மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 20 நவம்பர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 29

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

29. காதல்... காதல்... காதல்...

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  பொங்கலுக்கு வருவதாகச் சொன்ன புவனாவும் மல்லிகாவும் வராதது ராம்கிக்கு பொங்கல் வருத்தமாக இருந்தாலும் அவர்களைச் சந்தித்துப் பேசியதும் சமாதானமானான்.

இனி...

காதல் வானில் கல்லூரி நாட்கள் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. வைரவனால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் புவனா ராம்கியின் காதல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. பெரும்பாலான நாட்களில் மாலை வேளைகளில் ஐயா வீடே அவர்கள் சந்திப்பிற்கான இடமாக ஆகியிருந்தது. இருவருக்குள்ளும் காதல் இருக்குமோ என்ற எண்ணம் ஐயாவுக்கும் அம்மாவுக்கும் வந்தாலும் இருவரிடமும் அது குறித்துப் பேசுவதைத் தவிர்த்தார்கள். அவர்கள் மீது நண்பர்களுக்கும் சந்தேகம் வர ஆரம்பித்தது. 

ராம்கியின் அண்ணன் ராசுவும் முத்துவும் சிங்கப்பூருக்குச் சென்றுவிட, சீதாவுக்கு தனது திருமணம் தள்ளிப் போனதில் சந்தோஷம் ஆனால் அம்மாவுக்கோ சீதாவின் திருமணத்தை நடத்த முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்தது. இந்நிலையில் இரண்டாவது செமஸ்டர் ஆரம்பமானது. அரியர் இல்லாமல் வகுப்பில் முதலாவதாக வர வேண்டுமென்று படிக்க ஆரம்பித்ததால் பெரும்பாலும் இருவரும் சந்திப்பதற்கான சூழல் அமையவில்லை.

தமிழ் தேர்வு அன்று காலை இருவரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட, புவனாவைத் தேடித் சென்றான் ராம்கி.

"புவி எப்படிடா இருக்கே?"

"ம்... எக்ஸாமுக்கு பிரண்ட்ஸ்கூட பிரிப்பேர் பண்ணுறதால கொஞ்சம் லோன்லியா பீல் பண்ணலை... இல்லைன்னா உங்களைப் பார்க்காம என்னால இருந்திருக்க முடியாது."

"ம்... எனக்குந்தான்... ஆனா உன்னோட நினைப்புத்தான் எப்பவும்... என்னால உன்னைய பிரிஞ்சு இருக்குறது நரக வேதனையா இருந்துச்சு. பிரண்ட்ஸோட படிக்கும் போது அதிகம் நினைக்கலைன்னாலும் தனியா இருக்கும் போது நீதான் என்னைய ஆக்கிரமித்திருந்தாய் புவி..."

"ம்..."

"நல்லா பிரிப்பேர் பண்ணியிருக்கியா?"

"ம்... அதெல்லாம் சூப்பரா ரெடியாயாச்சு... நான் நீங்க ஐயா வீட்டுக்கு வருவீங்கன்னு ரெண்டு நாள் வந்து பார்த்தேன்.. ஆனா நீங்க வரலை...  என்னாச்சு அப்படியா படிக்கிறான்... இந்தப் பக்கமே காணோம்ன்னு அம்மா கேட்டாங்க... எனக்கென்ன தெரியும்ன்னு சொன்னதும் உனக்குத் தெரியாமலான்னு இருக்கும்ன்னு சொன்னாங்க.... எனக்கு பக்குன்னு ஆயிருச்சு. ஸோ ஐயா வீட்லயும் நம்ம மேல லேசா சந்தேகம் வந்திருக்கோன்னு தோணுது. இனி அங்க அடிக்கடி சந்திக்கிறதை நிப்பாட்டணும்... சரி இப்போ பரிட்சையை பார்ப்போம். நல்லா எழுதிட்டு வாங்க. மத்தியானம் போயிடாதீங்க... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... உங்ககிட்ட கொஞ்சம் பேசினால் இன்னும் கொஞ்ச நாள் உங்களைப் பார்க்காம இருக்கமுடியும்."

"சரி... நல்லா எழுதிட்டு வா புவி. பை"

ரிட்சை முடிந்ததும் வாடா போகலாம் என்று நண்பர்கள் அழைக்க, நீங்க போங்கடா நான் புவனாவைப் பார்த்துட்டு வாரேன் என்றான்.

"என்னடா அப்படி என்ன முக்கியமான விஷயம்.?" என்றான் சரவணன்.

"சும்மாதான்டா... பாத்து ரொம்ப நாளாச்சு... அதான்"

"அதான் காலையில பாத்தியல்ல..." நக்கலாகக் கேட்டான் பழனி.

"பார்த்தேன்... எதோ பேசணுமின்னாங்க...பார்த்துட்டு வாரேனே... இங்கிலீஸ் பரிட்சைக்கு இன்னும் நாளிருக்குல்ல... அப்புறம் என்ன நாளைக்குப் படிக்க ஆரம்பிக்கலாமுல்ல..."

"இப்ப என்ன சொல்ல வர்றே... ஆங்கிலப் பரிட்சையைவிட அத்தாச்சிதான் முக்கியம்ன்னு சொல்றியா...?" அண்ணாத்துரை கேட்க, "இவன் என்னமோ மறைக்கிறான்டா" என்றான் அறிவு.

"மறைக்க என்னடா இருக்கு... இன்னைக்கு சாயந்தரம் வந்து சொல்றேனே... ப்ளீஸ்..."

"ஓகே...ஓகே... இப்ப வெயிட் பண்ணட்டுமா... வேண்டாமா..." என்றான் பழனி.

"வேணான்டா.. கொஞ்சம் லேட்டாகும்... "

"சரி... பிரச்சினை எதுவும் வராம பாத்துக்க அம்புட்டுத்தான்... இன்னைக்கு பர்ஸ்ட் இயருக்கு மட்டும்தான் பரிட்சை... அதனால வைரவனோ, இளங்கோவோ வரப் போறதில்லை. எதுக்கும் பாத்துப் பேசிட்டு வா... " என்றபடி நண்பர்கள் கிளம்பி விட புவனாவின் வருகைக்காக காத்திருந்தான்.

"என்ன ரொம்ப சீக்கிரம் வந்துட்டிங்களா?" என்றபடி வந்தாள் புவனா.

"ம்... கொஸ்டின் ஈசியா இருந்துச்சு... அதான் சீக்கிரம் வந்துட்டேன்..."

"நானும் வந்துட்டேன். லேடீஸ் ரூம்லதான் உக்காந்திருந்தேன். பிரண்ட்ஸ் வந்ததும் சொல்லிட்டு வந்தேன்."

"சரி வா பேசிக்கிட்டே போகலாம்..."

"என்ன யாருமில்லைன்னு தைரியமா?"

'அப்படியில்லை... இங்க நின்னு பேசுறதைவிட பேசிக்கிட்டு போறது  நல்லதுன்னு நினைச்சேன்..."

"பேசிக்கிட்டே எங்க போறது காலேஸ் கேட்டை தாண்டிட்டா நீங்க ஒரு பக்கமும் நான்  ஒரு பக்கமும் போகப் போறோம். நான் உங்க கூட கொஞ்ச நேரம் பேசணுமின்னு நினைக்கிறேன்."

