மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 2 டிசம்பர், 2013

சினிமா: கதையின் நாயகர்கள்


MGR-SIVAJI movies to be ditialize

ந்தியச் சினிமாவில் தமிழ் சினிமா ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். இந்தச் சினிமா எத்தனை ஜாம்பவான்களைக் கொடுத்திருக்கிறது என்பதையும் நாம் அறிவோம். குறிப்பாக தமிழகத்திற்கு முதல்வர்களைக் கொடுத்த சினிமா இதுவல்லவா. இன்னும் சிலருக்கு முதல்வர் ஆசையை... கனவை விதைத்து வைத்திருப்பதும் இந்தச் சினிமாதானே. 

இந்தியச் சினிமா நூற்றாண்டு விழா பல பிரச்சினைகளையும் குளறுபடிகளையும் கடந்து சில மாதங்களுக்கு முன்னர் அம்மாவின் புகழ்பாடும் விழாவாக அமைந்தது. செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமை மூதறிஞர் கலைஞர் ஐயா அழைக்காதது போல இந்த் சினிமா விழாவுக்கு தமிழ் சினிமாவின் முதுகெலும்புகள் சிலரை அழைக்க விடாமல் அம்மா நடத்திக் காட்டினார் என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு இமையங்கள் தமிழ் சினிமா ஆட்சிப் பீடத்தில் இருந்தார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சிம்புவின் விரல்வித்தை போல் மூக்கில் ஸ்டைலாக விரலை ஆட்டிச் சமாளித்து ரசிகர்களைப் பெற்று வைத்திருந்தார். நடிகர் திலகமோ தனது நவரச நடிப்பால் சிங்க நடையால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார். ஆனால் நம்பர் ஒன் என்ற இடத்தை மக்கள் திலகமே கையில் வைத்திருந்தார். இவர்களது காலத்தில்தான் ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர், எஸ்.எஸ்.ஆர், நாகேஷ், என்.எஸ்.கே., சந்திரபாபு, நம்பியார், அசோகன் என பல ஜாம்பவான்கள் ஜொலித்தார்கள். எல்லோருமே அவரவரின் திறமையால் வெற்றிக் கொடி நாட்டியவர்கள்தான். இவர்கள் காலத்திலேயே சிவக்குமாரும் களத்தில் இறங்கிவிட்டார்.

