மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

நினைக்கத் தெரிந்த மனமே...


அவள்...  நிம்மி... 

நினைத்தாலே இன்னும் இனிக்கிறாள்...

எப்படி எனக்குள் வந்தாள்?

கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் போது திரைமறைவில் இருந்து சிரிக்கிறாள் அந்தக் கள்ளி...

எப்பவும் போல் அதே கல்லூரிச் சாலை... காலையில் பரபரப்பாய் இருக்கும்  மாணவர்களின் ஊர்வலம்... இதைத்தான் கடந்த ஒன்னறை வருடங்களாகப் பார்க்கிறேன். நாங்களும்... நாங்கள் என்றால் நான், அஸார், சேவியர்... அப்புறம் கண்ணன்... பல கதைகள் பேசியபடி மெதுவாக நடக்கிறோம். பள்ளி செல்லும் பிள்ளை புத்தக மூட்டை தூக்கிச் செல்லும் காலத்தில் இந்த வருட ஆரம்பத்தில் வாங்கிய ஒத்தை அக்கவுண்டன்சி நோட்டைத் தூக்கக் கஷ்டப்பட்டு சேவியரின் சைக்கிள் கேரியரில் வைத்துவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தோம் எங்களுக்கு இணையாக சேவியரும் ஸ்லோ ரேஸ் சைக்கிள் போட்டியில் ஓட்டுவதைவிட சைக்கிளை ஸ்லோவாக ஓட்டிக் கொண்டு வந்தான். அப்பத்தான் 'கிணி'ங் என்ற இரட்டை மணியோசை இதயம் தொட்டது.

இம்புட்டு இடம் கிடக்கும் போது நமக்குப் பெல் அடிக்கிறது யார்டா? என்றபடி அஸார் திரும்ப... எல்லாரும் திரும்பினோம். இரட்டை தேவதைகள் எங்களைக் கடந்தார்கள். அதில் சிவப்பு தாவணியிட்ட சிவப்பு மங்கை சற்றே திரும்பி நோக்கினாள். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பதாக என் கண்கள் அவளை நோக்க, அவளோ என் பின்னே வரும் மற்றொரு சைக்கிளை நோக்கினாள் என்பது அவள் கண்ணின் பார்வை போகும் திசையில் பயணித்துப் போனபோது பின்னால் வந்த மூன்றாவது தேவதை கையாட்ட கண்டு கொள்ள முடிந்தது. அண்ணலும் நோக்கினான் அவள் நோக்கவில்லை என்பதால் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்த போது அதுவரை அடிபட்ட அரசியல் சற்றே பின்னால் போக தேவதைகள் முன்னேறினார்கள்...

"யாருடா இவளுக... புதுசா இருக்காளுங்க..." மெதுவாகக் கேட்டான் சேவியர். பதிலைப் பெறும் ஆவலில் எல்லாம் தெரிந்த கண்ணனை நோக்கினேன் நான்.

"அட பர்ஸ்ட் பிஸிக்ஸ்... அந்த அரக்கு சுடிதார் இருக்குல்ல அது தேர்ட் மாத்ஸ் மணிகண்டன் தங்கச்சி., பின்னாடி தனியா போனது அண்ணாநகர்ல இருக்கு அப்பா கிராமத்துக் ஸ்கூல் டீச்சருடா... சரியான வாயாடி.. வகுப்புல அதுக்கு பேரே பிபிசியாம்..."

"நம்ம கிளாஸ் விமலாவை விடவாடா... வாய் நீளம்" என்றான் அஸார், அவனுக்கு விமலாவைப் பார்த்தாலே பிடிக்காது, வாயாடி வசந்தா வந்துட்டாடான்னு கத்துவான். சிவப்புத் தாவணியை மறந்துட்டாய்ங்களேன்னு கவலையா இருந்துச்சு...

"விமாலாவை விட இவ செம வாயாடியாண்டா..." அப்படியே பேச்சை நிறுத்தினான். சிகப்புத் தாவணி பற்றி இப்போதும் சொல்லவில்லை... அடேய் சொல்லேன்டா மனசு அடித்துக் கொண்டது. கேட்கப் பயம் எனக்கு, அவளைக் குறிப்பிட்டுக் கேட்டா அப்புறம் கொஞ்ச நாளைக்கு நாந்தான் அவனுகளுக்கு மெல்லு பொருளாவேன். அதனால் கேட்காமல் தவி(ர்)த்தேன்.

"என்னடா எல்லா விவரமும் சொல்லுறே... அந்த சிவப்புத்தாவணியப் பத்தி சொல்லலை...." இதுவும் சேவியர்தான்... எனக்கு தெய்வமாகத் தெரிந்தான்.

