மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 13 டிசம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 12)

முந்தைய பகுதிகள் : 


பதினோராவது பகுதியின் இறுதியில்...

"அவனை மயிரு... மட்டையின்னு பேசினியா?"

'ஆஹா.... இவன் அதை விட்டு வெளிய வரமாட்டேங்கிறானே...' என நினைத்தபடி ஒன்றும் பேசாமல் மிடறு விழுங்கினாள்.

"கேக்குறதுக்கு பதில் சொல்லுடி பரதேசி நாயே..." என்று கத்தியபடி எச்சிக்கையை அவள் கன்னத்தில் பளார் என இறக்க, எதிரே சாப்பிட்டுக் கொண்டிருந்த மகா 'அப்பா' எனக் கத்தினாள்.

இனி...

ணி எச்சில் கையால் சித்ராவை அடிக்கவும் மகா அப்பா எனக் கத்தியதும் ஏன் இப்படிச் செய்தோம் என மனசுக்குள் வருந்தியபடி சாப்பிடாமல் எழுந்து வெளியே சென்றான். சித்ரா வழியும் கண்ணீரை துடைக்கக் கூட என்னாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

மணி சித்ராவை அடிப்பது ஒன்றும் புதிதில்லை... அவனுக்கு கோபம் வந்தால் இப்படித்தான்... கிடைத்ததை எடுத்து அடிப்பான். ஆனால் எல்லாமே அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். மகா முன்னால் மனைவியை அடிக்க மாட்டான். ஆனால் இன்று வயசுக்கு வந்த மகளின் முன்னால் கை நீட்டிவிட்டான். மகாவுக்கு முன்னால இப்படி நடந்துக்கிட்டோமே என்று வெட்கப்பட்டான்... வேதனைப்பட்டான்.

"நீ சாப்பிடுடி..." மகளிடம் சொல்லியபடி தான் சாப்பிடாமல் எல்லாத்தையும் எடுத்து வைத்தாள் சித்ரா.

"எனக்கு வேண்டாம்..." என்றபடி அவளின் பதிலுக்கு காத்திராமல் எழுந்து சென்றாள். அப்போது அப்பாவின் போன் அடிக்க, வெளியே எட்டிப் பார்த்தாள். அவன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவளே போனை எடுத்துப் பார்த்தாள். குமரேசன் அழைப்பதாகக் காட்டியது.

"சித்தப்பா..." சுரத்தில்லாம் சொன்னாள்.

"மகா... என்னடா சோர்வா பேசுறே...? உடம்பு கிடம்பு சரியில்லையா...?"

"ஏய்... அதெல்லாம் இல்ல சித்தப்பா..."

"ம்... அப்பா எங்கே..?"

"வெளிய உக்காந்திருக்கார்... அப்புறம் பேசுங்க..."

"ஏண்டா.... பட்டும்படாமலும் பேசுறே... என்னாச்சு,,,?"

"என்னாகணும்...?" அடக்கி வைத்திருந்ததை கோபமாய் வெடித்தாள்.

"ஏய்... மகா... மகாக்குட்டி என்னாச்சுடா..?" பதற்றமாய்க் கேட்டான்.

"சித்தப்பா... அம்மா உங்ககிட்ட பேசினதை அப்பாக்கிட்ட சொன்னீங்களா?"

"ம்... ஆமா... அண்ணனுக்கு தெரியட்டும்ன்னு சொன்னேன்... எதுவும் கேக்காதேன்னு சொன்னேனே... ஏன்... என்ன பிரச்சினை... சத்தம் போட்டாரா?"

"......."

"மகா... பதில் சொல்லுடா... எங்க அம்மா... அப்பா?" ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து தவிப்பாய்க் கேட்டான்.

"அம்மாவை அடிச்சிட்டாரு..."

"அடிச்... அடிச்சாரா... அதுக்கு என்ன கிறுக்கா?"

"அதுவும் எனக்கு முன்னால..." விம்மினாள்.

"ஏய் செல்லம்... டேய்... அழுகாதே... சாரிடா... அப்பா... இப்படி..."

