மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 மார்ச், 2020

மனசு பேசுகிறது : எழுதும் மனநிலையா இருக்கிறது..?

ரண்டு நாட்கள் இரவு நேர ஊரடங்கு என்றாலும் பகலிலும் வெளியில் செல்ல மனமில்லை... அறையில்தான்... பழனி ஐயா கொடுத்த வண்ணதாசனின் ஒரு சிறு இசை வாசித்து முடித்தாச்சு, ட்ரைவிங் லைசென்ஸ் என்னும் மலையாளப் படம், ஒரு சிறுகதை,  ஆரம்பித்திருக்கும் புதிய நாவலில் அடுத்த பாகம் என ஏதாவது ஒன்றை எழுதலாம் என்ற எண்ணம் மனதளவிலேயே நிற்கிறது. நிகழ்வுகளின் தீவிரம் இன்னும் கூடுமோ என்ற அச்சமே மனமெல்லாம் நிறைந்து நிற்கிறது.

சனி, 21 மார்ச், 2020

மனசு பேசுகிறது : ஆசான் அல்ல அப்பா


ழனி ஐயா...

இந்தப் பெயர் என்னுடன் இறுதிவரை பயணிக்கும் பெயர்... அவரின் மாணவர்களில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர்.

வெள்ளி, 20 மார்ச், 2020

மனசு பேசுகிறது : நிரபராதிகளின் காலம்

டைப்பு 'ஹைநூன்பீபி நினைவுச் சிறுகதைப் போட்டியில் இருக்கும் எனது கதையை அங்கு சென்று வாசித்து, தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்... கதையை வாசிக்க...

வியாழன், 19 மார்ச், 2020

சினிமா : ஐயப்பனும் கோஷியும் (மலையாளம்)

 பதிவுக்குள் போகுமுன் COVID-19க்காக சில வரிகள்
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் படுபயங்கரமாக இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. சில நாடுகள் வயதானவர்களுக்கு சிகிச்சை இல்லை என்று சொல்லியிருப்பது மிகப்பெரிய கொடுமை... வேதனை... வரும் நாட்களில் இறப்பு விகிதம் இன்னும் அதிகரிக்கும்.

வெள்ளி, 13 மார்ச், 2020

எதிர்சேவையில் என்னுரை

எந்த ஒரு அணிந்துரையும் இல்லாமல் வந்திருக்கும் எனது முதல் சிறுகதைத் தொகுப்பில் நான் எழுதியிருக்கும் என்னுரை உங்கள் பார்வைக்கு.

(அன்பின் ஐயா. முனைவர் மு.பழனி இராகுலதாசன்)

நீங்களும் கதை எழுதலாமே..?’

இந்த வரிகள் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களிடமிருந்து வந்தபோது நானும் முருகனும் எல்லா மாலையும் போல அவருக்கு வலம் இடமாக சைக்கிளை உருட்டியபடி, பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தோம்.

அவரின் கேள்விக்குப் பின் 'நானெல்லாம் எழுதுறதா..?' என்ற வார்த்தை எப்பவும் போல் சிரிப்போடு வந்தது. 'அதெல்லாம் எழுதலாம்... நீங்க எழுதிக்கிட்டு வாங்க... பார்ப்போம்' என்றார். அதன் பின்னான நாளில் முதல் கதை... அதுவும் கல்லூரியில் படிக்கும் மாணவன் எழுதிய கதை என்னவாய் இருக்கும்... ஆம்... அதேதான்... காதல் கதை... கொடுத்ததும் வாங்கி வைத்துக் கொண்டார். பின்னொருநாளில் 'நல்லாயிருக்கு... இன்னும் எழுதுங்க...' என்றார் தோள் பிடித்து அணைத்துபடி. நல்லாயிருந்ததா என்பது தெரியாது ஆனாலும் அவர் சொன்ன வார்த்தைதான் என் எழுத்துக்கான விதையை என்னுள் விதைத்தது.

கல்லூரியில் படிக்கும் போது எழுதிய கதைகளில் முதல் கதைக்குப் பெயரிட்டு தினபூமி கதை பூமிக்கு அனுப்பச் சொன்னவர் அவரே. அந்தக் கதை வெளியானபின் தொடர்ச்சியாய் கதைகள் அனுப்பி வெளிவர... வெளிவர... எழுத்துப் போதை என்னுள் இறங்கியது... விடுமுறை தினங்களில் கதை எழுதுகிறேன் என உட்கார்ந்து வீட்டில் திட்டு வாங்குவது தொடர்கதையானது.

முதல் கவிதையை எழுதி ஐயாவிடம் கொடுத்ததும் வாசித்து, ஒன்றும் சொல்லாமல் வாங்கி வைத்துக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு அதை வெள்ளைத் தாளில் எழுதச் சொல்லி தாமரை இதழுக்கு அனுப்பி வைத்ததுடன் கவிதை வெளியான புத்தகத்துடன் வந்து மகிழ்வாய்ச் சொன்னவரும் அவரே. அந்தக் கவிதைக்காக எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் வாழ்த்தையும் பெற்றேன். போன முறை விடுமுறையில் சென்றபோது நான் எழுதி வைத்திருக்கும் 'வேரும் விழுதுகளும்' என்ற கிராமத்து நாவலை வாசித்தவர் இதை புத்தகமாக்க வேண்டும்... நான் இதைப் பற்றி நிறைய எழுதித்தர வேண்டும் எனவும் சொன்னார். அது புத்தகமாகும் போது ஐயாவின் அணிந்துரையுடன்தான் வரவேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.

என் எழுத்து இடைநில்லாப் பேருந்து போலில்லாமல் கல்லூரிக்காலம், திருமணத்துக்குப் பின், அமீரக வாழ்க்கை என இடை நிறுத்தி... இடை நிறுத்தியே பயணித்தது... இப்பவும் பயணித்துக் கொண்டிருக்கிறது... அமீரக வாழ்க்கையில்தான் வலைப்பூ அறிமுகம்... அதில் எழுத ஆரம்பித்த எழுத்துக்களே வாழ்க்கைக் கதைகளை... குறிப்பாக கிராமத்து மனிதர்களின் வாழ்வைப் பேச ஆரம்பித்தது. பல நண்பர்கள் கதையில் சோகமே முடிவாய் வருவதைக் குறித்து என்னுடன் சண்டையிட்டிருக்கிறார்கள்... அழுகாச்சிக் கதை இதெல்லாம் எவன் வாசிப்பான் என்றும் சொல்லியிருக்கிறார்கள். வாழ்க்கைக் கதைகள் எப்பவும் வலி நிறைந்தவையே... அது ஒருபோதும் ஜிகினா பூசி மேடையேறுவதில்லை என்பதைப் அறிந்தவன் நான் என்பதால் அவர்களின் பேச்சுக்களை பேச்சாய் மட்டுமே எடுத்துக் கொண்டேன்... என் எழுத்தில் மாற்றம் நிகழ்த்தாமல்.

குடும்பம்... குழந்தைகள் தூர தேசத்தில் இருக்க... அமீரகத்தில் ஒரு கட்டில் வாழ்க்கையில் சேணம் பூட்டிய குதிரையாய் அலுவலகம், அறை என்று தொடரும் நாட்களில்... வலியை, சோகத்தை, வெறுமையைப் போக்கும் தோழனாய் அமைந்தது இந்த எழுத்து...  வலைப்பூவில் எனது கதைக்கான நண்பர் வட்டம் விரிந்து பரந்ததில் அமீரகத்தில் வந்த பின் எழுதியவைதான் முக்கியக் காரணம்... முகமறியா நட்புக்களை உறவாக் கொடுத்ததும் இந்த எழுத்துத்தான்.

எழுத்து ஒரு வரம்... அது எல்லாருக்கும் கை கூடுவதில்லை என்றும் சொல்பவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வரும். நானெல்லாம் கல்லூரிக்குப் போய், ஒரு உந்துதலின் பேரில்தான் எழுத ஆரம்பித்தேன். எழுத எழுதக் கதைகளுக்கான களமும் எழுத்தின் வீச்சும் மாறிக் கொண்டேதான் இருக்கிறது... கல்லூரிக் காலத்தில் எழுதிய கதைகளுக்கும் இப்போது எழுதும் கதைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என் எழுத்து நடையில். எல்லாராலும் எழுத முடியும்... யாருக்கும் எழுத வராதென்றெல்லாம் சொல்ல முடியாது... எழுத எழுத எழுத்து நடை, களம், காட்சிப் படுத்துதல் என எல்லாமே உங்களிடம் ஒட்டிக் கொள்ளும். அதன்பின் அதை யாராலும் பிரிக்க முடியாது... குறிப்பாக நீங்கள் யாருக்காகவும் உங்கள் எழுத்தை மாற்றாத பட்சத்தில் என்பதே நான் நண்பர்களிடம் சொல்வதும் எனக்குள் சொல்லிக் கொள்வதும்... ஒரு போதும் அடுத்தவருக்காக எழுத்தை மாற்றியதில்லை... என் எழுத்து எப்பவும் இப்படித்தான்.

என் கதைகள் நிறையப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. அப்படி பரிசு பெற்ற கதைகள்தான் பெரும்பாலும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.  எல்லாக் கதைகளுமே வாழ்வின் எதார்த்தம் பேசுபவையாகத்தான் இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை எதுவுமே அவ்வளவு எளிதாக அமைந்து விடாது... தடைகளைத் தாண்டிப் பயணிப்பது என்பது பல நேரங்களில் முடியாமலேயே போய்விடும் என்பதால் முயற்சி மேற்கொள்வதில் கூட யோசனையே முன் நிற்கும்... பொருளாதாரமும் முக்கியக் காரணியாக இருப்பதால் முயற்சிக்காமலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை இன்று வரை. சில மாதங்களுக்கு முன் உன் கதைகளைப் புத்தகமாக்குவோம் என அமீரக வாசிப்பாளர் குழும ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான அண்ணன் ஆசீப் மீரான் அவர்கள் எடுத்த முயற்சி சில காரணிகளால் தள்ளிப் போய்விட்டது என்றாலும் முதல் விதை அவர் போட்டதுதான்... அவருக்கு என் முதல் நன்றி.

எந்த ஒரு முயற்சியும் எனக்கு வெற்றியைக் கொடுப்பதில்லை என்ற வெறுப்பின் உச்சத்தில் இருந்தபோது நாம் பயணிப்போமென உற்சாக மூட்டி, அதற்கான முயற்சியில் இறங்கிய தம்பி நெருடாவிற்கும் இந்தப் புத்தகம் வெளிவரப் பேசி, கதைகளை அனுப்பச் சொல்லி எல்லாமுமாய் முன் நின்ற தம்பி கவிஞர் பிரபு கங்காதரன்-க்கும் நன்றி என்று சொல்லித் தள்ளி வைப்பதைவிட இந்த உறவு இறுதி வரை தொடர வேண்டும் என நான் வணங்கும் தெய்வத்திடம் பிரார்த்திக்கிறேன்.

நான் எதாவது எழுதி, அதற்கான பரிசுத் தொகையோ புத்தகமோ வீட்டிற்க்கு அனுப்பப்படும் போது உடனே அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் பண்ணி விடுவதுடன்... இவ்வளவு எழுதி வைத்து ஏன் இன்னும் புத்தகம் ஆக்காமல் இருக்கீங்க எனச் சொல்லிக் கொண்டே இருக்கும் என் அன்பு மனைவி நித்யாவுக்கும், எங்க அப்பா கதை எழுதியிருக்காங்க என கதை வெளியான புத்தகத்தை கையில் பிடித்தபடி பள்ளிச் சிறுமியாய் வீதியிலிருக்கும் நட்புக்களுக்கு காட்ட ஓடிய என் செல்ல மகள் ஸ்ருதி-க்கும், நானும் கதை எழுதுறேன் என ஏதாவது கிறுக்கி, ஆங்கிலத்தில் கதை எழுதி பள்ளியில் இரண்டாம் பரிசு பெற்ற என் செல்ல மகன் விஷால்-க்கும் நன்றி என்பதைவிட அன்பு முத்தங்கள் ஆயிரம் ஆயிரமாய்...

