மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

பாலு மகேந்திராவின் சந்தியா ராகம்


ல்லூரியில் படிக்கும் போது எங்கள் தேவகோட்டை திரையரங்குகளில் எந்தப் படத்தையும் வெளியாகிற அன்று திரையிடமாட்டார்கள். காரைக்குடிக்கு வந்து சென்ற பின்னர்தான் அங்கு வரும். இன்று நிலமை மாறிவிட்டது. அப்பொதெல்லாம் அடிக்கடி பழைய படங்களைப் போடுவார்கள். பழைய நல்ல படங்கள் மீது எப்போதும் எங்களுக்கு பார்க்கும் ஆவல் வருவதுண்டு. ரத்தக்கண்ணீர், மூன்றாம்பிறை எல்லாம் அப்படிப் பார்த்த படங்கள்தான். 

இயக்குநர் பாலு மகேந்திரா அவர்களின் படங்களை எல்லாம் தியேட்டரில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சில படங்களை தூர்தர்ஷன் வாயிலாகவும் திரையரங்குகளில் பழைய படங்களை எப்போதாவது திரையிடும் போதும் பார்த்திருக்கிறோம். மற்றபடி நிறையப் படங்களை பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு ஒளி ஓவியர் என்பது எல்லோரும் அறிந்ததே. வண்ண வண்ணப் பூக்கள் படத்தில் வரும் \இளம் நெஞ்சே வா...' பாடலில் அவரின் கேமரா கவிதை பாடியிருக்கும்.

அப்படிப்பட்ட கலைஞரின் காவியங்களை எல்லாம் பார்த்ததில்லை என்பதோடு இன்று ஜீ உமாஜி அவர்களின் வானம் தாண்டிய சிறகுகள் வலைப்பூவில் பாலுமகேந்திரா பற்றிய கட்டுரையை பார்க்கும் வரை பழசுகளை எல்லாம் தூசி தட்டிப் பார்க்கும் எண்ணம் இல்லை. தமிழ்ப்படங்களை விடுத்து தற்போது மலையாளத்தில் நல்ல கதையம்சம் உள்ள படங்களைப் பார்க்க ஆரம்பித்து இருப்பதால் அந்தக் கதையோட்டம் மிகவும் பிடித்துப் போய் அதற்குள் மூழ்கிவிட்டேன். அவரின் கட்டுரையில் இயக்குநரின் தேசிய விருது பெற்ற படமான சந்தியா ராகம் பற்றி சொல்லியிருந்தார். உடனே அதைத் தேடிப்பிடித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இன்று விடுமுறை என்பதால் மதியம் பிரியாணி செய்து சாப்பிட்டோம். பெரும்பாலும் முன் தின இரவு அதிக நேரம் விழித்திருந்தாலோ அல்லது தலைவலி என்றாலோ மட்டும்தான் மதிய உறக்கம் இல்லை என்றால் இணையத்தில்தான் உலாவுவேன். தற்போது முகநூலில் கேன்டி & கிரஷ் கேம் பெரும்பாலான நேரத்தை விழுங்க ஆரம்பித்திருக்கிறது. அந்த போதையில் இருந்து வெளிவர மீண்டும் எழுத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறேன். எங்கள் அறையில் இணைய வழியில் படம் பார்ப்பது என்பது முழங்கால் வலியோடு மலையேறுவது போன்றது. நின்று நின்று பார்ப்பதற்குள் நித்திராதேவி வந்து அணைத்துக் கொள்வாள்.

