மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 16 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : வெளியேறிய 'வாயாடி' வனிதா

Image result for bigg boss tamil 15th september images hd

ண்டவரின் வருகையில் இந்த வாரம் அவ்வளவு உயிர்ப்பில்லை... 

உப்பில்லை... 

உரைப்பில்லை... 

உறுதியாய் எதுவுமில்லை...

உள்ள இருக்கவனுங்க செய்ய டாஸ்க்கும் இல்லை...

ஐந்தாவது மற்றும் எட்டாவது பொதுத் தேர்வு குறித்துப் பேசினார்... இது எதனால் தேவையில்லை... இதனால் ஏற்படும் பாதக, சாதகங்கள் என்ன... என்பதையெல்லாம் விரிவாக அலசி ஆராய்ந்த பின்னர் கமல் போன்றோர் பேசுவதே சாலச் சிறந்ததாக அமையும். எதிர்க்கட்சி நான் என்பதாய் பேசுதல் பல நேரங்களில் என்ன சொல்ல நினைக்கிறோமோ அதைச் சரிவரச் சொல்ல முடியாமல் போய்விடும். பொங்குதல் அழகுதான்... ஆனால் பொங்கும் முன்னர் நிறைய யோசிக்க வேண்டும். மேடைக்கான பேச்சு அழகல்ல... நான் பொதுத்தேர்வை ஆதரிப்பவன் இல்லை.

முகனுக்கு வந்த போன்காலில் விளையாட்டை நல்லாத்தான் விளையாடுறே... ஆனா யாராவது அடிச்சிக்கிட்டா அந்தப் பக்கம் போகாமல் வடிவேலு மாதிரி ஒதுங்கிப் போயிடுறியேன்னு கேட்டாங்க... தான் சண்டை நடக்கும் போது அங்கு போய் விலக்கிவிட முடியுமென்றால் போவேன் என்றும் சில நேரங்கள் விலக்கிவிட முடியாததுடன் நாமே சண்டையைத் தூண்டி விடுவது போலவும் அமைந்து விடுவதால் விலகிப் போகிறேன். இனி சண்டையின்னா முத ஆளா அங்க நிற்பேன்னு சொன்னான்.

உடனே கமல் முன்னால் போய் நிற்பது சிறப்பு... பின்னால் போய் நின்னா நமக்கே கூட அடி விழலாம் என்றார். அதன் பின் என்ன செய்யிறதுன்னு தெரியாம விக்கிரமன் ஒரே பாட்டை ஒன்பது தடவை போடுற மாதிரி... கீறல் விழுந்த ரெக்கார்ட் திரும்பத் திரும்பப் பாடுற மாதிரி... கேட்ட கேள்விகளே மீண்டும் எல்லாருக்கும்.

சனிக்கிழமை இவங்க வரலைன்னு வருத்தப்பட்டேன்னு சொன்னதால, சாண்டிக்கு கொழுந்தியாவையும் மாமியாரையும் கூட்டியாந்து கண்ணீர்க்கூட்டு வச்சானுங்க... மாமியார் மாப்பிள்ளையை மாப்பிள்ளைன்னு கூப்பிட்டதில்லையாம்... எஞ்சாமி, எங்கப்பா, தங்கம்ன்னு என்னென்னமோ சொன்னாங்க... அடி ஆத்தி என்னமா உருகுறானுங்க... சாண்டிக்கு விழும் ஓட்டுக்களை இருநூறு சதவிகிதமாக மாற்றும் பகிரங்க முயற்சியில் வெற்றியும் பெற்றார்கள்.

நானும் தான் என் மாமியாரை இத்தனை வருடத்தில் நேருக்கு நேர் அத்தையென்று சொன்னதில்லை... அவரும் மாப்பிள்ளை என்று சொன்னதில்லை.... எங்களுக்குள் மாமியார்/மாப்பிள்ளை, அம்மா/பிள்ளை, அக்கா/தம்பி என எல்லா உறவு இருக்கலாம்... வெளிக்காட்டித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை... மரியாதையிலேயே மதிப்புத் தெரியும்.