இத் தொகுப்புக்காக என்றில்லாமல் இந்த ஆண்டு புத்தகம் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் நான் எனது வலையில் எழுதியதில் 50 கதைகளை பிடிஎப் ஆக்கி நண்பர்கள் சிலரிடம் கொடுத்த போது, அதை என் மீதான அன்பின் பேரில் முழுவதும் வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன் தங்களின் முகநூல் பக்கங்களிலும் எழுதிய கவிஞர் பூபகீதன், இராஜாராம்,எழுத்தாளர் நௌஷத்கான், பாலாஜி பாஸ்கரன், சுடர்விழி ஆகியோருக்கும் நன்றி.  

எனது எழுத்தை வலைப்பூவில் பத்தாண்டுகளாக வாசித்துத் தங்களது கருத்துக்களைத் தொடர்ந்து சொல்லிவரும் வலை நட்புக்கள் அனைவருக்கும், என் எழுத்தைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அகல்,  முத்துக்கமலம்,  காற்றுவெளி,  தேன்சிட்டு, மின்கைத்தடி மற்றும் என் கதைகளை வெளியிட்ட மின்னிதழ்களுக்கும், அடிக்கடி கதையைக் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கும் ‘எங்கள் பிளாக்’ ஸ்ரீராம் அண்ணாவுக்கும், அமீரக எழுத்தாளர் குழும நட்புக்கள் அனைவருக்கும் மற்றும் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி.

எனது முதல் புத்தகத்தைக் கொண்டுவரும் கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகத்தாருக்கு நன்றி.

எங்களுக்கு வாழும் முறையைக் கற்றுக் கொடுத்த... இப்பவும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்  இராம. சேதுராமன் - சே.சிவகாமி, கு.லட்சுமணன் - லெ.இராஜகுமாரி ஆகியோரின் ஆசிகளோடும் நான் வணங்கும் தெய்வங்களின் ஆசியோடும் முதல் புத்தகத்தை நண்பர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் முயற்சியில் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்வும் சந்தோஷமும்... 

என் வாழ்க்கையில் என்னால் எதுவும் நிகழ்ந்து விடவில்லை... இப்போதும் எப்போதும்  என் நண்பர்களால்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது... அவர்களே நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

என் கதைகளை வாசியுங்கள்... கிராமத்து மனிதர்களின் வாழ்வைச் சுவாசித்த அனுபவம் கண்டிப்பாகக் கிடைக்கும்... உங்கள் வாழ்த்துக்களும் மனம் நிறைந்த கருத்துக்களுமே என்னை முன்னோக்கி நகர்த்திச் செல்லும் என்பதால் உங்களின் கருத்துக்களை எதிர் நோக்கியிருக்கிறேன்.

எனது இந்த முதல் புத்தகத்தை எனது பேராசன். முனைவர். மு.பழனி இராகுலதாசன் அவர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 10 மார்ச், 2020

எதிர்சேவை விமர்சனம் 2 : நம்பிக்கை தரும் சம காலச் சிறுகதைகள் - விசாகன்

தேனியில் இருக்கும் திரு. விசாகனுக்குப் புத்தகம் அனுப்பச் சொல்லி சகோதரர் நந்தகுமார் சொன்ன போது நானே அனுப்புகிறேன் எனச் சகோதரர் 'கலக்கல் ட்ரீம்ஸ்' தசரதன் அனுப்பி வைத்தார். அதன் பின் அவர்கள் மேடையில் எதிர்சேவை குறித்துப் பேசக் கிடைத்த வாய்ப்பு தட்டிக் கொண்டே போய் இறுதியில் என்னால் செல்ல இயலாமல் வந்துவிட்டேன். அவர்களின் அழைப்புக்குச் செல்ல முடியா உடல்நிலை என்பதைச் சொன்னதும் சரி பரவாயில்லைங்க என்று சொன்னவர் புத்தகத்தை வாசித்து சிறப்பானதொரு விமர்சனத்தை தனது முகநூல் பக்கத்திலும் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மேடை பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். இதை எதிர்பார்க்கவில்லைதான்... தொடர்ந்து எழுதணும் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்திருக்கும் மற்றுமொரு விமர்சனம் இது. எதிர்சேவையைக் கிழித்துத் தொங்கப் போடுவார்கள் என்று பார்த்தால் எல்லாமே கட்டிப்பிடிக்கும் விமர்சனமாகத்தான் இருக்கிறது. நன்றி விசாகன் அண்ணா.


நாற்காலியின் பின்னால் ஊக்கால்
என் பெயரை எழுதிவைத்த நினைவு ரம்மியமானது…
--------------------------------------------------------------------------------------
ரானிய சினிமாக்களை ஒத்து சிலபல திரைப்படங்கள் ஒரு அரைமணி நேர சம்பவத்தை நேர்த்தியான, காத்திரமான திரைக்கதை அம்சத்தைத் தாங்கி வருவதை நாம் காண்கிறோம். அதுபோன்ற சாயலாகவே, கூடடைந்துவிட்ட பறவை விடியலில் சிறகு சிலிர்த்து எதன்பொருட்டோ வான்வெளியில் பறந்த ஐந்தாவது நிமிடம் ஏதோவொரு சோலையில் அமர்கிறது. அப்பறவை கழித்த அந்த ஐந்து நிமிடங்களைக் ஐந்துபக்கக் கதையாக்குகிறான் படைப்பாளன், ஒரு சித்தாள் ஒருத்தி மாலையில் வேலை முடித்து சோர்வுடன் வீடு திரும்ப எடுத்துக்கொள்ளும் பத்துநிமிடத்தைத் தன் கதைக்குள் அடக்குவதைப்போல. பல படைப்பாளர்கள் இதுபோன்ற முயற்சியனை அழகுறக் கையாள்கிறார்கள். அந்தப் பாணியிலேயே தன்னுடைய “எதிர்சேவை” என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை வாசகர்களுக்காகக் கையளித்திருக்கிறார் பரிவை சே.குமார். பணிநிமித்தம் அபுதாபியில் இருக்கும் குமாரின் இத்தொகுப்பை “கலக்கல் ட்ரீம்ஸ்” பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 12 கதைகளைக்கொண்ட 96 பக்க நூலின் விலை 100.
“ஒருபோதும் அடுத்தவருக்காக எழுத்தை மாற்றியதில்லை, என் எழுத்து எப்பவும் இப்படித்தான்” என்று தன்னுடைய முன்னுரையில் குமார் குறிப்பிடும் நோக்கம், தன் எழுத்தின்பால் வரும் விமர்சனங்களைக் கடந்துசெல்லும் ஒரு பாணியாக இருக்கலாம். எழுத நினைக்கின்றவர்களுக்குத்தான் அவரின் இந்த அறிவுரையே அன்றி, கதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கில்லை என்பதையும் அவருடைய கருத்தில் மறைபொருளாக்கியிருக்கிறார் என்று நாம் எடுத்துக்கொள்ளவும் முடியும். அந்த வகையில் குமாரின் கதைகள் வட்டாரமொழியில் பின்னப்பட்டுள்ளன என்றாலும், ஒவ்வொரு கதையிலும் சமுதாயம் சார்ந்த முன்னேற்றத்திற்கான சிந்தனையை முன்வைக்கிறார். அடுக்கடுக்காக நிறைய சமகால அரசியல் சம்பவங்களைத் தன்னுடைய கதைசொல்லும் போக்கில் கோர்த்திருக்கிறார். இத்தொகுப்பில் உள்ள “எதிர்சேவை”, “விரிவோடிய வாழ்க்கை”, “அப்பாவின் நாற்காலி” ஆகிய மூன்று கதைகள் குறித்து சுருக்கமான என்னுடைய குறிப்புகளைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
“எதிர்சேவை”யில், தற்பெருமை பீற்றித்திரியும் தன்னுடைய வெளியூர் மாமாவின் வருகையை வெறுத்து நிற்கும் ஒருவன், மாமாவின் மகளும் அப்படித்தான் இருப்பாள் என்ற எண்ணம் மேலோங்கி நிற்க, அவ்வாறில்லாது அவர்களுக்கிடையிலான மய்யலும் காதல்வசப்படுதலும், அல்லது உள்ளார்ந்த நட்போ இயல்பாக எவ்வாறு தொற்றிக்கொள்கிறது என்று கதைவழி நமக்குச் சொல்லவந்ததில், ஒரு குடும்பத்திற்குள் உருக்கொள்ளும் பிணக்குகள் மற்றும் இணக்கம், அண்ணன் தங்கை நட்பின் அழுத்தம், பாச உணர்வு என விரித்துவைக்கிறார். வைகையில் ஒரு கைளவு தண்ணீரே வந்தாலும் அல்லது அதுவும் வராவிட்டாலும், கள்ளழகர் தன்னுடைய பக்தர்களுக்காக அந்த ஆற்றில் இறங்காமல் போகமாட்டார் என்பதைப்போல, நம்முடைய பாரம்பரியத தொன்மங்களைத் தாங்கி நிற்கின்ற குடும்பங்கள் எத்தனை பிணக்குகளுக்குள் சிக்குண்டு நின்றாலும் உறவுகள் ஏதேனும் ஒருவழியில் ஒட்டிக்கொள்ளத்தான் செய்கின்றன என்பதை உணர்த்துகிறார் கதாசிரியர்.
“விரிவோடிய வாழ்க்கை” ஒரு பிரச்சாரத் தொணியில் இருந்தாலும், நம் முன்னோர்கள் போற்றிவந்த வேளாண்மையின் தற்போதைய நிலை மாற வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்ற கதையாக இருக்கிறது. ஒரு திரைக்கலைஞனான நானா படேகர் “விவசாயிகளே தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுக்காதீர், என்னிடம் வாருங்கள், நான் வழிகாட்டுகிறேன்” என்று சொல்ல முன்வரும்போது, மக்களால் தேர்ந்தெடுத்த ஒரு அரசிற்கு அந்த மனம் வரவில்லையே என்று ஏக்கத்தின் வெளிப்பாடாக இந்தக்கதை இருக்கிறது, விரிவோடிய வாழ்க்கை என்ற தலைப்பே ஒரு மிகப் பெரிய நாவலை உள்ளடக்கியதாகத்தான் நமக்குத் தோன்றுகிறது.
“அப்பாவின் நாற்காலி” தன்னுடைய மிடுக்கான தோற்றம் கொண்டுள்ள அப்பா தன்னுடைய தச்சு ஆசாரி நண்பனிடம் தனக்கான கம்பீரத்தை மேம்படுத்திக் காட்டும் வகையிலான வடிவத்துடன் நாற்காலி செய்துதரச் சொல்லி ஊர் நாட்டாமைத் தீர்ப்புச் சொல்ல அதைப் பயன்படுத்துகிறார். பல குடும்பங்களில் அப்பா என்ற பாத்திரத்தின் இதுபோன்ற மிடுக்கான தோரணையும், கடுமையான அச்சத்தைத் தரும் உருவ அமைப்பும் பிள்ளைகளை அவரிடம் நெருங்கவிடாது தடுத்துவிடுகின்றன என்பது கண்கூடு. ஆனால் பாச உணர்வை யார் அல்லது எது தடுத்துவிட முடியும்? அப்பா இறந்துவிட்டாலும் அந்த நாற்காலியில் அப்பா அமர்ந்தே இருப்பதுபோலத்தான் வீட்டின் அமைப்பு தெரிகிறது. ஆண்டுகள் கடந்து அந்நாற்காலி பரண்மேல் ஒதுக்கப்பட்டாலும் அப்பாவின் நினைவுகள் எப்போதும் மகன்களை விட்டுவிலகுவதில்லை. அந்தப்பெருவலியைப் பேரன்கள் உணர்துகொள்ள நியாயமுமில்லை.
இலக்கியத்துறையில் கதைசொல்லும் கதைஞர்களின் தேவையும் வரவும் ஒருசேர எழுச்சியடைந்துவரும் தமிழச்சூழலில், பரிசை.சே.குமாரின் வரவு சிறப்பானது. தன்னளவில் புதிய வடிவங்களையும், கருத்துச் செறிவையும், நவீன நடையையும் தாங்கிவருகின்ற சமகாலச் சிறுகதைகள் பல நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அதே நேரத்தில், எழுத்து கைகூடியபின்னர் வாசிப்பை அறவே நிறுத்திக்கொள்ளும் பல தோழர்களைப் பார்க்க முடிவதைப்போல அவ்வாறானவர்களின் எழுத்துப் பயணம் சட்டென நின்றுவிடுவதையும் பார்க்கிறோம். அதுபோல தன்னுடைய எழுத்தும் சுருங்கிச் சிறுத்துவிடாமல் பரந்துபட்ட வாசிப்பின் பின்னணியில் தன்னுடைய எழுத்தாற்றலை மென்மேலும் வளர்த்துக்கொண்டு இலக்கிய உலகிற்கும், மக்களுக்குமான கதைகளைப் படைத்திட வேண்டுமென்று குமாரை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
-விசாகன், தேனி.