இவர்களுக்கு அடுத்த தமிழ்ச் சினிமாத் தலைமுறை நடிகர்களாக இறங்கியவர்களில் பேர் சொல்லும் பிள்ளையாக இருவர் நின்று விட்டனர். ஒருவர் எம்.ஜி.ஆர். போல் என்றால் மற்றொருவர் சிவாஜியைப் போல்... ஆம் அந்த இரண்டு நட்சத்திரங்கள் ரஜினியும் கமலும்... ஆரம்பத்தில் இருவரும் இணைந்தே நடித்தார்கள். பின்னர் தனித்தனியாக நடிப்பதென முடிவு செய்து களம் இறங்க நல்ல பலன் கிடைத்தது. இங்கும் தனது ஸ்டைலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ரஜினியாகவும் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் கமலாகவும் இருக்க , இங்கும் நடிப்பை விட ஸ்டைலே சிறந்ததாகி முதலிடத்தை ரஜினி தக்க வைத்துக் கொண்டார். முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை என பல படங்களில் ரஜினி என்ற அழகான நடிகனைப் பார்க்க முடிந்தது. இயக்குநர் எஸ்.பி,.முத்துராமன் ரஜினியின் மீது குண்டுகளைக் கட்டி நடிப்பை இறக்கி... ஒதுக்கி வைத்துவிட ரஜினி என்னும் மகா நடிகன் மறைந்து ஸ்டைலால் மட்டுமே கலக்கும் சூப்பர் ஸ்டார் நிலைத்துவிட்டார். கமலைப் பொறுத்தவரை நடிப்புக்காக எதை வேண்டுமானாலும் இழப்பார் என்ற பெயரைப் பெற்ற போதிலும் கஷ்டப்பட்டு நடித்தாலும் இரண்டாம் இடத்தில்தான் இருக்கிறார். ரஜினி தினத்தந்தி மாதிரி எல்லா இடத்திலும் வாசிக்கப்படுவார். கமலோ தினமணி மாதிரி குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாசிக்கப்படுவார். இருந்தும் தமிழ்ச் சினிமாவின் முக்கிய முதுகெலும்பாய் இருவரும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்த இரு வெள்ளி நட்சத்திரங்களுக்கு இடையில்தான் விஜயகாந்த, சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன், முரளி, இராமராஜன் என்ற நிறைய நட்சத்திரங்கள் ஜொலித்தன. குறிப்பாக மோகன், இரு துருவங்களுடனும் போட்டி போட்டு ஜெயித்தவர் என்றே சொல்லலாம். எத்தனை வெள்ளிவிழாப் படங்கள்... எத்தனை அழகான பாடல்கள். இதேமாதிரித்தான் மற்றவர்களும் தங்களது தனித்துவத்தால் ஜொலித்தார்கள். மோகன் விட்டுச் சென்ற இடத்தில் வெற்றி கொடி நாட்டியவர் இராமராஜன். ராஜாவின் தேனான இசை இவரின் படங்களுக்கு மிகப்பெரிய பலம். இவர் பட்டி தொட்டியெல்லாம் தன் கைக்குள் வைத்திருந்தார். இவரது படம் வெளியானால் மற்றவர்களின் படங்கள் தள்ளிப் போன காலமும் உண்டு. இந்தக் காலகட்டத்தில்தான் பாக்யராஜ், ராஜேந்தர் என்ற இரண்டு ஜாம்பவான்களும் வெற்றிப்படங்களைக் கொடுத்தார்கள் என்பதை எல்லோரும் அறிவோம்.

அடுத்த தலைமுறையாக தல தளபதி ஆட்சிப் பீடத்தில் ஏற, சூர்யா, விக்ரம் என்ற இரண்டு மகா கலைஞர்களுக்கு இரண்டாம் இடத்தில்தான் ஆசனம் கிடைத்தது. விஜயைப் பொறுத்தவரை ஆரம்ப காலங்களில் அப்பாவின் படங்களாலும், சங்கவி, யுவராணி, சுவாதியின் கவர்ச்சியாலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டாலும் அதன் பின்னான காலங்களில் தன்னை ஒரு முழு நடிகனாக மாற்ற மிகவும் உழைத்தவர். இன்று சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு போட்டி போடுகிறார் என்றால் அந்த இடத்துக்கு வருவதற்காக தன்னைச் செதுக்கியவர், ஆனால் அஜீத்தின் நிலையோ வேறு... எந்த சினிமாப் பின்புலமும் இல்லாமல்... ஏற்றிவிட ஏணி இன்றி... தானே ஏறியவர்... விபத்து... ஆபரேசன்... தோல்விப் படங்கள் என எத்தனை சறுக்கல்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல சமீபத்திய படங்கள் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்துள்ளன. அடிபட்டுப் பட்டு வந்ததாலோ என்னவோ அவரது பேச்சில் அப்போது இருந்த வேகம் குறைந்து விவேகமாய் மனதில் பட்டதைப் பேசி எல்லோரிடமும் நல்ல பெயரை வாங்கி வைத்துள்ளார். இன்று இருவரும் முதலிடத்துக்கான ரேஸில்தான் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மத்தியில் நடிக்கவே தெரியலையே என்ன கொடுமை சரவணா என்று நினைக்க வைத்த சூர்யா இப்போது பின்னிப் பெடலெடுக்கிறார். அடுத்த கமல் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பால் எல்லோரையும் கவர்கிறார் விக்ரம். இவர்களோடு வந்தவர்கள் வந்தார்கள் சென்றார்கள் என்ற நிலையில்தான்  தமிழ்ச் சினிமா இருந்தது.