"அம்மா பேசுனது தப்புத்தான் சித்தப்பா... அவங்க பட்டிக்காடு... என்ன பேசுறதுன்னு தெரியாது... எல்லார்க்கிட்டயும் ஒரு மாதிரித்தான் பேசுவாக... ஆனா மனசுக்குள்ள பாசம் இருக்கும்... ஆனா நீங்க அவங்க அடிச்சிக்கணுமின்னு சொல்லலை... பட் அப்பா எச்சிக்கையோட... சே... வெறுப்பா இருக்கு சித்தப்பா..." அழுகையோட சொன்னாள்.

"அம்மா... எங்கே கொடு..."

"அவங்க பேசமாட்டாங்க சித்தப்பா... எனக்கு கூட எங்க சித்தப்பாவா இப்படின்னு உங்கமேல கோபம் கோபமா வருது... சாரி சித்தப்பா..."

"அட... என்னடா நீயி... நான் எதுக்குச் சொன்னேன்... என்ன சொன்னேன் அதுக்கிட்ட... இப்படி... அம்மாக்கிட்ட கொடு... நா பேசணும்..."

"அம்மா பேசுற நிலையில இல்ல சித்தப்பா... புரிஞ்சிக்கங்க..." கோபமாகப் பேசினாள். 

எழுந்து வந்த சித்ரா "இங்க கொடு..." என்றபடி போனை வாங்கி "சொல்லுங்க தம்பி..." என்றாள்.

"அண்ணி... சாரி அண்ணி... நா இப்படி நடக்கும்ன்னு நினைச்சிருந்தா சொல்லியிருக்கவே மாட்டேன்... நீங்க கேட்ட வார்த்தைகள்தான் என்னை அதுக்கிட்ட சொல்லச் சொன்னுச்சு... ஆனா இப்படி..."

"விடுங்க... நா பேசுனது தப்புத்தானே... நீங்க சொன்னதால எனக்கு வருத்தமில்லை..."

"அண்ணன் எங்கே...?"

"இந்தா அங்க கொடுடி..." என போனை மீண்டும் மகாவிடம் கொடுத்தாள். 

"இந்தாங்க போன்..." என மகா கொடுத்ததில் அவளிடம் இருந்த கோபம் இரண்டு பக்கமும் தெரிந்தது.

"ம்... சொல்லு..." என்றான் மணி.

"நீ என்ன லூசாண்ணே... படிச்சிப் படிச்சி சொன்னேன்.. வயசுக்கு வந்த பிள்ளைக்கு முன்னால... என்ன அம்புட்டுக் கோபம் உனக்கு...?"

"பேச்சு சரியில்லை..."

"பேச்சு சரியில்லைன்னா அடிப்பியா... எங்க இருந்து இதைக் கத்துக்கிட்டே...?"

"சரி நாளைக்குப் பேசுறேன்..." என போனைக் கட் பண்ணியவன் மெதுவாக எழுந்து உள்ளே வந்தான். சேரில் அமர்ந்திருந்த மகா அவனைப் பார்த்ததும் உள்ளே போக எழுந்தாள்.

"மகா..." 

அவளிடம் பதில் இல்லை.

"மகா...." அழுத்தமாகக் கூப்பிட்டான்.

"என்ன..?" கோபமாகக் கேட்டாள்.

"சாரி..."

"எதுக்கு..?"

"அப்படி நடந்துக்கிட்டதுக்கு என்னோட தப்புத்தான்... உனக்கு முன்னால... சாரி..." வருத்தமாகப் பேசினான்.

"எனக்கு வேணாம் உங்க சாரி... எங்கிட்ட பேசாதீங்க... உங்க பொண்டாட்டிக்கிட்ட சொல்லுங்க உங்க சாரியை... படிக்காத அவங்க பேசினதுக்கும் படிச்ச நீங்க பண்ணினதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு... மனுசனா... மிருகமா நீங்க... ரொம்ப வருத்தமா இருக்கு... ப்ளீஸ் எங்கிட்ட பேசாதீங்க... எதாவது சொல்லிடுவேன்..." என்றபடி கலங்கிய கண்களுடன் அறைக்குள் சென்று விட்டாள்.

