மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 1 ஜூலை, 2013

மருத்துவர் தினத்தில் சில நினைவுகள்


இன்று மருத்துவர் தினமாம். இந்த முகநூலின் பயன்பாடு அதிகமான பின்புதான் நிறைய தினங்களை அறிய முடிகிறது. 

இன்றைக்கு பெரும்பாலான மருத்துவமனைகள் பணம் ஒன்றே பிரதானம் என்ற நிலையில்தான் இருக்கின்றன.மருத்துவர்களும் லட்சங்களைக் கொட்டி படித்துவிட்டு லட்சியக் கொள்ளையர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் பணி புரிந்தாலும் தனியாக மருத்துவமனை வைத்து அரசு மாத்திரை மருந்துகளை வைத்து தொழில் நடத்தும் டாக்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சினிமாவில் காட்டுவது போல் சுவாசம் நின்ற பிறகும் இருப்பது போல் மருத்துவக் கருவிகளை மாட்டி பணம் பறிப்பவர்களும் மருத்துவமனைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு பக்கம் இப்படியிருந்தாலும் மனித நேயத்தோடும் மக்கள் நலனுக்காக தங்களது தொழிலை நடத்தும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தேவகோட்டையில் தற்போது பிரபலமாக இருக்கும் மகப்பேறு மருத்துவர் ஒருவர் மருத்துவமனை ஆரம்பித்த புதிதில் எங்கள் மூத்த அக்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அது முதல் எங்க வீட்டில் எல்லாருக்கும் அங்குதான் பிரசவம் பார்த்தார்கள். 

எங்கப்பா மீது அந்த டாக்டருக்கு ஒரு தனி மாரியாதை, அப்பா என்றுதான் அவரும் அழைப்பார். இரவில் ஆண்கள் தங்க அப்போது இல்லை இருந்தும் அப்பா படுத்துக் கொள்ள அனுமதிப்பார். யாரை பிரசவத்துக்கு கூட்டிச் சென்றாலும் சுகப் பிரசவமாத்தான் இருக்கணும், ஆபரேசன் பண்ணக்கூடாது என்று அப்பா டாக்டரிடம் சொல்லிவிடுவார். அவரும் சிரித்துக் கொள்வார். அபரேசன் பண்ண மாட்டார். 

என் மனைவிக்கு அவர்தான் செக்கப் செய்து கொண்டிருந்தார். பிரசவம் அவரிடமே பார்ப்போம் என்று அப்பா சொன்ன போது என்னவளின் வீடு மதுரை என்பதால் அங்கே பார்ப்போம் என்று மாமா சொல்லிவிட்டார். மகப்பேறில் பிரபலமான மருத்துவமனை, செக்கப் போகும் போதெல்லாம் குழந்தை நல்லாயிருக்கு சுகப்பிரசவம்தான் என்று சொன்னார்கள். 

வலி வந்து கூட்டிப் போய் காட்டினால் அங்கு தங்கச் சொல்லிவிட்டார்கள். ஊசி மருந்து என மாற்றி மாற்றி போட்டார்கள். காலையில் பிரசவம் ஆகும் பிரச்சினையில்லை இட்லி சாப்பிட சொன்னார்கள். ஒரு இட்லி கூட சாப்பிட்டிருக்க மாட்டார். வந்து கூப்பிட்டார்கள்... என்ன என்று கேட்டபோது ஸ்கேன் பண்ண வேண்டும் என்றார்கள். இப்போதானே பண்ணி நல்லாயிருக்கு சாப்பிட சொல்லுங்கன்னு சொன்னீங்க என்றதும் இல்ல மறுபடி செய்யணும் என்றார்கள். 

ஸ்கேன் பண்ணிவிட்டு குழந்தை கொடி சுத்தி கிடக்கு உடனே ஆபரேசன் பண்ணனும் என்று சொல்ல, நாங்கள் சண்டைக்குப் போக, பின்னர் மாமா அப்பாவெல்லாம் வந்து பேசி முடிவில் ஆபரேசனுக்கு ஒத்துக் கொள்ள ஆபரேசன் தியேட்டர் கொண்டு சென்றார்கள். அங்கு ஒரு நர்ஸ் எம்புட்டு தின்னு இருக்கா பாரு என்று சொல்லியிருக்கிறார். அரை மயக்கத்தில் அதை கேட்டதாக பின்னர் சொன்னார். சாப்பிட சொன்னதும் அவர்கள்தான்... அரை இட்லி சாப்பிடுவதற்குள் கூப்பிட்டவர்கள் அவர்கள்தான்... பின்னர் இது போன்ற பேச்சுக்கள் வேறு.

