மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 5 மார்ச், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-7)

முந்தைய பகுதிகளை வாசிக்க...


பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4           பகுதி-5


*********

“ டேய் மாப்ள... அந்த இடத்தைப் பாரு... சரியா வருமா... நம்ம போர்டு சும்மா அங்க இருந்து பாத்தாலே தெரியணும்... கரெக்டா இடம் பாரு... “ என்று மூன்று பேர் இறங்க, பிரசிடெண்ட் பேச்சை நிறுத்தினார். சுற்றிலும் வேடிக்கை பார்த்த ஊர் மக்களும்,  வெள்ளையும் சொள்ளையுமாக நின்ற பெரிசுகள் ஏதாவது பிரச்சினை வருமோ என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

“என்ன செல்லையா... ?” வேலாயுதம் வந்திருந்த மூவரில் ஒருவனைப் பார்த்துக் கூப்பிட்டார்.

“என்ன மாமா?” என்றான் கருப்புச் சட்டை போட்டிருந்தவன்.

“ஏம்ப்பா.... போர்டு வைக்கிறீங்களா? நம்மது முடிஞ்சதும் வந்திருக்கலாமே?”

“மாமா... பிரச்சினைக்காகவெல்லாம் வரலை மாமா... தப்பா நினைக்காதீங்க.... நீங்க போர்டு வச்சிட்டீங்க... நாளைக்கு நல்லது கெட்டதுக்கு வர்ற சாதி சனம்... இந்த ஊருக்குள்ள இருக்க நாலு சாதியையும் பற்றி தெரிஞ்சிக்கணுமில்ல... நீங்க மட்டும் வச்சிட்டா... மத்த சாதிக்காரனெல்லாம் ஒண்ணுமில்லாதவானாப் போயிடுவானுல்ல... எங்களால உங்களுக்கு பிரச்சினை வராது மாமா... நாம ஊருக்குள்ள அப்படியா பழகியிருக்கோம்... நீங்க இந்த மாதிரி சாதிப் போர்டு வச்சி, கொடி ஏத்தப் போறோம்ன்னு சொல்லியிருந்தா... நாங்களும் சேர்ந்து நின்னிருப்போம்... எதுவுமே சொல்லாம நீங்க மட்டும் பண்ணினா என்ன மாமா நியாயம்...? ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனித்தனி கோவில் இருந்தாலும் திருவிழா, பொங்கல்ன்னு எல்லாம் எல்லாருமா கொண்டாடுறோம்.... இப்ப சாதிப் போர்டு வைக்கிறதுலயும் எல்லாரும் ஒண்ணா வைக்கலாமே...?”

“உங்களை யாருப்பா வைக்க வேண்டான்னு சொன்னா...? இடம் பாக்குறது அப்புறம் பாக்க வேண்டியதுதானே...?”

“இப்ப என்ன மாமா ஆச்சு... நாங்க அங்கிட்டுப் பாத்துட்டு அளந்துக்கிட்டு போகப் போறோம்... அதுல உங்களுக்கு என்ன பிரச்சினை...?”

“டேய் என்னடா... இப்பத்தான் பேசிக்கிட்டு... அவுக சாதிக்கு போர்டு வச்சிட்டாங்கதானே... பின்ன நாம வச்சா இவங்களுக்கு என்ன... வாடா...” இன்னொரு சிகப்புச் சட்டை கோபமாகப் பேசினான்.

“என்ன ராசு... பேசிக்கிட்டு இருக்கும் போது தேவையில்லாமப் பேசுறே...?” கோபமாகக் கேட்டான் முத்துக்குமார். இவன்தான் இளைஞர் மன்றத் தலைவர்.

“இங்க பாரு முத்து... நீங்க பாட்டுக்கு விழா நடத்துங்க... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம்.... நாங்க டிஸ்டர்ப் பண்ண வரலை...” என்றான் ராசு என்கிற சிகப்புச் சட்டைக்காரன்.

“நீங்க வந்திருக்கிறதைப் பார்த்தா... பிரச்சினைக்கு வந்த மாதிரித்தான் தெரியுது...” என்றார் வேலாயுதம்.

“ஏய் வேலாயுதம்... எதுக்கு தேவையில்லாம பேசிக்கிட்டு... நாம செய்யும் போது அவனுக செஞ்சா என்ன... நீயும் அப்படித்தானே சொன்னே... பின்ன எதுக்கு தேவையில்லாம பேசிக்கிட்டு.... நாம எல்லாரும் ஒண்ணுதானேப்பா... சாதியால பிரிஞ்சி நிக்க வேணுமான்னு கேட்டா, நீங்களெல்லாம் குதிப்பீங்க... இப்ப நாம வச்சாச்சு... இனி அவங்க வைக்கட்டும்... அப்புறம் அடுத்த ரெண்டு சாதிக்காரனும் வைக்கட்டும்... இதெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சதுதானே...” மெதுவாகச் சொன்னார் பஞ்சநாதன்.