இவனுங்க என்னடான்னா எங்கப்பாம்மா மாதிரி, என் மகளுக்கு அப்பா மாதிரியின்னு புலம்புறானுங்க... இதெல்லாம் வேற லெவல்... வேகாத அவல்.

ஒருமுறை பிக்பாஸ் வீட்டுக்குள் சாண்டி என் மனைவி, மாமியாரெல்லாம் மதிக்கவே மாட்டேன்னு சொன்னதாய் ஞாபகம். இன்று செல்லக்குட்டி... செல்லாக்குட்டியெல்லாம் போடுகிறார்கள். நடிகர்களின் உலகம் கற்பனையிலானதுதானோ..?

அப்பறம் ஷெரினுக்குச் சித்தி, சேரனுக்குத் தங்கை மகள் எனச் சிலரை மேடையேற்றினார்கள். அது போக 'லாலா...லாலா...லாலி'ன்னு வீடியோவாய் சில வாழ்த்துக்கள் தர்ஷனுக்கு... சேரனுக்கு... ஏன் கமலுக்கும் கூட.

ஆம்... அவரின் அண்ணன் சாருஹாசன் பேசினார்... தம்பியின் சினிமா ஆசையும் படிப்பைக் கெடுத்து அப்பா சினிமாவில் நடிக்க வைத்ததையும் தான் அவருக்கு அப்பா மாதிரித்தான் என்பதையும் சொன்னார். கமலும் அதை ஒத்துக் கொண்டார்... அப்பாவின் அம்பது வயதுக்கு மேல் பிறந்தவன் என்பதால் அண்ணன்கள் எல்லாருமே எனக்கு அப்பாக்கள் போலத்தான் என்றார். சந்திரஹாசன் கமலின் நம்பரை 'FB'  எனச் சேமித்து வைத்திருப்பதைப் பார்த்து அப்படின்னா என்னண்ணான்னு கேட்டதுக்கு, அது அப்படித்தான் நீ சும்மா போ என்றவர் FIRST BORN என்று அர்த்தம் என்றாராம்.

யாரெல்லாம் வரும் வாரங்களில் போவாங்கன்னு கேட்டதுக்கு வனிதா, லாஸ், கவின் என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாய்.... கவினெல்லாம் போகும் வாய்ப்பே இல்லைன்னு நாம சொன்னா யார் நம்புறா...

வனிதா ஏன் தலைவர் டாஸ்கில் விட்டுக் கொடுத்தார் என்ற கேள்விக்கு இங்க ஓட்டுப் போடுற முறையே எனக்குப் புரியலை சார்... தலைவியானா இந்த வாரம் காப்பாற்றப்படுவேன்... எப்படியும் மறுவாரமே மறக்காம குத்திருவானுங்க... நீங்களும் கவினு லாஸூ உள்ள, வனிதா வெளியேன்னு சொல்லுவீங்க... அதுக்கு நானே போயிடலாம்ன்னுதான் விட்டுக் கொடுத்தேன் என்றார்.

அதே கேள்வி தர்ஷனுக்கு... லாஸ் விளையாடவே இல்லை... கவினோட கடலை போட்டு மகசூல் பார்க்கவே இருபத்தி நாலு மணி நேரம் பத்தலை... மதிய வெயில்ல கூட பதியம் போட்டுக்கிட்டு இருக்கா... இதையெல்லாம் பார்த்து அவளைத்தான் நாமினேட் பண்ண நினைச்சேன்... ஆனாலும் உள்ளுக்குள்ள 'எல்லாமே எந்தங்கச்சி அவ இல்லாம...' அப்படின்னு பாட்டு ஓட ஆரம்பிச்சிருச்சி... நான் பொயிட்டா அவளைத் தேற்ற சேரப்பாவும் இல்லை அதனால அவளைத தலைவியாக்கிட்டா நாமினேசன்லயும் வரமாட்டா... விளையாடவும் செய்வாள்ன்னு பார்த்தேன். விட்டெல்லாம் கொடுக்க மாட்டேன்... அவளுக்கு ஒரு உந்துதலா இருக்க நினைச்சேன்னு சொன்னான்.

