மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

என்னவளின் தினம்



வாழ்க்கைத் துணை என்பது வாழ்வின் எல்லா நிலையிலும் துணையாய் அமைந்தால் அந்த வாழ்க்கைக்கு இணையாக எந்தச் சந்தோஷமும் ஈடாகாது. அப்படிப்பட்ட வாழ்க்கை அமைய இறைவனின் சித்தம் இருக்க வேண்டும். அந்த வகையில் எனக்கு சந்தோஷமான வாழ்க்கையைக் கொடுத்த இறைவனுக்கு முதலி நன்றி.

என்னவள்... என் உயிரானவள்... என் உணர்வானவள்... கோபத்திலும் சரி... குணத்திலும் சரி ஒரு குழந்தை மாதிரிதான்... எதையும் புன்னகையோடு எதிர்க்கொள்ளத் தெரிந்தவர். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணமுடையவர். யாருமே ஒதுக்க நினைக்காத பண்புள்ளவர். 

நான் நினைப்பதைவிட அதிகமாக என்னை நினைப்பவர். எப்போதும் என் நினைவுதான்... என்னுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று நினைத்தவருக்கு கடந்த ஐந்து ஆண்டு காலமாக பிரிந்து வாழும் வாழ்க்கையே சொந்தமானது. இந்த 2014ல் இங்கு கொண்டு வந்துவிடலாம் என்று தோன்றுகிறது இறைவன் சித்தம் எப்படியோ தெரியவில்லை.

வெறும் சந்தோஷம் என்பது மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்டால் அதில் சுவராஸ்யம் இருக்காது அல்லவா... அப்போ அப்போ எங்களுக்குள்ளும் ஊடல் வரத்தான் செய்யும். எங்கள் கோபம் நாட்களைத் தின்பதில்லை... வெறும் நாழிகைகளை மட்டுமே தின்று சிரிக்கும்.

எப்போ வருவீங்க... இன்னும் ஆறு மாசம் இருக்கா? என்று கேட்கும் போது கண்ணீர் விட ஆரம்பித்து விடுவார். நம்மளுக்குன்னு ஒரு வீடு வேணுங்க என்று சொல்லி, அதற்கான முயற்சியில் என்னை இறங்க வைத்து வீடு கட்ட இஞ்சினியரைப் பார்த்ததோடு என் விடுப்பு முடிய, வங்கிக் கடனுக்காக தேவகோட்டை, காரைக்குடி, திருச்சி, மதுரை என அலைந்து திரிந்து வாங்கியவர் அவர்தான். காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு தனது ஸ்கூட்டியில் போய் சாப்பிடாமல் கட்டிட வேலைகளை அருகிருந்து பார்த்து கட்டி முடித்தவர் அவர்தான்.

வீடு கட்டியதில் 80% கஷ்டப்பட்டவர் அவர்தான். நமக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லை. வீட்டிற்கு என்ன பேர் வைப்பது என்பதில் குழப்பமே இல்லாமல் என் மனைவி பெயரையே வைத்த போது எங்க வீட்டுக்கு எங்க பேர் வைக்கலையிலன்னு குழந்தைகளுக்கு கோபம் .... அதை மாற்ற ஒரு பக்கம் அவர்கள் இருவர் பெயரையும் சேர்த்து 'SHRUVISH' என்று கல் பதித்து ஒரு பக்கம் நித்யா இல்லம் என்ற கல் பதித்தோம். வீடு கட்டும் ஆசையில் வெற்றி பெற எனக்கு எல்லாமாய் இருந்தவர் என்னவள்தான்.

அவரோட ஆசை என்னுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான் அதையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும். குடும்பம் இங்கு வர வேண்டும்... இல்லை என்றால் நாம் அங்கு செல்ல வேண்டும்... எல்லாம் அவன் நினைக்கிறபடிதானே நடக்கும்... என் மனைவியின் ஆசை நிறைவேறும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர்க்கிறது... காரணம் என்னவளின் அதீத நம்பிக்கை மட்டுமே.

எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தாலும்... எத்தனை பிரச்சினை வந்தாலும் எல்லாவற்றையும்... புன்சிரிப்போடு எதிர்கொண்டு எல்லாருக்கும் இனியவளாக வலம் வரும் என் தேவதைக்கு இன்று 29 வது பிறந்தநாள்...

நேற்றிரவு,,, இன்று காலை... மாலை என்று வாழ்த்துக்களை மட்டுமே சொல்ல முடிந்த பிறந்த நாளாக இந்த வருடம் அமைந்துவிட்டது என்பதால் சற்றே மனவருத்தமாகத்தான் இருக்கிறது. ஊரில் இருக்கும் போது சிறப்பாக கொண்டாடிய பிறந்தநாளை இங்கு வந்த பிறகு ஒரு சேலையாவது எடுத்து யாரிடமாவது கொடுத்துவிடுவேன். இந்த முறை அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை. இந்த முறை ஒன்றும் வாங்கிக் கொடுக்கவில்லை.

