மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

பயணக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஜூலை, 2015

செந்தூர் அழகா...2


மொட்டை போட சீட்டு வாங்கலாம் என்று செல்ல, விஷால் மொட்டை அடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான். இந்த  இடத்துல ஒண்ணு சொல்லணும்... கோயிலுக்குப் போயி மொட்டை போடணுமின்னு சொன்னப்பவே நீங்களும் மொட்டை போடுறீங்களான்னு கேட்டு பாக்கலாம் என்று சொல்லியிருந்தேன். எனவே அதுக்குத்தான் பயபுள்ள பின்னால இழுக்குதோன்னு டவுட்டோட உனக்கு என்னடா வேணுமின்னு கேட்கவும் நீங்களும் மொட்டை போட்டா நானும் போடுறேன்னு அடிச்சான் பாருங்க அவனது மழலைத்தனமான குரலில். என்னடா பிளாக்மெயிலா என்றதும் நீங்க போட்ட நா போடுறேம்ப்பா... இல்லேன்னா இந்தா ஐயால்லாம் கடலுக்கு பொயிட்டாக நானும் போறேன்னு சொல்லிச் சிரிச்சான்.

என்னடா இது குமாருக்கு வந்த சோதனை... பழனிக்கு நடந்து போகும் போது ஆறு வருட தரிசனத்தில் முதல் வருடம் மட்டுமே சண்முகநதிக்கு நடந்து போய் மொட்டை போட்டு வந்தேன். அதன் பிறகு மொட்டை போடுவதை அதிகம் விரும்புவதில்லை. பாப்பாவுக்கு அழகர் கோவிலில் முதல் மொட்டை எடுக்கும் போது நானும் போட்டுக் கொண்டேன். அம்புட்டுத்தான். எதுவும் நேர்த்திக்கடன் பாக்கியா... அல்லது முருகன் ஏதோ நன்மைக்காக எனக்கு காணிக்கை கொடுத்துச் செல் என பாலகன் ரூபத்தில் கேட்கிறானோ என்று யோசித்து சரி வா... கோயில் வாசலில் கேட்கிறாய் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி இரண்டு சீட் வாங்கச் சென்றேன்.

அப்போது மாமியார் தனது சின்னமகளின் மகனுக்கும் இறக்கிடலாம் என்று சொல்ல மூன்று பேருக்கும் சீட் எடுக்க, மனைவி நானும் பூமுடி இறக்குகிறேன் என்று வந்தார். நான்கு சீட்டோடு முடி எடுக்குமிடம் சென்று முடியிறக்கினால் ஒரு மொட்டைக்கு ஐம்பது ரூபாயாம்... கணக்குப் பண்ணி கொடுத்துவிட்டு நீராட கடலுக்குச் சென்றோம். ஏற்கனவே கடலுக்குள் ஆட்டம் போட்ட எங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொள்ள, கடலில் குளிப்பதென்றால் நாளெல்லாம் கிடக்கச் சொல்லும்... என்ன ஒரு ஆனந்தம். ஆனா பெரிசுகளோட போனாவா ரொம்ப நேரம் குளிக்க முடியும். மணியாச்சு... வாங்க என அப்பா கரையில் இருந்து கத்திக் கொண்டே இருந்தார். பின்னர் நாழிக்கிணறுக்குள் செல்ல அண்ணன் தண்ணீர் ஊற்றுபவரிடம் பணம் கொடுக்க போதும் போதும் என்று சொல்லும் வரை தண்ணீரை இறைத்து ஊற்றினார்.


