மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சாண்டில்யன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாண்டில்யன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ

ருக்குச் சென்று திரும்பிய பின்னர் அங்கும் பிரச்சினைகள்... இங்கும் பிரச்சினைகள் என மனம் எதிலும் நாட்டமில்லாமல் இருந்த சூழலில் தான் பஸ் பயணத்தில் வாசிக்கும் பொருட்டு சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ நாவலை தரவிறக்கம் செய்தேன். இந்த நாவல் ஹர்ஷவர்த்தனன் எப்படி அரியணை ஏறினான் என்பதைச் சொன்னாலும் முழுக்க முழுக்க ஹர்ஷவர்த்தனனின் தங்கை ராஜ்யஸ்ரீயின் வாழ்க்கையைச் சுற்றித்தான் எழுதப்பட்டிருக்கிறது. 'கால் பங்கு சரித்திரத்தை வைத்தும் சரித்திரக்கதை எழுதலாம். முக்கால் பங்கு சரித்திரத்தை வைத்தும் சரித்திரக்கதை எழுதலாம். சரித்திரத்தோடு கதை இழைந்து ஓடுகிறதா என்பதுதான் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்' என்று தனது முன்னுரையில் திரு. சாண்டில்யன் அவர்கள் சொல்லியிருக்கிறார். உண்மைதான்... சரித்திரக்கதை என தனக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படியெல்லாம் எழுதியவர்களையும் எழுதிக் கொண்டிருப்பவர்களையும் நாம் வாசித்திருக்கிறோம் அல்லவா..? நம் வரலாற்றுப் பாடங்களில்  பல சரித்திரங்கள் மாற்றித்தானே நமக்குப் புகட்டப்பட்டிருக்கின்றன... புகட்டப்படுகின்றன. ஜான்சிராணியை நமக்குச் சொல்பவர்கள் வேலு நாச்சியாரைப் பற்றி சொல்வதில்லையே. சரி நாம ராஜ்யஸ்ரீ பின்னே போவோம்.

Image result for சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ

ராஜ்யஸ்ரீ... இவளின் வாழ்க்கையே ஒரு சரித்திரம்தான் என்பதால் கால் பங்கு... முக்கால் பங்கு எல்லாம் அவசியமில்லை... 98% சரித்திரம் பேசும் கதையில் 2% மட்டுமே சுவைக்காக உப்பு, உரைப்பு சேர்த்திருப்பதாகவும் முன்னுரையில் சொல்லிவிடுகிறார் ஆசிரியர். மேலும்  வடபுலச் சக்கரவர்த்தி ஹர்ஷனுடைய அவையிலிருந்த பாணபட்டன் இயற்றிய ஹர்ஷ சரித்திரத்தில் ராஜ்யஸ்ரீயின் இன்பமும் துன்பமும் கலந்தே எழுதியிருப்பதாகவும் 'சரித்திர அமைப்புக்கள்' ஆசிரியர் வின்செண்ட் ஸ்மித் அவர்கள்  எழுதிய இந்தியாவின் புராதன வரலாற்றில் விரிவாக எழுதப்பட்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

ராஜ்யஸ்ரீ கதை என்ன?

தானேசுவரத்தின் அரசன் பிரபாகரவர்த்தனன்... இவர் 'ஹூணர்களாகிய மான்களுக்கு சிங்கம்' என அழைக்கப்பட்டவர். பட்டத்துராணி யசோவதி, இவர்களுக்கு ராஜ்யவர்த்தனன், ஹர்ஷவர்த்தனன் மற்றும் ராஜ்யஸ்ரீ என மூன்று மக்கள். மூத்தவன் இமயமலைப் பக்கம் போருக்குச் சென்றிருக்கிறான். இளையவன் ஹர்ஷன் வாள் சுழற்றுவதில் வீரன் என்றால் இன்னும் பருவம் அடையாத ராஜ்யஸ்ரீயும் வாள் போர் புரிவதில் கில்லாடி. மன்னுக்கு மகள் மீது அலாதிப் பிரியம். அப்பாக்களுக்கு மகள்கள் மீதுதானே அதிகப் பிரியம் இருக்கும். இதில் மகாராஜா  மட்டும் விதிவிலக்கா என்ன..? 

மகாவீரனான மஹாசேனகுப்தன் மகன் தேவகுப்தன், ராஜ்யஸ்ரீயை பெண் கேட்டு வருகிறான்... மன்னரோ தன் மகளுக்கு இப்போது திருமணம் சாத்தியமில்லை என்று காரணங்களை அடுக்க, யோசித்துப் பதில் சொல்லுங்கள் என்று பிடித்த பிடியாய் நிற்கும் தேவகுப்தனை, அரண்மனையில் தங்கி செல்லச் சொல்லி அவனுக்கு ராஜ உபச்சாரம் செய்யச் சொல்கிறார். அன்று இரவு நந்தவனத்து வாவிக்கரையில் உட்கார்ந்து பாடிக்கொண்டிருக்கும் ராஜ்யஸ்ரீயைப் பார்த்து அவளுடன் வம்பு செய்ய, அங்கு வரும் ஹர்ஷன் அவனை தூக்கி தண்ணியில் போட்டு விடுகிறான். அதன் பிறகு இருவரும் வாட்பயிற்சிக் கூடத்தில் மோதுவது என முடிவு செய்கிறார்கள். அதன்படி வாட்பயிற்சி கூடத்தில் வாட் போர் ஆரம்பமாக அங்கும் தேவகுப்தனுடன் மோதுவது ஹர்ஷன் அல்ல... தான் யார் என்ற அடையாளத்தை மறைத்து அவனுடன் மோதி ஜெயிப்பது ஒரு பெண்.. அதுதான் ராஜ்யஸ்ரீ... பெண்ணால் ஏற்பட்ட அவமானத்தால் அவனுக்குள் வன்மம் முளை விடுகிறது.

அந்த சமயத்தில் மகாமந்திரி கன்னோசி அரசகுமாரன் வந்திருப்பதாகச் சொல்கிறார். அவரை அழைத்து வரச் சொல்ல, சென்று திரும்பிய மகாமந்திரி ஆளைக் காணோம் என வருகிறார். அப்போது தேவகுப்தன் உப்பரிகையில் ராஜ்யஸ்ரீயின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் கன்னோசியின் அரசன் கிருகவர்மனைக் காட்டி கேவலமாகப் பேசுகிறான். தன் தங்கை ஒரு ஆடவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஹர்ஷனுக்கு கோபம் வருகிறது. மன்னரோ கோபப்படாமல் அவனை அழைத்து வரச் சொல்லிப் பேசுகிறார். அப்போதுதான் கிருகவர்மன் தங்கைக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என்பது  ஹர்ஷனுக்குத் தெரிய வருகிறது. பருவம் அடையாத பெண்ணை உடனே கல்யாணம் பண்ணித் தர முடியாது என்பதை மறைமுகமாச் சொல்லி அவனை இரவு தங்கிச் செல்லச் சொல்ல, அவனோ தேவகுப்தனைப் போல் இரவில் வாவிக்கரையில் ராஜ்யஸ்ரீயைச் சந்திக்கிறான். இந்த இடத்தில் சாண்டியல் எப்படி எழுதியிருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா... மனிதர் அடித்து ஆடியிருக்கிறார்.. இந்த சந்திப்பின் முடிவில் ராஜ்யஸ்ரீ பருவம் அடைகிறாள்.

பருவம் அடைந்த பெண்ணை உடனே கட்டி வைக்க முடியாது என்று மகாராணி யசோவதி சொல்ல, காதலைவிட காமம் தலைக்கேறிய கிருகவர்மனுக்கு மாமியார் துரியோதனி ஆகிறாள். பருவம் அடையும் முன்னரே கிருகவர்மனின் சேட்டைகளால் சொக்கிய ராஜ்யஸ்ரீக்கோ தங்கள் திருமணத்தை தள்ளிப்போட அம்மா செய்யும் முயற்சிகளைக் கண்டு அவள் மீது கோபம் வருகிறது. கன்னோசி செல்லும்முன் கிருகவர்மன் விரைவில் ராஜ்யஸ்ரீயை மணமுடிக்கும் முகமாக தானேசுவர அரண்மனை சோசியருக்கு பொற்காசுகளைக் கொடுத்து கல்யாணத்தை சீக்கிரம் வைப்பதுதான் அரச குடும்பத்துக்கு நல்லது என பொய் சொல்ல வைக்கிறான். மகாராணிக்கு இதில் விருப்பம் இல்லை.

அரண்மனை நிகழ்வுகளால் திருமணம் தள்ளிப் போவதை விரும்பாத ராஜ்யஸ்ரீ தன்னை உடனே திருமணம் செய்ய வரும்படி ஓலை அனுப்ப நினைக்கிறாள். அதை யாரிடம் கொடுத்துவிடுவது என்று யோசனையில் ஆழ்ந்திருக்கும் போது ஆபத்தாந்தவனாக வருகிறான் தனது மாமன் பண்டியிடம் வாள் பயிற்சி கற்றுக்கொள்பவனும் தேவகுப்தனின் தம்பியுமான மாதவகுப்தன். அவனிடம் ஓலை கொடுத்த விவரம் மகாராணிக்குத் தெரிய, பண்டி அவனைச் சிறை செய்கிறான். மகாராஜா தப்ப வைக்கிறார். இமயமலைப் பக்கம் போருக்குச் சென்ற மூத்தவனும் வெற்றியுடன் திரும்புகிறான்.

ஓலை கிடைத்த பின்னர் கிருகவர்மனால் அனுப்பப்பட்ட அவனது அரண்மனை சோசியரும், தானேசுவர அரண்மனைச் சோசியரும் திருமணத்தை உடனே நடத்த முயற்சிகள் எடுக்க, அரண்மனையில் தங்கும் கன்னோசி சோசியருக்கு நான்கு பேரிடம் இருந்து அழைப்பு வந்து அதன் காரணமாக நாலு ஓலைகளை கன்னோசிக்கு அனுப்புகிறார் உடனே புறப்பட்டு வாருங்கள் என்ற தனது ஐந்தாவது ஓலையையும் அதனுடன் இணைத்து...

கன்னோசி வரும் கிருகவர்மன் ராஜ்யஸ்ரீயை சந்தித்தல்... மாமியார் மாப்பிள்ளை பிரச்சினைகள்... எல்லாம் முடிந்து மாப்பிள்ளை அழைப்பின் போது யானைக்கு மதம் பிடித்து ஓட, அதை அடக்கி கிருகவர்மனைக் காப்பாற்றும் ஹர்ஷக்க்கு யானை மதம் பிடித்து ஒடவில்லை... அதன் மீது விரிக்கப்பட்ட பட்டுத்துணிக்குள் ஆணிகள் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவர, அதற்கு காரணமான தேவகுப்தனைக் கொல்ல நினைக்கிறான். ஆனால் பண்டியோ இருவரையும் மோதவிட்டு தேவகுப்தனை தோற்கடித்து ஊருக்கு அனுப்பி வைக்கிறார். முதலில் அவனுள் விழுந்த வன்ம விதை வளர்ந்து விருட்சமாகிறது,

ராஜ்யஸ்ரீ திருமணத்துக்குப் பின் நிறைய மாற்றங்கள்... மகளின் பிரிவால் தானேசுவர மன்னனுக்கு உடல் நலம் பாதிக்கிறது. கிருகவர்மனோ மனைவி மோகத்தில் அந்தப்புரத்தில் கிடந்து அரசைக் கவனிக்க மறக்கிறான். தேவகுப்தன் தனது நண்பனான கௌட நாட்டு சசாங்கனுடன் இணைந்து ராஜ்யஸ்ரீயை பலி வாங்க கிருகவர்மனை அழிக்க நினைக்கிறான். ஹூணர்கள் மீண்டும் எல்லைப் புரத்தில் பிரச்சினை செய்வதாய் செய்தி வர, கன்னோசியைக் காக்க யாராவது ஒரு மகன் போகவேண்டும் என்ற மன்னரின் விருப்பம் நிறைவேறாமல் அண்ணன் தம்பி இருவரும் இமயமலைச் சாரலுக்கு படையுடன் விரைகிறார்கள். அடிவாரம் சென்றது அண்ணன் தம்பியை தன் பெற்றோரை பாதுகாப்பும் பொருட்டு அங்கு தங்கியிருக்கும்படியும் ஏதேனும் ஓலை வந்தால் எனக்குத் தெரிவி என்று சொல்லிவிட்டுச் செல்கிறான்.

விதி விளையாடுகிறது... மன்னன் பிரபாகவர்த்தனன் உயிருக்குப் போராட, மகன்களுக்கு ஓலை போகிறது... ஹர்ஷன் மட்டுமே வருகிறான். மன்னர் இறக்கிறார்... மகாராணி உடன்கட்டை ஏறுகிறாள்.  போர் முடித்து வெற்றியுடன் திரும்பும் ராஜ்யவர்த்தனனை பெற்றோரின் இழப்பு மிகவும் பாதிக்கிறது. தம்பியை அரசாளச் சொல்லி  துறவியாக நினைக்கிறேன். அந்தச் சமயத்தில் வஞ்சகமாக வேட்டைக்கு அழைக்கப்பட்ட கிருகவர்மன் கொலை செய்யப்பட்டு ராஜ்யஸ்ரீ சிறையில் அடைக்கப்பட்ட செய்தி கிடைக்க, தங்கையைக் காக்கவும் மைத்துனனைக் கொன்றவர்களைப் பலி வாங்கவும் படையுடன் கிளம்பும் ராஜ்யவர்த்தனன், சசாங்கனின் குள்ளநரித்தனத்தால் வஞ்சகமாகக் கொல்லப்பட, கோபத்துடன் தேவகுப்தனைத் தேடி ஹர்ஷன் கிளம்புகிறான்.

சிறையில் அடைபட்ட ராஜ்யஸ்ரீ தப்பித்தாளா..? அவளை யார் காப்பாற்றினார்...? ஹர்ஷவர்த்தனன் தேவகுப்தனையும் சசாங்கனையும் பலி வாங்கினானா...? தானேசுவரம் யாரால் ஆளப்பட்டது...? கன்னோசி என்ன ஆனது...? என்பதை விறுவிறுப்புடன் தனக்கே உரிய வர்ணனைகளை தூக்கலாகப் பரிமாறிக் கொடுத்திருக்கிறார் சாண்டில்யன்.

மக்களுக்காக... மக்கள் நலனுக்காக நாங்கள் பேசுகிறோம் என தீவிர பேச்சு வார்த்தை நடத்துபவர்கள் மத்தியில் நாம் வாழ, நம் முன்னோரான... நம்மை ஆண்ட அரசர்கள் எல்லாருமே உண்மையிலேயே மக்களுக்காக வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். மகள் போகும்போது ஸ்ரீதேவியே போச்சு என்று ஒரு சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம்... இங்கு மன்னனும் மகள் செல்லும் போது இந்த வார்த்தையைச் சொல்ல அதன் பின் பிரச்சினைகளை மட்டுமே சுமக்கிறது தானேசுவரம். மனைவியின் அழகில் மயங்கி, காமமே வாழ்வெனக் கிடக்கும் மன்னனால் ஒரு நாடு பாதிக்கப்படுகிறது.

மன்னன் வயதானாலும் மகாராணியிடம் கொஞ்சுவது சுவராஸ்யம்.. மன்னனின் இடக்கு மடக்கான பேச்சுக்கள் ரசிக்க வைக்கிறது. தங்கைக்கு மாப்பிள்ளை நிச்சயம் பண்ணியிருப்பது அண்ணன்களுக்கு தெரியாமல் இருப்பது சாத்தியமா என்ற கேள்வி எழலாம். 

ராஜ்யஸ்ரீயில் வர்ணனைகளில் கலக்கியிருக்கிறார் சாண்டில்யன். கடல்புறா, ஜலதீபம், கன்னித்தீவு போன்றெல்லாம் இல்லை என்றாலும் போரடிக்காமல் வாசிக்க முடிகிறது.

அப்புறம் கில்லர்ஜி அண்ணா, ஸ்ரீராம் அண்ணா, வெங்கட் நாகராஜ் அண்ணா உள்ளிட்ட பலருக்கு கருத்து இட்டேன்... ஆனால் கருத்துக்கள் அவர்கள் தளங்களுக்குச் செல்லவில்லை... என் கணிப்பொறியில் ஏதோ பிரச்சினையா... அல்லது வலைப்பூவில் ஏதேனும் பிரச்சினையா தெரியலை... துரை செல்வராஜூ ஐயாவின் கதைக்கு (கேட்டு வாங்கிப் போடும் ஸ்ரீராம் அண்ணா) நீண்ட கருத்துப் போட்டேன். அதுவும் போகவில்லை போலும்... என்ன செய்வது..:(

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கடல் ராணி

ரபிக் கடலில் கொள்ளையரின் அட்டூழியத்தை ஒழித்த வரலாற்று நிகழ்வை சாண்டில்யன் அவர்கள் 'கடல் ராணி' ஆக்கித் தந்திருக்கிறார். பெரும்பாலும் அவரின் புனைவுகள் எல்லாமே ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மையமாக வைத்து நகர்த்தப்பட்டிருக்கும் என்பதை நாம் அறிவோம். வரலாற்று உண்மையைக் கையில் எடுப்பவர்கள் முழுக்க முழுக்க வரலாற்றைச் சொன்னாலும் அதிக வாசகர்களை இழுப்பது சிரமம்... அதுவும் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் எழுதும் போது அவர்களின் விற்பனையைப் பெருக்கும் விதமாக, வாசகர்களை ஈர்க்கும் உக்தி தொடர் எழுத்தாளனிடம் இருக்க வேண்டும் என்பதைத்தான் பத்திரிக்கை ஆசிரியர் விரும்புவார் என்பதால் இவரின் கதைகளில் வரலாறு ஊறுகாயாக வைக்கப்பட்டு அதிலிருந்து கற்பனை, நாயகிகளின் வர்ணனைகளுடன் பக்கம் பக்கமாய் விரியும். 

