மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 4 டிசம்பர், 2010

கூட்டாஞ்சோறு



"அடேய் ராசு... ஓம்மாடு போகுதுடா..."

"ஏ... லதா அதை திருப்பேஞ்சி... நா கொட்டாங்கெழங்கு பறிக்கிறேன்ல..."

"போடா... அதை திருப்பமுடியலை... கனைச்சுக்கிட்டு ஓடுது... என்னால ஓடமுடியாதுப்பா... நீயே போய் திருப்பிக்க..."

"ராமு... இந்தாடா இதை வச்சிக்க... நா... எ... மாட்டை திருப்பிட்டு வாரேன்."

"வேகமா போடா... அது தண்ணிக்கில்ல ஓடப்போகுது..." கத்தினாள் லதா.

"எனக்கு தெரியும் நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்."

"ஓடி பத்த முடியலைன்னுதானே சொல்றேன்... எல்லாரு மாட்டையும் பாத்துக்கலையா..? அது திமிரெடுத்துப் போய் கத்திக்கிட்டு ஓடுது... நா... என்ன பண்ணட்டும்"

"எ... கருப்பி நிக்கிறியா வந்து நாலு வை வக்கவா..."

அவனது குரல் கேட்டு திரும்பிய எருமை மீண்டும் கத்தியபடி ஓட ஆரம்பித்தது.

"எங்க போற... இந்தா வாரேன்..." விரட்டி ஓடினான்.

"டேய் செருப்பு இல்லாம ஓடாதடா... முள்ளுக்கிடக்கும்..." மீண்டும் கத்தினாள் லதா.

"எங்களுக்கு தெரியும்... நீ ஓ... வேலையைப் பாரு..." பள்ளிக்கூடத்தில் ஓட்டப் பந்தய வீரனான ராசு பலம் கொண்ட மட்டும் விரட்டி ஓடினான்.

"ஸ்... அப்பா...." என்றபடி நின்றவன், காலில் குத்தியிருந்த முள்ளை கஷ்டப்பட்டு பிடிங்கி வீசிவிட்டு, "கருப்பி... நிக்கிறியா... இல்லையா..." கடுப்பில் கத்தியபடி ஓட ஆரம்பித்தான். காலில் சுருக்... சுருக்கென்று குத்தியது. 'முள்ளு உள்ள இருக்கும் போல வந்து எடுத்துக்கலாம்' என்று நினைத்தபடி வேகமாக சென்று கருப்பியை மறித்துக் கொண்டுவந்தான். அவனது வலியெல்லாம் கோபமாக கையில் இருக்கும் கம்பின் வழியாக கருப்பியின் மேல் இறங்கியது.

"ராமு... கால்ல முள்ளு இருக்குதான்னு பார்டா..."

"எனக்கு முள் எடுக்கத் தெரியாதுடா... லதாகிட்ட கொடு... அதுதான் வலியில்லாமல் எடுக்கும்."

"இந்த வலிக்கே அதுதான் காரணம். இங்குன போகும்போதே திருப்பியிருந்தா எனக்கேன் முள்ளு குத்தப்போகுது. வேண்டாம் வீட்டுல போயி எங்கக்காகிட்ட எடுத்துக்கிறேன்."

"வீம்பு பண்ணாதடா... நீ விரட்டி போறப்பா குரல் கொடுத்தே திரும்பாத ஓ மாட்டை அது எப்படி திருப்ப முடியும். எல்லாருட்டு மாட்டையும் அது பாத்துக்கலையா?"

"ஓ நீங்க அவுகளுக்கு சப்போர்ட் பண்றிங்களோ..?"

"சப்போர்ட் இல்லைடா... நாம சாப்பிடப் போறப்ப தினம் அதுதானே பார்த்துக்கிது"

"அப்புறம் அது சாப்பிடப் போகயில நாம பாத்துக்கிறோமில்ல... எல்லாம் ஒண்ணுதானே..."