நன்றி. திரு.விசாகன்.
-'பரிவை' சே.குமார்.

மலையாள சினிமாக்களம் (அகல் கட்டுரை - ஜனவரி : 2020)

Image result for மலையாள சினிமா வினீத் ஸ்ரீனிவாசன்

சின்ன வயதில் இருந்தே சினிமா மீது ஒரு தனிப் பிரியம். அது ஏன்னு எல்லாம் தெரியாது... படம் பார்ப்பதும்... பாட்டுக் கேட்பதும் எப்பவுமே பிடிக்கும் ஒன்று. தூறல் நின்னு போச்சு படம் பார்த்துட்டு மறுநாள் பள்ளியில் அடிபட்டு கை உடைந்த போது ‘படம் பார்த்துட்டு அதுல வர்ற சண்டைக்காட்சி மாதிரி செஞ்சு பார்த்திருப்பாக... விழுந்து கையை ஒடச்சிக்கிட்டு வந்திருக்காக’ என வலியும் வேதனையும் சுமந்து நிற்கும் போது அம்மா கொடுத்த அடி எப்போதும் மறக்க முடியாத ஒன்று. சில படங்கள் பார்த்த பின்னணி இன்னும் இனிமையாய் மனசுக்குள்! ம்.... அது ஒரு கனாக்காலம்னு எல்லாம் கடந்து போய்விட முடியாது. ஏன்னா சினிமா பார்ப்பது என்பது இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கு. இப்பவும் அது தொடரும் காலம்தான்!  ​

ஆம் இன்றும் படம் பார்ப்பது தொடர்கிறது என்றாலும் இங்கு நாம் பார்க்க விரும்பும் படங்கள் தியேட்டருக்கு வருவதில்லை. பிரபலங்களின் படங்கள் மட்டுமே வரும். அப்படியே நாம் பார்க்க நினைக்கும் படம் வந்தாலும் கணக்குப் பண்ணி வாழும் வாழ்க்கையில் டிக்கெட் விலைக்கு மூன்று நாள் சாப்பிடலாமே என்றுதான் தோன்றும். ஆம் எது தேவையான செலவோ அதை மட்டுமே செய்து நாட்களை நகர்த்தும் போதே ஏகப்பட்ட நெருக்கடி, தினம் தினம் ஒரு பிரச்சினை. எழும்போதே இன்று என்ன செய்யப் போகிறோம் என்ற நினைப்புடன்தான் எழச் செய்கிறது அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதாரம். இதில் எங்கே சினிமாவுக்கான செலவையெல்லாம் யோசிப்பது? டோரண்டுகளும் சில இணைய வெளிகளுமே சினிமாவை எனக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஊருக்குப் போனாலும் ஒரு மாத விடுமுறையில் சினிமா என்பது யோசிக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது. பிள்ளைகளுக்காக எப்போதேனும் செல்வதுண்டு.

தமிழ்ப்படங்கள் மட்டுமே பார்த்து நகர்ந்த வாழ்க்கைதான் ஊரில் இருக்கும் வரை! அதுவும் காரைக்குடியில் கணிப்பொறி நிலையத்தில் இருந்த போதும், சென்னையில் வேலை பார்த்த போதும் கிட்டத்தட்ட வெளியான எல்லாப் படங்களையும் பார்த்து விடுவோம், அது மரண மொக்கை என்றாலும் கூட! காரைக்குடி தேவகோட்டையில் எல்லாத் தியேட்டரிலும் படம் பார்த்திருந்தாலும் சென்னையில் கிருஷ்ணவேணியும் ஸ்ரீநிவாசாவும்தான் எங்களை அதனுள்ளே அதிகம் அமர்த்திப் பார்த்திருக்கும். நடந்து போகும் தூரத்தில் எங்கள் அறை என்பதால் நினைத்தவுடன் இரவுக்காட்சிக்குச் சென்று விடுவோம்.

அமீரகம் வந்தபின் தமிழ் தவிர்த்து மற்ற மொழிப்படங்களையும் டோரண்டில் தரவிறக்கம் செய்து நண்பர்கள் பார்க்கும் போது வெட்டித்தனமாய் மாலைகளைக் கடத்த வேண்டிய சூழலில், விளக்கணைக்க பதினோரு மணி என்ற சட்டதிட்டத்துடன் இயங்கும் அறையில், பெரும்பாலும் பனிரெண்டரை, ஒருமணி வரை உறக்கம் வரா உளைச்சலில் வேறு என்ன செய்ய முடியும்? அதுவும் வார விடுமுறை தினங்களில் பிரியாணி சமைத்துச் சாப்பிட்ட பின் நேரத்தைக் கடத்த என்ன செய்வது? எல்லா மொழிப் படங்களும் பரிட்சயமானது இப்படித்தான்.

சமைத்தல், ஊருக்குப் பேசுதல், எழுதுதல் என்பதெல்லாம் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நீடித்தல் என்பது சாத்தியமில்லை. மகிழ்வான பேச்சுக்குப் பின்னே பணம் என்னும் வார்த்தை வந்தால் நம் இயலாமை எதிர்த்து நிற்கும். மகிழ்வாய் ஆரம்பித்த பேச்சும் இறுதியில் சண்டையில்தான் முடியும் என்பதால் இடைவெளி விட்ட பேச்சே கொஞ்சமேனும் மனசுக்கு மருந்தாக இருக்கக் கூடும் என்பதாலும், எவ்வளவு நேரம்தான் எழுத முடியும்? எழுத்துக்குப் போரடித்துப் போகாதா என்ற நினைப்பாலும் சில நிமிடம் பேச்சும் கொஞ்ச நேர எழுத்துமே சாத்தியமாகிப் போன சூழலில், நேரங்கடத்தி என்பது பெரும்பாலும் கணிப்பொறியில் பார்க்கும் படங்களே! சில நேரங்களில் குறிப்பாக விடுமுறை தினத்தில் அறையில் ப்ரொஜெக்டர் மூலமாக படம் போடுவார்கள். எல்லாரும் ரசித்துப் பார்க்க ஆரம்பிப்பார்கள் ஆனால் இறுதிவரை பார்ப்பது நானும் என் நண்பருமாகத்தான் இருக்கும். மற்ற பக்கமெல்லாம் மழை நேரத்து தவளைபோல குறட்டைச் சப்தங்கள் வர ஆரம்பித்துவிடும்.

நான் பார்த்த முதல் மலையாளப்படம் 'அன்னையும் ரசூலும்' - பஹத்பாசிலும் ஆண்ட்ரியாவும் நடித்தது. அருமையானதொரு காதல்கதை. ரசித்துப் பார்க்க வைத்தது. ஆண்ட்ரியாவின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். இது மலையாளத்தில் அவருக்கு முதல்படம். இந்தப் படம் பார்த்தபின் என் கணிப்பொறித் திரையில் நீண்டநாள் அன்னா இருந்தார். அந்தப்படம் கொடுத்த ஈர்ப்பின் காரணமாக மலையாளப் படங்களைத் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். அப்படித்தான் நிறையப் படங்களைப் பார்த்தேன். மலையாளப் படத்தின் மீது தீராக்காதல் வந்தது.

டோரண்டில் புதிய மலையாளப்படம் என்றால் அது எப்படியிருக்கும் என்றெல்லாம் யோசித்ததே இல்லை. இப்போதெல்லாம் டிரைலரையோ அல்லது விமர்சனத்தையோ பார்ப்பது உண்டு அப்போது உடனே தரவிறக்கம்தான். எத்தனை படங்கள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்... குறிப்பாக எல்லாமே நல்ல கதைகளுடன்... என்னு நிண்டே மொய்தீன், அனார்கலி, சார்லி, பிரேமம், மகேஷிண்டே பிரதிகாரம், உஸ்தாத் ஹோட்டல், தொண்டிமுதலும் த்ரிஷாக்சியமும், த்ரிஷயம், டேக் ஆப் இப்படி நிறையப் படங்களை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்பதாலேயே எனது கணிப்பொறியில் சேமித்து வைத்திருக்கிறேன்.

நாம் இன்னமும் மாஸ் நாயகர்களுக்காக கதை என்று ஒன்று வேண்டும் என்பதையே மறந்து படமெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாலு சண்டையும் அஞ்சு பாட்டும் போதும் என்ற மனநிலையில் இருந்து இன்னும் மாறவில்லை. பற்றாக்குறைக்கு சூரி, விவேக், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு போன்றோரின் வறட்சியான நகைச்சுவைகளுமே தமிழ்ச் சினிமாவை எழ விடாமல் அழுத்திப் பிடித்து வைத்திருக்கின்றன.

வடிவேலு என்னும் கலைஞன் இல்லாதது தமிழ்ச் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு என்று கூட சொல்லலாம் என்றாலும் தொழில் மீது காட்ட வேண்டிய பக்தியை அரசியல்வாதிக்காக காட்டியதால் தானாகத் தொலைந்து போன நகைச்சுவையாளன்தானே அவர். நுணலும் தன் வாயல் கெடும் என்ற பழமொழிக்குப் பாந்தமாய்ப் பொருந்திப் போனவர். இவரால் மட்டும் தமிழ்ச்சினிமா தழைத்து விடாது என்றாலும் சவக்குழிக்குப் போகாமலாவது இருந்திருக்குமோ என்ற ஆதங்கமே கொடுக்கிறது அவரின் சமீபத்திய கமலஹாசன் விழா மேடைப் பேச்சு.