“நீ வேறப்பா... எப்பப்பாரு எதாவது பேசிக்கிட்டு.... அவனுங்க செய்யட்டும் வேணாங்கலே... அதுக்கு இதுதான் நேரமா..? பேசிக்கிட்டு இருக்கும் போது பிரச்சினை பண்ற மாதிரி...”

“சரி விடு... அவனுங்க போகட்டும்... அப்புறம் பேசலாம்...” என்றார் பஞ்சநாதன்.

“இல்ல மாமா... நாங்க பிரச்சினை பண்ண வரலை...” என்று செல்லையா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஏய் ராசு... அங்க என்ன பிரச்சினை..?” என்றபடி வண்டியை நிறுத்தினார் வாத்தியார் வாசுதேவன்.

“இல்ல சித்தப்பா... ஒண்ணுமில்ல...” தலையைச் சொறிந்தான் ராசு.

“போங்கடா... போயி வேலையைப் பாருங்க... நல்லாயிருக்க ஊருக்குள்ள தேவையில்லாத வேலை பாத்துக்கிட்டு... சுயமா சிந்திங்கடா... படிக்கிற வயசுல எதைச் செய்யணுமோ அதைச் செய்யிங்க... சில பேருக்கு வயசானாலும் புத்தி வராது... போங்கடா... போர்டு, கொடியின்னு தூக்கிக்கிட்டு திரிஞ்சீங்க... எல்லாப் பயலையும் வெட்டி பொலி போட்டுருவேன்...” என்றபடி வேலாயுதத்தை முறைக்க,  அவர் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.

ராசு தன் நண்பர்களுடன் வண்டியை எடுக்க, “ஊரைக் கெடுக்குறதுக்குன்னே இருக்குதுக.. போய்ச் சேராம...” என்றபடி வண்டியை நகர்த்தினார் வாத்தியார்.


பெருமாள் கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டு பிரகாரம் சுற்றி வந்து வெளிப் பிரகாரத்தில் ஒரு ஓரமாக அமர, சாரதி கோவிலின் பெருமைகளையும் வரலாற்றையும் சொல்லி முடித்திருந்தான். அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அம்பேத்கார், “படிப்பு முடிச்சதும் எங்களுக்கெல்லாம் வேலை கிடக்காம தெருவுல திரிஞ்சாலும் உனக்கு மட்டும் வேலை இருக்கும் மாப்ள...” என்றான் சிரிக்காமல்.

“எனக்கு என்ன வேலை இருக்கு....?” சாரதி

“என்ன மாப்ள இப்படிச் சொல்லிட்டே... போட்டிருக்கிற சட்டையை கழட்டிட்டு வேஷ்டி, பூணூல், உடம்புல ஒரு துண்டைப் போட்டுக்கிட்டு “மாமி யாரு பேருக்கு அர்ச்சனை’யின்னு பேஷா சம்பாரிக்கலாமேடா...”

“ஏய்.... என்ன கிண்டலா...? இதெல்லாம் சரி வாரதுடா...”

“ஏன் வராது.... இன்னைக்கு நிலமைக்கு செலவில்லாத சம்பாத்யம்டா.... ஒரு அர்ச்சனைக்கு பத்து ரூபாய்... அப்புறம் என்ன...” சீண்டினான் பிரவீண்.

“சரி வாங்கடா... ஜாகீர் உள்ள வரலைன்னு வெளிய நிக்கிறான்... அங்கிட்டுப் போயி உக்காந்து பேசலாம்...”

“அவனைப் புரிஞ்சிக்க முடியலை... காலேஜ் போகும் போது வழியில இருக்க முருகன் கோவில் விபூதியை நம்ம கூட சேர்ந்து நெற்றியில இட்டுக்கிறான்... அப்ப நாம எதாவது சொன்னா அடப் போங்கடா.... உனக்கு முருகன் எனக்கு அல்லான்னு சிரிப்பான். ஆனா இங்க கோவிலுக்குள்ள வர்றதுக்கு யோசிக்கிறான்டா... சாரதி எவ்வளவோ கூப்பிட்டும் வரலைன்னு சொல்லிட்டான்...” என்றான் வருத்தமாய் அம்பேத்கார்.

“டேய்... அவனோட மனசு தெரியும்... ஆனா அவங்களுக்குன்னு ஒரு சில விதிமுறைகள் இருக்கும்... எதுக்கு அதை ஆராய்ந்துக்கிட்டு... ஒருவேளை அவனும் நம்ம கூட உள்ள வந்து நாம பேச்சு வாக்கில ஜாகீர்ன்னு சொல்லி, யாராவது கேட்டாங்கன்னா உடனே முஸ்லீம் பையனை எதுக்கு நம்ம ஐயர் மகன் கோவிலுக்குள்ள கூட்டியாந்திருக்கான்னு பேசுவாங்க... வீணாவுல எதுக்கு பிரச்சினை... வாங்க போகலாம்....”