"சரிடா... முள்ளை எடுத்துட்டு வா... கிழங்கை அவிக்கலாம்"

"முள்ளை அப்பறம் எடுத்துக்கலாம்... கிழங்கை கழுவிட்டியா... அடுப்பை பத்தவைடா முத்து"

"இருடா... காஞ்ச ஓலையும் சில்லாமடையும் பொறக்கிகிட்டு வாரேன்..." என்றான் முத்து.

"அவன் கொட்டாங்கிழங்கு பறிச்சான்... நீ என்ன மயிராடா புடுங்கினே... சில்லாமடை பொறக்கியாராம..."

"ஏன்டா கோபப்படுறே... பனைமரம் என்ன தூரத்துலய இருக்கு... இப்ப கொண்டாருவான்.... முத்து போடா ஈரமில்லாததா பார்த்து பொறக்கிக்கிட்டு வா..."

"நா... போகலையிடா... எனக்கு கிழங்கு வேண்டாம்... நீங்களே பொறக்கி நீங்களே அவிச்சுக்கிங்க..."

"என்னடா நீ இப்ப எதுக்கு வேண்டாங்கிறே..?"

"அப்புறம் என்னடா... அவன் மயிரு... மட்டையின்னு திட்டுறான்..."

"விடுடா முத்து... அவன் முள்ளுக்குத்துன கோவத்துல இருக்கான்... விடு. நானும் வாரேன் வா... லதா அந்தக் கல்லை எடுத்து வச்சு சட்டிய வையி வாரோம்."

"சரிடா..."

"இப்ப இதை எதுக்கு அடுப்பு வைக்க சொல்றே... இது வேண்டாம், நாமலே செய்யலாம்..."

"என்னடா ராசு இப்படி கோபப்படுறே... எல்லாரும் சேர்ந்து செய்யணுமின்னுதானே ஆளுக்கொரு வேலை செய்தோம். நிதமும் செய்யிறதுதானே... இன்னைக்கு என்ன புதுசா வேண்டாங்கிறே... உன் மாட்டை திருப்பலைங்கிற கோவத்தை இதுல காட்டுறியாக்கும்... லதா நீ வா... அவன் கிடக்கான்"

"அவனுக்கு புடிக்கலைன்னா எனக்கு கிழங்கு வேண்டான்டா... "

"என்ன லதா இது... ஆளாளுக்கு கோவப்பட்டுக்கிட்டு...எல்லாரும் இருங்க நான் அவிச்சித் தாரேன்." கோபமானான் ராமு.

"சரிடா... இன்னைக்கு சேர்த்துக்கங்க... நாளைக்கெல்லாம் வேண்டாம்... அப்படி அதை சேக்கிறதா இருந்தா இனி நான் கூட்டாஞ்சோறுக்கு வரலை..."

"அதை அப்புறம் பாப்போம்... இப்ப வாங்கடா... மழை வர்றமாதிரி இருக்கு..."

ராமுவும் முத்தும் சில்லாமடை பொறக்க போக, லதா அடுப்பை சரி செய்தாள். ராசு பேசாமல் உட்கார்ந்திருந்தான்.

"என்னடா ரொம்ப வலிக்குதா..." மெதுவாக கேட்டாள் லதா.

"...."

"கோவத்தை விட்டுட்டு வாடா... நா எடுத்து விடுறேன்... இருக்க இருக்க வலி கூடும்... அண்டங்கட்டிக்கிட்டு நடக்க முடியாதுடா... சொல்றதைக் கேளு..."

"எங்கிட்ட உனக்கென்ன பேச்சு... எனக்குத் தெரியும்... ஓ வேலையப் பாரு... இனிமே எங்கிட்ட பேசாதே..."

"பேச வேண்டாண்டா... இதோட தண்ணிக்குள்ள நடந்தா சலம் வச்சிக்கிட்டு விண்ணு விண்ணுன்னு வலிக்குமுடா..."