"சரி... இந்த நேரத்துல எங்க போறது... ஐயா வீடு போகலாமா?"

"காலையிலேயே சொன்னேனே... அங்கயும் கொஞ்சம் சந்தேகம் வந்தாச்சு... இந்த நேரத்துல போன நாமளே காட்டிக் கொடுக்கிற மாதிரி ஆயிடும்..."

"ம்.. என்னோட பிரண்ட்ஸ் துருவித் துருவி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க... அவங்களுக்கும் தெரிஞ்சிருச்சின்னு நினைக்கிறேன்..."

"என்னோட பிரண்ட்ஸ்கிட்ட என்னால மறைக்க முடியலை... சொல்லிட்டேன்... மறைச்சு என்னாகப் போகுது.... சரி மல்லிகா வீட்டுக்குப் போகலாமா?"

"மல்லிகா வீட்டுக்கா...? அவங்க போயாச்சு... அது போக அவங்களுக்கும் உனக்கும் சரி வராதே..."

"அதெல்லாம் அப்ப... இப்ப நானும் அவளும் திக் பிரண்ட்ஸ்... சரி அதெல்லாம் எதுக்கு... அவ லேடீஸ் ரூம்லதான் இருக்கா... நாங்க ரெண்டு பேரும் முன்னால போறோம்... நீங்க அப்புறம் வாங்க... அவ வீடு பக்கத்துலதானே இருக்கு... அவங்க அம்மாவுக்கு நம்ம ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும். அதனால பிரச்சினை இல்லை.. நான் உங்ககிட்ட பேசணுமின்னு சொன்னதும் அவதான் இந்த ஐடியா கொடுத்தா..."

"அது சரி... அவங்க அம்மா வரைக்கும் கவர் பண்ணிட்டியா...ரெண்டு பேரும் பெரிய கள்ளிங்கடி... எனக்கிட்ட மறச்சிட்டிங்களே.."

"சரி... நீங்க போங்க... நான் வாறேன்..."

ல்லிகா வீட்டில் அம்மா கொடுத்த சாப்பாட்டை மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, ராமு நீங்க ரெண்டு பேரும் பழகுற விசயத்தை மல்லிகா சொன்னா. நானும் மல்லிகாவோட அப்பாவும் லவ் மேரேஜ்தான். நாங்க லவ் பண்ணினப்போ எம்புட்டு பிரச்சினை தெரியுமா? அதையும் தாண்டித்தான் நாங்க சேர்ந்தோம். எங்க ரெண்டு குடும்பமும் எங்க கூட சேர ரொம்ப நாளாச்சு... இப்போதான் அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பின்னு எல்லாரும் வாராங்க... ஆனா இன்னும் எல்லாரும் ரொம்ப நெருங்கலைங்கிறதுதான் உண்மை. நீங்களும் வேற வேற ஜாதியின்னு தெரியும். பட் காதல்ல ஜெயிக்கணும். அதுதான் எனக்கு வேணும்..."

"ம்.... கண்டிப்பா ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் ஒண்ணாத்தான் இருக்கோம்.... எத்தனை பிரச்சினை வந்தாலும்... ஆமாம்மா நீங்க லவ் மேரேஜ்... ஆனா மல்லிகா லவ் பண்ண மாட்டா போலவே..." என்றாள் புவனா.

"அவளுக்கு அந்த எண்ணம் வந்தால் கண்டிப்பாக ஏத்துக்குவோம். ஆனா அவ பண்ணமாட்டா... ஏன்னா சின்ன வயசுல எத்தனையோ பிரண்ட்ஸ் இருந்தாலும் ஐயா, ஆயா, சித்தி, சித்தப்பா, மாமான்னு சொந்தங்கள் இல்லாம வளர்ந்ததால அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்காமல் போயிருச்சு... எப்பவும் சொந்தங்களே இல்லாம வீடு சுடுகாடா இருக்குன்னு சொல்லுவா... நீங்க வீட்டை எதுத்துக் கல்யாணம் பண்ணுறதைவிட ரெண்டு குடும்பத்தையும் சேத்து கல்யாணம் பண்ணுங்க..."

"அது நடக்குமா தெரியலை... ஏன்னா ரெண்டு குடும்பமும் வேற வேற... பாக்கலாம் அம்மா... எப்படி நடந்தாலும் நாங்க கண்டிப்பா சேருவோம்..."

"ம்..."

"அம்மா அவங்க பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க இங்க வந்தா நீ என்னடான்னா கதை பேசிக்கிட்டு..."

"உனக்கு நான் பேசக்கூடாதே... சரி பின்னால தோட்டத்துப் பக்கம் போயி மூணு பேரும் பேசிக்கிட்டு இருங்க... நான் தூங்கப் போறேன்..."

"சரி" என்று பின்னால் தோட்டத்துப் பக்கம் வந்தர்கள். "நீங்க பேசிக்கிட்டு இருக்கும் போது நான் எதுக்கு..? அந்த மாமரத்துக்கு கீழ சேர் கிடக்கு அதுல உக்காந்து எம்புட்டு நேர்ம பேசணுமோ பேசுங்க... எந்த டிஸ்டர்ப்பன்சும் இருக்காது... நான் இங்க உக்காந்து கதைப் புத்தகம் படிக்கிறேன்" என்று மல்லிகா கழண்டு கொண்டாள்.

இருவரும் சேரில் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை.

"ராம்... செமஸ்டர் லீவுல என்னைய சித்தி வீட்டுக்குப் போகச்சொல்லி அம்மா வற்புறுத்துறாங்க. எனக்குத் தெரியும் அவங்க ஏன் போகச் சொல்றாங்கன்னு... இங்க இருந்தா ஐயா வீட்டுக்கு போவேன்... உங்களைப் பார்ப்பேன்னு அவங்களுக்கு சந்தேகம். ஆனா இன்னும் நேரடியா நீ அவனைக் காதலிக்கிறியான்னு கேட்கலை..."

"ம்... எனக்கு செமஸ்டர் லீவுல உன்னையப் பாக்காம இருக்க முடியாது புவி... எந்த ஊருக்குப் போறே... நா உன்னையப் பார்க்க வர்றேன்..."

"சித்தி வீடு திருப்பத்தூர்லதான்... சித்தப்பா அங்க பெரிய ஆளு... அங்க வந்தெல்லாம் பாக்க முடியாது. ப்ளீஸ் ராம் வீட்டுக்கு போன் கனெக்சன் வாங்குங்க... உங்க கூட போன்லயாவது பேசுவேன்ல..."

"அண்ணன் ஊருக்குப் போனதும் அப்ளை பண்ணியாச்சு... ஊர்ல அல்ரெடி கனெக்சன் இருக்கதால சீக்கிரம் கொடுத்துடுவாங்கன்னு நினைக்கிறேன்... நான் திருப்பத்தூர் வாரேன் புவி... "

"பாக்கலாம்... இன்னும் பரிட்சை இருக்குல்ல முதல்ல அது முடியட்டும்... அப்புறம் முடிவு பண்ணலாம்... முடிஞ்சளவு சித்தி வீடு போறதை தவிர்த்திருவேன். ஆனா ஐயா வீட்ல சந்திக்க முடியாது. இங்கயும் அடிக்கடி வேண்டாம். இன்னைக்கு வந்தது சரி... நம்மனாலே மல்லிகாவுக்கு பிரச்சினை வந்துடக்கூடாது. இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. உங்ககூட இவ்வளவு நேரம் பேசினது ரொம்ப சந்தோஷம். சரி வீட்ல தேடுவாங்க... கிளம்புறேன்.. டயம் போனதே தெரியலை... ரொம்ப லேட்டாயிருச்சு..." என்று எழுத்தவளின் கையைப் பிடித்து இழுத்து கையில் முதல் முத்தத்தைப் பதித்தான். புவனாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

-சனிக்கிழமை தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 19 நவம்பர், 2013

நண்பேன்டா : திருநாவுக்கரசு

நண்பேன்டாவை வாசிக்கும் முன்...

