மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

மனசின் பக்கம் : ஆன்மீகம் முதல் அஞ்சலி வரை

ண்பர் என்னிடம் ஆன்மீகக் கட்டுரை கேட்டபோது ரொம்ப யோசித்தேன்.... சாமி கும்பிடுவேன்... கோவில்களுக்கு நடைப்பயணம் எல்லாம் போயிருக்கிறேன்  கதை, கவிதையின்னு எல்லாம் என்னால கிறுக்க முடியும் ஆன்மீகம் குறித்தான பகிர்வு என்றால் அதற்கென தேடல் இருக்க வேண்டும். அதெல்லாம் நமக்கு சரிவருமா...எப்பவுமே எது குறித்தாவது எழுத வேண்டும் என்றால் எனக்கு சற்று பயம் இருக்கத்தான் செய்யும்... அதுவும் தேடல் நிறைந்த ஆன்மீகம் என்றால் ரொம்பத் தூரம்தான்.. எனவே யோசித்தேன்.

'நீங்கதான் ஆன்மீகம் எழுதுவீங்களே... அப்புறம் நான் எதுக்கு... வேற எதாச்சும்...?' மெல்லக் கேட்டேன். 'இல்லை நீங்கதான் இதை எழுதணும்... எனக்குத் தெரியும்... நீங்க எழுதுவீங்க... யோசிக்காதீங்க ஜி' என்றார். முயற்சிக்கிறேன் என்று மட்டும் சொன்னேன். 'சரி நாளை மாலைக்குள் நல்ல முடிவாச் சொல்லுங்க...' என்றதும் 'சரி' என்றேன். மறுநாள் குருட்டுத் தைரியத்தில் 'எழுதிடலாம்' என்று சொல்லிவிட்டேன். அதன்பின்னான தேடலில் ஐந்தாம் தேதி காலை வரை எனக்கு அது குறித்து எந்த ஒரு எண்ணமும் தோன்றலை.  அவரிடம் சொன்னபடி ஆறாம் தேதி இரவுக்குள் கொடுக்க முடியாது... தேவையில்லாமல் சரியின்னு சொல்லிட்டோமோ என்று நினைத்தேன்.


ஐந்தாம் தேதி காலை எழுந்து குளித்து சாமி கும்பிட்டு நாட்காட்டியை கிழித்தபோது பிரதோஷம் என்றிருந்தது. சென்னையில் இருக்கும் போது தொடர்ந்து பிடித்த விரதம் இங்கு வந்ததும் சில காரணங்களால் விட்டாச்சு. இன்னைக்கு விரதம் இருக்கலாமே என சின்ன நப்பாசை...உடனே விரதம் இருக்கலாமென காலை சாப்பாடு, மதியச் சாப்பாடு துறந்து அலுவலகம் சென்றேன்.

முதல் நாள் பாதியில் விட்டு வந்த வேலையை முடித்தேன். எனக்கு மேலிருக்கும் எகிப்துக்காரன் வேறு இடத்துக்குப் போயிருந்தான். வர எப்படியும் ஒரு மணிக்கு மேலாகும் என்பதால் கொஞ்சம் கொஞ்சம் எழுதலாம் என ஆரம்பித்தேன்... 12.30 மணிக்கு முடித்து எழுத்துப் பிழை (கிட்டத்தட்ட மூன்று முறை பார்த்தும் நண்பர் சில இடங்களில் பிழை இருப்பதைக் குறித்துக் கேட்டார்... நீங்களும் ஒரு முறை பார்த்துருங்க என்று சொன்னது தனிக்கதை) பார்த்து இன்னும் கொஞ்சம் பட்டி பார்க்க வேண்டும் வீட்டில் போய் பார்த்துக்கலாம் என்று நினைத்து தண்ணீர் குடித்துவிட்டு திரும்பியபோது 'ஹாய் குமார்' என எகிப்துக்காரன் உள்ளே வந்தான்.

