மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

போட்டிக்கான கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போட்டிக்கான கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 செப்டம்பர், 2015

சிறகை விரியுங்கள் பெண்களே..!

வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி

ன்றைய உலகில் பெண்கள் எல்லாத்துறைகளிலும் சாதனை படைத்துக் கொண்டிருந்தாலும் அவர்களை இந்தச் சமுதாயம் எப்படிப் பார்க்கிறது... எப்படி நடத்துகிறது என்று பார்த்தால் இன்னும் அவர்களுக்கு முழுமையான வாழ்க்கை கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் இருந்து சற்றே முன்னேறியிருக்கிறார்கள்... அப்படிப்பட்ட வாழ்க்கையில் இருந்து இன்று சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது. முன்னேற்றப் பாதையில் பயணிக்க பெண்களுக்குத் தயக்கம்... அந்தத் தயக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியில் வரவேண்டும்.

கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் சிலர் மட்டுமே வேலைகளைப் பகிர்ந்து பார்த்து வாழ்ந்து வருகிறார்கள். இது ஆரோக்கியமான உறவுக்கு அடித்தளம்... இது போன்று வாழ்பவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும்... ஒரு அந்நியோன்யம் எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்கும். ஆனால் பல வீடுகளில் பெண் அதிகாலையில் எழுந்து சமையல் வேலைகள் எல்லாம் செய்து, குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்ல எல்லாம் எடுத்து வைத்து, அவர்களைக் கிளப்பி தானும் கிளம்பி கணவனுக்கு பெட்காபி கொடுத்து எழுப்பும் போது எட்டு மணிக்கு மேலாகும். மெதுவாக எழுந்து குளித்து பேப்பர் பார்த்து, சாப்பிட வரும் போது அவள் குழந்தைகளை வேனில் ஏற்றிவிட்டு வந்து அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருப்பாள். அவனும் அவளைப் பற்றிய கவலை ஏதுமின்றி கிளம்பிப் போய்விடுவான். அதேபோல் மாலை வந்து அவள் எல்லா வேலைகளையும் பார்த்து சமையல் முடித்து சாப்பிட அழைக்கும் வரை இவன் குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுப்பானா என்றால் அதுவும் இல்லை... டிவியில் செய்தி பார்ப்பான்... வடிவேலு நகைச்சுவைக்கு சிரித்துக் கொண்டிருப்பான்.  சாப்பிட்டதும் எல்லோரும் படுக்கைக்குப் போனாலும் பாத்திரங்களைக் கழுவி குழந்தைகளுக்கு பால் காய்ச்சி எடுத்து வரும்போது பத்து மணிக்கு மேலாகிவிடும். அதன் பிறகு படுத்து அவனை சந்தோஷப்படுத்தி தூங்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு என்னடி பிகு பண்ணுறேன்னு கோபம் வந்துவிடும். இந்த இயந்திர வாழ்க்கையில் எப்படி அந்நியோன்யம் இருக்கும். இங்கு பெண்மை எங்கே போற்றப்படுகிறது. அடிமைத்தனம் அல்லவா தலைவிரித்தாடுகிறது. சமூகம் அல்ல குடும்பத்துக்குள்ளேயே இப்படித்தான் பார்க்கப்படுகிறது.

கிராமங்களில் முன்பெல்லாம் கணவன் சாப்பிடும் போது மனைவி எழுந்து நின்றுதான் பரிமாறவேண்டும். இல்லையேல் சாப்பிடும் கணவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். உடம்புக்கு முடியலை என்று உட்கார்ந்து கொண்டு சாப்பாடு போட்டால் 'என்ன மரியாதை இருக்கு' என்று சத்தம் போடுவார்கள். இதற்காகவே உடம்புக்கு முடியவில்லை என்றால் மகளிடம் சொல்லி போடச் சொல்வார்கள். அவளும் நின்றுதான் போடவேண்டும். ஆனால் இன்றைக்கு நிலமை ரொம்ப மாறிவிட்டது. உட்கார்ந்து கொண்டும் டிவி பார்த்துக் கொண்டும்தான் சாப்பிடுகிறார்கள். நின்று கொண்டு பரிமாற வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. இது முன்னேற்றமா... இங்கே பெண்மை போற்றப்படுகிறதா என்று நீங்கள் கேட்கலாம். இது அடிமைத்தனத்தில் இருந்து வெளிவந்ததற்கான அடையாளம்தானே... கணவன் சாப்பிட்ட பின்னே மனைவி சாப்பிட வேண்டும் என்ற நிலையெல்லாம் மாறி எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் காலம் வந்துவிட்டதல்லவா?

பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் என்பது நரகமான நாட்கள் என்பதை எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்... நேற்று எப்படி தனக்கு பணிவிடை செய்தாலோ அப்படித்தான் இன்றும் செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அந்த நாட்களில் நீ ஒன்றும் செய்ய வேண்டாம்... நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்பவர்கள் கொஞ்சமே... மற்றவர்கள் எல்லாம் அதையெல்லாம் பெரிதாய் பார்ப்பதில்லை. நாப்கின் வாங்கிக் கொடுக்கும் அப்பா, கணவன், சகோதரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் இன்னும் இது குறித்த அறிவு பரவலாகவில்லை என்பதை நாப்கினை கருப்பு பிளாஸ்டிக் கவரிலோ அல்லது பேப்பரிலோ சுற்றிக் கொடுக்கும் கடைக்காரர் சமூகத்தின் சார்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதுதானே உண்மை. 