ரொம்ப சந்தோஷம் முத்துநிலவன் ஐயா....

நேற்று மூத்த கிராமிய இசைக் கலைஞர் திரு. முத்துமாரி அவர்கள் குறித்த பகிர்வை பகிர்ந்திருந்தேன். அந்தப் பதிவைப் பற்றி தனது வலைத்தளத்தில் திரு. முத்துநிலவன் ஐயா அவர்கள் சொல்லி அதற்கான இணைப்பையும் கொடுத்திருக்கிறார்கள். இது போன்ற பாராட்டுக்கள் கிடைக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை ஏது..  ஐயா தனது பகிர்வில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்.

திரு சே.குமார்  அவர்களின் வலைப்பதிவை நீங்கள் அவசியம் படிக்க மட்டுமல்ல, அவரது நிகழ்ச்சி ஒன்றை விடியோப் பதிவாகவும் பார்க்க அன்புடன்  நம் நண்பர்களை அழைக்கிறேன்.

நன்றி நண்பர் சே.குமார் அவர்களே!  தொலைதூரத்தில் இருந்துகொண்டு அந்தக் கிராமியக் குயிலை நினைத்துக் கொள்கிறீர்களே இதுதான் நம பாவலர் ஓம் முத்துமாரியின் உண்மையான சொத்து!      நீங்கள் வாழ்க!
இதைப் படிக்கவும், ஒரு தமிழறிஞரின் தளத்தை தொடர்ந்து வாசிக்கவும் இங்கே சுட்டுங்கள்...

--------------------


ங்கள் நண்பர் குழுமத்தில் மூத்தவன். திருநா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டவன். பேண்ட் போட்டு வருவதைவிட வேஷ்டியில் வருவதையே அதிகம் விரும்பும் தமிழன். அரசியல் பேச்சென்றால் அல்வா சாப்பிடுவது போல் இவனுக்கு. எங்களுக்கு பொழுது போக வேண்டும் என்றால் இவனையும் முத்தரசையும் கோர்த்துவிட்டு விட்டால் போதும் அரசியல் பேச்சு அனல் பறக்கும். எங்களுக்கும் நன்றாக பொழுது போகும். 

ஆதியுடன் திருவாடனையில் படித்து அவனுடன் கல்லூரிக்கு வந்தவன். இருவருக்குள்ளும் நெருங்கிய நட்பு உண்டு. ஆதி ஒரு பிரிவேளை வரவில்லை என்றால் இவனும் வரமாட்டான். இருவரும் கல்லூரிக்கு அருகில் இருக்கும் முந்திரித் தோட்டத்தில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். எல்லாருடனும் பங்காளி, மாப்பிள்ளை என்று பாசமுடன் பழகும் நண்பன். என்னை எப்போதும் சின்னப் பங்காளி என்றுதான் அழைப்பான். இவனுக்கு எப்போதுமே வம்பிழுக்கப் பயன்படும்படும் ஒரே மாப்பிள்ளை நவநீதன்தான்.

சட்டையின் இரண்டு பட்டன்களைக் கழற்றி விட்டுக் கொண்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு வருசம் முதல் கொண்டு சொல்லி அரசியல் பேசினான் என்றால் மற்றவர்கள் அவன் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டே இருப்போம். திமுக என்றாலே பாவற்காய் சாப்பிட்டது போலாகிவிடும். இவனுக்கு எதிர்மறையானவன் முத்தரசு, அவனுக்கு திமுக என்றால் ஜிலேபியை சீனியில் தொட்டுச் சாப்பிடுவது போல. இவர் தாக்க... அவர் தூக்க... தேவகோட்டை பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைத்தோம் என்றால் கல்லூரி வாசல் வரை தொடரும். சில நேரங்களில் பேச்சின் வேகம் கூடும் போது மாப்ளே ஆரம்பிச்சிட்டாய்ங்கடா... இனி முட்டி மோதுவாய்ங்க... வா... நாம முன்னால போவோம் என எனது சைக்கிளை வேகமாக தள்ள ஆரம்பித்துவிடுவான் நவநீதன். என்னடா மாப்ளே,  நீ அந்தப் புள்ளைய பாக்கணுமுன்னா போடா... எங்க சின்னப் பங்காளிய எதுக்கு இழுக்குறே...  பங்காளி கவனி பங்காளி... என கத்திவிட்டு இன்னைக்கு கருணாநிதி இப்படி சொல்லியிருக்காரே இதை அன்னைக்கே அண்ணா... என்று மீண்டும் அரசியலை ஆவேசமாகப் பேச ஆரம்பித்துவிடுவான்.

ஆதி செய்யும் ஒவ்வொரு செயலிலும் இவன்தான் அவனுக்குப் பின்னால் நிற்பான். தீபாவளி சமயத்தில் வெடி வைப்பதாகட்டும், ஏப்ரல் மாதத்தில் இங்க் அடிப்பதாகட்டும், விசில் ஊதுவதாகட்டும் எல்லாவற்றிலும் இவன் பின்னால் இருப்பான். பெண்களுடன் யார் பேசினாலும் இவனுக்குப் பிடிக்காது. என்னடா அவளுக கூட பேசிக்கிட்டு இருக்கே... வாடான்னா... என்று கத்த ஆரம்பித்துவிடுவான்.

இவனது ஊர் திருவாடனைக்குப் பக்கத்தில் கிளியூர், இங்கும் எங்கள் குழு சென்று இரு நாட்கள் அவர்கள் வீட்டில் தங்கி கண்மாயில் குளித்து வயல்வெளியில் சுற்றி ஆட்டம் போட்டு வந்தது. எல்லாருக்கும் மிகவும் பிடித்த நண்பன். படிப்பு விசயத்தில் எதற்கும் கவலைப்படமாட்டான். டேய் அரியருக்கு நல்லா படிச்சிட்டு போயி எழுதுடா என்றால் மாப்ளே நவம்பர் இல்லைன்னா மேயில எழுதலாம் விட்டுத் தள்ளு. மூணு வருசம் முடிஞ்சு போகும்போது அரியரில்லாமல் போனால் போதும் என்பான்.

படிப்பை முடித்துவிட்டு குடும்பச் சூழல் காரணமாக மேற்கொண்டு படிக்காமல் சிங்கப்பூர் சென்று விட்டான். அதன் பிறகு எங்களுக்குள் எப்போதாவது கடிதப் போக்குவரத்து இருந்தது. அவனது திருமணத்துக்கு நானும் எனது ஆருயிர் நண்பன் முருகனும் போய் விட்டு வந்தோம். மீண்டும் சிங்கப்பூர் சென்றான். இப்போது நான் ஊருக்குப் போகும் போது அவன் ஊரில் இருப்பதில்லை. பார்த்து ரொம்ப நாளாச்சு... மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையை மனசில் சுமந்தபடி எங்களது மூத்த பங்காளியின் நினைவுகளை மீட்டுகிறேன்.

