மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 16 டிசம்பர், 2014

வாழ வேண்டிய வாழ்க்கை

"ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கே?" கேட்ட சாம்பசிவம் சென்ற வருடம்தான் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். மனைவி இறந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எப்போது மனைவி பற்றி பேச்சு வந்தாலும் புண்ணியவதி போய் சேந்துட்டா என்று மேலே கையைக் காட்டுவார். அரசுப் பணியில் இருக்கும் ஒரே மகனுடன் வாழ்க்கை எந்தவித பிரச்சினைகளையும் எதிர்க்கொள்ளாமல் சந்தோஷமாகக் கழிகிறது.  இங்கே சாம்பசிவத்தின் வாழ்க்கைக் கதையை நாம் பார்க்கப் போவதில்லை... அப்புறம்..? சரி வாங்க அவங்க பேசுறதைக் கேட்போம்.

"இதுதான் நல்ல முடிவுன்னு நினைக்கிறேன்" என்றாள் அன்னம். ஐம்பதைத் தாண்டிய உருவம். எப்போதும் புன்னகை இழையோடும் வசீகரமான முகம். 

"என்ன நல்ல முடிவு... படிச்சவதானே நீயி..."

"படிச்சவளா இருந்தா ஒரு முடிவும் படிக்காதவளா இருந்தா இரு முடிவும் எடுப்பாங்கன்னு யார் சொன்னா... இன்னைக்கு படிச்சவங்களை விட படிக்காதவங்கதான் தீர்மானமான முடிவு எடுக்கிறாங்க... தெரியுமா?"

"அது சரி... பேச உனக்குச் சொல்லித் தரணுமா என்ன? ஆமா இந்த முடிவை எடுக்க யார் உனக்குச் சொன்னது?"

"என்ன சாம்பு... இப்படி ஒரு அசட்டுத்தனமான கேள்வி கேக்குறே.? நான் என்ன சின்னப்பிள்ளையா மத்தவங்க சொல்லிக் கேட்க... சுயமா முடிவெடுக்கத் தெரியாதா என்ன..."

"சுயமா முடிவெடுக்கிறாளாம் சுயமா...? அறிவு கெட்டுப் போயி... நாங்கள்லாம் இருக்கும் போது இவுக போறாகளாம்..." கோபமாகப் பேசினார்.

"இப்ப எதுக்கு இவ்வளவு கோபப்படுறே சாம்பு" அவள் சாம்பு என்று மறுபடியும் சொன்னதும் அவருக்கு சர்வ நாடியும் அடங்கிப் போனது. பல வருடங்களுக்கு முன்னர் அவள் அவரை அப்படிக் கூப்பிட்டிருக்கிறாள். பின்னர் இப்போதுதான் சாம்பு என்று விளித்திருக்கிறார்கள். இடைப்பட்ட காலங்களில் பல வருடங்கள் பேசாமலேயே கழிந்தன... சில வருடங்களாக பேசினாலும் வா போ என்று சொல்வாளே தவிர பேரைச் சொல்லவோ அல்லது இந்தா 'சாம்பு'  என்று இப்போது சொன்னாளே...  அப்படி அழைக்கவோ மாட்டாள். 

"இப்ப என்ன சொன்னே...? சாம்பு... சாம்புன்னுதானே சொன்னே.."

அப்படி அழைக்கவே கூடாது என்றிருந்தவள் எப்படி அப்படி அழைத்தேன் என்று யோசித்தபடி "ஏதோ யோசனையில சொல்லியிருப்பேன்... சரி அப்படிச் சொன்னாத்தான் என்னவாம்... சாம்புன்னு சொல்ல எனக்கு உரிமையில்லையா என்ன..?" அவரிடமே கேள்வியைத் திருப்பினாள்.