பெண்களை வீட்டில் நடத்தும் விதங்கள் மாறிவிட்டாலும் சமூகத்தில் அவர்கள் இன்னும் போகப்பொருளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்... எத்தனை எத்தனை கற்பழிப்புக்கள்... தினமும் செய்திகளாய் சிரிக்கின்றன என்பதை நாம் அறிவோம். எல்லாவற்றிற்கும் காரணம் என்ன..? போதையில் செய்தான்... குடும்பப்பகையில் செய்தான் என்று சொல்கிறார்களே... போதையும் பகையும் ஒரு பெண்ணை இவ்வளவு கொடூரமாகவா பார்க்க வைக்கும். இதற்கெல்லாம் காரணம் சினிமாதான்... பட நாயகியின் கவர்ச்சி உடைகளைப் போல் இன்று வீட்டில் வாங்கிக் கொடுக்கிறார்கள். அதை போட்டுக் கொண்டு வெளியில் போகும் போது உறுத்தும் அழகுதான் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமே... இங்கு சமூகத்தின் மீது பலியைப் போட்டாலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை விடுத்து எல்லை மீறும் பெண்களும்தான் காரணம் என்பதை மறுக்க முடியுமா இல்லை மறைக்க முடியாமா? இங்கு தங்கள் முன்னேற்றத்திற்கு தாங்களேதான் தடையாக இருக்கிறார்கள் என்பதை பெண்ணினம் ஏன் யோசிப்பதில்லை.

இங்கு நம்ம நாட்டு மக்கள் நிறைய இருக்கிறார்கள். தங்களின் வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை அங்கங்கள் தெரியும்படியான உடைகள் அணிவித்து பெற்றவர்களே ரோட்டில் கூட்டிச் செல்வதை கண் கூடாக பார்க்க முடிகிறது. அந்தப் பெண்ணை கடந்து செல்லுவோர் பார்த்துச் செல்வதை ரசித்துக் கொண்டே போவது போல்தான் தோன்றும் அவர்களின் செயல். வேலைக்கு போகும் போது ஒரு பத்தாவது படிக்கும் பையனும் அவனுடன் படிக்கும் பெண்ணும் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் கடந்து செல்லும் நாட்களும் உண்டு. இதெல்லாம் இங்கே சரியாகப்படலாம். சிகரெட் பிடிப்பது எல்லாம் இங்கு சாதாரணமாகிவிட்டது. ஆண்களுக்கான சிகரெட் பெண்களுக்கான சிகரெட் என்று தரம் வேறு... ஒரு பெண் கையில் புகையும் சிகரெட்டுடன் நான்கு ஆண்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டே தம் அடிக்கிறாள். இந்தக் கலாச்சாரம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நம்ம ஊரிலும் வந்து கொண்டுதான் இருக்கிறது. குடித்து விட்டு ரோட்டில் கிடந்த மாணவி, பீர் அடிக்கும் ஐடி பெண்கள் என அமோகமாய் நாமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். இந்தச் சமூகம் பெண்களை தவறாக பார்க்கிறது... மோசமாக நடத்துகிறது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும் இன்றைய இளைய சமுதாயம் மோசமான ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்தானே?

முன்பெல்லாம் வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தான் காலூன்றி நிற்க வேண்டும் என்றால் எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டும். ஆனால் இன்று பாரதி கண்ட புதுமைப்பெண்கள் நிறைய வலம் வர ஆரம்பித்துவிட்டதால் இன்றைக்கு அனுசரித்துச் செல்ல வேண்டும் என்று சொல்லும் ஆண்வர்க்கம் அடங்கிப் போய்கிடக்கிறது. பெண்கள் எல்லாம் முடங்கிப்போய் கிடக்காமல் புதிய தென்றலாய் புறப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகத்தின் பார்வையில் இன்றைய நிலையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராய்த்தான் இருக்கிறார்கள்.

பெண்களை சமூகம் பார்க்கும் பார்வைக்கு எத்தனையோ கதைகளையும் காரணங்களையும் சொல்லலாம்தான் ஆனால் பணத்துக்காக சினிமா... கரகாட்டம்... ஆடல்பாடல்... தெருக்கூத்து போன்ற பொதுவெளிகளில் தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்வதை என்னவென்று சொல்வது...? இந்தச் சமூகமா அவர்களை இப்படி நடந்துகொள்ளச் சொல்கிறது..? அவர்களுக்கு சுய சிந்தனை இல்லையா...? பெற்றவர்களோ... கட்டியவனோ இப்படி நடக்கச் சொன்னால் அவனை எதிர்த்து... தன்னால் சுயமாக வாழ முடியாதா..?  எத்தனையோ பாதிக்கப்பட்ட பெண்கள் இன்றைய சமூகத்தில் தாங்கள் தனித்து வாழ்ந்து சாதிக்கவில்லையா...? அப்படியிருக்க சில பெண்கள் சமூகம்தான் என்னை இப்படி ஆக்கியது என்று புலம்பிக்கொண்டே அதே சகதியில்தான் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்... அவர்கள் எல்லாம் அதிலிருந்து வெளிவந்து வாழ்ந்து காட்டும்போது பெண்ணை கேவலமாகப் பார்க்கும் இந்தச் சமூகம் தன்னைத் திருத்திக்கொள்ளும்.

இன்று ஆயா வேலையில் இருந்து நாட்டை ஆள்வது வரை பெண்கள் ராஜ்ஜியமே.... சென்னையில் முதல் மெட்ரோ ரயிலை முதன் முதலில் ஓட்டியதும் இரண்டு பெண்கள்தான்... இன்று விமானத்தையும் இயக்குகிறார்கள்... ஏன் கல்பனா சாவ்லா நிலவுக்கு செல்லவில்லையா..? சானியா மிர்சாக்களும் செய்னா நோவல்களும் பிடி.உஷாக்களும் சாதிக்கவில்லையா..?  திலகவதி ஐ.பி.எஸ்களும் ஜானகிகளும் சாதிக்கவில்லையா..? கண் இல்லை என்றாலும் கணீர்க்குரலால் வைக்கம் விஜயலெட்சுமி சமூகத்தில் சாதிக்கவில்லையா...? ஆணுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் பெண்கள் ஜொலிக்கிறார்கள். இங்கு ஆணுக்கு நிகராக என்று சொல்லும் போது நட்சத்திரங்களாய் மின்னுகிறார்கள் என்ற சந்தோஷத்தோடு சிகரெட், மது என்று இன்னொரு பக்கம் இன்றைய இளம் பெண்கள் ஆணுக்கு நிகராக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற வேதனையையும் சுமக்கத்தான் வேண்டியிருக்கிறது.

