மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : வனிதா மட்டுமே தவறுகள் செய்கிறாரா ஆண்டவரே..?

ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டி-2019-ல் எனது 'வீராப்பு' என்னும் கதை இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். எத்தனையோ முறை இணைய வழிப் போட்டிகளில் பரிசு பெற்றிருந்தாலும் ஒரு அமைப்பின் மிகப் பெரிய அளவிலான போட்டியில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் சிறப்புக்குரியது.

போட்டியை நடத்திய ரியாத் தமிழ்ச்சங்கத்தும், பகிர்ந்து கொண்டு வாழ்த்திய எங்கள் அமீரக எழுத்தாளர் சங்கம் வாட்ஸப் குழுமத்திற்கும் வாழ்த்திய எங்கள் பிளாக், பாக்யா வாட்ஸப் குழும நண்பர்களுக்கும் போனிலும் வாட்ஸப்பிலும் முகநூலிலும் வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி. எப்பவும் போல் ஒரு போட்டி என்றுதான் கடந்து போனேன்... வாழ்த்துக்கள் வந்த விழுந்த வண்ணம் இருந்த போதுதான் இது ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் வெற்றி என்பதை உணர்ந்தேன். 

வெற்றி பெற்ற அனைவருக்கும் மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற தேனம்மை அக்காவுக்கும் வாழ்த்துக்கள்.

Image result for bigg boss 07 september 2019 images hd
னிக்கிழமை கமலஹாசனின் நாள்... 

சென்ற சீசனில் கமல் வரும் நாட்களில் மட்டுமே பிக்பாஸ் பார்த்திருக்கிறேன்... அவ்வளவு நேர்த்தியாக, நிறைய விஷயங்களுடன், யாருக்கும் சார்பாய் நிற்காது... சிறப்பானதொரு நிகழ்ச்சியாக அது இருந்தது... ஆனால் இந்த சீசனில் வடிவேலு கிணத்தைக் காணோம்ன்னு சொன்ன மாதிரி 'உத்தமன்' கமலைக் காணோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

அவர் கிரேசி போல் டைமிங் ஜோக் பண்ணலையா..? உலக விஷயங்கள், உள்ளூர் அரசியல் பேசலையா..? கண்டிக்க வேண்டியவர்களைக் கண்டிக்கலையா..? வனிதாவை வச்சிச் செய்யலையா..? இதற்கு மேல் என்ன வேண்டுமென எதிர்க் கேள்வி வரலாம்.

வனிதாவை மட்டுமே டார்க்கெட் செய்துவிட்டால் போதுமா..? தர்ஷனுக்கும் ஷெரினுக்கும் சார்பு நிலை எடுத்தால்  மட்டும் போதுமா..? இந்த வீட்டுக்குள் எல்லாரும் போட்டியாளர்களே, அதில் என்ன பாகுபாடு..? சாண்டிக்கும் கவினுக்கும் எப்போதும் பொன்னாடையும் மற்றவர்களுக்கு கதர் துண்டும் போடுவது ஏன்..? எதற்காக அவர்களுக்கு இத்தனை ஆதரவு..? ஆண்டவர் என்பதால் ஏழை, பணக்காரன் பாகுபாடு ஆலயத்தில் இருப்பது போல் இங்கும் காட்டப்படுகிறதோ..?

வனிதா பிரச்சினைகளுக்கு பிள்ளையார் சுழி மட்டுமல்ல... அதன் பின்பும் பக்கம் பக்கமாய் நாவல்தான் எழுதுகிறார். அவர் செய்வது பிக்பாஸைப் பொறுத்தவரை தவறில்லை என்றுதான் தட்டிக் கொடுத்து வைத்திருக்கிறார்... அவர்களுக்கு போட்டியில் சுவராஸ்யமும் வேண்டும்... டிஆர்பியும் அதிகரிக்க வேண்டும்... அதற்காகவே வனிதாவை வம்படியாக மீண்டும் களமிறக்கியிருக்கிறார்கள். இல்லையென்று சொல்ல முடியுமா விஜய் தொலைக்காட்சியும் கமலும்..?

