மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 2 ஜூலை, 2013

எதிர்கட்சி தலைவர் பதவியை இழப்பாரா கேப்டன்?


ராஜ்ய சபா தேர்தலில் விஜயகாந்துக்கு வெற்றி இல்லை என்றாலும் கலைஞரை கலங்க வைத்தது... காங்கிரஸை திணற வைத்தது... எம்புட்டு அடிச்சாலும் தாங்குறானேடா என்று ஜெயலலிதாவை திகைக்க வைத்தது என தனது ஓட்டு வங்கியைக் காப்பாற்றி வெற்றி கண்டார்.

தமிழக அரசியலில் இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாவதுதான் தொன்றுதொட்டு உதிரிக்கட்சிகளின் நிலையாக இருக்கிறது. மதிமுக, பாமக,விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் என எல்லாருமே ரோடு ரோலரின் அடியில் மாட்டிய கரும்பு போல் ஆனார்கள் என்பதே உண்மை. 


இந்நிலையில்தான் கேப்டன் விஜயகாந்தும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்து தனித்தே போட்டி என்று சொல்லி அதிலும் ஒரு எம்.எல்.ஏ. சீட்டை வென்று தனது கட்சியை இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாக வளர்த்தார். கடந்த தேர்தலின் போது தனது தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்கி ஜெயலலிதாவுடன் இணைந்து போட்டியிட்டு 29 இடங்களைக் கைப்பற்றி தமிழக அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றார். மாநிலக் கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார். 

அவருக்கும் ஜெயலலிதாவுக்குமான கூட்டு தாமரை இலைத் தண்ணீர் போல் ஓட்டாமல் இருந்து, தாக்குப்பிடிக்க முடியாமல் ஒருநாள் உடைந்தது. அதற்குப் பின்னான நிகழ்வில் இருவருக்கும் இடையேயான மோதல் வலுக்க ஆரம்பித்தது. இவர்கள் பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போனதற்கு மற்றொரு காரணம் தொண்டர்களால் அண்ணி என்று அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் வாய்த்துடுக்கான பேச்சுக்கள்தான் என்பதில் தொண்டர்களுக்குள் மாற்றுக் கருத்து இல்லை.

அதன் பிறகு ராஜ்யசபா தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெறக்கூடாது என்ற முனைப்போடு ஜெயலலிதா செயல்பட ஆரம்பித்தார். பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்ற பழமொழிக்கு இணங்க, எதிர்கட்சி எம்.எல்.ஏ. என்ற பெயரை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என சிந்தித்த சில மக்கள் தொண்டர்களான எம்.எல்.ஏக்கள் கோடிக்கு மயங்கினார்கள். 

இதில் முக்கியமாக விஜயகாந்துக்கு மிகவும்  நெருக்கமான மைக்கேல் ராயப்பனும் அருண்பாண்டியனும் மக்கள் தொண்டு ஆற்றுவதற்காக, மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஜெயலலிதாவை சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் 29ல் 5பேர் மக்களுக்காக கட்சிக்கு எதிராக அணிவகுத்தார்கள். பின்னர் 2 பேர் யோசித்துப் பார்த்து 5 தொகுதி மக்களும் நல்லா இருக்காங்க நம்ம மக்கள்தான் பாவம் ஒண்ணுமே இல்லாம கஷ்டப்படுறாங்க என ஜெயலலிதாவை பார்த்து பேசினார்கள்.

இதற்கிடையில் சட்டசபையில் 6 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட், விஜயகாந்த் சஸ்பென்ட்... விஜயகாந்த் மீது அவதூறு வழக்குகள் என நாளொரு நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்தது. அறிக்கையில் கேப்டன் பிரபாகரனாக... சேதுபதி IPS ஆக... ரமணாவாக ஜொலித்த விஜயகாந்தின் ஜம்பங்கள் ஜெயலலிதா முன்னர் எடுபடவில்லை என்பதே உண்மை. 

ராஜ்யசபா தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என அதிருப்தி எம்.எல்.ஏக்களை விஜயகாந்தும் பண்ருட்டியாரும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் நடந்தது என்ன என்பதை நாடறியும். ஜெயலலிதா சொன்னவருக்கு வாக்களித்து தாங்கள் மக்கள் தொணடை மட்டுமே செய்ய நினைக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். 

vijayakanth 20 vijayakanth 20

அடிபட்டு வீழ்ந்து மீண்டும் எழுந்த ஹானஸ்ட்ராஜாக ராஜ்யசபா தேர்தலுக்குப் பிறகு கட்சியை மதிக்காத எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி தற்காலிகமாக சஸ்பென்ட் செய்துள்ளார். ஆனால் இதில் என்ன கூத்து என்றால் நாங்கதான் அதிருப்தியாளர்களா மாறிட்டோமே எதுக்கு விளக்கம் கேட்கிறீங்க... கட்சியை விட்டே நீக்குங்கள் என் மைக்கேல் ராயப்பன் கிண்டல் செய்துள்ளார்.