சமூகம் என்னை இப்படிப் பண்ணுது... அப்படிப் பண்ணுதுன்னு புலம்புறதை விட்டுட்டு இன்றைக்கு கிடைத்திருக்கும் சுகந்திர வாழ்க்கையில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால் கவர்ச்சிக்கும் போதைக்கும் தங்களை இழக்காமல் இருக்க வேண்டும்.  அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று சொன்ன காலம் போய் பெண்கள் படிக்க வேண்டும் என்று கண்டிப்பாக கல்வி கொடுக்க நினைக்கும் சமூகத்தில்தான் இப்போது வாழ்கிறோம். சமூகம் பெண்களை எப்படிப் பார்த்தாலும் நான் பெண்... என்னை சமூகம் அப்படிப் பார்க்கிறது... கேவலமாகப் பேசுகிறது என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் பரந்த உலகில் குதித்து வெளியே வந்தால் சாதிக்கலாம்... அப்படி சிறகடித்துப் பறந்த பெண்கள் எல்லாம் இன்றைக்குச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லாரும் சிறகை விரிக்க வேண்டும்...  சிறகுகள் சிறந்த இலக்கை நோக்கிப் பறக்க வேண்டும்... சிந்தையில் முன்னேற்றத்திற்கான கரு விளைய வேண்டும்...

ஆணுக்குப் பெண் நிகர் என்றாலும் இட ஓதுக்கிட்டில் இன்னும் முழுமை பெறாவிட்டாலும் சாதனைச் சிகரங்களை தொட்டுக்கொண்டிருக்கும் பெண்கள் உலகம் விரிய வேண்டும் என்றால் அடிமைச்சிறை, அழித்துக் கொள்ளும் நிலைகளில் இருந்து பெண்கள் வெளியில் வரவேண்டும்... பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புற்றீசல் போல் வெளிவரவேண்டும்... வருவார்கள்... சாதிப்பார்கள்... 

நாளைய உலகம் பெண்கள் கையில்... உயரப் பறக்கப் போகும் அவர்களை உச்சிமோர்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை நாம் கண்கூடாக பார்க்கத்தான் போகிறோம்... 

**************

"இப்படைப்பு  எனது சொந்தப் படைப்பு, 'வலைப்பதிவர் திருவிழா-2015' மற்றும் 'தமிழ்இணையக் கல்விக்கழகம்' நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது,  இதற்கென எழுதப்பட்ட கட்டுரை இது, இதற்கு முன் வெளியான கட்டுரை அல்ல... முடிவு வெளிவரும் வரை வேறு எங்கும் பதியவோ இதழ்களுக்கு அனுப்பவோ மாட்டேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்..."

**************

பதிவர் விழாவுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கிறது... புதுக்கோட்டை குலுங்கட்டும்... வலைப்பதிவர் புகழ் உலகெங்கும் பரவட்டும்... தமிழகத்தில் இருக்கும் பதிவர்களெல்லாம் தவறாது கலந்து கொள்ளுங்கள்... எழுத்தின் ஆற்றல் எட்டுத் திக்கும் தமிழைக் கொண்டு செல்லட்டும்...


-'பரிவை' சே.குமார்.

வியாழன், 24 செப்டம்பர், 2015

வலைப்பதிவர் விழா போட்டி : வீடு சுத்தமானால் நாடு சுத்தமாகும்

போட்டி வகை (2) சுற்றுச் சூழல் விழிப்புணர்வு 

கட்டுரை தலைப்பு : வீடு சுத்தமானால் நாடு சுத்தமாகும்

ன்றைய உலகில் வெளிநாடுகளில் எல்லாம் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு வந்து காலங்கள் கடந்துவிட்ட போதிலும் நம் இந்தியாவில் மட்டும் இன்னும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக ஏற்படவில்லை என்பதே உண்மை.  ஒரு வீட்டின் புறச் சுத்தம் எப்படியிருக்கோ அதைப் பொறுத்துத்தான் அந்த வீட்டிற்குள்ளும் சுத்தம் இருக்கும் என்று கிராமங்களில் சொல்வார்கள். அதுவே உண்மை. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள்... அதுதான் நோயற்ற வாழ்வைக் கொடுக்கும்.. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று எவ்வளவுதான் சொன்னாலும் நாம் இன்னும் மாறாமல்தான் இருக்கிறோம். வீட்டைச் சுற்றி குப்பைகளைக் கொட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். சுற்றுச்சூழல் பற்றிய அறியாமை தரும் ஆபத்துக்களையும் அதற்கான விழிப்புணர்வுகளையும் குறித்துப் பார்ப்போம்.

கழிவு நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்கள் எல்லாம் சரிவர இருக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான இடங்களில் கால்வாய்களுக்குள் தண்ணீர் ஓடாமல் அப்படியே தேங்கி நிற்கின்றன. பல இடங்களில் கால்வாய்களே இல்லை என்பதுதானே நிதர்சனம். கால்வாய்கள் இல்லாத இடங்களில் வீடுகளுக்கு முன்னே சிறிய குழி வெட்டி அதில் அசுத்த நீரை சேமித்து வைக்கிறோம்... கூடவே நோய்களையும்... இதேபோல் தெருவோர கால்வாய்கள் பெயரளவில்தான் இருக்கின்றன. அதில் தண்ணீர் ஓடாமல் அப்படியே கிடப்பதால் கொசு உற்பத்தியாகி மலேரியாக் காய்ச்சலைக்களைக் பரப்பி விடுகின்றன. இப்போது இது போன்ற கழிவு நீர்களின் சாக்கடையால்தான் டெங்கு உருவாகிறது. இந்தச் டெங்கு எத்தனை உயிர்களைக் கொன்றதை என்பதை நாமெல்லாம் அறிவோம்.  இதெற்கெல்லாம் காரணம் என்ன? சாக்கடை கால்வாயை சரிவர சுத்தம் செய்யாததே முக்கியக் காரணம். அடிக்கடி சுத்தம் செய்து அந்தத் தண்ணீரையெல்லாம் ஊருக்கு வெளியே கொண்டு போய் விட்டால் நம்ம பகுதியும் சுத்தமாக இருக்கும் நோய்களையும் தடுக்கலாம் அல்லவா? ஆனால் நாம் செய்வோமா.... இல்லையே பிளாஸ்டிக் பேப்பர் முதல் கொண்ட எல்லாக் குப்பைகளையும் சாக்கடைக் கால்வாயில் போட்டுத்தானே வைக்கிறோம்.

