மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 28 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : பொம்மலாட்டம்

Image result for bigg boss 27th august 2019 images
வெற்றி பெற என்னிடம் என்ன தகுதி இருக்கிறது எனப் பேசியதன் தொடர்ச்சியாய் லாஸ்லியா பேசும் போது நான் என்னுடைய விளையாட்டை சரியாக விளையாடுகிறேன்... எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமான முடிவைத்தான் நான் எடுத்து வருகிறேன்... என் மனசுக்குப்பட்டதைச் செய்கிறேன். வேறொரு நாட்டில் இருந்து இங்கு வந்து மக்கள் மனதில் இடம்பிடிப்பது என்பது எளிதானதல்ல... அதில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன்... என்னை மக்கள் ஏதோ ஒரு விதத்தில் விரும்புகிறார்கள்... எனவே இந்தத் தகுதிகள் போதும் என்று நினைக்கிறேன் என்றார்.

சேரன் அண்ணாவை நாமினேட் பண்ணியபின் அழுத நீ இனி வரும் நாட்களில் உனக்குப் பிடித்தவங்களைப் பண்ண வேண்டிய சூழல் வரும் போது எப்படி உணர்வுகளை வெளிப்படுத்துவே என்ற தர்ஷனின் கேள்விக்கு சுற்றி வளைத்துப் பதில் சொன்னார் அப்போது முதல் நாள் கவின்கிட்ட சேரப்பாவை பண்ணமாட்டேன்னுதான் சொன்னேன் என்றதும் அப்ப உன்னை முதல்நாளே யாரோ கட்டாயப்படுத்திருக்காங்க இல்லையா என்று சேரன் கேட்டதும் மழுப்பலாய்ப் பதில் சொல்ல, கவினும் இடைபுகுந்தார். 

உடனே சேரனிடம் நீங்க மது பிரச்சினையில் பேசாமல் இருந்தீர்கள் என்ற வாதத்தைக் கொண்டு வர, அங்கு தான் பேசியதை சேரன் சொன்ன போது இல்லை வெண்டைக்காய்தான் வெட்டிக் கொண்டிருந்தீர்கள் என்றார். லாஸ்லியாவைப் பொறுத்தவரை மக்கள் அவருக்கு அமோக ஆதரவளிப்பதாக திமுகவைப் போல் நம்பிக் கொண்டிருக்கிறார். சீனியில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாம்ன்னு சொல்ற மாதிரி லாஸ்லியாவின் சிரிப்பிலும் சின்னப்பிள்ளைத் தனத்திலும் மயங்கிய மக்கள் இப்போதைய லாஸ்லியாவின் காதல் போக்கில் மயக்கத்தில் இருந்து தெளிவு பெற்றிருக்கிறார்கள். முன்பு கிடைத்த கைதட்டல் இப்போது எதற்காகக் கிடைக்கிறது என்பதை லாஸ்லியா உணரவே இல்லை. மேலும் நேற்றைய பேச்சின் பின்னணியில் கவின்தான் இருந்தாரேயொழிய லாஸ்லியாவாய்ப் பேசவில்லை.

அடுத்து வந்த சேரன் விளையாட்டை உணர்ந்து விளையாடுவதையும் இது ஏதோ பதினைந்து பேர் தங்கியிருந்து விளையாடும் விளையாட்டு என்பதைவிட என் குடும்பத்து மனிதர்களை... உறவுகளைத்தான் இதில் பார்க்கிறேன்... அப்பாவாய்... அண்ணனாய்... நண்பனாய்த்தான் நான் வாழ்கிறேன்... ஆரம்பத்தில் விளையாட்டு என்ன... எப்படின்னு எனக்கு விளங்கலை என்றாலும் இப்போது  டாஸ்க்கிலும் சரி... கொடுக்கப்படும் வேலைகளிலும் சரி நான் என் முழுத் திறமையைக் காட்டுகிறேன் என்றார்.

