மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 27 நவம்பர், 2013

தொடர்கதை: கலையாத கனவுகள் - 31

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

31. ராம்கி தப்பினானா?

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  அவர்களது காதல் பயணம்சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கிறது. இதற்கிடையே ராம்கியை அடிக்க இளங்கோ நண்பர்களை அனுப்பினான்.

இனி...


தூரத்தில் சைக்கிளில் யாரோ வருவது தெரிந்ததும் "டேய் மாப்ளே... நீ இவனுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்க மாதிரி நில்லு... சட்டையில பின்னால அருவாளை வச்சிக்க... நாங்க எல்லாரும் வண்டியில இருக்கோம். அந்த ஆளு நம்மளை கடந்து போறவரைக்கும் எல்லாம் சகஜமா இருக்கட்டும்... பதட்டம் எதுவும் வேண்டாம்... டேய் இங்கேரு... சைக்கிள்ல வர்றவன் உங்க ஊருக்காரனாவோ உனக்குத் தெரிஞ்சவனாவோ இருந்து காட்டிக் கொடுக்க நினைச்சு கத்துனேன்னு வச்சுக்கவே மாப்ளக்கிட்ட இருக்க அருவாளால சங்குல ஒரே இழுதான்... இழுத்துப் போட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்போம்... எங்க மயிரைக்கூட எவனாலயும் புடுங்க முடியாது... சத்தமில்லா நின்னியன்னா உங்கிட்ட கொஞ்சம் பேசிட்டு போய்க்கிட்டே இருப்போம்... சரியா?... மாப்ள சுதாரிப்பா நில்லு... கத்துனா போட்டுட்டு வண்டியில தாவிரு... சரியா" என்றான் அந்த அணியில் நடுநாயகமாக நின்றவன். இவன்தான் இளங்கோ சொன்ன மணியாக இருக்க வேண்டும். ஒரு மாணவனுக்கான முகக்கலையைவிட ரவுடிக்கான எல்லாம் அட்சரம் பிசகாமல் இருந்தது. ஆள் நரம்பு மாதிரித்தான் இருந்தான். சிகரெட் சுவைத்த உதடு கருத்து காய்ந்து போய் இருந்தது. கண்கள் வரும்போது குடித்துவிட்டு வந்த பிராந்தியை பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

'ஆஹா... வகையா மாட்டிக்கிட்டோமே... இன்னைக்கு எப்படியும் நம்மளைப் போடப் போறாய்ங்க... என்ன கத்துனா கழுத்துல கண்டிப்பா இறக்கிடுவான்... கத்தாம நின்னா உயிருக்கு உத்ரவாதம் இருக்கும்... ம்... யாரா இருப்பாய்ங்க இவனுக... ஒருவேளை வைரவன் தங்கச்சிக்கிட்ட பழகுறது தெரிஞ்சு தட்டி விடச் சொல்லியிருப்பானோ... இல்லே இளங்கோ... சேச்சே... அன்னைக்கு நமக்கிட்ட பேசுனதுக்கு அப்புறம் அவரு ரொம்ப ஜென்டிலா நடந்துக்கிட்டாருல்ல... அவரு இப்படி ஆள் வச்சு அடிக்கிற அளவுக்கு கீழ்த்தரமாப் போகமாட்டாரு.. எப்படிப்பார்த்தாலும் இது புவியோட பழகுறதுக்காக நடக்கப்போற தாக்குதல்தான்... என்ன நடந்தாலும் கடவுள் செயல்' என்று மனதுக்குள் ராம்கி நினைத்துக் கொண்டிருக்கும் போதே சைக்கிள் அருகில் வந்தது.

"என்னடா மாப்ளே... என்னடா பண்ணுறே... இதெல்லாம் யாரு?" என்றபடி சைக்கிளில் இருந்து இறங்கிய சேகர், பைக்கில் அமர்ந்திருந்த அந்த நரம்பனைப் பார்த்ததும் "டேய் மாப்ளே மணி, என்னடா இங்க...?" என அவனது தோளில் தட்டினான்.

