மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 31 அக்டோபர், 2014

மனசு பேசுகிறது : சில நொடி சிநேகம் - ஒரு பார்வை


ன்பிற்குரிய அண்ணன் இயக்குநர் குடந்தை ஆர்.வி.சரவணன்.

லையுலகில் எழுத ஆரம்பித்து நட்பு வட்டம் வர ஆரம்பித்த போது வாசித்த தளங்களில் குடந்தையூரும் ஒன்று. இவர் எழுதிய பகிர்வுகளை வாசித்து கருத்துக்களை இட்டு வந்தேன். அவரும் எனது தளத்தின் வாசிப்பாளராக இருந்தார். இப்படியாக ஆரம்பித்தது அந்த நட்பு... இன்று அண்ணன் தம்பி உறவாக மலர்ந்து நிற்கிறது.

சரவணன் அண்ணன் நல்ல எழுத்துக்குச் சொந்தக்காரர். இவரின் கதைகள் எல்லாம் ஒரு திரைக்கதைக்கான வடிவத்தில்தான் இருக்கும். அதிலும் குறிப்பாக இவர் எழுதிய 'இளமை எழுதுக் கவிதை நீ' என்ற முதல் தொடரைச் சொல்லலாம். ஒவ்வொரு அத்தியாயமும் திரையில் காணும் காட்சிகளாக விரியும். இந்தக் கதையை தொடர்ந்து வாசித்தவர்களில் நானும் ஒருவன். பின்னான நாட்களில் முகநூலிலும் எங்கள் நட்புத் தொடர அவ்வப்போது சாட்டிங்கில் உரையாடிக் கொள்வோம்.

'இளமை எழுதும் கவிதை நீ' நாவலாக வெளியான போது அதில் ஆவரின் உரையில் சில நண்பர்களுடன் என்னையும் குறிப்பிட்டு இருந்தார். அதையும் முகநூலில் வந்து தெரிவித்தார். அப்போதுதான் தெரிந்தது அவர் என் மீது கொண்ட நட்பின் ஆழம். சென்ற முறை ஊருக்குப் போன போது இவரையும் முத்து நிலவன் ஐயா, கரந்தை ஜெயக்குமார் ஐயா, தனபாலன் அண்ணா  என இன்னும் பலரைசயும் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்... அப்படித்தான் ஆனது. சில பல வேளைகளாலும் எங்கள் ஊரிலே இருக்க வேண்டிய சூழலாலும் போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

இங்கு திரும்ப சில நாட்களே இருக்கும் போது இணையப்பக்கமே வரமுடியாமல் இருந்த நான் ஒரு நாள் இரவு பதினோரு மணி இருக்கும். முகநூல் சாட்டிங்கில் வந்தார். இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து காலையில் போனில் பேசுகிறேன் என்றேன். இப்பவே கூப்பிடலாம் பிரச்சினை இல்லை. நம்பர் கொடுங்க நான் கூப்பிடுறேன் என்றார். பின்னர் இருவரும் சில நிமிடங்கள் பேசினோம். முதல் பேச்சு என்றாலும் பல நாள் பழகியவரைப் போல குடும்ப விசாரிப்புக்கள், நல விசாரிப்பு, வலைப்பேச்சு என பேசினார். பின்னர் நாவலை அனுப்ப முகவரி கேட்டார்.