உடனே கமல் அப்ப அபிராமிக்கு விட்டுக்கொடுத்தது எனக் கேட்க, அது அவளை எல்லாரும் ஒதுக்கியதால அவ என்னாலயும் எல்லாம் செய்ய முடியும்ன்னு காட்ட வேண்டுமென விட்டுக் கொடுத்தேன்... அது கூட உந்துதல்தானே ஒழிய விட்டுக் கொடுத்தல் இல்லை என்றான். விட்டுக்கொடுத்தல் என்பது தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை என்பதாய்ச் சொன்னான்.

சேரப்பா... சேரப்பான்னு எல்லாரும் சொன்னாலும் சேரனுக்குத் தன் அப்பாவைப் பார்க்க ஆசை... அதை கமலிடமும் சொன்னார். கூடவே தர்ஷனுக்குப் பிறந்தநாள்ன்னும் சொன்னார். அட ஏனய்யா அதை வைத்து இன்னைக்கு நிகழ்ச்சியை நகர்த்தலாம்ன்னு பார்த்தா முந்திரிக்கொட்டை மாதிரி முந்திட்டியேன்னு கமல் சலிக்காமல் சலித்துக் கொண்டார்.

யார் காப்பாற்றப்படுவீர் என்பதற்கு உங்கள் குடும்பங்கள் வந்தபோது ஒலித்த பாடல் ஒலிக்கும் என்றார். முதல் காப்பாற்றல் வேறு யாராய் இருக்கப் போகிறது... ஆமா... கவின்தான்... தெரிஞ்சதுதான் விடுங்கடேன்னு சொல்லும் போதே, கேமரா லாஸ்லியா முகத்தை அருகில் காட்டுச்சு... ஆஹா... எத்தனை சந்தோஷம்... கண்ணெல்லாம் காதல் வழிந்தது... வெளியில அப்பன் இருப்பது தெரியாமலேயே கண்களை விரிக்குது... நிப்பாட்டி வச்சாலும் நிக்கக் கூடியதா காதல். இருபது கோடி நிலவுகளை அந்த முகத்தில் நான் பார்த்தேன்.

ரெண்டு பேரும் ஒரே தட்டில் சாப்பிடும் போட்டோக்கள் எல்லாம் வரத்தான் செய்யுது... காதல் இன்னும் வீரியமாய்த்தான் நகர்கிறது போல. விஜய் டிவிதான் அதைக் காட்டாமல் ரெண்டு பேரும் பிரிஞ்சிருக்காங்கன்னு சீனைப் போட்டுக்கிட்டு இருக்கு போல...

விரிந்த கண்களும் மலர்ந்த உதடுகளும் சிவந்த கன்னமும் மறையும் நொடிக்குள் கவினும் லாஸ்லியாவும் அருகருகே அமர்ந்து விட்டார்கள். பின்னே என்ன மரியதாஸா மரியாதையாக் கட்டி வையி... இல்லேன்னா என்னை மறந்துடுன்னு வெளிய போயி சொல்லப் போறா... ஒரு நடுத்தரக் குடும்பம் தெருவில் நிற்கப் போகிறது... அதெல்லாம் பற்றிக் கவலைப்படாதீங்க... அவ மாடர்ன் பொண்ணுன்னு கமல் தட்டிக் கொடுப்பார் என நம்புவோமாக.

அப்புறம் தர்ஷன்... பின்னே சாண்டி... வனிதா நீ போண்டின்னு வெளிய வரச் சொல்லிட்டார். எல்லாரிடமும் விடைபெற்று, சேரனின் அழுகையைத் தாயாய்த் துடைத்து, பதக்கத்தை உடைக்க மாட்டேன்... பாதை விடுன்னு சொல்ல, பிக்பாஸ் பயந்து கேட்டைத் திறக்க வனிதா என்னும் அன்னை பறந்து போனார்.

கமலிடம் பேசும்போது பெண்களுக்கு முன்னோடியாக இருப்பேன் என்றார். மகள் அறிவுரை சொன்னதைச் சொல்லிச் சிரித்தார். தன்னோட குணவார்ப்பைப் பற்றிப் பேசினார்.