ஏழு பேரையும் கட்சியை விட்டும் நீக்கும் பட்சத்தில் தே.மு.தி.க. 22 எம்.எல்.ஏக்களுடன் சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியை இழக்கும். இந்தச் சந்தர்பத்துக்காகவே காத்திருக்கும் தி.மு.க எதிர்கட்சியாகிவிடும். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெறுவார். விளக்கம் கேட்டிருக்கும் விஜயகாந்த் ஏழு பேரையும் கட்சியின் அடிப்படை தொண்டர் பொறுப்பிலிருந்து நீக்குவாரா? எதிர்கட்சித் தலைவர் பதவியை இழப்பாரா? என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுவதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. 

எதிர்கட்சி தலைவர் பதவி என்பதை விஜயகாந்த் விரும்புவது போல் தெரியவில்லை. அதற்கு அவருக்கு நெருக்கமானவர்கள், எதிர்கட்சித் தலைவருக்கு என சட்டசபையில் ஒதுக்கப்பட்ட அறையில் முன்பு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார். பின்னர் அந்த அறை இரண்டாக பிரிக்கப்பட்டு பாதி காங்கிரஸ் எம்.எல்,ஏக்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டதால் அதை தலைவர் பயன்படுத்துவது இல்லை என்கிறார்கள்.

மேலும் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த சைரன் பொருத்தப்பட்ட காரை இன்னும் அவருக்கு திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் அவரும் அதைக் கேட்காமல் அவரது சொந்த வண்டியில் போவதாகவும் சொல்கிறார்கள். எல்லாப் படத்துலயும் சைரன் வச்ச வண்டியில போயி கேப்டனுக்கு போரடிச்சாலும் அடிச்சிருக்கலாம் இல்லையா?

இந்நிலையில் ஏழு பேரையும் நீக்கி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழப்பாரா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அவர் இழக்க வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் எண்ணமும் கூட என்கிறார்கள் பத்திரிக்கை நண்பர்கள்... எது நடந்தாலும் எல்லாருக்கும் தெரியும்படித்தான் நடக்கும். அரசியல் விளையாட்டில் எந்தக்காய் நகர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதனிடையே திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகச் சென்ற பிரேமலதா, எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் தேமுதிகவை அழிக்க முடியாது என்றும் மக்கள் பணியில் தேமுதிக எப்பவும் ஈடுபடும் என்றும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். 


எதிர்கட்சித் தலைவராக விஜயகாந்த் சாதித்தாரா? மின் வெட்டு, விலைவாசி உயர்வு என தினமும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம் இருக்க ஒரு வளரும் கட்சியை அழிக்க ஜெயலலிதா ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கிறார்? அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மக்கள் பிரச்சினைகளுக்காகத்தான் கட்சியை பகைத்துக் கொண்டார்களா? என்பதெல்லாம் இப்போது பத்திரிக்கைகளுக்கும் சரி... மக்களுக்கும் சரி தேவையில்லாத செய்திகளாகிப் போய்விட்டன... விஜயகாந்த் வீழ்வாரா என்பதில்தான் பலரது ஆர்வம் இருக்கிறது.

நாக்கைத் துருத்தி கைகளை மடக்கினால் மட்டும் போதாது அரசியல் சாணக்கியத்தனம் இருக்க வேண்டும்... அதில் கில்லாடி திராவிடக் கட்சிக்காரர்களே... அவர்களை மிஞ்சுவது என்பதும் அவர்களை எதிர்ப்பது என்பதும் கடினமான அரசியல் என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே ஆளுங்கட்சியை எதிர்க்கும் விஜயகாந்த் வீழ்வாரா இல்லை வீழ்வேன் என்று நினைத்தாயோ என எழுந்து கொக்கரிப்பாரா என்பது போகப்போகத் தெரியும்.

படங்களுக்கு நன்றி : கூகுள் இணையம்
-'பரிவை'. சே.குமார்

4 எண்ணங்கள்:

jeeva MBA சொன்னது…

மாற்றுக்கட்சி என்பதில் சந்தேகமே இல்லை.காலம் பதில் சொல்லும்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

ரைட்டு,,..

Unknown சொன்னது…

கோடிகள் புரண்டதால கேப்டனுக்கு இந்தக் கதி.இப்ப தானே துளிர் விட ஆரம்பிச்சது?"ஜீ" எல்லாம் இன்னும் பாக்கலியே,நடிச்சுக் கிழிச்சது எல்லாம் மொதல் போட்டாச்சு.பாப்போம்.எங்களுக்கும் ஒரு 'அலைக்கற்றை' வராமலா போயிடும்,ஹி!ஹி!!ஹீ!!!

ராஜி சொன்னது…

வீட்டுலயே பொண்டாட்டியையும், மச்சினனையும் விட்டு கட்சி ஆஃபீசுக்கு தனியா வந்தா அடுத்த எலக்‌ஷன்ல ஜெயிக்க வாய்ப்பு இருக்கு