு பிரிச்சிட்டானுங்க பார்த்தியா என்று... உண்மைதான் போட்டி... பொறாமை... இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு... சொல்லுங்கள்.

லையாத கனவுகளை விரைந்து முடிக்க எண்ணம்... எழுதுவோமா என்று நினைக்கும் போது வீட்டு நினைவுகள் கலையாமல் மனசுக்குள் ஏறி உட்கார, எல்லாம் மறந்து சோர்வாய் கிடக்கிறது மனசு. கொஞ்ச நாளில் சரியாகும்... அப்போது கலையாத கனவுகள் மீண்டும் விரியும்...

-மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 23 ஜூன், 2014

இளமை எழுதும் கவிதை நீ... - வாசிப்பாளனின் பார்வை


து விமர்சனப் பதிவு அல்ல... ஒரு நாவலை விமர்சிக்கும் அளவுக்கு நமக்கு தகுதியெல்லாம் இல்லை... நான் நாவல் எழுத்தாளனும் அல்ல... மனதில்பட்டதை எழுத்தில் கொண்டு வரும் சாதாரணமானவன். நாவல் பற்றி மனதில் பட்டதை ஒரு பார்வையாகப் பார்க்கலாமே தவிர இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

குடந்தை ஆர்.வீ. சரவணன் அவர்களின் முதல் நாவல் இது. இந்தக் கதையை அவர் தனது குடந்தையூர் வலைத்தளத்தில் தொடராக எழுதிய போதே படித்திருக்கிறேன் என்றாலும் புத்தகமாகப் படிப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தானே செய்கிறது. சரவணன் அண்ணன் மிகச் சிறந்த எழுத்தாளர் என்பது அவரது தளத்தை வாசிப்பவர்களுக்குத் தெரியும். தற்போது அவர் முகப்புத்தகத்தில் அதிகம் நிலைத்தகவல்கள் பகிர்ந்து வருவதால் வலையில் எழுதுவதைக் குறைத்திருக்கிறார். அடுத்த நாவல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் அடுத்த மாதம் தொடராக வலையில் பதிவிட இருப்பதாகவும் சொன்னார். எனவே மீண்டும் குடந்தையூர் வலைத்தளம் நாவலுடன் பரபரப்பாக ஆரம்பமாகும் என்பதுடன் அடுத்த நாவலைப் படிக்கு ஆர்வமுடன் முதல் நாவல் குறித்துப் பார்ப்போம்.

கதைக் களமானது கல்லூரியும் கல்லூரிக் காதலும்தான்... கதையோட்டம் ஒரு சினிமாவைப் பார்ப்பது போன்று இருப்பது நாவலின் சிறப்பு. சில இடங்களில் நாயகனின் செயல் சினிமாத்தனமாக இருப்பது தவிர்க்க முடியாதது என்பதை நாவலை முழுவதும் படித்து முடிக்கும் போது நாமும் ஏற்றுக் கொள்வோம். ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் ஒரு கவிதை என புதுமையாய் ஆரம்பித்திருக்கிறார்.

பெரும்பாலும் தற்போதைய தமிழ் சினிமாக்களில் ரவுடியான நாயகனை நாயகிகள் விழுந்து விழுந்து காதலிப்பதைப் பார்த்திருக்கிறோம். இதில் கொஞ்சம் மாறுதலாக ரவுடியான நாயகன் நாயகியைப் பார்த்து மயங்கி, பின்னர் திருந்தி அவள் இதயத்தில் எப்படி இடம் பிடிக்கிறான். அதற்காக நாயகி என்ன செய்கிறார் என்பதை அவரது நடையில் அழகாக எழுதியிருக்கிறார். நாயகி நாயகனை விரும்புவதை எங்கும் காட்டாமல் கடைசியில் சொல்லியிருப்பது கதைக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

கல்லூரி, அடிதடி, சேர்மன் தேர்தல், மாணவர்களுக்குள் வில்லன், பேராசிரியர்களை ஓட்டுவது, அரட்டை என அதகளமாக கதையை நகர்த்துகிறார். நாயகன் சிவா, அவனின் தம்பி கார்த்திக் இருவரும் அவர்களின் சொந்தக் கல்லூரியில் படிப்பதால் ரவுடியிசம் பண்ணுவதாக ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார். கல்லூரி நிறுவனரும் எம்.பியுமான அவர்களின் அப்பா, கல்லூரியை கட்டிக்காக்கும் மாமா, மாமா மகள் கீதா, நாயகி உமா என மற்றவர்கள் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள். இந்த நல்லவர்கள் எப்படி ரவுடித்தனம் செய்யும் சிவா மற்றும் கார்த்திக்கை திருத்துகிறார்கள் என்பதை முழு நீள சினிமா பார்ப்பது போல் சொல்லியிருக்கிறார்.

