மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

அமேசானில் 'நெருஞ்சியும் குறிஞ்சியும்'

மேசான்ல கணக்கு ஆரம்பித்து அதன் பின் PENTOPUBLISH-2019 போட்டியில் இருக்கும் நண்பர்களின் கதைகளை தேடித் தரவிறக்கம் செய்ய முயன்றால் இங்கு அது இல்லை... இங்கு இது இல்லை எனச் சொல்ல ஆரம்பித்தது.

நண்பர்கள் தரவிறக்கம் செய்து படி... கருத்து இடுன்னு எல்லாம் சொன்னாங்க... கருத்து இட அமேசான்ல குறைந்தது இந்த மதிப்புக்கு வர்த்தகம் பண்ணியிருக்கனும்ன்னு சொன்னுச்சு...

நாமளே அமேசானுக்குப் புதுசு... அப்புறம் எங்கிட்டு வர்த்தகம்... அதுவும் அவங்க சொல்ற மதிப்புல வர்த்தம் பண்ணுறது. அதான் நம்ம கணக்கு... நம்ம கதைங்கிற முடிவுக்கு வந்தாச்சு.

போட்டிக்காகவெல்லாம் போடவில்லை... பணம் கொடுத்து எல்லாம் வாங்கச் சொல்லவில்லை... இந்தியாவுல இருப்பவர்களுக்கு இலவசமாகக் கொடுக்குமாம் அமேசான்...  அதே மாதிரி கிண்டில் இருந்தா இலவசமாக படிக்கலாமாம்... இந்த அமேசான் பற்றி நிறையத் தெரிஞ்சிக்கணும் போல... கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி இருக்கு.

ஆகவே நண்பர்களே... உங்களில் யாராவது அப்படி இலவசமாகத் தரவிறக்கிப் படித்தீர்கள் என்றால் உங்கள் கருத்தை அங்கு சொல்லாட்டியும் இங்காவது சொல்லுங்க... அம்புட்டுத்தான்....

'நீயுமா குமாரு...?' அப்படின்னு நினைக்காதீங்க... சொக்கா ஒரு லட்சம் ஆசையெல்லாம் இல்லை... எழுத்துக்கான மதிப்புச் சோதனைதான் இது... இருநூறுக்கும் மேற்பட்ட கதைகள், நாலைந்து நாவல்கள் என எல்லாம் எழுதிக் கிடக்கே எடுத்துப் போட்டு விடலாம் என்பதால்தான் இந்நாவலை அங்கு பகிர்ந்திருக்கிறேன்.. அதனால்தான் இங்கு பாதிவரை தொடராய் எழுதிய 'நெருஞ்சியும் குறிஞ்சியும்' நாவலைத் தூக்கிப் போட்டு வச்சிருக்கேன்.

நெருஞ்சியும் குறிஞ்சியும் நாவலில் இருந்து...

“மாமா...” வேலாயுதம் அருகில் அமர்ந்து தோள் தொட்டு அழைத்தார் ராமநாதன்.

வாயிலிருந்து துண்டை எடுத்து வறண்ட உதடு பிரித்து “ம்.. என்னப்பா...” என்றார் வார்த்தைகளுக்குப் பதில் உஷ்ணக் காற்று வந்து வெளிக்காற்றோடு சோகமாய்க் கலந்தது.

“கலங்காதீங்க மாமா... நாஞ் சொல்றதுக்கு கோபப்படமாட்டீங்கன்னு நெனக்கிறேன்...”

என்ன சொல்லப் போறீக என்ற கேள்வியோடு அவரைப் பார்த்தார்.

“அயித்த மூத்தவனப் பாக்கணுமின்னு ரொம்ப ஆசப்பட்டுச்சு... அது நடபொடயா இருக்கும் போது அது நடக்கல... இந்தக் கடசி நேரத்துலயாச்சும் நடந்தா நல்லாயிருக்கும்...”

“....”

“மூத்தவன வரச்சொல்லவா..?”

“.....”

“என்ன மாமா.... எதுவுமே சொல்ல மாட்டேங்கிறீங்க...? நாம அவனோட ஒறவு கொண்டாட கூப்பிடல... ஆனா அயித்தயோட ஆச.... அதான்.... எங்க எல்லாரோட முடிவும் அவன் ஒரு எட்டு வந்து பார்த்துட்டுப் போவணுங்கிறது.... நீங்க சொல்ற முடிவுலதான்...”

