மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 23 நவம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 9)

முந்தைய பகுதிகள் : 


பகுதி-1     பகுதி-2     பகுதி-3     பகுதி-4      பகுதி-5      பகுதி-6     பகுதி-7      பகுதி-8


---------------------------------

எட்டாவது பகுதியின் இறுதியில்...

"ம்... எனக்கும் தெரியிது.. எனக்கு உன்னை விட்டா ஆளில்ல... அவ அண்ணனும் கொஞ்சம் பணம் தர்றேன்னு இருக்காரு... பேசாம நம்ம சொத்துப்பத்து வீடுவாசல் எல்லாத்தையும் நீயே எடுத்துக்கிட்டு எனக்கு ஒரு வெல வச்சிக் கொடுத்துடு... " மனைவி சொன்னதை அப்படியே சொல்லி முடித்தான் மணி.

"என்னது நம்ம பரம்பரை சொத்துக்கு ஒரு வெல வச்சிக் கொடுக்கவா...?" அதிர்ச்சியாய் கேட்டான் குமரேசன்.

இனி...

குமரேசன் அதிர்ச்சியாய்க் கேட்டதும் "ஆமாடா... எனக்கு இடம் வேண்டாம்... அதுக்குள்ள பணத்தைக் கொடுத்துடு." என்றான் மணி.

"என்னண்ணே பேசுறே... அப்பா அம்மா காலத்து வரைக்கும் சொத்தைப் பிரிக்க வேண்டான்னு நீதான் சொன்னே... இப்ப என்னடான்னா எனக்கு காசு கொடுங்கிறே... அப்பா காலத்துக்குப் பின்னாடி நானோ நீயோ அங்க போயி விவசாயம் பண்ணுவோமா... சொல்லு... அது பாட்டுக்கு கிடக்கட்டும்..."

"ஆமா பிரிக்க வேண்டான்னு நாந்தான் சொன்னேன்... ஆனா எனக்கு இப்ப பணம் அர்ஜெண்ட்... ஒண்ணு நீ எடுத்துக்கிட்டு கொடு... இல்ல பொங்கலுக்குப் போகும் போது நாலு பெரியவுகளை வச்சி பிரிச்சி வித்துட்டு பணம் தாரேன்... ஒரு மாதத்துக்கு கை மாத்தா யார்கிட்டயாவது வாங்கிக் கொடு..."

"நம்ம கண்ணதாசண்ணனுக்கிட்ட கேளுண்ணே... அது ஊர்ல யார்க்கிட்டயாச்சும் பெரட்டித் தரும்... நா இங்க அம்புட்டுப் பணத்தை யார்கிட்ட பொரட்டுவேன்... நானும் டிரை பண்ணுறேன்... ஆனா கன்பார்மா வாங்கித் தாரேன்னு சொல்ல முடியாது... எதுக்கும் ஊர்ல கண்ணதாசண்ணனுக்கிட்ட பேசிப் பாரு..."

"அவனுக்கிட்டயா... நல்ல கதைடா..."

"ஏன்... அதுக்கிட்ட கேட்டா உடனே கிடைக்கும்... நா வீடு கட்டும் போது அதுதானே அவசரத்துக்கு பொரட்டிக் கொடுத்துச்சு... கேட்டுப் பாரு... எங்கயாச்சும் வாங்கித்தரும்..."

"ஆமா அவனுக்கிட்ட கேட்டு... உடனே அப்பாக்கிட்ட சொல்லி... வேண்டாம் விடு... உன்னால முடியாதுல்ல... விட்டுடு... நான் பாத்துக்கிறேன்..."

"அப்ப அப்பாவுக்குத் தெரியாம வாங்கப் பாக்குறியா?"

"இப்பத் தெரிய வேண்டான்னு பாக்குறேன்... ஏன்னா ஆரம்பத்துலயே அபசகுணமா எதாவது சொல்லுவாரு..."

"எப்படிண்ணே இப்படி மாறினே... அந்த வீட்டு மனுசங்க உன்னைய இந்தளவுக்கு கேவலமா மாத்திட்டாங்களா என்ன..."

"டேய்...??"