தர்ஷன்தான் வனிதாவின் குறியே தவிர ஷெரின் அல்ல... இதை வனிதா உள்ளுக்குள் மீண்டும் திரும்பி வந்த போது நிகழ்ந்த பிரச்சினைகளின் போதே நான் எழுதியிருந்தேன். தர்ஷனை குறி வைத்த போது அவனின் பதிலடி பலமாக இருந்ததால் மிஷன் ஷெரினுக்கு மாறியவர்தான் வனிதா. அவளின் இலக்கு நானல்ல... தர்ஷன்தான்... அவனை அடிக்க என்னைக் கட்டம் கட்டுகிறாள் என ஷெரினும் நேற்றுச் சொன்னார். அதுதான் உண்மையே தவிர என் தோழி லவ் பண்றதால வெளிய ஒரு பொண்ணு பாதிக்கப்படுறான்னு சொல்றதெல்லாம் வேஷம்... ஆமா வனிதா வெசம். இந்த வெசமே விஜய் டிவிக்கு தேனாய் இருக்கிறது. பின் ஏன் அடிப்பதாய் ஒரு நாடகம்..?

தர்ஷனை நேரடியாக அடிக்க முடியவில்லை... அதனால் தன் தோழியை அடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஷெரின் உடைந்து அழுதது வனிதாவைப் பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியாய் தெரிய ஆரம்பித்துவிட்டது. இதை அவரே எதிர் பார்க்கவில்லை... ஷெரின் அழாமல், இரண்டு வாரங்களுக்கு முன்பு போல இதைச் சட்டை செய்யாமல் போயிருந்தால் வனிதா இவ்வளவு பெரிய பிரச்சினையை எழுப்பியிருக்க முடியாது. இதற்கு எண்ணெய் ஊற்றியது சாக்சி என்பதை மறக்க முடியாது. ஷெரினின் அழுகை தர்ஷனை செயலிழக்க வைக்கும் என்பதாலேயே பிரச்சினையை பூதாகரமாக்கினார். பிக்பாஸ் இதை விரும்பவில்லை என்றால் வனிதா கண்டிக்கப்பட்டிருக்கலாம்... ஆனால் அவரின் விருப்பமும் பிரச்சினைகள்தான் என்பதால் வனிதாவை எப்படி கண்டிப்பார்..?

நாமினேசன் என்பது அந்த வாரத்தில் அவர்கள் நடந்து கொள்ளும் முறை, தங்களுக்குள் நிகழும் பிரச்சினைகள் போன்றவற்றின் அடிப்படையில்தான் செய்யப்பட வேண்டும் என்பதுதான் கடந்த சீசன்களில் நடைமுறையாக இருந்தது.

சில சமயங்களில் சொல்லும் காரணம் சரியில்லை என்றால் பிக்பாஸ் இது சரியான காரணமில்லை இந்தக் காரணத்துக்காக நீங்கள் அவரை நாமினேட் செய்ய முடியாது எனச் சொல்லி, சரியான காரணம் கேட்பார். அப்படியிருக்க, நீ பிரபலம்.... வெற்றியாளன்... இங்க இருக்க வேண்டியதில்லை என கவின் சொன்னதை வனிதா தட்டிக் கேட்டது தவறு... அவங்கவங்க கருத்து அவங்கவங்களுக்குன்னு கமல் கவினுக்கும் அந்தக் குரூப்புக்கும் வக்காலத்து வாங்குவது ஏன்..? அவர்கள் செய்ததெல்லாம் நியாயம் எனப் பேச கமல் எதற்கு... வடிவேலுக்கள் போதுமே. 

மேலும் பிரபலம் என்ற போது போட்டியாளராய் ஏன் கூட்டி வந்து அமர வைக்க வேண்டும்... இவர்களுக்குப் பதில் வேறு சாதிக்காத, பிரபலமில்லாத ஒருவருக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கலாமே.... கவின் கூட இதையே சொல்லி நாமினேட் செய்யாமல் இருந்திருப்பானே...

