மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 5 டிசம்பர், 2019

மனசு பேசுகிறது : ஜோதிஜியின் 5 முதலாளிகளுக்காக...

ஜோதிஜி அண்ணன் அவர்களின் 5 முதலாளிகளின் கதை அமேசான் கிண்டில் 'Pen to Publish - 2019' போட்டியில் இருக்கிறது. நானெல்லாம் கிண்டிலுக்குள் செல்வதே இல்லை என்றாலும் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் பொருட்டு அதிலும் இணைந்தேன்... முதல் முயற்சியாய் என் நாவல் ஒன்றையும் இணைத்துள்ளேன். என்னால் ஜோதி அண்ணனின் புத்தகத்தை எடுக்க இயலவில்லை என்பதால் கிண்டில் Reader வைத்திருக்கும் நண்பர் மூலமும் முயற்சித்தோம்... அவராலும் எடுக்க இயலவில்லை. பல விதத்தில் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம்... வெற்றி மட்டும் இதுவரை கிட்டவில்லை... போட்டியில் அண்ணனுக்கு வெற்றி கிட்டட்டும்.

வாசிக்காத ஒரு புத்தகத்தைப் பற்றி என்ன எழுதுவது..?  

வாசித்து எழுதலாம் என்றுதான் இருக்கிறேன். இதுவரை அதற்கான முயற்சிகள் முயற்சிகளாகவே இருக்கின்றன... அதனால் மற்றவர்களிடம் கொண்டு செல்லும் விதமாக இக்கட்டுரை... இது வாசிக்காத ஒரு நூலுக்கான கட்டுரைதான்.

மற்றவர்களின் விமர்சனங்களை வாசித்த விதத்தில் திருப்பூருக்கு வந்தது முதல் இன்றுவரை தான் நேர்கொண்ட பிரச்சினைகள், சவால்கள், அதன் பின்னான வெற்றிகள், சந்தித்த துரோகங்கள் என விரிவாய் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. அவரின் எழுத்து பற்றி நாமறிவோம்... அது எப்பவும் விவரங்களுடன் விரிவாய்ப் பேசும் எழுத்து... ஊருக்குப் போய் வந்ததைக்கூட மிக அழகான கட்டுரையாக்கும் ஆற்றல் படைத்தவர் அவர். எனவே 5 முதலாளிகளின் கதை... கண்டிப்பாக புதிதாக திருப்பூருக்குப் பணிக்குச் செல்வோருக்கு மட்டுமின்றி எல்லாருக்குமே பல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை. வாசிக்க வேண்டிய புத்தகமாக அது இருக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை.

சில மாதங்கள் முன் எனது கறுப்பி என்னும் நாவலை அனுப்பி வாசிக்கச் சொன்னபோது அவர் வலைப்பூவில் எழுதிய ஒரு தொடரை வாசிக்கச் சொன்னார். ஆரம்ப காலத்தில் நானும் வாசித்து ஒரு வரியில் 'அருமை', 'நல்லாயிருக்கு' எனக் கடந்து போயிருந்த தொடர்தான் அது... அதை வாசித்து அது குறித்து அவருக்குத் தனிப்பட்ட முறையில் எழுதி அனுப்பியதை இங்கே பகிர்ந்திருக்கிறேன். வாசியுங்கள்... அப்படியே கிண்டில் போட்டியில் இருக்கும் 5 முதலாளிகளின் கதையை இங்கே சொடுக்கிப் படித்து மதிப்பெண் கொடுத்து, முடிந்தால் உங்கள் கருத்தையும் அங்கு சொல்லுங்கள்... வெற்றி பெற்றதும் நமக்கெல்லாம் விருந்து வைப்பார். (படத்தையும் சொடுக்கி வாசிக்கலாம்)

Image result for ஜோதிஜி

இனி அவரின் கதையான 'ஒரு தாயின் மரண சாசனம்' வாசிப்பின் பின் அவருக்கு எழுதியது... அவரின் அனுமதியின்றி இங்கே...

அன்பின் அண்ணா.

தங்களின் 'ஒரு தாயின் மரணசாசனம்' முழுவதும் இன்று வேலையில்லை என்பதால் வாசித்து முடிக்க முடிந்தது.

நான் இங்கு வந்த, வலைப்பூ ஆரம்பித்த தருணத்தில் நீங்கள் எழுதிய பகிர்வு. நானும் வாசிக்கிறேன் என்பதைக் காட்ட ஒரு வரிக் கருத்து இட்டிருக்கிறேன்... பதிவைவிட வந்திருந்த கருத்துக்களும் அவர்கள் பேசிய விஷயமும் நீளமும் ஆழமும் கொண்டவை. எத்தனை விஷயங்களை அறிய முடிகிறது.