"ஓ... அவளா... அவ பேரு நிர்மலா... எல்லாருக்கும் நிம்மி.."

"ஜிம்மியா?" கேட்டுவிட்டு பெரிதாக சிரித்தான் சேவியர். ஜோக் அடிச்சிட்டாராம்... நம்ம நெஞ்சு அடிச்சிக்கிறது தெரியாமா ஜிம்மி அம்மின்னு... சீ கம்முனு இருன்னு கத்த ஆசை... அடக்கிக் கொண்டேன்... அவனே விட்டு விட்டுப் பேசுறான்... இவன் வேற நகர்ற தேருக்கு கட்டை போட்டுக்கிட்டு... சொல்லாமப் போகப் போறாண்டா...  அடேய் அடங்குடா... 

"இருடா... அவன் சொல்லட்டும்..." இந்த முறை அஸார் என் மனசறிந்து பேசினான்... நல்லா இருப்பேடா நண்பா.

"அப்பா இல்லை.... அம்மா போஸ்ட் மாஸ்டரா இருக்காங்க... ஒரு அக்கா... ஒரு அண்ணன்.. அவளுக்கு செல்லப் பெயர் ஒண்ணும் இருக்கு... அதுதான் பட்டு... வீட்டுலயெல்லாம் அவ பேரு பட்டுத்தான்..."

"அவதான் அழகா இருக்காளே... அப்புறம் எதுக்கு பட்டுப் போகச் சொல்லணும்...?"

"மூதேவி... பட்டுன்னா... பட்டம்மாள்... பாட்டி பேரோ... பூட்டி பேரோ... அது எதுக்கு... பேரை சொன்னா கேட்டுக்கணும்... ஆராயக்கூடாது..."

"ம்.. ஆமா அக்கவுண்டன்சியில பாலன்ஸ் ஷீட் பத்திக் கேட்டால் உனக்குத் தெரியாது... பொண்ணுங்க டீடெயில் மட்டும் தூக்கத்துல எழுப்பிக் கேட்டாலும் கரெக்டா சொல்லுவேடா... உனக்கு உங்கப்பா கண்ணன்னு அன்னைக்கே கணிச்சுப் பேர் வச்சிருக்காருடா..."

"அப்படி இப்பிடி கலெக்ட் பண்ணுறதுதான்... ஆமா ஒரு செமஸ்டர் முடிச்சிட்டாளுங்க... இப்பத்தான் பாக்குறமாதிரி கேக்குறீங்களேடா... காலேசுல படிக்கிறீங்கன்னு சொல்ல வெக்கமாயில்லை... இந்த பட்டு இருக்காளே ரொம்ப தைரியமானவ... எதுக்கும் பயப்படமாட்டா... ஒரு ஸ்டிரைக் அப்போ அவங்க கிளாஸ் பொண்ணுங்களை கூட்டிக்கிட்டு உள்ளே போயி பிரச்சினை பண்ணியது இவதான்... இப்ப ஞாபகம் இருக்கா..."

அட ஆமா.... இவளா அவ... கூ......கூன்னு எல்லாரையும்  கூவ வச்சவளாச்சே... எப்படி மறந்துச்சு... அதுசரி... அப்ப இவளைப் பத்தி யோசிக்கலையில்ல... அதுக்கப்புறம் இவளைப் பார்த்தாலும் அதிகம் கண்டுக்கவே இல்லை... அப்போ இம்புட்டு மெருகு இல்லையின்னு நினைக்கிறேன்...என்று யோசிக்கும் போதே...

"அவளாடா இவ... அன்னைக்கு பார்த்தப்போ இப்படித் தெரியலையே... முகம் ஞாபகத்து வரலை" என்றான் சேவியர்.

"அவதான்... உங்களுக்கு எங்க பொண்ணுகளைப் பார்க்க நேரமிருக்கு... எப்ப பார்த்தாலும் புரபஸர்ஸ் பின்னால சுத்தத்தான் நேரம் இருக்கு... பெரிய படிப்பாளிங்கன்னு பேரெடுத்து என்னத்தை சாதிக்கப் போறீங்களோ... பொது அறிவு சுத்தமா இல்லாம..."

"விடுடா... சும்மா எங்கள ஓட்டாம... உன்னோட பொது அறிவை வச்சி நாங்க சமாளிச்சிக்கிறோம்... வா..." நாந்தான் பேசினேன்... படிப்பாளி... புத்தகப்புழு... லைப்ரரி டேபிள்ன்னு எல்லாம் சொன்ன எனக்கு பயங்கரமா கோபம் வந்துடும் தெரியுமா?

