மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 29 டிசம்பர், 2014

மனசு பேசுகிறது : என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா..!

சில தொலைக்காட்சிகள் குடும்பச் சண்டைகளை பொதுவெளியில் வைத்து பஞ்சாயத்து பண்ணுவது போல் உலகெங்கும் காட்டி அவர்களை அசிங்கப்படுத்தி தங்களது டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக் கொள்கின்றன. ஒரு பெண் நடத்தினால்தான் அவரின் கோபங்கள், குமுறல்கள், அழுகைகள் என எல்லா நாடகமும் மக்களைச் சென்றடையும் என்பதில் எல்லா தொலைக்காட்சிகளுமே ஒரே மாதிரியான நம்பிக்கை கொண்டிருக்கின்றன.

பெரும்பாலும் சிறிய பிரச்சினையை வீட்டுக்குள் வைத்து தீர்ப்பதை விடுத்து வீதிக்கு கொண்டு வந்து தீர்ப்பதால் யாருக்கு லாபம்? நாலு சுவத்துக்குள்ள நாலு பேரை வச்சி பேசினால் தீர்ந்துட்டுப் போகுது... ஸ்டுடியோவில் வைத்துப் பேசி... நீ சொல்லும்மா... நீ சொல்லுப்பா... போலீசைக் கூப்பிடுவேன்... ஏம்மா இப்படிப் பண்றீங்களேம்மான்னு வசனம் பேசி பிரச்சினையை பெரிதாக்கி விடுவதால் யாருக்கு லாபம்? ஒரு குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்து தன்னோட கல்லாவை நிரப்பிக் கொள்ள நினைக்கும் தொலைக்காட்சிக்குத்தானே லாபம்.

இவர்களது குறி எல்லாமே மிகவும் ஏழ்மையான குடும்பத்தின் மீதுதான் என்பது இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களைப் பார்த்தலே தெரியும்.. அன்றாடங் காய்ச்சிகளின் வாழ்க்கையில் ஏதோ பிரச்சினை, அதை அப்படியே விட்டால் கொஞ்ச நாளில் அவர்களே சரி பண்ணிக் கொள்வார்கள் என்றாலும் எப்படியோ அவர்களின் பிரச்சினையை மோப்பம் பிடித்து அவர்களுக்கு வலைவீசி இழுத்து வந்து விடுகிறார்கள். பெரும்பாலும் இவர்களின் முக்கியத் தேடல் கள்ளக்காதல், பொருந்தாக் காதல், காதல் தோல்வி என்பவையாகவே இருப்பதை நாம் அறியலாம். ஏனென்றால் இன்றைக்கு கள்ளக்காதல் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்றவற்றிற்கு இல்லையல்லவா? 

ஸ்டுடியோவில் வைத்து பஞ்சாயத்துப் பண்ணுகிறேன் என்று சொல்லி அவர்களைப் பேச விட்டு, அடிக்க விட்டு, மிதிக்க விட்டு வேடிக்கை பார்த்து பின்னர் வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பைச் சொல்வார்கள். இடையிடையே 'என்னம்மா இப்படிப் பண்றீங்க...', 'என்னப்பா சொல்றே...', 'என்ன பண்ணப்போறே...', 'அடிக்காதீங்க...' (நல்லா அடிங்கன்னு அர்த்தம்), 'ஏம்மா உனக்கு எப்படி இப்படி செய்ய மனசு வந்தது...', 'அந்தப் பொண்ணை நினைச்சிப் பார்த்தியா...' என டயலாக் டெலிவரிகள் பல்வேறு முகபாவங்களுடன்... பாவமாய் மாட்டிக் கொண்டவர்கள்.

வாழ்க்கையில் எல்லாருக்கும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும்.. குடும்பப் பிரச்சினைகள் எல்லாம் குடும்பத்துக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும். கிராமங்களில் பிரச்சினை பெருசாகும் போதுதான் ஊர்க்கூட்டத்துக்கே வருவார்கள். அதுவரை தங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளப் பார்ப்பார்க்கள். இப்போதெல்லாம் ஊர்க்கூட்டங்கள் குறைந்து விட்டன. ஊர்க்கூட்டத்தில் முடிவு இல்லை என்றால் நாட்டுக் கூட்டம் என்பார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை கேவலப்படுத்தி அதில் குளிர்காய மாட்டார்கள்.