நண்பேன்டா தொடரும்....
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 18 நவம்பர், 2013

கிராமியக் கலைஞர் ஓம் முத்துமாரி

கிராமியக் கலையை தனது வாழ்நாள் முழுவதும் மக்களிடையே கொண்டு சென்ற கலைஞர்களில் முக்கியமானவர் பாவலர் முத்துமாரி அவர்கள்.பாவலர் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ல செவலூரில் பிறந்தவர். தனது சிறிய வயதில் பொதுவுடமைக் கட்சி மேடைகளிலும் இடது சாரி இயக்கங்களின் மேடைகளிலும் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து கூத்து வடிவத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தனது கிராமியக் கலை வாழ்க்கையை ஆரம்பித்தார்.

Add caption

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த முத்துமாரி அவர்கள் மதுரையில் பி.ராமமூர்த்தி தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்காக வீதிவீதியாக கலை நிகழ்ச்சி நடத்தி மக்களிடம் கட்சியின் கொள்கைகளைக் கொண்டு சென்றவர். தனது வாழ்நாள் முழுவதும் கூத்துக் கலைக்கே அர்பணித்தவர். தனது நண்பர்களால் பாவலர் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஒரு கலைஞன்.

தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் கலைமாமணி விருது பெற்ற பாவலர் முத்துமாரி அவர்கள் நவரசக் கலைஞர், இசை நாடக நகைச்சுவைக் கலைஞர், கிராமியக் கலைச்சக்கரவர்த்தி, கலை முதுமணி, மரகதமணி என்று பல்வேறு விருதுகளைப் பெற்றவர். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு வாழ்நாள் வரை அங்கத்தினராக இருந்தார். மேலும் தமுஎசவின் மாநிலக் குழுவிலும் திருநெல்வேலி மாவட்டக் குழுவிலும் உறுப்பினராக செயல்பட்டார்.

பாவலர் முத்துமாரி அவர்கள் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். கடந்த வியாழக்கிழமை மாலை அவர் இயற்கை எய்தினார். அவர் இறக்கும் போது அவருக்கு 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. உடல் நலம் பாதிக்கும் வரை தனது கிராமியக் கூத்தை தொடர்ந்து கொண்டிருந்தார் என்பது பாராட்டக்கூடிய விஷயமாகும்.  

இணையத்தில் திரு.முத்துமாரி அவர்களின் வீடியோ தேடியபோது கிடைத்தது ஒரே ஒரு வீடியோதான். அந்த இணைப்பை இங்கு வீடியோவாக பதிந்தால் வீடியோ இல்லை என்ற தகவல்தான் திரையில் வருகிறது. அதனால் இணைய முகவரியை கீழே கொடுத்துள்ளேன். அதில் போய் பாருங்கள் ஆராரோ... ஆரிராரோவுக்கும் தன்னன்னன்னே... நானனன்னேவுக்கும் அவர் நகைச்சுவையாக விளக்கம் தருவதை... முழு வீடியோப் பகிர்வு கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் இணைப்புத் தாருங்கள்.

திரு. முத்துமாரி அவர்களின் கிராமியக் கூத்து பார்க்க இணைப்பு இதோ...
http://www.youtube.com/watch?v=ZzErA5Qh3tM


கிராமியக் கலை தற்போது அழிந்து வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். கரகாட்டம், நாடகம் எல்லாம் தங்கள் இயல்பை விட்டு ஆபாசத்துக்குள் புகுந்து ரொம்ப நாளாகிவிட்டது. திரு. முத்துமாரி போன்ற ஒரு சில மூத்த கலைஞர்கள் கிராமியக் கலைகளை கட்டிக் காத்து வந்தார்கள். இந்நிலையில் பாவலர் முத்துமாரி அவர்களின் மறைவு கிராமியக் கூத்துக் கலைக்கு மிகப்பெரிய பேரிழப்பு என்பது சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. பாவலர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
-'பரிவை' சே.குமார்.

(பதிவுக்கான தகவலுக்காக சில இணையத்தளங்கள் பார்த்தேன்.  அந்த இணையத்தளங்களுக்கு நன்றி.)

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கிராமத்து நினைவுகள் : திருக் கார்த்திகை


திருக்கார்த்திகை என்றாலே சின்ன வயதில் கார்த்திகை அன்று போட்ட ஆட்டம்தான் நினைவுக்கு வரும். இப்போ இங்கு வந்த பிறகு நல்லநாள் கெட்டநாள் எல்லாம் ஒன்றுதான்.  எல்லா நாளும் வேலைக்குப் போனோமா வந்தோமா என்றுதான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

ஊரில் இருக்கும் போது கார்த்திகை என்றாலே முதலில் சுளுந்து கட்டி வைப்பதற்குத்தான் ஆசைப்படுவோம். பனையின் காய்ந்த ஓலையை எடுத்து வந்து தரையில் ஊன்றுவதற்கு வாகாக மட்டையை செதுக்கி, ஓலையை சேர்த்துக் கட்டி தயார்ப்பண்ணி வைத்து விடுவோம். எல்லார் வீட்டிலும் ரெண்டு மூணு சுளுந்து கட்டி வைத்திருப்பார்கள்.

கார்த்திகைக்கு முதல் வாரம் எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஊரில் இருந்து கிளியாஞ்சிட்டி (களிமண்ணில் செய்த சிறிய விளக்கு) கொண்டு வந்து கொடுத்துவிட்டு அதற்கு மாற்றாக நெல் அல்லது அரிசி வாங்கிக் கொண்டு போவார்கள். பிறகு காலம் மாற மாற காசுக்கு விற்க ஆரம்பித்தார்கள். தற்போது அப்படி விற்க வருவதில்லையாம். 

எங்கள் வீட்டில் எங்கம்மா சீதனமாகக் கொண்டு வந்த பித்தளையில் ஆன சின்னச் சின்ன அழகிய விளக்குள் இன்னும் இருக்கின்றன. அம்மா அவற்றை பளபளவென விலக்கி பொட்டு வைத்து திரியிட்டு எண்ணெய் ஊற்றி வைத்து விடுவார். சூரியன் மறைந்ததும் எல்லார் வீட்டிலும் விளக்கு ஏற்றுவார்கள். அப்போது எங்க வீட்டிலும் அக்காக்கள், நான், தம்பி என எல்லாரும் விளக்கேற்ற ஆரம்பிப்போம். வாசற்படிகளின் இருபுறமும் வைப்போம். வீட்டில் ஏற்றுவதுடன் மட்டுமில்லாமல் மாட்டுக் கசாலை, கோழிக்கூடு என எல்லா இடத்திலும் விளக்குகள் ஏற்றி வைப்போம். எல்லாருடைய வீட்டிலும் இப்படித்தான் விளக்கேற்றுவார்கள்.