வேலாயுதம் வறட்சியாய் சிரித்தார்... கண்கள் மட்டும் கலங்கியபடி இருந்தன... துண்டால் துடைத்துக் கொண்டு ஒரு செருமலோடு பேச ஆரம்பித்தார். “மாப்ள... நீங்கதான் எம் மூத்த மவன்... ஒங்ககிட்ட உரிமயோடதான் சண்ட போட்டிருப்பேன்... என்னோட வலி, ரணமெல்லாம் ஒங்க எல்லாருக்கும் தெரியும்... ஏன் இந்தா உசிருக்குப் போராடுறாளே அவளுக்கும் தெரியும்... ஒரு ஆம்பள... எத்தன ராத்திரி வாய் விட்டு அழுதிருப்பேன் தெரியுமா..? குடிக்க கஞ்சியில்லாம வெறும் வயித்தோட வயல்ல கெடந்து வெவசாயம் பண்ணி... நானும் அவளும் புழுப்புடிச்ச ரேசன் அரிசிய சாப்பிட்டுக்கிட்டு புள்ளயளுக்கு நல்ல அரிசி சமச்சிக் கொடுத்து... நல்லா படிக்க வச்சி... பொட்டப்புள்ளக்கி படிப்பெதுக்குன்னு செலுவிய படிக்க வக்காம நாளக்கி கஞ்சி ஊத்துவானுங்க... அரசாள வந்த ஆம்பளப்புள்ளன்னு படிக்க வச்சா.... எவளோ ஒருத்திக்காக ஒத்த ராத்திரியில எல்லாத்தயும் மறந்துட்டு....” பேசமுடியாமல் கோபமும் வருத்தமும் அழுகையும் அவரை அணைத்துக் கொள்ள, கண்ணீரைத் துடைத்து ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.

“புரியுது மாமா...”

“இருங்க.... பேசிடுறேன்... எவளோ ஒருத்திக்காக எல்லாத்தயும் தூக்கிப் போட்டுட்டுப் போனான்... நான் கொடுத்த படிப்ப தூக்கிப் போடலயில்ல... அதுதானே அவனுக்கு இப்ப சோறு போடுது... எனக்கு அவ வேணும்... உங்க படிப்பு வேண்டான்னு சொல்லலையே... அப்ப அவன் பண்ணுனத சரியின்னு ஏத்துக்கணுமா...? சரி விடுங்க... இத்தன வருசத்துல நீங்கள்லாம் அவனச் சேக்கணும் சேக்கணுமின்னு நிக்கிறிய... ஒரு நா... ஒரு பொழுது... நா பண்ணுனது தப்புன்னோ... என்ன மன்னிச்சிடுங்கன்னோ இந்த வீட்டு வசல்ல வந்து நின்னிருப்பானா... நாந்தான் வைரி... புடிச்ச முயலுக்கு மூணு காலும்பேன்... ஆத்தா... அவ என்ன பண்ணுனா... எனக்குத் தெரியாம முந்தானயில முடிச்சி வச்சிருந்து காலேசுக்குப் போவும் போது செலவுக்கு வச்சிக்கன்னு கொடுத்து விடுவாளே... சுண்டக் கொழம்புன்னா அவனுக்கு உசிருன்னு மண் சட்டியில் எடுத்து பத்திரப் படுத்தி வச்சி...... சுடவச்சி... சுட வச்சிக் கொடுப்பாளே... கஞ்சிதான் குடிப்பான்னு அவனுக்காக தனியா கொஞ்சங் கஞ்சியாச்சும் வச்சி வப்பாளே... அவளக்கூட வந்து பாக்கணுமின்னு தோணலயே...”

“ம்...”

“என்ன மாப்ள... நா பேசுறது தப்புன்னா சொல்லிருங்க... பேசல...”

“இல்ல மாமா... இதுல தப்புன்னு சொல்ல என்ன இருக்கு... உங்க ஆதங்கத்த.... மனசுக்குள்ள போட்டு வச்சிருக்கிறத வெளிய கொட்டிடுறதுதான் நல்லது...”

“அந்த ஆத்தாவ இங்க வந்து பாக்கலன்னாக் கூட... சின்னவன் வீட்டுக்கு கூட்டியாரச் சொல்லியோ.... இல்ல உங்க வீட்டுல வச்சோ பாத்துட்டுப் போயிருக்கலாமுல்ல... என்னடா இப்படி பேசுறேன்னு பாக்காதீங்க... நீங்கள்லாம் அவங்கிட்ட பேசுறது எனக்கு எப்பவோ தெரியும்... எல்லாரும் நல்லாச் சேந்துக்கங்க... எனக்கொண்ணுமில்ல... ஆனா அவரு எதுவும் செய்ய மாட்டாரு... நாம அவருக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துட்டு கால்ல விழணுங்கிறீங்க... ஆமா இங்க தப்புச் செஞ்சது யாரு... அவனா... நாங்களா... நல்லாருக்கு மாப்ள உங்க ஞாயம்..?”

இராமநாதன் பதில் பேசாமல் அமர்ந்திருந்தார்.

அமேசானில் முழுவதும் வாசிக்க : நெருஞ்சியும் குறிஞ்சியும்

ணேஷ்பாலா அண்ணனின் படத்துக்கு கதை எழுதும் போட்டிக்கு எழுதிய கதைகள்... வாசித்து அங்கு லைக்கும் கருத்தும் இடுங்கள்...


நன்றி.
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அமெசான் தளத்தில் உங்கள் நூல். பாராட்டுகளும் வாழ்த்துகளும் குமார். தொடரட்டும் உங்கள் கதைப் பயணம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரைட்டு... இனி எல்லாம் வெற்றி தான்...

ஜோதிஜி சொன்னது…

Super kumar

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நன்றிண்ணா... முடிந்தால் வாசியுங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நன்றிண்ணா... முடிந்தால் வாசியுங்கள்.
சரியான முறையில்தான் அதில் பகிர்ந்திருக்கிறேனா என்று பாருங்கள் அண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நன்றிண்ணா... முடிந்தால் வாசியுங்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மகிழ்ச்சி, வாழ்த்துகள்.