மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 நவம்பர், 2013

தொடர்கதை: கலையாத கனவுகள் - 32

முந்தைய பதிவுகளைப் படிக்க...


-----------------------------------------------------------------------

32. தொடரும் பழிவாங்கலும்... தேடும் கண்களும்...

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  அவர்களது காதல் பயணம்சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கிறது. இதற்கிடையே ராம்கியை அடிக்க வந்த மணி, சேகரைப் பார்த்ததும் அடிக்காமல் திரும்பிச் சென்றான்.

இனி...


"என்ன மாப்ள... இப்படிப் பண்ணிட்டு வந்து நிக்கிறே... இப்ப இளங்கோ அண்ணனுக்கு என்ன பதில் சொல்றது. அவரும் சரவணண்ணனும் நீதான் காரியத்தை கச்சிதமா முடிப்பேன்னு சொன்னாங்க... ஆனா..." பேச்சை நிறுத்தி மணியை நோக்கினான் சிவா.

"என்னைய என்ன பண்ணச் சொல்றே...? அவனோட நல்ல நேரம் என்னோட பிரண்ட் சேகர் வந்துட்டான்... நான் என்ன செய்யட்டும்... அதுக்கப்புறம் அவனை எப்புடி போடுறது... நான் எப்ப ஸ்கெட்ச் போட்டாலும் தப்பானதேயில்லை... காலேசு தொறக்கட்டும் இங்க வச்சே போடலாமுன்னு சொன்னேன்... யாரு கேட்டீங்க... போன வருசம் புரபஸரை எங்க வச்சிப் போட்டோம்... காலேசு வாசல்லதானே... இளங்கோ அண்ணனும் சரவணனும்தான் இப்பவே போடணும்... கடைசிப் பரிட்சை... அவங்க ஊர் ரோட்ல வச்சிப் போடுறது ஈசி... அப்படியிப்படின்னு சொல்லி என்னோட பிளானை டோட்டலா மாத்துனது... இப்ப வந்து எனக்கிட்ட கத்துறே..?"

"இல்ல மாப்ள இம்புட்டு தூரம் எல்லாம் பண்ணி... கடைசியில..."

"என்ன பண்ணுனே... தண்ணி வாங்கி ஊத்துனீங்க... அம்புட்டுத்தானே... இந்த இதுல முன்னூறு ரூபாய் இருக்கு... எடுத்துக்க..." என்று பாக்கெட்டில் இருந்து காசை எடுத்து அவனிடம் நீட்டினான்.

"டேய் என்னடா இவன்... நான் காசு கேட்ட மாதிரி... இனி அவனை எப்படிடா போட முடியும்..ய"

"காலேசு தொறந்ததும் எவனையாவது வச்சிப் போடுங்க... இல்ல நீயே போடு..."

"நானா.... அது சரி... இந்தக் காலேசுலதான் இன்னும் ஒரு வருசம் படிக்கணும்... நான் அவனை அடிக்கப் போன வைரவனோட ஆளு அந்த சுதாகர் எனக்கு எதிரா கண்டிப்பா மோதலுக்கு தயாராயிடுவான்... வேற ஆளுகளை வச்சிப் போடுறதுன்னா நீ செய்யாததை எவனும் செய்ய வரமாட்டானுங்க... அது போக அவனை அடிக்கவே போறோம்ன்னு வையி அவன் என்ன சொல்லுவான் தெரியுமா... நான் மணியோட பிரண்ட்... வேணுமின்னா அவன்கிட்ட கேளுங்கன்னு சொன்னாலும் சொல்லுவான்... ஏன்னா அவனோட சொந்தக்காரன்... அதான் அந்தப்பயலோட மாமனோ... மச்சானோ... சொன்னியே அவன் எல்லாத்தையும் விவரமா சொல்லிக் கொடுத்திருப்பான்..."

"இப்ப எதுக்கு இப்படி புலம்புறே... காலேசு தொறந்ததும் போடப்பாருங்க... இதுல என்னை இழுக்காதீங்க... அப்புறம் அவன் வைரவனை அடிக்கப் போன உங்க ஆளுகளை அடிச்சிருக்கான்... அவன் வைரவனுக்கு சப்போர்ட்டாத்தான்  அடிச்சானா என்ன... இல்லையில்ல... தன் கண் முன்னால ஒருத்தனை அடிக்க வாரானுங்களேன்னுதானே அடிச்சான்... இதே உங்க சைடுல ஒருத்தனை வைரவன் ஆள் வச்சி அடிக்க ஏற்பாடு பண்ணி அதுவும் இவன் கண் முன்னால நடந்திருந்தா... வைரவனுக்கு சப்போர்ட்டா அவனும் சேர்ந்து அடிச்சிருப்பானா..?"