"கத்தாதேண்ணே... இனி பேச்சு தொடர்ந்தா வீணாவுல சண்டை வரும்... நா வைக்கிறேன்... என்னால இப்ப எதுவும் முடியாது... எங்கிட்டாச்சும் வாங்கப் பாரு..." என்று போனை வைத்து விட்டு பேசாமல் இருந்தான்.

"என்னங்க மாமாவுக்கு பணம் அர்ஜெண்டாமா?" மெதுவாகக் கேட்டாள் அபி.

"ம்... இடம் வாங்கப் போறாராம்..."

"எம்புட்டாம்..?"

"எங்கிட்டத்தான் மூணு லட்சம் கேட்டாரே.."

"ம்... இப்ப நாம இருக்க நிலமையில கொடுக்க முடியாதுதான்... அப்பாக்கிட்ட நான் கேட்டுப் பாக்கவா... பாவம் அவருக்கு நம்மள விட்டா வேற யாரு இருக்கா... உங்ககிட்ட உரிமையோட கேக்குறாரு... இதுவரைக்கும் எதுக்கும் கேட்டதில்ல... மகா படிப்புக்கு கூட வேண்டான்னுதான் சொன்னாரு... நாமதான் வலுக்கட்டாயமா அவளுக்கு பீஸ் கட்டுறோம்...  அப்பாக்கிட்ட கேட்டுப் பாக்குறேன்... கடனா வாங்கி கொடுப்போம்... சீக்கிரம் கொடுத்துட்டா வட்டியில்லாம கொடுத்துடலாம்... இல்லேன்னா கொறச்ச வட்டி கொடுக்கலாம்... என்ன"

அபியைப் பார்த்தவன் அவள் தலைகோதி சிரித்தான்.

"என்னங்க..."

"இல்ல சொந்தமுன்னு வந்த அண்ணிக்கும் உனக்கும் எம்புட்டு வித்தியாசம்? அதான் சிரித்தேன்"

"மறுபடிக்கும் இப்படியா பிறக்கப் போறோம்... வாழ்றது ஒரு தடவை மத்தவங்களுக்கு பாரமா இல்லாம நம்மாள முடிஞ்சதை செய்வோம்... நா அப்பாக்கிட்ட பேசி மாமாவுக்குன்னே சொல்லி வாங்குறேன்... சரியா"

"சரி... கேளு பாக்கலாம்... ஆனா இவரு அண்ணி கூட குடும்பம் நடத்தி டோட்டலா மாறிட்டாரு... அப்பாவுக்கு தெரியக்கூடாதுங்கிறார்... நல்லவேளை இடத்துக்கு வெல வச்சிக் கொடுடான்னு கேட்டவரு... எனக்கு பொம்பளப்புள்ள மட்டுந்தானிருக்கு... உனக்குத்தான் பய இருக்கான்... பிரிக்காம போட்டு நாளைக்கி அவந்தானே எடுத்துப்பான்னு சின்னபுத்தியா யோசிச்சிருவாரோன்னு பயந்தேன்... ஏன்னா நா மூணு பிள்ளைகளையும் ஒண்ணாத்தான் நினைக்கிறேன். இன்னைக்கும் மூத்தமக மகாதான்... அப்புறம்தான் திவ்யாவும் முகேஷூம்"

"என்னங்க நீங்க... அது அவங்களுக்கு தெரியாமலா இருக்கும்... ஏதோ சொல்லிட்டாரு விடுங்க... மாமாவா இப்படிப் பேசுறாரு... எல்லாம் அக்கா சொல்லியிருப்பாங்க... இவரு பேசுவமா வேண்டாமான்னு யோசிச்சிக்கிட்டே வாயை விட்டுட்டாரு... விடுங்க..."

"அதான் எனக்கு கஷ்டமாப்போச்சு... அவருக்கிட்ட எதுத்து பேசினதே இல்ல... அப்பாவுக்கு தெரியக்கூடாதுன்னு சொன்னதும் என்னை அறியாம வார்த்தையை விட்டுட்டேன்... அப்புறம் வீணாவுல சூடாக வேண்டான்னுதான் கட் பண்ணிட்டேன்..."

"சரி விடுங்க... மாமா அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டாங்க... கூப்பிட்டு சொல்லுங்க..."

"ம்க்கும்... நீயே பேசு... நா பேசினா எதாவது வில்லங்கம் வந்திரும்... அதுவும் அந்தப் பொம்பள எடுத்தா அப்புறம் ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசிப்புடுவேன்..."