சமீபத்திய தமிழ் படங்கள் இளம் இயக்குநர்களின் கையில் சிக்கி, சாதி என்னும் தரித்திரத்துக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது. ‘அடக்கி வச்சே...’, ‘அடிமைப் படுத்தினே...’, ‘எழுந்து வருவோமுடா...’ என நீலம், பச்சை, சிவப்புன்னு சாதிக்கொரு கலர் கொடுத்து இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் சாதீயத் தீயை நன்றே வளர்க்கிறார்கள். இவர்களின் பாதையில் பயணிப்பதாலேயே தன் சாதிப்பெயரை பைக்கில் எழுதிப் பறக்கிறது இளைஞர் கூட்டம். நல்லதைக் கற்றுக் கொடுக்க வேண்டிய சினிமா சாதியை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பலர் பால் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் ஆதாயத்துக்காக! இது எப்போது மாறும் என்பது கேள்விக்குறியே...

நம்மவர்களுக்கு நேர் மாறாய் இருக்கிறார்கள் மலையாள இளம் இயக்குநர்கள்... சின்னதாய் ஒரு கதை... அதை வைத்துக் கொண்டு திரையில் மாயாஜாலம் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றும் வாழ்க்கைக் கதைகளாய் நம்முன்னே நின்று நம்மை வசமிழக்க வைக்கின்றன. அவர்கள் சாதிக்குள்ளோ மதத்துக்குள்ளோ மறந்து நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் பயணிக்கிறார்கள். அரசியல் பேசுகிறார்கள்... அதிகாரத்தைச் சாடுகிறார்கள். அன்பை விதைத்து அநீதியைக் கொல்கிறார்கள். சாதியையோ மதத்தையோ சுமக்கவேயில்லை. சக மனிதனின் வாழ்க்கையைச் சுமக்கிறார்கள். நம் முன்னே அதைச் சுவையுடன் படைக்கிறார்கள்.

தமிழ்ச்சினிமா இன்றைய நிலையில் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது... ஒரு சிலர் மட்டுமே அதைத் தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. புதிதாய் புதிய கதையுடன் வரும் இயக்குநர்கள் முதல் படத்தை முக்கனியின் சுவையுடன் எடுத்து, தியேட்டர் கிடைக்காமல் படும் அவதியில், தனது நல்ல படம் ஓடாமல் முடங்கிப் போன வருத்தத்தில் அடுத்த படத்தை தமிழ்ச்சினிமாவின் மசாலா பார்முலாவிலோ அல்லது சாதீயப் பார்முலாவிலோ எடுக்க ஆரம்பித்துக் காணாமல் போய்விடுகிறார்கள். மலையாளத்தில் முதல் படம் கொடுத்த பெரும் தாக்கத்துக்கு இணையாக, அதையும் விட இன்னும் சிறப்பாக இரண்டாவது படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் பயணிக்கிறார்கள். அதில் வெற்றியும் காண்கிறார்கள்.

இங்கே நாம் மாஸ் நடிகர்களுக்காக கதை எழுதுகிறோம். ஆனால் மலையாளிகளோ தங்கள் கதைக்கான நடிகர்களைத்தான் தேடுகிறார்கள். அப்படித்தான் சமீபத்திய படங்கள் எல்லாம் மகா வெற்றியைக் குவித்திருக்கின்றன.  சிறிய படங்களுக்கு இங்கே சரியான விளம்பரம் கிடைப்பதில்லை... ஆனால் அங்கே சிறிய பட்ஜெட் படங்கள்தான் பெரிய இலக்கை நோக்கி நகர்கின்றன.

வினீத் ஸ்ரீனிவாசன் ஒரு நாயகனுக்கு உரிய உடலமைப்பு கொண்டவரல்ல என்றாலும் மிகச் சிறப்பாக, அற்புதமாக நடிப்பவர். நல்ல பாடகர், இயக்குநர். அவர் நடித்தால்தான் சரியாக இருக்குமென வந்த படங்கள் பல. சமீபத்தில் அவரின் 'மனோகரம்' சினிமாவைப் பார்த்தேன். அப்படியான கதாபாத்திரத்தில் நம்மவர்கள் நடிக்க யோசிப்பார்கள். ஆட்டோகிராப்பில் பலர் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும்தான் சேரன் நடிகனானார். சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் கதாபாத்திரத்தில் சிலர் நடிக்க மறுத்ததால்தான் அவரும் நடிகனானார்.

மனோகரத்தில் ராசி என்பது என்னவென்றே அறியாத, எதைச் செய்தாலும் தோல்வியே மிஞ்சும் ஒரு பெயிண்டரின் கதாபாத்திரம் வினீத்துக்கு.! மனுசன் அடித்து ஆடியிருப்பார். அந்த உருவத்தை தமிழ்ச் சினிமா என்றால் ஏற்றுக் கொள்ளவே மறுக்கும் ஆனாலும் நாமும் இப்போது மாறித்தானே இருக்கிறோம். சரவணா ஸ்டோர் ஜாம்பவான் அண்ணாச்சியை எல்லாம் நாயகனாக்கி கொடியும் கட்டவுட்டும் வைக்கும் நாளுக்கு காத்துக் கொண்டிருக்கிறோமா இல்லையா? வினீத் எழுதி இயக்கிய 'தட்டத்தீன் மராயத்து' பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லை என்றால் பாருங்கள், அழகானதொரு காதல்கதை.

இவரைப் போல்தான் பஹத்பாசிலும்! நடிப்பு அரக்கன். எவனாவது ஒரு இளம் நாயகன் வழுக்கைத் தலையுடன் படங்களில் நடிப்பானா? இவர் நடித்தார். எதார்த்த நடிப்பென்றால் பஹத் எனத் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டார். ‘அன்னையும் ரசூலும்’ திரைப்படத்தைப் பார்க்கும் போது ‘யார்டா இவன்?’ எனத் தோன்றியது. அடுத்தடுத்த படங்களில் இவரின் நடிப்பு பிரமிக்க வைத்தது. பஹத்தின் ஒவ்வொரு படத்தையும் தேடித்தேடிப் பார்க்க வைத்தது அவரின் அலட்டலில்லாத, ஆத்மார்த்தமான நடிப்பு. இதுவரை அவரின் எல்லாப் படங்களும் பார்த்தாச்சு. தமிழில் வந்ததைத் தவிர.

இதே வரிசையில் ஷௌபின் ஷாகிர் பற்றிச் சொல்லியே ஆகணும்... இவரின் ‘சூடானி ப்ரம் நைஜீரியா’ படத்தைப் பார்க்கும் முன்பு வரை ஒரு நகைச்சுவை நடிகனாய்த்தான் இவரைத் தெரிந்து வைத்திருந்தேன்... சத்தியமாக சந்தானத்தைப் போல் இவர் இல்லை. இந்தப்படம் பார்த்தபோது இவரின் நடிப்பு வியக்க வைத்தது. அதன் பின் பார்த்த படங்களில் எல்லாம் ஷௌபின் என் மனம் கவர்ந்த நாயகராய் மாறிப் போனார்... அவர் இருந்தால் அந்தப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்றாகிப் போனது. கும்பளங்கி நைட்ஸில் மகிழ்ந்து கடந்த போது அம்புலியில் மனுசன் அடித்து ஆடியிருப்பார். அப்படி ஒரு நடிப்பை அந்தக் கதாபாத்திரத்துக்கு இவரைத் தவிர வேறு யாராலும் தந்திருக்க முடியாது. அம்புலி இவரின் வாழ்நாள் சாதனைப்படம் என்றும் சொல்லலாம்.

இப்படியே துல்கர் சல்மான், நிவின் பாலி, சோனு நிகம், ப்ரித்விராஜ், டொவினோ தாமஸ், அஜூ வர்கீஸ், ஜெயசூர்யா, குஞ்சக்கோ போபன் என ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாகப் பேசிக் கொண்டே செல்லலாம். மலையாள சினிமா என்று சொல்லிவிட்டு நாயகர்களின் பின்னே செல்வது முறையல்லவே! மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் வரிசை நாயகர்களுக்குப் பிறகு மலையாளத்துக்கு கிடைத்திருக்கும் இளைஞர் பட்டாளம் மிகச் சிறப்பாக நடிக்கிறது. இவர்களின் தொடர் வெற்றிக்குப் பின்னே நல்ல கதைகள் இருக்கின்றன. அதைக் கொடுப்பவர்கள் புதிதாய் பதியமிடும் இளம் இயக்குநர்களே. மலையாளச் சினிமா உயரத்தை நோக்கி நகர்ந்து செல்ல ஆரம்பித்து நாட்களாகிவிட்டது. நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மலையாள சினிமாவில் ஒவ்வொரு படமும் புதிதான கதைக்களத்துடன்... எதார்த்தமாக எடுக்கப்படுகின்றன. இந்த எதார்த்தக் கதையாடலே அந்தப் படங்களின் வெற்றிக்கு வித்திடுகின்றன. மேலே சொன்னது போல் நாயகனுக்காக கதை என்பதைவிட கதைக்காகத்தான் நாயகன் என்பதில் மிகத் தெளிவாக, உறுதியுடன் இருக்கிறார்கள்... நாயகனுக்காக கதையில் எந்தச் சமரசமும் செய்வதுமில்லை... செய்ய விரும்புவதுமில்லை. அவர்களின் படங்களைக் களங்களே நிர்ணயம் செய்கிறது. காட்சிப்படுத்துதலில் நம்மை வீழ்த்தி விடுகிறார்கள்.

தமிழ்ச்சினிமா, நான் சின்ன வயதில் எப்படிப் பார்த்தேனோ அப்படியேதான் இன்னும் நகர்கிறது. சில நல்ல படங்கள் எப்போதேனும் தலைகாட்டுவதுடன் சரி... மாஸ் நாயகர்களின் படங்களுடன் வெளிவந்து மறுநாளே பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன. மிக மிக அவசரம், மேற்குத் தொடர்ச்சி மலை, தொரட்டி, ஒத்தைச் செருப்பு போன்ற படங்களையெல்லாம் நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்? அசுரன் கூட மாஸ் ஹீரோ என்பதால்தான் இமாலய வெற்றி பெற்றது என்பதே வெளிப்படையான உண்மை.

நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமா மாஸ் என்னும் கோட்டைக்குள் உட்கார்ந்த பிறகு, ‘கதையா..? அப்படின்னா..?’ என்ன என்று கேட்க வைத்துவிட்டது. நாங்கள் எடுப்பதுதான் கதை... நாலு சண்டை, ஐந்து பாட்டு... கொஞ்சம் பஞ்ச் வசனங்கள் இருந்தால் போதும் கட் அவுட் வைக்கவும் அதுக்குப் பால் ஊத்தவும் அப்படியே தங்களுக்கு வாக்கரிசி போட்டுக் கொள்ளவும் ஒரு கூட்டம் இருக்கு என்பதை உணர்ந்தபின் கதைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. அதுவும் குறிப்பாக புதிய இயக்குநர்கள் எல்லாருமே சொல்லி வைத்தாற்போல சாதிகளைச் சுமந்து படமெடுப்பதுதான் கேவலத்தின் உச்சம். அதையும் தூக்கி வைத்துக் கொண்டாடவும் ‘நான் இவன்டா’ எனச் சாதி சொல்லித் திரியவும் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது... பின் எப்படி நல்ல கதைகளுக்கு இங்கே மதிப்பிருக்கும்..?

மலையாளக் கரையோரம் இப்படியான சாதீய இயக்குநர்கள் ஒதுங்கவில்லை என்பதே ஆறுதல். நல்ல சிறுகதைகளை வாசிக்கும் போது கிடைக்கும் மனநிறைவு சமீபத்திய மலையாள புதிய இயக்குநர்களின் படங்களில் கிடைக்கிறது என்பதே உண்மை.