"சேச்சே... அவன் பரம்பரை ரவுடி இல்லை... என் கண் முன்னால யாரை அடிச்சிருந்தாலும் நான் தடுத்திருப்பேன்னுதான் காலேஸ் கவுன்சில்ல சொன்னான்..."

"அப்புறம் என்ன மயித்துக்கு அவனைப் போடணுமின்னு துடிக்கிறீங்க?"

"எதுக்குடா நீ இம்புட்டு சூடாகுறே...? அன்னைக்கு அடி வாங்குனதுல ஒருத்தன் சரவணண்ணனோட மச்சான்... அவருதான் ரொம்ப போர்ஸ் பண்ணுறாரு..."

"அப்புடி அவனை அடிக்கணுமின்னா அவனுக்கிட்ட அடி வாங்கிக்கிட்டுப் போன அந்த நொண்ணையைப் பண்ணச் சொல்லு... நல்லா படிக்கிற பையனாம்... காலேசு கல்சுரல்ல நல்ல பேர் வச்சிருக்கானாம்... ரொம்ப கஷ்டப்படுற குடும்பமாம்... இவனோட படிப்பை நம்பித்தான் குடும்பமே இருக்காம்... இவனை எதுக்குடா அடிச்சி ரவுடி ஆக்கணுமின்னு பாக்குறீங்க... ம்...அவன் பாட்டுக்கு படிக்கட்டும்டா... நாமதான் படிப்பைத் தவிர எல்லாம் செய்யுறோம்... படிக்கிறவனுங்கள விட்டுருங்கடா... வேண்டாம்... "

"நீ சொல்றது சரிதான் மாப்ளே... இளங்கோ அண்ணன் ஒத்துக்கிட்டாலும் சரவணன் ஒத்துக்க மாட்டாரு..."

"அப்ப அவரையே போடச் சொல்லு... டேய் வாங்கடா போகலாம்..." என்றபடி அங்கிருந்து மணி கிளம்ப, சிவா என்ன பண்ணுவது என்ற குழப்பத்தில் இளங்கோவைத் தேடிச் சென்றான்.

"வா சிவா... என்னாச்சி... மணி வந்துட்டானா?"

"அண்ணே அவன் போடலண்ணே..."

"ஏ... ஏன்டா... ரெடியாத்தானே போனான்..."

"ம்... ராம்கிப்பயலோட மச்சான் இவனுக்குப் பிரண்ட்டாம்... இவனுக அடிக்கப் போற நேரத்துல அவன் வந்துட்டானாம்... அதனால..."

"சை... இப்படிப் பண்ணிட்டானே... மணி தொடலைன்னா எவனும் செய்ய மாட்டானுங்களே...  என்னதான் சொல்றான்... கொஞ்ச நாள் கழிச்சு போடுறேன்னு சொல்றானா?"

"இல்லண்ணே... நாம எப்படியோ அப்படித்தானாம் அந்தப் பயலும்... அதனால விட்டுருங்கடா... படிக்கிற பயலை எதுக்கு ரவுடியாக்குறீங்கன்னு சொல்றான்..."

"ஓ அட்வைஸ் பண்றானா... ம்... சரவணன் இவனைத் தூக்கணுமின்னு நிக்கிறான்... சரி விடு காலேசு தொறந்ததும் யாரையாவது வச்சிப் போட்டுக்கலாம்... இப்ப இந்த மேட்டரை கிடப்பில் போட்டுரு... நீதான் இங்கதானே இருப்பே... பார்த்துக்கலாம்... சரவணனை நான் பார்த்துக்கிறேன்.. இனி இந்த மேட்டரை எங்கயும் ஓபன் பண்ண வேண்டாம்.... சரியா..."

"சரிண்ணே..."


விடுமுறை தினம் பறந்து கொண்டிருந்தாலும் ராம்கியும் புவனாவும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் நாட்களை வேதனையுடன் கடத்திக் கொண்டிருந்தார்கள். எப்போது கல்லூரி திறக்கும் என்ற நினைப்புடனே நாட்களை கடந்து கொண்டிருந்தனர். 