இன்று சந்தியா ராகத்தை யூடியுப்பில் தேடி எடுத்து பார்க்க ஆரம்பித்தால் என்ன ஆச்சர்யம். சின்னப்பய குடுகுடுன்னு மலையேறுற மாதிரி படம் எந்தத் தடங்களும் இல்லாமல் ஓட ஆரம்பித்தது. கருப்பு வெள்ளைப் படமான சந்தியா ராகம் படம் தொடங்குவதே கவிதையாய்... ஒரு கிராமத்தில் மாடு கத்தும் பின்னணியில் நாட்டுக்கட்டு சேலை கட்டிய பெண்கள் தண்ணீர் தூக்கிக் கொண்டு போவது, நாற்று நடுவது, எருமைகள் தண்ணீரில் நீந்துவது, மாட்டு வண்டி, பேன் பார்ப்பது, கோழிக்குஞ்சுகள் என கேமரா கவிதைகளை உள் வாங்கியபடி சொக்கலிங்க பாகவதரின் வீட்டுக்குள் நுழைகிறது. கட்டிலில் இருந்து எழும் சொக்கலிங்கம் தனது காலை மெதுவாக அழுக்கி எழுந்து முகம் கழுவி மனைவி விசாலாட்சியை அழைக்கிறார்.

அப்படியே போகும் கதையில் குளிக்கப் போகும் சொக்கலிங்கப் பாகவதர் சின்னக் குழந்தையாய் மாறி தண்ணீருக்குள் கல்லை எடுத்து தவளை விடுவது (தண்ணீரின் மீது கல்லை செரட்டி எறிந்தால் அது தாவித்தாவி போகும்... அதனால் அதை தவளை என்போம்) பசங்க விளையாண்டு அப்படியே விட்டுச் சென்ற சில்லு நொண்டி கட்டத்தில் வேஷ்டியை மடித்துக் கட்டி நொண்டி அடித்துப் பார்ப்பதும் சிறுவர்களின் பம்பர விளையாட்டை ரசித்து அதை தனது கைகளில் எடுத்து விடச் செய்வது என கிராமத்துப் பெருசில் துள்ளல் பெருசாக வலம் வருகிறார். இவரைப் போன்று ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு துடுக்கான பெரிசு இருப்பார். எங்க ஊரிலும் எங்கய்யா ஒருத்தர் இருக்கார்... எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்.  நாங்கள் அவரை இளைஞர் மன்றத் தலைவர் என்றுதான் வைத்திருக்கிறோம்.


வீட்டுக்கு வருபவர் தனது மனைவி இறந்திருப்பது கண்டு அழுவதும், காரியங்கள் முடிந்ததும் தனக்கு குழந்தைகள் இல்லாததால் சிறிய வாடகை வீட்டில் மனைவி அர்ச்சனாவுடனும் மகள் வள்ளியுடனும் (பேபி ராஜலட்சுமி)  வாங்கும் சம்பளத்தில் இழுத்துக்க பறிச்சுக்க என்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் தம்பி மகனான ஓவியர் வீர சந்தானத்தைத் தேடி சென்னை வருகிறார். கிராமத்தில் ஆர்ப்பரிக்கும் காட்டருவியாக சுற்றியவர் சென்னைக்குள் நுழையும் போதே சிகரெட்டுப் பிடிக்கும் சிறுவர்கள், ஆட்டோக்காரனின் சாவு கிராக்கி என்ற வசனம் என எல்லாம் தாங்கி எதோ வாழ்க்கையை ஓட்டணுமே என வீட்டு விலாசத்தைக் கேட்டுக் கேட்டு வந்து சேருகிறார்.

அவர் அங்கு வந்த இரவில் அறைக்குள் கணவனிடம் தங்களது குடும்பச் சூழலில் மாமா இங்கே தங்கி விடுவாரோ என அர்ச்சனா கேட்பதும் அதன் பின்னான பேச்சில் கணவன் மனைவியிடம் கோபமாக பேசுவதைக் கேட்க நேரும் போது உடைந்து போகிறார். அர்ச்சனா அப்படிக் கேட்கும் போது இவரும் சராசரி மருமகள்தான் என்று நினைக்கும் போது அடுத்த நாள் கணவனின் பையில் இருந்து காசை எடுத்து விட, அதை அறிந்து அவன் வினவ பாவம் அவர் வந்திருக்காருல்ல... வாய்க்கு ருசியா எதாவது சமைக்க வேண்டாம் என்று கேட்கும் போது அவரின் நல்ல குணம் பதியப்படுகிறது.