"போஞ்சி அங்கிட்டு... ரொம்பத்தான் அக்கறைப் படுறாக... இந்த அக்கறை மாடு போறப்ப இருந்திருக்கணும்..."

"அது ஓடுனதுனாலதானே ஒண்ணக் கூப்பிட்டேன்... ஓ... நரையெருமைய எத்தனை தடவை திருப்பியிருப்பேன்..."

"...."

"காலை குடுடா... முள்ளிருக்கான்னு பார்ப்போம்...."

"வேண்டாம்... பேசாதன்னா பேசாத... எங்கோவத்தை கெழப்புனே வெளுத்துப்புடுவேன் வெளுத்து."

அதன்பிறகு கிழங்கு அவிச்சு சாப்பிட்டு... கதை பேசி சிரித்து மதியம் சாப்பாட்டுக்கு போகும்வரை ராசுடன் லதா பேசவில்லை.

"சரி எல்லாரும் போங்கடா... நா பாத்துக்கிறேன்... ஆனா முத்து நேத்து மாதிரி லேட்டா வந்தியன்னா நாளைக்கெல்லாம் நா பார்த்துக்கமாட்டேன் சொல்லிப்புட்டேன்... ஆமா"

"இல்லஞ்சி... எங்கம்மா கேதத்துக்குப் பொயிட்டு லேட்டா வந்ததுனால கஞ்சி காச்ச லேட்டாயிடுச்சு. இன்னைக்கு நா முதல்ல வர்ரேனா இல்லையான்னு பாரு... ராசு வாடா..."

"நா வரலைடா... என் மாட்டை எனக்குப் பாத்துக்கத் தெரியும்... ராமு வரும்போது எனக்கு சோறு வாங்கிக்கிட்டு வா..."

"அதான் லதா இருக்குல்ல..."

"நா வரலைன்னா... பேசாம போடா... சோறு வாங்க முடியலைன்னா முத்துகிட்ட சொல்லு அவன் வாங்கிக்கிட்டு வருவான்."

"சரி நா... வாங்கிக்கிட்டு வாரேன்..."

"ராமு எனக்கும் சோறு வாங்கிக்கிட்டு வந்திடு..."

"என்னல என்னைக்கும் இல்லாம இன்னைக்கு புதுசா நீ சோறு வாங்க சொல்றே..? நாங்க சீக்கிரம் வந்துடுவோம். வந்தோடனே பொயிட்டு வரலாமுல்ல..."

"வேண்டாம்... இன்னைக்கு மட்டும் வாங்கிக்கிட்டு வா..."

"சரி..."

அவர்கள் கிளம்பிச் சென்றதும் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டனர். ராசுவுக்கு கால் விண் விண் என்று வலிக்க ஆரம்பித்தது. ஆனால் அவனது வீம்பு அவளிடம் காலை கொடுக்க மறுத்தது.

"ஸ்... அப்பா... ஆ...ஆ..."

"என்னடா கால் வலிக்குதா..."

"...."

"சண்டை சண்டையாவே இருக்கட்டும்... காலை மட்டும் காட்டு... முள்ளை எடுத்துடலாம்... நீ பேச வேண்டாம்" என்றபடி அவன் காலை பிடித்தாள்.

"விடுஞ்சி..." என்று காலை வெடுக்கென்று பறித்தான்.

"யாருக்கு வலி... எனக்கா வலிக்குது... போ... எனக்கென்ன"

"எனக்கு வலிச்சா பரவாயில்லை... மாரியத்தா மேல சத்தியமா இனி உங்கிட்ட நா செம்மத்துக்கும் பேசமாட்டேன்... எங்கிட்ட வழியக்க வந்து பேசாதே... சொல்லிப்புட்டேன்..."