பின்னர் ஆடைகளை மாற்ரிக் கொண்டு கோவிலை நோக்கி நடந்தோம். பணம் கொடுத்து எல்லாம் போகாதீங்க... கூட்டம் கம்மியாத்தான் இருக்கு தர்ம தரிசனத்துலயே போங்க என்று சொன்னார் எங்க வேன் டிரைவர். அவர் சொன்னது போல் தர்ம தரிசனத்துக்கான வரிசையில் செல்ல, ஓரளவு கூட்டம் இருந்தது. வரிசை மெதுவாக நடந்து சென்றது. அருகில் பார்க்க 250 கொடுத்தவர்களுக்கும், அடுத்துப் பார்க்க 100 கொடுத்தவர்களும், ஐயரிடம் 500 கொடுத்து அர்ச்சனைத் தட்டை கொடுத்தவர்களும் வேகமாக தரிசனம் செய்து திரும்ப எங்கள் வரிசை மெதுவாக நகர்ந்தது. நம்மளும் 10,20 ரூபாய் டிக்கெட்ல வந்திருக்கலாம் என்று யோசித்தாலும் எங்களுக்குப் பின்னே நின்ற கூட்டத்தில் இனி வெளியாக முடியாது என்று தோன்ற முருகன் இப்படித்தான் வரணுமின்னு நினைச்சிருக்கான் என்று எண்ணியபடியே மெதுவாக நகர்ந்தோம்.

உள்ளே செல்லும் போது நேராக நின்ற சண்முகனை தரிசித்தபடி செல்ல, செந்தில்நாதன் கடலைப் பார்க்க நிற்பார் என்று அண்ணி சொன்னார்கள். எங்கள் வரிசை நகர்ந்து இடப்புறமாக திரும்ப அங்கே அழகன் முருகன் தனது புன்சிரிப்போடு காட்சியளித்தார். பணம் கொடுத்து வந்திருந்தாலும் முருகனை கொஞ்ச நேரம் நின்னு தரிசிச்சிருக்கலாம்... இதுல போறதால பாத்தோமோ பாக்கலையோ விரட்டிருவாங்க என்று மனைவி சொல்ல, முருகனைப் பார்த்துக் கொண்டே, குழந்தைகளுக்கும் காட்டியபடி முன்னோக்கி நகர்ந்தோம். சரியாக முருகனுக்கு நேரே சென்றபோது தீப ஆராதனை நடக்க நக்ருங்க என காவலாளி சொன்னார். 

அப்போது முன்னே போன கூட்டம் தேங்கி நிற்க, என் மனைவியும் முன்னேற, காவலாளி வரிசை நகரலைம்மா... நீங்க நில்லுங்க... அப்படியே நின்னு முருகனைப் பாருங்க... நின்னு அவனைத் தரிசிக்க கொடுத்து வச்சிருக்கணும்... இருங்க என்று சொல்ல நாங்கள் முருகனுக்கு நேராக பத்து நிமிடங்களுக்கு மேல் நின்று அழகனை ரசித்து மனது உருக வேண்டிக் கொண்டோம். எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பை வழங்கியவன் அவன்தான் இல்லை என்றால் விரைவாக நகர்ந்த கூட்டம் நாங்கள் அவனிடத்தில் வரும்போது நகராமல் நிற்குமா என்ன... மனைவிக்கு சந்தோஷம்... நல்ல தரிசனம்... என்றார். ஆம் அருமையான தரிசனம்...


பின்னர் வெளியாகி கோவில் பிரசாதங்கள் வாங்கி மண்டபத்தில் வைத்து சாப்பிட்டுவிட்டு அப்படியே கோவில் மண்டபத்தில் உள்ள கடைகளுக்குள் புகுந்தால் பயலுக ஆட்டம் ஆரம்பிச்சிருச்சு. காரு... துப்பாக்கி என வாங்கிக் குவித்தார்கள். நாங்களும் முருகன் போட்டோ, பனங்கற்கண்டு, ஏலம் சுக்கு இட்ட கருப்பட்டி என எல்லாம் வாங்கிக் கொண்டு திருச்செந்தூரில் இருந்து கிளம்பி வன திருப்பதி சென்று மதிய சாப்பாட்டை அங்கு முடித்து பெருமாளை தரிசித்து விட்டு தேவகோட்டை நோக்கி பயணமானோம்.

இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்து சாப்பிட்டு 'ஸ்ஸ்ஸ்... அப்பனே முருகா...' என்று படுத்தால் நிம்மதியான உறக்கம்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 3 ஜூலை, 2015

செந்தூர் அழகா...1


ம்ம குடந்தை சரவணன் அண்ணன் அவர்கள் தனது குடந்தையூர் தளத்தில் திருச்செந்தூர் சென்று அழகன் முருகனைத் தரிசித்து வந்த அனுபவத்தை அழகான பதிவாக்கி இருந்தார். அதைப் பார்(டி)த்ததும் நம்மளும் செந்தூர் முருகனை தரிசித்து வந்த அனுபவத்தை எழுதலாமே என்று நினைத்ததில் தொன்றியதே இந்தப் பகிர்வு...

சென்ற வருடம் விடுமுறைக்குச் சென்ற போதே மனைவி பழனிக்கு கூட்டிப் போகச் சொன்னார். சில காரணங்களால் தள்ளிப் போக, நீங்க ஆறு வருசம் நடந்தே போயி முருகனைப் பார்த்துவிட்டதால் எங்களைக் கூட்டிப் போக மாட்டேங்கிறீங்க என்றார் வருத்தமாய். சரி இந்த வருடம் போகலாம் என்று தள்ளி வைத்து சமாதப்படுத்திவிட்டு அபுதாபிக்கு வந்தாச்சு.

இந்த வருடம் ஊருக்குப் போனதும் தம்பிக்கு முருகன் கோவில்ல மொட்டை போடணும் பழனிக்கு போகலாங்க என்று சொல்லிக் கொண்டிருந்தார். நானும் பழனி பொயிட்டு அப்படியே திண்டுக்கல் வந்து நம்ம தனபாலன் அண்ணன் அவர்களைப் பார்த்துட்டு வந்துடலாம்ன்னு கணக்குப் போட்டேன். திருவிழாக்கள், திருமணங்கள், குழந்தைகளின் பள்ளி மாற்றம் என தினம் ஒன்றாய் தொடர, பழனி போகும் திட்டம் இந்த முறையும் அமையாது போல என்று நினைத்த போது மனைவி எதாவது ஒரு முருகனுக்குத்தான் மொட்டை போடணும் இங்க இருக்க மலைக்கோயில் முருகனுக்கே போட்டு விடுறேன் என்று கோபமாகச் சொல்லிவிட்டார்.

இந்த வருடம் வந்து எங்கும் போகவில்லை, குலதெய்வம் கோயிலுக்கு கூட போகவில்லை... வீட்டுக்குள்ளே பிள்ளைகளோட இருந்தா சரியாப் போச்சா என்று அம்மணி ஆரம்பிக்க... ஊருக்கு வருவதற்கு ஒரு வாரம் முன்னர் சரி இனியும் செல்லவில்லை என்றால் எப்படி... எங்கு போகலாம்... என்று யோசித்து இதுவரை பார்க்காத திருச்செந்தூர் முருகனையே போய் தரிச்சிக்கலாம். அடுத்த முறை பழனி செல்லலாம் என்று தீர்மானித்தோம். திருச்செந்தூர் என்றதும் அம்மா என்னிடம் ஒருமுறை திருச்செந்தூர் கூட்டிக்கிட்டுப் போடா என்று சொன்னது நினைவில் ஆடியது. என்னிடம் கேட்டு நான் கூட்டிச் செல்லவில்லை (நானே போகவில்லை) என்றாலும் இரண்டு மூன்று முறை அம்மா போய் வந்துவிட்டார். இருப்பினும் அவரையும் அழைத்துச் செல்லலாம் என்றபோது அப்படியே நம்ம குடும்பத்தில் எல்லாரையும் கூட்டிப் போகலாம் என மனைவி சொன்னார்.