தர்ஷன் மது பிரச்சினையை பேசியபோது இங்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரித்தான்... உங்க வீட்டில் அப்பா ஒரு மாதிரி, அண்ணன் ஒரு மாதிரி, நீ ஒரு மாதிரித்தான்... ஒவ்வொருவருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் தீர்வுகள் எடுப்பதில் மாற்றம் இருக்கும். மதுவைப் பொறுத்தவரை கோபம் அதிகம் வரக்கூடிய பெண்... அந்த நேரத்தில் நாம் பேசினால் அதை ஏற்றுக் கொள்ளாது. ஆனால் பிரச்சினை முடிந்து தனியே எடுத்துச் சொல்லும் போது ஏற்றுக் கொள்ளும். மதுவுடன் பேசிய வீடியோ இருக்கு... பார்த்தால் தெரியும்.

அதேபோல் சரவணன் அண்ணன் எனக்கு மூத்தவர்... எதனால் அந்த வார்த்தை அவரிடம் இருந்து வந்தது என்பதையும் அறிவேன்... அதற்கு மேல் அங்கு அமர்ந்து பேசினால் வீண் விவாதங்கள் வருமே என்றுதான் எழுந்து போனேன். மீராவைப் பொறுத்தவரை அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப் போகலை... அது கால்ல விழுந்து சொன்னாலும் ஏத்துக்காதுங்கிறது எனக்குத் தெரியும்... அதனிடம் பேசிப்பயனில்லை என்பதால் விலகியிருந்தேன் என்றார்.

நீங்க இயக்குநர்ன்னு பொதுவாக எல்லாரிடமும் சொல்வதில்லை ஆனாலும் சில சமயம் பேசி அதற்காக கமல் சாரிடமும் மன்னிப்புக் கேட்டீங்க... ஆனா எங்கிட்ட நிறையத் தடவை சொல்லியிருக்கீங்க... இயக்குநர்ங்கிற முத்திரையை வச்சிக்கிட்டு ஜெயிச்சிடலாம்ன்னு நினைக்கிறீங்களான்னு கவின் கேட்டதும் உங்கிட்டயும் சாண்டிக்கிட்டயும் அதைச் சொல்ல வேண்டிய நிலையைக் கொண்டு வந்ததே நீங்கதான்... என்னமோ தெரியலை வந்தது முதல் என்னை ஒதுக்கியே வந்தீங்க... நான் பேச வந்தாலும் ஒதுங்கிப் போனீங்க... ஏனோ என்னைய உங்களுக்குப் பிடிக்கலை... அந்த வலி எனக்கு எவ்வளவு வேதனையைக் கொடுத்துச்சு தெரியுமா..? என்றபோது தான் இவ்வளவு உயரத்தில் இருந்தவன் என்றாலும் எல்லாரிடமும் இறங்கிப் போக நினைத்தும் ஏற்றுக் கொள்ள மறுத்ததை ஒருவரின் மனம் எப்படி பாடும்படும் என்பதை உணர முடிந்தது.

சேரன் இவ்வாறு பேசியதும் கவின் மழுப்பலாய்ப் பதில் சொல்ல, நீ இணை இயக்குநர் என்றாலும் என்னிடம் எத்தனையோ விஷயங்களைப் பேசியிருக்கலாம்... ஆனா நீ என்னை ஒரு இயக்குநராய் மதிக்கவேயில்லை... பழகவும் நினைக்கவில்லை... ஏதோ ஒரு விதத்தில் உனக்கு என்னையும் என் படங்களையும் பிடிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டேன்... நீ என்னிடம் ஆட்டோகிராப் எப்படி எடுத்தீங்க... அந்தக் காட்சி எப்படி எடுத்தீங்கன்னு கேட்டிருக்கலாம்.... ஆனாலும் உனக்கு என்னை இயக்குநராய்ப் பார்க்கப் பிடிக்கவில்லை என்னும் போது நான் ஒதுங்கியிருத்தலே நலம் என்றதும் கவினால் பதில் சொல்ல முடியவில்லை.