சல்லிக்கட்டு, தண்ணீர் மத்தன் தினங்கள், அம்புலி, உயரே, ஜூன், கும்பளங்கி நைட்ஸ், இஸ்க், வைரஸ் எனச் சமீபத்தில் பார்த்து... ரசித்த படங்கள் எல்லாம் மனசுக்குள் இன்னும் தித்திப்பாய்...

முடிந்தால் இந்தப் படங்களைப் பாருங்கள்... மனநிறைவான சிறுகதையை காட்சிப்படுத்திப் பார்த்த அனுபவம் கிடைக்கும்... நிச்சயமாய் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவீர்கள். கத்தியும் ரத்தமும் சாதியும் மதமும் இல்லாத ஒரு வாழ்வை ரசிக்க முடியும்.

மலையாளத் திரையில் மண் வாசமும் மனதின் வாசமும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் காலமிது. இந்த வாசம் இன்னும் இன்னுமாய்த் தொடரட்டும். 

 - பரிவை சே. குமார்

திங்கள், 9 மார்ச், 2020

சிறுகதை : சாமியாடி (அகல் மின்னிதழ்-ஜனவரி:2020)

எப்பவும் போல் அகல் மின்னிதழுக்கு ஒரு கட்டுரை அனுப்பிய போது கதை கொடுங்களேன் எனக் கேட்டார் நண்பர் சத்யா. இரண்டு கதைகளை அனுப்பினேன். அதற்கு முன் கட்டுரை ஒன்றும் அனுப்பியிருந்தேன். ஒரு கதையையும் கட்டுரையையும் ஜனவரி-2020 அகல் மின்னிதழில் வெளியிட்டிருந்தார். ஊரில் இருந்ததால் அது குறித்துப் பகிர முடியவில்லை. இதோ 'சாமியாடி'யை இங்கே பகிர்ந்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க. அப்படியே அகலிலும் உங்க கருத்தைச் சொன்னா நல்லாயிருக்கும். நன்றி.

அகலில் வாசிக்க, கருத்துச் சொல்ல : சாமியாடி

---------------------------------
ரோட்டோரத்தில் இருந்த சிறிய கீற்றுக் கொட்டகை டீக்கடை முன் வண்டியை நிறுத்தினான் ரவி, அதிலிருந்து இறங்காமலேயே 'இங்க சாமியாடி வீடு எங்கப்பு இருக்கு?' எனக் கேட்டபடி தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் பின்னாலிருந்த சாமியய்யா.

"எந்தச் சாமியாடிப்பு? மேலக்காட்டாரா... இல்ல வடக்கிவூட்டானா?" கடைக்கு முன் கிடந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து தினத்தந்தியில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம்பிள்ளை சத்தமாகக் கேட்டார்.

“இங்க ரெண்டு சாமியாடியா இருக்காவ?" சாமியய்யா ஆச்சர்யமாகக் கேட்டார்.

"ஆமா... நிறையச் சாமியாடிக இருக்கானுக... நண்டு சிண்டெல்லாம் சாமி ஆடுதுவ... ஆனா சாமியாடின்னு பேரெடுத்தவுக அவக ரெண்டு பேருதான்"

"ம்.... இந்த பாதரக்குடியில பொண்ணக் கொடுத்துருக்காருல்ல... பெரியகருப்பத்தேவர்..."

"ஓ.... செரி... செரி... அட நம்ம மேலக்காட்டார்... அதானே... இப்ப ஆரு வடக்கிவூட்டானப் பாக்க வர்றா..."

"வீடு...?"

"நேர போங்கப்பு... கம்மாய்க்கர தாண்டி மேக்கால ஒரு பாத திரும்பும்... அதுல போனீங்கன்னா சோத்தாங்கைப் பக்கமா பச்சக் கேட்டுப் போட்ட தோட்டமிருக்கும்... கேட்டுல கூட குஞ்சரம்மாள் தோட்டம்ன்னு எழுதியிருக்கும் அதுக்குள்ளதான் வீடு... தேவரு இப்பத் தோட்டத்துலயே இருக்காவ"

"சரிங்கய்யா"

"அப்பு காபி சாப்புட்டுப் போறது... நம்ம கடயில சுத்தமான பசும்பாலுங்க." டீ ஆத்தியபடி கேட்டான் கடைக்கார சுப்பு.

"இப்ப காபி வேணாந்தம்பி வரும் போது குடிக்கிறோம்"

"செரிங்கய்யா.... நீங்க வரும்போது ஐசு வந்துரும்... வெயிலுக்குச் சும்மா சில்லுன்னு நன்னாரி வேர் போட்ட தண்ணியில சர்பத்துப் போட்டுத்தாரேன்... அப்புடி ஒரு சர்பத்த வேற எங்கயும் குடிச்சிருக்க மாட்டீங்க" சுப்பு பேசிக் கொண்டிருக்கும் போதே வண்டியைக் கிளப்பினான் ரவி.

வண்டி கம்மாக்கரையைத் தாண்டி மேற்குப் பக்கமாக போன சரளை ரோட்டில் திரும்பி குஞ்சரம்மாள் தோட்டம் என எழுதியிருந்த பச்சைக் கேட்டின் முன் நின்றது. இருவரும் வண்டியில் இருந்து இறங்கி வேட்டியை அவிழ்த்து நல்லாக் கட்டிக் கொண்டார்கள். ரவி சற்று தள்ளிப் போயி ஒரு காரஞ்செடிக்குப் பின்னே அமர்ந்து ஒண்ணுக்கு இருந்தான்.

"அங்கயிருந்து அடக்கிக்கிட்டு வந்தியாக்கும்... கடக்கிட்ட நிக்கிம் போது போயிருக்கலாமுல்ல, வீடு வாச இருக்க இடத்துல பொண்ணு புள்ளங்க வரும் போகும்..." கடுகடுத்தார் சாமியய்யா.

அவரை முறைத்துவிட்டு "இப்ப இங்கிட்டு யாரு வந்தா... சும்மா எப்பப் பாத்தாலும் நய்யி நய்யின்னு" முணங்கிய ரவி கேட்டை நோக்கிப் போனான்.

"தோட்டந் தொரவா இருக்காவ... நாயி கெடக்கும்... பார்த்துத் தொற"

"ம்..." என்றபடி சின்னக் கேட்டைத் திறந்து காலை வைத்தான்.

"வவ்... வவ்...." என மூன்று நாய்கள் பாய்ந்தோடி வர, "ஏய் மணி...." எனக் கத்தியவாறு வாழைகளுக்கு இடையே வேப்பங்குச்சியால் பல் விளக்கியபடி வந்தார் உயரமான பெரியகருப்பத்தேவர்.

அவரின் குரலுக்கு மூன்றும் முறுவலித்தபடி நின்று, அருகே இருந்த தென்னையை ஒட்டி தண்ணி ஓடும் வாய்க்கால் கரையில் படுத்துக் கொண்டன. உள்ளே வந்த இருவரையும் பார்த்து வாயிலிருந்த எச்சிலைத் துப்பிவிட்டு "யாருப்பு நீங்க..? என்ன வெசயம்?" என்றார்.

"மேக்காட்டூர்ல இருந்து வாரோம்... உங்களக் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கோம்... சிறுவாச்சூர் மணிதான் சொல்லிவிட்டாப்புல"

"அடடே மணி சொல்லி வாரீங்களா? நேத்து கூட பேசும்போது சொன்னான், வருவாங்க... பாத்துக் கொடுங்கன்னு... வாங்க... வாங்க" என உள்ளே அழைத்துச் சென்று வாசலில் போட்டிருந்த நீளக் கொட்டகையில் விரித்திருந்த சமுக்காளத்தில் அமரச் சொல்லி, "ஏய் தங்கம் தண்ணி கொண்டாந்து கொடாத்தா' ன்னு சொல்லிட்டு, "'சித்த இருங்க ரெண்டு தண்ணியள்ளி உடம்புல ஊத்திக்கிட்டு வந்துடுறேன்" என மோட்டார் அறைப்பக்கமாப் போனவர், "ஏத்தா வந்திருக்கவுகளுக்கு காபி கொடுங்க... ரொம்பத் தூரத்துலயிருந்து வந்திருக்காவ... கருக்கல்ல கெளம்பியிருப்பாவ... சாப்புட்டாகளா இல்லயான்னு கூடத் தெரியல... கேட்டுச் சாப்பிட எதாச்சும் கொடுங்க... வீட்டுக்குள்ளயே அட காக்காம" எனக் கத்தினார்.

அவர்கள் காபி மட்டும் குடித்திருந்தார்கள்... சாப்பிட மறுத்து விட்டார்கள்... ரவி பொறுமை இழந்து உக்காந்திருந்தான். பசி பொறுக்காதவன் அவன்... காபி குடித்தும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்திருந்தது அவனுக்கு.

நெற்றி நிறைய விபூதியைப் பட்டையாக அடித்து நடுவில் நிலாவைப் போல பொட்டு வைத்து, சட்டையில்லாத கரிய உடம்பின் மேல் ஒரு குத்தாலம் துண்டு போட்டுக் கொண்டு அவர்களுக்கு எதிரே வந்தமர்ந்தார்.

"சீக்கிரம் வந்தீக, இல்லேன்னா நாங்கிளம்பி வெளிய போயிருப்பேன், சீனமங்கலம் பெரியய்யா வீட்டுக்கு வாரேன்னு சொல்லியிருந்தேன். வண்டி அனுப்புறேன்னு சொன்னாக... இப்ப வந்துரும்.. ம்... சொல்லுங்க... என்ன பெரச்சன" என்றார்.

"பொட்டப்புள்ள... கல்யாணம் வச்சிருக்கேன்... இப்ப பேய்க் கோளாறாட்டம் ஒரு மாரிக்கி உடம்பத் திருகிக்கிட்டு முழிக்கிது... எம்புட்டோ வயித்தியம் பாத்தும் சரிவரல... குறி, கோடாங்கின்னு எல்லாம் பாத்துட்டோம்... எல்லாத்தயும் பொயிட்டு வான்னு சொல்லுது. தங்கச்சி மவனுக்குத்தான் கட்டுறோமுன்னாலும் அவங்க மனசுல தப்பாத் தோனிறக்கூடாதுல்ல... நாளக்கி வாழப்போற எடத்துலயும் இப்படி இருந்தா... அதோட வாழ்க்க போயிருமே... மணிக்கிட்ட விபரம் சொன்னப்போ அதுதான் உங்களச் சொன்னுச்சு... நீங்கதான் எப்படியாச்சும் புள்ளக்கி குணமாக்கி விடோணும்... உங்கள நம்பித்தான் இம்புட்டுத்தூரம் வந்திருக்கோம்... புள்ளய கூட்டியாரச் சொன்னா.... நாள போக நாளான்னக்கி செவ்வாக்கெழம அப்ப கூட்டியாரோம்.... இல்லே நீங்க வர்றதுன்னா... என்ன வாங்கணும்ன்னு சொல்லிட்டிங்கன்னா வாங்கி வச்சிருவேன்" ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சாமியய்யா.

"ம்... எல்லாத்தையும் மொத்தமாக் கொட்டிட்டீக... ம்.... செரி... புள்ளக்கி என்ன வயசாவுது?"

"இந்த அப்பிய வந்தா இருவது முடியுது..."

"ம்... கலியாணத்துல புள்ளக்கி சம்மதம்தானே?"

"அதுக்குப் பிடிச்சதாலதானே தங்கச்சி மவனுக்கு கொடுக்கிறேன்..."

"ம்... எத்தன நாளாயிருக்கு?"

"நெருக்கி ஒரு மாசமா அப்புடித்தானிருக்கு"

"ம்... குறி, கோடாரியெல்லாம் கேக்கலயாக்கும்"

"ஆமா"

"தீட்டுப் போறதுல சமீபமா பெரச்சின எதுவுமிருக்கா?"