எல்லாருடைய வீட்டிலும் இருந்து மாரியம்மன் கோவிலுக்கும் விளக்கு கொண்டு வந்து வைப்பார்கள். எல்லாருடைய வீட்டிலும் விளக்கேற்றியதும் சுளுந்தை எடுத்துக் கொண்டு வயலுக்குப் போவோம். நடவுக்குப் பின் கருநடை திரும்பிய பயிர் கருகருவென வளர்ந்து நிற்கும். இரவு நேரத்தில் வயல் வெளியில் ஆனந்தமாகக் காற்றடிக்கும். அந்தக் காற்றையும் அந்த ஏகாந்தத்தையும் அனுபவித்திருந்தால் மட்டுமே அதை நினைவில் நிறுத்தும்போது முழுச் சந்தோஷத்தையும் சுவைக்க முடியும்.

வயலின் சனி மூலையில் சுளுந்தை நட்டு வைத்து அதன் மேற்புறம் தீயை வைத்தால் அது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிக்கும். ஒரு வயலில் அல்ல... ஆங்காங்கே என எல்லா வயல்களிலும் ஒரே நேரத்தில் சுளுந்து எரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு கண்மாயில் இருக்கும் எங்கள் காவல் தெய்வம் முனியய்யா கோவிலுக்குப் போய் அங்கும் சுளுந்து ஏற்றி வைத்து விட்டு அங்கு கொஞ்ச நேரம் வெடியெல்லாம் போட்டு விட்டு திரும்புவோம். பின்னாளில் சுளிந்துக்குள்ளும் வெடிகளை வைத்து கட்டி வைத்தும் பற்ற வைத்திருக்கிறோம்.

கோவிலில் வந்து எல்லா வீட்டிலும் இருந்து வந்த விளக்குளின் திரிகளையும் எண்ணையையும் ஒன்றாக சேர்த்து கொட்டாச்சிகளில் வைத்து கண்மாய்க்கு எடுத்துக் கொண்டு போய் தெப்பம் விட்டு தண்ணிக்குள் ஆட்டம் போட்டு.... அட... அட... ஆனந்த அனுபவம் போங்க.

கிராமத்து வாழ்க்கையை விட்டு நகரத்துக்கு வந்த போது வீட்டில் விளக்கேற்றுவதோடு கார்த்திகை முடிந்தது, இப்போதெல்லாம் மெழுகில் விற்கும் விளக்குகளே பெரும்பாலானா வீடுகளில் கார்த்திகை தீபமாக ஆகிவிட்டது என்பதை எல்லோரும் அறிவோம்.

இன்று வேலை விட்டு வந்ததும் எங்க அம்மாவுக்கு போன் பண்ணினேன். என்னப்பா.... வெளக்கேத்திட்டு உக்காந்திருக்கேன்.. அப்பாவும் நானும்தான் இருக்கோம்... என்றார்.  நாங்களெல்லாம் ஆட்டம்போட்ட வீட்டில் இரண்டு பேர் மட்டுமே... எங்கள் வீட்டில் மட்டுமல்ல.. எங்க ஊரில் எல்லாருடைய வீட்டிலும் பெரியவர்கள் மட்டுமே... விளக்கு ஏற்றி வைத்தாலும் நாங்கள் அனுபவித்த சந்தோஷங்களைத் தொடர இப்போது ஆளில்லை என்பதே உண்மை.

மாட்டுக் கசாலையும்... கோழிக்கூடும் வாழ்ந்து சென்றவற்றை நினைவில் வைத்து வெறுமையாய் நிற்கின்றன. நாங்கள் தெப்பம் விட்ட காலத்தில் தண்ணீர் நிறைந்து கிடந்த கண்மாய்க்குள் நீர் சூழ நின்ற முனியய்யா... இப்போதும் நீரில்லா கண்மாய்க்குள் நின்று காத்துக் கொண்டிருக்கிறார். பயிர்கள் இசைபாட சுளுந்து தாங்கிய வயல்கள் எல்லாம் கருவை மரங்களின் பிடியில் சிக்கி சுளுந்தை மரணிக்கச் செய்து விட்டன.

மீண்டும் அந்தக் காலம் வருமா என்று யாராவது கேட்டால் வரும் என்று சொல்ல முடியாத நிலை. சரிங்க இங்கு துபாயில் மழை பெய்கிறதாம். அபுதாபியில் காலை முதல் மேகம் இருண்டு கொண்டுதான் இருந்தது... இன்னும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் மழையில்லை... காற்று மட்டும் இருக்கிறது. ஒருவேளை லேசான தூறல் வரலாம்.


அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 16 நவம்பர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 28

முந்தைய பதிவுகளைப் படிக்க...


-----------------------------------------------------------------------

28. வருத்தப்பட்ட உள்ளங்கள்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  பொங்கலுக்கு வருவதாகச் சொன்ன புவனாவும் மல்லிகாவும் வராதது ராம்கிக்கு பொங்கல் வருத்தமாக இருந்தது.

இனி...

பொங்கல் விடுமுறைக்குப் பின் கல்லூரி திறந்த அன்று மரத்தடியில் ராம்கியும் அவனது நண்பர்களும் பேசிக் கொண்டு நின்றனர். அப்போது வகுப்பிற்கு வந்த மல்லிகா ராம்கியைப் பார்த்ததும் நின்றாள்.

"என்ன மல்லிகா... சொல்லுங்க..." என்றான் எப்போதும் போல

"சாரி ராம்... பொங்கலுக்கு வர முடியலை..."

"பரவாயில்லை விடுங்க... அதுக்காக இப்ப எதுக்கு வருத்தப்பட்டுக்கிட்டு..." 

"இல்ல ஊர்ல இருந்து சித்தி, சித்தப்பா எல்லாம் வந்துட்டாங்க... என்னைய உங்க வீட்டுக்கு போகச் சொல்லியிருந்த அம்மா அவங்க வந்ததும் இன்னொரு நாள் போயிக்கன்னு சொல்லிட்டாங்க... சித்தியும் அவங்ககூட என்னைய இருக்கச் சொல்லி எங்கயும் போகவிடலை அதான் வரமுடியலை.."

"சரி விடுங்க..."

"எனக்கு ரொம்ப வருத்தமாயிருச்சு... என்னால அவளுகளும் வரலை... இதுல ரொம்ப பாவம் புவனாதான்..."

அவன் ஒன்று பேசாமல் அவளை ஏறிட்டான்.

"ஆமா ராம்... அவங்க வந்து நான் சொன்ன இடத்துல காத்துக்கிட்டு இருந்திருக்காங்க... அப்புறம் எனக்குப் போன் பண்ண விவரத்தை சொல்லி சாரி கேட்டதும் ரொம்ப வருத்தப்பட்டாங்க... உங்க வீட்ல போன் இருந்தாலும் அவங்க அங்க கூப்பிட்டு எப்படியாச்சும் வந்திருப்பாங்க...சும்மாவே என்னைய அவங்களுக்குப் பிடிக்காது. இப்போ இந்த மாதிரி ஆயிடுச்சு... எம்மேல அவங்களுக்கு கோபம் கூடத்தான் போகுது... அவங்ககிட்ட சாரி கேக்கனும்..."

"புவனா வந்திருந்தாங்களா...?"

"ம்... எனக்கு ரொம்ப வருத்தமாயிடுச்சு... நீங்க நம்பர் கொடுத்திருந்தா அவங்களை கூப்பிட்டுச் சொல்லியிருப்பேன்... நம்பரும் இல்லை..."

