மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

ஞாபகத்தில் வருகிறேனா?



உன்னோடான காதல்
மனசுக்குள் இன்னும் 
மயிலிறகாய் வருடிக்
கொண்டுதான் இருக்கிறது...

நீ கொடுத்த வாழ்த்து
அட்டைகள் இன்னும்
என்னோடு வாழ்ந்து 
கொண்டுதான் இருக்கின்றன...

நானும் நீயும்
அமர்ந்து பேசிய 
நாவல் மரம்
இன்னும் காய்த்துக்
கொண்டுதான் இருக்கிறது...

பெய்யும் மழையெல்லாம்
உன் துப்பட்டா துவட்டிய
தலையை நனைத்துச்
செல்லத்தான் செய்கிறது...

குடைக்குள் நனையும்
காதலர்கள் எல்லாம்
நீ பிடித்த குடையையும்
நாம் நனைந்த மழை
நாட்களையும் நினைவில்
நிறுத்தத் தவறுவதில்லை...

இப்படி நாம் வாழ்ந்த
நிகழ்வுகளை எல்லாம்
எப்படியும் மீட்டிப் 
பார்க்கிறேன் தினம் தினம்...

எல்லாம் மறந்தாயா...
இல்லை மரிக்கச் செய்தாயா...
தெரியவில்லை...
இருந்தும் கேட்கிறேன்...
உன் ஞாபகச் சுவற்றில்
எப்போதேனும் நான்
வந்து போகிறேனா...?
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

வருண் சொன்னது…

நல்ல கவிதை, குமார்! :)

****எல்லாம் மறந்தாயா...
இல்லை மரிக்கச் செய்தாயா...
தெரியவில்லை...
இருந்தும் கேட்கிறேன்...
உன் ஞாபகச் சுவற்றில்
எப்போதேனும் நான்
வந்து போகிறேனா...?***

பொதுவாக பெண்களுக்கு உயிருக்கு உயிராக் காதலிக்கவும் தெரியும்.. அப்படி காதலித்தவனை எளிதில் மறக்கவும் தெரியும்..ஆண்களுக்கு இந்த ரெண்டாவது தெரியாது.. அதான்

"பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது"னு கண்ணதாசனும் எழுதி வச்சாரு. அது இன்றும் என்றும் உண்மைதான். :)

vimalanperali சொன்னது…

வந்து போக வேண்டும் கண்டிப்பாக.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.

இரசிக்கவைக்கும் வரிகள்... பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
தம 3

J.Jeyaseelan சொன்னது…


நினைவை விட்டு நீங்காத நியாபகங்கள் அனைத்தும் சூப்பர் சார்...

துரை செல்வராஜூ சொன்னது…

நல்லவேளை!..
நமக்கெல்லாம் இந்த அனுபவம் இல்லை!..

மகேந்திரன் சொன்னது…

கனிரசம் சொட்டுகிறது சகோதரரே...
கவின்மிகு வரிகளில்...
அழகுக் கவிதை....

சசிகலா சொன்னது…

இத்தனை அழகாய் நினைவுபடுத்தும் போது மறக்கவும் தோனுமா ?

அழகு..

ezhil சொன்னது…

நல்ல கவிதை... பெண்களும் அவர்களின் காதலை மறப்பதில்லை. மறந்தது போல் நடிக்கிறார்கள். வேறு வழியில்லையே...காதலித்தவளின் பெயரை ஒரு ஆண் தன் குழந்தைக்கு வைக்க முடிகிறது..பெண்ணால் அதைச் செய்ய முடியுமா? காதலை மனதின் ஆழத்தில் புதைத்து வாழும் பெண்களை ஒரேடியாய் குறை சொல்லிவிட வேண்டாம்..வருண் அவர்களுக்காக இந்த பதில்...

KILLERGEE Devakottai சொன்னது…


நெஞ்சைத் தொட்டன நினைவலைகள்.

மனோ சாமிநாதன் சொன்னது…

நெஞ்சில் நிறைந்தவளுக்கு ஒரு அருமையான கவிதை!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனதைத் தொட்ட கவிதை.

ஆணென்றாலும், பெண் என்றாலும் எளிதில் மறக்க முடிவதில்லை! :)