மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 31 ஜனவரி, 2014

மண் பயணுற வேண்டும் - இன்னும் சில

பாரதி நட்புக்காக அமைப்பின் பொங்கல் சிறப்புப்  பட்டி மன்றமான இன்றைய வாழ்க்கை முறை நமக்கு தருவது நிம்மதியே / நெருக்கடியே என்பது குறித்த முந்தைய பகிர்வுகளைப் பார்க்க... 

                            பாரதி-1            பாரதி-2             பாரதி-3               பாரதி-4

அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பினர் நடத்திய பட்டிமன்றம் குறித்த தொகுப்பை நான்கு பகிர்வுகளாக வெளியிட்டிருந்தேன். பதிவுகளை சுருக்கும் எண்ணத்தில் சில நகைச்சுவைகளைப் பகிர்ந்தும் பலவற்றை பகிராமலும் விட்டிருந்தேன். என்னுடன் இணைய அரட்டையில் வந்த சில நண்பர்கள் பதிவு குறித்துப் பேசினர். விடுபட்ட நகைச்சுவைகளில் கவர்ந்தவற்றை ஒரு பகிர்வில் கொண்டு வரச் சொன்னார்கள். அதனால் இங்கு சில நகைச்சுவைகளையும் சில கருத்துக்களையும் மீண்டும் ஒரு பகிர்வாக உங்கள் முன் வைக்கிறேன்.