"சரி... நானும் இனி உங்கிட்ட பேசமாட்டேன்.... இது முனியய்யா மேல சத்தியம்... போடா"

***

மாலை மாட்டை பத்திக்கொண்டு வீட்டுக்குப் போனதும், "அக்கா...இந்த முள்ளை எடுத்துவிடு..."

"முள்ளா... எப்படா குத்துச்சு..."

"காலையில..."

"லதாதான் வந்திருந்தாள்ல... அப்பவே அவளை எடுக்கச் சொல்லியிருக்கலாமுல்ல.... இவ்வளவு நேரம் வச்சிருக்கே..."

"அதாலதான் முள்ளே குத்துச்சு... அது கூட பேசமாட்டேன்..."

"க்க்கும்... ஆரம்பிச்சிட்ட்ங்களா உங்க சண்டையை... சரி கொண்டா... என்னடா இது இப்படி வீங்கியிருக்கு... காலு வேற கொதிக்குது... வீம்பு பண்ணாம அப்பவே எடுத்திருக்கலாமுல்ல..."

"...."

ஊக்கால் மெதுவாக குத்தி எடுக்க ஆரம்பித்தாள்.

"ஆ... அக்கா... வலிக்குது..."

"இருடா... ரத்தம் வேற வருது... கிட்டிச்சுப் போயிருக்கு... கொஞ்சம் பொறுத்துக்க..." என்ற படி முள்ளின் வீது ஊக்கை வைத்து மெதுவாக் நீக்கினாள்.

"அப்பா... வந்திடுச்சிடா... இந்தா நல்ல பெரியமுள்ளுதான்.."

"வலிக்கிதுக்கா..."

"அடுப்பு ஓரத்துல காலை வச்சு சூடு பிடி வலி குறையும்..."

"சரிக்கா..."

"இதை காரணம் காட்டி நாளைக்கு பள்ளிக்கொடத்துக்கு மட்டம் போடலாமுன்னு பாக்காதே..."

"யாரு... நானு... போக்கா அங்கிட்டு... இங்க இருந்தா மாடு மேய்க்கத்தான் போகணும்... அதுக்கு பள்ளிக்கொடம் போறது பெட்டரு... தெரியுமா?"

***

கடந்த ஒரு வாரமாக ராசும் லதாவும் பேசிக்கொள்ளவில்லை. இருவரையும் பேச வைக்க நண்பர்கள் எல்லாம் தூது போனார்கள். பலனில்லை.

சனிக்கிழமை மாடு மேய்க்க கிளம்பும் போதே, அவர்கள் திட்டமிட்டபடி பொங்கலுக்கான பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.

"ராசு நாங்க... போயி வெல்லக்கட்டி வாங்கிக்கிட்டு வாரோம்... நீயும் லதாவும் மாட்டை பார்த்துக்கிட்டு அரிசி, பருப்பையெல்லாம் அலசி வைச்சிட்டு சுப்பி பொறக்கி வைங்க..."

"சரி... நான் அரிசிய அலசி வைக்கிறேன்... அவுகளை சுப்பி பொறக்கி வைக்கச் சொல்லிட்டு போ... நா அவுககிட்ட எதுவும் பேசமாட்டேன்..."

"சரிடா... லதா அவன் அரிசி பருப்பெல்லாம் அலசி வைப்பான்.... நீ இங்குன கெடக்க சில்லாமடை , ஓலை கொஞ்சம் முள்ளுச்சுப்பி பொறக்கிவையி என்ன"

"சரிடா... சீக்கிரம் வந்துருங்கடா..."

"ம்..."