"ம்... தீட்டு நிக்காமப் போவுது"

"அதுலதானே அவுக வாசம் செய்வாக விடமாட்டாக... விட்டுப் போகணுமின்னா சொத்தெழுதிக் கொடுன்னு கேப்பாக"

"நீங்கதான் எப்படியாச்சும்..."

"ம்... கருப்பனுக்கிட்ட வந்துட்டியல்ல கவலய விடுங்க... இனி அவன் பாத்துப்பான்... உங்க புள்ளக்கி ஒண்ணும் ஆவாது"

"ம்... புள்ளய பாக்கச் சகிக்கல..." கண்கலங்கினார் சாமியய்யா.

"கலங்காதிய... கருப்பனுக்கு முன்னால கலங்கி நிக்கலாமா.... ம்ம்ம்.... ஆத்தா அந்த விபூதித் தட்ட இங்க கொடு" கத்தினார்.

விபூதித்தட்டு வந்ததும் அதிலிருந்த சூடத்தை தட்டின் நடுவே பத்த வைத்துத் தன் முன்னே வைத்து "படியிறங்கி வாடா பதினெட்டாம் படிக்கருப்பா... பாதை மறிச்சி வாடா பாண்டி முனியா... எங்குரல் கேக்கலையோ ஏழுருக் கருப்பா... மாத்தில் ஆடி வாடா மாரநாட்டுக் கருப்பா... பரியேறி வாடா பரியமயக் கருப்பா..." அப்படின்னு சத்தமாகச் சொல்லியபடி கண் மூடி ஊரில் இருக்கும் கருப்பர்களையெல்லாம் அழைக்க ஆரம்பித்தார்.

அவர் உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது.... தலையைத் தலையை ஆட்டினார்....

திடீரெனச் சத்தமாக "அப்பா... தவிச்சி நிக்காதேப்பா... எங்கிட்ட வந்துட்டயில்ல... கவலயெதுக்கு... அல்பாயுசுல மாண்ட கன்னி ஒருத்தி புடிச்சிருக்கா... கல்யாணக் கனவோட போனவ கனவ நெற வேத்த உம்புள்ள உடம்புல ஏறியிருக்கா... எறங்க மறுப்பா... அவளுக்குத் துணையா நாலஞ்சி சேந்திருக்கு... முனியும் எடப்படுறான்... ஒண்ணுமில்ல உம்மவளுக்கு... நாம் பாத்துக்கிறேன்... போ" என்றவர் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

விபூதித் தட்டில் அதுவரை எரிந்த சூடம் அணைந்தது. வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் சொம்புத் தண்ணீரோடு ஓடி வந்து அவர் முன் நீட்டினார். தண்ணியை வாங்கிக் கொஞ்சம் குடித்து விட்டு எழுந்து முகங்கழுவினார். துண்டால் துடைத்தபடி மீண்டும் அவர்களுக்கு முன்னே அமர்ந்தார்.

"நான் இங்க பெரும்பாலும் சாமி அழக்கிறதில்ல, அழச்சா அன்னக்கி முழுவதும் உடம்பு வலியிருக்கும். வேற வேல பாக்க முடியாது, செவ்வா வெள்ளி மட்டுந்தான் பாக்குறது, மணி சொல்லி வந்திருக்கீக, அதான் அழச்சேன், கல்யாணம் நிச்சயமாயி நின்னு போனதால மாண்ட ஒருத்தியும் மரணத்தைத் தானே தேடிக்கிட்ட சிலதுகளும் சேந்து புடிச்சிருக்குக, முனியும் எடப்பட்டிருக்கான், பயமில்ல, நாஞ் சொல்றத வாங்கிக்கிட்டு வெள்ளிக்கெழம புள்ளயக் கூட்டியாங்க, பார்த்து முடிச்சி விட்டுடலாம், கவலப்படாதீக, எல்லாஞ் செரியாகும், கருப்பன மீறுன காரியம் என்ன இருக்குங்கிறேன்" என்றார்.

"ம்... கருப்பன்தான் சரியாக்கணும்... எம்புட்டுச் செலவானாலும் பரவாயில்ல... புள்ளயச் சரியாக்கி விட்டுறணும்"

"கவலயே வேணாம்... வெள்ளிக்கெழம உங்க மகளா வருவா பாருங்க" என்றார்.

"ஆத்தா அந்த பேப்பர் பேனா எடுத்துக்கிட்டு வா" எனச் சத்தமாய் சொல்லி, கொண்டு வந்து கொடுத்த பேப்பரில் எழுதி நீட்டினார். எழுந்து வாங்கிய சாமியய்யா, "இப்ப எம்புட்டுன்னு சொன்னீங்கன்னா" என இழுத்தார்.

"அதான் வெள்ளிக்கிழம வருவீங்கள்ல அப்ப வாங்கிக்கிறேன் போயிட்டு வாங்க"

"மொத மொதல்ல பாத்துட்டு சும்மா போவக்கூடாது"

"அப்புடியா... செரி... உங்க மனசுக்குத் தோணுனத கருப்பனோட விபூதித் தட்டுல வச்சிச்ட்டுப் போங்க." என்றார்.

இருநூற்றி ஒரு ரூபாயை வைத்து விட்டுக் கிளம்பினார்கள். அவர்கள் கேட்டைத் திறந்து வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்த மூன்று நாய்களும்... குரைக்கவில்லை. வாசலுக்கு வந்தவுடன் ரவி அந்தச் சிட்டையை வாங்கிப் பார்த்தான்.  

"என்ன இம்புட்டு எழுதியிருக்காரு... இதெல்லாமே வேணுமா? இதுவரக்கிம் செலவழிச்சதை மொத்தமா இவருக்கிட்ட கொடுக்கணும் போல" என்றான்.

"சரியாக்கணுமின்னா சும்மாயில்ல... பெரியகருப்பத்தேவர் பெரிய ஆளு... மணி அப்பவே சொன்னாப்புல... வெளியிலயிருந்து வந்து கூட்டிப் போயிருவாகளாம். அவுகல்லாம் கணக்குப் பாக்காமக் கொடுப்பாகளாம் அதான் தோட்டந்தொறவுன்னு வசதியாயிருக்காரு. செவ்வாவெள்ளி கூட இங்கேயிருக்கேன்னு சொன்னாத்தான் இருப்பாராம். வண்டியெடு... புள்ளக்கிச் சரியானப் போதும்... இதுவரக்கிம் எம்புட்டோ செலவழிச்சிட்டோம்... இதயுஞ்செய்வோம்... இவரு சரியாக்குவாருன்னு எனக்கு நம்பிக்கயிருக்கு" என்றார்.

ரவி வண்டியை எடுத்தான். தேவரைக் கூட்டிப்போக சீனமங்கலத்துக் கார் வந்து நின்றது.

"என்னப்பு ஆளிருந்தாரா?" பாலுக்கு எடைக்கட்டியபடி கேட்டான் சுப்பு.

"ம்... இருந்தாரு"

"உங்க நல்ல நேரம் இல்லேன்னா கருக்கல்லயே கெளப்பிக் கொண்டு போயிருப்பானுவ சாமியாடின்னா அப்படி ஒரு சாமியாடி, முடியும் முடியாதுன்னு மொகத்துக்கு நேர சொல்லிருவாரு முடியும்னு சொன்னா முடிச்சிக் கொடுத்துருவாரு, டீயா, காபியா?"

"டீக்காபி வேணாம்... சர்பத்துக் கொடுங்க... அவனுக்கு என்ன வேணுமோ அதக் கொடுங்க... பசியாருற மாரிக்கி எதுவுமிருந்தாக் கொடுங்க"

"என்ன சுப்பு பெரியகருப்பத்தேவர் பொயிட்டாரா?" என்றபடி வந்தான் அவன். முகத்தில் பெரிய விபூதிப்பட்டை, கழுத்தில் பாசி மாலைகள், காவி வேஷ்டி, சட்டையில்லாத கரிய உடம்பு.

"இப்பத்தான் வண்டி போயிருக்கு இன்னக்கி எங்கயோ சாமி அவருக்கு அள்ளிக் கொடுக்குது ம்ம்ம்... உனக்குந்தான் கொடுத்துச்சு... நீதானே கெடுத்து வச்சிருக்கே சுந்தரம் காலயிலயே சரக்கடிச்சிட்டு வர்றே, அப்புறம் கருப்பன் எப்படி வருவான்"

"எனக்குள்ள வரவேண்டான்னுதான் சரக்கடிக்கிறேன் சுருக்குன்னு ஒரு டீப்போடு" என்றபடி சொக்கலால் பீடிக் கட்டில் இருந்து ஒன்னை உறுவிப் பற்ற வைத்தான் சுந்தரம்.

"பெரியவரே நீங்க சாமியாடி வீட்டுக்கு வழி கேட்டப்போ நாங்க சொன்ன ரெண்டாவது சாமியாடிதான் இவரு. குடிச்சே சாமியை விரட்டுறாரு ஆனா அது போவாம இவரையே சுத்துது உங்க பெரச்சினயச் சொல்லுங்க... இவரு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்"

"அதெல்லாம் வேணாம்பா பெரியவரு எல்லாம் சொல்லிட்டாரு சாமி வேசத்துல காலயிலயே தண்ணி அடிச்சிட்டு நிக்கிறாரு அவருக்கிட்ட போயி மொறயிடச் சொல்லுறே, சர்பத்துப் போடுறியா இல்ல தின்ன ரொட்டிக்கி காசக் கொடுத்துட்டுப் போவா" கோபமானார் சாமியய்யா.

"என்னப்பு கோபப்படுறிய... இவரும் நல்லாச் சொல்லுவாருன்னு சொன்னே விடுங்க இந்தா சூப்பராச் சர்பத்துப் போட்டுத் தாரேன்"

ரவி டீ வாங்கிக் குடித்தான். சுந்தரமும் டீயுடன் எதிரே உக்கார்ந்து சாமியய்யாவையே பார்த்தான். ஜில்லுன்னு சர்பத்தை சாமியய்யா கையில் கொடுத்தான் சுப்பு.

"க்க்.... கெக்... ஹக்கக்... அய்யாவுக்கு எம்மேல ஏன்டா இம்புட்டுக் கோபம்... சாப்புடுற சோத்துல மண்ணா அள்ளிப்போட்டேன்.... க்கே...க்கேக்க்க்கே... ஹக்கஹ்க்கா" சிரித்தான்.

சாமியய்யா பேசாமல் அமர்ந்திருந்தார். டீயை வைத்துவிட்டு அவரையே உற்றுப் பார்த்தான். கண்கள் மேலும் சிவப்பேற, அப்படியே அமர்ந்திருந்தான்.

"மொறக்கிறாருடா., என்னயவே மொறக்கிறாரு எம்பார்வைக்கு ஊரே பயப்படும் இவரு என்னப் பயமுறுத்துறாராம் ஹா..ஹா... கெக்கெக்கே..."

சாமியய்யா தலையைக் குனிந்து கொண்டார்.

"பொட்டப்புள்ள உடம்ப முறுக்கிக்கிட்டுக் கெடக்காளா" அதட்டலாய்க் கேட்டான்.

சாமியய்யா அவனை ஏறிட்டுப் பார்த்தார்... ரவி காலியான டீக்கிளாஸை வைத்துவிட்டு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

"மாண்ட கன்னியோட மத்ததுகளும் சேர, முனியும் முன்ன நிக்கிறானேய்யா" பல்லைக் கடித்தான்.

"புள்ளய கூட்டிப் போறேன்னு நிக்கிறாளேய்யா. விடுவேனா எம்புள்ளய விடுவேனா" பல்லை நறநறவெனக் கடித்தான்.

