மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 13 ஜனவரி, 2014

கிராமத்து நினைவுகள் : பொங்கலோ பொங்கல்



பொங்கல்... நினைத்தாலே ஊரில் பொங்கல் கொண்டாடிய நாட்களின் நினைவுகள் நெஞ்சுக்குள் அடிக்கரும்பின் இனிப்பாய் எப்போதும் தித்திக்க வைக்கும்.

கிராமத்துப் பொங்கல் என்பது எப்பவுமே நகரத்துப் பொங்கலைவிட ஒரு படி மேல் என்பது அனைவரும் அறிந்ததே. இன்றைய காலகட்டத்தில் நகரத்தில் பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாசலில் கோலமிடக்கூட இடமிருப்பதில்லை. நவநாகரீகக் குடும்பங்கள் எல்லாம் சமையல் எரிவாயு அடுப்பில் சர்க்கரைப் பொங்கலை வைத்து தைப்பொங்கலை முடித்துக் கொள்கிறார்கள்.

எங்கள் ஊரில் வயலெல்லாம் விளைந்து நிற்க மனமெல்லாம் பூரிப்போடு கொண்டாடிய பொங்கல் என்பது சில வருடங்களுக்கு முன்னர் முடிந்துவிட்டது. அதற்குக் காரணம் சரியான மழையில்லை... விவசாயம் என்பது அறவே இல்லாமல் போய்விட்டது... விவசாய வயல்களெல்லாம் இன்று கருவைகளில் கானகம் ஆகிவிட்டது. இருந்தும் பண்டிகைகள் எல்லாமே உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

பொங்கல் என்பது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய திருவிழா. கரும்புக் கட்டுக்களை சைக்கிளில் சுமந்து சென்ற நாட்கள் இன்னும் இனிக்கின்றன. எல்லாரும் ஊருக்கு வந்து சந்தோஷமாய் களித்த தினங்கள் கண்ணுக்கள் சிரிக்கின்றன. காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் பொங்கல் என்பது இன்னும் ஒருவித சந்தோஷத்துடன்தான் கடந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில வருடங்களாக எங்கள் ஊரில் மார்கழி மாதம்  அம்மன் கோவிலில் காலையில் பொங்கல் வைத்து திருப்பள்ளி எழுச்சி கொண்டாடி வருகிறோம், பொங்கல் அன்று காலை முதல் பொங்கல் அம்மனுக்குத்தான். அது முடிந்ததும் காலையில் ஊரில் இருக்கும் சில குடும்பங்கள் கண்மாயில் குடியிருக்கும் ஊர்க் காவல் தெய்வமான எங்கள் முனியய்யா கோவிலில் பொங்கல் வைத்து அபிஷேகம் ஆராதனை செய்து கொண்டாடி வருவோம்.

பின்னர் பொங்கல் வைக்க நல்ல நேரம் பார்த்து வீட்டில் பொங்கல் வைப்போம். வீட்டில் பொங்கல் வைக்கும் முன் எங்கப்பா பிள்ளையார் பிடிக்க மாட்டுச் சாணி எடுத்து வைத்திருப்பார். அதில் வைப்பதற்கு அருகம்புல் பிடிங்கி வரச்சொல்வார். அப்போது கண்மாயில் இருந்து நீர் வயலுக்குப் பாய்வதால் வாய்க்கால் எல்லாம் அருகம்புல் பசுமையாய் இருக்கும் அதை பிடிங்கிக் கொண்டு வந்து அலசி அழகாக அடுக்கி அதில் சொருகி வைப்போம்.  இப்போதெல்லாம் வாய்க்கால் நீர் பார்த்து வருடமாகிவிட்டது. அருகம்புல் என்பது அரிதாகியிருக்கும்.


வீட்டுப் பொங்கல் வைத்து பால் பொங்கியதும் சங்கு ஊதி சந்தோஷத்தை வெளிச்சமிட்டு பின்னர் பொங்கல் படைத்து வீட்டில் சாமி கும்பிட்டு எல்லாருக்கும் கொடுத்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வோம். மதியம் அருமையான சைவச் சாப்பாடு... மாலை எங்கள் ஊர் நாச்சியம்மன் கோவிலில் அந்தக் கோவில் கும்பிடும் பங்காளிகள் வைக்கும் பொங்கல்... அங்கு பால் பொங்கியதும்தான் ஒருசில வீடுகளில் பொங்கல் வைப்பார்கள். சாமி கும்பிட்டு பொங்கல் சாப்பிட்டு வீடு வர பத்துமணி ஆகிவிடும்.