"இல்லைங்க... அவங்க போன் நம்பரெல்லாம் எனக்கிட்ட இல்லை... விடுங்க சொல்லிக்கலாம்..."

"ப்ளீஸ் ராம்... அவங்களைப் பார்த்து பேசிடுங்க... அப்போ நான் ரொம்ப வருத்தப்பட்டதா சொல்லிடுங்க..."

"சரி... விடுங்க... இன்னொரு நாள் வந்தாப் போச்சு.... பசங்களெல்லாம் வந்தானுங்க... ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு...." என்றான். அப்போது அவர்களைக் கடந்து வைரவனின் வண்டி போனது.

"ஆஹா... இந்தாளுக்கு சஸ்பென்சன் முடிஞ்சிருச்சா... சுத்தம்... இனி மறுபடியும் காலேசுக்குள்ள கலாட்டாதான்..." என்றான்.

"என்ன ராம்... வைரவன் வந்ததுக்கு ரொம்ப வருத்தப்படுறீங்க..?" 

"இல்ல மல்லிகா... காலேசு ரொம்ப நல்லா போய்க்கிட்டு இருந்துச்சு... இனி அப்படி இருக்காதே அந்தக் கவலைதான்..."

"அம்மாடி.... பொய்யை அள்ளி விடுறான் மல்லிகா... நம்பாதே... புவனாவோட பேச முடியாதேன்னு நினைச்சு சொல்றான்..." என நண்பர்கள் கோரஸாக சொல்ல மல்லிகா சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

அன்று முழுவதும் புவனாவைப் பார்க்க நினைத்தாலும் வைரவன் வந்திருப்பதால் மாலை கல்லூரி முடிந்ததும் எப்படியும் ஐயா வீடு வருவாள் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான். அவன் நினைத்தது போலவே அவளும் ஐயா வீடு வந்தாள்.

"அம்மா நல்லாயிருக்கீங்களா...?" என்றபடி வந்தவள் ராம்கியைப் பார்த்ததும் "ஹாய் ராம்.." என்றாள்.

"ஹாய்..." 

"பொங்கல்லாம் நல்லபடியா முடிஞ்சதா? சாரிம்மா... எங்கயும் வரமுடியலை..." என்றாள்.

"எல்லாம் நல்லா முடிஞ்சது... இருங்க காபி எடுத்துக்கிட்டு வாறேன்..."

"ஐயா...?"

"இன்னும் காலேசுல இருந்து வரலை... வந்துருவாக... பேசிக்கிட்டு இருங்க... அவுகதான் இந்தப் பிள்ளைங்க சும்மா சும்மா ஓடியாருங்க... பொங்கலன்னைக்குன்னு யாருமே வரலையேன்னு பொழம்பிக்கிட்டே இருந்தாக... நீங்க யாருமே இங்கிட்டு வரலயில்ல." என்றபடி உள்ளே சென்றார்.

"சாரி புவி..."

"எதுக்கு...?"

"இல்ல மல்லிகா கூட்டி வருவாங்கன்னு நினைச்சேன். அவங்க வரமுடியாததால நீ காத்துக்கிட்டு நின்னுட்டு திரும்பிப் போயிருக்கே... மல்லிகா சொன்னதும் ரொம்ப வருத்தமாயிடுச்சு..."

"ஓ... அதுதான் காலேசுல பாத்துப்புட்டீங்களாக்கும்... ஆமா யாரு சொன்னா ... மல்லிகா சொன்னாளா?"

"ம்... வைரவண்ணன் வந்ததாலதான் உன்னைய பாக்கலை... பாக்கணுமின்னு தவிச்ச தவி எனக்குத்தானே தெரியும். சரி... மல்லிகா ரொம்ப வருத்தப்பட்டாங்க... பாவம் திடீர்ன்னு ஆயிருக்கு... அவங்க என்ன பண்ணுவாங்க... புவனா சும்மாவே எம்மேல கோபப்பபடுவாங்க... இந்த விஷயம் அவங்களை ரொம்பவே கோபப்பட வச்சிருக்கும்ன்னு புலம்பினாங்க... நான் உங்க போன் நம்பரை வாங்கி வச்சிருந்திருக்கனும்... போன் நம்பர் இருந்த போன் பேசச் சொல்லும் அப்புறம் வீட்ல சந்தேகம் வரும்ன்னு நினைச்சு வாங்கிக்கலை...என்னோட மச்சான் நம்பரைக் கொடுத்திருந்தாலாவது நீ போன் பண்ணியிருப்பே... அதையும் மறந்து தொலஞ்சிட்டேன்"

"இப்ப யோசிச்சி... காத்திருந்தேன்... மல்லிகா மேலதான் கோபமா வந்துச்சி... அதான் ஆரம்பத்துலயே நான் அவகூட வரலைன்னு சொன்னேன்.. சரி அவ என்ன பண்ணுவா... இதெல்லாம் வேணுமின்னு நடக்கிறதில்லையே.... எனக்கு வர்றதுக்கு ரொம்ப ஆசை... முடியலை... சரி அடுத்ததடவை கண்டிப்பா வாரேன்.. வீட்ல முதல்ல டெலிபோன் கனெக்சன் வாங்கி வையுங்க."

"அண்ணன் சிங்கப்பூர் போகப் போகுது. அப்புறம் போன் அப்ளை பண்ணிரலாம். இன்னொரு சந்தோஷமான விஷயம்... அக்காவுக்கும் முத்து மச்சானுக்கும் இப்போ கல்யாணம் இல்லை. மாமாகிட்ட அண்ணன் பொறுமையா பேசி மச்சானை சிங்கப்பூர் பக்கம் கொண்டு போயிட்டு அப்புறம் வந்து கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லி சம்மதிக்க வச்சிருச்சு. இப்போ மச்சானுக்கு அண்ணனுக்கு ஏற்பாடு செஞ்ச ஏஜெண்டுக்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணப் போறாங்க... ஒரு வருசமோ ரெண்டு வருசமோ மனுசன் திருந்தி வந்தா கல்யாணம் பண்ணி வைக்கலாம். இல்லேன்னா வேற மாப்பிள்ளை..."

"அப்பா... அக்கா பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வந்திருக்கு... ஆனா நமக்கு பிரச்சினை வருமோன்னு பயமா இருக்கு ராம்..." என அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

"ஏய்... என்னாச்சு..?" என்று பதறியவன் அம்மா காபியுடன் வருவதைப் பார்த்ததும் "புவி அம்மா வாராங்க கையை விடு..." என்றான் மெதுவாக.

"ஆமா புவனா இதுதான் பொங்கல் டிரஸ்ஸா... மாட்டுப் பொங்கலுக்கு எடுத்ததா?" என்று பேச்சை மாற்றி மாட்டுப் பொங்கலை அழுத்திக் கேட்டான்.

"ம்... கொழுப்பா..."

"இந்தாங்க காபி... ரெண்டு பேரும் வந்தா சண்டைதான் போடுவீங்க சின்னப் பசங்க மாதிரி..."

"பாருங்கம்மா... இந்த டிரஸ்ஸை மாட்டுப் பொங்கலுக்கு எடுத்ததான்னு கேக்கிறார். அப்புறம் உங்க மகனைத் திட்டாம கொஞ்சுவாங்களோ...?"