"ஆஹ்கா... இந்த சண்டை எம்புட்டு நேரமின்னு பாப்போம்..." என்றபடி மொபைலை எடுத்தாள்.

தே நேரம்...

"என்ன உங்க தம்பி இல்லைன்னுட்டாரா?" கடுப்பாகக் கேட்டாள் சித்ரா.

"ம் அவனுக்கிட்ட இல்லையாம்... மாமனாருக்கிட்ட அவன் இதுவரைக்கும் பணமின்னு கேட்டதில்லையாம்... பேசினதில்லையாம்..."

"ஓ.... இருந்தாலும் கொடுக்க மாட்டாருங்க... என்னவோ மகாவுக்கு பணம் கட்டுறத நிப்பாட்டுனா எதுனாச்சும் சொல்லுவோமோன்னு தொடர்ந்து கட்டுறாரு... இனி வேண்டான்னு சொல்லிடுங்க... கடன ஒடன வாங்கி நாம கட்டிப்போம்... அவசரத்துக்கு ஒதவாத அண்ணந்தம்பி இருந்தா என்ன இல்ல..." அவள் முடிக்கும் முன்னர் "சித்ரா..." என்று கத்தினான்.

"எதுக்கு கத்துறீக..? சொன்னா என்ன தப்பு...? பெரியவுக அனுபவிச்சித்தானே சொல்லி வச்சாக... பொறந்த பாசத்துல எங்கிட்ட கத்துறாக..." மூக்கைச் சிந்தினாள்.

"இங்க பாரு... எனக்கு அவன் எல்லா விதத்துலயும் உதவித்தான் இருக்கான்... சின்ன அமொண்டா இருந்தா பொரட்டிக் கொடுத்திருவான். இது பெரிய அமொண்ட்... அவனும் இப்பத்தான் வீடு கட்டி லோனு அது இதுன்னு கட்டிக்கிட்டு இருக்கான்... அவனுக்கிட்ட கேட்டதே தப்பு... கண்ணதாசனுக்கிட்ட கேக்கச் சொன்னான்... அவனுக்கிட்ட பேசலாம்..."

"ஆமா உங்க தம்பி வூடு கட்டுனப்போ மாமனாரு கொடுக்காமயா கட்டிப்புட்டாரு... கண்ண மச்சானுக்கிட்ட கேக்காதீக... அது உங்கப்பாக்கிட்ட சொன்னா உடனே எதாவது சொல்லி கடுப்பேத்துவாரு..."

"அப்புறம் யாருக்கிட்ட கேக்குறது...?" என்றபோது போனடித்தது. நம்பரைப் பார்த்ததும் 'அவந்தான் கூப்பிடுறான்... இந்தா நீயே என்னன்னு கேளு..."

"நானு... உங்க தம்பிக்கிட்ட... எதுனாச்சும் பேசினா நாக்கப் புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை பேசிப்பிடுவேன். அப்புறம் நீங்க கத்துவீக... மகாவ என்னன்னு கேக்கச் சொல்லுங்க..." என்றாள்.

"மகா... இங்க வாடா... சித்தப்பா பேசுறான் என்னன்னு கேளு" எனக் கூப்பிட்டுக் கொடுத்தான்.

"அலோ சித்தப்பா..."

"ஏய் மகாக்குட்டி நா சித்தி பேசுறேன்..."

"அய் சித்தியா... எப்படியிருக்கீங்க... திவ்வி முகி என்ன பண்ணுறாங்க...?"

"நல்லா இருக்கேன்டா... ஆமா அப்பா எங்க... பேச மாட்டாராமா?"

"ஏய்... அப்படியெல்லாம் இல்ல சித்தி... சித்தப்பான்னதும் எங்கிட்ட பேசவாக்கும்ன்னு கொடுத்தாக... இருங்க கொடுக்கிறேன்..." என்றபடி "அப்பா சித்தி... உங்ககிட்டதான் பேசணுமாம்" என்று கொடுத்தாள்.