அன்னைக்கு மத்தியானம் எங்க கிளாஸ்க்கு அருகிலுள்ள தண்ணீர் அண்டாவில் தண்ணி குடிக்க வந்தாள்... அவள் கைபட்டு சங்கிலியில் கட்டப்பட்ட டம்ளர் கூட பட்டாய் ஜொலித்தது. அவளையே பார்ப்பேன் என அடம்பிடித்தது எனது கண்கள்.... அவள் ருசித்தாள்... நான் ரசித்தேன்...

மாலை அவள் சைக்கிளை எடுக்கும் வரை வேண்டுமென்றெ பிகாம் நண்பனுடன் மொக்கை போட்டுக் கொண்டிருந்தேன். நண்பர்கள் கத்திக் கொண்டிருந்தார்கள். என் நேரமோ... இல்லை எப்பவும் அப்படித்தானோ தெரியவில்லை சைக்கிளை உருட்டிக் கொண்டே எங்கள் முன்னே நடந்தாள் துணைச் சாமிகள் அருகில் வர உற்சவ மூர்த்தியாய் அவள் தனித்துத் தெரிந்தாள்.

பின் தொடரும் படலமும்... கண் தேடும் படலமுமாக நாட்கள் ஓட அவளுக்காகவே லைப்ரரியில் வாலண்டியராகச் வாலண்டாப் போய்ச் சேர்ந்தேன். பெரும்பாலும் அவள் வரும் நேரம் பார்த்துச் சென்றேன்.... பார்த்தேன்... பார்த்தாள்... சிரித்தேன்... சிரித்தாள்... பேசினேன்... பேசினாள்... பழகினேன்...பழகினாள்...  அப்புறம் பழகினோம்...

பின்பு எனக்காக அவளும் அவளுக்காக நானும் காத்திருக்கும் நாள் மூன்றாம் ஆண்டின் ஆரம்பத்தில் எங்களுக்குள் ஆரம்பமானது. எனக்காக அவள் நட்பைத் துறந்தாள்... அவளுக்காக நான் நட்பைத் துறந்தேன்... மாலை நேரம் எங்களுக்கு மைதானமே பேச்சிடமானது... காலையும் மாலையும் கூட்டமாய் மாணாக்கர்களை வழி நடத்திய கல்லூரிச் சாலை இருட்டும் வேளையில் எங்களுக்காக மட்டும் கருநீல மெத்தை விரித்து வைத்தது.

எப்பவும் அவள்... ஞாபகமெல்லாம் அவள்... விடுமுறை தினம் கூட அவளைப் பார்க்காது கழிவதில்லை... எல்லாமே அவளாகிப் போனாள்.

படிப்பு முடிந்து வேலை தேடி அலைந்த போதும் ஆறுதலாய் அவளின் போன்கால்... ஒரு நாள் அவள் குரல் கேட்க விட்டாலும் அந்த நாள் என் அகராதியில் யுகமாய் கழிந்த நாளாய்த்தான் இருந்தது. பட்டென்று அண்ணன் அனுப்பிய விசாவால் சட்டென்று சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய நிலை... வருவேன் கண்மணி... காத்திரு... உனக்காகவே வாழ்வேன் என்றெல்லாம் பேசிச் சென்றேன்.

வாழ்க்கைக்குத் தெரியவில்லை காதலின் வலி. கஷ்டங்களுக்கு இடையே அவளை நினைத்து வாழ்ந்து வந்தேன். அம்மாவும் அண்ணனும் கம்பல் பண்ணி எங்க அத்தை மகனுக்கு முடிச்சிட்டாங்க... என்னால ஒண்ணும் சொல்ல முடியலை... உன்னையும் மறக்க முடியலைன்னு ஒப்பாரியாய் ஒரு கடிதம் கண்ணனின் உதவியுடன் அவளிடமிருந்து வந்தது.

பாத்ரூமில் உக்கார்ந்து பாவி நான் அழுதேன்... அழுதேன்... கண்ணீர் வற்றும் வரை அழுதேன்... கடல் கடந்து இருக்கும் என்னால் கடந்து போய்விட்ட காதலை என்ன செய்ய முடியும்... கையாலாகாதவன் ஆனேன்... கிளம்பிச் சென்று அவளைச் சிறையெடுக்க நினைத்தேன்... எனக்கு முன்னே இருக்கும் அக்காவும் பின்னே பருவமெய்தி காத்திருக்கும் தங்கைகளும் கண்ணில் வந்து மறைந்தார்கள். குடும்பத்திற்காகவே உழைக்கும் அண்ணன் வெயிலில் கம்பி கட்டிக் கொண்டிருந்தார்.

திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட நாய்குட்டியாய் மனசு அவளையே சுற்றிச் சுற்றி வந்து அரற்றியது... நாட்களெல்லாம் கண்ணீரில் கரைந்தது. கண்ணனின் கடிதம் அவளின் திருமணம் முடிந்த சுபச் செய்தியை தாங்கி வந்தது.

நாட்கள் வாரங்களாக... வாரங்கள் மாதங்களாக... மாதங்கள் வருடங்களாகி கடந்து கொண்டே போக, அக்கா, தங்கைகள்... அப்புறம் அண்ணன் என திருமணங்கள் நடந்தேறியது... அப்பா அம்மாவின் வற்புறுத்தலால் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டேன் ஒரு நிபந்தனையுடன்...

அது என்ன நிபந்தனைன்னுதானே கேக்குறீங்க...இருங்க சொல்றேன் பொண்ணு பேரு கண்டிப்பாக நிர்மலான்னு இருக்கணும்... அவளை நான் நிம்மியின்னு கூப்பிடணுமின்னு... அவங்களுக்குப் புரியலை... எனக்கு மறக்கத் தெரியலை...

ஆச்சு கல்யாணமாகி ஆறு மாசம்... இப்போ என்னோட நிம்மி கர்ப்பமா இருக்கா... அவளோட ஒரு நாள் மார்க்கெட்டுக்குப் போனேன்... எனக்கு முன்னே திரும்பி நின்றவளை எங்கோ பார்த்தது போல் இருக்கிறாளே என்று யோசித்தபோது அருகில் நின்றவனிடம் கணவனாகத்தான் இருக்கும்... காய்கறிக்கூடையை கையில் வைத்திருக்கிறானே... ஏதோ சொல்லிச் சிரித்தபடி திரும்பியவள் என்னைப் பார்த்தாள்... நானும் பார்த்தேன்... இங்கே அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்றெல்லாம் தோணவில்லை... கண்கள் பனித்ததை நான்கு கண்களும் நன்கறிந்தன என்பது மட்டும் உண்மை... இருந்தும் ஒற்றை புன்னகை கூட உதிர்க்காமல் கணவனின் கரம்பற்றி என்னைக் கடந்தாள்...

எப்படி என்னை மறந்தாள்? மறந்தாளா... மறக்க நினைக்கிறாளா...?

யோசித்தேன்... எனக்குத் தெரியவில்லை... இருந்தும் நினைப்பதற்கு ஒரு மனம் இருந்தால் மறப்பதற்கும் ஒரு மனம் இருக்குமே என்று என்னை ஆறுதல் படுத்திக் கொண்டு 'நிம்மி வா போகலாம்...' என்றபடி நானும் நடந்தேன் அவளுக்கு இணையாக என் துணையுடன்...
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

கோவை நேரம் சொன்னது…

ம்..நன்றாக இருக்கிறது..காதலில் தோற்றவர்கள் தத்தம் குழந்தைகளுக்கு காதலர்களின் பெயரை வைப்பது தான் கேள்வி பட்டிருக்கிறேன்..இந்த கதையில் வேறாக இருக்கிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கோவை நேரம்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

என் நண்பன் பல பிரச்சினைகளைச் சந்தித்து காதலித்த பெண்ணை மணக்க முடியாமல் போனது. அவனுக்கு வாய்த்த மனைவிக்கு அவனது காதலியின் பெயரே ... இது எதார்த்தமாக நடந்த ஆச்சர்யம்... இப்பவும் அவன் காதலியை எப்படி செல்லமாக அழைத்தானோ அதே பேரில் மனைவியை அழைக்கிறான்... கதை எழுதும் போது அது மனதில் பட முடிவில் மாற்றம் கொண்டு வந்தாச்சு..

Unknown சொன்னது…

நிம்மியை நீங்க புரிஞ்சிக்கிட்டதுரொம்ப கம்மின்னு படுது!
மறக்க வேண்டிய பெயர் மனைவிக்கேவா ?
நண்பனின் கதை தானா ?அல்லது ....?

பெயரில்லா சொன்னது…

//துணைச் சாமிகள் அருகில் வர உற்சவ மூர்த்தியாய் அவள் தனித்துத் தெரிந்தாள்.//

இந்த வரிகளும் கதையோட்டமும் அருமை.
முடிவு என்னைப் பொறுத்த வரையில் சுபமே !

Unknown சொன்னது…

இப்புடில்லாம் கதை எழுதி ஏன் சார் என் மனச நோகடிக்கிறீங்க?

ஸ்ரீராம். சொன்னது…

சில காதல்கள் இப்படி ஆகி விடுகின்றன.

ஜீவன் சுப்பு சொன்னது…

college stds conversation semma ...!
super write up kumar ji ...!