அவர்கள் இருவரும் கிளம்பியதும் இருவரும் அவர்களது வேலையை கவனிக்க ஆரம்பித்தனர். "ராசாத்தி உன்னை எண்ணி ராப்பகலா..." என்று பாடியபடி அரிசியை கலைஞ்ச ராசுவை திரும்பி பார்த்துவிட்டு 'கழுதை வந்துடாம...' என்று வாய்க்குள் முணுமுணுத்த லதா, முள்ளை ஒடித்துக் கொண்டு, அவன் எதாவது சொல்வான் என்பதற்காக வேண்டுமென்றே, "நா... அடிச்சா தாங்கமாட்டே..." என்று சப்தமாக பாட, "அய்யோ... கருமம்டா... காது சவ்வு கிழிஞ்சிரும் போல..." என்று அவள் காதுபட சொல்ல, சிரித்துக் கொண்டே தொடர்ந்து பாடினாள்.

ஒரு முள்ளை ஒடிக்கும்போது அவள் கை மணிக்கட்டில் முள் பலமாக குத்திவிட்டது. வலியில் "ஆ....அம்மா... அய்யோ" என்று கத்திபடி பிடுங்க முயன்றால் முடியவில்லை... "ராசு... இதை புடுங்கிவிடேன்..." என்று கூப்பிட்டாள்.

அவள் கத்தியதும் அரிசியை அப்படியே வைத்துவிட்டு பதறியடித்து ஓடிவந்த ராசு "என்னாச்சுல்ல..." என்றபடி அவள் கையில் குத்தியிருந்த முள்ளை பிடிங்கினான். ரத்தம் வரவே தனது கையில் இருந்த துண்டால் அழுத்திப் பிடித்துக் கொண்டு, "எருமை... பாத்து ஒடிக்க வேண்டியதுதானே... என்ன அவசரம்... சின்ன குச்சியா பொறக்காம... பெரிசா யாரு ஓடிக்கச் சொன்னா... மொளியில குத்தியிருக்கு... கடுத்துக்கிட்டே இருக்கும்... " என்று அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக...கண்ணீருடன் பேசாமல் நின்றாள்.

"சரி நீ பேசாம போயி உட்காரு... நா... பார்த்துக்கிறேன்..." என்றபடி அவளை வரப்பில் அமரவைத்துவிட்டு சுப்பி பொறக்க ஆரம்பித்தான் ராசு. அந்த நிமிடத்தில் அவர்களது சண்டையும் சத்தியமும் பறந்த இடம் தெரியவில்லை.

-'பரிவை' சே.குமார்.

32 எண்ணங்கள்:

சிவராம்குமார் சொன்னது…

நட்புல வர்ற சின்ன சின்ன ஊடலும் அதற்கப்புறம் வர்ற கூடலும் அழகுன்னு சொல்ற மாதிரி ஒரு அருமையான கதை!

தினேஷ்குமார் சொன்னது…

மெய்மறந்து படிச்சேன் சார் அருமை அருமை நட்பின் பெருமை.........

ஹரிஸ் Harish சொன்னது…

நட்பில் சண்டையும் அழகு தான்...

Chitra சொன்னது…

வட்டார பேச்சு வழக்கில் - அருமையான எழுத்து நடையில், மனதில் ஒன்றி விட்ட கதை. பாராட்டுக்கள்!

vasu balaji சொன்னது…

செம. அருமை

வார்த்தை சொன்னது…

nice

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல கதை குமார். பிடித்திருந்தது.

Philosophy Prabhakaran சொன்னது…

கூட்டாஞ்சோறு ருசியா இருந்துச்சு...

மாணவன் சொன்னது…

//"சரி நீ பேசாம போயி உட்காரு... நா... பார்த்துக்கிறேன்..." என்றபடி அவளை வரப்பில் அமரவைத்துவிட்டு சுப்பி பொறக்க ஆரம்பித்தான் ராசு. அந்த நிமிடத்தில் அவர்களது சண்டையும் சத்தியமும் பறந்த இடம் தெரியவில்லை.//

யதார்த்தம் கலந்த சுவாரசியத்துடன் நட்பு கதையை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்,

தொடரட்டும் உங்கள் பணி

வாழ்க வளமுடன்

வேலன். சொன்னது…

மலரும் நினைவுகளா சார்....?