ஊருக்கு கிளம்பும் நாள் வரை நாவல் வரவில்லை. இனி இப்ப வராது என்று நினைத்து கொண்டிருந்த போது தபால்காரர் போன் செய்து முகவரி கேட்டார். பின்னர் மெயின் ரோட்டுக்கே சென்று அவரிடம் வாங்கி வந்து இங்கு கொண்டு வந்து மீண்டும் ஒரு முறை எழுத்தில் வாசித்ததை அச்சில் வாசித்தேன். ஒரு திரைப்படம் போல் சோகம், காதல், அடிதடி, இறுதி நிமிட சண்டைக்காட்சி என அசத்தலான நாவல் அது. அப்புறம் இங்கு வந்த பிறகு சில முறைகள் போனிலும் பல முறைகள் முகநூலிலுமாக எங்கள் உறவு வலுப்பெற்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் ஒருநாள் நமது நண்பர்களுடன் இணைந்து ஒரு குறும்படத்தை இயக்கப் போகிறேன் என்றார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. பின்னர் அது குறித்த விவாதங்கள் நடந்தபோதெல்லாம் எனக்கு செய்தியில் சொல்லிக் கொண்டிருந்தார். சென்னையில் இயக்குவதாக இருந்த குறும்படம் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால் நின்று போக, அவரின் தளத்தில் எழுதிய ஒரு பக்க கதை ஒன்றை எடுத்துக் கொண்டு கும்பகோணத்துக்கே சென்று விட்டார். இயக்குநராகும் முயற்சியில் இறங்கியவர், தனது முதல் படத்தை தனது சொந்த ஊரிலேயே ஆரம்பித்தது சந்தோஷமான விஷயம் என்றால் முதல் காட்சியாக கோவில் கோபுரத்தைக் காட்டியிருப்பது சிறப்பு. அவரும் கோபுரமாக உயர்ந்து தமிழ்ச் சினிமா உலகில் கலசமாக விளங்க வாழ்த்துவோம்.

சகோதரர்கள் அரசன், கோவை ஆவி, துளசி சார் என நட்பு வட்டங்களை வைத்துக் கொண்டு ஒரு அருமையான குறும்படத்தை இயக்கி விட்டு அதன் பின்னான நாட்களில் அதற்கான வேலைகளில் இருந்த போதும் இன்று இது செய்தோம்... இன்று இது... என்று முகநூலில் சொல்லி விடுவார். இந்தக் குறும்படத்தை இயக்குவதில் இருந்து அதை வெளியிட்டது வரை எனக்கு எல்லா நிகழ்வுகளையும் தெரியச் செய்தார். சில நொடி சிநேகம் குறித்து இரண்டு விதமான விமர்சனங்கள் இருக்கின்றன. எப்படிப்பட்ட விமர்சனங்களைக் கடந்து அவரின் கடுமையான உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

கதை என்று எடுத்துக் கொண்டால் நமக்கெல்லாம் ஒரு பேருந்துப் பயணத்திலோ ரயில் பயணத்திலோ அல்லது விமானப் பயணத்திலோ கிடைக்கும் நட்பைப் பற்றியதுதான். ஆட்டோவில் பயணிக்கும் இருவர், டிரைவர் கொடுத்த சில்லரை விஷயமாகப் பேச ஆரம்பித்து ஒரே ஊருக்குப் போவது தெரிந்ததும் இன்னும் இறுக்கமாகிறார்கள். பேருந்துக்காக காத்திருக்கும் வேளையில் ஒருவர் டீ சாப்பிடப் போக அங்கு மாமாவைப் பார்க்க, அவர் காரில் கூப்பிட சரி என ஏறி, நண்பரைப் பற்றிச் சொல்லி அவரையும் கூட்டிச் செல்ல அவர்கள் நின்ற இடம் வந்து தேடுகிறார்கள். ஆள் இல்லை என்றதும் சில நிமிட நட்புத்தானே... என்று அவரை மறந்து தனது மாமாவுடன் செல்கிறார். மற்றவரோ ஒரு கடைக்குள் இருந்து வெளியாகி பேருந்து வந்ததும் ஓடி ஏறி இருக்கையில் ஒரு இடம் பிடித்து வைத்து அதற்காக மற்றவர்களிடம் சண்டை போடுகிறார். பேருந்து கிளம்ப நண்பனைத் தேடி சன்னலுக்கு வெளியே நீளும் அவரது முகத்தில் தெரியும் தவிப்போடு நிறைவு பெறுகிறது.