நாயகி உமாவை போலீஸ் அதிகாரியின் மகளாக காட்டியிருப்பதால் எதற்கும் அஞ்சாத குணம் அவளுக்கு இயல்பிலேயே வந்துவிடுவதாக அவளின் செயல்கள் காண்பிப்பதை காட்சிப்படுத்தி விடுகிறார். உமாவின் தந்தைக்கும் சிவாவுக்கும் நடக்கும் மோதல்கள், சிவா திருந்தியவனாக அருளோடு வாழும் நாட்கள், ஆரம்பம் முதலே வில்லத்தனம் செய்யும் சுரேஷூடன் இறுதி அத்தியாயத்தில் சிறீப்பாயும் சண்டை என எழுத்தில் எல்லாச் சுவையையும் அழகாக மை நிரப்பி வார்த்திருக்கிறார்.

ரவுடித்தனத்துக்கு அஞ்சாத சிவா, வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதும் திருந்தி வாழ்வது, அடாவடியைக் கடைசி வரை கைவிடாத கார்த்திக் விழா மேடையில் லஷ்மணனாக நடிப்பவன் வராததால் மேடையேறுவது, ரோட்டில் போகும் சிவாவிடம் உமாவின் தந்தை தேவையில்லாமல் சீண்டுவது என நிறைய இடங்களில் சினிமாத்தனம் இருந்தாலும் இது ஒரு சினிமாவுக்கான கதைதான் என்பதால் உறுத்தலாகத் தெரியவில்லை.

இவர் பாக்கியராஜின் வெறித்தனமான ரசிகர் என்பது தெரியும். அவர் மீது கொண்ட பக்தியின் காரணமாக இரண்டு இடங்களில் அவரது படத்தில் இருந்து சொல்லியிருக்கிறார். மதிப்புரையில் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் சொன்னது போல் திரைக்கதையாக எழுதும் திறமை அதிகம் உண்டு என்பதை இந்த நாவல் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் திரு.பிரபாகர் சொன்னது போல் கதைக்கான கருவை தேர்ந்தெடுப்பதில் இனி இன்னும் கவனம் செலுத்துவார் என்று நம்பலாம்.

முதல் முயற்சியில் சரவணன் அண்ணன் வெற்றி பெற்றிருக்கிறார். பதிவராய் அறிமுகமாகி ஒரு நாவலாசிரியராய் நம் முன்னே உயர்ந்து நிற்கும் அவரைப் பாராட்டுவோம். அப்புறம் அவர் உரையில் இந்தக் கதையை எழுத ஊக்குவித்தவர்களில் என்னையும் சொல்லியிருக்கிறார். அதற்கு இங்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

புத்தகத்தை அவசியம் வாங்கி வாசியுங்கள். ஒரு திரைப்படம் பார்த்த சுகானுபாவ அனுபவம் கிடைக்கும். இன்னும் நிறைய எழுதி சிறந்த ஆசிரியராக வலம் வர அண்ணனை வாழ்த்துவோம்.

ஜனனி பதிப்பக வெளீயீடாக வந்திருக்கும் இளமை எழுதும் கவிதை நீ நாவல் சென்னை டிஸ்கவரி புக் பேலசில் கிடைக்கிறது. விலை ரூ: 100.

-இது வாசித்த அனுபவத்தில் எழுதியது... விமர்சனப் பார்வை அல்ல.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 22 ஜூன், 2014

மனசு பேசுகிறது : தொடரும் வாழ்க்கை

னைவருக்கும் வணக்கம். 

ஊருக்குச் சென்று திரும்பி ஒரு வாரம் பணிக்குச் சென்றாகிவிட்டது. எப்பவும் போல் இல்லாமல் இந்த முறை பிரிவுத் தனிமை அதிகம் ஆட்கொண்டுள்ளது. மனைவி, குழந்தைகள் என்ற ஒரு வட்டத்துக்கள் வாழ்க்கை நடத்தி விமானம் ஏறும்போது இருந்த வலி இன்னும் இறங்காமல் இருக்கிறது.

இந்த வருட விடுமுறை வீட்டு வேலை மற்றும் சில முக்கிய காரணங்களுக்குள் அடங்கிவிட்டது. கிராமத்திலேயே அதிகம் இருக்கும்படி ஆகிவிட்டதால் இணையப் பக்கமே வரவில்லை. எனக்கு தங்களது செல்போன் எண்ணைக் கொடுத்து தொடர்பு கொள்ளச் சொன்ன திண்டுக்கல் தனபாலன் சார், திரு. முத்து நிலவன் ஐயா, கரந்தை திரு. ஜெயக்குமார் ஐயா மற்றும் சில உறவுகளுடன் பேச வேண்டும் என்று நினைத்து நினைத்தே நாட்கள் நகர்ந்து விட்டது செல்பேசி எண் இணையத்தில் இருந்ததால்...