"என்னடா... ஏன் ஒரு மாதிரி இருக்கே...?" என்று வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ராம்கியிடம் கேட்டபடி அருகில் அமர்ந்தான் சேகர்.
.
"ஒண்ணுமில்லேடா...."

"என்ன தங்கச்சி நினைப்பா... காதல் வந்தாலே இப்படித்தான்... சரி அவ நம்பர் வச்சிருக்கியா..? வா வீட்ல போயி பேசலாம்... அப்பாம்மா வெளிய போயிருக்காங்க... "

"இல்லடா... அவ நம்பர் இல்லை... அவங்க சித்தி வீட்டுக்கு போயிருக்கும்ன்னு நினைக்கிறேன்... அதுவா கூப்பிட்டாத்தான்..."

"ம்... அப்ப அங்க போயிட வேண்டியதுதானே..."

"என்ன விளையாடுறியா... அட்ரஸ் தெரியாம போயி... இருக்கட்டும்... பிரிவுதான் இன்னும் எங்களுக்குள்ள உறவை பலப்படுத்தும்... என்ன காலேசு தொறக்குறவரைக்கும்தானே..."

"பார்றா... மச்சான் தத்துவமெல்லாம் பேசுறான்... எல்லாம் காதல் படுத்தும்பாடு... மெதுவா அத்தைக்கிட்ட போட்டுவிடவா... சாமி ஆட்டம் பாக்கலாம்..."

"அப்பா சாமி... நீ சும்மா இரு...  சரி வா உங்க வீட்டுப் பக்கம் போகலாம்... வீட்லதான் அத்தைமாமா இல்லையில்ல... கொஞ்சம் ப்ரியா பேசிக்கிட்டு இருக்கலாம்..."

"சரி வா போகலாம்... அவங்க வெளியில பொயிட்டாங்கதான்... ஆனா எங்க அப்பத்தாவை விட்டுட்டுத்தான் போயிருக்காங்க..."

"அப்பத்தாவா..? அதுதான் போயிச் சேர்ந்துருச்சே..."

"உனக்குத் தெரியாதா... ஆத்தா காவேரிதான் எங்க அப்பத்தா...."

"உனக்கு ரொம்ப கொழுப்புடா... அவ கேட்டா அம்புட்டுத்தான்...." என்று பேசிச் சிரித்தபடி செல்ல, "என்னடா எங்கடா போயித் தொலஞ்சே..?" என சேகரைப் பார்த்து வாசலில் நின்றபடி கத்தினாள் காவேரி.

"என்னடி... எதுக்கு அப்பத்தா மாதிரி கத்துறே...?"

"நா அப்பத்தாவா... இரு உனக்கு இருக்கு... எவளோ போன் பண்ணினா..."

"யாரு..?" சேகர் கேட்க, 'ஒருவேளை புவியா இருக்குமே?' மனசுக்குள் கேட்டுக் கொண்டான் ராம்கி.

"பேர் சொல்லலை... ரெண்டு மூணு தடவை அடிச்சிட்டா... சேகர் அண்ணன் வீடுதானேன்னு கேட்டா.... ஆமான்னதும் அண்ணன் இல்லையான்னுட்டு வச்சிட்டா.... எவடா அவ..."

"எனக்கென்னடி தெரியும்... ஆக்சுவலி நான் ரொம்ப பேருக்கு ஹெல்ப் பண்ணியிருக்கேன்... அதுல யாராவது எனக்கு தாங்க்ஸ் பண்ண போன் பண்ணியிருக்கலாம்... சேகர் அத்தான் இருக்காங்களான்னு கேட்டிருந்தாலும் நீ வயித்தெரிச்சல்ல அண்ணன்னு சொல்லுவே..."

"ஆமா... இவருக்காக அலையுறாளுங்க.... சரி இங்கதானே இருப்பீங்க... நான் வீட்டுக்குப் போறேன்.... அத்தை சொன்னதெல்லாம் செஞ்சிட்டேன்... அவ போன் பண்ணினாலும் பண்ணுவா இங்கயே இருங்க..." என்றபடி அவள் கிளம்ப, போன் மணி அடிக்க ஆரம்பித்தது.

(புதன் கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

ஒருவேளை போன் அடித்தது புவனாவா இருக்குமோ??..விறுவிறுப்பா போகுது கதை..

Unknown சொன்னது…

நல்லாப் போகுது கதை,நன்று & நன்றி!///ஆஹா..........போன் வருது..........!