முன்பு பெரிய நகரங்களில் மட்டுமே குப்பைகளை வீட்டில் வந்து சேகரித்துச் சென்றார்கள். இப்போது பெரும்பாலான இடங்களில் காலையில் வீதி வீதியாக வந்து சேகரித்துச் செல்கிறார்கள். ஆனால் நாம்தான் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. நாலு வீடு இருந்தால் பக்கத்தில் இருக்கும் காலியிடமே குப்பைகளைக் கொட்டும் மைதானமாக மாறிவிடுகிறது.  நல்லது கெட்டது எல்லாத்தையும் அங்குதான் கொட்டி வைக்கிறோம். எல்லாக் குப்பையும் சேர்ந்து அந்த இடத்தைக் கெடுப்பதுடன் நோய்களைப் பரப்பும் கிருமிகளை உருவாக்கும் இடமாகவும் மாறிப் போய்விடுகிறது.  வீட்டில் இருக்கும் குப்பைகளை பக்கத்தில்தானே கொட்டுகிறோம். நம் வீடு சுத்தமாகத்தானே இருக்கிறது என்று நாம் நினைப்பது எவ்வளவு தவறு என்பதை ஏன் யாருமே உணருவதில்லை. 

சென்னையில் நாங்கள் இருந்த பகுதியில் தினமும் காலையில் குப்பை வண்டி வந்து வீட்டுக்கு வீடு குப்பையை வாங்கிச் செல்வார்கள். ஆனால் அந்தப் பகுதியில் இருந்த ஒரு காலி இடம்தான் குப்பைகளின் புகழிடமாக இருந்தது. அதன் அருகே சிறிய ஹோட்டல், டீக்கடை மற்றும் காய்கறிக்கடைகள் என சின்னச்சின்ன கடைகள் எல்லாம் இருந்தன.  மீன், நண்டு, இறைச்சிக் கழிவுகள் மற்றும் அனைத்து விதமான குபைகளையும் கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றமும் உருவாகும் கிருமிகளாலும் அருகே இருக்கும் ஹோட்டல் மற்றும் டீக்கடையில் சாப்பிடுபவர்களுக்கு நோய் வரலாம் என்பதையோ அல்லது இந்த துர்நாற்றமான காற்றைச் சுவாசிப்பதால் நோய்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கிறோம் என்பதையோ அந்தப் பகுதியில் இருந்த மக்கள் உணரவேயில்லை. இப்படிப்பட்ட சுகாதாரக் கேடுகளை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம் என்பது எவ்வளவு வேதனையான விஷயம்.

இதேபோல் தேவகோட்டை - காரைக்குடி ரோட்டில் ஓரிடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு என்றே நகராட்சி இடம் ஒதுக்கியிருக்கிறது. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்ற பிரிவுகள் வேறு... அந்த இடத்தைக் கடக்கும் போதே மாசு நிறைந்த காற்றைத்தான் சுவாசிக்க வேண்டும்.  இந்த கேடு போதாதென்று ஒரு சில நாட்கள் அதில் தீயை வைத்து எரித்து அந்தப் பக்கத்து காற்றை எல்லாம் கெடுத்து வைப்பார்கள். இப்படியான சூழலில் அந்தப் பகுதியில் வாழ்பவர்கள் எப்பவுமே சுகாதாரமற்ற காற்றைத்தானே சுவாசிக்கிறார்கள். இதனால் பாதிப்பு வரும் என்பதை அரசும் மக்களாகிய நாமும் யோசிப்பதும் இல்லை... இவற்றிற்கான தீர்வுகளைப் பற்றி சிந்திப்பதும் இல்லை என்பதை நினைக்கும் போது வருத்தத்தைவிட வெட்கமே மேலோங்கி நிற்கிறது.

இதைவிட மோசமான சூழல் என்றால் அது கிராமங்களில்தான்... இப்போது சில கிராமங்கள் மாறியிருந்தாலும் பல கிராமங்களில் மாற்றம் என்பது இன்னும் வரவில்லை என்பதுதான் உண்மை. மலம் கழிப்பது பொதுவெளியில்தான் என்பதை அனைவரும் அறிவோம். கால் கழுவுவது... குளிப்பது... மாடுகளைக் குளிப்பாட்டுவது மற்றும் குடிதண்ணீர் என எல்லாவற்றிற்குமே குளங்களில் தேக்கி வைத்திருக்கும் நீரைத்தான் பயன்படுத்துவார்கள். முன்பெல்லாம் விவசாயம் இருந்தது குப்பைகளையும் கூழங்களையும் வயல்களில் கொட்டி உரமாக்கினார்கள். வாய்க்கால்களில் நீர் ஓடிப் பாய்ந்ததால் வயல் வரப்புக்களில் இருந்த மரங்கள் எல்லாம் நல்ல செழிப்போடு இருந்தன. சுகாதாரமான... சுத்தமான காற்றை சுவாசித்து வாழ்ந்து வந்தார்கள். இன்றைக்கோ நிலைமை அப்படியே மாறிவிட்டது. விவசாயம் இல்லாத வயல்களில் வேலிக் கருவைகள் மண்டிக் கிடக்கின்றன... நீர்வரத்து இல்லாமல் தூர்ந்து போன வாய்க்காலகளில் பசுமையும் இல்லை... வரப்புக்களில் மரங்களும் இல்லை... குப்பைகளும் மலக் கழிவுகளுமாய் இருக்கும் சுற்றுச் சூழலால் இன்றைய கிராமங்கள் சுகாதாரம் இழந்துதான் தவிக்கின்றன.