கமல் தொகுப்பாளராய் இல்லாமல் கமலாய் மாறி வனிதாவுக்கு இப்படியே இருக்காதே... அன்னையாக இருந்தாயல்லவா அதுவாக இருந்து பார்... உன்னை உலகம் வாழ்த்தும் என அறிவுரை கூறினார். 

கமலுடன் ஆட வேண்டும் என்ற வனிதாவின் ஆசை 'அண்ணாத்தே ஆடுறார்...' பாடல் மூலம் நிறைவேற்றப்பட்டது. கமலின் நடன அசைவுகளை கேமாரா காதலுடன் வாங்கிக் கொண்டது. கமல் இன்னும் நடித்துக் கொண்டே இருக்கலாம்... அரசியல் ஒரு கலைஞனைக் காவு கொண்டு விட்டது. கமல் நடனத்தில் கலக்கிய ஆடிய சலங்கை ஒலி பார்க்கப் பார்க்கச் சலிக்காத படம்.

கைதட்டி பேச விடாமல் செய்தவர்கள் இப்போது உன் பேச்சைக் கேட்கிறார்கள் பார் என்ற கமல், வனிதாவின் மகள்களிடம் உங்க பிள்ளையைப் பார்த்துக்கங்க என்றார். வனிதாவை வழி அனுப்பி வைத்தார்.

ஒண்ணுமே விளையாடாத கவின் முதல் ஆளாய் காப்பாற்றப்படுகிறான்... அடித்து ஆடிய, எதிலும் பின் வாங்காத, தன் வேலையைச் சரியாகச் செய்த வனிதா வெளியேற்றப்படுகிறார்... இதுதான் விஜய் டிவியின் கேம் ஷோ. 

வரும் வாரங்களில் சேரனும் ஷெரினும் அனுப்பப்படுவார்கள்... மிஞ்சியிருப்பவர்களில் முகன் மட்டுமே பின்தங்கியிருப்பதால் அவனும் வெளியேற்றப்படுவான். கேட்டால் மக்கள் ஓட்டு... நீங்கதான் முடிவு செய்தீர்கள் என்ற தரமான வார்த்தைகள் வந்து விழும்.

கமலும் போதும்டா சாமிகளான்னு போய்விட்டார்... 

வீட்டுக்குள் எல்லாரும் மைக்கைச் சரியாப் போடுன்னு லாஸ்லியா படுத்துக்கிட்டே ஜெயலலிதாவைப் போல் கட்டளை போட்டுக்கிட்டு இருந்தார். மைக்கை கழட்டி வச்சிட்டுப் பேசுனது யாருத்தான்னு தர்ஷன் கலைஞர் மாதிரி கேள்வி கேட்டான். அது அப்போ என மழுப்பி நான்தான் இந்த வீட்டில் சட்டதிட்டங்களை மதிப்பவர் என்றார். உடனே பிக்பாஸ் லாஸ்லியா நீங்க சட்டதிட்டங்களை மதிப்பவர்தான் இப்போது மைக்கில் போர்வை உரசாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றாரே பார்க்கலாம். தர்ஷனுக்கு அம்புட்டு மகிழ்ச்சி. இந்த முறை நிகழ்ச்சி டாஸ்மார்க் தங்கங்கள் மாதிரி தள்ளாடினாலும் பிக்பாஸ் தனுஷ் மாதிரி ஆடுறார்.

அப்புறம் தர்ஷனுக்கு கேக் வந்துச்சு... எப்பவும் போல வெட்டித் தின்னானுங்க... அனுப்பியது யார் என அதனுடன் வந்த வாழ்த்து அட்டையைப் பார்த்ததில் தர்ஷனுக்கு வருத்தமே மிஞ்சியது... அதில் அவனுடைய நண்பர்கள் எல்லாருடைய பேரும் இருந்தது... அன்புக்குரிய ஒரு பெயரைத் தவிர...

அது-

சனம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இருபது கோடி நிலவு / பிக்பாஸ் பயந்து / பார்க்கப் பார்க்கச் சலிக்காத படம் - என அனைத்தையும் அருமை + ரசித்தேன்...