மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

மனசின் பக்கம் : உறவுக்காக கொஞ்சம்...

சென்ற வாரம் நவீன சரஸ்வதி சபதம் என்று ஒரு படம் பார்க்க நேரிட்டது. நகைச்சுவையாக இருக்கும் என்று நண்பர்கள் சொன்னதால் நம்பி பார்க்க ஆரம்பித்து படம் முடியும் போதுதான் தெரிந்தது வந்த குப்பையில் இதுவும் ஒன்றென்பது... லாஜிக்கே இல்லாமல் கதை சொல்லும்... லாஜிக் மட்டுமா கதையும் இல்லைங்க... பேச்சிலர் பார்ட்டிக்காக வெளிநாட்டுக்குப் போறானுங்க... குடி என்பது தமிழ்ச் சினிமாவின் அடையாளமாகிவிட்டது போல... அம்மா ஆட்சியில் 400 கோடி, 500 கோடிக்கெல்லாம் சரக்கு விக்கவும் குடியை பிரபலப்படுத்தினால் அம்மா தண்ணியா இறைப்பாங்கன்னு நம்பிக்கைபோல ம்... என்னத்தைச் சொல்ல... எத்தனையோ நல்ல இயக்குநர்கள் வந்து கொண்டிருக்கும் தமிழ்த்திரையுலகில் இப்படியும் படங்கள் வரத்தான் செய்கின்றன.

Photo: எனது " இளமை எழுதும் கவிதை நீ.... 
நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் 
உங்களின் வருகையும் வாழ்த்துக்களும் 
இந்த இனிய நிகழ்வை மேலும் மெருகூட்டட்டும்

எனது அன்பிற்குரிய அண்ணன் குடந்தையூர் சரவணன் அவர்கள் தனது முதல் புத்தகமான 'இளமை எழுதும் கவிதை நீ' என்னும் படைப்பின் வெளியீட்டு விழாவை வரும் ஜனவரி-5 ஆம் தேதி வைத்திருக்கிறார். சென்னை நண்பர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள். தலைப்பைப் போலவே கவிதையாய் எல்லோரையும் கவர்ந்த தொடர் இது. அனைவரும் வாங்கி வாசியுங்கள்.அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

எனது பாசத்திற்குரிய அக்கா ராமலக்ஷ்மி அவர்கள் தனது முதலாவது தொகுப்பாக சிறுகதைகள் அடங்கிய அடைமழை என்றும் நூலை அகநாழிகை பதிப்பகம் மூலமாக வெளியிடுகிறார். புகைப்படக் கலையில் பிரபலமான அக்காவின் சிறுகதைகள் மிகவும் அருமையாக இருக்கும். கண்டிப்பாக வாங்கி வாசியுங்கள். அக்காவுக்கு வாழ்த்துக்கள்.

Photo: 2012 இறுதியில் சிறுகதைத் தொகுப்பு வெளியிடக் கேட்டு படைப்புகளை அனுப்பியவர் ராமலஷ்மி. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பொறுமையோடு காத்திருந்து வெளிவருகிற ஒரு சிறுகதைத் தொகுதி இது.மிகச் சிறப்பாக எழுதி வருகிறவரும்கூட. இவரது கதைகளை வாசிக்கையில் (கிட்டத்தட்ட நான்கு முறை பதிப்பிக்கிற ஒவ்வொரு படைப்பையும் வாசிக்கிறேன்) நான் உணர்ந்தது ஒன்றே ஒன்றுதான். புனைவுகளற்ற எளிய மொழியில் எல்லோருக்கும் சென்றடைகிற விஷயங்கள் சொல்வதற்கான எழுத்தாளர்கள் இங்கில்லை. படித்தவர்களுக்கு எழுதுவது வேறு. பாமரர்களுக்கும் புரியும்படியாக எழுதுவது வேறு. எல்லோருக்கும் புரிகிற எளிய மொழியிலான கதைகளைச் சொல்லியிருக்கிறார் ராமலஷ்மி. அவை எளிய மனங்களால் புரிந்து கொள்ளக்கூடியவை.

வலைச்சரத்தில் அறிமுகம் என்பது எனக்கு அடிக்கடி கிடைக்கும் சந்தோஷம். இன்று அம்மா கோமதி அரசு அவர்கள் நினைவுகள் குறித்த பகிர்வில் என்னையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள். மிக்க நன்றி அம்மா.

பதிவர்களைப் பொறுத்தவரை நான் சிலரைப் பார்த்து வியப்பதுண்டு. அப்படி வியந்த பதிவர்களில் முக்கியமானவர் இருவர். முதலாமவர் திண்டுக்கல் தனபாலன்  சார் அவர்கள். எல்லாருக்கும் பின்னூட்டம் இட்டு வலைச்சர அறிமுகத்தை மறக்காமல் எடுத்துச் சொல்லி உண்மையிலேயே உயர்ந்த குணம்தான். பெரும்பாலும் நான் பின்னூட்டம் இடப்போகும் எல்லா இடத்திலும் எனக்கு முன் பின்னூட்டம் இட்டிருப்பார். தளத்தில் எதாவது தவறு என்றாலும் உடனே சுட்டிவிடுவார்.

அடுத்தவர் வெங்கட் நாகராஜ்  அண்ணன்... மூன்று நான்கு பதிவுகளுக்கு அண்ணன் வரவில்லையே என்று நினைத்தால் பொறுமையாக நமது பதிவுகள் எல்லாவற்றையும் படித்து பின்னூட்டம் இட்டிருப்பார். நானும் சில நாட்கள் சோர்வினாலோ அல்லது வேறு காரணங்களாலோ நண்பர்களின் தளம் செல்வதில்லை. பின்னர் செல்லும் போது பெரும்பாலும் கடைசியாக எழுதிய பதிவைத்தான் வாசிப்பதுண்டு. அப்போது அண்ணனைத்தான் நினைத்துக் கொள்வேன்.

