மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

காதலி மனசைக் காதலி

ட்டுண்ட காதல் ஜோடிகள், குதூகலிக்கும் குடும்பங்கள், அலையோடு விளையாடும் இளசுகள் என அந்தி மயங்கும் வேளையில் களை கட்டியிருந்தது மெரினா கடற்கரை.

சுடிதாருக்குள் முகம் மறைத்து முத்த யுத்தம் நடத்தும் ஜோடிகளுக்கும் மணலில் மெத்தை அமைத்து விளையாடும் ஜோடிகளுக்கும் படகு மறைவில் மறைந்து தேடும் ஜோடிகளுக்கும் மத்தியில் கடல் அலையை ரசித்துக் கொண்டிருந்தனர் சாராவும் சங்கரும்.

ஒடி வரும் அலையையும் அதனை துரத்திவரும் அலையையும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ரசித்துக் கொண்டிருந்தாள் சாரா. கடல் காற்றில் அலையும் அவளின் காதோர கார்குழலை ரசித்துக் கொண்டிருந்தான் சங்கர்.

"ஏய அங்க பார்ரா... அந்த அலையை ஒண்ண ஒண்ணு விரட்டிக்கிட்டு வந்தாலும் பிடிபடாம கரைக்கு வருது பாரேன்"

"ம்..." என்ற ஒற்றை வரியில் பதில் அளித்தவனின் கை அவளது விரல்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்தது.

ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்தவள் மீண்டும் அலையை ரசிக்க ஆரம்பித்தாள். அருகே ஒரு குழந்தை அலை வரும் போது ஓடிவருவதும் பின்னர் தண்ணீருக்குள் செல்வதுமாக இருந்தது.

"சங்கர்... அந்த வாண்டைப் பாரு... அலையோட விளையாடுறதுல அதுக்கு எவ்வளவு சந்தோஷம்... அது சிரிக்கிறப்போ அழகா இருக்குல்ல"

"ம்... உனக்கும் அதுபோல பாப்பா வேணுமா..? நான் ரெடியா இருக்கேன்" என்றபடி கைகளை அவளது இடுப்பில் வைத்தான்.

கையை தட்டிவிட்டபடி " என்ன சார் இன்னைக்கு ரொமாண்டிக் மூடுல இருக்காப்புல இருக்கு. சாமி... எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்... பேசாம அலைய வேடிக்கை பாருங்க... சீக்கிரம் ரெண்டு வீட்டுலயும் சம்மதம் வாங்கப் பார்ப்போம். அப்புறம் பெத்துகிறதைப் பத்தி யோசிப்போம்." என்றாள் அவனை சீண்டும் விதமாக.

"ம்... நாலு வருஷமா இதே தான்... என்ன செய்ய... நமக்குன்னு வந்த காதல் இப்படி.. அவனவன் எங்கயோ போறான்..." வாய்க்குள் முனங்கினான்.

"என்ன சொன்னே... சத்தமா சொல்லு..."

"ஒண்ணுமில்லே..."

"இல்ல எதோ முனங்கினாய்... சும்மா சொல்லு..."

"கோவப்படக்கூடாது சரியா... அப்பதான் சொல்லுவேன்..."

"சரி... சொல்லு"

"இல்ல அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பாரு... எத்தனை பேரு சுடிதாரை மூடிக்கிட்டு இதழ் பரிமாற்றம் செய்யிறாங்க... நீ ஒருதடவையாவது..."

"கொடுக்கலையா... உனக்கு முத்தம் கொடுக்கலையா அடப்பாவி நாக்கு அழுகிடாம..."

"ஆமா... கன்னத்துல கொடுக்கிறதெல்லாம் காதல் முத்தமா... பக்கத்து வீட்டுப் பாப்பா ஒரு நாளைக்கு எத்தனை முத்தம் கொடுக்கிறா தெரியுமா?"

"எனக்கு அது புடிக்கலை."

"ம்... அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்... அங்க பாரு அது ரெண்டையும் பார்த்த ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கு. நானும் அரைமணி நேரமா பார்க்கிறேன் ரெண்டும் வாய்க்குள்ள அப்படி என்ன தேடுதுகன்னு தெரியலை..."

"கருமம்..."