அவள் அப்படிக் கேட்டதும் "உனக்கு உரிமை இருக்க மாதிரி எனக்கும் இருக்குல்ல... அதான் கேட்டேன்... சரி அதை விடு... நீ எதுக்காக இந்த முடிவெடுத்தே... நாங்கள்லாம்.... இல்லையில்ல நான் என்ன செத்தா பொயிட்டேன்..."

"ஏய் நீ எதுக்கு இப்ப இப்படிப் பேசுறே...? ஏதோ நீ ஒருத்தன் எனக்கு உறவா இருக்கேன்னுதான் உங்கிட்ட வந்தேன்... அதுவும் நாம ரெண்டு பேரையும் பிரிச்ச கடவுள் ஒரே ஊருக்குள்ள வாழக் கொடுத்து வச்சிருக்கான்... அதான் தைரியமா உங்கிட்ட யோசனை கேட்கலாம்ன்னு கிளம்பி வந்தேன்... நீ என்னடான்னா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறே... என்னையப் பொறுத்தவரை இதுதான் நல்ல முடிவுன்னு தெரியுது..."

"கடவுள் எங்க பிரிச்சான்... நாமதானே பிரிஞ்சோம்... இன்னைக்கு இது நல்ல முடிவுன்னு சொல்றவ அன்னைக்கு உங்கப்பன் முடிவைத்தானே ஆமோதித்தாய்... அன்னைக்கு இதுதான் நல்ல முடிவுன்னு பிடிவாதமா இருந்திருந்தா இன்னைக்கு இந்த நிலை வந்திருக்காது..."

அதைக் கேட்டுச் சிரித்த அன்னம், "சொந்த மாமன் மகன் நீ... குடும்பப் பகையில நம்ம காதல் எரிஞ்சி போச்சு... அன்னைக்கு நான் உன்னைத்தான் கட்டுவேன்னு நின்னுருந்த எரிஞ்ச பகையில எங்கப்பன் ஆத்தா உசிரும் சேந்திருக்கும். என்ன என்னோட கல்யாணத்துக்குச் சேராத குடும்பம் உன்னோட கல்யாணத்துல சேந்துக்கிச்சு... நான் தான் அனாதையா அழுதுக்கிட்டு கிடந்தேன்... சரி... விடு... காலம் போன பின்னால காலாவதி ஆன காதலை பேசி என்ன பண்ணச் சொல்றே... உனக்கும் நல்ல துணை... எனக்கும் நல்ல துணை... என்ன கொடுத்த கடவுள் என்ன நினைச்சானோ தெரியல... அவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு நம்ம ரெண்டு பேரையும் இப்படி தனிமரமாக்கிட்டான். ஆனா உனக்கு பிறந்தது உன்னை மாதிரி சொக்கத் தங்கம்... உன்னை தங்கமாப் பாத்துக்கிறான். ஆனா எனக்கு..." பேச்சை நிறுத்தி பெருமூச்சு விட்டாள்.

"இங்க பாரு அன்னம்... அவனுகளும் நல்லவனுங்கதான்... ஏதோ கால நேரம்... விடு... அதுக்காக இந்த முடிவு வேண்டாம். நாங்க எல்லாரும் பெரிய லெவல்ல இருக்கும் போது நீ தனியா அநாதையாட்டம் முதியோர் இல்லம் போறேன்னு சொல்றது வீம்புக்கு வேணுமின்னா சரியாத் தெரியலாம்... ஆனா மத்தவங்களுக்கு எப்படியோ எனக்கு... " என பேச்சை நிறுத்தியவர் "அது சரியில்லை... வேண்டாம் விடு..." குரல் உடைந்தது.

"ஏய் சாம்பு நீ என்ன இன்னும் என்னைய மறக்கலையா..? உன்னோட காதலை தூக்கிப் போட்டுட்டு அப்பன் காட்டுன ஆளுக்கு கழுத்த நீட்டுனவ நான்...  நீ எதுக்கு இப்ப கண் கலங்குறே... இங்க பாரு... ஒண்ணுக்கு ரெண்டு பிள்ளைகளைப் பெத்தேன்... என்னைய இங்கயும் அங்கயும் மாத்தி மாத்தி அடிக்கிறானுங்க... என்னால முடியல... மருமக்கள குத்தம் சொல்ல மாட்டேன்... அவளுக என்ன பண்ணுவாளுங்க... இவனுக சரியில்லை... அதான் யாருக்கும் பாரமில்லாம அங்க போயிடலாம்ன்னு பாக்குறேன்..."