புதினங்கள் அதிகம் கற்பனை பேசுவது வரலாற்றின் உண்மையை உடைத்து ஒரு பொய்ப்பிம்பத்தை நம் கண் முன்னே காட்டிவிடுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இது வரலாற்றை முடமாக்கும் செயல் என்றாலும் இப்படியான ஒரு வரலாற்று நிகழ்வு நடந்திருக்கிறதே என்று அறிவது வருத்தத்திலும் கொஞ்சம் சந்தோஷமே..   வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்றதும் சிவாஜி ஞாபகத்தில் வந்தாலும் வெள்ளையரை எதிர்த்த கட்டப்பொம்மனையும் அறிய முடிந்தது அல்லவா..?.  எழுத்தாளர்கள் வரலாற்றுப் புதினங்களை எழுதியதால்தான் கொஞ்சம் வரலாற்றையும் நம்மால் அறிய முடிந்தது...  என்ற உண்மையும் புலப்படுகிறது. இல்லையேல் நம்மில் பலர் பல வரலாறுகளை அறியாமலே இருந்திருப்போம் அல்லவா...?

கடல் ராணிக்கான முன்னுரையிலேயே இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் நூற்றுக்கு நூறு சரித்திரத்தில் நடந்தவை என்றும் கதாபாத்திரங்கள் கூட தான் சிருஷ்டித்த கடல்ராணி, சாரு, ஆனந்த் தவிர்த்து இந்த சரித்திரம் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்களே என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் இதைக் குறித்த தீவிர தேடுதலில் எப்பேர்ப்பட்ட பரம்பரையில் பாரதம் வந்திருக்கிறது. எத்தகைய அமானுஷ்ய நிகழ்ச்சிகள் அரபிக்கடலில் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அறிந்து பிரமித்துப் போனேன் என்றும் சிவாஜி மகாராஜாவால் உருவாக்கப்பட்ட அற்புதமான கடல் சூழ் கோட்டை சிந்து துர்க்கம், இதை நிர்மாணிக்கும் போது சத்ரபதி சிவாஜி அவர்கள் மற்ற கூலியாட்களுடன் இணைந்து தானும் மண்ணும் கல்லும் சுமந்ததை அறிந்து வியந்ததையும் நம் வரலாற்றில் எத்தனை எத்தனையோ பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன என்று சிந்திக்கும் போது இத்தனையும் சாதித்த சமுதாயம் இன்றைக்கு இருக்கும் நிலை குறித்து 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற பாரதியின் தீர்க்க தரிசன வாக்கியம் எத்தனை உண்மையானது என்பது புலனாகிறது என்றும் சொல்லியிருக்கிறார்.

Image result for கடல் ராணி

சிந்து துர்க்கம் மற்றும் பாண்டவர் கோட்டின் ராணியாக இருக்கிறாள் கடல் கொள்ளைக்காரியான கடல் ராணி (ரத்னா). அவளைக் கொல்லத் துடிக்கும் பலரில் ஆங்கில கொள்ளைக்கார குழுவும் ஒன்று. கடல் ராணி கடலில் நீந்துவதில் அலாதி பிரியம் கொண்டவள். மலைப்பாறையின் மறைவுக்குப் பின்னே ஒரு சரிவில் இருக்கும் பாழடைந்த கட்டிடத்தில் தன் உடைகளை வைத்து விட்டு நீந்தி மகிழ்வாள். அப்படி ஒருநாள் நீந்தி மகிழ்ந்து உடை மாற்றச் செல்லும்  போது ஒரு தூங்கமூஞ்சியைச் சந்திக்கிறாள். அவனுடன் கோபமாக பேசிக் கொண்டிருக்கும் போது ராணியைக் கடத்த வரும் பிரிட்டிஷ் கேப்டன் ஸ்டாண்டனும் லெப்டினென்ட் சுமித்தும் அந்த தூங்குமூஞ்சி வாலிபனின் புயல்வேக துப்பாக்கிக் குண்டுகளின் தாக்குதலால் தங்கள் துப்பாக்கிகள் பறக்க சரணடைகிறார்கள். அப்போது ஸ்டாண்டனின் கையில் காயம் ஏற்படுகிறது. ராணியைக் காப்பாற்ற துப்பாக்கியால் சுட்ட தூங்க மூஞ்சி மிகச் சிறந்த வீரன் என்பதை ராணி உணர்கிறாள்... அவன் வேறு யாருமல்ல... ஒரு காலத்தில் கடல் கொள்ளையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து, பின்னர் பேஷ்வா பாலாஜிக்கு உதவ அரபிக்கடலில் பல போர்களை நிகழ்த்திய கனோஜி ஆங்க்ரேயின் பிரதான தளபதி ருத்ராஜி ஆனந்தின் தம்பியும்... அவரின் மகன் துலாஜி ஆங்க்ரேயின் நெருங்கிய நண்பனுமான இந்திரஜித் ஆனந்த். 

ஆங்கிலேயர்களுடன் ஆனந்தும் ராணியுமாக பாண்டவர் கோட் நோக்கி பயணிக்க, அவர்களை கடலில் மறிக்கிறான் மிகச் சிறந்த கடல் வீரன் என்று அறியப்பட்ட எட்வர்ட் இங்க்லேண்ட், அவனையும் தன் சாதூரியத்தால் மயக்கிவிடுகிறான் ஆனந்த், கரைக்குச் சென்றதும் இங்க்லேண்டை தான் தங்கியிருந்த விடுதி அறைக்கு அழைத்துச் செல்ல, அங்கு கூர்மையான அறிவுடையவனும் கடல் கொள்ளையில் பிரசித்தி பெற்றவனுமான, அங்கு மரக்கால் பொறுத்தப்பட்ட ஸில்வர்  இருக்கிறான். ஆனந்த் ஸில்வரை காப்பாற்றியவன் என்பதால் ஸில்வருக்கு அவன் மீது பாசம். ஸில்வரிடம் ஒரு கிளி இருக்கிறது. அது தூதும் செல்லும் சில நேரங்களில் அபாயத்தையும் கொடுக்கும். ஸில்வரோ ஆனந்த் தங்களுக்கு உதவுவான் என்று இங்க்லேண்டிடம் சொல்ல அவன் அதில் ஏதோ சதியிருப்பதாக சந்தேகிக்கிறான்.

இங்க்லேண்ட் 380 பீரங்கிகளைத் தாங்கிய மிகப் பிரபலமான ஆங்கிலேயக் கப்பலான காஸண்ட்ராவில் வந்திருப்பதாக ஸில்வரிடம் சொல்கிறான். சிந்து துவர்கத்துக்குள் எந்தக் கப்பலுக்கும் அனுமதியில்லை என்பதால் சிந்து துவர்க்கத்துக்கு வெளியே நிறுத்தியிருப்பதாகச் சொல்கிறான். அதன் பின்னான நிகழ்வுகள், ஆனந்தின் நண்பன் துலாஜி ஆங்க்ரேயின் வருகை, கடற் கொள்ளையர்கள் ஆனந்த் மீது கொள்ளும் நம்பிக்கை ஆரம்பத்தில் தன் மகளைக் காதலிப்பதுடன் விதவிதமாக திட்டம் தீட்டும் ஆனந்தைப் பிடிக்காத ராணியின் தந்தை சங்கர் பந்த் மனம் மாறி உதவி செய்ய, ஆங்கில கடற்கொள்ளையரை அடியோடு ஒழிக்க திட்டம் வகுத்து அதைச் செயல்படுத்துகிறான் ஆனந்த்.

கடற்கொள்ளையரை ஒழிக்கிறேன் என ஒருமுறை தோல்வியடைந்தாலும் மீண்டும் கங்கணம் கட்டி வரும் ஆங்கிலேயன் மாக்ரே,  நாணயங்கள் மற்றும் நகைகளுடன் வருவதாய் ஆசைகாட்டி கொள்ளையடிப்பதில் மூன்றில் ஒரு பங்கு எங்களுக்கு மற்றது உங்களுக்கு என்று ஸில்வர், இங்க்லேண்ட் மற்றும் டெய்லரிடம் சொல்கிறான் ஆனந்த். இது கொள்ளையரை மொத்தமாக அழிக்க உருவாக்கும் திட்டம் என்பதையும் இதில் தாங்களும் அழிக்கப்படுவோம் என்பதையும் ஸில்வர் உணர்ந்தாலும் மற்றவர்கள் உணரவில்லை. அவன் பேச்சையும் யாரும் கேட்பதாய் இல்லை. 

மாக்ரேயை ஒழிக்க அவர்கள் எடுக்கும் முயற்சியில் வேறு கப்பல்கள் நுழையாத சிந்து துர்க்கத்துக்குள் காஸண்ட்ராவை நிறுத்த ராணி சம்மதிக்கிறாள். அதன் பின்னான சிந்து துர்க்கம், பாண்டவர் கோட்டில் நடக்கும் நிகழ்வுகள், சிவாஜி சிலைக்கு பூஜை, ஆனந்தின் திட்டங்கள், கடல்ராணியுடனான ஆனந்த்தின் காதல், துலாஜி ஆனந்தின் பலே திட்டங்கள் என கதை பரபரவென நகர்கிறது.

சிந்து துர்க்கத்தில் ஒரு நாடகத்தை நிகழ்த்தி, யாரும் அறியாமல் அங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்த கனோஜி ஆங்க்ரேயின் பிரசித்தி பெற்ற கடல் கோட்டையான விஜய துர்க்கத்துக்கு வந்த ஆனந்த், மலை அடிவாரம் செல்லாமல் மலையுச்சியில் இருக்கும் குடிசைக்குச் செல்கிறான். அங்கு இருக்கிறாள் வேவுக்காரியும் பேஷ்வாவின் மருமகளுமான சாரு. சாருக்கு ஆனந்த் மீது காதல்... ஆனால் ஆனந்தின் அணைப்பில் ஆனந்தமில்லாததை அறிந்து அவன் வேறு யாரிடமோ மனதை பறிகொடுத்துவிட்டான் என்பதை உணர்ந்து சண்டையிடுகிறாள். அப்போது அங்கு வரும் பேஷ்வா, இருவரையும் சமாதானம் செய்ய முயன்று தோற்கிறார். குடிபோதையில் கனோஜியும் வருகிறார்... பேஷ்வா வரும் நாளில் அதிகாலை குடிசை வாசலில் மதுக்குப்பியை வைப்பது நானே என்று சொல்லும் கனோஜி,  மூவரையும் விருந்துக்கு அழைக்கிறார்.

விருந்துக்குச் செல்லுமிடத்தில் மாக்ரேயின் சந்திப்பு, கனோஜியின் திட்டத்தால் சாரு கடல்ராணியாக மாற, கடற்கொள்ளையரை ஒழிக்கும் பேச்சு நடக்கிறது. கடல் ராணியின் திடீர் வருகையால் மாக்ரே தவிர மற்றவர்கள் திகைக்க, கனோஜியின் சமயோகிதத்தாலும்  நிலமையைப் புரிந்து கொண்ட ரத்னாவின் மதியாலும் அவள் சாருவாக மாறுகிறாள். கடல் கொள்ளையரை ஒழிக்க மாக்ரேயுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். மறுநாள் அதில் ராணி கையொப்பம் இடுகிறாள். 

ஒருவனுக்கு ஒருத்தியே மிகப்பெரிய பிரச்சினை... அப்படியிருக்க இருவர் என்றால்..? சாருவும் ராணியும் அடிக்கடி அடிதடியில் இறங்க, ஆனந்த் சிக்கித் தவிக்கிறான். பின்னர் இருவரையும் அழைத்துக் கொண்டு சிந்து துர்க்கம் வருகிறான். மீண்டும் ஆலோசனை.... எப்படி மாக்ரேயை எதிர்ப்பதென திட்டங்கள்.. ஆனந்த் தூங்குமூஞ்சியாய் அமர்ந்து திட்டம் தீட்டி மெல்ல மெல்ல காய் நகர்த்துகிறான் நண்பன் துலாஜியின் துணையுடன்... 

மால்வானீஸ் வீரர்கள் மற்றும் கொங்காணி மாலுமிகள் உதவியுடன் ஸித்திக் கப்பலைக் கொள்ளை இட்டதுடன் தான் நடத்தி வந்த கப்பலை கடல் ராணிக்கு பரிசளிப்பதற்காக அதன் பக்கப் பலகையிலும் பாய்மரச் சீலையிலும் 'கடல் ராணி' என எழுதச் செய்து ராணிக்கு கொடுக்க வரும் கடல் போரில் வீரனும் பிரஞ்சுக்காரனுமான ஆலிவர் லா பூஷே எனப்படும் லிவாஸியரும் ஆனந்துடன் இணைகிறான். 

ஐந்து கப்பலுடன் காஸண்ட்ராவை மீட்க வருகிறேன் என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாக்ரே, கவர்னர் பூனைச் சந்தித்து தன் திட்டத்தை விளக்கி பத்துக் கப்பலுடன் செல்வதாகச் சொல்லி, முதல் நாள் ஐந்து கப்பலுடன் தான் கிளம்புவதாகவும் மற்ற ஐந்து கப்பல்கள் அடுத்த நாள் கிளம்பி வரட்டும் என்றும் சொல்கிறான். காஸண்ட்ரா, கடல்ராணி மற்றும் கடல் ராணியின் ஐந்து சிறிய கப்பல்களும் போருக்கு தயாராய் நிற்கின்றன.

தேவ்காட் (சில இடங்களில் தேவகோட்டை என்று எழுதியிருக்கிறார்... அட நம்மூரு) கோட்டையில் ஒரு இரவு தங்கி, அங்கு வேடன் விடுதியில் தங்கியிருக்கும் துலாஜியைச் சந்தித்து தமது அடுத்த திட்டத்தை விளக்குகிறான் ஆனந்த். அங்கு துப்பறிய வந்த ஸ்டாண்டனும் சுமித்தும் இவர்களின் திட்டத்தை அறிய விடாமல் திசை மாற்றப்படுகிறார்கள். மாக்ரேயை சந்திக்கும் இடமாக பூர்ணகட் முடிவாக, அதன் துறைமுகத்துக்குள் காஸண்ட்ராவை நிற்க வைத்து, அதற்கு சற்றே தள்ளி கடல் ராணி  மற்றும் மற்ற ஐந்து கப்பல்களும் நிறுத்தப்பட, காஸண்ட்ரா சிறைப்பறவையாய் மாறியது.  அதை ஸில்வர் எடுத்துச் சொல்லியும் மற்றவர்கள் கேட்கவில்லை.

அடுத்த நாள் போர்... கடல் போர்.... வரலாற்றையே மாற்றிய கடல் போர்... கடல் ராணியை ரத்னா வழி நடத்த, சாரு சுக்கான் பிடிக்க. மாக்ரேயை மட்டுமின்றி காஸண்ட்ராவையும் தாக்க ஆரம்பித்தான் ஆனந்த். 380 பீரங்கிகளைக் கொண்ட காஸண்ட்ரா, தனது அடிப்பகுதியில் பிடித்திருந்த பாசத்தின் காரணமாக வேகத்தை இழந்திருந்ததே அதற்கு எமனானது. 

காஸண்ட்ராவை ஆனந்த தாக்க ஆரம்பித்ததால் போர் திசை மாறியதா..? ஸில்வர், இங்க்லேண்ட், ஸ்டாண்ட் மற்றும் சுமித் நிலை என்ன..? மாக்ரே திட்டம் வென்றதா..? லா பூஷே ஆனந்துக்கு எந்தளவுக்கு உதவினார்..? கடல் கொள்ளையர்கள் மொத்தமாக அழிந்தார்களா..? ரத்னா, சாரு இருவரின் சண்டைக்கு முடிவு வந்ததா..? ஆனந்த் காதல் ராணிகளை மணந்தானா..? என்பதை எல்லாம் இங்கு சொன்னால் கதையை வாசிக்கும் போது சுவராஸ்யம் இருக்காது... எனவே மேலே இருக்கும் கேள்விகளுக்கான பதில்களை 'கடல் ராணி'யை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பின்னுரையில் அரபிக்கடல் போருக்குப் பின்னான வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லியிருக்கிறார். கடல் ராணி கண்டிப்பாக படிக்க வேண்டிய புதினம்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 14 மார்ச், 2017

மனசு பேசுகிறது : நாக தீபம்

Image result for நாக தீபம்

சனி, 4 மார்ச், 2017

மனசு பேசுகிறது : சாண்டில்யனின் சேரன் செல்வி

ன்னி மாடம் குறித்தான பகிர்வை 'சாண்டில்யனின் நாவல்களில் இரண்டு நாயகிகள்...அவர்களைப் பற்றிய வர்ணனைகள் சற்று கூடுதலாக இருக்கும்' என்று ஆரம்பித்திருந்ததைப் பற்றி மதிப்புக்குரிய இராய. செல்லப்பா ஐயா அவர்கள் தனது கருத்தில் 'சாண்டில்யனை சாண்டில்யனாக்கியதே இந்த வர்ணனைகள்தானே' என்று சொல்லியிருந்தார். ஐயா சொல்லியது உண்மையே... கதையின் பயணத்தில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் நாயகிகளை வர்ணிக்கத் தவறுவதில்லை அவர். கதை முழுவதும் ஆங்காங்கே நாயகிகளை வர்ணித்தாலும் ஒரு இடத்தில் சொன்ன அழகின் வர்ணிப்புக்கள் அடுத்த இடத்தில் இருக்காது என்பதே அவரின் மிகத் தெளிவான எழுத்தின் வெற்றி என்பதோடு இன்றும் சாண்டில்யனை வாசகர்கள் மத்தியில் நிலை நிறுத்தியும் வைத்திருக்கிறது. சேரன் செல்வியில் இளமதியை கடற்கரையில் ஆரம்பித்து இறுதி வரை கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவரின் பார்வையிலும் நாயகனின் பார்வையிலுமாக வர்ணித்திருப்பார். 