"டேய் மாப்ளே சேகரு... என்னடா இப்பல்லாம் நம்ம போற பஸ்ல ஆளைக் காணோம்... எதாவது மாட்டிருச்சா...? திருச்சி வண்டியில போறியாம்... ஒரு நாளைக்கு வந்து பாக்கனும்... எந்த ரதி மாட்டியிருக்கானு..." என்றபடி வண்டியில் இருந்து இறங்கி பாக்கெட்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவனிடம் நீட்டினான். சேகர் சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தி அவனது சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டான்.

"அதெல்லாம் இல்ல மாப்ளே... நம்மல்லாம் ஒரு இடத்துல லாக் ஆகுற ஆளுங்களா என்ன... ம்... கே.எஸ்.எஸ்ல ஒரே கூட்டம். அதுபோக காலையில அவசரமா வந்து வண்டியை பிடிக்க வேண்டியிருக்கு. காரைக்குடியில போய் ரொம்ப நேரம் போட்டுடுறான். அதுக்கு திருச்சி வண்டியியல போன நேர எங்க பாலிடெக்னிக்கிட்ட போயி இறங்கிக்கலாமுல்ல... இப்ப என்ன உனக்காக இனி கே.எஸ்.எஸ்ல வந்துட்டாப் போச்சு... ஆமா இங்க என்ன வேலை உனக்கு... புல்லா தண்ணி போட்டுட்டு வந்திருக்கே... ஒரு செட்டப்பா வந்திருக்கிறதைப் பார்த்தா... என்னடா... எதாவது பிரச்சினையா?... " என்றான் சேகர்.

"இல்லடா... அதெல்லாம் ஒண்ணும் இல்லடா..."

"இல்லையே... ஒரு குரூப்பா வந்திருக்கிறதைப் பார்த்தா சும்மா வந்த மாதிரி தெரியலையே... ஆமா... இவனோட என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க... இவனைத் தெரியுமா என்ன...?"

ராம்கி பேசாமல் நிற்க,  மற்றவர்களும் ஒன்றும் சொல்லவில்லை. "இவனை உனக்குத் தெரியுமா?" என்று மணி திருப்பிக் கேட்டான்.

"என்ன மாப்ளே... நம்ம மச்சான் ஒருத்தன் படிப்பாளி இருக்கான்னு உங்கிட்ட சொல்லி இருக்கேன்ல... அவன்தான்டா இவன்.. என்னோட மச்சான்..." என்று ராம்கி தோளில் கையைப் போட்டான்.

"நல்லாப் படிக்கிறவனா...?"

"அதுல என்னடா சந்தேகம்... இவன் கலந்துக்கிற போட்டியில எல்லாம் பரிசு வாங்குறவன்டா... ஆமா ஆளைத் தெரியாமத்தான் பேசிக்கிட்டு இருந்தீங்களா.... மாப்ளே என்ன பிரச்சினை... இவனை யாருடா அடிக்கச் சொன்னா..." சேகர் நேரடியாகக் கேக்க, ராம்கி அவனைப் பார்த்தான்.

"அப்படியெல்லாம் இல்லடா..."

"இங்க பாரு மாப்ளே... என்ன பிரச்சினை எனக்கிட்ட சொல்லுவியா மாட்டியா...?"

"சரி இங்க வா..." என்று அவன் தோளில் கைபோட்டு தனியாகக் கூட்டிச் சென்றான்.

"மாப்ளே... சாரிடா உன்னோட மச்சான்னு தெரியாது... அவனைப் போடத்தான் வந்தோம்... சைக்கிள் வர்றதைப் பார்த்துட்டு அது போகட்டும்ன்னு காத்திருந்தோம்... அவனோட நல்ல நேரம் நீ வந்திருக்கே..."