எப்படியோ நண்பரின் விருப்பத்துக்கு முடியாது என்று சொல்லாமல் முதல் ஆன்மீகக் கட்டுரை... அதுவும் எங்கள் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கோவில் பற்றிய கட்டுரை எழுதியிருக்கிறேன். அதற்கான தேடலில் நிறைய விவரங்களை அறிய முடிந்தது.  இன்னும் இன்னும் பலவற்றை படிக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோவில்களை எல்லாம் பற்றி படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.

என்னையும் நம்பிக்கையுடன் ஆன்மீகப் பதிவு எழுதச் சொன்ன நண்பர் சத்யாவுக்கு என் நன்றி.

எனது ஆன்மீகப் பகிர்வு "கொஞ்சம் ஆன்மீகம் கொஞ்சம் (வீரத்) தமிழர் வரலாறு" வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மலர இருக்கும் அகல் மின்னிதழ் தமிழ்ப் புத்தாண்டு மலரில் வெளிவருகிறது.

***

கில்லர்ஜி அண்ணா கொடுத்த முத்துநிலவன் ஐயாவின் புத்தகத்தை நீண்ட நாள் எடுத்து பொறுமையாய் வாசித்து முடித்தேன். நமக்கு புத்தகம் கொடுத்து வாசிக்க வைப்பது கில்லர்ஜி அண்ணாதான். 'கம்பன் தமிழும் கணினித் தமிழும்' மொத்தம் 16 கட்டுரைகள்... எவ்வளவு செய்திகள்... என்ன ஒரு தேடல்... பொறுமையாய் வாசித்தபோது எத்தனை அற்புதமான விஷயங்களை... கம்பன் தமிழை... வள்ளுவன் தமிழை...  காரல் மார்க்ஸை... இன்னும் இப்படியாய் எத்தனை எத்தனை தமிழை... ரசித்துப் பருக முடிந்தது தெரியுமா... 

சத்தியமாச் சொல்றேங்க... நானெல்லாம் அகநானூறு, புறநானூறு, சங்க இலக்கியங்கள், மேல் நாட்டு இலங்கியங்கள் என எதிலும் ஆழ்ந்த அறிவு உள்ளவன் அல்ல... கல்லூரிக் காலங்களில் க்ரைம் நாவலும் பாக்கெட் நாவலும் என்னைச் சூழ்ந்திருந்த வேளையில் ராணி, குமுதம், பாக்யா, உதயம் என மூழ்கிக் கிடந்தவன்தான். கதை எழுதுங்கன்னு என் பேராசான் தொடர்ந்து நச்சரித்ததால் எழுதி ஆரம்பித்தவன்... கவிதை என கிறுக்கி 'தாமரை'யில் வந்து பொன்னீலன் ஐயா தனிப்பட்ட முறையில் கடிதம் எழுத உனக்கு நல்லாத்தானே எழுத வருதுன்னு உரம் போட்டு வளர்த்தவரும் அவரே. அதான் இன்றும் கிறுக்கிக்கிட்டு இருக்கேன்... இன்னும் இலக்கிய இலக்கணமெல்லாமே எனக்குத் தூரம்தான். 

படித்தால் இது போன்ற புத்தகங்களை தொடர்ந்து படிக்கணும்... ஐயாவின் தேடல் என்னை ஆச்சர்யப்படுத்தியது. க.நா.சு, ஜெயகாந்தன், ஜெயபாஸ்கரன், மேலாண்மை பொன்னுச்சாமி பற்றி எல்லாம் கட்டுரைகள்... இது ஒரு அறிவுக் களஞ்சியம்... இலக்கண அறிவே இல்லாத நானெல்லாம் இது குறித்து பேச முடியாது. நூல் விமர்சனம் என்று எதாவது கிறுக்கவும் முடியாது... அந்தளவுக்கு ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகம்... ஐயாவின் தேடலில் விளைந்த பொக்கிஷம் இது.. அருமையான ஒரு புத்தகம் வாசிக்கக் கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
***