மதுரைக்கு அம்மா வீட்டிற்குச் சென்றவரிடம் அங்கு நல்ல சேலையாக எடுத்துக் கொள் என்று சொன்னதும் நேற்று மாலை போத்தீஸ்க்குச் சென்று அவருக்குச் சேலையும், வரும் 17 ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் மகனுக்கு டிரஸ்சும் எடுக்க மார்ச் மாதம் பிறந்த நாள் கொண்டாட இருக்கும் மகளுக்கு கொஞ்சம் கோபமல்ல அதிகமாவே கோபம் வர அவருக்கும் ஒரு டிரஸ் எடுத்தாச்சாம்...

எங்க வீட்ல அம்மாவும் மகனும் ஜனவரியில்... நானும் பாப்பாவும் மார்ச்சில்... என்பதால் நான் அம்மாவோடா... நான் அப்பாவோடன்னு சின்னச் சின்ன ஆரோக்கியமான... சில சமையங்களில் ஆக்ரோஷமான சண்டையும் நடப்பதுண்டு...

சரி எல்லாம் இருக்கட்டும்... என் அன்பானவளுக்கு மறக்காம உங்களது வாழ்த்துக்களையும் சொல்லிட்டுப் போங்க....
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

மதுரைக்காரன் ஜோக்காளியின் ,மதுரை தங்கச்சுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
பிறந்து இருக்கும் புத்தாண்டில் உங்கள் எண்ணம் நிறைவேறட்டும் !
+1

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்கள் துணைவிக்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் குமார்.....

பிரிந்து இருப்பதில் இருக்கும் கஷ்டம் விரைவில் தீரட்டும்.....

ஸ்ரீராம். சொன்னது…

உங்கள் துணைவிக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளும். சீக்கிரமே ஒன்றாக இணைந்திருக்கவும் வாழ்த்துகள். மகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.எம் ஜி ஆர் பிறந்தநாளில் பிறந்திருக்கிறார் போல உங்கள் மகன்!

இளமதி சொன்னது…

உங்கள் அன்பு மனைவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ!

உங்கள் கனவுகள் விரைவில் நனவாகிட உளமார வாழ்த்துகிறேன்!

த ம.4

Jaleela Kamal சொன்னது…

//எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தாலும்... எத்தனை பிரச்சினை வந்தாலும் எல்லாவற்றையும்... புன்சிரிப்போடு எதிர்கொண்டு எல்லாருக்கும் இனியவளாக வலம் வரும் என் தேவதைக்கு இன்று 29 வது பிறந்தநாள்.//

சீக்கிரமாகவே எல்லோரும் சேர்ந்து இருக்கும் நாள் விரைவில் வரனும்.

வெளிநாடு வந்து விட்டால் அவ்வளவு தான் அடுத்து அடுத்து பொறுப்புகள் கூடிகொண்டே போகும்.

Jaleela Kamal சொன்னது…

தொடர்ந்து என்பதிவுகளுக்கு வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.

அம்பாளடியாள் சொன்னது…

எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறி இனிதே வாழ தங்களின்
துணைவியாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரா .

Unknown சொன்னது…

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்,உங்கள் துணைவியாருக்கு!துணைவியார் என்றால்,எக்காலமும் துணை வருபவர் என்று பொருள்.அது உங்களுக்கு நன்கே வாய்த்திருக்கிறது!மீண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருளால்,பல்லாண்டு,பல்லாண்டு வாழ்க!

Yaathoramani.blogspot.com சொன்னது…

எல்லாமுமாக இருக்கிற
உங்களவருக்கு மனமார்ந்த
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
அருமை அறிந்த உங்களுக்கும்...

கோமதி அரசு சொன்னது…

குமார் உங்கள் வாழ்க்கை துணை நித்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 17ம் தேதி பிறந்தநாள் கொண்டாட இருக்கும் உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.


//என் மனைவியின் ஆசை நிறைவேறும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர்க்கிறது... காரணம் என்னவளின் அதீத நம்பிக்கை மட்டுமே.//
நித்யா அவர்களின் நம்பிக்கை உங்களை ஒன்றாய் வாழ வைக்கும், வாழ்த்துக்கள்.

எங்கள் வீட்டில் குழந்தைகள் இருவரும் நவம்பர், நாங்கள் இருவரும் செம்டம்பர்.

Unknown சொன்னது…

வணக்கம் தம்பி, கூடிய விரைவில் பொருள் வயின் பிரிவு நீங்கி, நீங்கள் மனைவி, குழந்தைகள் மகிழவான எதிகாலம் பெற வாழ்த்துகிறேன்..

நித்யாவுக்கும் எனது வாழ்த்துக்கள்..

வாழ்க வளமுடன்..

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

சீரும் சிறப்பு பெற்றுவாழ்க.... தங்கள் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான வாழ்க்கைத்துணைவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பித்தமைக்கும், துணைவியாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

துரை செல்வராஜூ சொன்னது…

எல்லா நலன்களும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு
நல்வாழ்வு வாழ
அன்னை அபிராமவல்லி அருள் புரிவாளாக!..