மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 27 ஜனவரி, 2016

நேத்துப் பூத்தவளே..!


கொக்குப் பறக்கும்
குளக்கரையில் நானிருக்கேன்
குறுக்குச் சிறுத்தவளே
பறந்தோடி நீயும் வாடி..!

மீன்கள் விளையாடும்
ஊரணியில் நானிருக்கேன்
தூண்டில் விழியாளே
துள்ளிக்குதித்து நீயும் வாடி..!

மயில்கள் நடனமிடும்
மாந்தோப்பில் நானிருக்கேன்
கார் கூந்தலாளே
குதித்தோடி நீயும் வாடி..!

குயில்கள் கூத்தாடும்
வேம்போரம் நானிருக்கேன்
கொஞ்சும் குரலாளே
பட்டெனவே நீயும் வாடி..!

தும்பி பறக்கும்
துளசியோரம் நானிருக்கேன்
துரத்தும் அழகாளே
துரிதமாய் நீயும் வாடி..!

கிளிகள் கீதம் இசைக்கும்
பனங்காட்டில் நானிருக்கேன்...
கோவைப்பழச் சிவப்பழகி
கோவிக்காம நீயும் வாடி..!

மாடுகள் மேயும்
திடலில் நானிருக்கேன்...
பாதக் கொலுசழகி
பதறாம நீயும் வாடி..!

வாடி... வாடியின்னு
வழி பார்த்து வாடிப்போனேன்...

காத்திருந்து... காத்திருந்து
கண் பூத்துப் போனதடி...

நேத்துப் பூத்தவளே...
நித்தம் என்னைச் சாச்சவளே...
பாத்து நாளாச்சு...
பாக்க மனம் ஏங்குதடி...

ஏக்கப் பெருமூச்சு
என்னை எரிக்கும் முன்னே...
வாசக் கறிவேப்பிலையே
வந்து என்னை காத்திடடி....
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நல்லாயிருக்கு. தம +1

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை குமார். பாராட்டுகள்.

படம் வெகு அழகு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா...!

துரை செல்வராஜூ சொன்னது…

இந்த மாதிரியான சுற்றுச் சூழலில் நிச்சயம் பாட்டு வரத்தானே செய்யும்!..

அழகு..

musamil சொன்னது…

வாவ் கிராமத்து வடிவில் அழகான ஒரு பாடல் பாடிய வாறு ஒரு பீலிங்க் பாடல் போன்று படித்துப்பார்த்தேன் சூப்பராக உள்ளது இது போன்று இன்னும் நிறைய கவிதை எழுதுங்கள் அண்ணா பின்னிட்டிங்க
நன்றியுடன் நண்பன்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அட்டகாசமா வந்திருக்கு நாட்டுப்புற கவிதை! வாழ்த்துக்கள்! படமும் சிறப்பு! இளையராஜா வரைந்த படமா?

KILLERGEE Devakottai சொன்னது…

கவிதையில் சொன்ன இந்த ஏரியாவெல்லாம் எனக்குத் தெரிய அபுதாயில் இல்லையே....

அருணா செல்வம் சொன்னது…

அருமை.

நிஷா சொன்னது…

கிராமமும் அதன் சிந்தனையும் மனதோடு ஊறியதனாலோ என்னமோ கற்பனையிலும் கிராமத்து பெண் களை கட்டுகின்றாள்!

நேத்துப் பூத்தவளே...
நித்தம் என்னைச் சாச்சவளே...
பாத்து நாளாச்சு...
பாக்க மனம் ஏங்குதடி.

ஆஹா குமார் யாருப்பா இந்த பெண்?

த.ம



நிஷா சொன்னது…

அபுதாபியில் இல்லையா? நிஜம்மாகவா? ஏன்பா குமார் கில்லர்ஜி சாருக்கு இந்த இடமெல்லாம் எங்கே இருக்குன்னு சொல்லவே இலையா?

நிஷா சொன்னது…

மெட்ட்டமைத்தால் அழகான கிராமத்து பாடலாய் இருக்கும்.

Yarlpavanan சொன்னது…


"நேத்துப் பூத்தவளே...
நித்தம் என்னைச் சாச்சவளே...
பாத்து நாளாச்சு...
பாக்க மனம் ஏங்குதடி..." என
அருமையாகச் சுண்டி இழுக்கிறியளே!


மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்
http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

balaamagi சொன்னது…

ம்ம் பாடிப்பார்த்தேன்,, அருமை அருமை சகோ, அது சரி அங்க இப்படியெல்லாமா?

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நாட்டுப்புறக் கவிதை கலக்கல் குமார். அந்தப் படமும் அழகு!