எடுத்த இடம், எடுத்திருக்கும் விதம் என எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இயக்குநர்களும் நடிக்க வேண்டும் என்ற தமிழ்ச் சினிமா வழக்கப்படி இதில் இயக்குநரான அண்ணன் சரவணன் அவர்களும் ஒரு காட்சியில் வருகிறார். மனிதர் பேப்பர் வாசித்துக் கொண்டு நிற்கிறார். கேமராவைக்கூட பார்க்கவில்லை... அது ஏன் என்று தெரியவில்லை... 

இந்தப்படம் மதுரை வலைப்பதிவர் மாநாட்டில் வெளியிடப்பட்டது ஒரு சந்தோஷமான நிகழ்வு. படம் வெளியான மாலை அண்ணன் ஒரு இணைப்பு முகவரி கொடுத்திருந்தார். அது வேலை செய்யவில்லை என்பதை ஸ்ரீராம் அண்ணா தெரிவித்திருந்தார். நானும் அந்த இணைப்பின் வழி சென்றபோது அப்படித்தான் இருந்தது. அதன் பிறகு அவர் கொடுத்த மற்றுமொரு இணைப்பு வழி சென்று பார்த்தேன்.


சரவணன் அண்ணனின் நண்பரும் பாக்யா வார இதழில் பணிபுரிபவருமான திரு. எஸ்.எஸ்.பூங்கதிர் அவர்கள் நேற்று தனது முகநூல் பகிர்வில் இந்தப்படத்தைப் பற்றிச் சொல்லி கண்டிப்பாக அனைவரும் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். சரவணன் அண்ணனிடம் ஒரு கேள்வி, அவரின் மானசீக குருவான கதைச் சித்தர் திரு. கே.பாக்கியராஜ் அவர்களிடம் படத்தைக் காண்பித்து வசிஷ்டர் வாயால் வாழ்த்து வாங்கியிருக்கிறார். அவர் என்ன சொன்னார்... என்ன சொன்னார்... என கோவை ஆவியும் இவரும் நம்மளைக் கேள்வி கேட்கிறார்களே ஒழிய சொல்லவே இல்லை. அந்த வாழ்த்து என்ன என்பதை எல்லோருக்கும் சொல்லுங்கள் அண்ணா.

இந்தப் படம் நல்லாயிருக்கு.... நல்லாயில்லை... சுமார் ரகம்தான்... பரவாயில்லை... என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை... இது சரவணன் அண்ணனின் கன்னி முயற்சி... கடுமையான உழைப்பு... பல நாள் கனவு... அவரின் முயற்சியைப் பாராட்டுவோம்... முடிந்தளவுக்கு வலை நட்புக்கள் இந்தப் படத்துக்கான இணைப்பை தங்களின் பகிர்வுகளில் சொல்லுங்கள். அதுவே ஒரு வலைப்பதிவராய் நம் சக பதிவரின் படைப்பை ஊக்குவிக்கும் செயலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அண்ணா, முதன் முதலில் குறும்படமாக எடுக்க நினைத்த கதையை சிறப்பான குறும்படமாக விரைவில் கொண்டு வாருங்கள்.

வாழ்த்துக்கள் அண்ணா...
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

r.v.saravanan சொன்னது…

முதன் முதலாக ஒரு குறும்படம் செய்திருக்கிறோம் இதை என் மானசீக குருவாக ஏற்றிருக்கும் திரு. பாக்யராஜ் அவர்களிடம் காண்பித்து ஆசிர்வாதம் வாங்கி கொள்ளலாம் என்பதற்காக சென்றிருந்தோம். அவரும் ஆர்வத்துடன் படம் பார்த்தார். சில நொடிகள் மௌனமானார். அந்த மௌனம் என்னிடம் அவர் இன்னும் நிறைய எதிர்பார்த்திருந்தார் என்பதை தெரிவித்தது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துக்கள் என்று ஆசிர்வதித்தார்.
தங்களின் பதிவுக்கும் அன்பிற்கும் நன்றி குமார்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பல நாள் கனவு... அவரின் முயற்சியைப் பாராட்டுவோம்.

