மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 21 டிசம்பர், 2013

விழாக்களில் கரைந்த வெள்ளி

வார இறுதி நாட்களில் அறையை விட்டு எங்காவது செல்வது என்றாலே கொஞ்சமல்ல நிறையவே யோசிப்பேன். பெரும்பாலும் விடுமுறை நாட்களில் எனது நேரங்களை கணிப்பொறி களவாடிக் கொண்டுவிடும். எதாவது படிப்பது, எழுதுவது, நண்பர்களுடன் அரட்டை, வீட்டிற்கு ஸ்கைப்பில் பேச்சு என இரண்டு தினங்களும் விரைவாகக் கழியும்.

அபுதாபியில் ஐயப்பன் பூஜை, பிரதோஷ பூஜை, ஆதிபராசக்தி பூஜைகள் என நடக்கத்தான் செய்கிறது. ஆனால் நான் இதுவரை சென்றதில்லை. ஐயப்பன் பூஜை மிகவும் அருமையாக இருக்கும் என்பார்கள் ஆனால் சென்றதில்லை. இரு தினங்களுக்கு முன்னர் அண்ணன் ஒருவர் இந்தத் தடவை நீ கண்டிப்பாக வருகிறார் என்று சொல்லியிருந்தார். நேற்றுக் காலை கிளம்பி மகர பூஜை விழா நடந்த இந்தியன்  கலாச்சார மையத்துக்கு வாடகை டாக்ஸியில் கிளம்பினோம்.

விழா நடந்த அரங்கத்தில் மலையாளிகள், தமிழர், வட இந்தியர் என்ற வரிசையில் கூட்டம் கூடியிருந்தது. மிகவும் அருமையானதொரு பூஜை. சபரிவாசனை அபுதாபிக்கே கொண்டு வந்தது போன்றதொரு அற்புதமான மேடை, திருவிளக்குப் பூஜைக்குப் பின்னர் தீப ஆராதனை முடிந்ததும் கச்சேரி... பஜனைப் பாடல்கள் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மதியம் வாழை இலை போட்டு கேரள பதார்த்தங்களுடன் மிகவும் அருமையான சாப்பாடு. கச்சேரியை மூன்று மணி வரை பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பினோம்.

மாலை அபுதாபி இந்தியன் பள்ளியில் பாரதி நட்புக்காக அமைப்பு நடத்திய இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சிறப்புச் சொல்லரங்கம் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் தலைமையில் நடந்தது. சொல்லரங்கத்தின் தலைப்பு 'இன்றைய திரைப்படங்களின் வெற்றிக்கு காரணம்... கதாநாயகனே, கதையே. இயக்குநர்களே, இசையே. எப்பவும் போல் விழா தாமதமாகத்தான் தொடங்கியது. 

வரவேற்புரைக்குப் பிறகு குழந்தைகளின் நடனம்... பின்னர் சொல்லரங்கம்... இசையே என்று வாதிட்டார் லியோனியின் இல்லத்தரசி, இயக்குநர்களே என்று கர்ஜித்தார் வேலம்மாள் பள்ளியின் துணை முதல்வர் விஜயகுமார், கதையே என்று கொந்தளித்தார் குமரி ஆதவன், நடிகர்களே என்று அருமையாக விவாதித்தார் கவிஞர் இனியவன். மூன்று மணி நேரத்துக்கு மேல் சிறப்பாக அனைவரையும் சிரிக்க வைத்தது சொல்லரங்கம். 

ஆனால் இன்றைய திரைப்படத்தின் வெற்றிக்கு என்பதை மறந்து விட்டு பொதுவாக திரைப்படத்தின் வெற்றிக்கு எனத்தான் பேசினார்கள். பெரும்பாலும் பழைய படங்களைப் பற்றியே பேசினார்கள். பல தகவல்களை தவறுதலாகச் சொன்னார்கள். சிரிப்பும் லியோனியின் பாடல்கள் கொடுத்த சுவையும் எல்லோரையும் ரசிக்க வைத்ததால் தவறுகள் தனித்துத் தெரியவில்லை.

சொல்லரங்கம் குறித்து விரிவாக நாளை பகிர்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

கவியாழி சொன்னது…

சிரிப்பும் லியோனியின் பாடல்கள் கொடுத்த சுவையும் எல்லோரையும் ரசிக்க வைத்ததால் தவறுகள் தனித்துத் தெரியவில்லை.//eஎப்படியோ இந்திய சொந்தங்களையும் காண முடிந்தல்லவா?

Unknown சொன்னது…

அருமையான பகிர்வு!வெளி நாடுகளில் அதிலும் குறிப்பாக அரபு நாடுகளில் இந்து விழாக்கள் சிறப்பாக நடை பெறுவது சந்தோஷம்!இங்கிலாந்து மற்றும்,ஐரோப்பிய நாடுகளில் வியாபாரம் தான் நடக்கிறது/களை (கல்லா)கட்டுகிறது!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

waiting...

அம்பாளடியாள் சொன்னது…

சிறப்பானதொரு பகிர்வு .பழைய படங்களை மட்டும் அல்ல
இதற்கு முன்னரும் லியோனி அவர்களின் பட்டிமண்றத்தில்
வைத்து பழைய பாடல்களும் கிண்டலடலடிக்கப் பட்டுள்ளது.
இதுவே தான் காலத்தின் கொடுமை என்று நினைக்கத் தோன்றுகின்றது .
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரா .

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

காத்திருக்கிறேன் நண்பரே
த.ம.5

r.v.saravanan சொன்னது…

சொல்லரங்கம் குறித்து சொல்லுங்கள் குமார்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இப்படி வெளி நாட்டில் வசிக்கும்போது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதும் ஒரு வித சுகம் தான்...

தில்லியிலேயே இதை ருசிக்க முடிகிறதே.