அந்த நேரத்தில்தான் அடுத்த தலைமுறை நடிகர்களாக களம் இறங்கினார்கள் தனுசும் சிம்புவும் இருவருக்கும் சினிமாக் குடும்பப் பின்னணி இருந்தது கூடுதல் பலம். இதில் தனுஷ் வித்தியாசமான நடித்து ஒல்லிப்பிச்சானாக இருந்தாலும் பெயர் சொல்லும்படியான இடத்தைப் பிடித்துவிட்டார். சூப்பர்ஸ்டாரின் மாப்பிள்ளை என்ற போதும் அலட்டலில்லாமல் தன் பாதையில் பயணித்து இன்று அமிதாப்பச்சனுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். டான்ஸ் என்றாலே சிம்புதான் என்ற அளவுக்கு ஆட்டத்தில் பட்டையை கிளப்பும் சிம்பு, தனது மன்மத செய்கைகளால் நிறைய கெட்டபெயரைச் சம்பாரித்து வைத்துள்ளார். கொஞ்சம் விண்ணைத் தாண்டி வந்தால் தனுசுக்கு போட்டியான நடிகர் சிம்புதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இவர்களுக்கு இடையே நிறைய... நிறைய... பேர் தெரியாத நடிகர்கள் வந்தும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். தங்கள் திறமையால் தனியிடம் பிடித்து அமர்ந்தவர்களில் விஷால், ஆர்யா, கார்த்திக், ஜீவா, அதர்வா முரளி இப்படி சிலரை முக்கியமாகச் சொல்லலாம். எத்தனை புதுமுகங்கள்... எத்தனை புது முக இயக்குநர்க்ள் வந்தாலும் தொடர்ந்து நிற்பவர்கள் ஒரு சிலரே.


அட இவங்களை விட்டுட்டு பதிவை முடிச்சா நல்லாயிருக்காதுல்ல.... அதாங்க இப்போ சத்தமேயில்லாமல் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி மற்றும் சிவ கார்த்திகேயன் இருவரையும்தான். விஜய் தனது முத்திரை நடிப்பால் நிலையான இடத்தில் அமர்ந்து விட்டார். அதேபோல் தனது டயமிங் நகைச்சுவையால் முன்னணி இடம் பெற்று கோடிகளை சம்பளமாக்கி ஆடிக்கார் வாங்கி அசத்தலாய் தன் இடத்தைப் பிடித்திருப்பவர் சிவா. இருந்தாலும் நகைச்சுவையை மட்டுமே வைத்துக் கொண்டு சிவாவால் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்றைய சினிமா உலகம் போட்டி நிறைந்த உலகமாகிவிட்டது. மது, மாதுக்களை மையமாக வைத்து கதைகள் வருவது தமிழ்ச் சினிமாவின் கதை வறட்சியையே காட்டுகிறது. என் கதையைச் சுட்டு படம் எடுத்துட்டான்... என்னை ஏமாத்திட்டான்னு உதவி இயக்குநர்களின் அழுகுரல்கள் கோடம்பாக்க வீதிகளில் ஏராளமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு நடிகனுக்கு பிரச்சினை என்றால் ஒரு சாரார் ஒதுங்கி நின்று கைகொட்டி சிரிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. ஒரு இயக்குநரை மற்றொரு இயக்குநர் தாக்கிப் பேசுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படியே போனால் தமிழ்ச் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வை நோக்கிப் பயணிக்கும் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்.