அவரு சொன்னதையே இந்தத் தண்ணி வண்டியும் சொல்லுது சொல்லிட்டு காசு கொடுன்னு மல்லுக்கு நிக்கும். கொடுத்தா தண்ணியடிச்சிட்டு எங்கயாச்சும் விழுந்து கெடக்கும் என்று நினைத்தவர் சுப்புவிடம் காசு கொடுத்துவிட்டு "ரவி வண்டிய எடு" என்றார்.

"ஏய் உம்புள்ளக்கி ஒண்ணுமில்லப்பா, உன்னோட ஊருக்குப் போற வழியில பொய்யக்கர முனியனுக்கு தேங்காய் ஒடச்சிட்டுப் போ. புள்ள சரியாவா புடிச்சது ஓடிரும் சரியானதும் முனியனுக்கு அந்த புள்ளய வச்சி பொங்க வைக்கச் சொல்லு... போ திரும்பிப் பாக்காதே"

"ரவி வண்டிய எடுன்னேன். குடிச்சிட்டு உளறுறான் அதப்பாத்துக்கிட்டு. நாம தேவரு சொன்னபடி சாமானோடு வெள்ளிக்கெழம வருவோம்"

"சொன்னது புரியல, என்னோட வாக்க நீ மதிக்கலயில்ல? கருப்பன் பொய் சொல்றான்னு நெனக்கிறேயில்ல? போ போற வழியில காட வலமிருந்து எடம் போவும். போ... அப்ப நம்புவே இந்தக் கருப்பன, அப்ப நம்புவேடா இந்தக் கருப்பன" சப்தமாகச் சிரித்தான் சிரித்தான்... சிரித்துக் கொண்டே இருந்தான்.

ரவி வண்டியை எடுத்தான், சாமியய்யா அவனை திட்டிக் கொண்டே வண்டியேறினார்.

"அந்தாளு சொல்ற மாதிரி ஒரு தேங்காய் வாங்கி ஒடச்சிப் பாக்கலாமே, அவராத்தானே சொல்றாரு சரியான நல்லதுதானே"

"போடா தண்ணியப் போட்டுட்டு உளறுறான் அதத் தெய்வ வாக்குன்னு சொல்லிக்கிட்டு"

"எதுக்கு இப்பக் கடுப்பாகுறிக"

"செரி அப்பா ஒண்ணுஞ் சொல்லல பேசாமப் போ"

"போய்க்கிட்டுத்தான் இருக்கோம்"

வண்டி வேகமாய்ப் போனது இருவரும் பேசவில்லை.

"இதுவரக்கிம் தங்கச்சிக்கிப் பாத்தவங்கட்டயெல்லாம் நாமளாத்தான் வெவரஞ் சொன்னோம். அப்புறந்தான் அவங்க இது இப்படி இது அப்புடின்னு சொல்ல ஆரம்பிச்சாக... பணந்தான் செலவாச்சு... பலனில்ல ஏ இப்பப் போயிப் பாத்த சாமியாடிக்கிட்ட கூட நாமதானே வெவரம் சொன்னோம். அவராவா இதுக்குத்தானே வந்திருக்கேன்னு கேட்டாரு? இல்லயில்ல?"

"அவரு கேக்கல ஆனா சரியாச் சொன்னாருல்ல? இந்தக் குடிகாரன் சொன்னததானே அவரும் சொன்னாரு"

"அதேதான்... இவங்க மட்டுமில்ல இதுவர பாத்த எல்லாருமே இதத்தானே சொன்னாக... சாமியாடி பெரியகருப்பத்தேவருக்கிட்ட நாம சொன்னோம். தீர்வு சொன்னாரு. இந்தாளு அவரே இதுதானே உன்னோட பெரச்சினயின்னு சொல்லி அதுக்குத் தீர்வும் சொன்னாரு. நாம எதாச்சும் கேட்டோமா? யோசிங்க. அந்தாளுக் குடிச்சிருக்கதால அவரு சொன்ன சொல்லு சரியில்லன்னு எப்புடி முடிவு பண்ணுவீங்க."

சாமியய்யா யோசிக்க ஆரம்பித்தார். பொட்டக்காட்டில் மொட்டை வெயிலில் வண்டி போய்க் கொண்டிருக்க...

காடை ஒன்று வலமிருந்து இடம் போனது.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 8 மார்ச், 2020

மனசு பேசுகிறது : எதிர்சேவை செய்ய தேவகோட்டை டூ சென்னை

ன் எதிர்பார்ப்பை எல்லாம் விட மிகச் சிறப்பாக முதல் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார் சகோதரர் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன். இவரின் ராஜி நாவல் விரைவில் வெளிவர இருக்கிறது.  

தசரதன் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வரச் சொல்லியிருந்தார். சில குடும்ப வேலைகளால் அவரின் அழைப்பின்படி செல்ல இயலவில்லை. எப்படியும் அவரைப் பார்த்து வரவேண்டுமென ஒரு நாள் குடும்பத்துடன் பயணப்பட்டோம். பாப்பா விடுதியில் என்பதால் எங்களுடன் எங்கும் பயணப்படவில்லை அழகர் கோவில் சென்றது உள்பட. இந்த முறைதான் பாப்பா இல்லாமல் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பார்க்கவே விடமாட்டேங்கிறானுங்க.. லீவு போட்டா 500 பைன் கட்டுன்னு சொல்றானுங்க... பின்ன எப்படி கூட்டிச் செல்வது... அதான் அவரை விடுத்து நாங்கள் மட்டும் பயணப்பட்டோம்.

புத்தகக் கண்காட்சிக்கு நான் போகவில்லை என்றாலும் நெருடா, நந்தகுமார் என பலர் சென்றிருந்தார்கள். புத்தகத்தை வாங்கி, போட்டோக்களும் அனுப்பியிருந்தார்கள். அதைப் பார்த்த போதே ஒரு வித சந்தோஷம் மனசுக்குள்... முதல் புத்தகமல்லவா..?

தசரதன் புத்தகம் அனுப்பி, கொரியர்க்காரர்கள் சரியான முறையில் தொடர்பு கொள்ளாது திருப்பி அனுப்பிவிட்டார்கள். மீண்டும் அனுப்பினார்... நான் கேட்ட இரண்டே இரண்டு புத்தகங்கள். 

ஒரு புத்தகத்தை வீட்டில் வைத்துவிட்டு... மற்றொரு புத்தகத்தோடு எனது பேராசானைப் பார்க்கப் போனேன். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி... புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தவர் 'என்ன குமார் எனக்குத்தானே சமர்ப்பணம் போட்டிருக்கணும் ஏன் போடலை..?' என்றார் சிரிப்போடு. 

நான் போட்டிருந்தது அவருக்குத்தான்... இந்தப் புத்தகம் மட்டுமல்ல.. அடுத்துப் புத்தகம் வந்தாலும் அவருக்கு சமர்ப்பணம் எப்பவும் இருக்கும். என் எழுத்தின் மீது மனசார நம்பிக்கை வைத்திருப்பவர்களில் இவரே முதல்வர்.

அங்கிருந்த நண்பர்களிடம் குமார் நல்ல எழுத்தாளர், வாழ்க்கைப் பிரச்சினைகள் அவரை இதுவரை எழ விடாமல் வைத்திருக்கிறது என என்னைப் பற்றியே பேசினார். அப்பாவைப் பற்றியும் அப்பாவின் பண்பையும் பற்றிப் பேசினார். 

புத்தகம், போட்டோ என கிடைத்ததையெல்லாம் எடுத்துக் கொடுத்தார். கதையின் தலைப்புக்களே படிக்கத் தூண்டுது என்றார். நான் தலைப்பு வைப்பதில்தான் கஷ்டப்படுவேன் என்பதை அவரிடம் சொல்லவில்லை. வாசித்துச் சொல்கிறேன் என்றார். அடுத்த முறை போகும் போது வாசிச்சிட்டேன் என கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டார். அது சொன்னது அவரின் ஆயிரம் விமர்சனங்களை...

'வேரும் விழுதுகளும்' நாவல் மிகவும் பிடித்ததாய்ச் சொன்னார். அதற்கு அணிந்துரை நான்தான் எழுதுவேன் என மீண்டும் சொன்னார். வண்ணதாசனை வாசிக்கச் சொன்னார். அவருடன் போன் பண்ணிப் பேசச் சொல்லி போன் நம்பர் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் தலையாட்டினேன்... இதுவரை எதையும் செய்யவில்லை.

என் எழுத்துப் புத்தகமானதில் என்னைவிட அதிகம் மகிழ்ந்தவர் என் ஐயாதான் என்பது அவரின் முகத்தில் பேச்சில் அணைப்பில் தெரிந்தது.

(கலக்கல் ட்ரீம்ஸ் அலுவலகத்தில் சகோதரர். தசரதனுடன் - பின் அட்டை போட்டோவுல இருக்க மாதிரி இல்லைன்னு நினைச்சிருப்பாரோ..?)
சென்னையில் அக்கா வீட்டில் தங்கியதால் சந்திக்க நினைத்த பலரைப் பார்க்க முடியவில்லை. காயத்ரி அக்கா நானே வருகிறேன் என்றார்... பின்னர் போனில் தொடர்பு கொண்டபோது தொடர்பு எல்லைக்கு வெளியே என்றுதான் சொன்னது... பின் என்ன செய்ய... இந்த முறையேனும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் அடுத்த முறையாவது என மாறியது.

சென்னை சென்ற அன்று மாலையே பெரிய மாப்பிள்ளையுடன் நானும் மனைவியும் கலக்கல் ட்ரீம்ஸ் நோக்கிப் பயணித்தோம். விஷாலும் சின்ன மாப்பிள்ளையும் ஊர் சுற்றக் கிளம்பி விட்டார்கள். போக்குவரத்து நெரிசலில் நீந்திப் போய்ச் சேர்ந்தோம். புத்தகத் திருவிழா முடிந்து அள்ளி வந்த புத்தங்கங்கள் பெட்டி பெட்டியாய்க் கிடக்க, மலர்ந்த முகத்துடன் வரவேற்றார் தசரதன். 

நீண்ட நேர உரையாடல்... 

அதன் பின் எழுத்தாளர் சில்வியா பிளாத் அவர்களும் இணைந்து கொண்டார்கள்... காபி, சிறு சிற்றுண்டி சாப்பிட்டபடியே நீண்ட உரையாடல்... அதன் பின் சில எதிர்சேவை புத்தகத்துடன் விடை பெற்றோம். 

அப்போதுதான் முதல்முறையாக தசரதனைப் பார்க்கிறேன்... கதைகள் அனுப்பி, அவர் 12 கதைகளைத் தேர்வு செய்து எனக்கு அனுப்பி, பிழை திருத்தம் செய்து, அட்டைப்படம் முடிவு செய்து, புத்தகமாகி எல்லாம் முடியும் வரை போனில் மட்டுமே தொடர்பில் இருந்தோம்.

உண்மையில் மிகச் சிறப்பான மனிதர் அவர்... அன்போடு பேசிய பழகிய விதம் மிகவும் கவர்ந்தது. 

அகல் மின்னிதழ் நண்பர் சத்யா சந்திக்க வருகிறேன் என்றார். ஏனோ வரவில்லை... ஒருவேளை அவருக்கு ஏதேனும் வேலை இருந்திருக்கலாம். வாகனம் கையிலின்றி சென்னையில் ஒருவரைத் தேடிச் செல்லுதல் என்பது கடினமே.