"என்ன கேட்டே... மறக்கலையான்னா... அது சரி... மறக்கிற வாழ்க்கையாடி அது... " என்றவர் "சாரி அன்னம்... ஏதோ ஞாபகத்துல டி போட்டுப் பேசிட்டேன்... சரி விடு... அவனுககிட்ட நான் வந்து பேசுறேன்... என்ன சொல்றானுங்கன்னு பாக்குறேன்... ஒத்து வரலைன்னா பேசாம இங்க வந்திரு... மோகன் உன்னைய பெத்த தாயாட்டம் பாத்துப்பான்..."

"அத்தை மகளை டி போட்டு பேசுறது என்ன தப்பு... நீ வந்து அவனுககிட்ட பேசி மரியாதையை கெடுத்துக்காத... உனக்கு ஒரு அவமானம்ன்னா என்னால தாங்க முடியாது... எனக்காக விசாரி... நல்ல இல்லமாப் பாத்து சேர்த்து விடு... வாரம் ஒருவாட்டி வந்து பாரு... எனக்கு அது போதும்.. மோகன் நல்லாப் பாத்துப்பான்தான்... இல்லைன்னு சொல்லல... ரெண்டு பிள்ளைக இருக்கும் போது அவனுக்குப் பாரமா அங்க வந்து தங்கிக்கிட்டு நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறியா... அதுபோக பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க... வேண்டாம் விட்டுடு..." சொல்லியவள் சேலை முந்தானையால் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

"அழுகுறியா... ஏய்... அன்னம்... இங்க பாரு... இங்கருடி... நா... நா இருக்கேன்... உன்னைய எங்கயோ ஒரு அநாதை இல்லத்துல விட்டுடமாட்டேன்டி... கண்ணத்துடை... சரி... வா போகலாம்... எதையும் நினைச்சுக் கலங்காதே... நாளைக்கு நான் நல்ல முடிவாச் சொல்றேன்... நா என்ன முடிவு சொன்னாலும் அதை ஏத்துப்பேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு..." என்றபடி சிமிண்ட் பெஞ்சில் இருந்து எழுந்து அவள் முகம் நோக்கினார். 

"அன்னைக்கு என்னோட முடிவு நம்மளப் பிரிச்சிருச்சு... இன்னைக்கு நீ எடுக்கிற முடிவு எனக்கு விடுதலை வாங்கிக் கொடுக்குமின்னா கண்டிப்பா ஏத்துப்பேன்..." என்று சிரித்தபடி அன்னமும் எழ மெதுவாக பேசியபடி பூங்காவை விட்டு வெளியே வந்தார்கள்.

ரவெல்லாம் யோசிச்சிப் பார்த்து இதுதான் சரியான முடிவு என நினைத்து மறுநாள் மகனிடம் பேசினார். அவனுக்கு இதில் உடன்பாடு இல்லாததால் யோசித்தான். 

"இந்த வயசுல நம்ம கிராம வீட்ல தங்குறதுங்கிறது அவ்வளவு நல்லாயில்லைப்பா... நான் இருக்கும் போது நீங்க அங்க தங்கினா ஊருக்குள்ள தப்பா பேசுவாங்க... அதுவுமில்லாம அன்னம்மாவும் உங்க கூட தங்குறதை கிராமத்துச் சனம் எப்படி எடுத்துக்குமோ தெரியலை" என்று மெதுவாகச் சொன்னான்.

