மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 20 ஆகஸ்ட், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-17)

முந்தைய பகுதிகள்:
           பகுதி-1       பகுதி-2         பகுதி-3            பகுதி-4        பகுதி-5          பகுதி-6           பகுதி-7    


“என்னப்பா... ஏதோ முக்கியமான வெசயம் பேசணுன்னு சொன்னே... காலயிலயிருந்து நீ பேசுவே... பேசுவேன்னு பாக்குறேன்... ஒண்ணுமே பேசல... என்னப்பா... என்ன வெசயம்...?” வாசலில் அமர்ந்திருந்த மகனிடம் கேட்டபடியே எதிரே கிடந்த கட்டிலில் அமர்ந்து வெற்றிலையை கையில் எடுத்தார் வேலாயுதம்.

“அதுப்பா... முதல்ல வெத்தலை போடுங்க... சொல்றேன்...  கோழி ரசம் அம்மா நல்லா சுள்ளுன்னு வச்சிருக்கு... ரொம்ப நாளாச்சு இப்படி ரசம் குடிச்சி....  அந்த வெத்தலையை இங்கிட்டு கொடுங்க... ”

“ஒங்கம்மா சமையல் ருசியே தனிதானே... ஏம்ப்பா என்னமோ பேசணுமின்னே.... பேசாம இருக்கே... வேலயில எதுனாச்சும் பிரச்சினையா... இல்ல குடும்பத்துல...”

“அதெல்லாம் இல்லப்பா... அது வந்து... அது வந்து...” மெல்ல இழுத்தான் சரவணன்.

“இங்க பாருப்பா... நீ சின்னப்பிள்ள இல்ல... தோளுக்கு மேல வளந்துட்டா பிள்ளயக்கூட  தோழனாத்தான் பாக்கணும்பாங்க... எதுக்கு தயங்குறே... எதுவாயிருந்தாலும் சொல்லு...”

“அப்பா... நான் உங்ககிட்ட அண்ணனைப் பார்த்தேன்... ஆனா அவனுக்கிட்ட பேசலைன்னு சொன்னேனே ஞாபகமிருக்கா...?”

“ம்....” என்று யோசித்தவர் “ஆமா... சொன்னே... நாங்கூட புள்ளக நம்ம ஜாடையில இருக்கான்னு கேட்டுத் தொலைச்சேனே.... அதுக்கென்ன இப்போ...”

“இல்லப்பா.... அன்னைக்கி நான் அவனுக்கிட்ட பேசினேன்...”

“பேசுனியா...? அவன் நம்ம குடும்பத்தை கேவலப்படுத்திட்டுப் போனவன்... பேசிட்டு எங்கிட்ட பேசலைன்னு வேற சொன்னேயில்ல... எம்புட்டு நாளாத் தொடருது இது... அப்பனை விட... நாம பட்ட அவமானத்தைவிட… அவன் ஒனக்கு பெரிசாப் பொயிட்டானா... அவனுக்கு தம்பிதானே நீ...” கையிலிருந்த சுண்ணாம்பு டப்பாவை தூக்கி எறிந்தபடி கத்திப் பேசினார்.

அவர் கத்தவும் சவுந்தரமும் சாரதாவும் வேகமாக வாசலுக்கு வந்தார்கள். ப்ரீத்தி ‘என்னமோ சண்டை’ என்று நினைத்தபடி அங்கு வர பயந்து கொண்டு டிவி முன்னால் படுத்திருந்தாள்.

“இந்தாங்க... இப்ப எதுக்கு கத்துறிய... ஊரே அடங்கிருச்சு... அப்பனுக்கும் மகனுக்கும் பேச நேரங் கிடைக்கலையாக்கும்... ஏன்டா நீ என்னடா சொன்னே.... வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டியடா.... உங்கக்கா வந்தாலும் எதாச்சும் சொல்லி வாங்கிக் கட்டிப்பா... நீயும் அதையே பண்ணு...”