ஒரு தேசிய விருது பெற்ற இயக்குநருடன் இத்தனை நாட்கள் தனித்திருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறதென்றால் இது எல்லாருக்கும் வாய்த்து விடுவதில்லை என்ற நிலையில் சினிமாத்துறையில் சாதிக்க நினைக்கும் ஒருவர் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருப்பார்... அது அத்தனையையும் பொண்ணுங்களை டாவடிப்பதில் வீணடித்திருக்கிறார் கவின். இந்த வாய்ப்பு வேறு எப்போதும் கிட்டாது. ஏன் சேரனுடன் ஒரு மணி நேரம் தனித்திருக்கும் வாய்ப்பு இந்த பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே கிடைத்துவிடுமா..? எவ்வளவு ஒரு நல்ல வாய்ப்பு... சாண்டியுடன் சேர்ந்து கவின் வாய்ப்பை வீணடித்திருக்கிறார்.

எனக்கு சப்பாத்தி ஊட்டுறீங்க ஓகே... கவினுக்கும் அன்னைக்கு ஊட்டுனீங்களே... அவங்க கூட ஜெல் ஆகணும்ன்னுதானே என லாஸ்லியா கேட்டதும் எனக்கு யாருடனும் ஜெல் ஆக வேண்டிய அவசியமில்லை... விருப்பமும் இல்லை... இறுதிப் போட்டி வரை போறேன்... போகலை... என்னோட விளையாட்டை நான் விளையாடுவேன்... யாருடனும் ஜெல்லாகி விளையாடனும்ன்னு நினைக்கலை.... அப்படி ஜெல் ஆகியிருந்த இப்ப இப்படி கவினைப் பேசியிருக்கமாட்டேனே என்றார்.

பாசம் வைத்திருக்கும் மகளுக்காக விட்டுக் கொடுப்பீங்களா என ஷெரின் கேட்டார்... இந்தக் கேள்வி தர்ஷன் லாஸ்லியாவுக்காக இறுதிப் போட்டியில் விட்டுக் கொடுக்கச் சொல்றார் சேரன்னு சொன்னதன் எதிரொலிதான்... அவள் அவளாக விளையாடி வெற்றி பெறுவதில்தான் பெருமை... அடுத்தவர் விட்டுக் கொடுத்து வெற்றி பேறுவதில் பெருமை இல்லை என்றார் சேரன்.

அடுத்து வந்த வனிதாக்கா எங்கிட்ட மக்கள் எதையோ விரும்புறாங்கன்னு கலைஞர் டிவி பட்டிமன்றத்தில் தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல் அரசியல் பேசும் லியோனி மாதிரி என்னென்னவோ பேசினார். அவரது பேச்சில் தானே அறிவாளி எதிர்ல உக்காந்திருக்கவங்க எல்லாம் முட்டாள்ன்னு நினைப்புத்தான் இருந்தது.

தர்ஷன் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டான்... ஆனா நீங்க கேட்கலை... வெளியில பொயிட்டு வந்து மன்னிப்புக் கேட்க நினைக்கலையே ஏன்ன்னு கவின் கேட்டதும் தர்ஷன் பண்ணினது தப்பு... அதை அவன் உணர்ந்து மன்னிப்புக் கேட்டான்... அவர் எப்பவும் பயன்படுத்தும்  'பீ கானஸ்ட்'டைப் போட்டு நான் தப்புப் பண்ணலை... என்னோட நிலைப்பாடு எப்பவும் தப்பானது இல்லை என்றவர் விஜயகாந்த் தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு சொன்ன மாதிரி சாரிங்கிற வார்த்தையே எனக்குப் பிடிக்காது என்றார்.