சித்ராவைத் தேடினான்... பின்பக்கம் பாத்திரம் கழுவும் இடத்தில் அமர்ந்திருந்தாள். மெல்ல அவளின் அருகில் போய் அமர்ந்தான். இவனைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"சாரி சித்து..." மன்னிப்புக் கேட்கும் போது செல்லமாக கூப்பிடும் பேரை உபயோகித்தான். அதற்கு மசிவாள் என்ற நப்பாசையுடன்...

"...."

"ஏய் அதான் சாரின்னு சொன்னேனுல்ல..."

"...."

"பேசும்மா... ஏதோ வேகம்... அதான் இப்படி..." மெல்ல இழுத்தான்.

"...."

"பேச மாட்டியா... எந்தப்புத்தான்... "

"...."

"ஆத்தாளும் மகளும் பேசாதீக... நா எங்கிட்டோ போறேன்... பண்ணுன தப்புக்கு மன்னிப்புக் கேட்டா ரெண்டு பேருமே முகத்தை திருப்பிக்கிறீங்க...?" கத்தலாய்ச் சொன்னான்.

"செய்யிறதை செஞ்சிட்டு மன்னிப்பு கேட்டாப் போதும்ங்கிற நினைப்பு ஆம்பளைங்களுக்கே உரியதுதானே" படக்கென்று கேட்டாள்.

"ஏய்... அப்படியில்லை... அவசரப்பட்டுட்டேன்... மன்னிச்சிக்க... "

"எப்ப அடிச்சாலும் மன்னிச்சிக்கன்னு சொல்லி நடிச்சி என்னைய மாத்துறதுதானே உங்க வேலை... இது இன்னைக்கு நேத்தா நடக்குது... என்ன இன்னைக்கு புள்ளைக்கு முன்னால அடிச்சாச்சு... அவ மனசு என்ன பாடு பட்டிருக்கும்... யோசிச்சிங்களா?"

"தப்புத்தான்... அவ முன்னாடி இனிமே இப்படி நடக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணுறேன்..."

"ஆஹ்ககா... அரிச்சந்திர மகாராஜா... சத்தியத்தை காப்பாத்திருவீங்க... குடிக்க மாட்டேன்னு நூறு சத்தியம் பண்ணுனீங்க... எங்கங்க போச்சு அந்தச் சத்தியம்..? இன்னைக்குக்கூட குடிச்சிட்டு தானே வந்திருக்கீங்க..."

"...."

"சொல்லுங்க... வயசுக்கு வந்த பொட்டப்புள்ள இருக்குன்னு கொஞ்சமாச்சும் யோசிச்சீங்களா?"

"தப்புத்தான்... குமரேசன் நீ பேசினதைச் சொன்னதும் மனசு சரியில்லை.... அதான்..."

"ஆமா... ஆமா... குடிக்கிறதுக்கு ஒரு காரணம் வேணுமில்ல..."

"ஏய் கோபத்தை விடு.. வா..."

"எங்க... போய் படுங்க... நா அப்புறம் வந்து படுத்துக்கிறேன்..."

"கோபத்தை விடு கண்ணம்மா... வா... வெளிய பனியில உக்காந்தா சளி புடிச்சிக்கும்..."

"எனக்குத்தான் சனி புடிச்சி ரொம்ப வருசமாச்சே... சளி புடிச்சா செத்தா போவேன்..."

"ஜோக்கா... வாடின்னா.... வாம்மா..." கை பிடிச்சி இழுத்தான்.

"விடுங்க... என்னடா ரொம்ப அன்பா வந்து கூப்பிடுறீங்களேன்னு பாத்தேன்..."

"...."

"எது எப்புடிப் போனாலும் உங்களுக்கு கெழவியைத் தூக்கி மனையில வைக்கணும்... போங்க... என்னை கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுங்க.."