'ஆமா... இவுக என்ன பஞ்சாயத்தாரா? படிச்ச திமிரு... அதான் அவனைக் கட்டிக்குவேன்னு நின்னு கட்டுனா... அவளுக்கு தலயில நல்லா எழுதியிருக்கான்... நாந்தேன் இப்படி கஷ்டபட வேண்டியிருக்கு' என்று சித்ரா புலம்ப அவளை முறைத்தபடி போனை வாங்கி "என்னம்மா" என்றான்.

'ம்க்கும்... அம்மா போட்டுருவாக அம்மா....' சித்ரா முகவாயை தோளில் இடித்துக் கொண்டாள்.

"மாமா... நீங்க அப்பாக்கிட்ட பணம் கேக்கச் சொன்னீங்களாம்... அவுக அப்பாக்கிட்ட ரொம்ப பேச மாட்டாக... நா வேணுமின்னா கை மாத்த கேக்குறேன்... கொஞ்ச நாச்சென்டு கொடுக்குறதுன்னா குறைஞ்ச வட்டிக்கு கேப்போம்... உங்களுக்கு கொடுக்க எங்ககிட்டயும் இப்ப பணமில்லை... ரெண்டு பேரும் லோன் கட்டிக்கிட்டு வர்றது உங்களுக்குத் தெரியும்... அப்புறம் மத்த செலவெல்லாம் இருக்குல்ல மாமா... நீங்க மத்த வேலையைப் பாருங்க... அப்பாக்கிட்ட நா வாங்கித் தாறேன்..."

"அம்மாடி... உனக்கு தங்க மனுசும்மா... அவனைப் பத்தி எனக்குத் தெரியும்... என்ன பேச்சு கொஞ்சம் சூடான மாதிரி ஆயிருச்சு... கைமாத்தா வேண்டாம் வட்டிக்குன்னாலும் பரவாயில்லை... ரெண்டு மூணு மாசத்துல பொரட்டிக் கொடுத்துருவோம்..."

"அது பெரட்டிக்குவோம் மாமா... அவசரத்துக்கு அப்பாக்கிட்ட வாங்கிடலாம்...  டோண்ட் ஒர்ரி மாமா"

"ரொம்ப நன்றிம்மா... என்ன கோபமா இருக்கானோ..?"

"உங்க தம்பிதானே மாமா... அவரோட கோபம் எம்புட்டு நேரம்... நாளைக்கி போன் பண்ணி பேசிடுவாரு... அப்ப நான் வைக்கிறேன்..."

போன் கட்டானதும் "மவராசி... பணம் பெரட்டித்தாறேன்னு சொல்லிட்டா... உங்கண்ணனுக்கிட்ட கூப்பிட்டு மத்த காரியத்தை பாக்கச் சொல்லு..." என்றான் சந்தோஷமாக.

"அட பரவாயில்லையே... எல்லாருக்கும் நல்லவளா ஆயிடுறா..." என்றாள்.

"அதுக்கு மனசு வேணும்" என்றபடி அவளின் பதில் எப்படி இருக்கும் என்பதால் எழுந்து கொண்டான்.

"ஆமாமா... எங்களுக்கு அந்த  மனசில்லைதான்.... அது சரி என்ன பேசிப்பிட்டியன்னு உங்க தம்பியாரு கோவமா இருக்காராமாம்... சரி நமக்கு எடம் வாங்கணும்.. பணம் வாங்கிக் கொடுத்தா சந்தோஷம்தான்..." என்று சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போது பதில் சொல்லாமல் வெளியே கிளம்பினான்.

"அப்பா... குமரேசன் பேசுறேன்..."

"என்னப்பா... எல்லாரும் நல்லாயிருக்கீகளா?"

"இருக்கோம்... ஸ்கூல் லீவுக்கு அவுக மூணு பேரும் அங்கிட்டு வாறாகளாம்... கிளம்புறப்போ போன் பண்ணுறேன்... பஸ்ஸ்டாண்டுல வந்து ஆட்டோ வச்சி கூட்டிக்கிட்டுப் போங்க..."