மனிதன் செத்தால் புதைக்கவோ எரிக்கவோ செய்யும் நாம் விலங்குகள் செத்தால் மட்டுமே தூக்கிக் கொண்டு போய் ஊருக்கு வெளியே போட்டுவிட்டு வருகிறோம். அதை நாய் நரிகள் கடித்துக் குதறி... இது எத்தகைய சுகாதாரக் கேடு தெரியுமா?   முன்பெல்லாம் கிராமங்களில் விலங்குகள் செத்தால் அதை ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் குழி தோண்டிப் புதைப்பார்கள். இப்போ அவர்களும் மாறித்தான் இருக்கிறார்கள்.

இதேபோல் அமில ஆலைகள், ஊருக்கு வெளியேதானே இருக்கின்றன இதனால் என்ன தீங்கு வந்து விடப்போகிறது என்று நினைக்கலாம். ஆனால் இவற்றில் இருந்து வெளியாகும் கழிவுகளும் அதனால் ஏற்படும் ஒரு வித அழுகிய முட்டை நாற்றமும் எவ்வளவு மோசமானவை தெரியுமா? இந்தக் கழிவில் இருந்து வெளியாகும் கிருமிகளும் அதன் நாற்றமும் காற்றில் கலந்து அந்தப் பகுதி வாழ் மக்களின் நுரையீரலை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை எத்தனை பேர் அறிவோம். கூடங்குளம் வேண்டாம் என்று போராடிய மக்களுக்காக எத்தனை பேர் ஆதரவுக் குரல் கொடுத்தோம். அதன் பாதிப்புக்கள் நமக்கு வராது என்றுதானே வாளாதிருந்தோம்... அனுபவிக்கப் போறவர்கள் அவர்கள்தானே என்றுதானே வாய் திறக்காதிருந்தோம். 

வெளிநாடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு என நிறைய முக்கியத்துவங்கள் கொடுக்கிறார்கள். குப்பையை போடும் இடங்களில் வைக்கும் பெரிய பெரிய டப்பாக்களை எல்லாம் தினமும் கழுவி சுத்தம் செய்கிறார்கள். ஒரு சிறிய குப்பையை போட்டால் கூட அபராதம் விதிக்கிறார்கள். எனவே காபி குடித்த கப்பாக இருந்தாலும் சாக்லெட் பேப்பராக இருந்தாலும் குப்பைத் தொட்டியை தேடிப் போய் போடுகிறார்கள். நம்ம ஊரில் எந்த இடமோ அங்கு போட்டுவிட்டு நாம் ஜாலியாக நடப்போம். இங்கெல்லாம் கழிவு நீர் தேக்கமும் இல்லை... கண்ட குப்பைகளின் அணிவகுப்பும் இல்லை. இத்தனை சுத்தமாக இருப்பதால்தான் இங்கு கொசுக்களும் இல்லை மலேரியா, டெங்கு போன்ற நோய்களும் இல்லை. நாம் இதையெல்லாம் பின்பற்றுவதும் இல்லை... நோய்களை ஒழித்து சுகாதாரமான வாழ்க்கையை வாழ விரும்புவதும் இல்லை. நமக்குத்தான் பேருந்து நிலைய சுவரைப் பார்த்தாலே நாய் போல் சிறுநீர் கழிக்கும் எண்ணம் வந்துவிடுகிறதே. அப்புறம் எப்படி சுற்றுச்சூழலாவது சுகாதாரமாவது... 

தனி மனிதனில் தொடங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒரு தீப்பொறியாய் கிளம்பி நாடெங்கும் நல்ல சுவாலையோடு பரவ வேண்டும். அதற்கு நாம் முதலில் நம் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும்... வீட்டைச் சுற்றிக் கிடக்கும் சுகாதாரக் கேடுகளான குப்பை கூழங்களை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு வீடும் சுத்தமானால் அந்த ஊர் சுத்தமாகும்.... இப்படி ஒவ்வொரு ஊராக சுத்தமாகும் போது மாவட்டம் சுத்தமாகும்... மாவட்டம் மாநிலமாகும்... மாநிலங்கள் சுத்தமாகும் போது நம்நாடு சுத்தமாகும். நாமும் சுகாதாரமான வாழ்வை வாழ்வோம். நோய் நொடிகள் எல்லாம் பறந்து போகும். அதற்கு ஒவ்வொருவரும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதமாக செயல்பட வேண்டும் என்பதை உணர வேண்டும். 

குப்பைகளை எல்லாம் அதற்குரிய இடத்தில் சேர்க்க வேண்டும். தேவையில்லாத குப்பைகளை, பாலித்தீன் பைகளை எல்லாம் நெருப்பிட்டுக் கொளுத்துவதை தவிர்க்க வேண்டும். சாக்கடைகளில் குப்பைகளைக் கொட்டி தண்ணீரைத் தேங்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மழை நேரங்களில் ஆங்காங்கே நீர் தேங்குவதை தடுக்க வேண்டும். இதில் அரசும் முதுகெலும்பாய் செயல்பட வேண்டும். இப்படி எல்லா வகையிலும் எல்லா மக்களும் சேர்ந்து செயல்பட்டால் சுற்றுச் சூழல் பாதிப்பில்லாமல் சுகாதாரமான வாழ்வை வாழலாம். நாளைய உலகம் சுகாதாரமாய் இருக்க நடவடிக்கை எடுக்கும் சக்தியே மக்களாகியா நாம்தான் என்பதை உணர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்... செய்வோமா?.

-----------------------------

"வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை" மற்றும் "தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்" இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிக்கான வகை-(2) சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக்கான கட்டுரைப் போட்டிக்கு எழுதிய பகிர்வு இது.