(குடந்தை ஆர்.வி.சரவணன் அண்ணன் வீட்டில் - ஊருக்கு வந்தா ஒரு கருப்பா மாறிடுறோம்தான்)
முகப்பேரில் இருக்கும் சகோதரர் குடும்பத்தைச் சந்திக்க சென்ற போது அம்பத்தூரில் இருந்த குடந்தை சரவணன் அண்ணனைச் சந்தித்து கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு புத்தகம் கொடுத்துப் பெற்று கிளம்பினோம். அதைச் சாப்பிடுங்க, இதைச் சாப்பிடுங்க என குடும்பமே வற்புறுத்தியது என்றாலும் மதியம் சகோதரர் வீட்டில் புல் கட்டுக் கட்டியதால் காபியுடன் எஸ்ஸாயிட்டோம் நானும் அக்கா பையனும்.

இரண்டாம் நாள் இரவு சரவணா ஸ்டோர்... இல்லை இல்லை மிகப்பிரமாண்டமான லெஜண்ட் சரவணா ஸ்டோரில் சுற்றினோம். விஷால் விழுந்து விழுந்து போட்டோ எடுத்தான் எல்லாச் சோபாக்களிலும் அமர்ந்து.

மொத்தம் மூன்றே நாள்தான் சென்னை... ஊருக்கு வருமுன் மகனுக்கு பீச்சுக்குப் போக வேண்டும்... மனைவிக்கு ஜெயலலிதா, கலைஞரைப் பார்க்க வேண்டும் என்ற தலையாய வேலைகள் இருந்ததால் மூன்றாம் நாள் முழுவதும் அவர்களுக்காகவே நகர்ந்தது.

எப்படியோ எதிர்சேவையை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்த கலக்கல் ட்ரீம்ஸ்க்குப் போய் வந்தது மகிழ்ச்சிதான். நம்மையும் எழுத்தாளன் வட்டத்துக்குள் கொண்டு வந்தவங்களைப் பார்க்காமல் இருப்பது தவறுதானே... அதான் இன்னல்களுக்கு இடையேயும் பயணப்பட்டோம்.

(மேலே இரண்டு படங்களில் இருக்கும் குமார் இப்ப இப்படித்தான்.. உடம்பை குறைச்சாச்சு)
ஊருக்கு வந்த பின்புதான் உடல்நலச் சிக்கல்கள்... அதன் பின்னான நாட்கள் தேவகோட்டை - மதுரை என மருத்துவமனைப் பயணமாய் அமைந்ததால் எங்கும் செல்லவில்லை. மொத்தத்தில் இந்தப் பயணம் எதிர்சேவையை நோக்கிய சென்னைப் பயணம், மாமா-அத்தையின் சாந்தி என இரண்டு சந்தோஷங்களையும் பல சங்கட்டங்களையுமே கொடுத்தது. அடுத்த முறையேனும் மகிழ்வான பயணமாக அமையட்டும்.

நன்றி.

அப்படியே புத்தகம் வாங்க விரும்பினால்...

கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம்,
எண்-3, நேரு தெரு,
மணிமேடு தண்டலம்,
பெரிய பணிச்சேரி,
சென்னை – 600122.
கைபேசி: 9840967484.  
மின்னஞ்சல் முகவரி – kalakkaldreams@gmail.com.
இணையதள முகவரி - www.kalakkaldreams.com.
புத்தகத்தின் விலை – ரூபாய் 100/- தபால் செலவு தனி
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 2 மார்ச், 2020

எதிர்சேவை விமர்சனம் 1: நால்வர் கருத்து

முதல் சிறுகதைத் தொகுப்பு... பெரும்பாலும் வலைப்பூவில் எழுதிய, பரிசு பெற்ற கதைகளே என்றாலும் புத்தகமாய் வரும்போது அது குறித்து எழும் விமர்சனங்கள், அது மென்மையாகவோ அல்லது கடுமையாகவோ பாராட்டினாலும் திட்டினாலும் விமர்சனங்கள்தான் இன்னும் சிறப்பாய் எழுத வைக்கும். பாராட்டை விட இதை இப்படி எழுதியிருக்கலாம்... இது அபத்தமாய் இருக்கு எனச் சொல்லும் விமர்சனங்களே... ஒவ்வொரு கதையையும் உள்வாங்கி எழுதும் விமர்சனைங்களே... ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தாலும் நம்மைக் கூர் தீட்டும் என நம்புபவன் நான் என்பதால் அப்படியான விமர்சனைங்களையே அதிகம் எதிர்பார்க்கிறேன்.

இதுவரை நால்வரின் (ஒருவர் வாசிக்கும் போது புத்தக விற்பனைக்காக அன்பின் பேரில் எழுதியதும் சேர்த்து) விமர்சனம் பார்த்தேன்... எனது எதிர்பார்ப்புக்கு நேராக இருக்கும் விமர்சனங்கள்... அப்படியானால் என் கதைகள் ஒரளவு அவற்றிற்கான இடத்தைப் பிடித்திருக்கின்றன என்றே நினைக்கிறேன்...  மகிழ்கிறேன். இன்னும் பலரின் விமர்சனங்கள் வரும் என்று நம்புகிறேன். எப்படியும் அடித்துத் துவைப்பார்கள் என்று நம்புகிறேன்... தயாராய் இருக்கிறேன்... இன்னும் சிறப்பான கதைகளை கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்.


முதல் விமர்சனம் முகநூலில் எழுத்தாளர் சில்வியா பிளாத் எழுதியது. நேரில் பார்த்தபோது மிக விரிவாகப் பேசினார். நாவல் எழுதுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நாவலா என்று நினைத்துக் கொண்டேன்... இந்த வலைப்பூவில் நான்கு தொடர்கள் எழுதியிருக்கிறேன் என்றும் சொன்னேன். அவர் சொன்ன களத்தில் எழுத ஆசைதான்... பார்க்கலாம்.

அட்டகாசமான சிறுகதைத் தொகுதி. அதுவும் அந்த அழகர் ஆத்துல இறங்குற சிறுகதை படிக்கும் போதெல்லாம் நாமளும் இப்படித் திருவிழாவில் யாருக்கும் தெரியாமல் நம்ம கிரஷ் கையை பட்டும் படாமல் தொட்டுட்டு போற சீனு எல்லாம் நினைவுக்கு வரும்.

பரிவை சே குமாரின் முதல் புத்தகம். கண்டிப்பாக ஒரு ரவுண்டு வருவாங்க

இரண்டாவதாய் சகோதரர் நெரூடாவின் அத்தை (பாரதியின் அம்மா) இடமிருந்து வந்த போன் விமர்சனம்...

தம்பி படிச்சிட்டேம்ப்பா... ரொம்ப நல்லாயிருந்தது...
அப்படியே ஒரு கிராமத்துக்குள்ள போயி அவங்க கூட இருந்துட்டு வந்தமாதிரி இருந்துச்சு...
நிறைய எழுதுங்க...

உண்மையில் அவர் சொன்னது மிகவும் சந்தோஷமாக இருந்தது. சகோதரர்கள் இராஜாராம் மகள், பால்கரசு மகள் முதல் நெருடாவின் அத்தை வரை எல்லாரும் வாசிக்கும்படியாக என் புத்தகம் இருப்பதில் மகிழ்ச்சி. என்ன தஞ்சாவூருக்கு வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் என்றார்கள். போகத்தான் உடல்நலம் இடம் கொடுக்கவில்லை... அடுத்த முறை விருந்தே சாப்பிட்டு வரலாம்.

மூன்றாவதாய்... வெங்கட் நாகராஜ் அண்ணன் தனது வலைப்பூவில் ஜனவரியில் எழுதி இருக்கும் விரிவான விமர்சனம். இதுதான் முதல் விமர்சனமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்... சகோதரர் 'கலக்கல் ட்ரீம்ஸ்' தசரதன் அவர்கள் தில்லியில் இருந்து ஒருவர் புத்தகம் கேட்டிருந்தார் அனுப்பிவிட்டேன் என்ற போது அண்ணனாகத்தான் இருக்கும் எனப் பெயர் சொல்லிக் கேட்டபோது அவருக்குப் பெயர் சரியாக ஞாபகமில்லை... புத்தகம் கிடைத்த உடன் வாசித்து எழுதியிருக்கிறார். ஊரில் இருந்ததால்... உடல் நலமின்மையால்... இணையப் பக்கம் வராததால்... நேற்று தற்செயலாகத்தான் பார்க்க முடிந்தது... அருமையாக எழுதியிருக்கிறார் அவர் பாணியில்...

படித்ததும் நீண்ட நேரம் புத்தகத்தினைக் கீழே வைத்து – யோசிக்க வைத்தது முதல் கதை – நண்பர் பத்மநாபன் அவர்களுடன் இந்தக் கதை பற்றி அடுத்த நாள் விரிவாகப் பேச வைத்தது – ”நினைவின் ஆணிவேர்” என்ற கதை தான். முதல் கதையே முத்தான கதை. காதல், காதலால் வந்த உறவுகளுடன் உண்டான மோதல் – பிரிவுக்குப் பிறகு ஒரு சூழலில் பிரிந்த பெற்றோரைச் சந்தித்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் காதலித்து மணம் புரிந்த மனைவியை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன்/கணவன் – அவருக்குக் கிடைத்த அனுபவம் என ரொம்பவும் சிறப்பாக கதையை நகர்த்தி இருக்கிறார் குமார். ரொம்பவே பிடித்த கதையாக முதல் கதை.

வெங்கட் அண்ணாவின் விமர்சனம் பார்க்க "இங்கு" சொடுக்குங்கள்.

நான்காவதாய் புத்தகம் வந்தது முதல் எனக்கு இத்தனை காப்பி வேணுமெனச் சொல்லி, புத்தகக் கண்காட்சிக்குப் போய் வாங்கியதுடன் வாசிக்க ஆரம்பிக்கும் போதே அண்ணன் நந்தகுமார்  எழுதியது... விமர்சனப் பார்வை பின்னர் வரும் என்ற போதிலும் புத்தகம் குறித்து எழுதியிருக்கிறார்.

நித்யா குமார் எனும் பரிவை சே. குமார்,வளைகுடாவிலுள்ள குறிப்பிட்டத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர்.வலைப்பூ தளத்தில் அவரின் எழுத்துக்கள் மிகப் பிரபலம்.அமீரகத்தில் நடக்கும் இலக்கிய விழாக்களின் இவரின் தொகுப்பு இலக்கிய உலகில் மிக்க வரவேற்பும்..பாராட்டும் பெறுபவை.வலைப்பூவில் எழுதும் இவரின் கதைகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.  அவரின் அச்சு வடிவிலான முதல் சிறுகதைத் தொகுப்பு “எதிர் சேவை”வாசிக்க ஆரமிபித்துள்ளேன்.

வலைப்பூவில் வந்து விருதுகள் பல பெற்ற சிருகதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.அவரைப் போலவே...அவரின் எழுத்தும் எளிமையானவை.. ஆனால் அழுத்தமான கதைக் கரு கொண்டவை... அவரின் தொகுப்பு வரட்டும் அவரை வாசிப்போம் என காத்திருந்த என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு வரம். நண்பர்கள் நெருடாவும்....கவிஞர் பிரபுவும் நித்யா குமாரை ஊக்குவித்து வெளியிட வைத்துள்ளனர்.  அவர்களுக்கு ஒரு சுபோ ஜெயம்.

அழகாக வெளியிட்ட கலக்கல் ட்ரீம்ஸ் நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
வாங்கிப் படியுங்கள்...ரூ. 100 மட்டுமே...

நால்வருக்கும் நன்றி...

இன்னும் எழுத இருப்போருக்கும் நன்றி.
-'பரிவை' சே.குமார்.