Image result for சேரன் செல்வி

சேரன் செல்வி...

சோழ, பாண்டியர்களின் கதைகளை அதிகம் எழுதியிருக்கும் சாண்டில்யன், சேரர்களின் வரலாற்றை முழு அடிப்படையாகக் கொண்டு எழுதிய முதல் நாவல் இது என்று தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். நாமும் சேர,சோழ, பாண்டியர்கள் என்று சொன்னாலும் சோழனுக்கும் பாண்டியனுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை சேரர்களுக்கு கொடுப்பதில்லை. இந்தப் புதினம் முழுக்க முழுக்க சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரனின் தீரச் செயலைப் பேசும் கதை. சேர, சோழர்கள் தமிழைக் காக்க வேண்டும், தமிழர்களைக் காக்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்று சொல்லும் வரலாறுகள் 'சங்கம் வைத்து தமிழ்' வளர்த்த பாண்டியர்கள் மட்டுமே சிங்களவனை தமிழகத்தில் ஆட்சி புரிய வைத்ததார்கள் என்றும் மேலும் வடக்கில் இருந்து வந்த முகமதியருக்கும் பாண்டியர்களே சிவப்புக் கம்பளம் விரித்தார்கள் என்றும் சொல்கின்றன். இது என்ன விந்தை என்று தெரியவில்லை... தெரிந்த வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுங்களேன்.

சரி விஷயத்துக்கு வருவோம்...

பாண்டியர்களின் தயாதிச் சண்டையில்... இதுதான் மற்றவர்கள் உள்புக மிகப்பெரிய காரணமாய் இருந்திருக்கிறது. இன்னைக்கு வரைக்கும் நாம பங்காளிச் சண்டைதானே போடுறோம்... அதுனாலதான் மீத்தேனும், ஹைட்ரோ கார்பனும்... இல்லை தாமிரபரணியில் நீரை உறிஞ்சினாலும் அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத்துக்கு தகுந்தவாறு பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இராஜராஜன் பரம்பரை, வேலு நாச்சியா பரம்பரை, மருது சகோதர்கள் பரம்பரை, கட்டப்பொம்மன் பரம்பரையின்னு நாம ஆளாளுக்கு சாதிக்கு சலங்கை கட்டி ஆடவிட்டு அதன் விளைவுகளை ஆழ்ந்து ரசித்து வருகிறோம். இதைத்தான் அன்று அவர்களும் செய்திருக்கிறார்கள். சேர,சோழ, பாண்டியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால்... அதான் செயல்படலையே இனி ஆண்டு முடிச்சிட்டுப் போனவங்களைப் பற்றி பேசி என்னாகப் போகுது. நம்ம இராஜராஜ சோழன் (இப்படிச் சொல்லக்கூட இப்ப யோசிக்கணும்... ஏன்னா உலகையே ஆண்ட தமிழன் என்ற நிலை போய் அவரும் சாதீய அமைப்புக்குள் போயாச்சு)  அவரின் துணைவியார் மகாராணி லோகமாதேவியின் சிலைகள் தஞ்சைக் கோவிலில் இருந்த வரலாறு இருப்பதாக படித்தேன். ஆனால் அவை தஞ்சையில் களவாடப்பட்டு குஜராத்தில் ஒரு மியூசியத்தில் இருக்கின்றனவாம். அதனை மீட்டு வர முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன... ஆனாலும் இன்னும் காலம் கனியவில்லை... 

இப்படித்தான் எதாவது எழுதப் போயி எங்காவது போயிருது மனசு. சரி சேரன் செல்வி இளமதி பின்னால போகலாம் வாங்க.

பாண்டியரின் தயாதிச் சண்டையை சாதகமாக்கி தமிழகத்தை நாசம் செய்து கொள்ளையடித்துச் சென்ற மாலிக்கபூருக்குப் பின் மீண்டும் அத்தகையதொரு நிலை ஏற்பட இருந்த சமயத்தில் வீரபாண்டியனையும், சுந்தரபாண்டியனையும் வென்று, காஞ்சி வரை சென்று தமிழகத்தையும் ஹிந்து தர்மத்தையும் பாதுகாத்து,  தென்னிந்தியாவின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டான் சேரன் ரவிவர்மன் என்பது வரலாறு. இந்த வரலாற்றுச் சான்றுகள் காஞ்சி அருளாளப் பெருமாள் கோவிலிலும் பூந்தமல்லி பெருமாள் கோவிலிலும் இருக்கும் சாசனங்களில் இருப்பதாகவும் மேலும் ரவிவர்மன், சிறந்த வீரன் மட்டுமல்ல பெரிய கவி என்பதற்கும் 'பிரத்யும்னாப்யுதயம்' என்ற நாடகத்தை எழுதியவன் என்பதற்கும் ரவிவர்மனின் அவையில் இருந்த கவிபூஷணன், சமுத்திரகுப்தன் என்ற கவிகளைப் பற்றியும் சான்றுகள் இருப்பதாக சாண்டில்யன் அவர்கள் தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார். இவற்றை எல்லாம் வைத்து மாலிக்கபூர், அமீர் குஸ்ரூ ஆகியோர் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் விளைவித்த கஷ்டங்களையும் இணைத்து இந்த 'சேரன் செல்வி'யைப் புணைந்திருக்கிறார்.

ரவிவர்மனின் மகள் இளமதி கடற்கரையில் நடந்து செல்லும் போது அவளின் அழகை வர்ணிப்பதில் ஆரம்பிக்கிறது கதை. இதுவரை நான் வாசித்த கதைகளில் சாண்டில்யனின் பெரும்பாலான கதைகள் கடற்கரையில்தான் ஆரம்பிக்கின்றன. அப்படி நடந்து செல்லும் போது அடிகளாரால் அனுப்பப்பட்ட பாண்டிய வீரன் இளவழுதியைச் சந்திக்கிறாள். வழக்கம்போல் இருவருக்கும் மோதல்... அவன் இளமதியைக் காண வந்திருப்பதாகச் சொல்ல, தான் இன்னாரெனச் சொல்லாமல் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று திட்டிவாசல் வழியே உள்ளே போ என்று சொல்லிச் செல்கிறாள். அதன் வழி செல்ல, வீரர்களால் மடக்கப்பட, அவர்களுடன் லேசான சண்டையிட்டு உள்புகுந்து நந்தவனத்துக்குள் புகுந்து கொள்கிறான். பின்னர் ரவிவர்மன் அவனைப் பார்த்து அழைத்து வந்து இளமதியிடமே ஒப்படைக்க, அப்போதுதான் அவள் இளவரசி என்பதை அறிகிறான். வரலாற்று நாயகர்களுக்கே உரிய கண்டதும் காதல் அவனுக்கு வர, இரவில் அவள் வீணை இசைத்துப் பாடக்கேட்டு நந்தவனத்துக்குள் போகிறான். அங்கு மாலிக்கபூரின் ஒற்றன் அம்ஜத்கானை, ஸலீம் என்ற பெயரில் சந்திக்கிறான். மன்னன் ரவிவர்மனை ஏமாற்றி, நாடகமாடி அவரின் நண்பனாய் அரண்மனைக்குள்ளும் வந்து செல்லும் ஸலீம் என்னும் அம்ஜத்கான், தன்னைப் பற்றி மன்னருக்கு அக்குவேர் ஆணிவேராகத் தெரியும் என்பதை அறியவில்லை. அவனின் திட்டங்களை இளவழுதியிடம் சொல்லி அவனின் அழைப்பை ஏற்று அவன் சொல்கிறபடி நடப்பதாய் நாடகமாடச் சொல்கிறார்.

பின்னர் ஸலீமுடன் நட்பாகி, இளமதியுடன் காதலில் கசிந்துருகி, யாருக்கும் தெரியாமல் ரவிவர்மன் ஆற்றுக்கு உள்புறம் இருக்கும் காட்டில் பயிற்சி அளிக்கும் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை (இளவழுதி யானைப் படையை அதிகம் விரும்பாததால் அதை நடத்தும் பொறுப்பு இளமதி மற்றும் அடிகள் வசம் போரின் போது அளிக்கப்படுகிறது) எல்லாவற்றிற்கும் படைத்தலைவன் ஆகிறான். அவனின் உபதளபதி ஆகிறான் சேரன் தளபதி பலபத்ரன்... காட்டுக்குள் படை வைத்திருப்பதை அறிந்த அம்ஜத்கான் (ஸலீம்) தந்திரமாக இளவழுதியை சிறைப் பிடித்து, இளமதியை மிரட்டி, படைப் பலத்தை காணச் செல்கிறான். இப்படி நடக்கும் என்பதை முன்பே ஊகித்து அவனுக்கு போக்குக் காட்ட திட்டமிடுவதே இளவழுதிதான் என்பதை அம்ஜத்கான் அப்போதும் அறியவில்லை. சிறையிலிருந்து மன்னனால் மீட்கப்படும் இளவழுதி, தரைப்படை, காலாற்படையில் ஒரு பகுதியை மதுரை நோக்கி கிளப்பிச் செல்ல, அடுத்த இரண்டு நாளில் அடிகளும் இளமதியும் யானைப்படைகளுடன் புறப்பட, அதன் பின்னர் ரவிவர்மன் புறப்படுகிறான். மூவரும் மதுரையை நோக்கி வேறு வேறு பாதையில்.

பலபத்ரனிடம் நாளை மாலைக்குள் நான் திரும்பவில்லை என்றால் நீ படையை நடத்திச் செல் மதுரையில் சந்திப்போம் என இளமதி வளர்த்த குதிரையும் தற்போது இளவழுதியின் தோழனாய் அவனைச் சுமக்கும் ராஜாவில் கிளம்பி, ஸலீமைத் தேடிச் செல்லும் இடத்தில் இளமதியை எதிர்பாராமல் சந்திக்க அங்கு வந்து அவர்களைச் சிறை பிடித்துச் செல்கிறான் மாலிக்கபூருக்கு அடுத்தபடியாக நவாப் அலாவுதீன் கில்ஜிக்கு நெருக்கமானவனும் நுட்பமான அறிவு படைத்தவனுமான குஸ்ரூகான், அவன் படைத்தளத்தில் இவர்களை சிறை வைக்கும் இடத்தில் அஜ்மல்கானும் சிறை வைக்கப்பட்டிருக்கிறான். ஒரு நாளுக்குப் பிறகு இளமதியை மட்டும் சிறையிலிருந்து அனுப்பி அவளைப் பின் தொடர்ந்து விபரம் அறிய அவளுடன் இரு வீரர்களை அனுப்புவதுடன் அஜ்மல்கானையும் அனுப்புகிறான் குஸ்ரூ. இளமதி தந்தை இருக்குமிடம் என்று தெரியாமல் மதுரைக்கு அருகே இருக்கும் பழைய பாண்டியன் கோட்டைக்குச் செல்ல, அங்கு அவளுக்கு முன்னே வந்த அஜ்மல்கான், ரவிவர்மனிடம் மாட்டிச் சித்ரவதை அனுபவிக்கிறான்.

அதன் பின்னான பரபர நிகழ்வுகள், மதுரைப் போரில் வீர பாண்டியன் தோல்வியை ஒத்துக்கொள்ள, அவனிடம் சில உதவிகள் எதிர்ப்பார்ப்போடு மதுரைக்குள் நுழைய மாட்டேன்... உன் தோல்வியை மக்கள் மத்தியில் சொல்லி மார்தட்டிக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிறான் ரவிவர்மன். அதற்கு காரணமும் இருக்கிறது. அந்தக் காரணம் வீரபாண்டியனின் மனைவி சேரமன்னனின் மூத்த மகளான நிலமங்கை. அவள் முதலில் தன் தந்தை தனது கணவனை தோற்கடித்து மதுரையை கைப்பற்ற நினைக்கிறார் என்று நினைப்பதால் அவர் மீது கோபமாய் இருக்க, ரவிவர்மனோ மதுரையில் வெற்றி விழா எதுவும் கொண்டாடக்கூடாது எனவும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடப் போறேன் என்று சொல்லும் அடிகளாரிடம் நாம் மதுரைக்குள் வருவதில்லை என்று வீரபாண்டியனிடம் சொல்லியிருக்கிறோம். காஞ்சியில் வெற்றி பெற்றுத் திரும்பியதும் மீனாட்சியைக் கும்பிடலாம் என்று சொல்லிவிட்டார் என்பதை அறிந்ததும் காஞ்சிக்குச் செல்லும் தந்தையை வழியனுப்ப கணவனுடன் வருகிறாள்.

வீரபாண்டியனின் அண்ணனான சுந்தரபாண்டியனை எதிர்க்க வீரதவளப் பட்டிணத்துக்கு இளமதியுடன் செல்லும் இளவழுதியிடம் சமாதானக்கொடி காட்டி, அவனை வரவழைத்து கத்தியால் குத்திவிடுகிறார்கள். இருப்பினும் இளமதி சுந்தரபாண்டியன் படைகளை சிதறடித்து வெற்றி வாகை சூடுகிறாள். உயிருக்கு போராட்டமான நிலையில் கவிபூஷணன்  அவர்களின் பாசறைக்கு வந்து அவன் உயிரைக் காப்பாற்றுகிறான். இளவழுதி தலைமை ஏற்ற படை என்னானது என்பது தெரியாமலேயே ரவிவர்மன் மற்ற படைகளுடன் குஸ்ரூகான், அஜ்மல்கானிடம் காஞ்சியில் மோத, ஒரு கட்டத்தில் அவர்களிடம் மாட்டிக் கொள்ளும் சூழல் வர, இளவழுதியின் படை சூறாவளியாய் புகுந்து துவம்சம் செய்து வெற்றி பெறுகிறது. பெரும் தோல்வியினால் போர் முடிந்த அடுத்த நாள் குஸ்ரூகான் தில்லிக்குத் திரும்ப, சிறைப்பட்ட அஜ்மல்கான் மன்னருக்கு வேகவதி நதிக்கரையில் நடந்த வீராபிஷேகத்தை முன்னிட்டு விடுவிக்கப்படுகிறான்.

பெருமாளுக்கு எழுதி வைக்கப்பட்ட இளமதியை பெருமாள்தான் சொந்தம் கொள்ள வேண்டும் என்று ஆரம்பம் முதலே சமுத்திரகுப்தன் சொல்லி வருகிறான். அவனுக்கு இளவழுதி - இளமதி காதலில் விருப்பம் இல்லை. போர் முடிந்து பேரரசனாக முடி சூட்டிய பின்னர் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளிடம் தன் மகளை ஒப்படைக்கிறார். அப்போது கவிபூஷணன், கற்பூர ஆரத்தி காட்டி இருவருக்கும் பொருத்தம் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல , பொருத்தம் இருப்பதால் இறைவனுக்கு சொந்தமான இளமதியை, அவனின் பிரசாதமாக இளவழுதிக்கு அளித்திருக்கிறான் என்றும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பெருமாள் பெயரை வைக்க வேண்டும் என்று சொல்ல, காஞ்சியை பாதுகாப்பை இளவழுதியிடம் கொடுத்து சேரநாடு திரும்புகிறான் ரவிவர்மன்.  பாதுகாப்பு ஏற்பாடுகளை முடித்து விட்டு இரண்டு நாளில் பாண்டிய நாட்டிற்குச் செல்கிறோம் என்று அடிகள் சொல்ல, அது சேர நாட்டுக்குள் அடக்கம் என்று சிரிக்கிறான் ரவிவர்மன். அப்போது அடிகளோ 'பாண்டியர் என்றும் அடங்காத சாதி' என்று சொல்ல, சாதியை விட்டுட்டு தமிழர் என்ற ஒரே சாதியை நினைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்' என்று சொல்லிச் செல்கிறான். நாம எங்கே தமிழர்ன்னு சொல்றோம்... இன்றும் சாதிக்குள்தான் சாய்ந்து கிடக்கிறோம்.

சேரன் செல்வி - மிக விறுவிறுப்பாய் நகரும் கதை... வாசிக்க ஆரம்பித்தால் முழுவதும் முடித்துவிட்டுத்தான் வைக்கத் தோன்றும்.

-'பரிவை' சே.குமார்.