மனைவியின் நேர்த்திக்கடனுக்காக பழனி செல்லும் போது திண்டுக்கல்லில் தனபாலன் சாரைச் சந்திக்க வேண்டும் அவரிடம் சொல்ல வேண்டும் என இன்னும் சில வேண்டும்கள் கடைசிவரை நிறைவேறவில்லை...  நேர்த்திக் கடனும் அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போய்விட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஒரு வேலையாக செல்லும் போது முத்துநிலவன் ஐயாவைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலும் எனது வேலையை நண்பனிடம் சொல்லி முடிக்கச் சொல்லிவிட்டு வரும் போது கனவாகவே போனது.

எனது அன்பு அண்ணன் குடந்தை ஆர்.வி. சரவணன் அவர்கள் நீ போன் பண்ணு நான் உன்னைப் பார்க்க வாரேன் என்று சொன்னார்கள். அவர்களுக்கும் அழைக்க முடியவில்லை. ஊருக்கு வருவதற்கு இரு தினங்கள் முன்னர் இரவு பதினோரு மணிக்கு மேல் இருக்கும் அன்றுதான் கம்பெனியில் இருந்து மின்னஞ்சல் வந்திருக்கிறதா என பார்ப்பதற்காக எங்கள் இல்லம் வந்திருந்தேன். அப்போது அண்ணன் சாட்டிங்கில் வந்தார். இரவு பதினோரு மணிக்கு மேல் என்பதால் நாளை கூப்பிடுகிறேன் என்றேன். பரவாயில்லை இப்ப உங்க நம்பர் கொடுங்க நான் கூப்பிடுறேன் என்றார். பின்னர் அவருடன் பேசினேன்... எனக்கு அவ்வளவு சந்தோஷம்... எனது மூத்த சகோதரன் என்னிடம் எப்படி பேசுவாரோ அதே போல் பேசினார். அவரது 'இளமை எழுதும் கவிதை நீ' புத்தகத்தை அனுப்ப அப்போதே முகவரி வாங்கினார். அடுத்த நாள் அனுப்பிவிட்டு தகவலும் தெரிவித்தார். நான் ஊருக்கு வருவதற்கு கிளம்பும் போது புத்தகம் வந்து சேர இங்கு கொண்டு வந்து படித்தும் முடித்து விட்டேன். புத்தகம் குறித்து அண்ணனிடம் தெரிவித்து விட்டேன். அது குறித்து விரிவாக மற்றொரு பகிர்வில் பார்க்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. சென்னை சென்றிருந்தால் அவரைச் சந்தித்து இருக்கலாம்... செல்லவில்லை.

இந்த முறை எங்கும் செல்லவில்லை. மதுரையில் அழகர் வைகையில் இறங்கும் விழா மட்டுமே காணச் சென்றேன். மூன்று நாட்கள் மதுரையில் இருந்து அழகு மலையானை அருமையாக தரிசித்தோம். அதுவே யாம் பெற்ற பாக்கியம். தனபாலன் சார், ஐயாக்கள் முத்து நிலவன் மற்றும் ஜெயக்குமார் அவர்களுடன் இங்கிருந்து நாளையோ அதற்கடுத்த நாளோ கண்டிப்பாக பேச வேண்டும் என்று இருக்கிறேன். நம்மை விரும்பி அழைத்தவர்களுடன் பேச முடியாமல் வந்து சேர்ந்தது வருத்தமே.

நண்பர் செங்கோவி எழுதிய ஒரு பகிர்வுக்கு கருத்து போட்டிருந்தேன். இன்று அதில் பார்த்தால் திரு.யோகராஜா அண்ணன் அவர்கள் குமார் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டிருந்ததைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. இப்படிப்பட்ட உறவுகள் கிடைக்க என்ன தவம் செய்தேனோ.

ஊரில்தான் வெயில் கொளுத்துகிறது என்று வந்தால் இங்கும் வெயில் தாக்கு தாக்கு என்று தாக்குகிறது. வந்தது முதல் வேலை அதிகம்தான்... அடுத்த வாரம் நோன்பு ஆரம்பிப்பதால் வேலை நேரம் மாறும்... ஒரு மாதம் அப்படியே ஓடும்... இருந்தும் எங்களுக்கு முடிக்க வேண்டிய புராஜெக்ட் என்பதால் வேலைப்பளு குறைய வாய்ப்பில்லை. ஊர் சென்று வந்த சோர்வு நீங்கி வேலையை முடிக்க வேண்டுமே என்று ஓட நினைத்தாலும் ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே என இன்னும் நம் இல்லத்தையே சுற்றி வருகிறது மனசு.

-இனி மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.