"சரி அதை விடு இந்தப்பக்கம் பாரு... மடியில் படுக்க வச்சு தொப்புள்ள எதையோ தேடுறான்... "

"அதுக்கென்ன இப்போ... படவா உதை படப்போறே... இதுக மாதிரி நடந்துக்கிட்டாதான் காதல்னா அது மாதிரி எவளையாவது பார்த்துக் காதலி எனக்கு அந்த மாதிரி எல்லாம் காதலிக்கப் பிடிக்காது..." என்றாள் கோபமாக.

"சரி... இப்ப எதுக்கு கோபம் சும்மாதானே சொன்னேன்."

"உள் மனசுல இருக்கிறதுதானே வெளியே வரும். உனக்கு இப்ப அந்த மூடு மட்டும்தான் இருக்கு..."

"ஐயோ கோபத்தைப் பாரு... எதுக்கெடுத்தாலும் கோபம்... கோபப்பட மாட்டேன்னு சொன்னதாலதான் சொன்னேன். இல்லன்னா சொல்லியிருக்க மாட்டேன்... ம்... நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு அடிக்கடி கோபப்படப் போறே..."

"என்னைய கட்டிக்க வேண்டாம்... கோபப்படாதவளா பார்த்து எவளையாவது கட்டிக்க... "

"நான் சொன்னேன்னா வேறவளை கட்டிக்கிறேன்னு... நீயா எதாவது எடுத்துப் பேசாதே... எப்பவும் எனக்கு நீதான்..." என்றபடி அவளை இழுத்து அணைத்தான்.

"ஒண்ணும் வேண்டாம்..." என்றபடி அவனை தள்ளிவிட்டுவிட்டு கொஞ்ச தூரம் தள்ளிப் போய் அமர்ந்தாள். அவளது முகம் கோபத்தில் சிவந்திருந்தது. சங்கரும் எழுந்து சென்று அவளருகே அமர்ந்தான்.

அவளது தோளில் கை வைத்து "ஏய் சாரும்மா... இப்ப எதுக்குடா இந்த கோபம்... ப்ளீஸ் சிரியேன்..." என்றான் அப்பாவியாக.

"உனக்கு என்னோட மனசு புரியலை... அதான் இப்படியெல்லாம் பேசுறே... மத்தவங்க மாதிரி பொது இடத்துல கட்டிப்பிடிக்கணும்... முத்தம் கொடுக்கணும்... கண்ட இடத்துல கை வைக்க விடணும்ன்னு நினைக்கிறே... கட்டிப்பிடிக்கிற காதலெல்லாம் எவ்வளவு நாளைக்கு சொல்லு பார்ப்போம்.இந்த மாதிரி கிடைக்கிற சுகம் நல்ல சுகம்ன்னு நினைக்கிறியா..? இன்னைக்கு அவளோட இதழ் நல்லாயிருக்கும்... நாளைக்கே வேற ஒருத்தியோட இதழை தேடச் சொல்லும்...இதெல்லாம் மனசுங்கிற ஒண்ணு இல்லாத காதல்டா... நீ சொன்னியே ஸ்கூல் பொண்ணு... அதைப்பாரு எல்லை மீறிப்போயாச்சு... எவ்வளவு பேர் பார்க்கிறாங்க அதைப்பத்தி கவலைப்படாம அவனோட கை அவ உடம்புல எல்லா இடத்துலயும் பட்டாச்சு... இது அவளுக்கு சுகம்தான் ஆனா அவன் நாளைக்கு வேற ஒருத்திய கூட்டிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பான். அப்ப இது என்ன பண்ணும் எதாவது பத்திரிக்கையில வர்ற ஆலோசனை பக்கத்துல கதையா எழுதி கண்ணீர் விடும். எம்மனசுல நீ இருக்கே... நான் சாகிற வரைக்கும் நீ இருப்பே...இந்த உடல் சுகம் கல்யாணத்துக்குப் பின்னே கிடைச்சா சந்தோஷம்...இல்ல இதுக மாதிரித்தான் வேணுமின்னா ஐந்தறிவு ஜீவனா பிறந்திருக்கலாமே... எதுக்கு நமக்கு ஆறாவது அறிவு. நம்ம மெரினா பீச்சுக்கு ஆசியாவிலே இரண்டாவது பீச்சுங்கிற சிறப்பு இருக்கு... நம்ம அதை எங்கே பெருமையா நினைக்கிறோம்... இப்படி மணல்ல கட்டுண்டு கிடக்கிறதை பார்க்கிறதுக்காக நிறைய விடலைப்பசங்க வாராங்க... இதுக்குப் பேரு காதலா... மனசும் மனசும் காதலிச்சா அந்த காதல் கண்டிப்பா உடல் சுகம் தேடாது. இதுக காதல் எல்லாம் வெறும் உடம்பு சுகம் தேடுற காதல்தான்... என்னோட இதயத் துடிப்பே நீதான்.... உனக்குள்ள இப்படி ஒரு நினைப்பு இருக்குமுன்னு நான் நினைக்கவேயில்லை."பொரிந்து தள்ளியவள் அவனிடமிருந்து விலகி வேறு இடத்தில் அமர்ந்து கடலை வெறிக்க ஆரம்பித்தாள்.