"எம்புள்ள கேட்டதுல என்னடி தப்பு..? கிராமத்துல மாட்டுப் பொங்கதானே விசேசம்..."

"ம்... அதுக்காக... மாட்டுப் பொங்கலான்னு அழுத்திக் கேப்பாகளோ? அப்போ அங்கயும் மாட்டுப் பொங்கலுக்கு துண்டு கட்டி விரட்டியிருப்பங்கள்ல..."

"அதை நீ கேளு... அதை விட்டுட்டு எதுக்கு கோபப்படுறே..?" என்று சிரித்துக் கொண்டே உள்ளே போனார்.

"என்னாச்சு புவி... வைரவண்ணன் எதாவது..."

"ம்... அவந்தான் ஆரம்பிச்சான். ஆனா உங்க வீட்டுக்குப் போக எல்லாரும் ஒத்துக்கிட்டாலும் அம்மா மனசுக்குள்ள சின்னதா ஒரு சந்தேகம் வந்திருக்குமோன்னு தெரியுது. ஆனா மழுப்பலா பேசுறாங்க..."

"சரி விடு... மற்றவங்களுக்கு சந்தேகம் வர்ற மாதிரி நடந்துக்க வேண்டாம். கொஞ்சம் தள்ளியே இருப்போம். கொஞ்ச நாள்தானே அப்புறம் எல்லாம் சரியாகும்"

"ம்... உங்களைப் பாக்கணுமாம்... எங்க வீட்டுக்கு கூட்டியாரச் சொல்லி இருக்காங்க... அதுவும் நான் கூட்டியாரக் கூடாதாம். வைரவன்தான் கூட்டியாரனுமாம்..."

"என்னையா... எதுக்காம்...?"

"பயப்படாதீங்க சம்பந்தம் பேச இல்ல... மகனை காப்பாத்தியதுக்காக..."

"ஓ... சரி வந்துட்டாப் போச்சு..."

"எப்ப வந்தாலும் நான் இருக்கும் போதுதான் வரணும்....  சரியா?"

"கண்டிப்பாக மகாராணி..."

"ம் அந்தப் பயம் இருக்கட்டும்..." என்றவள் "எனக்கு உங்ககூட பொங்கல் கொண்டாடனுமின்னு அம்புட்டு ஆசை இருந்திச்சு... எல்லாம் போச்சு..." என்று மீண்டும் அவனது கைகளைப் பிடித்தாள். வாசலில் ஐயாவின் சைக்கிள் வந்து நிற்கும் ஓசை கேட்க, இருவரும் தள்ளி அமர்ந்தனர்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 15 நவம்பர், 2013

மனசு பேசுகிறது : நாம் சொல்வது சரியா?

வார விடுமுறை என்பதால் நண்பர்கள் அனைவரும் அறையில் இருந்ததால் காலையில் மெதுவாக எழுந்தாலும் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று நிறைய விஷயங்களை அலச நேரம் கிடைத்தது. சினிமா, அரசியல், முள்ளிவாய்க்கால் முற்றம், விஜயதாரிணியை சத்யம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் ஒருவர் தவறாகப் பேசியது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயம் பேச ரசனையுடன் விவாதம் போய்க் கொண்டிருந்தது.

நண்பர் ஒருவர் தெண்டுல்கர் பற்றி பேச்சை ஆரம்பித்தார். இருபத்து நாலு வருசமா விளையாண்டு இந்தப் போட்டியுடன் விடை பெறுகிறார் என்று சொன்னதும் எல்லாருடைய பேச்சும் சச்சின் பக்கம் திரும்பியது. உடனே ஒரு நண்பர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கேன்சருக்கு இலவச மருத்துவமனை கட்டி இருக்கிறார். இவன் என்ன செய்தான் என்று முதல் விவாத முத்தை ஆரம்பித்தார்.

நான் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு சச்சினை ரொம்பப் பிடிக்கும். எனக்குப் பிடிக்கும் என்பது அவருக்கும் தெரியும் அதனால் என்னிடம் எதாவது பிடுங்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொன்னார். அவர்கள் விவாதத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு சச்சின் ஒன்றும் செய்யவில்லை என்பது விவாதப் பொருளாக இருக்கிறது இதில் நாம் சொல்ல என்ன இருக்கிறது.

பிறகு அவர்களாகவே சச்சினை விமர்சித்து பெரிய விவாதமே நடத்தினார்கள். விவாதப் பொருள் சச்சின் என்றாலும் சரி தவறென்று சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் போல் விவாதம் நடக்கவில்லை. அம்மாவின் ஆட்சி போல எல்லோரும் ஒரு பக்கமாகவே பேசினார்கள். மக்களுக்கு என்னத்தை செய்தான்... கோடிக்கோடியாக சம்பாரித்து அவன் குடும்பத்துக்குத்தான் சேர்த்து வைத்திருக்கிறான். சரியான சுயநலவாதி என எல்லாரும் அவரவர் மனதில் உதித்ததை பேசிக்கொண்டே போனார்கள். எல்லாருமே ஒருமையில்தான் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அப்போது ஒருவர் நூறு கோடிக்கு வீடு கட்டி வச்சிருக்கான். தெருவுல திரியிற எத்தனையோ கோடிப் பேர் இருக்கிறார்கள் என்ன செய்தான் எனச் சொன்னார். உடனே ஒருவர் அவன் களவாணிப்பய அடுத்தவங்களுக்குச் செய்யணுங்கிற எண்ணமே இல்லாதவன். கோடிக்கோடியா சம்பாரிச்சு என்னத்துக்கு செய்யிற மனசில்லையே என தனது ஆதங்கத்தைக் கொட்டினார். இதற்கு மேல் கேட்டுக் கொண்டிருக்க விடாமல் எதாவது பேசு என்று என்னை சச்சின் மோகம் உந்தித் தள்ள, நான் எதைப் பேசினாலும் விவாதத்தின் வீச்சுக் கூடும் என்று தெரிந்தாலும் அவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக ஆரம்பித்தேன்.

சரி உங்க விவாதத்துக்கே வருவோம். சச்சின் கோடிக்கோடியாக சம்பாதித்து வீடு கட்டியிருக்கிறார். வெளிநாட்டில் சொத்து வாங்கிப் போட்டிருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அது அவர் சம்பாதித்த காசுதானே. நம்ம அரசியல்வாதிகள் போல் மக்கள் வயிற்றில் அடித்து சம்பாதிக்கலையே... அவரோட பணம் அவர் யாருக்குக் கொடுத்தால் என்ன... கொடுக்கலைன்னா என்ன... என்றேன். எனது பதில் எனக்குச் சரியானதாக இருந்திருக்கலாம். அவர்களுக்கு இது தவறாகத் தெரிந்திருக்கலாம்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக இவன மாதிரித்தான் அவனும் அதான் டோனியும் ஐந்து லட்சம் சொத்தோட வந்தவன் இன்னைக்கு வீட்டை சுத்திப் பாக்க குதிரை வண்டியில போறானாம் என்று ஒருவர் எடுத்துக் கொடுக்க, மற்றவர்களுக்கு செய்யும் எண்ணம் இல்லாத இவனுகளை தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறாங்க. கிரிக்கெட்டின் கடவுள்ன்னு வேற சொல்றாங்க... சில கிறுக்குப்பய புள்ளங்க சேர்ந்து கோயில் வேற கட்டியிருக்குங்களாம் விளங்குமா நாடு என்றார் மற்றொருவர். இவரது பேச்சில் எப்போதும் தான் மட்டுமே நல்லவன் சுற்ரி இருப்பவன் எல்லாம் கெட்டவன் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.