"எ... என்ன மாப்ளே சொல்றே... அவனைப் போடவா... டேய்... என்னடா இதெல்லாம்... அப்பா இல்லாம எங்க அயித்தை கஷ்டப்பட்டு வளக்குறாங்கடா... அவங்களோட கனவே இவன்தான்டா... இவனை எதுக்குடா.,.. இவனுக்கு யாருடா எதிரி..." படபடப்பாக கேட்டான்.

"அதெல்லாம் எதுக்கு மாப்ளே... விடு... யாரா இருந்தா என்ன... ஆனா பயலை சூதனமா இருக்கச் சொல்லு... எனக்கிட்ட எந்திரிக்காம கையை காலை ஒடிச்சிப் போடச் சொன்னானுங்க...  இன்னைக்கு நாங்க விட்டுட்டுப் போகலாம். நாளைக்கு வேற யாராவது வந்து ஆளையே போட்டாலும் போட்டுருவாய்ங்கடா..."

"என்னடா சொல்றே... இவனைப் போடணுங்கிற அளவுக்கு என்னடா பிரச்சினை... யாருடா... இவன் லவ் பண்ணுற பொண்ணோட அண்ணனா... இல்ல வேற யாருமா...?"

"லவ் பண்ணுறானா.. அதெல்லாம் தெரியாது மாப்ளே... நீ எப்படியோ அப்படித்தான் இவனைப் போடச் சொன்னவனும்... யாருன்னு சொல்றது நட்புக்குச் செய்யிற துரோகமுடா... சரி விடு... நான் கிளம்புறேன்... நாளைக்கு கே.எஸ்.எஸ்ல பார்க்கலாம்." 

"சரி... மாப்ளே... இனி இவனை அடிக்க வரமாட்டியல்ல..."

"என்ன மாப்ளே... இப்படிக் கேக்குறே.. உனக்கு மச்சான்னா எனக்கு அவன் பங்காளி... வா" என்றவன் சேகரின் தோளில் கை போட்டபடி மீண்டும் ராம்கியிடம் நடக்கலானான்.

"டேய் போகலாமா?"

"பங்காளி... சிவா பேசினான்... என்னாச்சின்னு கேட்டான்... நான் வந்து சொல்றோம்ன்னு சொல்லிட்டேன்..." என்றான் வளர்ந்தவன். இப்போது இந்தப் பேச்சு இங்கு தேவையில்லை என்று நினைத்தவன் ஒன்றும் சொல்லாமல் சரி சரி என்றான்.

ராம்கி பக்கம் திரும்பி "இனி நீ எனக்குப் பங்காளி... லவ் பண்ணுறதா மாப்ள சொன்னான்... ஏதாவது பிரச்சினை வந்தா சொல்லு... நா வந்து பொண்ண தூக்கியாந்து வேணுமின்னாலும் கல்யாணம் பண்னி வக்கிறேன்... வரவா..." என்றவன் "சரி..வாங்கடா போகலாம்...  வண்டியை எடுங்க" என்றபடி அவனது பதிலுக்கு காத்திராமல் வண்டியில் தாவி ஏறினான்.

ராம்கி பேசாமல் சைக்கிளை உருட்ட, "என்னடா என்ன பிரச்சினை... யாருடா அடிக்கச் சொன்னது..."

"எதுக்குன்னு தெரியலை... கடவுள் புண்ணியத்தால நீ வந்தேடா மச்சான்... இல்லேன்னா இந்நேரம்... நான் ஒத்தைக்கு ஒத்தையின்னா மோதிருவேன். ஆனா அருவா... கத்தி... சைக்கிள் செயினுன்னு... ம்... நீ வரலைன்னா வெட்டியிருப்பாங்கடா..."

"அதெல்லாம் உன்னோட நல்ல மனசுக்கு எதுவும் வராது.. ஆமா சிவா யாரு..?"

"சிவாவா... சிவா?" யோசித்தான்.

"ஆமாடா மணிக்கிட்ட ஒருத்தன் சொன்னான்ல... என்னாச்சின்னு சிவா போன் பண்ணினான்னு..."