ஆள் பிடிக்கும் இவர்கள் குடும்பங்களில் பிரச்சினைகள் இல்லையா...? இல்லை பணக்காரர்கள் குடும்பங்களில் பிரச்சினைகள் இல்லையா...? எல்லா இடத்திலும் பிரச்சினைகள் என்பது இருக்கத்தான் செய்யும். ஏழையின் சண்டை டாஸ்மார்க் சரக்கின் வழியாக வீதியில் சிரிக்கும். பணக்காரனின் சண்டையோ பாரின் சரக்கோடு வீட்டுக்குள் விளையாடும்... அவ்வளவே... பிரச்சினைகள் என்பது எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்யும். வசதி படைத்தவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தினால் அதன் பின்னான விளைவுகளை எதிர்க்கொள்ள திராணி வேண்டும் என்பதாலேயே கேட்க நாதியற்றவர்களைக் கொண்டு வந்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் வசதி வாய்ப்பற்ற ஏழைகளைப் பணம் கொடுத்து ஆசை காட்டி இழுத்து வருவார்களோ என்பதுதான்... கண்டிப்பாக ஏதோ ஒரு தொகையைக் கொடுத்து ஆசை வார்த்தை காட்டித்தான் குடும்பச் சண்டைகளை ஊடகத்தில் அரங்கேற்றுவார்கள். மானங்கெட்ட மடச்சாம்பிராணிகளும் கருவாட்டுக்கு ஆசைப்பட்டு மாட்டிக் கொண்ட எலியாக மாட்டிக் கொண்டு நிகழ்ச்சியில் அழுது ஒப்பாரி வைத்து அம்புட்டையும் புட்டுப் புட்டு வைத்து அதை அவர்கள் ஒளிபரப்பிய பின்னர் உக்கித் தவிப்பார்கள். நம் அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டுமே தவிர அடுத்தவனின் ஆசை வார்த்தைகளுக்கு அடி பணியக் கூடாது என்பது தெரியாத மூடர்கள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான்.

ஒரு சிலர் பக்கத்து வீட்டில் சண்டை என்றால் பார்த்துக் கொண்டிருந்த வேலையைப் போட்டுவிட்டு வேடிக்கை பார்க்க வந்து விடுவார்கள். அவர்கள் வீட்டுக்குள் நாறி நாத்தப்பொணம் எடுத்துப் போய்க்கிடக்கும் கணவன் மனைவி சண்டை... இருந்தும் பக்கத்து விட்டுச் சண்டையில் கிடைக்கும் சுவராஸ்யத்தை தொலைக்க விரும்பாமல் வேடிக்கை பார்ப்பதுண்டு. அப்படிப்பட்ட ஆட்கள் இருப்பதால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஜெயித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பதற்கு இவர்களைப் போன்ற கூட்டங்கள் இருப்பதுதான் வேதனை என்றாலும் இதுவே இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் தொலைக்காட்சிகளுக்கு சாதனை.

கணவன் சரியில்லை... மனைவி சரியில்லை... ஏமாற்றம்... வலி... வேதனை... என எதுவாக இருந்தாலும் குடும்பங்களுக்குள் தீர்த்துக் கொள்ளப் பழகுங்கள்... தயவு செய்து ஊடங்களில் கடை விரிக்காதீர்கள்... அவர்கள் காசை அள்ளிக் கொண்டு உங்களைத் தெருவில் விட்டு விடுவார்கள்... விரிசல் என்பதை மறைக்க முடியும் என்ற நிலை இருக்கும் போது ஒட்டுப் போடுகிறேன் என இவர்கள் உடைத்து வைக்கத்தான் முயற்சிப்பார்கள்... இவர்கள் யார் நம் வீட்டுப் பிரச்சினையில் சமரசமோ தீர்ப்போ சொல்ல... யோசியுங்கள் உறவுகளே... இனியும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு குடும்பச் சண்டைகளை கொண்டு செல்லாதீர்கள்.
-'பரிவை' சே.குமார்.