"ஏம்ப்பா... யோசிச்சிப் பாரு... நாமளும் அவளை விட்டுட்டா அவ எதாவது முதியோர் இல்லத்துல போயி அநாதையா நிப்பாப்பா... அவ அநாதையா நின்னா உங்கம்மா என்னைய மன்னிக்க மாட்டா... ஏன்னா அன்னத்தைப் பத்தி அவளுக்கு எல்லாமே தெரியும்... ப்ளீஸ் எனக்காக இதை ஏத்துக்க கொஞ்ச நாள் எனக்கு அவளும் அவளுக்கு நானும் உதவியா இருந்துக்கிறோம்..."

"அவங்க நிலைமை எனக்குப் புரியுதுப்பா... ஆனா ஊர்ல தப்பா..." எதுவும் சொல்லுவாரோ என பேச்சை நிறுத்தி அவரைப் பார்த்தான்.

அவரோ அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை அறிந்து "ஊர்ல எல்லாருக்கும் அவ என்னோட அத்தை மகள்ன்னு தெரியும்... இந்த வயசுல ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்கதுல என்ன தப்பு.... ஊர்ல யாரும் தப்பான கண்ணோட்டத்துல பேச மாட்டாங்க... அப்படியே பேசினாலும் அதைப்பத்தி எனக்கு கவலையில்லை... ஏன்னா எங்க உள்ளம் சுத்தமானதுன்னு எங்களுக்கும் தெரியும்... உனக்குந் தெரியும்.." என்றார்.

"அதுக்கில்லைப்பா.... வேணுமின்னா அன்னம்மா இங்க வந்து இருக்கட்டும்.." என்ற மகனிடம் அன்னம் பேசியதையெல்லாம் விவரமாய் எடுத்துச் சொல்லி ஒரு வழியாக அவனின் சம்மதத்தைப் பெற்றார். 

'என்ன தாத்தா அன்னப்பாட்டியோட லிவிங்க் டூகெதரா' என்று சொல்லிச் சிரித்த பேத்தியிடம் 'வாழ வேண்டிய வாழ்க்கையிடா... உனக்குப் புரியாது' என்று சொல்லிவிட்டு 'இந்த வயசுல அவ அநாதை இல்லத்துக்குப் போறதுக்கு என்னோட மனசு இடம் கொடுக்கலையேடி... என் செல்ல அன்னலெட்சுமி' என்று அவள் தலையை தட்டிவிட்டு அன்னத்திடம் சம்மதம் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் அவளைப் பார்க்கக் கிளம்பினார்.
-'பரிவை' சே.குமார்.

24 எண்ணங்கள்:

UmayalGayathri சொன்னது…

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரியான முடிவு... சுபம்...

KILLERGEE Devakottai சொன்னது…

T.M 1

இளமதி சொன்னது…

கதையை நகர்த்திய விதம் அருமை!

இயல்பான பேச்சு நடை மனதைக் கவர்ந்தது சகோ!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கதை! வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai சொன்னது…

கதை அருமை நண்பரே...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே அருமை
முடிவும் அருமை

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 5

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை அருமை அருமை அருமை!!!! வேறு வார்த்தைகள் இல்லை...சொல்லத் தெரியவில்லை...அந்த அளவு மனதைக் கவர்ந்தது.....நல்ல முடிவு!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

லிவிங்க் டூகெதர் மனதில் நின்றது. வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

அருமையான தகவல் சகோ ......

மேலும் ஆன்ராய்டு பயனர்களுக்கு 150 உடனடி இலவச ரீசாஜ்...!!! க்கு :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
தகவலைச் சொன்னதற்கு தங்களுக்கு நன்றி சகோதரி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் .
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி அண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் .
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் நண்பா .
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோ...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு சொன்னது…

நல்ல முடிவு ஏற்றுக் கொள்வார் அன்னம்.

Unknown சொன்னது…

கதையும் அருமை கதையைச் சொல்லிய விதமும் இயற்கையாக இருக்கிறது!
வாழ்த்துகள் குமார்!