கோயில் கட்டுறதை நானுந்தான் தப்புன்னு சொல்றேன். சச்சினுக்கு கோயில் கட்டுனவங்களுக்கு குடியிருக்க வீடு இருக்குமா என்று நான் சொல்ல, நண்பர் ஒருவர் அவனுக வீடு கட்ட வச்சிருந்த பணத்தைத்தான் சச்சினுக்கு கோயிலாக் கட்டியிருப்பானுங்க. நம்ம ஊர்ல குஷ்புக்கு கோயில் கட்டலையா அது மாதிரித்தான் என்றார். விவாதம் திசை மாறி மீண்டும் சச்சினை மையம் கொண்டு தொடர, என்னமோ சச்சின் பணத்தை சுலபமா சம்பாரிச்ச மாதிரி பேசுறீங்க... வெயில்ல நின்னு விளையாண்டு கஷ்டப்பட்டுத்தானே இந்த பணத்தை சம்பாரிச்சு இருக்கார். அவர் தேர்ந்தெடுத்த பாதை பணம் கொழிக்கும் பாதை.. இது எல்லாருக்கும் அமைவதில்லை என்றதும் அதுக்காக கோடிக்கோடியா கொடுக்கிறானுங்க... அதுல செஞ்சா என்ன கொறஞ்சா போயிடும் என்றார் நண்பர் ஒருவர்.

சரி அவர் செய்தாரா செய்யலையான்னு யாருக்குத் தெரியும். உதவி செய்யிறதை ஒரு சில நடிகர்கள் போல விளம்பரம் பண்ணிட்டு செய்யணுங்கிறது இல்லையில்ல. எத்தனையோ பேர் எவ்வளவோ உதவிகளை வெளிய தெரியாமத்தானே செய்யிறாங்க. அப்படி இவரும் செய்திருக்கலாமே. நமக்கு என்ன தெரியும். அதுவும் பிரபலமா இருந்தால் நான் உதவி செய்யிறேன்... உதவி செய்யிறேன்னு சொல்லிட்டுச் செய்யணுமா என்ன...  என்றதும் நீங்க அவனைத் தூக்கி வச்சி ஆடுற கோஷ்டி, அவனை மாதிரி எத்தனை பேரு விளையாட இடம் கிடைக்காமல் இருக்கானுங்க... எல்லாருக்கும்  இந்த வாழ்க்கை கிடைப்பதில்லையே என்றார் மற்றொருவர்.

இடம் கிடைக்காமல் நிறைய பேர் இருக்காங்க. அதுக்காக என்ன செய்ய முடியும். யாருக்கு என்னன்னு நிர்ணயம் பண்ணித்தானே பிறக்கவைக்கிறான். அப்புறம் கிடைக்கலைன்னு புலம்பி என்னாச்சு நமக்கு கிடைச்சிருக்கிற இந்த வாழ்க்கையை வாழ்ந்தாப் போதும். கிட்டத்தட்ட இருபத்தி நாலு வருசமா மைதானத்தில் வெயிலில் கிடந்துதான் சம்பாரித்து இருக்கிறார். எத்தனை ஏச்சுக்கள் பேச்சுக்கள் வாங்கியிருப்பார். நாம அடுத்தவனுக்கு என்ன செய்தோம்ன்னு பாருங்க... அடுத்தவன் என்ன செய்யிறான்னு பாக்காதீங்க என்றதும் நீங்க சொல்றது சரிதான்... இன்னைக்கு நாம வாங்குற சம்பளத்துல எத்தனை பேர் அடுத்தவங்களுக்குச் செய்யிறோம். அப்புறம் பிரபலங்கள் மட்டும் சம்பாதிக்கிற காசுல அதைச் செய்யலை... இதைச் செய்யலைன்னு எப்படி பேசலாம் என்றார்.

எப்படியிருந்தாலும் சச்சின் களவாணிப்பயதானுங்க. ஒரு நூறு அடிக்கணுமின்னாலும் அம்பது அடிக்கணுமின்னாலும் எத்தனை பந்தை வீணாக்குவான் தெரியுமா... அவனுக்கு சாதனை செய்யணும் அதுதான் அவனோட எண்ணம். கேட்டா நாட்டுக்காக விளையாடுறான்னு சொல்லுவானுங்க என்று ஒருவர் சொல்ல, எந்தத் துறையா இருந்தாலும் அதுல இருக்கவனுக்கு சாதிக்கணுமின்னு ஆசை இருக்கதான் செய்யும். தன்னோட கண் முன்னாடி தன்னால சாதிக்க முடியும்ன்னு தெரியும் போது அவருக்குன்னு சில சாதனைகள் செய்ய ஆசை இருந்துதான் இருக்கும். அதுக்காக எல்லாப் போட்டிகளிலும் சதமடிக்கணுமின்னு விளையாண்டாரா என்ன. தொன்னூறுக்கு மேல போகும் போது எல்லாருக்கும் நூறைத் தொடணுமின்னு ஆசை இருக்கத்தான் செய்யும். இதை ஏன் அப்படிப் பாக்குறீங்க என்றதும் கொஞ்ச நேரம் தொடர்ந்த விவாதம் வேறு மாதிரிப் போக, நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.

எனக்கு இவங்க பேசுற இந்த வியாக்கியானம் பிடிபடவில்லை. நம்மால் என்ன முடியுதோ அதைச் செய்யும் மனமிருந்தால் போதும். செய்வதை வெளியில் சொல்லி விளம்பரம் தேடிக் கொள்ள என்ன வேண்டியிருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் மகளுக்கு செய்ததைக் கூட நாலு பேர் கூடியிருக்கும் போது சொல்லிக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்வார். அதுபோல் செய்ய வேண்டுமா என்ன. சச்சின் என்றில்லை நிறைய பிரபலங்கள் அதைச் செய்யவில்லை... இதைச் செய்யவில்லை என்று நாம் எப்படிச் சொல்லலாம். செய்வது என்பது அவரவர் விருப்பம். நடிகன் செய்யவில்லை... விளையாட்டு வீரன் செய்யவில்லை என்று பேசுவது சரியா..? அவனவன் வேலை பார்த்துத்தான் சம்பாதிக்கிறான். அரசியல்வாதி தவிர மற்ற யாருக்கும் உடல் உழைப்பு இல்லாமல் பணம் கிடைத்து விடுவதில்லை. என்ன அவனவனுக்கு வாய்க்கும் தொழிலில் ஏற்ற இறக்கம் இருக்கிறது. அதற்காக நாம் கல்லெறிய முடியுமா?

பல்லிருக்கவன் பக்கோடா சாப்பிடுறான் என்பதற்காக அவனைப் பார்த்து கோபப்பட முடியுமா... உதவும் குணம் அவரவர்க்குள் இருந்தால் போதும் வெளிச்சம் போட்டுக்காட்டித்தான் ஆக வேண்டும் என்பதில்லை என்பது என் எண்ணம். என்னங்க நான் சொல்வது சரிதானா?

மீண்டும் மனசு பேசும்.
-'பரிவை' சே.குமார்