பிரபலமோ பிராபலமோ தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க பணம் வேண்டித்தான் உள்ளே வருகிறார்கள். இருக்கும் ஒவ்வொரு நாளும் பணமே... அதற்காகத்தான் வீட்டுக்குள் ஊடலும் கூடலும்...

சேரன் பிரபலம் என்றாலும் வெற்றியைச் சுவைத்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை கவின் அறிவானா..? அவரின் போராட்ட வலிதான் அவனுக்குத் தெரியுமா..? ஒரு காலத்தில் கனவுக்கன்னியாய் ஷெரின் இருந்தாரென்றால் இப்போது அவரின் நிலமை என்னவென்பது யாருக்குத் தெரியும்..?

தர்ஷனுக்கும் முகனுக்கும் வாழ்க்கைப் பிரச்சினை இருக்குன்னா வேறு யாருக்கும் இல்லையா.. ஷெரின் சொன்னது போல் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை... காயம் இல்லாமலில்லை. இது போட்டி என்னும் போது வலிகளையும் காயங்களையும் வெளியே வைத்துவிட்டுத்தான் களமிறங்கணும். அதை வைத்து வெல்ல நினைக்கக் கூடாது.

ஒரு சில விஷயங்களில் வனிதாவின் பேச்சும் கேள்வியும் சரியானதே என்றுதான் தோன்றுகிறது. நேற்று கமலையே கேள்விகள் கேட்டார். மிஷன் கமல் இன்னும் செய்யலைன்னு சொல்லியிருந்தேன் முந்தைய பதிவில்... அதை நேற்று செய்துவிட்டார். வனிதாவிடம் பேசியதில் கமலுக்கே வேர்த்துவிட்டது. மக்களை துணைக்கு வைத்துக் கொண்டு திருப்பி அடிக்க ஆரம்பித்தார் கமல். வனிதா நின்னு ஆடக்கூடிய மனுசி என்பதாலேயே சில விஷயங்களில் சேரனைப் போல கமலும் நாசூக்காக ஒதுங்கி நகர வும் செய்தார்.

நேற்று கமல் எப்பவும் போல் சாண்டி, கவின், கூடவே தர்ஷனுக்குச் சொம்படித்தார்... வனிதாவை மட்டுமே டார்க்கெட் பண்ணியது எந்த வகையிலும் நியாயம் இல்லை. வனிதாவின் பேச்சுக்கெல்லாம் சில நேரம் கிரேஸியாகவும் சில நேரம் ரகுவரனாகவும் முகபாவம் காட்டிப் பேசியது  அவரை மிகவும் ரசிக்க வைத்தது, இல்லை என்று சொல்லவில்லை... ஆனாலும் கமல் கமலாய் இல்லை என்பது வருத்தமே 

கடந்த வாரத்தைவிட இந்த வாரம் கமல் செம கலக்கல்தான்... சாக்சி, சாட்சி வைத்துப் பேசியது... கிரிக்கெட் ஹைலைட் வைத்துச் சொன்னது... யோசிச்சுப் பேசுங்க என்றது... Affairs-க்கு கொடுத்த விளக்கம்... வனிதாவின் கேள்விகளுக்கு நையாண்டியாய் பதில் சொன்னது என எல்லாமே அருமை. அதற்காக வாழ்த்துக்கள் கமல் சார்.

இருப்பினும் வனிதாவின் கேள்விகள் எல்லாமே தவறென்பதாக சித்தரிப்பது அழகல்ல... வனிதா கத்திப் பேசக்கூடியவர்தான் என்றாலும் எதிராளி குரலை உயர்த்தினால் அடங்கிப் போகக்கூடியவர் என்பதால்தான் எதிராளியைப் பேசவிடாத லாவகத்தை கையில் வைத்திருக்கிறார் என்பதை கமல் உணர்ந்தபின் வனிதாவை அடியோ அடியென அடிக்க ஆரம்பித்தார். 