“என்னம்மா பெரிசாச் சொல்லிட்டேன்... அண்ணனைப் பார்த்தேன்... பேசுனேன்னு சொன்னேன்... அதுக்குத்தான் தூக்கிப் போட்டு உதைக்கிறாரு...” அவனும் பதிலுக்குக்  கத்தினான்.

“கத்தாம பேசுங்கடா... ஏன்டா... ஏங்க கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க... வாள் வாள்ன்னு கத்துறதை நிப்பாட்டுங்க... பாத்தேன்... பேசுனேன்னுதானே சொன்னான்... இங்க கூட்டியாறேன்னு சொல்லலையே..?”

“அன்னைக்கு மறைச்சிட்டு இன்னைக்கி பேச வாராண்டி... அடுத்து கூட்டியாறேம்பான்...” மீண்டும் கத்தினார்.

“நீங்களா முடிவு பண்ணாதீங்க... அவன் முதல்ல என்ன சொல்ல வர்றான்னு கேளுங்க... கத்துறதால என்ன லாபம்... மூத்தவனை நீ பாத்துப் பேசினியா...?”

“அம்மா... அவனைப் பாக்கணுமின்னு போகலை... ஒரு கல்யாணத்துல பாத்தேன்... அண்ணி, குழந்தைகளையும் பாத்தேன்...”

“நொண்ணி... ஓடுகாலி முண்ட... நொண்ணியாம் நொண்ணி...” வேலாயுதம் குமுறினார்.

“சத்த இருங்களேன்...”

“அம்மா அவனுக்கு நம்ம கூட சேரணும்ன்னு ஆசைம்மா... பிள்ளைங்க தங்க விக்கிரகம் மாதிரி இருக்குக... அண்ணிக்கு என்னம்மா குறைச்சல்.... அந்த லட்சுமியே நேர்ல வந்த மாதிரி இருக்காங்க... என்னம்மா ஊருல உலகத்துல இல்லாத்தை அவன் செஞ்சிட்டான்.... சும்மா கத்துறாரு... எங்க பாட்டையா பாட்டிய சிறை எடுத்தாந்து கட்டிக்கிட்டாராம்ன்னு பெருமை பேசுவாரு....”

“அவரு வேற சாதிக்காரியைச் செற எடுக்கல.... நம்மள்ல விளஞ்சவளைத்தான் செற எடுத்தாரு... இப்ப அவன் பேச்சை இங்க யாரும் பேசிக்கிட்டு இருக்க வேண்டாம்... அவன் வேணுமின்னா எங்கயோ போயி  நல்லாப் போசிக்கங்க.... ஆனா இங்க வராதீக...” என்று வேலாயுதம் எழுந்தார்.

“அப்பா... இந்த விஷயத்துக்கு ஒரு முடிவு தெரியாம நான் விடப்போறதில்லை... எந்திரிச்சிப் போறதால இது இத்தோட முடியாது... உக்காருங்க... நான் உங்ககிட்ட பேசணும்... இப்பத்தானே சொன்னீங்க... வளந்த பிள்ளை தோழன்னு... அப்புறம் என்ன... உக்காருங்க...” சரவணன் கோபமாகப் பேச வேலாயுதம் வேண்டாவெறுப்பாக உட்கார்ந்தார்.... ‘ஏப்பா... அண்ணன் நல்லாயிருக்கானா?” என்று சாரதா கேட்க, வேலாயுதத்தின் கண்கள் அக்னியை கக்கின.