சனி, 25 பிப்ரவரி, 2017

மனசு பேசுகிறது : கன்னி மாடம்

சாண்டில்யனின் கதைகளில் இரண்டு நாயகிகள்... அவர்களைப் பற்றிய வர்ணனைகள் சற்று கூடுதலாகவே இருக்கும். இவற்றை சற்றே தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால் ஒரு வரலாற்று நிகழ்வை சான்றுகளுடன் எடுத்துச் சொல்லி அதில் உண்மையான கதாபாத்திரங்களுடன் அவரின் கற்பனைக் கதாபாத்திரங்களை உலவச் செய்து அருமையான நடையில் கதையை நகர்த்தி போர்க்களக்காட்சிகளை  நம் கண் முன்னே நிறுத்தி வாசித்து முடிக்கும் போதும் நம் மனசுக்கு ஒரு நிறைவைக் கொடுக்கும் விதமாக எழுதியிருப்பார். அந்த நிறைவுதான் அவரின் நாவல்களை தொடர்ந்து வாசிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.
Image result for கன்னி மாடம்
கன்னி மாடத்தின் கதை நடந்தது பனிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்... பாண்டியர்களுக்குள் தயாதி சண்டை ஏற்பட்டு பாண்டிய நாடு இரண்டாகப் பிரிந்து இது இரண்டு தலைமுறைகளைப் பாதித்து நீண்ட காலம் நீடித்தது. நெல்லையில் குலசேகர பாண்டியனும் மதுரையில் பராக்கிரம பாண்டியனும் ஆண்டு வந்தனர். அவர்களின் தயாதி சண்டை, ஒரு கட்டத்தில் போரில் வந்து நிற்க, குலசேகரன் பராக்கிரமன் மீது படை எடுத்தான். பராக்கிரமனோ தன்னையும் நாட்டையும் காத்துக் கொள்ள சிங்களத்து உதவியை நாடினான்.  இலங்காபுரி அரசன் அனுப்பிய இலங்காபுர தண்டநாயகன் தலைமையிலான படை வந்து சேருமுன்னர் பராக்கிரமனை கொன்று மதுரையைப் பிடித்தான் குலசேகரன், அவனிடமிருந்து தப்பியோடினான் பராக்கிரமனின் மைந்தன் வீரபாண்டியன். தண்டநாயகனோ குலசேகரனை வென்று மதுரையை தன்வசமாக்கி வீரபாண்டியனை அரியணையில் ஏற்றி வைத்ததுடன் அவனை வைத்தே பாண்டிய நாட்டை சிங்களத்தின் ஒரு பகுதியாக்கிக் கொள்ளத் திட்டமிட்டான். அதனால் மக்களைத் துன்புறுத்தி, பயிர் பச்சையை அழித்து, தமிழர்களை சிறைப் பிடித்து சிங்களத்துக்கு வேலைக்கு அனுப்பியதுடன் இலங்கை நாணயத்தை பாண்டிய நாட்டில் புழங்க வைத்தான்.
குலசேகரனோ சோழர்களின் உதவியை நாடினான்... ராஜராஜன், ராஜேந்திரன் காலங்களில் இலங்கை மட்டுமல்ல பல தேசங்களை தங்கள் வசம் வைத்திருந்த வீரம் நிறைந்த, கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த, தமிழகம் மூவேந்தர்களால் பிளவுபட்டுக் கிடக்கக் கூடாது என்று நினைத்த சோழ சாம்ராஜ்யத்தின் அப்போதைய அரசனாக் இரண்டாம் இராஜாதிராஜன், அவனுக்கு உதவவும் சிங்களத்தின் பிடியில் இருந்து தமிழர்களைக் காக்கவும் தமிழகத்தில் நுழைந்து ஆட்டம் போடும் சிங்களத்தின் கொட்டத்தை அடக்கவும் நினைத்தான். அதற்காக பல்லவராயன் சகோதர்களான தனது முதன் மந்திரி மற்றும் படைத்தலைவன் இருவரையும் நியமித்தான். அவர்கள் இலங்காபுர தண்டநாயகனை வென்று தமிழகத்தையும் தமிழர்களையும் எப்படிக் காத்தார்கள் என்ற வரலாறு இலங்கையின் இராஜபரம்பரை நூலான மஹாவம்சத்திலும் தமிழ்நாட்டு சாசனங்களிலும் காணப்படுவதாகவும். மேலும் நீலகண்ட சாஸ்திரியார் சோழர்களைப் பற்றிய தனது சரித்திரப் புத்தகத்தில் தெளிவாக எழுதி இருப்பதாகவும் தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார் சாண்டில்யன்.
இந்த சரித்திர பின்னணியை களமாக்கி அதில் பெரும்பாலான வரலாற்றுப் பாத்திரங்களுடன் அபராஜிதன், கார்குழலி, சிங்களத்துப் பைங்கிளி, அடிகளார் என சில கற்பனைப்  பாத்திரங்களை உலவ விட்டு கதை சமைத்திருக்கிறார் சாண்டில்யன். அவர் சமைத்த கதை மிகவும் விறுவிறுப்பாய், வாசிக்கும் ஆவலைத் தூண்டும் விதமாய் இருந்தது என்பது உண்மையே... 
கன்னி மாடம் என்பது அரண்மனைப் பெண்டிர்கள் தங்கியிருக்கும் ஒரு இடம். அங்கு ஆண்கள் செல்லக்கூடாது என்ற சட்டம் உண்டு. அதை மீறினால் அவர்களின் தலை துண்டிக்கப்படும் என்பதாய் சொல்லப்படுகிறது. பாண்டிய நாட்டு எல்லைக்கருகில் மழவராயன் என்னும் சிற்றரசன் பழைய கோட்டையை பழுது பார்த்து வைத்திருக்கிறான். அந்தக் கோட்டையை கன்னி மாடம் என்ற பெயரில் பாண்டியர்களுடன் போர் வந்தாலும் பயன்படுத்தும் விதமாக மிகவும் பாதுகாப்பானதாக, தீடீர் போர் ஏற்பட்டாலும் உள்ளிருப்பவர்களை விரைவில் அணுக முடியாத வண்ணம் யாரும் அறியாத சுரங்கப்பாதை வசதியுடன் அமைத்திருப்பதுடன் அங்கு தம் மகள் கார்குழலியை அவளை சிறுவயதில் இருந்து பார்த்துக் கொள்ளும் அடிகளாரின் பாதுகாப்புடன் தங்கவைத்திருக்கிறான்.
வீரபாண்டியன் சிங்களத்துப் பைங்கிளியின் மயக்கத்தில் கிடங்க, இலங்காபுர தண்ட நாயகனோ தமிழர்களை அடிமைப்படுத்தி, துன்புறுத்தி வருகிறான். இவர்களிடம் இருந்து நாட்டை மீட்க, ரகசியமாய் கூடுகிறார்கள் நிஷதராஜன், வங்கார முத்தரையர், கருணாகரத் தேவன் மற்றும் காரி... இவர்களின் இந்த ரகசிய பேச்சில் முக்கியமானவனாகவும் அவனால்தான் முடியும் என்றும் நம்பும் மனிதனாக வீரபாண்டியனின் உறவினனும் மதுரையின் சேனாதிபதியுமான அபராஜிதன் இருக்க, ரகசிய இடத்துக்கு வரும்  அபராஜிதனோ வீரபாண்டியனை எதிர்க்க மறுக்கிறான். மக்கள் நலனுக்காக என்று சொல்லி, அவர்கள் உண்மையை விளக்க, சம்மதிக்கலாமா வேண்டாமா என்ற குழப்ப நிலையில் விவாதிக்கும் போது குதிரைகள் வரும் குளம்பொலி கேட்கிறது.
அவர்களைத் தேடி தண்டநாயகனின் வீரர்கள் அந்த ரகசிய இடம் வர, கருணாகரத் தேவன் தவிர மற்றவர்கள் தப்பியோடி... சண்டை இட்டு... காட்டுக்குள் இருந்து வெளியாக நிஷதராஜனும் முத்தரையரும் மாட்டிக் கொள்ள அபராஜிதனுக்கு ஏற்பட்ட வேல்காயத்துடன் அவனும் காரியும் மழவ நாட்டு எல்லையில் இருக்கும் படை வீரர் கூடாரம் வர, அது இலங்காபுரனின் தலைமையில் தங்கியிருக்கும் பாண்டியர் படை என்பதையும் அங்கு தண்டநாயகனுடன் சிங்களத்துப் பைங்கிளியான மாதவியும் இருக்கிறாள் என்பதையும் அறிகிறார்கள். மாதவியின் சூழ்ச்சியில் வீழாமல் அங்கிருந்து தப்பி, கன்னிமாடத்தின் முன்னே இருக்கும் காட்டில் வந்து ஓய்வெடுக்க, கார்குழலி மற்றும் அடிகளாரால் பார்க்கப்பட்டு... அபராஜிதனை அடிகளார் யாரென அறிந்து கொண்டாலும் அவன் சொல்லக்கூடாது என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க கார்குழலிக்கு யாரெனச் சொல்லாமல் மறைத்து விடுகிறார். கார்குழலியே அபராஜிதனுக்கு சிகிச்சை அளித்து யாருக்கும் தெரியாமல் கன்னி மாடத்தில் தங்க வைக்கிறாள், மறுநாள் மழவராயன் அங்கு வர, குலசேகரனும் கார்குழலியை தன் மகனுக்கு கேட்டு வருகிறான். அபராஜிதனும் காரியும் யாரும் அறியாமல் அங்கிருந்து தப்பி மதுரை வர, நிஷதராஜன் மற்றும் முத்தரையர் தலைகள் வெட்டப்பட்டு கோட்டை மீது கம்பியில் சொருகப்பட்டு கழுகுகள் கொத்தித் தின்று கொண்டிருப்பதைக் கண்டு திகைக்கின்றனர்.
பின்னர் நடக்கும் நிகழ்வுகளில் மாதவி அபராஜிதனை மயக்கப் பார்க்க, வீரபாண்டியன் கார்குழலியை திருமணம் செய்து கொள்ள விரும்பி அபராஜிதனை தூதுவனாக்க நினைக்க, அவனோ மனசுக்குள் கார்குழலியை மது, மாது என்றிருக்கும் இவனுக்கு மணமுடிப்பதா என்று தவிக்கிறான். ஆனாலும் பாண்டிய நாட்டை சிங்களவர் பிடியில் இருந்து காக்கவும், தமிழர்களைக் காக்கவும் இது அவசியமென அவனுடன் வாதாடும் கருணாகரத் தேவன், அதற்கான ஓலையுடன் சென்று காரியத்தை முடித்து வர, மழவராயன் அரண்மனைக்குச் செல்லும் வீரபாண்டியன், கார்குழலி அழகில் மயங்கி மது போதையில் அவளிடம் தகராறு செய்ய, அடிகளார் அந்த நேரத்தில் வந்து காக்க, கார்குழலி மணமோ குலசேகரன் மகனையோ வீரபாண்டியனையோ நினைக்காமல் அபராஜிதனை நினைக்கிறது. கார்குழலி காதலிக்கிறாள் என்று அடிகளார் சொல்லும் ஒரு பொய்யால் அவர் வீரபாண்டியனால் துன்புறுத்தப்பட்டு, பொறுக்க முடியாமல் அவள் காதலிப்பது அபராஜிதனை என்று சொல்லிவிட, மாதவி, கார்குழலி என இருவரையும் மயக்கிவிட்டானே என்ற கோபத்தீயில் அபராஜிதனை நாடு கடத்துகிறான் வீரபாண்டியன். அத்துடன் தன்னைச் சந்திக்க வந்த அண்ணன் பல்லவராயனிடம் சோழர்களுடன் போருக்கு அழைப்பும் விடுத்து விடுகிறான்.
நாடு கடத்தப்பட்ட அபராஜிதன், மழவநாடு செல்ல, அந்த சமயத்தில் குலசேகரன் மகன் விக்கிரம பாண்டியன் அடிகளாரின் ஆணைக்கிணங்க கள்ளுக்கடையான் எனப்படும் மார்க்கீயன் உதவியுடன் கார்குழலியை கன்னி மாடத்துக்கு கடத்திச் செல்கிறான். அவளைக் காக்க அங்கு வருகிறான் அபராஜிதன், அவளைக் கொண்டு செல்ல போர் கோலம் பூணுகிறான் வீரபாண்டியன். அபராஜிதன் தான் யார் என்று சொல்லாமலே கன்னி மாடத்தை தன் கைப்பிடிக்குள் கொண்டு வருவதுடன் கார்குழலியுடனான காதலும் இறுக்கமாக, விக்கிரம பாண்டியனுக்குள் நெருப்பு மூள்கிறது. அந்த நெருப்பு தனக்கு எதிரியானாலும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் வீரபாண்டியனுக்கு உதவ, அதை எப்படி அபராஜிதன் உடைத்து கன்னி மாடத்தையும் கார்குழலியையும் காத்து வீரபாண்டியனை புறமுதுகிட்டு ஓட வைக்கிறான் என்பதை விரிவாய் சொல்லி, அதன் பின்னர் அபராஜிதனுடன் அண்ணன் பல்லவராயன் வந்து இணைய, காரி, மார்க்கீயன் மற்றும் கருணாகரத் தேவனின் உதவியுடன் இலங்காபுரனையும் இலங்கையில் இருந்து வரும் மற்றொரு படைத்தலைவனான ஜகத்விஜயனையும் தனது தந்திரத்தால் தோற்கடித்து தலைகளை வெட்டி கோட்டையில் சொருகி தன் நண்பர்களான நிஷத ராஜனையும் முத்தரையரையும் கொன்றதற்கு பலி தீர்த்துக் கொள்கிறான். சிங்களத்துப் பைங்கிளியான மாதவியோ அபராஜிதனை மயக்க நினைத்து முடியாமல் போக கண்ணீருடன் மீண்டும் இலங்கைக்குச் செல்கிறாள். 
கன்னி மாட மீட்புக்குப் பிறகு இலங்கையின் தண்டநாயகன் மற்றும் படைத் தலைவனுடனான் போர், ஜகத்விஜயனை மயக்கி, தன் காரியத்தை சாதித்துக் கொள்ள நினைக்கும் மாதவி செய்யும் தந்திரங்கள், தொண்டியில் கருணாகரத் தேவன் ஜகத்விசயனை ஏமாற்றி சிறை செய்வது, பொன்னமராவதியில் எழும் புரட்சி என மற்றொரு கதைக்களத்துக்குள் பயணித்த அனுபவத்தைக் கொடுத்து என்றால் மிகையில்லை.  மதுரை குலசேகரன் கைக்கு வந்ததும் அபராஜிதனை விட்டு மழவராயன் இறப்புக்குப் பிறகு அந்த சிற்றரசை ஆட்சி செய்து வரும் கார்குழலியிடமிருந்து மழவநாட்டைப் பெற்று சோழர்கள் வசம் கொடுக்கச் சொல்கிறார் பல்லவராயன், அவன் மறுக்க சிறை செய்யப்படுகிறான். கருணாகரத் தேவர் கார்குழலியிடம் தூது செல்ல, தன் காதலுக்காக நாட்டை விட்டுக் கொடுத்து காதலனைச் சிறை மீட்கிறாள் கார்குழலி. அவர்களின் திருமணம் பல்லவராயர்கள் தலைமையில் மதுரையில் சிறப்பாக நடக்க, கன்னி மாடத்தை சீதனமாக கார்குழலியிடம் கொடுத்துவிடுகிறார் பல்லவராயர்.
இந்த நாவலுக்குப் பின்னர் சேரன் செல்வி வாசித்தேன்... அதிலும் ஒரு வீரபாண்டியன்... கன்னி மாட வீரபாண்டியன் சிங்களவனுக்கு இடமளித்தான் என்றால் சேரன் செல்வி வீரபாண்டியனோ முகமதியர் தமிழகத்தில் காலூன்ற உதவி செய்கிறான். அவனை எதிர்த்து முகமதியரின் தமிழக காலூன்றலையும் தடுக்கின்றான் சேரன் ரவிவர்ம குலசேகரன். பெரும்பாலான கதைகளில் வீரபாண்டியன் என்றே வருவதும் அவனது செயல்கள் மாறி மாறி இருப்பதுமே குழப்பம்... சரி விடுங்க... வேறு வேறு வீர பாண்டியர்களாக இருப்பார்களோ என்னவோ.... எது எப்படியோ கன்னி மாடம் படிக்க படிக்க ஆவலைத் தூண்டும் கதை என்றால் சேரன் செல்வி கீழே வைக்க விடாமல் படிக்க வைத்தது. அது குறித்து மற்றுமொரு பகிர்வில்...
-'பரிவை' சே.குமார்.

சனி, 28 ஜனவரி, 2017

மனசு பேசுகிறது : ராஜமுத்திரையில் சோழன் கனவு

ண்பன் தமிழ்வாசியுடன் முகப்புத்தகத்தில் இணைந்து இன்று மூன்றாம் வருடமாம்... அதற்கு முன்னரே வலைச்சரம் மூலமாக எங்கள் நட்பு ஆரம்பித்திருந்தது... ஆனாலும் வந்தியத்தேவனை வாசிக்க வைத்த போதுதான் இன்னும் இறுக்கமானது. அவர் நிறைய புதினங்களை வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பி, முகநூலில் பேசி, வாசித்த புதினத்தைப் பற்றி முகநூலில் கிறுக்கி, அங்கு தினேஷ், நிஷா அக்கா, கணேஷ்பாலா அண்ணன் எனக் கூடி விவாதித்து இப்படியாக நம்மை நிறைய வாசிக்க வைத்தார் என்று சொல்வது மிகப்பெரிய சந்தோஷம்.