யன்தாரா - மம்முட்டி நடித்த 'புதிய நியமம்' பார்த்தேன். என்ன இது மெகா ஸ்டார் மம்முட்டியை விட்டுட்டு  நயன்தாரான்னு ஆரம்பிச்சிருக்கேன்னு நீங்க நினைக்கலாம். இந்தப்படம் நாயகியை மையமாகக் கொண்ட படம்தான். ஒரு  பெண் தன்னை பாலியல் தொந்தரவு செய்யும் காமுகர்களை என்ன செய்யணுமின்னு நினைக்கிறாளோ அதை கதையின் நாயகி செய்வதுதான் கதை. ஒரு பெண் குழந்தையின் தாய்... வக்கீலை காதலித்து திருமணம் செய்தவள்... கதகளியில் இராவணன் வேடம் கட்டுபவள்... அவளின் சந்தோஷ வாழ்க்கையில் குறுக்கிடும் மூவர் அவளை மொட்டை மாடிக்கு துணி காயப் போடப் போகும் போது கற்பழித்து விடுகிறார்கள். அதன் பின்  அவளின் நடவடிக்கை மாறிப் போகிறது. எப்பவும் சோகம் கலந்த முகத்தோடு எதிலும் ஒட்டாமல்... கணவனுடன் சந்தோஷமில்லை... மகளிடம் கண்டிப்பு... மற்றவர்களுடன் எரிச்சல் என வாழும் நாயகி, நகரத்துக்கு புதிதாய் வரும் போலீஸ் டி.சி.பி.ஜீனா பாயுடன் தோழியாகி அவரின் உதவியுடன் தன்னைக் கெடுத்த மூவரையும் வித்தியாசமான முறையில் பழி வாங்குகிறாள்.  அது கொலை அல்ல என போலீஸ் கேசை முடிக்கிறது. த்ரிஷ்யம் போன்ற ஒரு படம்...  அதெல்லாம் சரி... இதுல மம்முட்டிக்கு என்ன வேலைன்னுதானே கேக்குறீங்க... நானும் ஆரம்பத்திலிருந்து கிளைமேக்ஸ் வரை அப்படித்தான் நினைத்தேன்... இறுக்காட்சியில் வச்சிருக்கானுங்க பாருங்க... டுவிஸ்ட்... அதுக்குத்தான் மெகா ஸ்டார்... மொத்தத்தில் ரொம்ப அருமையான படம். மிஸ் பண்ணிடாதீங்க.
***

அனைவருக்கும் இனிய தெலுங்கு வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்.


-'பரிவை' சே.குமார்.

18 எண்ணங்கள்:

மு. கோபி சரபோஜி சொன்னது…

எப்பவுமே “முதல்” என்பது தான் கடினம் குமார். அதன்பின் தானாகவே அது தன் எண்ணிக்கை இலக்கை மாற்றிக் கொண்டே இருக்கும். அதனால் உங்களின் முதல் ஆன்மிக ஆரம்பம் இன்னும் நீளட்டும். இனி மனசு பக்கத்தில் ஆன்மிகமும் வாசிக்கக் கிடைக்குமில்லையா? வாழ்த்துகள் குமார்.
என் தந்தை தொடர்ச்சியாய் நூல்களை வாசிக்க மாட்டார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் என் அளவில் ஏற்புடையதாய் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர் இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ச்சியாய் வாசித்த புத்தகம் முத்துநிலவன் சாரின் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே, கம்பன் தமிழும் கணினித் தமிழும்! முதல் நூலை நான் வாசித்து விட்டேன். இரண்டாம் நூலை இனி தான் வாசிக்க வேண்டும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நல்ல தொகுப்பு, புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.முத்துநிலவன் அவர்களின் ஆய்வுப் பார்வைகள் வியக்க வைப்பவை. பழம் பெருமையே பாடாமல் கால மாற்றத்திற்கேற்ப தன்னை மேம்படுத்துக் கொள்ள விழைபவர். எத்துணை சிறியவராய் இருப்பினும் அவர்களிடம் கற்க ஏதேனும் இருக்கிறதா என்ற தேடல் மனப்பான்மை உடையவர். அவரது நூல்கள் பலரையும் சென்றடைய வேண்டும்.