'இந்தப் பகிர்வு முழுக்க முழுக்க எனது சொந்தக் கற்பனையே.... இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது' என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வலைப்பதிவர் சந்திப்பு விழா குறித்தான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வலைப்பதிவர் திருவிழா-2015 என்ற தளத்தோடு இணைந்திருங்கள் நட்புக்களே... தங்கள் பெயரும் விபரமும் வலைப்பதிவர் கையேட்டில் இன்னும் சேர்க்காத நட்புக்கள் உடனே சேர்த்து விடுங்கள்... நம்மைப் பற்றிய ஆவணப் பெட்டகம் அது என்பதை மறக்காதீர்கள்.

வலைப்பதிவர் விழா தொடர்பான தொடர்புகளுக்கு...


-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 12 டிசம்பர், 2014

சொக்கா... எனக்கு முதல் பரிசு (தமிழ்க்குடில் போட்டி)

மிழ்க்குடில் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மகாகவி பாரதி பிறந்ததின போட்டி கவிதை, கட்டுரை போட்டிகளின் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது.  கட்டுரைப் போட்டியில் எனது கட்டுரை முதல் பரிசுக்குரிய கட்டுரையாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எனது கட்டுரையைத் தேர்ந்தெடுத்த நடுவர்கள்  திரு. இராஜ.தியாகராஜன்,  முனைவர் அண்ணாகண்ணன் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போட்டியினை மிகச் சிறப்பாக நடத்திய தமிழ்க்குடில் தோழமைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.

இந்தப் போட்டியில் நான் கலந்து கொள்ள நினைக்கவேயில்லை... நட்புக்களுக்காக எனது பக்கத்தில் கூட நான் போட்டி விவரங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். எனது பாசத்திற்குரிய காயத்ரி அக்காதான் தம்பி எழுது... தம்பி எழுதுன்னு முகநூல் அரட்டையில் திட்டிக் கொண்டேயிருந்தார்கள். அவர்களின் திட்டுதலுக்குப் பயந்தே (பரிசு கிடைத்ததும் இவனை திட்டித் திட்டியே எழுத வைச்சா ஜெயிச்சிட்டானேன்னு அதுக்கும் சொன்னா கேக்க மாட்டேன்னேன்னு திட்டு விழுந்தது தனிக்கதை)  இறுதி நாள் இரவு எழுதி 10: 20 மணிக்கு (இந்திய நேரம் :  11 : 50)  அனுப்பினேன்.  எப்பவுமே கடைசி நேரத்தில் எழுதுவதே வாடிக்கை. அதற்குப் பரிசு கிடைத்திருக்கிறது. இன்னும் பட்டை தீட்ட வேண்டிய கட்டுரைதான் என்றாலும் நடுவர்களைக் கவர்ந்தது என்பதில் சந்தோஷமே... 

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாள நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

-------------------------------------------------

வெளிநாட்டு வாழ்க்கை 

வெளிநாட்டு வாழ்க்கை என்பது இன்று பெரும்பாலானோருக்கு வாய்த்திருக்கும் வாழ்க்கை. குடும்பம், குழந்தைகள் என எல்லாம் விட்டு ஒரு அறைக்குள் நான்கைந்து ஆண்களாய் தங்கும் இந்த வாழ்க்கை ஊரிலிருந்து பார்ப்பவர்களுக்கு பகட்டாய்த்தான் தெரியும். எல்லோருமே கொட்டிக் கிடப்பதை அள்ளி வருவதாய் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பானதா அல்லது சீரழிக்கிறதா என்பதை கொஞ்சம் பார்க்கலாம்.

குறிப்பாக தென் தமிழகத்து ஊர்களில் இருந்து பெரும்பாலானோர் சிங்கப்பூர், மலேசியா என சம்பாதிக்கப் போவார்கள். அவர்கள் எல்லாம் வெளிநாடு செல்ல ஏஜெண்டிடம் லட்சங்களைக் கட்டி காத்திருப்பார்கள். ஒரு நாள் ஏஜெண்டிடம் இருந்து அழைப்பு வர கிளம்பிச் செல்வார்கள். இரண்டு வருடங்கள் ஊருக்கே வர முடியாத வாழ்க்கை வாழ்வார்கள். மாத மாதம் அவர்கள் அனுப்பும் ஆயிரங்கள் வீட்டில் இருப்பவர்கள் மனதில் சந்தோஷத்தைக் கொடுத்தது என்றாலும் அவர்கள் சந்தோஷமாக இருந்தார்களா என்பதை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கொடுத்து விடும் சோப்பும் டிரஸ்சும் கொடுத்த சந்தோஷம் எல்லாம் அவர்களின் வலி நிறைந்த வாழ்க்கையைச் சொல்லத் தவறியதை இப்போது உணர முடிகிறது.

இப்போது போல் அப்போது தினமும் பேசுவதற்கு இணைய வசதியோ, செல்போன் வசதியோ இல்லை. ஏன் பெரும்பாலான கிராமங்களில் தொலைபேசி வசதி கூட இருக்கவில்லை. அருகில் இருக்கும் டவுனிலோ அல்லது உறவினர் வீட்டிலோ இருக்கும் தொலைபேசிக்கோ வாரம் ஒருமுறை பேசுவதென்பதே அரிது. பெரும்பாலும் சுமைகளையும் துக்கங்களையும் தூக்கிச் சுமக்கும் புறாவாய் கடிதம் மட்டுமே இங்கும் அங்கும் அடிக்கடி பறந்து கொண்டிருந்தது. அதிலும் ஊரிலிருந்து செல்லும் கடிதம் பணத்தேவையைச் சுமந்தும் அங்கிருந்து வரும் கடிதம் பாசத்தையும் அன்பையும் அள்ளி எடுத்து அதனுடன் போட்டோவையும் சுமந்து வரும். இதுதான் அன்றைய வாழ்க்கையாக இருந்தது.