Image result for ராஜமுத்திரை

பல நேரங்களில் மனச்சுமைக்கு மருந்தாய் இந்த வாசிப்பு இருந்திருக்கிறது... இப்பவும் இருக்கிறது. சில பல காரணிகளால் மிகுந்த சோர்வு, எழுத்தில் நாட்டமில்லாத மனம், சல்லிக்கட்டு போராட்டம் என கடந்த சில வாரங்கள் கடந்தாலும் பேருந்தில் அலுவலகம் செல்லும் போதும் திரும்பி வரும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து சாண்டில்யனின் ராஜமுத்திரையை வாசித்து முடித்து அதன் பின் கல்கியின் குமாரர் எழுதிய ரவிகுலதிலகன் வாசித்து தற்போது விக்கிரமனின் சோழ இளவரசன் கனவு வாசித்துக் கொண்டிருக்கிறேன்,

ராஜ முத்திரை பாண்டியர்களின் கதைக் களம்... வீரபாண்டியனுக்கும் சேரன் வீரரவிக்கும் நடக்கும் பிரச்சினைகளே கதைக்களம்...  இதில் மதுரை மன்னனும் வீரபாண்டியனின் அண்ணனுமான ஜடாவர்மன் சாதாரண மன்னனாக சேரனின் முன் நின்று சக்கரவர்த்தியாக திரும்புவதாய் கதை சுபம் பெறுகிறது. அவரின் மகள் முத்துக்குமரியை கடத்திச் சென்று சிறை வைக்கிறான் வீரரவி, முத்தை மட்டுமல்ல முத்துக் குமாரியையும் கவர்வதே அவனுக்கு எமனாகிறது. இலங்கை மன்னன் வீரரவிக்கு உதவியாய் இருக்கிறான் என்ற போதிலும் அவனின் மைந்தனும் இளவரசனுமான இந்திரபானு  வீரபாண்டியனின் மீது கொண்ட பற்றுதலால் அவனின் படைத்தளபதியாய் பயணித்து முத்துக்குமரியை காதலித்து அவளுக்காக சேரநாட்டில் பரதப்பட்டன் என்னும் துறவி (வீரரவி மதிக்கும் குரு) உதவியால் முகம் மாற்றி... வேவு பார்த்து...  சிறைப்பட்டு... முத்துக்குமாரியை மீட்டு வீரபாண்டியனுக்கு போரில் உதவி பரலியைக் கைப்பற்றி, பரலியின் நிர்வாகத்தோடு முத்துக்குமரியையும் மன்னனின் அனுமதியுடன் கரம்பிடிக்கிறான்.

படைத்தலைவன் மகளாக வந்து வீரபாண்டியனுக்கு உதவப் போய் வீரரவியிடம் மாட்டி அதிலிருந்து தப்பி, வீரபாண்டியனுக்கு காதலியாய்... படைத்தலைவியாய்... மனைவியாய்... இரண்டு போரில் துணை நின்று வெற்றி பெற்றுக் கொடுத்து பரலி நோக்கிச் செல்லும் போது கர்ப்பிணியான காரணத்தால் போருக்கு வரவேண்டாம் என மீண்டும் கோட்டைக்குத் திருப்பி அனுப்புவதால் கோபம் கொண்டு தனியே குதிரையில் பயணிக்கும் இளநங்கை இறுதியில் வெற்றிவாகை சூடிவரும் கணவனுடன் கொஞ்சி மகிழ்கிறாள். வீரபாண்டியனுக்கு இளநங்கை மற்றும் இந்திரபானு உதவியுடன் மிகப்பெரிய உதவியாய் மலைசாதிப் பெண் குறிஞ்சி இருக்கிறாள். மருத்துவம் தெரிந்த அவள் அவனுக்காக ஒற்றன் வேலை பார்க்கிறாள்.வீரரவியிடம் வேலைக்குச் சேர்ந்து ஒற்றறிகிறாள்.  எங்கே தன் கணவனைக் கொத்திப் போய் விடுவாளோ  என்று இவள் மீது இளநங்கைக்கு வெறுப்பு... இருந்தாலும் குறிஞ்சி முத்துக்குமரியின் பணிப்பெண்ணாக பரலியில் தங்கிவிட இவளுக்கு மகிழ்ச்சி.

ராஜமுத்திரை கதை மிகவும் விறுவிறுப்பாக நகரும். சாண்டியல்யனுக்கே உரிய போர்த் தந்திரக் காட்சிகள் இதிலும் அழகிய விவரணைகளுடன்... இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிகழ்வு நம்ம ஜல்லிக்கட்டு போல் செண்டு வெளிக்களியாட்டம்... இதைப்பற்றி 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணன் தனிப்பதிவே எழுதியிருந்தார். அர்த்தச் சந்திர வடிவம் கொண்ட செண்டு வெளிக்குள் வீரர்கள் குதிரையில் இறங்கி சுற்றி வந்தபடி பாண்டிய மீன் கொடியின் மீது (எதாவது இரு இலக்கு இருந்திருக்கும்... இது பாண்டியருக்கும் சேரருக்குமான மோதல் கதை என்பதால் பாண்டியக் கொடி என்று எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்) வேலெறிவார்கள்... அதில் வென்றால் பின்னர் அதன் எதிர்த்திசையில் இருக்கும் பாண்டிய முத்திரை மீது வேலெறிவார்கள். வேல் குறி தவறும் பட்சத்தில் இன்னும் சில வீரர்கள் இறங்க, தோற்றவர்களுக்கும் ஜெயித்தவர்களுக்கும் செண்டு வெளிக்குள் சண்டை போட, மாடு முட்டி ரத்தம் சிந்தும் வீரர்களை தூக்கிச் சென்று மருத்துவம் பார்ப்பது போல் இவர்களைத் தூக்கிச் சென்று மருத்துவம் பார்ப்பார்களாம்.

Image result for ரவிகுல திலகன்

ராஜமுத்திரைக்குப் பின் வாசித்தது  கல்கி இராஜேந்திரனின் ரவிகுலதிலகன், விஜயாலயச் சோழனின் வரலாற்றைப் பேசியது... பல்லவர்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்த சோழர்களின் ராஜ்ஜியத்தை பேரரசாக்க விரும்பும் இராசகேசரி குமாரங்குசன் தன் மகன் விஜயாலயனை மிகுந்த வீரம் மிக்கவனாக வளர்க்கிறான். பதின்ம வயதில் ஒரு தீ விபத்து ஏற்பட மக்களைக் காக்க அனுப்புகிறான்... விஜயாலயனின் அன்னையோ அதை எதிர்க்கிறாள்... தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் போது ஒரு சிறுமியையும் சிறுவனையும் காப்பாற்றி அவர்களின் அன்னையை காப்பாற்றச் செல்லும் போது தீயால் தாக்கப்படு தலைமுடி இழந்து ஒரு பக்க கண்ணையும் இழக்கிறான். அவனுக்கு தஞ்சையை ஆளும் முத்தரையர் மகள் உத்தமசீலி மீது ஆசை, அவளோ இவனை வெறுக்கிறாள். அந்தக் கோபம், சிற்றரசான சோழ அரசை சாம்ராஜ்யமாக மாற்ற வேண்டும் என்ற வெறி என பல்லவர்களுக்குத் தெரியாமல் வீரர்களை தயார் செய்து தஞ்சையைப் பிடிக்கிறான்... அவனுக்கு உதவியாய் காட்டுவாசிப் பெண்ணும் மருத்துவச்சியுமான குவளை இருக்கிறாள். உத்தமசீலியை கரம் பிடிக்கும் முன்னர் குறிஞ்சியை விரும்புகிறான். ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு உத்தமசீலி இறப்பதுடன் கதை முடிகிறது.

அதன் தொடர்ச்சியாய் தாத்தாவின் கனவின்படி தஞ்சையைப் பிடித்து அதில் கோட்டை கட்டி, பல்லவனுக்குப் பிடித்த மன்னனாக வாழும் விஜயாலயனின் மகன் ஆதித்தன் பல்லவர்களை எதிர்த்து தங்கள் அரசை பேரரசாக நிர்மாணிக்க முயலும் கதைத்தான் விக்கிரமன் எழுதியிருக்கும் சோழ இளவரசன் கனவு... பல்லவநாட்டைப் பற்றி நேரில் பார்த்து அறிய நண்பன் விக்கியண்ணனுடன் செல்லும் ஆதித்தனுக்கு இளங்கோபிச்சி என்னும் மனைவி இருக்கிறாள்... இருந்தும் நடனப்பெண், சிற்பி மகள், பல்லவ இளவரசி என சாண்டில்யன் கதை போல் ஒரே பெண்கள் மயம்... பல்லவ நாட்டைப் பற்றி அறிந்து அவர்கள் மீது போர்தொடுத்து ஆதித்தன் வென்றானா...? தாத்தாவின் கனவுப்படி, தந்தையின் ஆசைப்படி சோழ பேரரசை கட்டமைத்தானா...? என இப்போதுதான் ஆவலோடு வாசித்துக் கொண்டிருக்கிறேன். எனவே இன்னுமொரு பதிவில் பார்ப்போம்.

-'பரிவை' சே.குமார்,

சனி, 17 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது ; பல்லவ பீடம்

வாசிப்பின் தொடர்ச்சியாய் கனவுப் பிரியன் அண்ணன் கொண்டு வந்து கொடுத்த 'ஐந்து முதலைகளின் கதை'யை வாசித்தேன். அது குறித்தான விமர்சனத்தை இங்கு வைக்க விரும்பவில்லை... ஆனாலும் ஒன்று முன்னுக்குப் பின்னாய்... பின் நவீனத்துவம் என்று சொல்லிக் கொண்டு எழுதினால் பிரபலங்கள் ஆஹா.. ஓஹோ என்று புகழ்வார்கள் என்பதை உணர்த்திய இரண்டாவது நாவலையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்... என்னைப் போன்ற பாமரனுக்கு இதைப் போன்ற நாவல்களைப் புரிந்து படிப்பது ரொம்பச் சிரமமே... ஏன்னா எனக்கு பின் நவீனத்துவ எழுத்து அறிமுகமில்லை.... பாமர எழுத்து மட்டுமே பரிச்சயம்... பின் நவீனத் துவத்துக்குள் புகுந்து வர முடியாமல் இடையில்  அதை விடுத்து எப்பவும் போல் சாண்டில்யன் அவர்களின் வரலாற்றுப் புனைவு ஒன்றை வாசித்தேன். 234 பக்கங்களைக் கொண்ட சிறிய வரலாற்றுப் புனைவு... நிறையப் படங்களுடன் இருப்பதால் பக்கங்கள் விரைவாய் நகர்கின்றன. அதைப் பற்றித்தான் இங்கு பேசப் போகிறேன்.


பல்லவ பீடம்...

பல்லாரியில் (பல்லவபுரி) அரசாண்ட பல்லவ மன்னன் பப்பதேவனின் மகன் சிவஸ்கந்தவர்மன் தமிழகத்தில் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்த முயன்ற களபிரர்களை காஞ்சியில் வைத்து வெற்றி கொண்டதை கருவாக எடுத்து, காஞ்சி மாநகரை முதல் முதலில் ஆட்சி செய்தவன் இளந்திரையன் என்னும் மன்னன்.... அவன் ஆட்சி புரிந்த போது அமர்ந்திருந்த, பொன்னும் வைரமும் வைடூரியமும் மாணிக்கமும் பதிக்கப்பெற்ற பீடத்தை அதன் பின்னான அரசர்கள் சரிவர ஆட்சி செய்யாமல் பல்லவநாடு வலு குன்றியதால் தனது முதுமையில் பல்லவ பீடத்தை எங்கோ மறைத்து வைத்து விட்டு மறைந்து விட்டான் எனவும், அதைக் கண்டு பிடிப்பவனே இந்த நாட்டை ஆட்சி செய்வான் என்றும் அவனாலேயே பல்லவ சாம்ராஜ்யம் மலரும் என்று சொல்லி விட்டு மறைந்ததாகவும்  வதந்தி இருப்பதாக ஒரு கதாபாத்திரத்தின் மூலம் சொல்ல வைத்து பல்லவ பீடம், மாடுகள் திருட்டு, கள பிரர்களுடன் போர் என கதையை நகர்த்தியிருக்கிறார்... மிகச் சிறிய வரலாற்றுப் புனைவு இது என்றாலும் வாசிக்கும் போது வசீகரிக்கத்தான் செய்கிறது.

பப்பதேவனின் ஆணையை ஏற்று காஞ்சியில் நடக்கும் மாடு திருட்டு பற்றி அறிய வரும் பப்ப குமாரன் (சிவஸ்கந்தவர்மன்), நகருக்குள் நுழையும் முன்னரே மாடு திருட வந்த கொள்ளையரில் ஒருவனைக் கொன்ற பெண்ணைச் சந்திக்கிறான். அவள்தான் நாயகி தாமரைச் செல்வி... பின் என்ன கண்டதும் காதல்... அவளுக்கு ஒரு முறை மாப்பிள்ளை... குடிகாரன், அவனுடன் சேர்ந்து குடிக்கும் அவளின் அப்பா பெரிய மறவன் இருவரும் வர, மோதலுக்குப் பின்னர் காதலுடன் அவளிடம் இருந்து விடைபெற்று காஞ்சி செல்கிறான்.

மாடு கடத்தல் குறித்து விசாரிக்க வந்தவனுக்கு பப்பதேவன் ஆந்திராவில் இருப்பதால் காஞ்சியைப் பார்த்துக் கொள்ளும் படைத் தலைவன் அதை களப்பிரர்களுடன் சேர்ந்து கைப்பற்றத் திட்டமிடுவது தெரிய வர,  பல்லவ மன்னனுக்கு நெருக்கமான நீதிபதி நிரூபவர்மரிடம் வேலைக்குச் சேர்ந்து படைத்தளபதியுடன் மோதல், தாமரைச் செல்வியுடன் காதல் என்று இருக்கிறான். இதனிடையில் பெரிய மறவன்  மூலமாக குகைக்குள் இருக்கும் பல்லவ பீடத்தைப் போய் பார்த்து வருகிறான். அதை வெளியில் கொண்டு வர சரியான சந்தர்ப்பம் வரட்டும் என்று முடிவு செய்கிறான். பல்லவ பீடம் பற்றி பெரிய மறவனுக்கு தெரியக் காரணமே அதை அறிந்த இன்னொருவன்தான்...ஆனால் அந்த இன்னொருவன் யார் என்பது தெரியாது. குகைக்குள் இறங்கி பீடத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது அந்த இன்னொருவனால் பிரச்சினை... அதைச் சமாளிக்கும் போது பெரிய மறவனுக்கு கத்திக் குத்து விழ, அந்த இன்னொருவனைக் கண்டு பிடிக்கவும் காஞ்சியைக் காக்கவும் பெரிய மறவன் இறந்ததாக நாடகம் ஆடுகிறான்.

பின்னர் களப்பிரருடன் போர் செய்து வெற்றி பெற்று காஞ்சியைக் காப்பாற்றுகிறான்... மாடு கடத்தல் எதற்காக நடக்கிறது...? பல்லவ பீடம் குறித்து அறிந்த அந்த மற்றொரு நபர் யார்...? படைத்தலைவன் என்ன ஆனான்...? நிரூபவர்மர் வகுக்கும் திட்டங்கள் வெற்றிக்கு உதவியதா..? தாமரைச் செல்வியை மணம் முடித்தானா,..? முறை மாப்பிள்ளை என்ன ஆனான்...? பெரிய மறவன் பிழைத்துக் கொண்டானா..? இப்படி பல கேள்விகளுக்கு விடை கண்டு முடிகிறது பல்லவ பீடம்.

சாண்டில்யனின் நாவல்களில் இரண்டு நாயகிகள் வைத்து வரிஞ்சி வரிஞ்சி வசீகரிக்கும் விதமாக வர்ணனைகளை அள்ளி வீசியிருப்பார்... இதில் நாயகி ஒருத்தியே... வர்ணனைகளும் குறைவுதான்... நான் பப்பதேவனின் ஒற்றன்.. மாடு திருட்டை கண்டுபிடிக்க வந்தவன் என்று சொல்லும் போதே இவந்தான் இளவசரன் என்று நமக்குத் தெரிந்து விடுகிறது. படைத் தலைவனுக்கும் இவனுக்கும் மோதல் ஏற்படுவதும் நீதிபதியின் செய்கைகளும் யார் வில்லன் என்பதையும் புலப்படுத்தி விடுகிறது. 

சின்ன ஒரு விதையை மட்டும் வரலாற்றில் இருந்து முழுக்க முழுக்க கற்பனை கலந்து எழுதியிருக்கிறார். கற்பனைக் கதைதான் என்றாலும் வாசிப்பவர்கள் பப்பதேவனின் குமாரன் சிவஸ்கந்தவர்மனின் குதிரையின் பின்னால் பயணிக்க வைத்து விடுகிறார்... 
-'பரிவை' சே.குமார்.