  • தொலைக்காட்சியில வர்ற மெகா சீரியல்கள்ல இயக்குநருக்கும் முக்கிய நடிகருக்கும் சண்டை என்றால் அவரை எடுத்துவிட்டு அவருக்குப் பதிலாக வேறு ஒரு ஆளை நடிக்க வைத்து இவருக்குப் பதிலாக இவர்ன்னு போட்டுவிடுவார்கள். இப்படித்தான்  எங்க அத்தை ஒருத்தி சரியான நாடகப் பைத்தியம். ஓரு நாடகத்தை தொடர்ந்து பார்க்கும். இடையில அதுக்கு ரொம்ப முடியாம ஆஸ்பிட்டல்ல வச்சிருந்தோம். பின்ன ரெண்டு மூணு மாசம் கழிச்சி வந்தது என்னைய தொலைக்காட்சியைப் போடுடா அந்த நாடகம் பார்த்து ரொம்ப நாளாச்சின்னு சொன்னுச்சு. சரியின்னு நாடகத்தைப் போட்டேன். நாயகியின் தோளில் கை போட்டபடி ஒருத்தர் பேசிக்கொண்டிருந்தார். இதுவும் கொஞ்ச நேரம் பார்த்தது... அப்புறம் என்னிடம் இது யார்ரா இவன் புதுசா இருக்கான்... இவ தோள்ல கையைப் போட்டிருக்கான் இவ புருஷன் எங்க போனான்னு கேட்டுச்சு நானும் எதார்த்தமா இப்ப இவ புருஷன் இவன்தான்னு சொல்லிப்புட்டேன். உடனே அது ஆத்தாடி புருஷனையுமா மாத்துவாளுங்கன்னு கத்த ஆரம்பிச்சிருச்சி.
  • எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பையன்... பத்துப் பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்திருந்தான். உடனே நான் அவனைக் கூப்பிட்டு இங்க பாரு தம்பி பத்துப் பொண்ணுக்கெல்லாம் லெட்டர் கொடுக்காதே... எதோ ஒண்ணு இல்ல ரெண்டு பொண்ணுக்கு கொடுன்னு பெருந்தன்மையாச் சொன்னேன். அடுத்த நாள் காலையில எனக்கிட்ட வந்து லெட்டர் கொடுத்துட்டான். அடப்பாவி எனக்கே லவ் லெட்டரான்னு நினைச்சபடி பிரிச்சிப் படிச்சா... என்னால முடியுது நான் லெட்டர் கொடுக்கிறேன்.. எதிர்வீட்டு எருமைக்கு ஏன் வயித்தெரிச்சல்ன்னு  எழுதியிருந்தான். இது மாதிரி என்னோட மாணவன் ஒருவன் கவிதை எழுதியிருந்தான்... அதில் உன்னைப் பார்த்தேன் உலகம் மறந்தேன். உன் தங்கையைப் பார்த்தேன் உன்னை மறந்தேன்னு எழுதியிருந்தான். (இது பத்திரிக்கையில் வந்த கவிதை... இதுபோல் அவர்கள் சொன்ன நிறையக் கவிதை பத்திரிக்கையில் வந்ததுதான்)
  • எங்க தாத்தா முன்னாடி நடந்து போனா எங்க பாட்டி பின்னால தலையில ஒரு சுமையும் இடுப்பில் குழந்தையுமாய் காலில் செருப்பில்லாமல் நடந்து போனார்கள். அப்புறம் எங்க அப்பா காலத்தில் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து நடந்தார்கள். இன்று எங்கள் காலத்தில் எங்களிடம் ஸ்கூட்டி இருக்கு. இருங்க உங்கள நானே ஆபீசில் டிராப் பண்ணுறேன்னு வண்டியில பின்னால உக்கார வச்சி ஓட்டிக்கிட்டுப் போகும்போது அவரு முன்னாடி இருக்க கண்ணாடியைப் பார்த்து தலை சீவுவார் பாருங்க.... எங்க மாமா கருப்புத்தான்... ஆனா காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.
  • இப்பல்லாம் கல்யாணத்துக்கு முதல் நாள் ரிசப்ஷனுக்கே பத்திரிக்கை வச்சிடுறானுங்க... சரி முத நாளே பொயிட்டு வந்துடலாம்ன்னு போனா பொண்ணு மாப்பிள்ளையை பார்த்துட்டுப் போங்கன்னு சொல்லிடுறானுங்க... அங்க ஒரு கியூ நிக்கும்.... நாமளும் வேர்க்க விறுவிறுக்க நிக்கணும்... மெட்ராஸ்ல ரொம்ப மண்டபத்துல ஏசியே இல்லை... அப்பத்தான் அப்பாக்காரர் சொந்தக்காரனுங்களை நேரடியா மேடைக்கு ஏத்துவார். அப்புறம் பய ஐடிக் கம்பெனியில வேலை பார்ப்பான்... அவனோட பிரண்ட்ஸ் அம்பது பேர் ஒண்ணா ஏறுவானுங்க... ஐடிக் கம்பெனியில வேலை பாக்குறவனெல்லாம் கூட்டம் கூட்டமாத்தான் வருவானுங்க... ஒரு வழியா மேடைக்குப் போனா யாருக்குப் பக்கத்துலயோ நிப்பாட்டிடுவானுங்க. இப்படித்தான் ஒரு தடவை எனக்குப் பக்கத்துல ஒரு பையனை நிப்பாட்டிட்டானுங்க... யாருன்னே தெரியலை. யாருப்பான்னு கேட்டா பந்தி போடலாமான்னு கேக்க வந்தேங்க... என்னையும் மேடையில ஏத்திட்டானுங்க அப்படின்னு சொன்னான். கால் கடுக்க காத்திருந்து நம்ம கைக்காசு ஐநூறையும் கொடுக்கணுமான்னு இப்பல்லாம் நான் போறதில்லை.
  • ஸ்கூட்டர் விளம்பரத்துல ஒரு பொண்ணு தலைய விரிச்சிப் போட்டுக்கிட்டு வண்டி ஓட்டுது. ஸ்கூட்டருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. அப்பாஸ் வீடு வீடா கதவைத் தட்டி டாய்லெட் கிளீன் பண்றாரு. அவனும் நாமெல்லாம் அதுக்குத்தான் லயக்குன்னு முடிவு பண்ணிடுறான். பிரபு போராடுவோம் போராடுவோம்ன்னு சொன்னதும் நான் எதுக்கோ போறாடப் போறாருன்னு பார்த்தா கல்யாண் ஜூவல்லர்ஸ் வரச்சொல்லுறாரு. விக்ரம் மலபார் கோல்டுக்கு வாங்கன்னு சொல்றான். சூர்யா ப்ரு காபி குடிக்கச் சொல்றாரு. சத்தியராஜ் ஈமு கோழி வளர்க்கச் சொன்னாரு. வளத்தவனெல்லாம் போயிட்டான். இப்போ அரசாங்கம் அந்தக் கோழிய வளக்குது.
  • நான் முதன் முதலா கல்லூரிக்கு புரபஸரா வேலைக்குப் போனேன். அப்ப ஒரு பையனைக் கூப்பிட்டு இங்க மத்த புரபஸர்ஸ் எல்லாம் எப்படி இருப்பாங்கன்னு கேட்டேன். அதுக்கு அவன் எல்லாரும் சுமாராத்தான் இருப்பாங்க மேடம்ன்னு சொல்றான்.
  • நடுவர் அவர்களே எதையும் சொல்லும் விதத்தில்தான் இருக்கிறது. இப்ப நீங்க குண்டாயிருக்கீங்க... ஏன்ய்யா இது இப்ப ரொம்பத் தேவையா என்ற நடுவரிடம் இல்லை நடுவர் அவர்களே இதை நீங்க அழகா இருந்தாலும் குண்டாயிருக்கீங்கன்னு சொல்றதைவிட நீங்க குண்டாயிருந்தாலும் அழகா இருக்கீங்கன்னு சொன்ன உங்களுக்கு சந்தோஷமா இருக்குமா இல்லையா... நீங்க எங்களுக்கு அழகா குண்டாயிருக்கீங்க... எதிரணிக்கு அணுகுண்டா இருப்பீங்க.
  • நபிகள் அவர்களின் இறுதி நேரம்... வாழ்க்கை முடியும் தருணம்.... வீட்டில் படுத்திருக்கிறார்... அவரது துணைவியாரும் அருகிருக்கிறார். இன்றைக்கு எல்லாப் பணத்தையும் கொடுத்துவிட்டாயா இல்லை எடுத்து வைத்திருக்கிறாயா என்று மனைவியிடம் கேட்க, ஆம் நமது இறுதிச் செலவுகளுக்காக ஐந்து நாணயங்களை எடுத்து வைத்திருக்கிறேன் என்றதும் தப்புச் செய்துவிட்டாயே அதை யாருக்காவது கொடுத்துவிட்டு வா என்றாராம். நபிகள் தான் சம்பாதித்த பணத்தில் தன் செலவுக்குப் போக மிச்சத்தை எல்லாம் தானம் பண்ணிவிடுவார். இரவு நேரத்தில் கொடுத்துவிட்டு வா என்று சொன்னதும் இந்த நேரத்தில் யார் வருவார் என்று கேட்க யாருக்காவது இது தேவைப்படும் போய்ப்பார் என்று சொல்ல, நபிகளின் மனைவியும் வெளியே வந்து பார்க்க, சாப்பிட காசில்லாமல் பசியோடு ஒருவர் நின்றிருக்கிறார். அவரிடம் கொடுத்துவிட்டு உள்ளே செல்ல என்ன கொடுத்துவிட்டாயா என்று கேட்க, ஆம் இந்த நேரத்தில் பசியோடு ஒருவர் என்று சொல்லி எப்படி யாராவது வருவார்கள் என்று சொன்னீர்கள் என்றதும் அந்த நாணயம் யாருக்கு விதித்திருக்கிறதோ அவருக்கு கிடைக்க வேண்டும் என்பது விதி. நமக்கு செய்ய வேண்டியதைச் செய்ய இறைவன் யாரையாவது அனுப்புவான் என்றாராம்.
  • இங்க அக்கா ஒருத்தவங்க வேலைக்குப் போனா நெருக்கடி நெருக்கடின்னு புலம்பினாங்க... ஏன் வேலைக்குப் போறீங்க... போகாதீங்க... வேலைய விட்டுடுங்க... ஒண்ணாந்தேதி ஆனா எனக்கு நெருக்கடி இருக்கு சம்பளம் வேண்டாம்ன்னு சொல்லு... அப்பச் சொல்ல மாட்டீங்களே... சம்பளம் வந்தாத்தனே நிம்மதி.
  • பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி என்பதால் அனைவருக்கும் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் கொடுத்தார்கள் என்பதை சென்ற பதிவில் சொல்ல மறந்துவிட்டேன்.
  • எப்பவுமே இந்த இட்லிக்கார அம்மாக்களால பிரச்சினைதான் என்று சுகிசிவம் அவர்கள் சொன்னார்கள். அவர் இட்லிக்கார அம்மா என்றாரா இத்தாலிக்கார அம்மா என்றாரா தெரியவில்லை. ஏன்னா ஆரம்பத்திலயே எனக்கு அரசியல் பிடிக்காது என்று சொல்லிவிட்டார்.