இப்போது நிலமை மாறிவிட்டது... வெளிநாடு என்பது என்னவோ வெளியூரில் வேலை பார்ப்பது போலத்தான். படித்தவர்களின் நிலை படிக்காதவர்களுக்கு இல்லை என்றாலும் நல்ல வேலையில் இருந்தால் நினைத்த போது ஊருக்குப் போகலாம்... ஊருக்குப் பேசலாம்... நல்ல சம்பளமாக இருந்தால் குடும்பத்தையும் கொண்டு வந்து வைத்துக் கொள்ளலாம். தென் தமிழகத்தில் இருந்த வெளிநாட்டு மோகம் இப்போது தமிழகம் எங்கும் பரவிவிட்டது. பரவாயில்லையே வெளிநாட்டு வாழ்க்கை முன்பு போல் கஷ்டமாக இருப்பதில்லையே என்று நினைப்போமேயானால் அது மிகத் தவறு என்பதை இங்கு ஆணித்தரமாக சுட்டிக் காட்டலாம்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சியில் வந்த செய்தியினை முகநூலில் பார்க்க நேர்ந்தது. ஏஜெண்ட் சொல்லிக் கூட்டியாந்தது ஒண்ணு...  கிடைக்கிற சம்பளம் ஒண்ணு... என்ற வேதனையை பலர் பகிர்ந்தார்கள். அவர்கள் எல்லாம் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இணைய வசதி இருப்பதால் வெளிநாட்டு வாழ்க்கை என்பதை கவிதையாகவும் கதையாகவும் காணொளியாகவும் காட்சிப்படுத்துகிறார்கள். வேதனைப்படுகிறோம்... செத்து மடிகிறோம் அப்படின்னு வசனங்களை அள்ளி வீசுகிறார்கள். ஆனால் இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுதானே வந்தோம். அவர்களா நம்மை கட்டி இழுத்து வந்தார்கள்... இல்லையே... கடனும் கற்பனைகளும்தானே நம்மை இழுத்து வந்தன என்ற உண்மையை யாருமே கவிதையாகவோ கதையாகவோ காணொளியாகவோ வடிப்பதில்லையே ஏன்.?

பகட்டாகவும் பக்கத்து வீட்டுக்காரனுக்கு பணம் காய்க்கும் மரமாகவும் தெரியும் வெளிநாட்டு வாழ்க்கை பகட்டையும் பணத்தையும் தருகிறதா என்றால்... ஒரு சிலருக்கே அதைத் தருகிறது எனலாம். பெரும்பாலானவர்களின் பேச்சிலர் வாழ்க்கை என்பது பத்துக்குப் பத்து அறைக்குள்தான் கழிகிறது என்பதுதான் உண்மை. ஒரு பத்துக்குப் பத்து அறைக்குள் அடுக்குக் கட்டில்கள் போட்டு நாலைந்து பேராக வாழ்வதும்... அந்த ஒற்றைக் கட்டில்தான் தான் வாழும் இடம் என்பதும் அனுபவிப்பவனுக்கு மட்டுமே தெரியும்.

குறிப்பாக கிளினீங் வேலைக்கும் கட்டிட வேலைக்கும் வருபவர்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கும். காரணம் ஊர்க்காசுக்கு பத்தாயிரம் கூட கிடைக்காத ஒரு வேலைதான் கிளினீங் கம்பெனி வேலை... கேம்ப்பில் மொத்தமாக தங்கி... அதிகாலையில் எழுந்து வரிசையில் நின்று கழிவறை, குளியல் வேலைகள் முடித்து பிளாஸ்டிக் கவர்களில் கட்டிய சாப்பாடுகளை எடுத்துக் கொண்டு தயாராக நிற்கும் வாகனத்தில் ஏறி வேலை செய்யுமிடம் செல்ல வேண்டும். இரவு திரும்பி துணி துவைத்து குளித்து (இப்பவும் அதே வரிசைதான்) அப்பாடா என்று படுக்கும் போது பதினோரு மணியோ பனிரெண்டு மணியோ ஆகும்... மறுநாள் காலையும் இதே நிலை... கையில் வாங்கும் காசோ கொஞ்சம்... அதில் ஊருக்கு அனுப்பி... போன் மற்றும் மற்றவற்றிற்கும் பயன்படுத்தி வாழும் வாழ்க்கையில் சந்தோஷம் ஏது..?

இதேநிலைதான் கடைகளில் வேலைக்கு வருபவர்களுக்கும்... ஒரு வாரம் முன்பு ஆந்திர நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டது. அவர் சென்ற சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பையன் அவர் தெலுங்கில் பேசுவதைப் பார்த்து 'அண்ணா நீங்க தெலுங்கா... எனக்கொரு உதவி செய்யுங்க... என்னை எப்படியாச்சும் ஊருக்கு அனுப்பி வையுங்க... 1200 திர்காம் சம்பளமுன்னு சொல்லிக் கூட்டியாந்து500 திர்காம்தான் தர்றாங்க... கடனை வாங்கித்தான் வந்தேன்... காலையில 8 மணியிலிருந்து இரவு11 மணி வரை வேலை... அதுவும் நின்னுக்கிட்டே இருக்கணும்... எப்படியாச்சும் என்னை ஊருக்கு அனுப்பி வைங்கண்ணேன்னு சொன்னானாம். இதுதான் ஆசைப்பட்டு வந்து அவதிப்படுவோரின் நிலை.

ஊரில் இருந்து நல்ல செய்தியோ கெட்ட செய்தியோ எது வந்தாலும் அந்தச் சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள நல்லதொரு நட்பு நாமிருக்கும் அறையில் கிடைத்தால் அது நாம் செய்த பிறவிப்பயனே. இல்லையே மடிசாய அன்னையோ... தோள் கொடுக்க நண்பனோ... ஆறுதலாய் அணைத்துக் கொள்ள மனைவியோ இல்லாமல் சுமையை இறக்குமிடமாக கழிவறை மட்டுமே காத்திருக்கும்.

