மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 23 நவம்பர், 2013

தொடர்கதை: கலையாத கனவுகள் - 30

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

30. மீண்டும் சதியா?

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  அவர்களது காதல் பயணம்சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கிறது.

இனி...

இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் செமஸ்டர் நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. இருவரின் காதலும் நண்பர்கள் மத்தியில் தெரிய வர, ராம்கியின் நண்பர்கள் வேணான்டா... அவங்க அண்ணன் ரவுடிப்பய... உன்னோட குடும்பச் சூழலைப் பாரு... நமக்கான வாழ்க்கையை நாமதான் விரட்டிப் பிடிக்கனுங்கிற நிலமையிலதான் உன்னோட குடும்பச் சூழல் இருக்கு. அவளுக்கு அப்படியில்ல... அப்பா பிஸினஸ்மேன்... சொத்துப் பத்துன்னு நிறைய இருக்கு. காதல் கத்திரிக்காய்ன்னு விழுந்து அதனால விழுகுற ஒவ்வொரு அடியும் உன்னோட குடும்பத்தைப் பாதிக்கும். இதையெல்லாம் தாங்குற சக்தி அம்மாவுக்கு இல்லைடா... நாளைக்கு அவங்க சைடுல ஒத்துக்கலைன்னா ஊரைவிட்டு ஓடிப்போகலாமுன்னு முடிவெடுப்பீங்க... அப்ப பாதிக்கப்படுறது நம்ம குடும்பமாத்தான் இருக்கும் ஏன்னா அவ அண்ணன் என்ன வேணுமின்னாலும் செய்வான். இவளும் கடைசி வரைக்கும் நின்னு பிடிப்பாளான்னு தெரியலை. இதெல்லாம் சரிப்படாதுடான்னு நிறையப் பேசினார்கள்... அவன் மனசுக்குள் புவனா நிறைந்திருந்தாள். அவர்கள் சொன்னபோது அவன் சொன்ன வார்த்தை புவனாதான்டா என்னோட வாழ்க்கை என்பது மட்டுமே.

இவர்களது காதலுக்கு கடவுளே உதவுவது போல் புவனாவின்  கடைசித் தேர்வு ராம்கியின் தேர்வோடு ஒரே நாளில் நடந்தது. பரிட்சை முடிந்ததும் அவளுக்காக காத்திருந்தான். அவள் வரவும் இருவரும் பேசியபடி நடக்கலானர்.

"எப்படி எழுதியிருக்கீங்க..?"

"ம்... நல்லா எழுதியிருக்கேன்..."

"இன்னும் ஒரு பரிட்சை இருக்குல்ல..?"

"ம்..."

"பரிட்சை முடிந்ததும் லீவுல ஊர்லதான் இருப்பீங்களா?"

"இருப்பேன்..."

"என்ன இழுக்குறீங்க... எங்கயும் போறீங்களா?"

"ம்..."

"எங்க..?"

"வேலைக்கு..."

"வேலைக்கா?"

"ம்..."

"எந்த ஊருக்கு...?"

"இங்க தான்..."

"என்னாச்சு... பதில் எல்லாம் சுருக்கமாவே வருது..."

"ம்... மனசு சரியில்லை..."

"ஏன்... என்னாச்சு..?"

"தெரியாத மாதிரி கேட்கிறே..?"

"ம்... கொஞ்ச நாள் லீவுதானே... பிரிவு இருந்தாத்தான் நமக்குள்ள இருக்க உறவு இன்னும் அதிகமாகும்... இதுவரை பரிட்சைக்கு படிச்சது மாதிரி இன்னும் கொஞ்சநாள் ஓட்ட வேண்டியதுதான்... சரி எங்க வேலைக்குப் போறீங்க..?"

"சும்மா... தெரிஞ்ச கடையில போய் இருப்பேன்... ஸ்கூல் டைம்ல ரெண்டு மாசம் லீவு கிடைக்கும்... ஏதாவது சம்பளம் கொடுப்பாரு... இப்போ லீவு கம்மிதான்... சும்மா போய் இருந்துட்டு வருவேன்... உன்னைய பாக்காம இருக்கனுமே அதுதான்..."

"ம்... எனக்குந்தான்...என்னைய எங்க சித்தி வீட்டுக்குப் போகச் சொல்லி நிக்கிறாங்க... நான் போகலைன்னு சொன்னாலும் இங்க இருந்து என்ன பண்ணப்போறேன்னு சொல்றாங்க... எப்படியும் என்னைய பார்சல் பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன்... உங்க மச்சான் வீட்டு போன் நம்பர் கொடுங்க நான் கூப்பிடுறேன்..."

"அவன் வீட்டுக்கு இரவுல கூப்பிட்டாத்தான் நான் பேச முடியும்... பகல்ல வேலைக்கு வந்துருவேன்... உன்னோட நம்பர் கொடு... நான் கூப்பிடுறேன்..."

"எங்க வீட்டுக்கா வேண்டாம்... சித்தி வீட்டுக்குப் பொயிட்டா அங்க இருந்து கூப்பிடுறேன்... நீங்க நம்பரைச் சொல்லுங்க..."

நம்பரைச் சொன்னதும் நோட்டில் குறித்துக் கொண்டாள். இருவரும் பேசியபடியே நடந்து கொண்டிருந்தனர்.

"இங்க பாரு மாப்ளே... இந்த வருசத்தோட இந்த காலேசை விட்டுப் போறோம் தெரியுமில்ல... அப்புறம் அரியர் எழுதத்தான் வருவோம்... அதுவும் நீ பேப்பருக்கு இவ்வளவுன்னு கொடுத்து பேப்பரைத் தூக்கிட்டு லா படிக்கப் போயிடுவே... கொடுக்க முடியாத நாங்கதான் இங்க திரும்பி வருவோம்... தெரியுமில்ல..." என்ற நண்பனிடம் இப்ப என்ன சொல்ல வர்றே..?" என்றான் இளங்கோ.