26 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
நல்ல விழிப்புணர்வுப்பதிவு.. சொல்ல வேண்டிய கருத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 2
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

துரை செல்வராஜூ சொன்னது…

இவர்கள் யார் நம் வீட்டுப் பிரச்சினையில் சமரசமோ தீர்ப்போ சொல்ல?...

அநாகரிகமான நிகழ்ச்சி..

KILLERGEE Devakottai சொன்னது…

அருமையான கருத்தை முன்வைத்தீர்கள் நண்பா, நானும் இதனைக்குறித்து பதிவு எழுத வேண்டுமென்று நினைத்துக்கொண்டே...... இருந்தேன் மானங்கெட்ட ஜென்மங்கள்

இதில் மிகப்பெரிய கூத்து என்ன தெரியுமா ? பஞ்சாயத்து பண்ணுறாளே அவளே அடுத்தவ புருஷனோட வப்பாட்டி கேடுகெட்ட இந்த சிறுக்கிகளை கிழித்து எழுதப்போறேன்

தகுதி இல்லாதவளுக்கு நாட்டாமை பதவியா ?

தமிழ் மணம் 2

Kasthuri Rengan சொன்னது…

நல்ல அலசல்
த ம இரண்டு

aalunga சொன்னது…

நல்ல கேள்வி...

இது போன்ற நிகழ்ச்சிகளை மையப்படுத்திய நகைச்சுவை ஒன்று : https://www.youtube.com/watch?v=NHH_3R0kZIs

ப.கந்தசாமி சொன்னது…

பலரும் சொல்ல விரும்பிய கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுகள். இந்த நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதில்லை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மிக அருமையான, பயனுள்ள பதிவு. தற்போது சமூகத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் காரணிகளில் இதுவும் ஒன்று. தங்களது சமூகப் பிரக்ஞைக்கும், பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி.

Unknown சொன்னது…

# மூடர்கள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான்.#
நாலு சுவற்றுக்குள் முடித்துக் கொள்ள வேண்டியதை உலகத்திற்கே தெரிய வைக்கும் மூடர்கள் சிந்திப்பார்களா ?
த ம 5

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான அலசல் + கருத்துக்கள்...

எம்.ஞானசேகரன் சொன்னது…

Tha. ma. 7

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாக்களித்தமைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
எப்படியெல்லாம் பெயர் வாங்க நினைக்கிறார்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மது...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அருண்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நானும் பார்ப்பதில்லை... அறையில் சிலர் பார்ப்பார்கள்... சில கிளிப்பிங்க்ஸ் முகநூலில் பார்த்தேன்... கேவலத்தின் உச்சம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தோழரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

எல்லை தாண்டிப்போய் விட்டது. இனி இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஒவ்வொரு சேனலிலும் இப்படிச் செய்கிறார்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

TF

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

பண ஆசை காட்டி அவர்களை அழைத்து வந்து ஊர்ருக்கு மட்டும் தெரிந்ததை உலகுக்கே தெரியவைக்கும் அற்புத சேவையின் உண்மை தெரியாமல் அவதி படுபவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஏற்கனவே இருக்கிற பிரச்சனையை இந்கழ்ச்சியால் இன்னும் சிக்கலாகிவிடும் என்பதே உண்மை

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எல்லா சேனல்களும் குட்டையில் ஊறிய மட்டைகள்தான் நண்பரெ! டிவியில் தோன்றுவதை பெருமையாக நினைத்துத் தங்கள் குடும்பக் கதைகள் வெளியில் அம்பலமாகி சீரழிவது கேவலம்....அருமையான பதிவு....

yathavan64@gmail.com சொன்னது…

எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

"புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

என்றும் நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

கார்த்திக் சரவணன் சொன்னது…

தொலைக்காட்சி நிறுவனங்களை விட இம்மாதிரியான நிகழ்ச்சிகளை ஆவென்று வாயைப் பிளந்துகொண்டு பார்க்கும் மக்கள் மீதும் தவறு இருக்கிறது....

அருமையான பதிவு நண்பரே....