சனி, 10 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : ராஜ திலகம்

வாசிப்பு அவ்வப்போது தடைபட்டாலும் சில நாட்களாக சாண்டில்யனின் ராஜ திலகம் வாசித்து முடித்தேன். சாண்டில்யன் நாவலுக்கே உரிய இரட்டை நாயகிகள்... இருவரும் வரலாற்று நாயகிகள் என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அதில் ஒரு ராணியின் பெயர் எதிலும் பொறிக்கப்படவில்லை என்றாலும் மாமல்லபுரத்தில் ராஜசிம்ம பல்லவனுடன் இரு ராணிகள் இருப்பதை வைத்து ஒரு ராணிக்கு மைவிழிச் செல்வி என்று பெயர் சூட்டியிருக்கிறார்.  இரட்டை நாயகிகள் என்றாலும் கடல்புறா, ஜலதீபத்தைவிட இதில் வர்ணனை அதிகம். இளைய பல்லவன் இரண்டு ராணிகளையும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ சந்திக்கும் இடங்களில் எல்லாம்  ரெண்டு மூணு பக்கத்துக்கு வர்ணனைகள்தான்... அதுமட்டுமில்லாமல் இரண்டு ராணிகளும் சந்தித்துப் பேசும் இடங்கள் எல்லாம் வார்த்தை விளையாட்டு வர்ணனைகள்தான்.

Image result for சாண்டில்யனின் ராஜதிலகம்

காஞ்சியை ஆண்ட பரமேஸ்வரவர்மன் அதன் சிற்பக்கலைகள் போரில் அழிந்து விடக்கூடாது என்பதற்காக சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தனிடம் காஞ்சியை விட்டுக் கொடுத்துவிட்டு வெளியேறிவிடுகிறான். அவனின் மகன் இளவரசனும் மிகச் சிறந்த சிற்பியும் ஆன இளைய பல்லவன் என்ற ராஜசிம்மனை போரில் கவனம் கொல்லாமல் மாமல்லபுரத்தில் கோவில் கட்டுவதற்கு அனுப்பியிருக்கிறார். அப்பா தலைமறைவாக இருந்தாலும் மகன் சிற்பி என்றாலும் ஒருவேளை அப்பனுடன் சேர்ந்துவிட்டால் சாளுக்கிய வெற்றி கேள்விக்குறி ஆகிவிடும் என்பதோடு அவன் போர்த் தந்திரங்களில் சிறந்தவன் என்பதால் அவனை சிறை செய்ய நினைக்கின்றார் சாளுக்கிய போர் மந்திரியான ஸ்ரீராமபுண்யவல்லபர் ஆனால் விக்கிரமாதித்தனோ அவனின் திறமை மீது மதிப்பு வைத்து இருவரும் போரில் நேருக்கு நேர் மோத வேண்டும் என்று சொல்லி கைது பண்ணும் சூழல் இருந்தும் தப்ப விடுகிறான்.

மாமல்லபுரத்தில் இருக்கும் மைவிழிச் செல்வி, இவள் அரச ஒற்றன் இந்திர வர்மனின் மகள், கடலை ரசிப்பது போல் ஓராண்டுக்கு மேலாக ராஜசிம்மனை மனதுக்குள் காதலித்து ஏங்குகிறாள். தன்னை மல்லையில் வைத்து கைது செய்ய நினைக்கும் சாளுக்கிய தளபதி வீரபாகுவிடம் இருந்து தப்பித்து காஞ்சியை மீண்டும் கைப்பற்ற நினைக்கும் இளவரசன் சூழலால் மைவிழிச் செல்வியையும் அழைத்துக் கொண்டு காஞ்சி பயணிக்கிறான். அவனுடன் அவனின் நண்பனும் சீனனுமான யாங் சிங்கும் இருக்கிறான். மைவிழிச் செல்வியையும் மற்றவர்களையும் சாளுக்கிய படைகள் தங்கியிருக்கும் இடத்தில் தங்க வைத்துவிட்டு தான் மட்டும் அரசுக்கு நெருக்கமான சாமியார்ரும், அரச குருவுமான தண்டியின் இல்லத்தில் தங்குகிறான். அங்கு கங்க நாட்டு மன்னன் பூவிக்கிரமனின் மகளான ரங்கபதாகா தேவியைப் பார்த்து அவளையும் விரும்ப ஆரம்பிக்கிறான். அந்த இடத்தில் அவனைச் சிறை வைக்கும் ஸ்ரீராமபுண்யவல்லபர் இரண்டு பெண்களையும் அங்கு தங்க வைக்கிறார்.

சாளுக்கியரின் நண்பனான கங்க மன்னன் மூலமாக விளிந்தையில் இருக்கும் பரமேஸ்வரபல்லவனை வீழ்த்த திட்டமிடும் ஸ்ரீராமபுண்யவல்லபர், அந்த இடத்துக்கு இளவரசன் செல்லக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் தண்டியின் இல்லத்தில் இருந்து சுரங்கப்பாதையில் தப்பித்துச் செல்லும் இளவரசனை சிறை பிடிக்க, அங்கிருந்தும் தப்புபவனை அங்காங்கே சிறை பிடிக்க முயன்று இறுதியில் காட்டுக்குள் இருக்கும் அரச மாளிகையில் சிறை வைக்கிறார். விளிந்தைக்கு அருகே காவிரிக் கரையோரம் கங்க மன்னனை எதிர்க்கும் ராஜா பரமேஸ்வரவர்மன், சிறிய படையால் அவனை எதிர்க்க முடியாமல் காயம் பட்டு போர்க்களத்தில் இருந்து தனது குதிரை அதிசயம் காற்பாற்றிக் கொண்டு வர தோல்வியுடன் திரும்புகிறார். அவருக்கு அங்கு வரும் கங்க மன்னன் மகள் மருத்துவம் பார்க்க மருத்துவரை அழைக்கிறாள். காட்டு மாளிகையில் இருந்து தப்பி வரும் இளவரசன் மருத்துவராய் வர, சீனன் தங்கள் நாட்டு அங்குபஞ்சர் முறையில் காயத்தை உடனே குணமாக்குகிறான்.

ரங்கபதாகா தன் தந்தையின் படையினை காவிரிக் கரையில் இருந்து இளவரசனுடன் மோதாமல் சாமர்த்தியமாக தங்கள் தலைநகர் தழைக்காட்டுக்கு கூட்டிச் சென்று விட, விக்கிரமாதித்தனுடன் நேருக்கு நேர் மோத படையைப் பெருக்கும் முகமாகவும், தங்களுக்கான பண வசதிக்காகவும் சாளுக்கிய நாட்டின் எல்லைப் பகுதியில் போர் தொடுத்து அங்கிருக்கும் கிராமங்களில் வரி விதித்து செல்வம் சேர்க்க நினைக்கும் ராஜசிம்மன், பூவிக்கிரமன் இந்தச் சண்டையின் போது நடுநிலை வகிக்க வேண்டும் என்று கேட்டு தழைக்காட்டுக்குப் போகிறான். அங்கு அவனை சம்மதிக்க வைப்பதுடன் ரங்கபதாகாவை திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் பெற்று வருகிறான்.

காட்டு வழியாக சாளுக்கியம் நோக்கி படையை நடத்திச் செல்லும் சீனன், வழியில் கங்க நாட்டு போர் வீரர்களையும் சேர்த்துக் கொள்ள படையின் பலம் கூடிவிடுகிறது. அவர்களுடன் தழைக்காட்டில் இருந்து வந்து சேர்ந்து கொள்ளும் இளவரசன் அதைப் பார்த்து கோபம் கொள்ள, சீனன் எடுத்துச் சொல்ல, கங்கநாட்டு வீரர்களை தனியாக வைக்காமல் கலந்து செல்ல வைத்து விக்கிரமாதித்தனின் மகன் விஜயாதித்தன் மற்றும் பேரனும் சிறுவனும் ஆன விநயாதித்தனை எதிர்த்து வெல்கிறான். இந்தப் போரில் விநயாதித்தனின் போர்க்குணத்தைப் பார்த்து அவனின் வீரத்தைப் பார்த்து, போர் முடிந்து நீ எனது எதிரிதான் என்று ஒரு பார்வை வீசி, குதிரையைப் பிடித்தபடி நடந்து செல்பவனைப் பார்த்து இவனைப் போல் மகன் எனக்கு பிறக்க வேண்டும் என போர்க்களத்தில் சொல்கிறான்.  அதை விக்கிரமாதித்தனிடமும் உறையூரில் சொல்கிறான். அடுத்தவனின் வீரத்தை மதிப்பதிலும் அவர்களை கொல்லக் கூடாது என்பதிலும் இருவரும் உறுதியாக இருந்தார்கள் என்று பல இடங்களில் சொல்கிறார் சாண்டில்யன்.

தெலுங்கு தேசம் சென்று பரமேஸ்வரவர்மன் படை திரட்டி வர, காஞ்சிக்கு அனுப்பப்பட்ட மைவிழிச்செல்வி தண்டியுடன் இணைந்து அங்கிருக்கும் நிலவரம் குறித்து ஓலை அனுப்ப, சோழர்களை எதிர்க்க முக்கால்வாசி படையுடன் ஸ்ரீராமபுண்யவல்லவரை காஞ்சியை ஆள வைத்துச் செல்லும் விக்கிரமாதித்தனைப் பார்க்க தானே உறையூர் செல்லும் இளவரசன், அங்கு விக்கிரமாதித்தனுடன் போர்ப்பயிற்சிக் கூடத்தில் மோதி வெல்கிறான். பாண்டியனுக்கு பல்லவர் எதிரி என்பதால் திறமைமிக்க பாண்டிய இளவரன் ரணதீரனை தங்களுக்கு உதவ ஸ்ரீராமபுண்யவல்லவர் கேட்க நினைத்து ஓலை அனுப்பியிருக்கும் வேளையில் அவனையும் உறையூரில் சந்தித்து அவனுடனும் போர் செய்து வெற்றி பெறுகிறான். அவனுடன் போர் செய்ய இளவரசன் கேட்பது விக்கிரமாதித்தனுடனான போரின் போது அவன் தந்தை உதவிக்கு வரலாம் ஆனால் ரணதீரன் வரக்கூடாது என்று கேட்டு போர் மந்திரியின் எண்ணத்துக்கு செக் வைத்து விடுகிறான். 

அதன் பின்னர் படைகளை வழி நடத்தி பெருவநல்லூர் என்னுமிடத்தில் விக்கிரமாதித்தனை நேருக்கு நேர் சந்திக்கிறான். அங்கு அவன் அமைக்கும் போர் வியூகம் விருட்சிகம்... மிகச் சிறப்பான வியூகம் அமைக்க, அதை அறிந்த சாளுக்கிய மன்னன் படையினை மூன்றாகப் பிரித்து இரண்டை காட்டுப் பகுதிக்கு அனுப்ப, அதையும் அறியும் ராஜசிம்மன், சீனன்,படைத்தளபதி பலபத்ரவர்மன் உள்ளிட்ட மிகச் சிறந்தவர்களின் உதவியுடன் தந்தையை முன்னிறுத்தி வெல்கிறான். காயம் பட்ட விக்கிரமாதித்தனை காப்பாற்றி, அவனை சாளுக்கிய நாட்டுக்கு திரும்பிச் செல்லப் பணிக்கிறான். ராஜசிம்மனை விட்டால் சாளுக்கிய பேரரசை விஸ்திகரிக்க முடியாது என்று சொல்லும் ஸ்ரீராமபுண்யவல்லபர் நிறைய சாணக்கியத்தனம் செய்தும் அதை இளவரசன் முறியடித்து வென்று காஞ்சி திரும்ப, அவனின் மணம் முழுவதும் நிறைந்திருக்கும் காஞ்சி கைலாசநாதர் மற்றும் மல்லை அரங்கன் கோவில் பணிகளைச் செய்து முடிக்க வேண்டும் என்று சொல்லி இரண்டு மோதிரங்களில் கோவில்களைப் பொறித்து ராணியரால் ராஜசிம்மனுக்கு திலகமிடச் சொல்லிவிட்டு சாளுக்கியத்துக்கு பயணிக்கிறார்.

போர் வியூகங்களையும் போர்க் காட்சிகளையும் எழுதுவதில் தான் கில்லாடி என்பதை இதிலும் ரொம்ப அழகாக எழுதியிருக்கிறார் சாண்டில்யன் அவர்கள். ஆரம்பத்தில் மாமல்லபுரத்தில் இருந்து நகரும் கதை, காஞ்சிக்கு வந்து விளிந்தைக்குள் நுழையும் வரை ரொம்ப மெதுவாகத்தான் செல்கிறது. மைவிழி, ரங்கபதாகா இவர்களுடனான காதல், அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் என சுற்றிச் சுற்றி வருவதால் கதையை வாசிப்போமா வேண்டாமா என்று நினைக்க தோன்றியது. விளிந்தைக்குள் நுழைந்ததும் கங்க தேசம் செல்வதும் பாக்குவெட்டி வியூகம் வைத்து சாளுக்கியத்தை வெல்வதும் விக்கிரமாதித்தனை உறையூரில் சென்று சந்தித்து நேருக்கு நேர் மோதி வெற்றி பெற்று அவனுக்கும் தன் போர்த் தந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து, பெருவநல்லூரில் விருட்சிக வியூகம் அமைத்து வெற்றி பெற்று காஞ்சிக்கி வரும் வரை கதை விறுவிறுன்னு நகர கீழே வைக்க மனமின்றி வாசித்து முடித்தேன்.

ராணியரின் துணையுடன் தனது தந்தையின் ஆசையை நிறைவு செய்யும் விதமாக மிகச் சிறப்பாக இரண்டு கோவில்களையும் கட்டி முடித்த ராஜசிம்மன் தனது நண்பனும் சீனனுமான யாங் சிங்கிற்காக புத்தரின் கோவில் ஒன்றையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 25 நவம்பர், 2016

மனசு பேசுகிறது : யவனராணி

வாசிப்பின் தொடர்ச்சியாய் யவனராணி வாசித்து முடித்து சில நாட்கள் ஆகிறது. அதற்குப் பிறகு எடுத்த இராஜதிலகம்  அண்ணன் ஒருவரின் கட்டுரைகளை வாசித்ததால் ஆரம்பிக்காமல் இருக்கிறது. இதேபோல் கனவுபிரியன் அண்ணாச்சி வாசிக்க கொடுத்த இரண்டு புத்தகங்களும் பக்கங்கள் திருப்பப்படாமல் அப்படியே இருக்கின்றன. முன்னெல்லாம் தினம் ஒரு பதிவு போட்டுக் கொண்டிருந்தேன். கதைகளை பதியாமல் இருப்பதால் இடைவெளி வந்தது... எங்கள் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்த பின் இடைவெளி அதிகமானது. உடல் நலமின்மையால் நீண்ட இடைவெளி விட்டது போலாகிவிட்டது. அதான் இன்று நம் இருப்பைக் காட்டும் விதமாக எழுதலாம் என உட்கார்ந்தாச்சு.

Image result for யவனராணி
வனராணி... 

சாண்டில்யன் அவர்களின் வரலாற்றுப் புதினத்துக்கே உரிய இலக்கணத்தை மீறாமல் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்கள் விரும்பும் நாயகனைச் சுற்றி நகரும் கதைக்களம்தான். திருமாவளவன்... இந்தப் பேரைக் கேட்டதும் இவரு எதுக்கு இங்க வர்றாருன்னு நினைக்காதீங்க... இது வரலாற்றில் மிகப்பெரிய அரசனாக இருந்து நமக்கு காவிரியில் கல்லணை கட்டிக் கொடுத்த சோழப்பேரரசன் கரிகாலனுங்க... கரிகாலனின் தாய் தந்தையை தூங்கும் போது மாளிகையை எரித்துக் கொன்று விட்டு ஆட்சியைப் பிடிக்கிறான் இருங்கோவேள் என்பவன். இளவரசனான திருமாவளவன் காட்டுக்குள் மறைந்து இருந்து படைகளை உருவாக்கி, வெண்ணி என்னும் இடத்தில் சேரன், பாண்டியன், மற்றும் குறுநில மன்னர்களான பல்வேறு வேளிர்களுடன் இணைந்து எதிர்த்து நிற்கும் இருங்கோவேளைக் கொன்று மீண்டும் சோழர்களின் ஆட்சியை அமைக்கிறான். அவனுக்கு பெரும் உதவியாக இருப்பது பாண்டிய நாட்டைச் சேர்ந்தவனும் சோழப் படைத்தளபதியுமான இளஞ்செழியன்.