'தன்னைக்கான கண்ணண்ணன் எதற்காக வாறேன்னு சொன்னுச்சு... அதுவும் முக்கியமாப் பேசணும்ன்னு வேற சொல்லியிருக்கு' என்று நினைத்துக் குழம்பிய அபி, தன் தோழிகளிடம் ‘கண்ணண்ணா அப்படி என்ன முக்கியமான விஷயம் எங்கிட்ட பேசணும்...? அதுவும் ஸ்கூல் முடிஞ்சதும் பாக்கணுமாம்...’ என்று புலம்ப, ‘போச்சுடி... நீங்க அண்ணா... அண்ணான்னு அத்தானைத்தானே கூப்பிடுவீங்க... ஒருவேளை உனக்கு பிராக்கெட் போடுறாரோ... என்னவோ...’ என்று தோழிகள் கிண்டல் பண்ண, ‘சீ... வாயைக் கழுவுங்கடி... எங்க சாரதியை விட எம்மேல அதிகம் பாசம் வச்சிருக்கது கண்ணண்ணன்... அதுக்கு வேற ஏதோ பிரச்சினை... எங்கண்ணனை தப்பாப் பேசாதீங்க...’ என்று அவர்களின் வாயை அடைத்தாலும் ‘என்னவா இருக்கும்?’ என்ற சிந்தனையே அவளுக்கு மேலோங்கியிருந்தது.

மாலை பள்ளி விட்டு வெளியில் வரும்போது கண்ணன் அவளுக்காக காத்திருந்தான்.

“சாரதி... உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்...?” என சாரதிக்கு முன்னால் வந்து அமர்ந்தாள் சுபஸ்ரீ.

“என்னடி... புதுசா எங்கிட்ட பேசணுன்னு வர்றே...? என்ன எனக்கு ஆத்துக்காரி ஆக சம்மதமா?” கிண்டலாகக் கேட்டான் சாரதி.

“விளையாட்டு வேண்டாம்... உங்கிட்ட தனியாப் பேசணும்... என்னோட வாழ்க்கையைப் பற்றிப் பேசணும்... “

“சரி பேசு...”

“இங்க வேண்டாம்... தனியா வெளிய போயிறலாமே...”

“என்னடி... உன்னோட நடவடிக்கை வித்தியாசமா இருக்கு...  தனியாப் பேச என்ன இருக்கு... “

“இருக்கு... நாம கோயில் பிரகாரத்துல உக்காந்து பேசலாமா...? இந்த நேரத்துல கூட்டம் அதிகமிருக்காது... டிஸ்டர்பன்ஸ் இருக்காது... யாரும் தப்பா நினைக்கமாட்டா..”

“எங்க வேணான்னும் உக்காந்து பேசலாம்... பாக்குறவாளுக்கு என்ன சந்தேகமா வரப்போகுது... என்னைக்கு இருந்தாலும் உன்னைத்தான் எனக்கு கட்டி வைக்கப் போறான்னு ஊருக்கே தெரியும்... பின்ன என்ன...”

“ம்... ஆமா... ஆமா... அந்த பெருமாள் கூட அப்படித்தான் நினைச்சிண்டிருக்காராம்... மூஞ்சைப் பாரு... ஊருக்குத் தெரியுறது அப்புறம்... உனக்கு தெரிய வேண்டியது இருக்கு... வா...” என்றபடி அவள் முன்னே போக, ‘இவ அப்படி என்ன முக்கியமாப் பேசப் போறாள்?’ என்ற எண்ணத்தோடு சாரதி அவள் பின்னே நடந்தான்.

படம் இணையத்திலிருந்து - ஓவியருக்கு நன்றி.
                                                                                                           
 (அடுத்த சனிக்கிழமை தொடரும்...) 
-‘பரிவை’ சே..குமார்.

4 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

கண்ணண்ணன்..எத்தனை சுழி ,அவருக்கு பிரச்சினையும் நிறைய இருக்குமோ :)

துரை செல்வராஜூ சொன்னது…

வீட்டுக்கு வீடு பிரச்னை தானா!?..

Yarlpavanan சொன்னது…

கண்ணண்ணை என்கிறியள்
சாரதி என்கிறியள்
நாம கோயில் பிரகாரத்துல
உக்காந்து பேசலாமா என்கிறியள்
அழகான நடையிலே
தொடருங்கள்
தொடருவோம்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ம்ம்ம் மீண்டும் வந்துவிட்டதே அதே பொலிவுடன்!!! தொடர்கின்றோம்...