வெளியில் வந்து எல்லாருமாக அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். “சாரதி நாங்க நைட்டே கிளம்புறோம்டா... “ என்றான் கண்ணன்.

“ஏன்டா... காலையில பிள்ளையார்பட்டி பொயிட்டு அப்புறம் போகலம்டா... நைட் எங்க பழைய வீட்ல போயி தங்கலாம்...” என்றான் சாரதி.

“இல்லடா... நாளை மறுநாள் நடவு இருக்கு... நாளைக்கு நாத்துப் பறிக்க ஆள் வருதுன்னு அப்பா சொன்னாரு... நானும் இருந்தா வேலை ஆட்களோட என்னால முடிஞ்சளவு நாத்துப் பறிச்சி வைக்கலாம்... அப்பா வரும்போதே சொல்லித்தான் விட்டாரு...”

“அட.... விவசாய வேலை எல்லாம் தெரியுமா உங்களுக்கு...?” வேகமாகக் கேட்டாள் சுபஸ்ரீ.

“உனக்குத்தான் சுடுதண்ணி வைக்கவே தெரியாது... விவசாயக் குடும்பத்துல பிறந்தவனுக்கு விவசாயம் தெரியாதா என்ன... மண்டு...” என்றான் சாரதி.

“சாரதி நீ சும்மா இரு... மறுபடிக்கும் அவங்க கோவிச்சிக்கப் போறாங்க... எனக்கு எல்லா வேலையும் தெரியுங்க... “ என்றான் கண்ணன்.

“கண்ணண்ணா... எங்க அம்மு எல்லா வேலையும் நன்னா பார்ப்பா... அவ சமைச்சா அவ்வளவு டேஸ்டா இருக்கும்... எங்கண்ணா அவளை சும்மா வம்புக்கு இழுக்கிறான்...” என்றாள் அபி.

“அதானே... எப்பவும் சாரதிக்கு அவங்களை எதாச்சும் சொல்லணும்... அடியேய் ஆயுசுக்கும் அவங்க கையாலதான் சாப்பிடணும்... தெரிஞ்சிக்க” எனச் சிரித்தான் ஜாகீர்.

“அண்ணா... பேஸ்புக்ல கலக்கலா எழுதுறீங்க... நான் என் பிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் எங்கண்ணன் எழுதியதுன்னு சொல்லி காட்டுவேன்...” என்றாள் அபி.

“அட ஏம்மா நீ வேற... நான் ரொம்ப நெருக்கமானவங்க தவிர வேற யாரையும் பிரண்ட்ஸா சேர்க்கிறதில்லை... சும்மாவே அப்பா கத்துறாரு... அதனால அதிகமா பேஸ்புக்ல இருக்கதில்லை... சரிடா சாரதி வாடா வீட்டுக்குப் பொயிட்டு சாப்பிட்டு கிளம்ப சரியா இருக்கும்” என்றான் கண்ணன்.

வீடு நோக்கி நடக்கும் போது “ஏய் அபி... அவரு ஐடி என்னடி...” மெதுவாகக் கேட்டாள் சுபஸ்ரீ.


(அடுத்த சனிக்கிழமை தொடரும்)
-‘பரிவை’ சே..குமார்.

7 எண்ணங்கள்:

சாரதா சமையல் சொன்னது…

இன்று எனது வலைபூ நான்காம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. தேங்காய் பர்பி சுவைக்க வலைப்பூவுக்கு இன்று வாருங்கள் குமார்.

Menaga Sathia சொன்னது…

சாதி பிரச்சனை என்னிக்குதான் ஒழியுமோ,தொடர்கிறேன் சகோ..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
தொடர்கிறேன் நண்பரே

துரை செல்வராஜூ சொன்னது…

இது வரைக்கும் நல்லபடியா போய்க்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்..

KILLERGEE Devakottai சொன்னது…

ஜாதிகள் இருக்குதடி டாப்பா
தொடர்கிறேன் நண்பரே...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்லாருக்கு குமார். தொடர்கின்றோம்..

நிஷா சொன்னது…

படிக்கும் காலத்தில் ஜாதியும் மதமும் தெரிவதில்லை, உழைக்க ஆரம்பித்த பின் தான் எல்லா பேதங்களும் உருவாகுமா என கேட்டால் அதுவும் இல்லை, எங்கிருந்து எவரால் பிரிவினை உருவாகின்றது எனும் கேள்விக்கும் விடை இல்லை, ஆனாலும் ஜாதியும் மதமும் மட்டும் தீயாய் பற்றி எரிகின்றது. இக்கால நிஜங்கள் கதையாய் விரிகின்றது.

அருமை குமார். இன்னும் எழுதுங்கள்.