அவளின் கோபம் அவன் அறிந்ததே என்பதால் இதுக்கு மேல் பேசினால் சரிவராது... அவள் வரும்போது வரட்டும் என்ற நினைப்புடன் எழுந்தான்.

"கண்ணா... காலையில பஸ்ஸ்டாண்டுக்கு போகணும்ப்பா..." என்றார் கந்தசாமி.

"அதான் சொன்னீங்களே சித்தப்பா... அபியும் பிள்ளைங்களும் வாறாங்கன்னு... போயிருவோம்..."

"ம்... இல்ல மறந்துடாம இருக்கத்தான் ஞாபகப்படுத்துனேன்... நாளைக்கு வீடு ஜேஜேன்னு இருக்கும்..." சொல்லிச் சிரித்தார்.

"ஆமா... நாலு பேர் கூட இருந்தா கலகலப்புத்தானே...?" 

"ஆமா..."

"சரி தூங்குங்க... நானும் போறேன் படுக்க..." என துண்டை உதறி தோளில் போட்டபடி கிளம்பினான்.

வெகுநேரம் பேரன் பேத்திகள் வர இருக்கும் விடியலை நினைத்து சந்தோஷத்தில் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்தவரின் நெஞ்சுக்குள் தோன்றிய வலி கொஞ்சம் கொஞ்சமாக கூட ஆரம்பித்தது.
-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

Kasthuri Rengan சொன்னது…

பிரிய
பரிவை
தொடரட்டும் கதை...

Kasthuri Rengan சொன்னது…

த ம ஒன்று

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே!

ஒவ்வொரு அத்தியாயத்திலும்,கதையின் நகர்வு நன்றாக அற்புதமாகச் செல்லுகிறது. குழந்தைகள் வரும் சமயத்தில் அந்த பெரியவரின் உடல்நலம் பாதிக்காமல் இருக்க வேண்டும். எனக்கு கதைகள் மிகவும் பிடித்தமானதால் விடாது தங்கள் கதையுடன் பயணிக்கிறேன். தொடருங்கள். தொடர்ந்து பயணிக்கிறேன்.

என் பதிவுக்கும் வந்து கருத்துரையிட்டால்,மகிழ்ச்சியடைவேன்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
கதை மிக அருமையாக உள்ளது தொடருகிறேன்... தங்களின் பக்கம் த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
ரொம்ப நன்றி மது சார்...
கருத்துக்கும் வருகைக்கும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாக்களித்தமைக்கு நன்றி சார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
ரொம்ப நன்றி சகோதரி.
கருத்துக்கும் வருகைக்கும்...

தங்கள் பக்கத்தை தொடர்வதற்கான விண்டோ இணைக்க வில்லை போலும்... பேவரைட்டில் போட்டு வைத்திருக்கிறேன். மறந்து விடுகிறது.

கண்டிப்பாக வாசிக்கிறேன்... இனி தொடர்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்கள் தளம் பிரச்சினை சரியாகிவிட்டதா?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கதை போலன்றி நேராகப் பார்ப்பதுபோல் உள்ளது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வலியுடன் முடித்துவிட்டீர்களே..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வார்த்தைகளைக் காட்சிகளாக்கி
கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் எழுத்துக்கள்
அருமை
தொடருங்கள் நண்பரே
தொடர்கிறேன்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 3

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இயல்பாக தெளிவான நடையுடன் களை கட்டுகிறது கதை! தொடர்கிறேன்! நன்றி!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்களைப் போன்ற பெரியவர்களின் கருத்துக்கள்தான் எங்களின் எழுத்துக்களை மெருகேற்ற உதவும்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அம்மா...
இந்த வலிதானே வாரிசுகளை அறிய வைக்கும்,...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்களின் கருத்துக்கள் தானே எங்கள் எழுத்தின் உரம்....
நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாக்களித்தமைக்கு நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Yarlpavanan சொன்னது…

கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அப்படியே கண் முன் நடப்பது போல அருமையாகச் செல்கின்றது. தொடர்கின்றோம் நண்பரே!