உடனே முடிவெடுத்து அப்பா, அம்மாவைக் கேட்டு சிங்கையில் இருந்து வந்திருந்த சின்ன அண்ணனிடம் பேசி, பெரிய அண்ணி, சின்ன அண்ணன் குடும்பம், பெரியக்கா, சின்னக்கா, நடு அக்கா மகள், தம்பி மனைவி, மாமியார், மனைவியின் தங்கை, எல்லாருடைய குழந்தைகள் என 20 பேருக்கு மேல் சந்தோஷமாக முருகனை தரிசிக்கச் செல்வது என முடிவெடுத்து அதற்கான வேலைகளையும் பார்த்து உறவினர் ஒருவரின் வேனையும் ஏற்பாடு செய்தோம்.

அதன்படி திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கெல்லாம் தேவகோட்டையில் இருந்து வேன் எங்கள் ஊருக்குச் சென்று அப்பா, அம்மா, பெரியண்ணி, குழந்தைகள், ஊருக்கு வந்திருந்த சின்ன அக்கா என எல்லாரையும் ஏற்றி, வரும் வழியில் தம்பி மனைவி, சின்ன அண்ணன் குடும்பம், எங்கள் குடும்பம், அக்கா மகள், பெரியக்காவும் அக்கா பேரனும் என ஒவ்வொரு இடமாக ஆள் ஏற்றி விடியலுக்கு முன்னே தேவகோட்டையில் இருந்து இராமநாதபுரம் நோக்கிப் பயணித்தது.

காலை, மதிய சாப்பாட்டுக்கு இட்லி, சட்னி, புளியோதரை, தயிர்சாதம், மண்டி என சமைத்து எடுத்துச் சென்றுவிட்டோம். தண்ணீரும் இரண்டு பெரிய கேனை வாங்கி வைத்துவிட்டோம். காபியும் இரண்டு பிளாஸ்க்கில் போட்டு எடுத்துச் சென்றுவிட்டோம். வேனுக்குள் தெய்வீக ராகங்கள் ஒலிக்க, எங்கள் பயணம் விடியும் முன்னர் இராமநாதபுரத்தை நெருங்கியது. அங்கிருந்து ராமேஸ்வரம் தூத்துக்குடி நெடுஞ்சாலையில் திருச்செந்தூர் நோக்கிப் பயணிக்கவும் விடியும் காலையின் அழகை ரசித்தபடி பயணப்பட, ரோட்டில் வந்த கார்களையும் லாரிகளையும் பார்த்த பயலுக எல்லாம் வேனின் சந்தோஷத்தில் முன்பக்கம் வந்து நின்று ரசிக்க ஆரம்பித்தார்கள்.


ஏர்வாடிக்கு அருகில் வேன் சென்றபோது ரோட்டோரத்தில் நிறுத்தி காபி சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பினோம். வேனில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கவும் படம் போடுங்கள் என்று சில குரல்கள்... சிகரம் தொடு படத்தை ஓடவிட,  இடையில் எங்கும் நிறுத்தாமல் பயணப்பட்ட வேன் ஒன்பது மணிக்கு மேல் திருச்செந்தூர் கடலோரத்தை அடைந்தது.

பசி வயிற்றைக் கிள்ள வேனில் வைத்து இட்லியைச் சாப்பிட்டுவிட்டு முருகனின் கோபுரத்தை ரசித்தபடி விஷாலுக்கு மொட்டை போட்டுவிட்டு கடலுக்குச் சென்று குளித்து நாழிக் கிணற்றில் நிராடி அழகன்  முருகனை தரிசிக்கலாம் என்று முடிவு செய்து முடிகாணிக்கைக்கான சீட்டு வாங்க சென்றால் விஷால் முரண்டு பிடிக்க ஆரம்பித்தான்... மொட்டை அடிக்க அவன் கேட்டது என்ன? அறியக் காத்திருங்கள் இதன் தொடர்ச்சியாய் வரும் மற்றொரு பகிர்வுக்காக...
-'பரிவை' சே.குமார்.