பேத்தியுடன் சினேகம், பள்ளிக்கு கொண்டு விடுதல், பால் வாங்கி வருதல், வயித்துப் பிள்ளைக்காரியான மருமகளுக்கு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொடுத்தல், மருமகள் வாங்கிய கடனைக் கொடுத்தல் என தனது வாழ்க்கையை வாழும் அவருக்கு பேத்திக்கு வாங்கிக் கொடுக்கும் வடையால் பிரச்சினை வர, மருமகள் அவரைக் கண்டபடி திட்டி விடுகிறார். அன்றிரவே யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். அவரைத் தேடும் படலத்துடன் அவர் காணாமல் போனதற்கு மனைவிதான் காரணம் என வீர சந்தானம் எரிந்து விழுவதுமாக கதை நகர்கிறது.

இதனிடையே முதியோர் இல்லம் செல்லும் சொக்கலிங்க பாகவதர் அங்கு மனநிறைவுடன் இருக்கிறார். மருமகளுக்கு கடிதம் எழுத, நிறைமாதக் கர்ப்பிணியான அவளோ அவரைத்தேடி அங்கு வருகிறாள். அவரிடம் தனது தவறுக்கு வருந்தி அழுது தன்னோடு வரும்படி கூப்பிடுகிறாள். தான் அங்கு சந்தோஷமாக இருப்பதைச் சொல்லி எல்லா இடமும் சுற்றிக் காட்டுகிறார். அப்போது ஒரு கிழவி மாமனாரை பக்கத்தில வச்சிக்காம துரத்திட்டிங்களேன்னு சொன்னதும் ஏய் உன்னைய வேணுமின்னா துரத்தியிருப்பாங்க... என்னைய எம் மருமக நல்லாத்தான் வச்சிக்கிட்டா.... நானாத்தான் வந்தேன்... ஆளைப்பாரு... நீ வாம்மா என்று அழைத்துச் சென்று அனுப்பி வைக்கிறார். மருமகளுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்று கேள்விப்பட்டு சந்தோஷத்தோடு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து அதன் கையில் தனது விரலை வைக்கிறார். அது அவரது விரலைப் பிடிப்பதோடு படம் முடிகிறது.

சொக்கலிங்க பாகவதர் கிராமத்து கிழவனாகவே வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு பிரமிக்க வைக்கிறது. வீடு படத்தை தூர்தர்சனில் பார்க்கும் போது ஒரு வீட்டையும் இந்தக் கிழவரையும் காட்டும் போது அந்த வயதில் இந்தாளையும் வீட்டையும் வச்சி படம் ஓட்டுறான் பாரு.... இந்தக் கிழவனை எங்க இருந்துடா புடிச்சானுங்க எனச் சொல்லியிருக்கிறோம். ஆனா இதில் காபி குடிக்கும் போது, மனைவி இறக்கும் போது, மருமகளிடம் மனைவியின் சமையல் பற்றி பேசும் போது, மகனிடம் கக்கூஸ் எங்கப்பா இருக்குன்னு கேக்கும் போது, மருமக திட்டும் போது, நாடக நாயகனாக நடித்துக் காட்டும் போது... என இப்படியே போதாமல் பல போதுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவரை பாலுமகேந்திரா மட்டும்தான் அழகாக பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கும் போது நல்ல கலைஞனை மற்றவர்களும் பயன்படுத்தி இருக்கலாமோ எனத் தோன்றியது.

வீர சந்தானம் சாதாரணக் குடும்பத்து நாயகனாக அருமையாக நடித்திருக்கிறார். சண்டை போட்டுப் படுத்திருக்கும் மனைவியின் மீது கையை வைக்கவும் அவர் விலகவும் அவரிடம் அவர் மெதுவாகப் பேசுவதும் பின்னர் மனைவிக்கும் குழந்தைக்கும் போர்த்தி விட்டுவிட்டு படுப்பதும் பெரியப்பாவைத் தேடித் திரிவதும், அந்தக் கோவத்தில் மனைவி சாப்பிட்டுச் செல்லச் சொல்லும் போது ஆமா அங்க உக்காந்திருக்கவன் உங்கப்பந்தானே என்று சொல்லிச் செல்வது என மிகையில்லாமல் நடித்திருக்கிறார்.