-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
த.ம.2

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஏற்கனவே சில கவிதைகள் வந்ததை உட்பட அனைத்தையும் கூர்ந்து கவனித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்... சிலது நகைச்சுவையாக இருந்தாலும் சிந்திக்க வேண்டியவை... நன்றி...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி அருமையாகத் தொகுத்தமைக்குப் பாராட்டுக்கள்..!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இம்புட்டு உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க ஆச்சர்யமாக இருக்கிறது...!

நகைச்சுவைகள் எல்லாம் சிந்திக்கவும் வைக்கின்றன...

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

Abudhabi-la enga nadakkuthu sir inthap patti manram?..!!

nalla nagaich chuvaigal..!!

சென்னை பித்தன் சொன்னது…

நற்சுவை-நகைச்சுவை!

Unknown சொன்னது…

நல்ல பகிர்வு.நகைச் சுவைகள் சில படித்தது தான் என்றாலும் உங்கள் எழுத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது போல்...........நன்று!

மகிழ்நிறை சொன்னது…

இட்டிலி,இத்தாலி fact fact.
பதிவில் நோட் பண்ண நிறைய விஷயம் இருக்கு சார்!!
சூப்பர்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சுவையான துணுக்குகள்....

ரசித்தேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வெட்டி ப்ளாக்கர்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் குமார் .