ஒரு கட்டத்தில் வனிதா என்னோட கேம்தான் என்ன சார்...? நீங்க என்ன எதிர் பார்க்கிறீங்க என்று கேட்டதெல்லாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டியவைதான். நீ செய்தது எல்லாமே தப்புத்தான் என்பதற்கு நியாய அநியாத்தை அலசி ஆராய்ந்து பேசக்கூடிய ஆள் தேவையில்லையே. வனிதாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கடந்து போய்விடுவதால் நீதி நிலைத்து விடுமா..?

சாக்சி மக்களை நாய் என்றது தெளிவான விஷயம்... அவரைக் காக்கும் பொருட்டு கண்டிக்காமல் சப்பைக் கட்டு கட்டியதில் எல்லாம் கமல் வீழ்வேனேனென்று நினைத்தாயோ எனக் கொக்கரிக்க முடியாமல் வீழ்ந்துதான் கிடந்தார்.

சாண்டி, கவினுக்கு சாமரம் வீச வேண்டும் என்பது கமலுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதா..? சுதந்திரமாக பேசும் அவரின் கைகள் கட்டப்பட்டிருக்கிறதா..? வாய்க்குப் பூட்டு இட்டு விட்டார்களா..? வனிதாவை அந்த அடி அடித்த நீங்கள் குழுவாய் ஒருவரை நாமினேட் செய்வது தவறென ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே... ஏன்?

ஷெரினிடம் ஒன்று, வனிதாவிடம் ஒன்று என தர்ஷன் - ஷெரின் உறவைப் பற்றி சாக்சி சொன்னதை நான் எப்பவும் போட்டுக் கொடுக்கும் வேலை பார்க்கமாட்டேன் என்றாலும் இது பிரச்சினைக்கான தீர்வாய் இருக்கும் என  சாக்சியை வைத்தே சொன்னது சிறப்பு.

அடிக்கடி சொல்வது நல்லதல்ல என கவினுக்கு நண்பேன்டாவுக்காச் சொன்னது சரியே என்றாலும் அது எப்பவும் போல் கமல் என் பாக்கெட்டுக்குள்ள இருக்கார் என கவின் சொல்வதற்கு வழிதான் வகுத்துக் கொடுத்ததே தவிர, அதற்காக துளி கூட அவனை யோசிக்கவோ வருந்தவோ செய்யவில்லை... தர்ஷன் சொன்னப்போ புரிஞ்சிக்கிட்டேன் சார் என்றும் என் வாழ்க்கை நண்பர்களால் ஆனது என்றும் கடந்து போனான் கவின்.

கமலின் பேச்சின் இடையே ஷெரின் குறித்து பேச ஒரு பதினைந்து நிமிடத்தை வனிதா எடுத்துக் கொண்டார். கமலும் வீணாவுல எதுக்கு நிற்பானேன்னு போய் உட்கார்ந்து விட்டார். வனிதாவுக்கும் தர்ஷனுக்கும் பெரிய சண்டை ஆரம்பித்த போது வனிதா மெல்லப் பின் வாங்கினார். 

தர்ஷன், சேரன், ஷெரின் மட்டுமே வெளியே பேசிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் வனிதாவிடம் ஒரு கேள்விதான் கேட்டார்கள். ஷெரினைப் பற்றி ஓராயிரம் பதில்கள் சொல்லி, இடையில் பேச வந்தவர்களை நிறுத்தி, தான் மட்டுமே பேசினார்... இது மேலே சொன்ன காரணத்தின் வெளிப்பாடுதான்... எதிராளியைப் பேசவிட்டால் தன்னோட பேச்சின் வீரியம் குறைத்து வீழ்வோம் என்பதைக் கணித்து வைத்திருக்கும் மனிதர்களின் மிகப்பெரிய உக்திதான் இது.

மற்றவர்கள் எல்லாம் ஜெயலலிதா முன்.... அவ்வளவு தூரம் ஏன் போக.. சசிகலா முன் குனிந்து நின்ற எடப்பாடி போலத்தான் அந்த பதினைந்து நிமிடமும் நின்றார்கள். வனிதா ஷெரினை எந்தளவுக்கு கீழ்த்தரமானவள் என்று சொல்ல முடியுமோ அந்தளவுக்குச் சொல்லி, கவின் லாஸ்லியா காதல் கவித்துமானது... மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல என்ற ரீதியில் பேசினார்.  