அர்ச்சனா... சொல்லவே வேண்டாம்... ஊர்வசி விருது பெற்றவரல்லவா... நடிக்கச் சொல்லியா தரவேண்டும். வரவுக்கும் செலவுக்கும் தட்டுத் தடுமாறி வாழ்க்கை நடத்தும் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். கணவனிடம் எதாவது பழம் வாங்கிட்டு வாங்க என்று சொல்லும் போது காஷ்மீர் ஆப்பிள் வாங்கிட்டு வரவா... குடுக்கிற மூணு ரூபாயில பேச்சைப் பாரு... என்று அவன் சொல்லிச் செல்ல அப்படியே முகத்தில் ஒரு சின்ன புன்னகை அரும்ப விடுவார் பாருங்கள்... சான்ஸே இல்லை... இப்படி சீனுக்கு சீன் கலக்கியிருப்பார்.

டீக்கடையில் அமர்ந்து பேசும் போது பெரியவர்களை கவனிக்காத பிள்ளைகள் பற்றி பேச்சு வரும் போது வாழ்வின் வலியையும் அழகாகப் பதிந்திருக்கிறார் பாலுமகேந்திரா. கலர் படமாக இருந்தால் காட்சிப் படுத்துதலில் பார்வையாளனின் பார்வை கதாபாத்திரங்களை விடுத்து பின்னணிக் காட்சியில் போய்விடும் என்பதால் இது போன்ற படங்களை கருப்பு வெள்ளையில் வெளியிடவே பாலுமகேந்திரா விரும்பியதாக மாலியன் என்பவரின் கட்டுரையில் படித்திருக்கிறேன். அது உண்மைதான் போல... கருப்பு வெள்ளையில் அந்த மனிதர்களையும் அவர்களின் மனங்களையும் அருமையாகப் படம் பிடித்திருக்கிறார். படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்குப் பிறகே பெயர் போடுகிறார். அப்படிப் போடும் போது 'எம்தோழனும் தந்தையுமாகிய பாலநாதனுக்கு சமர்ப்பணம்' என்று வெள்ளை எழுத்துக்களை கருப்புப் பின்னணியில் காட்டுகிறார்.

பின்னணி இசை எல். வைத்தியநாதன் என்று போடுகிறார்கள். குன்றக்குடி வைத்தியநாதனோ? பாலுமகேந்திரா என்னும் மகா கலைஞனின் இது போன்ற படங்களை தேடிப் பிடித்து பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டது இந்தச் சந்தியா ராகம்.

சந்தியா ராகம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம்.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

இந்தப் படம் பார்த்ததில்லை.

எல் வைத்யநாதன் குன்னக்குடி வைத்யநாதன் இல்லை. இவர் வேறு கர்னாடக இசைக் கலைஞர். எல் சுப்ரமணியத்தின் சகோதரர்.

J.Jeyaseelan சொன்னது…

அப்படீன்ன இந்தப் படத்த பார்த்துற வேண்டியது தான், நல்ல பதிவுக்கு நன்றி சார்...

KILLERGEE Devakottai சொன்னது…


பாலுமகேந்திரா ஒரு பிறவிக்கலைஞன்.

கோமதி அரசு சொன்னது…

அருமையான படம். சொக்கலிங்கப் பாகவதர் நடிப்பு மிக அருமையாக இருக்கும். விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறீர்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படத்தினைக் காண வேண்டும் என் ற ஆர்வம் மேலிடுகிறது
அவசியம் பார்க்கிறேன் நண்பரே
நன்றி

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma 3

Kasthuri Rengan சொன்னது…

நல்ல பதிவு ..
தம கூடுதல் ஒன்று ...

Yoga.S. சொன்னது…

இந்தப் படம் நானும் பார்த்திருக்கிறேன்.அருமை.பாலு மகேந்திரா இலாபமீட்டும் நோக்கில் திரைப் படங்கள் இயக்கியதில்லை.

Yarlpavanan சொன்னது…

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அவரின் மிக நல்ல படஙக்ளில் இதுவும் ஒன்று......

மீண்டும் பார்க்கத் தூண்டிவிட்டது உங்கள் பதிவு.