மறுநாள் மாட்டுப் பொங்கல்... மாடுகளைக் குளிப்பாட்டி புது மூக்கனை, கழுத்துக் கயிறு, பிடி கயிறெல்லாம் போட்டு, அழகாக பொட்டிட்டு... கொம்பில் காவி அடித்து சாயத்துண்டு கட்டி அலங்கரித்திருப்போம். முதலில் எல்லாருமாகச் சென்று கருப்பர் கோவில் அருகில் ஊர்கூடி பொங்கல் வைக்க சுத்தம் செய்து திட்டிக்குழியெல்லாம் தயார் பண்ணி வைத்துவிட்டு வந்து நல்ல நேரத்தில் பொங்கல் வைக்கச் செல்வோம்.

ஊரே திரண்டிருந்து பொங்கல் வைக்கும்... மணி ஐயா, நாச்சியப்பய்யா, இளையர் வீட்டு ஐயா எல்லாம் கருப்பருக்கு வரும் அர்ச்சனைகளைச் செய்து சாமி கும்பிடும் பணியில் தீவிரம் காட்டுவார்கள். எல்லார் வீட்டு பொங்கல் பானையிலும் பால் பொங்கியதும் மொத்தமாக சங்கு ஊதுவார்கள். மாடுகளை எல்லாம் கொண்டு வந்து ஆங்காங்கே மர நிழலில் கட்டி வைப்போம். 

எல்லாப் பானைகளையும் இறக்கியதும் திட்டிக்குழிக்கான பொங்கல் குழம்பு ஒன்றை ஒருவர் பொங்கல் வைத்த அடுப்பில் வைத்துக் கொடுப்பார். அதற்கு முன்னதாக கண்மாயில் புறமடைத் தண்ணீரை மரக்காவில் எடுத்து வந்து வைத்திருப்போம். மாவிளையும் பரங்கி இலையும் கொண்டு வந்து வைத்திருப்போம். திட்டிக்குழிக்காக செதுக்கிய வீட்டில் எல்லாப் பக்கமும் சாணியில் உருண்டை பிடித்து அதில் பரங்கிப் பூ வைத்து அந்த வீட்டுக்குள் மண்வெட்டி, களக்கொட்டு, அரிவாள் என விவசாய சாமான்களை வைத்து நடுவில் பரங்கி இலையைப் பரப்பி எல்லாருடைய பொங்கல் பானையில் இருந்தும் சாதம் எடுத்து அதில் வைத்து குழம்பை ஊற்றி பிசைந்து முதலில் மரக்காவில் இருக்கும் தண்ணீருக்குள் போட்டு மந்திரம் சொல்லி 'பொங்கலோ பொங்கப் பொங்க.... பட்டி பெருகப் பெருக... பால்பானை பொங்கப் பொங்க... பொங்கலோ பொங்கல்....' என பொங்கல் வைத்த இடத்தையும் கருப்பர் கோவிலையும் சுற்றி வருவோம்.

அப்போது எல்லா மாடுகளுக்கும் மரக்காவில் இருக்கும் சாதம் எடுத்து ஊட்டி மாவிலையால் தண்ணீர் எடுத்துத் தெளித்து அங்கு நிற்கும் எல்லார் மீதும் தண்ணீர் தெளித்து மூன்று முறை சுற்றி வருவோம். முன்பெல்லாம் ஊருக்குள்ளும் போய் வருவோம். பின்னர் பொங்கல் குழியை மட்டும் சுற்றி வர ஆரம்பித்தோம். நாங்கள் சுற்றி வரும் போது திட்டிக்குழியில் உடைப்பதற்காக ஒரு மண் குடம் எடுத்து அதில் நெருப்பை வைத்து சுற்று வருவோம். மூன்று சுற்றுக்கள் முடிந்ததும் எல்லாரும் திட்டி சுற்றி அதில் போடுவார்கள். அதை திட்டிக்குழிக்கு முன்னர் உடைத்து பொங்கல்குழியைத் தாண்டி விழுந்து கும்பிட்டு திட்டிக்குழியில் பிசைந்த சாதத்தை வாங்கி சாப்பிட்டு கேலி முறைக்காரர்களுக்கு முகத்தில் தீட்டி கொஞ்ச நேரம் சந்தோஷமாகக் களிப்போம்.

அதன்பின் மாடுகளை பொங்கல்குழி தாண்ட வைத்து வீட்டிற்கு கொண்டு சென்று காசாலைக்குள் செல்லும் முன்னர் உலக்கையைப் போட்டு அதைத் தாண்ட வைத்து கட்டி விட்டு வந்து கோவிலில் தீபம் பார்த்து சாமி கும்பிட்டு வீட்டுக்குச் செல்வோம். அன்று மாலை மாரியம்மன் கோவிலில் கொப்பிப் பொங்கல் என்று ஒன்று வைத்து பொங்கலை சிறப்பாக முடிப்போம்.