ஒரு பெண் தன் வாழ்க்கை குறித்து அறியாத ஆணிடம் பேசுதல் என்பது அவ்வளவு சீக்கிரம் நிகழ்வதல்ல... அவர் உங்களின் தொலைபேசி உரையாடலில் ஈர்க்கப்பட்டு உங்களின் முகத்தை வாசித்திருக்கக் கூடும். இவரிடம் நாம் பேசலாம் என்ற நிலையைத் தங்களின் முகம் அவருக்குக் கொடுத்திருக்கும்... அதனாலேயே வாழ்க்கைக் கதையை உங்களிடம் இறக்கி வைத்திருக்கிறார்.

கதையின் போக்கில் நகராமல் இடையிடையே செய்திகளையோ அல்லது வேறு பாதையிலோ பயணித்தல் என்பது என்னிடம் இருக்கும் குறைபாடு என்றே வைத்துக் கொண்டாலும் அந்த முறை கதை நகர்த்தல் எனக்குப் பிடிக்கும் என்பதாலே அப்படியே எழுதுவேன். அதை இரண்டாம் பாகத்திலும் மற்ற இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களிடம் காண முடிந்தது.

எழுத்து நடை உங்களுக்கு அசாத்தியம்... முதல் இரண்டு பாகங்களைவிட மூன்றாம் பாகத்தில் இருந்து நடையின் பின்னே வாசிப்பவரை ஓடவைத்த எழுத்து... கிரேட்... இப்ப எழுதும் பதிவுகளெல்லாம் ஜெட் வேகத்தில் உங்களிடம்.

எனக்கு இறுதிப் பகுதியில் அம்மாவின் கடிதம் வாசிக்கப்பட்டபோது அது செயற்கையாய் தெரிந்தது... அம்மாவின் கடிதம் என்பது உங்கள் எழுத்து நடையிலேயே போயிருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். அது ஏனோ இலக்கியமாய் எழுதப்பட்டது போல் இருந்தது.

ஆண்களுக்கு இடையே ஒரு பெண் வெற்றி பெற போராடத்தான் வேண்டியிருக்கிறது... அப்படிப் போராடியவள்... வாழ்க்கையில் கஷ்டப்பட்டவள் கதர்ச்சட்டையுடன் மனம் விரும்பி, மகளுக்கான வாழ்க்கைக்காக தன்னைக் கொடுத்தல் என்பது 'பாலியல் தொழிலாளி' என்ற வட்டத்துக்குள் வருமா...? பல ஆண்களுக்குத் தன்னை விருந்தாக்கி, வருமானம் பார்த்து வாழ்பவள்தானே பாலியல் தொழிலாளி..?

தான் உயர வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் எல்லாம் ஆண்களுடன் போராடத்தானே வேண்டியிருக்கிறது... எங்கள் அலுவலக அவலங்களைத்தான் உங்களை வாசிக்கச் சொன்ன கறுப்பியில், ரீமா என்னும் கதாபாத்திரத்தை வைத்துச் சொல்லியிருக்கிறேன். மலையாள சேச்சி ஒருவர் ரிஷப்சனிஸ்டாக பணி புரிந்த போது, கம்பெனி எம்.டியான  லெபனானி அவர் தோளில் கை போட்டு இழுத்து அணைக்கும் போதெல்லாம் அவரின் மன ஓட்டத்தை முகத்தில் காண முடியும்... வெட்கித் தகிப்பார்.

ஒருமுறை கம்பெனி பார்ட்டி ஒரு பார்க்கில்... அப்போது அவர் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.. குடும்பம், குழந்தைகள் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொல்கத்தாக்கார மேனேஜர், 'வா இப்படியே பேசிக் கொண்டே பொயிட்டு வருவோம்...' என அவரைத் தனியாகக் கூப்பிட, நடக்க ஆரம்பித்ததும் அவரின் கையைப் பிடித்தார். உடனே சேச்சி எங்களைப் பார்த்து நீங்களும் வாங்க... எனக்கு இவன் கூட தனியாப் போக பயமாயிருக்கு என எங்களையும் அழைத்துச் சென்றார். பெண்கள் தங்களின் பாதுகாப்புக்கு இவர்கள் சரியானவர்கள் என்றால் தைரியமாக அருகில் வைத்துக் கொள்வார்கள்.