"ஏய் சாரா... சும்மா உன்னை சீண்டிப்பார்த்தேன் அவ்வளவுதான்...உன்னைய மாதிரியே என் மனசு பூராவும் நீதான் இருக்கே... நீ... நீ மட்டும் தான் இருக்கே... ப்ளீஸ்ம்மா இங்க வா... இல்ல நான் போயிடுவேன்"

"போ... எனக்கு எத்தனையோ பஸ் இருக்கு..."

"ஒகே நான் போறேன்... பை... பை..."

"இந்த பை எனக்கா... நம்ம காதலுக்கா..?"

பதில் கூறாமல் நடந்தான். அவளும் அவனைக் கண்டு கொள்ளாது அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து கையில் கடலை பொட்டலத்துடன் வந்து அவளருகில் அமர்ந்தான்.

அவனை பார்த்தும் பார்க்காதது மாதிரி இருந்தாள் சாரா.

"ஏய்... சாரு... நீதான் எனக்கு உலகம்... நீ பேசலைன்னா எனக்கு எதுவும் ஓடாது... ப்ளீஸ்..."

"போறேன்னு போனே..?"

"கடலை வாங்கப் போனேன்..." என்றவனைப் பார்க்க பாவமாக இருந்தது. காதலின் முன் கோபம் பொய்த்துப் போக, "சாரிடா... ரொம்ப படுத்திட்டனோ..." என்ற சாராவின் கரங்களைப் பிடித்துக் கொண்டு "இல்லம்மா நான் அப்படி பேசியிருக்கக்கூடாது" என்றான் சங்கர்.

அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சமாதானம் செய்து கொள்ள அவன் எதிர்பாரா தருணத்தில் அவனது கன்னத்தில் இச் பதிக்க, அவர்களது கோபம் காற்றில் கரைந்தது.

(2010-ல் சிறுகதைகள் தளத்தில் எழுதியது... மீள் பதிவாக)
-'பரிவை' சே.குமார்

15 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

'இச்...நச்' என்று மனதில் மகிழ்ச்சி...

கவிதை வானம் சொன்னது…

அண்ணேன்...இப்ப மெரீனா...காதலர் கூடம் அல்ல......அது மூடர் கூடம் குடிமக்களின் பார் கூடம்

பெயரில்லா சொன்னது…

யதார்த்தமான பொழுது போக்குக் கதை.
அடடே , நம் வலைத் தளமும் உள்ளதே நண்பர்களின் எழுத்துப்
பட்டியலில் . மிக்க நன்றி சகோ !

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
சே.குமார்(அண்ணா)

காதலின் சுகம் மிக அருமையாக இளையோடியுள்ளது அத்தோடு மெரினா பீச்சு ஆசியாவிலே இரண்டாவது பீச்சு என்ற சிறப்பும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்
-ரூபன்-

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் தனபாலன் சார்...
இச் எப்பவுமே நஸ்தானே...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முத்தரசன் அண்ணே...
இப்போ குடியின் பிடியிலா... அது சரி...

நான் பார்த்த மெரினா காதல்தேசமாகத்தான் இருந்தது.

இது அந்தப் பாதிப்பில் 2010 எழுதிய கதை...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

சசிகலா சொன்னது…

சுவார்யஸ்யமாக இருந்தது படிக்க..

ஸ்ரீராம். சொன்னது…

ஆஹா....!

Unknown சொன்னது…

ஊறுகா மாதிரி தொடப்படாத காதல் நம்ம ஊர்லேயும் இருக்கா ?

சக்தி கல்வி மையம் சொன்னது…

செம ரைட்அப் ....

Unknown சொன்னது…

பரிதி அண்ணன் ரொம்ப சரிய சொன்னாரு

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அருமையான கதை..

Menaga Sathia சொன்னது…

சுவராஸ்யமான காதல் கதை...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கதைக்குப் பாராட்டுக்கள்..!