இளஞ்செழியனைச் சுற்றித்தான் கதை... இழந்த சோழ ராஜ்ஜியத்தை மீட்டெடுக்கத் துடிக்கும் அவனுக்கு அக்கா மகள் பூவழகி மீது காதல்... இருவருக்கும் அடிக்கடி ஊடல்... அவள் நினைவோடு பூம்புகாரின் கடலோரத்தில் நடந்து செல்பவன் காலில் யவனராணி தட்டுப்படுவதில் ஆரம்பிக்கும் கதை ஆயிரத்து இருநூறு பக்கங்களுக்கு மேல் மிக அழகாகப் பயணிக்கிறது. யவனராணியோ தமிழகத்தில் யவன (கிரேக்க) அரசை நிறுவ தன் நாட்டில் இருந்து படைத்தலைவன் டைபீரியஸூடன் வந்தவள் கப்பல் விபத்துக்குள்ளாகி கரை சேர்கிறாள். யவனராணியைக் காப்பாற்றுபவன் அவளின் அழகிய பொன்னிற கூந்தலுக்கும்... கவரும் கண்களுக்கும்... வசீகர இதழுக்கும் அடிமையாகி பூவழகி நினைவால் தடுமாறுகிறான். தன்னைக் காப்பாற்றிய தமிழன்தான் தன்னை இங்கு ராணி ஆக்குவான் என்ற சோதிடத்தை நம்பும் ராணியும் தன்னை முதலில் தொட்டுத் தூக்கிய இளஞ்செழியனைக் காதலிக்கிறாள். அவனுக்காக தான் வந்த காரியத்தை மறந்து இருங்கோவேளின் சதியை முறியடிக்க உதவுகிறாள்.

இளஞ்செழியன் மீது யவனராணி காதல் கொண்டு வந்த காரியத்தை மறந்து திரிகிறாள் என்பதால் அவளை சிறை பிடித்து, இவனை மயக்க மருந்து கொடுத்து நாடு கடத்துக்கிறான். கப்பலில் பயணிக்கும் இளஞ்செழியனைத் தேடி வரும் அவனின் உபதளபதி ஹிப்பலாஸூடன் கடலில் கொள்ளையரிடம் மாட்டி, அவர்களிடம் இருந்து தப்ப சாம்பிராணி நாட்டில் இல்-யாசுவிடம் மாட்டி அங்கிருந்து அலீமா உதவியுடன் தப்பி வருகிறான். அலீமா அவனை விரும்ப, அவளிடம் தான் வேறொருத்தியை விரும்புவதாய்ச் சொல்லி, அவளை கப்பலை இயக்கும் உபதளபதியாக்கி தமிழகம் திரும்புகிறான். இந்த அலீமா யவனராணியின் தோழி, டைபீரியஸ் அவளை மகளாய் நினைத்து கடலில் கப்பலைச் செலுத்தும் பயிற்சியெல்லாம் அளித்தான் என்பதெல்லாம் கதை நகர்வில் வரும்.

தமிழகத்தில் பூவழகி தன் காதலன் இளஞ்செழியன் நினைவால் வாடுகிறாள். அவளை சிறை வைத்து திருமணம் செய்து கொள்ள இருங்கோவேள் முயற்சிக்கிறான். திருமாவளவன் தீப்பிடித்த மாளிகையில் இருந்து தப்பி வரும் போது எதிரிகளிடம் இருந்து சுவாமிகளும் இளஞ்செழியனும் காப்பாற்ற, பூவழகிதான் காயத்துக்கு மருந்து இடுகிறாள். அவள் மீது கொண்ட பாசத்தில் தன்னைக் கரிகாலன் என்று அழைக்கச் சொல்லி அவளை தங்கை ஆக்கிக் கொள்கிறான். இது நடப்பது கதையின் ஆரம்பத்தில்... இந்தப் பாசத்தில் அவளை இருங்கோவேளின் சிறையில் இருந்து தன் காதலி மற்றும் அவளின் தந்தை உதவியால் காப்பாற்றி தான் ஒளிந்திருக்கும் காட்டுக்குள் வைத்துப் பாதுகாத்து வருகிறான். 

கரிகாலனுக்கு சுவாமிகள், இளஞ்செழியனின் உப தளபதிகள் என பலர் உதவி செய்ய, அவனின் மாமா இரும்பிடத் தலையாருடன் சேர்ந்து மிகப்பெரிய படையை உருவாக்க, தமிழகம் திரும்பும் இளஞ்செழியனும் டைபீரியசிடம் தான் யார் என்று காட்டாது யவனராணியை சந்தித்து திட்டம் தீட்டி, நாகையில் படைத்தளம் அமைத்து வெண்ணிப் போருக்கு வித்திடுகிறான். வரலாற்றில் மிக முக்கியமான வெண்ணிப் போர் நிகழ்வுகளை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் சாண்டில்யன்.

பூம்புகாரில் டைபீரியஸை தன் புத்தி சாதுரியத்தால் வெல்கிறான் இளஞ்செழியன், தான் வந்த வேலை மறந்து தமிழன் பின்னால் சுற்றிய யவனராணியை டைபீரியஸ் கொல்ல, இறக்கும் தருவாயில் பூவழகியையும் இளஞ்செழியனையும் சேர்த்து வைத்து உயிரை விடுகிறாள் அழகி யவனராணி.

போர்க்காட்சிகள், காதல் காட்சிகள் என எல்லாவற்றையும் நம் கண்முன்னே நிறுத்துகிறார் சாண்டில்யன். இளஞ்செழியனின் வீரதீர செயல்களை விவரிக்கும் போதும் ஒவ்வொரு முறை அவன் திட்டம் தீட்டும் போதும் அவனின் முகத்தில் ஏற்படும் மாறுதல்கள், யவனராணி குறித்த வர்ணனைகள் என எழுத்தில் அசர அடித்திருப்பார். இளஞ்செழியனாகவே நம்மை மாற வைத்துவிடுவார்.

முக்கியமாக சொல்ல வேண்டியது ஹிப்பலாஸ் என்ற அந்த யவன உப தளபதியைத்தான்... தன் ராணி முன்னே வணங்க வேண்டியவன், தனது படைத்தலைவனும் யாரும் வெற்றிக் கொள்ள முடியாத வீரனுமான இளஞ்செழியன் மீது கொண்ட அன்பினால் அவனுடன் இருப்பதும்... அவனைத் தேடி கடலில் உடைந்த மரத்தில் பயணித்து அவனை அடைந்து யவனக் கப்பலில் மருத்துவனை கைக்குள் வைத்து காப்பாற்றி,  அவனுடன் சுறாக்கள் நிறைந்த நீருக்குள் குதித்து... அங்கும் காப்பாற்றி... சாம்பிராணி நாட்டில் மாட்டி... அங்கிருந்து தப்பித்து... டைபீரியஸிடம் மாட்டி... தப்பி.. சோழ நாட்டை மீட்கும் போரில் துணை நிற்பது வரை அருமையான கதாபாத்திரம்... கதையை வாசித்து முடிக்கும் போது மரக்க முடியாதவனாகிறான் ஹிப்பலாஸ்.

மாமனைக் காதலித்து தன் பெண்புத்தியால் சண்டையிட்டு பிரிந்திருந்தாலும் அவன் பிரிவால் வருந்தி.... அவன் வருவான் என்ற நம்பிக்கையோடு உடல் இளைக்க காத்திருக்கும் பூவழகி மனசுக்குள் உயர நின்றால் என்றால் அரசமைக்க வந்து ஒருவன் மீது கொண்ட காதலால் அவனுக்கு உதவ ஒவ்வொரு முறையும் தன் உயிரைப் பணையம் வைத்து இறுதியில் உயிரையே கொடுக்கும் யவனராணி ஏனோ சற்று அதிகமாக மனசுக்குள் உயர்ந்து நிற்கிறாள். அதனால்தானோ என்னவோ பூவழகி என்று வைக்காமல் யவனராணி என்று பெயர் வைத்தார் போலும் சாண்டில்யன்.

-'பரிவை' சே.குமார்.

சனி, 22 அக்டோபர், 2016

ஜலதீபத்தில் ஒரு பயணம்

சாண்டில்யனின் ஜலதீபம் வாசிப்பு அனுபவம் கடல்புறாவைப் போல் சுகமாய் இருந்தது. இடையிடையே தொய்வு ஏற்பட்டாலும் நிறுத்தாமல் வாசிக்க வைத்தது. கடல்புறாவில் ரெண்டு நாயகிகளுடன் பயணித்த கப்பல் இங்கு நான்கு நாயகிகளுடன் பயணிப்பதால் வர்ணனைகளுக்குப் பஞ்சமில்லை. அரசிளங்குமாரியான பானுதேவி, கப்பல் தலைவனின் வளர்ப்பு மகளான மஞ்சு, கணவனை இழந்து மற்றொருவனுக்கு மனைவியாகி கடல் போரில் அவனை இழக்கும் கேதரின், நர்சாக வரும் எமிலி... இப்படி நான்கு பேருடன் பயணிக்கிறது ஜலதீபம்.

Image result for ஜலதீபம்
(ஜலதீபம் படம் உதவி : கூகிள்)
மராட்டிய வீர சிவாஜியின் வழித்தோன்றல்களின் அரசாளும் உரிமையைப் பெறுவதற்கான போட்டிதான் கதைக்களம்.  ஷாஹூவுக்கும் தாராபாய்க்கும் அரசுரிமை தொடர்பான பிரச்சினை இருக்க, தஞ்சையில் பிறந்த மூன்றாவது வாரிசும் போட்டியில் இறங்கலாம் என கடத்தப்படுகிறான். அவன் எங்கிருக்கிறான்... என்ன ஆனான் எனக் கண்டுபிடிக்க வரும் தமிழனான இதயச்சந்திரன் வாழ்வில் குறுக்கிடும் நாலு பெண்கள்... அவன் சந்திக்கும் பிரச்சினைகள்... கடல்போர்... தரைப்போர்...வழக்கு... என ஒரு சின்ன ஒளியில் இருந்து மிகப்பெரிய வட்டத்தை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் சுவராஸ்யமாய் நகர்த்தியிருக்கிறார். 

மக்களால் 'ஸார்கோல்' என்றும் ஆங்கிலேயர் மற்றும் மராட்டியர்களால் 'கடற்கொள்ளையன்' என்றும் அழைக்கப்பட்ட மாவீரன் கனோஜி ஆங்க்ரே அரபிக் கடலில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து முதலில் ஷாஹூவிற்கு எதிராய்... தாராபாய்க்கு ஆதரவாய் நின்று பின்னர் பாலாஜி விஸ்வநாத் என்ற பேஷ்வாவின் முயற்சியால் மனம் மாறி மன்னர் ஷாஹூவிற்கு ஆதரவாக செயல்பட்டார் என்பது வரலாறு. இந்த வரலாற்றுடன் கற்பனைக் கதாபாத்திரங்களை உலாவவிட்டு அழகாய் நகர்த்தியிருக்கிறார் சாண்டில்யன்.

அந்தக் காலத்தில் பெண்கள் பார்த்ததும் காதல் வயப்பட்டார்கள் என்பதெல்லாம் ஏற்க முடியாததுதான் என்றாலும் எல்லாப் புதினங்களுமே இப்படித்தான் கதை சொல்கின்றன. பார்த்ததும் அவனை விரும்பி... அடுத்த நொடியே அவன் அணைப்புக்குள் எப்படி ஒரு பெண்ணால் இருக்க முடியும் என்ற யோசனை எழுந்தால் அதை எல்லாம் மூட்டை கட்டி விட்டு... காட்டுக்குள் பானுதேவியுடன்... கப்பலில் கேதரினுடன்... கல்பாறையில் மஞ்சுவுடன்... போர்க்களத்துக்கு செல்லுமிடத்தில் எமிலியுடன்... என எல்லாம் கடந்து பயணித்தால் ஜலதீபம் ரசிக்க வைக்கும்.

File:Murud Janjira Panoramic View.jpg
(ஜன்ஜீராக் கோட்டை) 
கடல்புறாவில் காட்டப்பட்ட கடல் போர் போல் இதில் அவ்வளவு அற்புதமாக வர்ணித்து எல்லாம் எழுதவில்லை... கடல்புறா சிறகு விரித்து போருக்கு தயாராவதை அவ்வளவு அழகாகச் சொல்லியிருப்பார்... இதில் ஜலதீபத்தின் போர் வர்ணனைகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றாலும் கடல்போரைக் காட்டிலும் இதயச்சந்திரனும் அவனின் உபதளபதி சுகாஜியும் கல்யாண்கோட்டை என்னுமிடத்தில் பாஜிராவ் பிங்க்லேயின் தலைமையிலான ஷாஹூவின் தரைப்படையை இருபுறமும் இருந்து தாக்கி எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை மிக அழகாக எழுதியிருப்பார்... நாமும் அந்த போர்க்களத்தில் இதயச்சந்திரன் கூட நின்றது போல் தோன்ற வைத்துவிடுவார். கனோஜி ஆங்க்ரே கரகரப்பான குரலுடன் கம்பீரமானவராக இருந்தாலும்... எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் வீரம் கொண்டவராக இருந்தாலும்... எதையும் முன்கூட்டியே சொல்பவராக இருந்தாலும்... பிறர் மனதுக்குள் என்ன இருக்கு என்பதைச் சொல்பவராக இருந்தாலும் பெண்கள் பற்றி அவர் பேசும் பேச்சுக்கள் மிகவும் வக்ரமானவை. இருந்தாலும் இறுதிவரை மிகச் சிறந்த வீரனாக திகழ்ந்திருக்கிறார்.

கொள்ளையரால் தாக்கப்பட்ட கப்பல் உடைந்து அடிபட்டு கரை ஒதுங்கும் இதயச்சந்திரனை பிரமேந்திர சுவாமியும் பானுதேவியும் காப்பாற்ற, பானு தேவி மேல் காதல் பிறக்கிறது. பானுதேவிக்கும் ஆசையிருந்தாலும் தன் அரசியல் லாபத்துக்கு அவனை பயன்படுத்த எண்ணி ஆங்க்ரேயின் எதிரியான ஸித்திகளிடம் தூது அனுப்ப, அவர்களின் கோரிக்கையை இதயச் சந்திரன் ஏற்க மறுக்க, அங்கிருந்து தப்பும் சூழ்நிலையில் ஆங்க்ரேயின் வளர்ப்பு மகள் மஞ்சு காப்பாற்றுகிறாள். அப்போதே மஞ்சு மீது காதல் வருகிறது... என்னய்யா இது தமிழ் சினிமா மாதிரி அப்படின்னு யோசிச்சா... நல்லவேளை அங்க கட் பண்ணி அரபிக் கடல்ல டான்செல்லாம் வைக்கலை... அந்த விதத்தில் நாம் தப்பித்தோம்.

ஆங்க்ரேயுடன் ஜலதீபத்தில் பயணிக்க ஆரம்பிக்கும் போது மஞ்சு மீது காதல் இன்னும் தீவிரமாக அவள் பிடிகொடுக்காமல் இழுத்தடிக்கிறாள். ஒரு நேரம் அன்பாய் பேச... ஒரு நேரம் முகத்தில் அடித்தாற்போல் பேச... இந்தப் பெண் காதலிக்கிறாளா இல்லையா என்ற தவிப்புடன் இருக்கும் இதயச்சந்திரன் கடல் போரில் கணவனைக் கொன்று சிறை பிடிக்கும் கேதரினை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க ஆங்க்ரே மற்றும் மஞ்சு இல்லாது உப தளபதிகளுடன் தனியே பயணிக்கிறான். ஆங்கிலப் பெண் இந்தியனை திருமணம் செய்ய முடியாது... அப்படிச் செய்தால் ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று சொல்லும் கேதரின், கணவன் இழந்த வலி மறையும் முன் இதயச்சந்திரனை கட்டிலில் வீழ்த்தப் பார்க்கிறாள். சில நேரம் சபலத்தில் அணைக்கும் அவன் பல நேரம் மஞ்சு நினைவில் அவளை ஒதுக்கி வைக்கிறான்.

Sarkhel Kanhoji Angre I.jpg
(கனோஜி ஆங்க்ரே . 1669 - 1729)
ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கச் சென்ற இடத்தில் அவளைக் காதலித்தவனுடன் மோதல், பானுதேவி சந்திப்பு மற்றும் அவளால் சிறைபிடிப்பு என பயணித்து எதிர்பாராத விதமாக ஆங்கில அதிகாரியால் சிறைபட்டு... அதிலிருந்து தலையில் அடியுடன்  அதே ஆங்கில அதிகாரி உதவியால் தப்பிவரும் இதயச்சந்திரனுக்கு காயத்துக்கு கட்டுப் போட உடன் வருகிறாள் நர்ஸான எமிலி என்ற ஆங்கிலப் பெண்... இவன் மீது அவளுக்கும் காதல்... மஞ்சுவுக்காக தன் காதலைத் துறந்து நர்ஸாகவே வாழ முடிவு செய்கிறாள் அவனிடம் இருந்து ஒதுங்கிக் கொள்கிறாள். மஞ்சு தனக்கு கிடைப்பாளா மாட்டாளா என்ற தவிப்பில் இருப்பவன் ஒரு முடிவோடு திருட்டுத்தனமாக கோவிலில் வைத்து தாலி கட்டி முதலிரவை பாறைகளில் முடித்து விடுகிறான். 

யாரைத் தேடி வந்தானோ அவனைக் கடத்திய நிம்கர், ஆங்க்ரேயிடம் தூதுவனாக இதயச்சந்திரனிடம் வர அவனை சிறைப்பிடித்தும் உண்மையை அறிய முடியாத நிலையில் யாருக்கும் தெரியாமல் அவனுடன் தமிழகம் செல்ல முயலும் போது பாலாஜி விஸ்வநாத்தின் திட்டத்தின்படி மஞ்சு மற்றும் பிரமேந்திர சுவாமிகளால் கைது செய்யப்படுகிறான். மஞ்சு கர்ப்பமாக இருப்பதால் இதயச்சந்திரனை எப்படி காப்பாற்றலாம் என ஆங்க்ரே தவிக்கிறார். இதயசந்திரன் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அந்த வாரிசை காப்பாற்ற முடியாமல் இப்படி மாட்டிக் கொண்டோமே என்ற தவிப்பில் இருக்கிறான்.