"என்ன சொல்ல வர்றேனா..? அன்னைக்கு நம்ம ஆளுகளை அடிச்ச அந்த ராமுப்பயலை இன்னும் ஒண்ணும் பண்ணலை... எப்ப திருப்பிக் கொடுக்கிறது..?"

"பண்ணுவோன்டா... இப்ப அவனாட பிரச்சினை..?"

"உனக்குப் பிரச்சினை இல்லை மச்சான்... வைரவனை பகைச்சுக்கக் கூடாதுன்னு நினைக்கிறே... ஒரே சாதிக்காரனுங்க... உனக்கும் அவனோட தங்கச்சி... அதான் நம்ம காலேசுல திரியிற படிப்பாளி... அந்த புவனா மேல ஒரு கண்ணு... எப்படியும் லா முடிச்சிட்டு வந்துட்டா ரெண்டு குடும்பமும் பேசி அவளை கட்டிக்கலாமுன்னு திட்டம் போடுறே... எல்லாந் தெரியுண்டி... எங்களுக்கு இது பிரச்சினை இல்ல... நீயும் அவனும் நாளைக்கு மாமன் மச்சான்னு போயிடுவீங்க... உனக்காக அடிவாங்குனவன்ல ஒருத்தன் என்னோட மச்சான்... அவன் எப்படா அவனைத் தூக்குறீங்க... இல்லேன்னா ஒதுங்குங்க நாங்க போட்டுக்கிறோம்ன்னு நச்சரிக்கிறான். அவனுக செய்யிறதைவிட நாம செஞ்சாத்தான் கெத்து... புரிஞ்சிக்க..." மற்றொருவன் சூடாக பேசினான்.

"சரிடா... வைரவன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு..."

"எதுக்கு.. அவனுகிட்ட பாதுகாப்பு கேக்குறியா... இல்ல அடிக்க ஆளு கேக்குறியா... கேவலமா இல்லை..."

"அதுக்கு இல்லடா... நாளைக்கு அவன் அந்த ராமுப் பயலுக்காக வந்து நின்னா..."

"அதெல்லாம் வரமாட்டான்... அந்த ராமுப்பய அவனோட தங்கச்சி கூட பேசுறதுல அவனுக்கு இஷ்டமில்லை... அவனே போட்டாலும் ஆச்சரியமில்லை..."

"சரி.... அதெல்லாம் இருக்கட்டும்... நாம சொல்லிடுறது நல்லதில்லையா...?"

"ஒரு மசுரும் வேண்டாம்... இம்புட்டு நாளும் அவனை எதிர்த்துட்டு ஒரு சின்னப்பயலை தூக்க அவன் கால்ல விழணுமா?"

"கோபப்படாதீங்கடா... நான் பிராக்டிக்கலா திங்க் பண்ணிப் பார்த்தேன். ஓகே... அவனோட கடைசிப் பரிட்சை என்னைக்குன்னு பார்த்து வையி.... நாம இதுல எறங்க வேண்டாம். திருப்பத்தூர் காலேசுல படிக்கிற மணிக்கிட்ட சொல்லிட்டா கையக் கால முறிச்சிப் போட்டுடுவான்..."

"சரியான ஆள்... காலு கைய ஒடச்சி ஜென்மத்துக்கும் நல்லா நடக்க விடாம பண்ணிடனும்..." என்றான் ஒருவன். ராம்கியை அடிப்பதற்கான சதியும் அதன் பின்னான செயல்பாடுகளும் யாருக்கும் தெரியாமல் நடந்தது.

கடைசிப் பரிட்சை முடிந்து எல்லாரும் சந்தோஷமாக பேசிச் சிரித்து விடை பெற்றுச் சென்றதும் டவுனை விட்டு தனது ஊருக்குப் பிரியும் கிளைச்சாலையில் திரும்பி கொஞ்சத் தூரம் போனவன் தன்னை இரண்டு வண்டிகளில் ஆறு பேர் தாண்டிச் செல்லவும் 'யாரு இவங்க... புதுசா இருக்காங்களே'ன்னு யோசித்தபடி சைக்கிளை மிதிக்க, வண்டியை நிறுத்தி இறங்கியவர்கள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஆளுக்கு ஒரு ஆயுதத்தை எடுத்தபடி அவனை நோக்கி வர, "நீதானே இராமகிருஷ்ணன்..." என்று ஒருவன் கேட்க... மற்றொருவன் அவனது சட்டையை கொத்தாகப் பிடித்தான்.

அப்போது தூரத்தில் ஒரு சைக்கிள் வேகமாக வந்து கொண்டிருந்தது.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

தொடர்அருமை தொடருங்கள்... வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

அருமை!!!!///மச்சினன் வராரு,ஹீரோவக் காப்பாத்த!

Manimaran சொன்னது…

செமையா போகுது ...

Unknown சொன்னது…

ஜோக்காளியின் நன்றியைக் காண >>http://jokkaali.blogspot.com/2013/11/blog-post_3165.html
த.ம 2

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆஹா எகிற வைக்குதே மனசை...!

வேலன். சொன்னது…

சீரியல்களில் தொடரும் என போடுவதற்குமுன் கதையில் டிவிஸ்ட் வைப்பதுபோல உங்கள் கதையிலும் தொடரை முடிப்பதற்கு முன் அருமையான டிவிஸ்ட் வைத்து அருமையாக முடித்துள்ளீர்கள்.வாழ்க வளமுடன் வேலன்.