r.v.saravanan சொன்னது…

இயக்குநரான அண்ணன் சரவணன் அவர்களும் ஒரு காட்சியில் வருகிறார். மனிதர் பேப்பர் வாசித்துக் கொண்டு நிற்கிறார். கேமராவைக்கூட பார்க்கவில்லை... அது ஏன் என்று தெரியவில்லை...
---------------

பேருந்து நிலையத்தில் இருக்கும் பயணிகளில் நானும் ஒருவர் என்பதாக தலை காட்டியிருக்கிறேன். பொது இடத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றில் ஐக்கியமாகி இருப்பார்கள் இல்லியா. நான் புத்தகத்தில் ஐக்கியமாகி இருப்பதாக காட்டியுள்ளேன்.

சென்னை பித்தன் சொன்னது…

பார்த்தேன்;கச்சிதம்.
நல்ல பகிர்வு

தினேஷ்குமார் சொன்னது…

சொல்லாமல் உணார்த்திய படம் வாழ்த்துகள் சொல்லிடுங்க அண்ணே அவருக்கு ...

ஸ்ரீராம். சொன்னது…

நானும் பார்த்து ரசித்தேன். அரசன், ஆவி, துளசியார், என எல்லோருமே நிறைவாகச் செய்திருக்கிறார்கள். சரவணன் ஸாருக்கு (குறும்படத்தில் ஒரு காட்சியில் அவரும் தோன்றுகிறார்!) வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான குறும்படம்! நண்பர் சரவணன் அவர்கள் பழகுவதற்கு எளிமையானவர்! சென்ற பதிவர் சந்திப்பில் சந்தித்தேன். மிக சிறப்பான முறையில் நண்பரை பற்றி பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

வருண் சொன்னது…

***அந்த மௌனம் என்னிடம் அவர் இன்னும் நிறைய எதிர்பார்த்திருந்தார் என்பதை தெரிவித்தது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துக்கள் என்று ஆசிர்வதித்தார். **

ஒரு எழுத்துக்கூட இல்லாத மெளனத்திற்கு கோடி அர்த்தங்கள் கொடுக்கலாம்-அது படைப்பாளியின் சிந்தனையைப் பொறுத்து. "இன்னும் எதிர்பார்த்திருக்கிறார்" என்று உங்க உழைப்பை இன்னும் உயர்த்த அர்த்தம் கொண்டுள்ளீர்கள் போலும். :) That's a positive approach! Wish you all the best! :)

Yarlpavanan சொன்னது…

சரவணன் அண்ணனின்
முயற்சியைப் பாராட்டுவோம்.
தங்கள் அறிமுகப்படுத்தல்
பயன்தரும் பதிவு

ezhil சொன்னது…

நானும் இன்னும் முழுவதுமாய்ப் பார்க்கவில்லை. எனினும் நண்பரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

arasan சொன்னது…

மனம் திறந்து சொன்ன கருத்துக்களுக்கு எங்களின் கனிவான நன்றிகள் அண்ணா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நானும் குறும்படத்தினைப் பார்த்து ரசித்தேன் குமார். முதல் குறும்படம் எடுத்த அவரையும், அதில் நடித்த நண்பர்களையும் வாழ்த்துவோம்...

Unknown சொன்னது…

சகோதரர் சரவணனுடன் மதுரை சந்திப்பின் போது மனம்விட்டு பேச முடிந்தது ,நிறைய கனவுகளை தேக்கி வைத்திருக்கும் அவர் இனிவரும் காலத்தில் பிரகாசமாய் ஜொலிப்பார் !
த ம +1

கோமதி அரசு சொன்னது…

குறும்படம் எனக்கு மிகவும் பிடித்தது.
எல்லோரும் இயல்பாய் நடித்து இருந்தார்கள்.
பகிர்வுக்கு நன்றி.