வந்த மூணாவது வாரமே உங்களை மக்கள் வெளியேற்றிட்டாங்க... மறுபடியும் வந்தும் நீங்க நாமினேட் ஆயிருக்கீங்க... அப்ப உங்களோட குணத்தை மாத்திக்கலைன்னுதானே அர்த்தம் என தர்ஷன் கேக்கவும் எங்கிட்ட எதோ பிடித்திருப்பதால்தான் மக்கள் மீண்டும் என்னை வரவச்சிருக்காங்க... போக நான் எந்த விஷயத்திலும் விட்டுக் கொடுத்து விட மாட்டேன்... என்னால் ஆன வரை போராடுவேன்... பெண்களுக்கு நான் ஒரு முன்னுதாரனமாக இருக்கிறேன் என்றார். இவரை முன்னுதாரனமாக எடுத்துக் கொண்டால் குடும்பத்தில் தென்றல் வீசாது... கஜா புயல்தான் வீசும்.

சேரன் ஏதோ கேள்வியைக் கேட்க முனையும் போது இதுக்கு மேல இதுக்கிட்ட கேட்டீங்கன்னா என்ன சொல்லுதுன்னு உங்களுக்கும் புரியாது எனக்கும் புரியாது சும்மாவே மொக்கை போடுறாங்கன்னு சொல்ற மக்கள் ரொம்பக் கடுப்பாயிருவாங்கன்னு பெல் அடிச்சி முடிச்சி வச்சிட்டாரு பிக்பாஸ்... இதுல யார் நல்லாக் கேள்வி கேட்டாங்கன்னு சொல்லுங்கன்னு பிக்பாஸ் சொன்னதும் எதுக்குப் பிரச்சினையின்னு வனிதாக்கான்னு சொல்லிட்டாங்க... அடுத்த வார தலைவருக்கு அக்கா நேரடித் தேர்வு...

காலையில பள்ளியெழுச்சிப் பாட்டு 'பழையது கழிந்தது புதியது பிறந்தது'ன்னு போட்டாங்க... வெளிய பார்த்த கிராமத்துத் திருவிழா மாதிரி மாறியிருந்துச்சு... இரவு பணிரெண்டு மணி வரை இருந்து பேசிட்டுப் போறாங்க... காலை எட்டு மணிக்கு குடிசை வீடு, கிணறு, கொடிகள்ன்னு ஓரு செட்... உண்மையிலேயே விஜய் டிவிக்கு டிஆர்பி, பணம் என எதை வேண்டுமானாலும் நாம் பேசினாலும் எத்தனை பேரின் உழைப்பு இதன் பின்னே இருக்கிறது. எட்டு மணி நேரத்திற்குள் எப்படி இப்படி மாற்றமுடியும்... இதற்காகவே பாராட்டலாம்.

சேரன், தர்ஷன், ஷெரின், கவின் எனவும் வனிதா, சாண்டி, முகன், லாஸ்லியா எனவும் இரு அணியாகப் பிரிந்து கிராமத்து வாழ்க்கை வாழ வேண்டும்... தினம் ஒரு கிராமத்து கலை நிகழ்ச்சி சொல்லித் தரப்படும். அதை அன்று மாலை இவர்கள் செய்து காட்ட வேண்டும்... முதல் நாள் பொம்மலாட்டம் சொல்லிக் கொடுக்கப்பட்டு இவர்களால் நடிக்கப்பட்டது. சாண்டிக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வால் அவர்கள் அணி சிறப்பாகச் செய்து வெற்றியும் பெற்றது. சேரன் அணி எடுத்த தலைப்புக்குத் தகுந்தபடி செய்தார்கள் என்றாலும் அதில் சுரத்தில்லை. 