கவின் லாஸ்லியாவின் காதல் பண்பான காதல் என வனிதா சொன்னதற்கு இரண்டு காரணங்களே உண்டு. ஒன்று ஷெரினையும் தர்ஷனையும் தாக்கி அதில் தர்ஷனை வீழ்த்த, இவனுக ஆதரவு வேண்டும். ரெண்டாவது உள்ளே அக்கா சொல்றதைக் கேளுன்னு சொன்ன சாக்சி, வெளியில இருந்து ஷெரினுக்கு ஆதரவாய்ப் பேசியது. இவற்றைத் தவிர வேறெதுவும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை... நானே சர்வாதிகாரி என்ற நிலையில் தன்னை ஒருத்தி எதிரிக்கும் போது அவளை அடிக்க வனிதா நகர்த்திய காய்தான் கவின் - லாஸ்லியாவின் காதல் புனிதக் காதல் என்றது.

லாஸ்லியாவுக்கு தனது நட்புக்களை மனதில் நிறுத்துவதில் ரேசன் இருக்கிறது அல்லவா என கமல் கேட்டபோது ஆமென ஒத்துக் கொண்டார். கவினைக் காப்பாற்ற நல்லா விளையாண்ட முகனை நேரடி நாமினேசனுக்கு கொண்டு வர முயன்றவர்தான் என்ற போது நாமினேசனில் முகனைச் சொன்னதை வைத்துத்தான் இதைக் கண்டு பிடிக்க வேண்டுமா என்ன..? தனது கேள்வியால் முகன் புரிந்து கொண்டு விளையாட ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கை கமலுக்கு... ஆனால் முகனுக்கு..?

போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் வைத்து அபிராமி, சாக்சி, மோகன் மூவரும் ஓப்போ போனுக்காக சிறிய வீடியோ ஒன்று எடுத்தார்கள். போட்டியாளர்கள் தங்களை வீடியோ எடுத்தவரை போட்டோ எடுக்க வேண்டும். எந்தப் போட்டோ சிறந்தது என்பதை மூவரும் கேமரா முன் சொல்ல வேண்டும்... இதில் கூட வனிதாக்காவின் மனம்தான் குளிர்விக்கப்பட்டது.

அபிராமியும் மோகனும் வெளியில் இருந்து போட்டியாளர்கள் பற்றிய கருத்தைச் சொன்னார்கள். வனிதா அட்சய பாத்திரத்தோட வந்த மணிமேகலை, கற்பகத்தரு என்றெல்லாம் மோகன் பேசியது ரொம்ப அதிகம்... அபிராமிக்கு ஆச்சர்யம் கலந்த சிரிப்பு வந்தது. எனக்கும்தான்... வனிதாவுக்கு கைதட்டலாமே என மோகன் கேட்டு வாங்கிய போது கமலும் கைதட்ட, அது குளோசப்பில் காட்டப்பட்டது கவிதை.

மொத்தத்தில் கமல் எப்போது சார்பு நிலையிலிருந்து மாறுவார் என்ற எதிர்பார்ப்பை மனசுக்குள் தொடர வைத்ததுடன் வனிதா மோசமானவர் என்றாலும் அவரை மட்டுமே கட்டம் கட்டிப் பேசுதல் என்பது வெறுப்பாகத்தான் இருந்தது என்பதையும் மட்டுமே செய்ததுதான் நேற்றைய எபிசோடின் சாராம்சம்.

ஆண்டவர் இன்னைக்காவது எல்லாப் பக்கமும் அடித்து விளையாடுவாரா..? அல்லது அதே ஆப் சைடு விளையாட்டு மட்டும்தானான்னு பார்ப்போம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இரண்டாம் பரிசிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

நெறைய BB கதையை இங்கேயே கண்டுகளித்தேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி அண்ணா...
ஹா..ஹா... மகிழ்ச்சி....
இன்னைக்கும் வனிதாவுக்குத்தான் கட்டம் போல கவினெல்லாம் ஹாப்பி.