கடைசியாக மலையாளம்: இப்போது எனக்குள் மலையாளச் சினிமா பார்க்கும் மோகம் அதிகரித்துள்ளது. அன்னாவும் ரசூலும் பார்த்த கையோடு ஆமென் பார்த்தேன். அன்னா அளவுக்கு ஆமென் என்னுள் பாதிக்கவில்லை. அன்னாவில் ஆண்ட்ரியாவை ஒரு தேவதையாக காட்டியிருப்பார்கள். அதிக வசனம் இல்லாமல் கண்களாலேயும், முகபாவனையாலும் கலக்கியிருப்பார். ஆமென்னில் சுப்ரமணியபுரம் சுவாதி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருப்பார். மலையாளச் சினிமாவுக்கு கவனிக்கப்பட வேண்டி நடிகர்கள் சிலர் கிடைத்திருப்பது சந்தோஷமான விஷயம். அந்த வரிசையில் பகத் பாசில். ஆள் ஒண்ணும் அப்படி அழகும் இல்லை... உயரமும் இல்லை... ஆனால் நடிப்பில் சிகரம் தொடும் காலம் தூரமில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. எதார்த்த நடிகன்... தமிழில் தனுஷ் போல... நேற்று 'தட்டாத்தின் மறையாத்து' பார்த்தேன். பார்க்கலாம்... இந்து முஸ்லீம் லவ் ஸ்டோரி... நல்லாத்தான் இருக்கு. எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் டாஸ்மாக்கையும் குத்துப்பாடலையும் நம்பும் தமிழ்ச் சினிமாவில் கதை பஞ்சம் இருக்கும் போது இந்த மலையாளிகளுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகான கதைகள் கிடைக்கின்றன என்பதுதான். அற்புதமான கதையை குத்துப்பாடல்கள் இல்லாத கவிதையாய் இயக்குகிறார்கள்.

-'பரிவை' சே.குமார்

18 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு அலசல்... பாராட்டுக்கள்...

ராஜி சொன்னது…

சிவாஜி, எம்ஜிஆருக்கு முன் இருந்தவங்களை விட்டுட்டீங்களே!

துரை செல்வராஜூ சொன்னது…

நல்லதொரு ஆய்வு!..
மிகவும் ரசித்தேன்.
சில தகவல்கள் தங்கள் -
கை வண்ணத்தில் ஒளிர்கின்றன!..
வாழ்த்துக்கள்!..

தேன் நிலா சொன்னது…

நல்லதொரு பார்வை..!

சினிமாவில் நடைபெறும் முன்னணி என்ற போட்டியில் என்றுமே தனி ஒருவர் சாதித்ததில்லை..இருவர் என்ற கூட்டணியே வெற்றிபெற்ற சினிமா உலகமாக இருக்கிறது... எதற்குமே இரண்டு துருவங்கள் உண்டு...

+++++++++++


இன்று எனது வலையில்:

வணக்கம்...

நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

சரியா...?

உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

அப்போ தொடர்ந்து படிங்க...

ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

Unknown சொன்னது…

நல்லதோர் அலசல்!நன்றாக விமர்சித்திருக்கிறீர்கள்.ஒவ்வொரு நடிகரையும் எடை போட்டு............///மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சிம்புவின் விரல்வித்தை போல் மூக்கில் ஸ்டைலாக விரலை ஆட்டிச் சமாளித்து ரசிகர்களைப் பெற்று வைத்திருந்தார்.///ஒப்பீடு சரி இல்லையே?அது ஸ்டைல்!இது........................?!

Menaga Sathia சொன்னது…

நல்லதொரு விமர்சனம்..பாராட்டுக்கள்!!