இப்போது ஒரே வருத்தம் என்னவென்றால் காய்ந்து போன வயலில் பயிர்கள் இல்லை.... அருகம்புல்லும் பசுமை இல்லாமல்.... கசாலைகள் எல்லாம் காற்றோடிப் போய் இருக்கின்றன... கண்மாய்க்குள் தண்ணியில்லா போது புறமடைத் தண்ணிக்கு எங்கே போவது... பரங்கி இலை மட்டும் இன்னும் ஒருசில வீடுகளில் கிடைக்கிறது. ஆனால் பரங்கிப் பூவெல்லாம் கிடைப்பது அரிதாகிவிட்டது. இந்த வருத்தங்கள் இருந்தாலும் பொங்கல் என்னும் ஒரு நிகழ்வு இன்னும் தித்திப்பாய் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பது சந்தோஷமான விஷயம்.



எங்களுக்கு இந்தப் பொங்கல் மிகவும் விசேசமானது. காரணம் கிராமத்தில் போய் எங்கள் வீட்டில் அண்ணன் குடும்பங்கள், அப்பா, அம்மாவுடன் இணைந்து எப்பவும் போல் பொங்கல் கொண்டாடினாலும் நாங்கள் எங்களுக்கென கட்டிய வீட்டில் இந்த வருடம் தலைப் பொங்கல்... அந்தச் சந்தோஷம் இன்னும் மனசுக்குள் பூரிப்பாய் ...

என்னைப் பொறுத்தவரை இங்கு வந்த பிறகு பொங்கலுக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. ஊருக்கு யாருக்கு போன் பண்ணினாலும் பொங்கலுக்கு ஊருக்கு வந்துட்டேன் என்று சொல்லும் போது நாமும் அங்கு இல்லையே என்ற எண்ணம் வருத்தத்தைக் கொடுத்தாலும் தித்திக்கும் பொங்கல் திருநாள் நினைவுகள் சந்தோஷத்தைக் கொடுக்க எல்லாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.

17 எண்ணங்கள்:

மனோ சாமிநாதன் சொன்னது…

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் குமார்! இருந்தாலும் மனதின் ஏக்கம் எழுத்தில் தெரிகிறது!

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

அம்பாளடியாள் சொன்னது…

இனித்திடும் தைப் பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரா !

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
குமார்(அண்ணா)

நினைவுகள் சுமந்த பதிவு... நன்றாக உள்ளது

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Tamizhmuhil Prakasam சொன்னது…

கிராமத்து பொங்கல் நினைவுகள் - நேரில் கண்டது போல் உணர்ந்தேன்.பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே.

தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே !!

அ.பாண்டியன் சொன்னது…

வணக்கம் சகோதரர்
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

ஸ்ரீராம். சொன்னது…


அருமையான நினைவுகள் குமார். எல்லோரும் சேர்ந்திருக்கும் சமயம் நாம் மட்டும் வெளியூரில் இருப்பது கடினமான விஷயம்தான்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் நம் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

துரை செல்வராஜூ சொன்னது…

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
பொங்கலோ.. பொங்கல்!..
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமையான பகிர்வு.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

சென்னை பித்தன் சொன்னது…

பொங்கல் நல் வாழ்த்துகள் குமார்

சென்னை பித்தன் சொன்னது…

இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் குமார்

Manimaran சொன்னது…

இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சீனு சொன்னது…

எதனால் அதனை திட்டி குழி என்று சொல்கிறீகள் குமார் ?

கிராமத்தில் பொங்கல் கொண்டாடியதில்லை, ஆனால் நகரத்து பொங்கலை என்றுமே கிராமத்து பொங்கல் மிஞ்சிவிடுகிறது, காரணம் அது உழவனின் திருநாள் இல்லையா !

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இளமதி சொன்னது…

பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

கிராமத்து நினைவு சுமந்த அருமையான பதிவு! சிறப்பு!

Menaga Sathia சொன்னது…

அருமையான பகிர்வு!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான பொங்கல் நினைவுகள்...

பொங்கல் சமயத்தில் வீட்டில் இல்லாத ஏக்கம் புரிகிறது....

ezhil சொன்னது…

கிராமத்துப் பொங்கல் பகிர்ந்தமைக்கு நன்றி.... நானும் கொண்டாடியிருக்கிறேன் என்றாலும் கிராமத்துக்கு கிராமம் மாறுபடுகிறது...