எத்தனை கஷ்டங்கள்.... எத்தனை கவலைகள்... எத்தனை பிரச்சினைகள்... எத்தனை வருத்தங்கள்... என எத்தனை எத்தனையோ இருந்தாலும் ஊரில் இருந்து வரும் அழைப்புக்கு குரல் கொடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் மட்டுமே வெளிநாட்டு வாழ்க்கையில் வெகுமதி. இதெல்லாம் தெரியாமல் பணம்... பணம்... என்று பணங்காச்சி மரமாக நினைக்கும் உறவுகளுக்கு தெரிவதில்லை இங்கிருக்கும் உடல்கள் உயிரை அங்கு வைத்து விட்டு வந்திருப்பது. சரியான சாப்பாடு... நல்ல துணி என்பதெல்லாம் மறந்து வாழும் வாழ்க்கைத்தான் வெளிநாட்டு வாழ்க்கை... ஊர் நினைப்போடும் உறவுகள் நினைப்போடும் வாழும் வாழ்க்கைதான் வெளிநாட்டு வாழ்க்கை... தலையணைகள் நனையும் இரவுகளில் கழியும் வாழ்க்கைதான் வெளிநாட்டு வாழ்க்கை...

வெளியில் இருந்து பார்க்க அழகான கண்ணாடி மாளிகையாகத்தான் தெரியும்... உள்ளே நுழைந்து பார்த்தால்தான் உடைந்த சில்லுகள் ஆயிரங்கதைகள் சொல்லும்.
-”பரிவை" சே.குமார்

திங்கள், 20 ஜனவரி, 2014

இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புக்களும்

சினிமா... இந்த மூன்று எழுத்து மிகப்பெரிய சக்தியாக விளங்குகிறது என்பது எந்தளவுக்கு உண்மையோ அந்தளவுக்கு சமூகத்தைச் சீரழிக்கிறது என்பதும் உண்மை. அன்றைய சினிமாக்கள் பொழுதுபோக்கு ரகத்தில் இருந்தாலும் காதலைச் சொல்லின காமத்தைச் சொல்லவில்லை... பகையைச் சொல்லின வன்முறையைச் சொல்லவில்லை.... ஆனால் இன்றோ நிலைமை வேறு.

இன்றைய சினிமா வன்முறை நிறைந்ததாகவே இருப்பது வேதனைக்குரியது. பெரும்பாலும் கதைக்களமாக வன்முறை சூழ்ந்த இடமே தேர்ந்தெடுக்கப்படுகிறது, கதைக்கு தேவையில்லை என்றாலும் கவர்ச்சி பரிமாறப்படுகிறது. அடிதடி. வெட்டுக்குத்து, டாஸ்மார்க் என்ற கலாச்சாரத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு என எல்லாவற்றையும் எப்படிச் செய்யலாம் என சொல்லிக் கொடுக்கும் களமாக சினிமா மாறியுள்ளது. பெரும்பாலான இயக்குநர்கள் நல்ல கதையோடு வந்தாலும் முதல்படம் கொடுக்கும் கசப்பான அனுபவத்தால் பத்தோடு பதினொண்ணு என்ற கணக்கில் அவர்களும் கலாச்சார சீரழிவுக்கான பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். 

எந்த ஒரு சினிமாவும் நல்லதைச் சொல்லவில்லை என்றாலும் கெட்டதைச் சொல்லாமல் இருக்கவேண்டும் அல்லவா. ஆனால் இன்றோ படம் முழுவதும் குடிப்பதையும் கூத்தடிப்பதையும் காட்டிவிட்டு முடிவில் திருந்தி குடிக்காதீர்கள் என்று சொல்வது போல் வைப்பது சிகரெட் பெட்டியின் மீது சிறிய எழுத்தில் தீங்கானது என்று எழுதி விற்பது போலவும் மதுக்கடைகளில் மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று எழுதி வைத்துவிட்டு காந்தி ஜெயந்தி அன்று கூட பின்புறமாக விற்பது போலவும்தான் இருக்கிறது.

சமுதாயம் சார்ந்த சினிமாக்களைவிட சமூகம் சார்ந்த சினிமாக்களுக்கும் காதலையும் காமத்தையும் கலந்து சொல்லும் சினிமாக்களுக்குமே இப்போது வரவேற்பு இருக்கிறது. சினிமாக் கலாச்சாரமே இன்று பெண்களை பொதுவெளி என்று கூட ஒரு நடிகனிடம் நாகரீகமற்று நடந்து கொள்ளச் சொல்கிறது. கலாச்சாரக் காவலர்கள் என்று சொல்பவர்கள் கூட படமெடுக்கிறேன் பேர்வழி என்று கலாச்சாரத்தைக் கெடுக்கிறார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு பொழுதுபோக்கு சாதனம் இப்போது நமது பொழுதைப் போக்குவதோடு மட்டுமல்லாமல் நல்லவையல்லா எல்லாவற்றையும் நெஞ்சில் விதைத்து பிஞ்சில் இருந்து பெருசு வரை பழுக்க வைக்கிறது. 

இங்கே சினிமா நாயகன் என்பவன் இறைவனாகப் பார்க்கப்படுகிறான். நாயகனுக்கு ஏதாவது ஒன்று என்றால் மொட்டை அடிக்கவும் வேல் போடும் துடிக்கும் சராசரி மனிதன் ஒரு படி மேலே போய் தலைவா உயிர் உனக்கு என்று பிதற்றிக் கொண்டு திரிவதைப் பார்த்திருக்கிறோம். இதே தனது குடும்பத்தினருக்காக என்றாவது ஒருநாள் வருந்தியிருப்பாரா என்று சிந்தித்துப் பார்த்தால் வருத்தமே மிஞ்சும்.

கெட்டதைச் சொல்லும் சினிமாக்களில் வணிக நோக்கின்றி நல்லதைச் சொல்கிறேன் என்று வரும் சினிமாக்கள் குறையக் காரணமே நாம் அவற்றை விரும்பிப் பார்க்காததுதான். இன்றைய சினிமாக்கள் அரசியல்வாதி ஆகும் ஆசையிலும் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் வகையிலும் வரும் படங்களை ஆராவாரத்துடன் நாம் ஆதரிப்பதால் சமூக மாற்றங்களைக் கொண்டு வரும் படங்கள் வருவது என்பது அபூர்வமான விஷயம்தான்.

(ரூபனின் பொங்கல் கட்டுரைப் போட்டிக்காக எழுதியது)
-'பரிவை' சே.குமார்.