உண்மைக்கு புறம்பாக செயல்படாத பாலாஜி ஆங்க்ரே முன் நிறுத்தப்படும் இதயச் சந்திரனுக்கு என்ன தண்டனை கிடைத்தது..?  தஞ்சையில் பிறந்த மூன்றாவது வாரிசை கண்டு பிடித்தானா..? அந்த வாரிசை யார் கடத்தி வைத்திருந்தார்கள்..? நிம்கர் என்ன ஆனான்...? அநாதையான மஞ்சுவுக்கு அப்பா - அம்மா யார்...? மஞ்சுவை தன் மகள் எனச் சொல்லிக் கொண்டு வருபவன் என்ன ஆனான்...? பிரமேந்திர சுவாமியின் அரசியல் பங்கீடு எதுவரை போகிறது...? என்பதை மிக அழகான கதை நகர்த்தலில் நம்மை கவரும் விதமான வர்ணனைகளுடன் சொல்லியிருக்கிறார் சாண்டில்யன். 

(கனோஜி ஆங்க்ரேயின் நினைவிடம், அலிபாக் - மகாராஷ்டிரா )
ஸ்வர்ண சதுக்கம், ஜன்ஜீரா, கொலாபா என கடலோரத் துறைமுகங்கள் சாண்டில்யனின் வர்ணனையில் நம்மை ஈர்க்கின்றன. நாலு பெண்கள் என்றாலும் கோபமும் தாபமுமாய் காதலனை எங்கே இழந்து விடுவோமோ என்று தவிக்கும் மஞ்சு மற்ற மூவரையும் பின்தள்ளி நம் மனசுக்குள் அமர்ந்து கொள்கிறாள். அதே சமயம் தன் காதலை தியாகம் செய்யும் எமிலியும் கவர்கிறாள்.

கடற்போர் சமயங்களில் இதயச் சந்திரன் கடல்புறாவின் கருணாகரப் பல்லவனைப் போல் செயல்படுகிறான். எப்படி கருணாகரப் பல்லவன் கவர்ந்தானோ அதே போல் இதயச்சந்திரனும் மனசுக்குள் நிற்கிறான். 

ஜலதீபம் ஒரு சுகமான வாசிப்பு அனுபவம்.

படங்கள் உதவி : விக்கிபீடியா
-'பரிவை' சே.குமார்.

சனி, 15 அக்டோபர், 2016

காஞ்சனாதேவியா... மஞ்சளழகியா...?

Image result for கடல்புறா

சாண்டியல் அவர்களின் கடல்புறா வாசிக்க ஆரம்பித்தபோது மெல்லத்தான் நகர்ந்தது... பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து கடல்புறா மிக வேகமாக பறக்க ஆரம்பித்தது. பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனைப் போல கடல்புறா கருணாகரப் பல்லவன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். இளைய பல்லவனின் வீரதீரச் செயல்கள் சற்றே அதிகப்படியாகத் தெரிந்தாலும் வசீகரமான எழுத்தில் வாசிக்கும் போது அப்படித்தான் இருந்திருப்பானோ என்ற எண்ணமே மேலோங்கியது.

நாயகிகள் பற்றிய வர்ணனைகள் முகம் சுளிக்க வைக்கும் என்றார்கள். அப்படியான வர்ணனை எதுவும் இல்லை... அப்படிப் பார்த்தால் இன்றைய கதைகளிலும் சினிமாக்களிலும் வர்ணிக்காததா... எத்தனையோ பாடல்கள் இலைமறை காயாக இல்லாமல் நேரடியாகவே அதிகப்படியாக வர்ணிக்கின்றன என்பதை நாம் அறிவோம்... சாண்டில்யனின் நாயகிகள் வர்ணனை எல்லை மீறவில்லை... ஒரு எழுத்தில் வசீகரிக்கும்படி வர்ணிப்பது என்பது திறமை. அதை மிக அழகாகச் செய்து நம் கண் முன்னே இதுதான் காஞ்சானா தேவி... இவள்தான் மஞ்சளழகி என்ற தோற்றத்தை காட்டிவிட்டார்.

கருணாகரப் பல்லவனைச் சுற்றியே நிகழும் கதை என்றாலும் சோழ சாம்ராஜ்யத்தின் படைத்தலைவன்தான் அவன் என்ற முறையில் நாம் இரண்டாம் இராஜேந்திர சோழனையும் அவன் மகன் அநபாயனையும் சந்தித்து விடுகிறோம். சோழர்களின் ராஜ்ஜியம் உலகளவில் பரவிக்கிடந்தது என்பதையும் அறிந்து மகிழ்கிறோம்.

இரட்டை நாயகிகள்... பாலூரில் வணிகர் வீதியில் கூலவாணிகன் தங்க வைத்த வீட்டில் கடாரத்தின் இளவரசி காஞ்சனா தேவியை ஒரு பரபரப்பான சூழலில் சந்திக்கிறான் இளைய பல்லவன்... பெரும்பாலான காவியங்களில் தமிழ் சினிமாவைப் போல் கண்டதும் காதல்தான்... அதுவும் உடனே இடையில் கைவைத்தான் என்று எழுதிவிடுகிறார்கள்... இவைதான் தமிழ் சினிமாவுக்கு முன்னோடியாக இருக்குமோ என்றும் கொள்ளலாம். நேற்று பார்த்த றெக்க படத்தில் லூசுத்தனமான காதலைக் காட்டியிருப்பார்கள். அதை மற்றொரு பதிவில் பார்க்கலாம். 

இந்த இரட்டை நாயகிகள் குறித்து தமிழ்வாசி முகநூலில் கேள்வி கேட்டு வைக்க நிஷா அக்கா தினேஷ்  மற்றும் சில நண்பர்களுடன் ஒரு பெரிய விவாதமே நிகழ்ந்தது. இந்த இரட்டை நாயகிகள் என்பது கதை நகர்வுக்காக மட்டுமின்றி வரலாற்றை ஊறுகாயாக்கி கதை சமைக்கும் போது வாசிப்பவன் என்ன கதை வளவளன்னு போகுதுன்னு யோசிச்சு மூடி வைக்காமல் இருக்க கையாண்ட முறைதான் இரட்டை நாயகிகள் என்று தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் நாயகி இருந்தாலும் குத்துப் பாட்டுக்கு ஆட ஒரு பிரபல நடிககையை பிடிப்பதில்லையா அது மாதிரித்தான்... அப்படியான இரட்டைக் குதிரைகளில் முதல் குதிரையான காஞ்சனா மீது காதல் துளிர்க்க... அப்புறம் பாலூரில் இருந்து தப்பிச் செல்லும் போது இருவரும் பிரிகிறார்கள்... இருவரின் முதல் சந்திப்பு சித்ரா பௌர்ணமி அன்று....

பின்னர் கடற்கொள்ளையனான அகூதாவின் உதவியால் தப்பிப் பிழைத்து அவனுக்கு உபதலைவன் ஆகி கடல் கொள்ளையனாய் தன்னை நிலை நிறுத்தி, ஆங்காங்கே அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்களைக் காக்கவும் தன் காதலிக்கு செய்து கொடுத்த சத்தியத்தின்படி அவள் நாட்டை மீட்டு சக்கரவர்த்தினியாக்கவும் முயற்சிக்கும் கருணாகரப்பல்லவன் அதன் காரணமாக கடலில் பயணித்து அடையும் இடம் அக்ஷ்யத்தீவு... அங்கு சந்திப்பவள்தான் மற்றொரு நாயகியான மஞ்சள் அழகி... காஞ்சனாவைச் சந்தித்து காதல் கொண்டவன் மஞ்சளழகியோடு காதல் கொள்வது அடுத்த ஆண்டில்.. அதுவும் ஒரு சித்ரா பௌர்ணமி தினம்... 

மஞ்சள் அழகி மீது மோகம் கொண்டு அவளை விரும்பி... கடற்கரையில் அவளைக் கட்டிப்பிடித்து... அவளின் வளர்ப்புத் தந்தையும் அக்ஷயத்தீவின் தலைவனுமான பலவர்மனை தன் திறமையால் ஏமாற்றி வீழ்த்தி மஞ்சளழகியிடம் ஆட்சிப் பீடத்தை அளித்து நகரும் போது 'இந்த அலைகளைப் போல் நீங்களும் என்னைத் தொட்டு உறவாடி மறைந்து விடுவீர்கள்தானே' என்று அவள் சொன்னதை நினைத்தபடி அவளை மறக்கமுடியாமல் கடல் பயணத்தை தொடர்கிறான்... அடுத்த சித்ரா பௌர்ணமிக்குள் காஞ்சனாதேவியை கடாரத்தின் சக்கரவர்த்தினி ஆக்கியே தீருவேன் என உறுதியுடன்...

அக்ஷ்யத்தீவில் இருக்கும் போது தனது கப்பலை அமீர் மற்றும் கண்டியத்தேவன் உதவியால் மிகச் சிறந்த போர்க்கப்பலாக நிர்மாணிக்கிறான்... அதற்கு தன் காதலி காஞ்சனாவின் நினைவாக கடல் புறா என்றும் பெயரிடுகிறான். கடலில் பயணிக்கும் போது தங்களுடன் போரிட வந்த கப்பல்கள் காஞ்சனா தேவியும் அவளின் தந்தை குணவர்மனையும் கைது செய்து கொண்டு போகின்றன என்பதை அறியாது போரிட்டு அவர்களை மீட்கிறான்... காதலும் ஊடலுமாய் நகரும் வாழ்வில் தனது கூரிய அறிவினால் சோழர்களின் வணிக கப்பலுக்கு பிரச்சினையாக இருக்கும் கடல்மோகினி என்று இராஜராஜ சோழனால் அழைக்கப்பட்ட மாநக்காவரத்தின் தலைவன் கங்கதேவனை சூழ்ச்சியால் கொன்று கைப்பற்றுகிறான்.  

ஸ்ரீவிஜய நகரைப் பிடிக்க முயற்சிக்கும் போது அங்கு வரும் அநபாயன், கருணாகரப் பல்லவனை கைது செய்ய அரசனின் ஆணை இருப்பதைச் சொல்லி அவனை மீண்டும் அக்ஷ்யத்தீவுக்கு போகச் சொல்ல, அங்கு போனால் மஞ்சளழகி இருப்பாளே என்ற பயத்தில் அங்கு செல்லாமல் அமீர் மற்றும் கண்டியத்தேவரை ஏமாற்றி மலையூருக்குச் செல்கிறான். மலையூரில் ஸ்ரீவிஜய நகர படைத்தளபதியுடன் போரிட்டு மலையூர் கடல் தளத்தை கைப்பற்றுகிறான். மலையூரின் தலைவியாக மஞ்சளழகி இருக்கிறாள்.

மஞ்சளழகி குறித்து காஞ்சனா அறிய, அவளுக்கு மஞ்சளழகி மேல் காழ்ப்புணர்ச்சி ஏற்படுகிறது. இவ்வளவுக்கு உறவால் இருவரும் அக்கா தங்கை என்றாலும் காதல் என்று வரும்போது விட்டுக் கொடுக்கும் மனமில்லை. இருவரும் சந்திக்கும் சூழல் வர மோதலும் வருகிறது. 

காஞ்சனா தேவி மீது இருக்கும் அதீத காதலால்தான் மஞ்சளழகியை விட்டு ஒதுங்கி வருகிறான். இருப்பினும் தான் மலையூரில் மாட்டிக் கொண்ட நிலையில் அதன் தலைவியாய் அவளைச் சந்திக்க வேண்டிய சூழல் வந்தபோது மிகவும் வருந்துகிறான். ஆரம்பத்தில் அவனை கண்டு கொள்ளாமல் ஒரு தலைவியாய் பேசும் அவள், அங்கிருந்து கருணாகரப்பல்லவன் தப்பிச் செல்ல வேண்டும் என்றால் தன் உயிரை எடுத்துவிட்டு தப்பிச் செல்வதே ஒரே வழி என்றும் அதை உடனே செய்து தப்பிச் செல்லுங்கள் என்றும் சொல்கிறாள். இந்த வார்த்தையால் அவனின் இதயத்தில் அவள் மீண்டும் உயரமான இடத்தை அடைகிறாள்.

பாலூரில் பார்த்த மாத்திரமே காதலித்தாலும் சிறைப்பட்டிருந்த தன்னை சோழ இளவலுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வில் ஏந்தி காப்பாற்றியவள்... கடற்கரையில் தன் உயிரைப் பணயம் வைத்து சோழ இளவலையும் கடாரத்தின் இளவரசனையும் அவனின் மகளையும் காப்பாற்றிய போது தனக்காக கண்ணீர் சிந்தியபடி பயணித்தவள் காஞ்சனா தேவி என்பதை நினைப்பவன் மஞ்சளழகியை ஒதுக்க நினைக்கிறான்.

அக்ஷ்ரத்தீவின் தலைவனின் மகளாக பார்த்து... அழகிய நடனமங்கையாக ரசித்து... கடற்கரையில் கட்டிப்பிடித்து திருமணம் செய்து கொள்வதாய்ச் சொல்லி... அந்த இடத்தை மீட்டு அவள் கையில் கொடுத்து ஒதுங்கியவனை... அடுத்த சில மாதங்களில் சிறை பிடித்து நீ தப்ப வேண்டுமென்றால் என் உயிரை எடுத்து விட்டுச் சென்றால்தான் முடியும் என்று காதலால் கசிந்துருகி உயிரைக் கூட கொடுக்க முன் வரும் மஞ்சளழகியின் உயர்ந்த மனதை எண்ணி அவளை ஒதுக்க முடியாமல் தவிக்கிறான்.

எதிரியின் வாளை கையில் இருந்து தட்டிப் பறிக்கு வீரம் கொண்ட காஞ்சனாவா...? அம்மா இல்லாது... அப்பா இருந்தும் உண்மையான பாசத்தை அறியாது... வளர்ப்புத் தந்தையிடம் வளர்ந்த பாவப்பட்ட மஞ்சளழகியா...? ஒராண்டுக்கு முன்னர் சந்தித்து தன்னையே நினைத்து வாழும் காஞ்சனாவா...? உயிரையே கொடுத்து தன் காதலனைக் காக்க நினைத்த மஞ்சளழகியா...? வாள்போர் வீராங்கனையான காஞ்சனாவா...? ஆடல் கலையில் சிறந்த மஞ்சளழகியா..? இருவரில் யாருடன் வாழ கருணாகரப் பல்லவன் நினைப்பான் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்... ஏனென்றால் நம் இராஜாக்களும் கடவுள்களும் நம்மை இப்போது ஆள்பவர்களும் பல மனைவியரின் அன்புப் பிடியில் வாழ்ந்தவர்கள்தான்... வாழ்பவர்கள்தான் என்பதால் பல்லவனுக்கும் 'சண்டேன்னா ரெண்டு' மாதிரி ரெண்டுமே வாழ்க்கைத் துணையானாத்தானே கதை முடியும். சக்களத்தி சண்டை... காதலிக்கும் போது கர்புர்ன்னு இருந்தாலும் ஆசிரியர் சுபமாய் முடிச்சி வச்சிட்டதால பிரச்சினை இல்லை.

கருணாகரப் பல்லவன் மீது தீவிரக் காதல் கொண்ட காஞ்சனாதேவியை விட, என்னை உன்னால் திருமணம் புரிய முடியாது... காஞ்சனாதேவி மீதுதான் உனக்கு காதல் அதிகம் என்று சொல்லி ஒதுங்க நினைத்தாலும் ஆபத்து நேரத்தில் என் உயிரை எடுத்துவிட்டு தப்பிச் செல் அது ஒன்றே நீ உன் லட்சியத்தை அடைய வழி என்று சற்று யோசிக்காமல் காதலுக்காக உயிரைக் கொடுக்க நினைக்கும் மஞ்சளழகிதான் என்னைக் கவர்ந்தாள்.

சாண்டில்யனின் கதைகளில் நாயகிகள் வர்ணனை ரொம்ப அதிகமாக இருந்தாலும் கதையோடு பயணிக்கும் போது அந்த எழுத்து வசீகரமாகத்தான் இருக்கும். இதில் மஞ்சளழகியின் உண்மையான பெயர் என்ன என்று சொல்லவே இல்லை... ரெமோங்கிற பேரை ஓடும் பேருந்தில் ரெஜினா மோத்வானியிலிருந்து கீர்த்தி சுரேஷ் ரெமோ எனச் சொல்வது போல் கருணாகரப் பல்லவன் அவளைப் பார்த்து நிறத்தைப் பார்த்து மஞ்சளழகி என்று சொல்வதை வைத்து கடைசி வரை அதே பெயரில் கொண்டு சென்றிருந்தாலும் அது வரை மகளை பேர் சொல்லி அழைத்த பலவர்மன், அந்த கடல்புறத்து மக்களுக்கு எல்லாம் மஞ்சளழகி ஆகிவிடுகிறார்.

சரிங்க சாண்டில்யனின் கடல்புறா நாயகிகளில் காதல் புறாக்களான காஞ்சனா தேவி... மஞ்சளழகி... இவர்களில் உங்களைக் கவர்ந்த நாயகி யார்...?
-'பரிவை' சே.குமார்.