ஸ்ரீராம். சொன்னது…

புதிய நியமம் பார்க்கும் ஆவல் வருகிறது.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே
நன்றி
தம +1

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

முதல்ல கால் வைக்கும் வரைதான் குமார் அந்தத் தயக்கம் எல்லாம். அப்புறம் ஆழம் அறிந்துவிட்டால் அவ்வளவுதான்..எனவே ஆரம்பிச்சிட்டீங்கல்ல..இனி கலக்குங்கள்..கலக்குவீர்கள்!!

புதிய நியமம் பார்க்க வேண்டும் என்று நினைத்துள்ளேன் ஆனால் இன்னும் அமையவில்லை நேரம். துளசி பார்த்துவிட்டார் நன்றாக இருந்தது என்று சொன்னார். முத்துநிலவன் அண்ணா அவர்களின் புத்தகத்தை வாங்கும் முயற்சி. அகரத்தில்...

தெலுங்கு வருடப் பிறப்பு வாழ்த்துகளை அஞ்சலி (அஞ்சலி தானே??!! இல்லையோ...) மூலம் தெரிவித்தமைக்கு நன்றி...அஹ்ஹாஹ்ஹ்

கீதா

துரை செல்வராஜூ சொன்னது…

நல்வாழ்த்துகள்..
மேலும் தேடலைத் தொடர்க!..

KILLERGEE Devakottai சொன்னது…

தங்களின் தேடல் இன்னும் தீவிரமடையடும் வாழ்த்துகள் நண்பரே
தமிழ் மணம் 5

கோமதி அரசு சொன்னது…

ஆன்மீக பயணத்திற்கு வாழ்த்துக்கள். பிரதோஷவிரதம் இருந்து ஆன்மீக கட்டுரை மிக நன்றாக வந்து இருக்கும் சிவன் அருளால்.
புத்தகவிமர்சனம், சினிமா விமர்சனம் எல்லாம் அருமை.
வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கோபி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே அருமையான புத்தகம்... அதே போல் இதுவும்...
நமக்கும் ஆன்மீகத்துக்கும் ரொம்ப தூரம்... இது வேணும் என்ற அன்பிற்காக எழுதியது...

Yarlpavanan சொன்னது…

அறிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களது நூலுக்கு
சிறந்த திறனாய்வுக் கண்ணோட்டம்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முரளிதரன் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமாம்... ஐயா தேடல் நிறைந்தவர் அவரின் எழுத்துக்கள் இமயம் தொட வேண்டும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
பாருங்க உங்களுக்குப் பிடிக்கும்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கீதா மேடம்...
நமக்கு ஆன்மீகம் ரொம்பத் தூரம்... நிறைய வாசிக்க ஆசை... எழுதும் எண்ணமெல்லாம் இல்லை....

புதிய நியமம் நல்லாயிருக்கு...

கலைஞர், வைகோ, விஜயகாந்தை எல்லாம் போட்டா அரசியலாக்கிடுவாங்க... அதான் நமக்குப் பிடித்த அஞ்சலி படம் போட்டு வாழ்த்து சொல்லியாச்சு...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
ஆன்மீகத்தில் கரை கண்டவர் தாங்கள்... உங்கள் பதிவுகள் மூலம் நிறைய அறிந்து கொள்கிறோம்..

வாசிக்கணும்... இன்னும் நிறைய வாசிக்கணும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.