எல்லாம் முடிந்து தேவகோட்டை வந்து ஸ்ருதிக்கு தடுப்பூசி போட எங்கள் டாக்டரிம் போனபோது என்ன சுகப்பிரசவம்தானே என்று கேட்டார். இல்ல ஆபரேசன் என்றதும் எதுக்கு ஆபரேசன் எல்லாம் நல்லாத்தானே இருந்தது. சரி ஆபரேசனுக்கு அப்பா ஒத்துக்க மாட்டாரே... எப்படி விட்டார் என்று கேட்டார். நடந்ததை சொன்னதும் இப்படியும் இருக்கிறார்கள் என்று சொன்னார். அதன் பிறகு மதுரை மருத்துவமனையை மறந்துவிட்டோம். அடுத்து விஷாலும் ஆபரேசன் பண்ணித்தான் பிறந்தான் ஆனால் இந்த முறை காரைக்குடியில்...

எங்க ஊரில் இன்னொரு டாக்டர் இருந்தார். ஏழைகளின் தோழன் எனலாம்... பக்கத்து வீட்டுக்காரர் போல பேச்சு... டோக்கனெல்லாம் தேவையில்லை... அவர் அறைக்குள் எத்தனை பேர் நிக்கலாமோ அத்தனை பேர் உள்ளே சென்று அவர் மேஜையைச் சுற்றி நிற்கலாம். அதுதான் அவருக்கும் பிடிக்கும்.

'உங்களுக்கு என்ன பண்ணுது?' என்று பெரியவர் ஒருவரிடம் கேட்கும்  போதே 'பெரியத்தா கால் வலி எப்படியிருக்கு?' என்பார். 'தம்பி என்ன விஷயம்?' என்று பக்கத்தில் நிற்பவனை கேட்பார். இப்போ பெரியவரின் பதிலுக்கு 'வெளிக்கி வெள்ளையா போகுதா மஞ்சளா போகுதா'ன்னு கேட்பார். ஆனால் எல்லாருக்கும் சரியான மருந்து மாத்திரை எழுதுவார். 

அவரது மருத்துவமனையிம் அறைகளுக்கு சிந்து, கங்கை, பிரமபுத்திரா என நதிகளின் பெயரை வைத்திருப்பார். நோயாளிகளை பார்த்துக் கொண்டே நர்ஸை அழைத்து 'கோதாவரியில பென்சிலின் போட்டுட்டு வா' என்பார். எங்க ஊரில் எல்லாம் உடம்பு சுகமில்லை என்றால் அவருகிட்ட போனா போதும் சரியாயிடும் என்று போய் பார்த்தார்கள். 

எனது பெரியப்பா மகன் ஊரில் ஒருவருக்கு முடியலை இவரிடம் என்று கூட்டிப் போனார். அப்போது இரவு எந்த நேரத்தில் போனாலும் இவர் பார்ப்பார். அழைப்பு மணியை அழுத்தியதும் ஒருவர் கைலியை கட்டிக் கொண்டு வந்து கதவை திறந்து இருக்கிறார். அண்ணனும் டாக்டரைப் பார்க்கணும் என்றதும் கைலியுடன் வந்தவர் இருங்க ஐயாவை வரச் சொல்லுறேன்னு சொல்லி உள்ளே போய் இருக்கிறார். கொஞ்ச நேரத்தில் உள்ளே இருந்து அழைப்பு வர சென்றால் கைலியுடன் இருந்தவர் நாந்தான் டாக்டர், என்ன சின்னப்பய மாதிரி தெரியுறேன்னா வளரலையேப்பு என்று சொல்லியிருக்கிறார். மிகவும் நல்ல மனிதர், இன்னமும் கிராமத்து மக்கள் அவரைத் தேடி வரத்தான் செய்கிறார்கள்.
இப்படி இன்னும் சிலரையும் சொல்லிக் கொண்டு போகலாம்...

இது போன்ற நல்ல மருத்துவர்களுக்கு மருத்துவர் தின வாழ்த்துக்களை சொல்வதில் எள்ளளவும் சந்தோஷம் குறைவதில்லை. வாழ்க மக்கள் நலன் காக்கும் மருத்துவர்கள்...

-'பரிவை' சே.குமார்

5 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சேவை மனம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

ராஜி சொன்னது…

கடவுளுக்கு சமமான மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்,'மனிதாபிமான'முள்ள மருத்துவர்கள் அனைவருக்கும்!

Asiya Omar சொன்னது…

மருத்துவர்கள் அனைவருக்கும் இந்நாளில் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.ஊர் போய் திரும்பி வந்து பதிவு போட ஆரம்பிச்சாச்சு போல சகோ.நல்ல பகிர்வு.

ம.தி.சுதா சொன்னது…

பேஸ்புக்கால் பல நன்மைகள் என்பது உண்மை தான்...
நன்றிங்கோ