இதெல்லாம் ஒரு டாஸ்க்காடா... அடேய் என்டா கொன்னெடுக்குறேன்னு வனிதாக்கா உக்கார்ந்திருச்சு... பொம்மலாட்டக் கலைஞரின் காலைத் தொட்டு வணங்கினார் சேரன். கவின் லாஸ்லியா டாஸ்க் தாண்டி காதலை வளர்த்துக் கொண்டிருக்க வனிதா கிராமத்து மனுசியாய் கத்த, சேரன் உம்புருஷனுக்கிட்ட சொல்லி அவனையும் வெளிநாட்டுக்கு அனுப்பிடுவோம்ன்னு சொன்னதும் அப்ப இந்த வாரம் சனிக்கிழமை அவரு வரும்போது கூட்டிக்கிட்டுப் போகச் சொல்லிடுவோம்ன்னு சொன்னது அல்டிமேட்... ஷெரின் மட்டும் வாய்விட்டுச் சிரிக்கவில்லை... நானும் சிரித்தேன்.

எந்த வேலையும் செய்யாமல் டாஸ்க் சமயத்தில் கூட அதிலிருந்து விலகி காதல் வளர்க்கும் லாஸ்லியாவை ஏன் மற்றவர்கள் வேலை செய்யுமாறு சொல்ல மாட்டேன் என்கிறார்கள்..? கமல் சொன்ன பின்தான் லாஸ்லியாவின் காதல் விளையாட்டுக்கள் அதிகமாகியிருக்கிறது அப்படியென்றால் இவர் என்ன நமக்குச் சொல்வது என்ற மேட்டிமைத்தனமா..? கழுத்தில் கருப்புக்கயிறு கட்டி கிராமத்துப் பெண்ணாக மாற நினைத்தவர் ஷெரின், வனிதாவைத் தவிர்த்து கவினைக் கட்டிவிடச் சொல்ல அவரும் மூணு முடிச்சிப் போட்டார். நிச்சயித்த பெண்ணுக்கு கருகமணி போடுவது போல்தான் இருந்தது... இதெல்லாம் இவர்களுக்கு மோசமாத் தெரியவில்லை என்றாலும் பார்க்கும் நமக்குத்தான் கருமமாய்த் தோன்றுகிறது. இந்த வாரம் கமல் லாஸ்லியாவின் செயல்களைக் கடந்து போவாரா அல்லது கடிந்து கொள்வாரா..?

கிராமத்து மனிதர்கள் என்றால் கஷ்டப்பட்டுக் கொண்டு கூழைக் குடித்துக் கொண்டு திரிகிறார்கள் என்ற பதத்தை மாற்றுங்கள் நண்பர்களே... விவசாயம் செய்து நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டுத்தான் வளர்ந்தோம்... இன்று விவசாயம் பொய்த்தாலும் படித்து  எல்லாரும் நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள்... யாரும் குடிக்கக் கஞ்சியின்றி கோவணத்துடன் திரிவதில்லை...  கிராமத்து டாஸ்க் என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாம்... புதிய பட்டாடைகள் உடுத்திக் கொண்டு ஏழ்மையில் உழல்கிறார்கள்... நாமும் அதுபோல் நடிப்போம் என்பதெல்லாம் கேலிக்கூத்து.

வீட்டின் மூத்தவர் நிலாச்சோறு ஊட்டிவிட, செவ்வாய் பிக்பாஸ் நிறைவு பெற்றது.

இந்த டாஸ்க்கின் முன் எல்லாருக்கும் மூன்று காயின் போட்ட உண்டியலைக் கொடுத்திருக்கும் பிக்பாஸ் காயினைச் சேர்க்கணும் என்றும் சொல்லியிருக்கிறார். நேற்று எதுவும் செய்யவில்லை... இன்று ஏதாவது செய்திருக்கக் கூடும்... அல்லது நாளை அதற்கான போட்டிகள் இருக்கலாம்.

குறிப்பு : உடல் நலமில்லாததால் அலுவலகம் செல்லாமல் மருத்தவமனை சென்று வந்ததால்  காலையில் எழுதவில்லை.

பிக்பாஸ் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உடல் நலம் தான் முக்கியம்... பதிவு உட்பட மற்றவை எல்லாம் அப்புறம்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// சினிமாத்துறையில் சாதிக்க நினைக்கும் ஒருவர் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருப்பார்... //

எனக்குள்ளும் எழுந்த சிந்தனையும் இதுவே...