நார்த் 24 காதம் என்ற பகத் பாசில் மலையாளப் படம் பார்த்தேன். மிகவும் அருமையான படம். கதை என்று பார்தால் ஒண்ணுமேயில்லை... ஆனால் அதைக் கொண்டு சென்ற விதம் மிகவும் அருமை. ஒரு முழு அடைப்பு தினத்தன்று நடந்தே போக வேண்டிய சூழலில் கதை பயணிக்கிறது. மிகவும் சுத்தக்காரரான பகத் பாசில், நெடுமுடி வேணு, சுப்ரமணியபுரம் சுவாதி இவர்களின் பயணத்துடன் நம்மையும் பயணிக்க வைக்கிறது. அருமையான படம்.

இருதினங்களுக்கு முன்னர் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடிய எனது அருமை நண்பனும் மிகச்சிறந்த கவிஞனும் தமிழ்குடிலின் நிர்வாகியுமான தமிழ்க்காதலன் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

இரண்டு சிறுகதைப் போட்டிகளுக்கு அனுப்பியிருக்கிறேன். போட்டி விதிமுறைகளின்படி விரிவாக சொல்லக்கூடாது என்பதால் முடிவுகள் வரட்டும்... வென்றதா கோட்டைவிட்டதா என்பதைச் சொல்கிறேன்.

இங்கு வெயில் போட்டாலும் கொன்று எடுக்கிறது. குளிர்ந்தாலும் ஒரேயடியாக குளிர்கிறது. இங்கு வந்து ஐந்து வருடத்தில் இந்த முறை குளிர் அதிகம் இருப்பது போல் தெரிகிறது. மாலை வேளைகளில் அறையை விட்டு இறங்க முடிவதில்லை. ஊட்டி கொடைக்கானலில் இருப்பது போல் இருக்கிறது. இப்படி கடும் வெயில் கடுங்குளிர் என மாறி மாறி வரும் போது இயற்கையைப் பார்த்து வியப்பாய் இருக்கிறது.

ஆன்ட்ரியாவின் போட்டோவை எனது லேப்டாப்பில் வைத்திருந்தேன். அதைப் பார்த்த நண்பர்கள் எல்லாருமே கேட்ட ஒரே கேள்வி 'என்ன ஆன்ட்ரியாவை வச்சிருக்கே?' என்பதுதான். அடப்பாவிங்களா... ஒரு படம் பிடித்திருந்து வைத்தால் என்னடா ஆன்ட்ரியா படமெல்லாம் வச்சிருக்கேன்னு கேக்கமாட்டீங்களா... குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிருவானுங்க போலவே... ஆவ்...


2013 தனது இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் எனக்கு எப்படியிருந்தது என்பதை ஒரு பதிவாக சொல்லலாம் என்பதால் அடுத்த பதிவில் பார்ப்போம்.

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
அனைத்தும் சிறப்பு..
இனிய புத்தாண்டு வாழத்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

மனசின் பக்கம்,அருமை!!!///எனக்கும் நஸ்ரியா வ (கம்பியூட்டர்ல)வச்சிருக்கணும் னு ஆச தான்,என்ன பண்ணுறது.இருக்கிறதே ஒண்ணு(கம்பியூட்டர்) தானே?ஹ!ஹ!!ஹா!!!

Menaga Sathia சொன்னது…

மனசின் பக்கத்தை ரசித்தேன்..

குடந்தையூர் சரவணன் மற்றும் ராமலஷ்மி அக்காவுக்கு வாழ்த்துக்கள்..

நீங்கள் இன்னும் நஸ்ரியாவுக்கு மாறவில்லையா?? இன்னுமா ஆண்ட்ரியா போட்டோ வைத்திருக்கீங்க..சும்மா ஜோக்!!

அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ!!

அப்புறம் இந்த புது வருடத்தில் கலையாத கனவுகள் தொடர்கதை அடுத்த பயங்கர த்ரில்லர் தொடர்கதை எழுதுங்கள்..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நண்பர் குடந்தையூர் சரவணன் மற்றும் சகோதரி ராமலட்சமி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha/ma/2

ஸ்ரீராம். சொன்னது…

ராமலக்ஷ்மி மற்றும் குடந்தையூர் சரவணன் இருவருக்கும் வாழ்த்துகள்.

ந.ச.ச படம்லாம் பார்க்குமளவு பொறுமை இருக்கிறது உங்களிடம்!

சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக்க நன்றி குமார்:)! சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

போட்டிகளில் வெற்றி பெற தங்களுக்கும் வாழ்த்துகள்.

வரும் புத்தாண்டில் கனவுகள் யாவும் மெய்ப்படட்டும்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முதலில் மிக்க நன்றி...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

கோமதி அரசு சொன்னது…

மனசின் பக்கம் அருமை.
குடைந்தையூர் சரவணன் அவர்களுக்கும், ராமல்க்ஷ்மி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மனசின் பக்கத்தில் நானும் இடம்பெற்றதர்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சாரை எப்போதும் வியப்பாய் நானும் நினைப்பது உண்டு. நல்ல மனிதர், நல்ல உதவும் மன்ம் உடையவர்.
அவருக்கும் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அன்பின் குமார்,

என்னைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி அவர்களுக்கு, சரவணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.......

சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

r.v.saravanan சொன்னது…

தங்களின் மனசு பக்கத்தில் எனது நூல் வெளியீட்டு நிகழ்வை குறிப்பிட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி குமார்

அடைமழை நூல் வெளியிடும் வலைபதிவர் ராமலக்ஷ்மி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்