மகளை சரியான பாதைக்கு கொண்டு செல்ல அந்தத் தாய் செய்தது தியாகம்... மன்னிப்பு என்பது பொதுவானது... சில விஷயங்களுக்காக மன்னிப்புக் கோருதல்... அதுவும் தங்கள் மீதே தவறு என்றபோது கேட்பது என்பது சரியே... எதற்காக அவர் கடிதத்தில் அத்தனை மன்னிப்புக் கேட்கிறார்..? அவர் செய்த தவறு என்ன..? மகளை இந்த உலகத்தில் எதையும் எதிர்க்கொண்டு வாழும் பெண்ணாக வளர்த்ததற்காகவா...? கிழவனுக்கு கட்ட நினைத்த கணவனைப் பிரிந்து தைரியமாக வேறு ஊரில் வாழ்ந்து தன் கனவுகளை நிறைவேற்றிக் கொண்டதற்காகவா..?

இந்த இடத்தில் கறுப்பியில் (வாசித்தீர்களா தெரியாது) சொன்னதைச் சொல்கிறேன்.. எங்கள் வீட்டருகில் நடக்கும் கேவலம் அது... உங்கள் கதையில் அம்மா மகளுக்காக விலங்கொடித்து வெளிவருகிறாள்... ஆனால் இந்தக் கதையில் மூன்று பிள்ளைகளின் தாய்... தற்போது ஒருவனுடன் கூட்டு... அவனுடன் ஆட்டம்... அம்மணமாய் குடிசை வீட்டுக்குள் இருவரும் கிடக்க, முதல் பெண் திருமணமாகி குன்றக்குடி போய்விட மற்ற இரண்டு பிள்ளைகளும் (ரெண்டாவது பெண் வயசுக்கு வந்திருந்த நிலையில்) வெளியில் வெயிலில் இருக்குங்க... அதுகளுக்கு என் மனைவியே அடைக்கலம் கொடுப்பார்.

மூத்தபெண் கணவனுடன் சண்டையிட்டு வந்த சில நாளில் தான் கூட்டாக இருப்பவனின் ஆசைக்காக மகளையும் அவனுடன்... இரண்டாவது பெண்ணையும் அவன் கேட்க, அது எங்கள் வீட்டில் வந்து அழுதபோது என் மனைவி நீ உன் ஆயாவீட்டுக்குப் போவென பணம் கொடுத்து அனுப்பினார். நீங்கள் நினைக்கலாம் யாரும் தட்டிக் கேட்கவில்லையாவென... நாம் அவளுடன் சண்டை போட்டால் நம் முன்னே உடைகளைக் களைந்து அம்மணமாக நின்று நீ வாடா... வந்து... என்று ஆபாசமாகப் பேசுவார் என்பதால் எல்லாருக்கும் பேசப்பயம்.

இப்படியான பெண்களுக்கு மத்தியில் போராட்டக் குணமிக்க நிறைய தாய்மார்களைப் பார்த்திருக்கிறேன்... உங்கள் கதையில் வரும் அம்மாவைப் போல... இந்த அம்மா தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள இப்படியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை... மகளின் வளமான எதிர்காலத்துக்கு... அவள் இந்தப் பூமியில் ஜெயிக்க... என மகளுக்காக மெழுகுவர்த்தி ஆகியிருக்கிறாள்... பாராட்டப்பட வேண்டியவள் அவள்.

இங்கே எங்கள் கதையையும் சொல்ல வேண்டும்... என் அம்மா போராட்டக்குணம் நிறைந்த பெண்மணிதான்.

நாங்கள் படிக்கும் காலத்தில் திருச்சி - பாடாலூரில் வேலை பார்த்த அப்பாவுடன் எனக்கு நேர் மூத்த அக்கா தங்கிப் படித்து வந்தது. அண்ணன்கள் இருவரும் வேலைக்குப் போய்விட நான் அம்மா தம்பி மட்டுமே ஊரில்... விவசாய, பள்ளிக் கட்டணம், பண்டிகைகள் என எதுக்குப் பணம் கேட்டு கடிதம்  போட்டாலும் பதிலே போடமாட்டார்... தேவகோட்டையில் மளிகைக்கடை, வட்டிக்கடை என இரண்டையும் குடியால் தொலைத்தவர்தான் என்றாலும் அப்போது குடியெல்லாம் விட்டுவிட்டார்... இப்போதும். ரொம்ப பாசக்காரர்... யாரையும் அதிர்ந்து பேசமாட்டார்... ரொம்ப நல்லவர் அதுவும் ஊருக்குள் சேது என்றால் அவரை மாதிரி மனுசனைப் பார்க்க முடியாது என்ற பெயரை இன்றளவும் தக்க வைத்திருப்பவர்தான் என்றாலும் அந்த நேரத்தில் ஏனோ பதிலோ பணமோ வருவதில்லை.