Jayadev Das சொன்னது…

\\இந்தக் காலகட்டத்தில்தான் பாக்யராஜ், ராஜேந்தர் என்ற இரண்டு ஜாம்பவான்களும் வெற்றிப்படங்களைக் கொடுத்தார்கள் என்பதை எல்லோரும் அறிவோம்.\\ பாக்யராஜ், ராஜேந்தர் என்ற இரண்டு ஜாம்பவான்களும் கிராமராஜனின் வரவுக்கு ரொம்ப முன்னாடியே வெற்றிக் கொடி நாட்டியவர்கள், வரலாற்றை மாற்றி எழுத வேண்டாம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க ராஜி அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எனக்குத் தெரிந்த வரை சொன்னேன்... ரஜினி, கமல்தான் நமக்கு ஆரம்பம்... எம்.ஜி.ஆர், சிவாஜி எல்லாம் தொலைக்காட்சியில்தான்... முந்தியவர்களைச் சொல்ல ஆசைதான் விவரம் தெரியாமல் காலை விடக்கூடாது அல்லவா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க துரை அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…



வாங்க சகோ. யோகராஜா...
இது ஒப்பீடு அல்ல... தலைவரும் விரல் வித்தை செய்வார் என்பதைச் சொல்ல எளிதில் புரியும் விதமாக சிம்புவைச் சொன்னதுதான்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…



வாங்க சகோ. யோகராஜா...
இது ஒப்பீடு அல்ல... தலைவரும் விரல் வித்தை செய்வார் என்பதைச் சொல்ல எளிதில் புரியும் விதமாக சிம்புவைச் சொன்னதுதான்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுப்புடு அவர்களே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மேனகா அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜெயதேவ் தாஸ் அவர்களே....

வரலாற்றை மாற்றி எழுதினால் எதாவது கிடைக்குமா என்ன... ரஜினி, கமல் காலத்தில் வந்தவர்களைச் சொன்னபோது இருவரையும் தனியே சொல்லக் காரணம் இருவரின் தனித்துவம். நன்றாகப் பாருங்கள்... ரஜினி கமல் பற்றிச் சொல்லி வரும்போதுதான் இந்தக் காலகட்டத்தில் என சில நடிகர்களைச் சொல்லி அதற்கு கீழே இவர்களையும் சொல்லியிருப்பேன். ராமராஜன் எனக்கு பக்கத்து வீட்டுக்காரரா என்ன... மேலும் ராமராஜனுக்கு முன்பாக வந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் ரஜினி, கமலுக்கு முன்பாக இருவரும் வெற்றிக் கொடி நாட்டினார்களா என்பது எனக்குத் தெரியாது,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

செங்கோவி சொன்னது…

எம்.ஜி.ஆர் டூ சிவகார்த்திகேயன்..அலசி ஆராய்ஞ்சுட்டீங்களே..2-3 பதிவா பிரிச்சுச் சொல்லியிருக்கலாம்.

Unknown சொன்னது…

நல்லதொரு அலசல்... பாராட்டுக்கள்...

Kayathri சொன்னது…

அட தம்பீ....கல்லூரிக்கு கட் அடிச்சிட்டு பசங்க சினிமா போவீங்க தெரியும்...இப்ப அலுவலகம் செல்லும்போது எப்படி இப்படி அலச முடியுது...? :) நல்லதொரு அலசல்...தொடரட்டும்..வாழ்த்துகள். (சிவாஜி, கமல்..சூர்யா, சிம்பு..நம்ம வோட்டு)

Jayadev Das சொன்னது…

@ சே. குமார்

\\வரலாற்றை மாற்றி எழுதினால் எதாவது கிடைக்குமா என்ன... \\ எதுவும் கிடைக்காது, விவரத்தை சரியாக எழுதலாமே?


\\மேலும் ராமராஜனுக்கு முன்பாக வந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் ரஜினி, கமலுக்கு முன்பாக இருவரும் வெற்றிக் கொடி நாட்டினார்களா என்பது எனக்குத் தெரியாது.\\ ரஜினி, கமலுக்கு முன்பாக இருவரும் வெற்றிக் கொடி நாட்டினார்கள் என்று நானும் சொல்லவில்லை. [பழைய வரலாற்றை மாற்ற வேண்டாம் என்பதற்காக தற்போதையதையும் மாற்றி எழுத வேண்டுமா?]

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சினிமா பற்றிய நல்ல அலசல்.....

த.ம. 4