"இங்க வருதுகளா... ரொம்ப சந்தோஷமா இருக்கு... " என்றவர் போனைக் காதில் வைத்தபடி காளியம்மாளைப் பார்த்து "ஏய்... ஏய்... சின்ன மருமவளும் புள்ளகளும் லீவுக்கு இங்க வருதுகளாம்.. பேரப்பிள்ளைக இங்க ஓடி ஆடி திரியப் போகுதுகன்னு நினைச்சா... எம்புட்டு சந்தோஷமா இருக்கு தெரியுமா... " சந்தோஷமாக கத்தியவர் எதிர் முனையில் மகன் சிரிப்பதைக் கேட்டதும் "ஏம்ப்பா... நீயும் ஒரு நா லீவு போட்டுட்டு வந்துட்டுப் போயேம்ப்பா... அம்மா கண்ணுக்குள்ளே நிக்கிறான்னு இன்னிக்கித்தான் சொல்லிக்கின்னு இருந்தா..."

"இப்ப முடியாதுப்பா... பொங்கலுக்கு வாறேன்..."

"ம்...சரிப்பா... வேல வேலயின்னு அலயாம உடம்பையும் பாத்துக்கப்பா... சொவரிருந்தாத்தான் சித்ரம் வரைய முடியும்..."

"ம்... சரிப்பா... அம்மாவைக் கேட்டேன்னு சொல்லுங்க..."

"இருப்பா அவகிட்ட ரெண்டு வார்த்தை பேசினியன்னா சந்தோசப்படுவா..." என்றவர் "இந்தா" என மனைவியிடம் கொடுத்தாள்.

"அப்பா... நல்லாயிருக்கியா" என பேச ஆரம்பித்து சில நிமிடங்கள் மகனுடன் பேசிவிட்டு போனை வைத்துவிட்டு வந்தாள். 

"ஏலா... பேரப்பிள்ளைக வருதுக பாத்துப் பாத்து சமச்சிப் போடணும்... ஆமா சொல்லிப்புட்டேன்... பெரிய மாப்ள கடல கொண்டாந்து கொடுத்தாருல்ல... அதை நல்லா காய வையி... வந்ததும் அவிச்சிக் கொடுக்கணும்... பொரியரிசி வறுத்து வையி... சத்துமாவுக்கு அரச்சிக்கிட்டு வாறேன்... வந்தா பெசஞ்சி திங்கிங்க... என்ன இந்த அயிசுப் பெட்டிதான் இல்ல... இருந்தா அம்புட்டையும் வாங்காந்து அடஞ்சி வச்சிடலாம்... எடுத்து எடுத்து சாப்பிட்டுக்குங்க..." என கந்தசாமி பேசிக் கொண்டே போக, 'பார்றா இந்தக் கெழவனை... எம்புட்டு சந்தோஷம்... அதுக வந்துட்டு போற வரைக்கும் இவரோட ஆட்டம் தாங்க முடியாதே...' என்று மனதுக்குள் நினைத்த காளியம்மாள். "ஆமா... அதுக வந்து டிவியைக் கட்டிக்கிட்டு அழப்போகுதுக... என்னமோ உங்க கூட வயலுக்கு வந்து கருதறுக்க ஒதவப் போற மாதிரி குதிக்கிறீக..." என்றாள் நக்கலாக.

"என்ன இப்புடிச் சொல்றே.... அதுக இங்க வர்றதே சந்தோஷம்தானே..." என்று சிரித்த போது "சித்தப்பா உங்களுக்கு வெசயந் தெரியுமா?" என்றபடி வந்தான் கண்ணதாசன்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தாத்தா பாட்டியின் பேரகுழந்தைகள் நேசம் மனதை நிறைக்கிறது..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே
தொடருங்கள்
தொடர்கிறேன்
தம +1

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இது போல வீடு பிரிப்பது பல வீடுகளில் நடக்கும் ஒன்றை இத்தனை யதார்த்தமாக வட்டார வழக்கில் மிக அருமையாகக் கொண்டு செல்கின்றீர்கள்...அபியைப் போன்ற நல்ல உள்ளங்களும் இருப்பதால் தான் குடும்பங்களும் எப்படியோ பிணைக்கப்பட்டுத் தழைக்கின்றன...தொடர்க்ன்றோம்!

KILLERGEE Devakottai சொன்னது…


கிராமிய வார்த்தைகள்....
த,ம 1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தொடரைத் தொடர்கிறோம். நன்றி.

Yarlpavanan சொன்னது…

ஊர்க்/ கிராமத்துக் கதை
ஒரு தனிச் சுவை
தொடருங்கள்