விவசாய வேலை, எங்களின் படிப்பு என எல்லாவற்றுக்கும் அண்ணன்கள் கொடுக்கும் பணத்தில்தான் செலவு செய்வார். எட்டாவது முடித்து ஒன்பதாவது தே பிரித்தோவில் சேர பரிட்சை எழுதி பாஸ் பண்ணிவிட்டேன்... பள்ளியில் சேர்க்கும் நாள் யாரிடமோ பணம் கடனாய்ப் பெற்று 'குமாரைக் கொண்டு போய் சேர்த்துவிட்டு வாங்களேன்' என என் உறவினர் முன் நின்றார். ஏனென்றால் 4 கிமீ நடந்து போக வேண்டும்... அப்ப 'இவனெல்லாம் படிச்சி என்ன பண்ணப் போறான்' என்பது போல் பேசினார் அந்த உறவினர். அந்த வைராக்கியத்தில்... வேகத்தில்... கோபத்தில்... 4 கிமி நடந்து கூட்டிப் போய் சேர்த்து விட்டார். எனக்கும் என் தம்பிக்கும் படிப்பு கிடைக்கக் காரணம் என் அம்மாவும் மூத்த அண்ணனும்தான்.

எப்பவும் எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடி வந்தவர்தான் அம்மா... இத்தனைக்கும் அவர் பிறந்த குடும்பம் பணக்காரக் குடும்பம்... எங்க மாமாவை அந்தக் காலத்தில் லண்டன் அனுப்பி படிக்க வைத்த ஐயா, பெண் குழந்தைகள் மூவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிட்டார். அம்மா திருமணமாகி வந்து மாமியார், நாத்தனார்கள், எங்க அப்பா என எல்லாரிடமும் பட்ட அவஸ்தைகளை அவமானங்களை எல்லாம் வீட்டு வாசலில் படுத்துக் கொண்டு வானத்து நட்சத்திரங்களை ரசித்து எண்ணியபடி பல நாள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

மிகுந்த சிரம்மத்துக்கு இடையே ரேஷன் அரிசி, கேப்பைக் கூழ் என எங்களை வளர்த்தவர் அம்மா... எங்கள் வளர்ப்பில் அப்பாவுக்கு பெரும் பங்கெல்லாம் இல்லை என்றாலும் தங்கமான அப்பாதான்... அவர் எப்பவும் தன் தரத்தை குறைத்துக் கொண்டதில்லை... திருமணமான புதிதில் தாய் சொல்லைக் கேட்டவர், பின்னர் புரிந்து திருந்தி, அவர்களை விட்டு விலகி வாழ ஆரம்பித்திருக்கிறார். அப்பா அவரின் அம்மா (அப்பத்தா) பிறந்த வீட்டுக்குப் பிள்ளை வந்தவர்... அந்த வேதனை, வலிகளை அதிகம் அனுபவித்தவர்... அதனாலேயே எங்களை வீட்டோடு மாப்பிள்ளையாக்க வந்த வரன்களையெல்லாம் வேண்டாமென்று சொன்னவர். எங்களுக்கு படிப்புக்கு அப்பா துணை நிற்க்கவில்லை என்றாலும் வாழ்க்கையில் மற்றவர்களிடம் எப்படி நடக்க வேண்டும்... மூத்தவர்களை எப்படி மதிக்க வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தவர் இப்போதும் சொல்லிக் கொடுப்பவர்.

சரி அண்ணா, எங்கயோ பொயிட்டேன்... பாதை மாறிட்டேன்னு நினைக்கிறேன்...

தங்கள் கதையும் , அதற்க்கு வந்த கருத்துக்களும் எனக்கு நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தது.

நன்றி. 
****

அமேசான் கிண்டிலில் இருக்கும் ஐந்து முதலாளிகளின் கதையை வாசிக்கத் தவறாதீர்கள். உங்கள் மதிப்பெண்ணும் கருத்தும் போட்டியில் முதல் நூறுக்குள் இருக்கும் அவரை முதலிடத்திற்குக் கொண்டு வரும் என்பதை மறக்காதீர்கள்.
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றி குமார்...

ஜோதிஜி சொன்னது…

விடுங்க குமார். விரைவில் புத்தகமாக வந்து விடும். கலக்குவோம். நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி எதற்கண்ணா... இது நம் கடமை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆஹா...
வாழ்த்துக்கள் அண்ணா...
விரைவில் வரட்டும்... கொண்டாடுவோம்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான அனுபவப் பொக்கிஷம்

Yarlpavanan சொன்னது…

சிறப்பான அறிமுகம்