"ம்... சிவா... டேய் மச்சான்... அவன் இளங்கோவோட வலது கையிடா... செகண்ட் இயர் படிக்கிறான்..."

"அப்ப உன்னைய அடிக்கச் சொன்னது இளங்கோ... பழிக்குப் பழி..."

"எவ்வளவு நல்லவனாட்டம் பேசினான் தெரியுமா... அவனா... நம்பமுடியலை மாப்ள..."

"இவனுக எல்லாம் நல்ல பாம்பு மாதிரிடா... கர்வம் வச்சே போடப்பார்ப்பானுங்க... நம்ப மட்டும் கூடாது... சரி மணி என்ன சொன்னான் தெரியுமா..? வேற எவனாச்சும் இவனைப் போட வந்தாலும் வருவாங்கன்னு சொன்னான்... சூதனமா இரு மாப்ளே... பேசாம லீவுக்கு எங்கயாச்சும் போயிரு..."

"எங்கடா போறது... கொஞ்ச நாள்தான் லீவு... பார்த்துக்கலாம்... வா... எதுக்குடா லவ் பண்ணுறேன்னு சொல்லித் தொலச்சே..."

"எனக்கு பதட்டத்துல என்ன பேசுறதுன்னு தெரியலை... ஒருவேளை அவளோட அண்ணனான்னு தெரிஞ்சுக்க கேட்டேன்... அவனும் இதை பெரிசா எடுத்துக்கலை... பழகிட்டா மணி உயிரையே கொடுப்பான். எனக்கு பஸ்லதான் பழக்கம்... ரொம்ப குளோஸ்... இனி அவனால உனக்கு பிரச்சினையில்லை... மணி தொட மறுத்துட்டா எவனும் தொட மாட்டாய்ங்க... அந்தளவுக்கு மணிக்கு பேர் இருக்கு... எதுக்கும் நாம கேர்புல்லா இருக்கணும்..."

"ம்...  நீ பாட்டுக்கு தங்கச்சிக்கிட்ட இதையெல்லாம் சொல்லிடாதே? அவ வேற பயந்துடப்போறா... பாவம்..."

"ம்... எனக்கு இன்னும் படபடன்னு இருக்குடா.... நீ வரும்போது எங்கிட்ட நின்னானுல்ல நெட்டையன் முதுகுப் பக்கம் அருவா சொருகி வச்சிருந்தான்... சைக்கிளைப் பார்த்து நான் கத்தினா கழுத்துல ஒரே போட போடச் சொல்லியிருந்தானுங்க தெரியுமா?"

"தெரியும்... இவனுக நட்புக்காக மட்டுமில்ல காசுக்காகவும் கழுத்தறுக்கிறவனுங்கதான்... ஒரு அரசியல்வாதியை போன வருசம் மழை நேரத்துல நடு ரோட்டுல வச்சிப் போட்டானுங்களே.... ஞாபகம் இருக்கா... அதுல மணிக்கு முக்கியப் பங்கு இருக்கு... ஆளு பாக்கத்தான் நரம்புமாதிரி இருப்பான்... பெரிய மேட்டருக்கு எல்லாம் மணியைத்தான் தேடி வருவானுங்க..."

"ஆத்தாடி..."

"சரி வா.... எதுவும் வெளியில தெரிய வேண்டாம்... எல்லாத்தையும் மறந்துட்டு லீவை எஞ்சாய் பண்ணு..." என்று சேகர் சொல்ல, இருவரும் பேசியபடி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தனர்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை தொடர்கிறேன் நண்பரே
த.ம.2

துரை செல்வராஜூ சொன்னது…

எப்படிங்க... இதை நடு ராத்திரியில உக்கார்ந்து எழுதினீங்க/...

படிக்கிறப்பவே - தலைய சுத்துது!..

Unknown சொன்னது…

ஹூம்..................தப்பிச்சே,மவனே!சூதானமா இருந்துக்க!