சும்மா தமாஷ்க்குதான் கேட்டேன்.. அருமையான கதை...அட்டகாசமான வரிகள்....

வாழ்க வளமுடன்.
வேலன்.

Unknown சொன்னது…

உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க...எங்க வீட்லயும் முள் எடுத்தும் காலை அடுப்பு மேல வைக்கச் சொல்லி இருக்காங்க...

vanathy சொன்னது…

arumai!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சிறு வயது நட்புகளுக்கு சண்டை ரொம்ப காலம் நீள வாய்ப்பே இல்லை..

அருமை..

பெயரில்லா சொன்னது…

oru anupavathai pakirntha mathiri irunthadhu kathai...nalla nadai kumar

கருடன் சொன்னது…

//அந்த நிமிடத்தில் அவர்களது சண்டையும் சத்தியமும் பறந்த இடம் தெரியவில்லை.//

கள்ள ஓட்டு எப்படி சார் போடறது? சொல்லி கொடுத்தா ஒரு 5 ஓட்டு போடுவேன். உங்க கதை அவ்வளவு பிடிச்சி இருக்கு.... :)

ம.தி.சுதா சொன்னது…

சகோதரம் ஊர்ப்பக்கம் எப்படி இருக்கிறது... மழை காணுமா..?


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

வெற்றி நமதே சொன்னது…

கேபிள் சங்கரின் போஸ்டர்
போஸ்டர் - திரைவிமர்சனம்

Asiya Omar சொன்னது…

உங்க கதைகள் எல்லாமே சூப்பர்.சிறுகதை தொகுப்பு வெளியிடலாம்.

r.v.saravanan சொன்னது…

நட்பு சண்டை நன்று குமார்

பெயரில்லா சொன்னது…

அருமையா இருக்கு குமார்..
வட்டார வழக்கு கதைக்கு பலம்

முத்தரசன் சொன்னது…

கூட்டாஞ்சோறு...
சனிக்கிழமை மாடு ...

படித்து முடிக்கும் போது கண்களில் நீர்.....


இதமான பதிவுக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக...கண்ணீருடன் பேசாமல் நின்றாள்//
என் இனிய வலைதள மக்களே,

நமக்கு இதோ இன்னொரு பாரதிராஜா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சிவா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தினேஷ்குமார்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஹரிஸ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானம்பாடிகள் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வார்த்தை...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சிநேகிதன் அக்பர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மாணவன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வேலன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கலாநேசன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வெறும்பய சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தமிழரசி அக்கா..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க Terror..
ரொம்ப சந்தோஷங்க... கள்ள ஓட்டெல்லாம் வேண்டாம்.நல்ல ஓட்டே போதும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ம.தி.சுதா...
நம்ம ஊரில் நல்ல மழையாம். நான் இருக்கும் அபுதாபியில் த்ற்போதுதான் குளிர் ஆரம்பித்திருக்கிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தழிழ் ரயில்...
உங்கள் வருகைக்கு நன்றி.
விமர்சனம் பார்ப்போம்.

வாங்க ஆசியாக்கா...
எனக்கும் அது போல் ஒரு எண்ணம் தோன்றியது. அபுதாபியில் இருப்பதால் சில பிரச்சினைகள்...சென்னை நண்பர்களிடம் விசாரிக்கச் சொன்னேன்... சரியான பதில் இல்லை. உங்களுக்கு விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் அக்கா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பாலாஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க முத்தரசன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நாஞ்சில் மனோ...
ஐயா... பாரதிராஜான்னெல்லாம் சொல்லப்படாது... நம்ம சாதாரண ஆளு.... உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.

ஹேமா சொன்னது…

உங்கள் நினைவலையில் எங்களையும்
நனையவைத்தீர்கள் குமார் !

"உழவன்" "Uzhavan" சொன்னது…

பல ஞாபகங்களைக் கிளிறிவிட்டது இக்கதை. அருமை