மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

கடைசி வரை காணாமல்...



திகாலையில் செல்போன் அடிக்க, படுக்கையில் இருந்து எழாமல் கண்ணை மூடியபடி சவுண்ட் வந்த திசையில் கையை துழாவி செல்லை எடுத்து தூக்க கலக்கத்தோடு 'அலோ' என்றான் மதி.

''நான் அப்பா பேசறேம்பா'' என்றது மறுமுனை. பேச்சில் ஏதோ ஒரு இறுக்கம்.

''என்னப்பா... என்னாச்சு இந்த நேரத்துல போன் பண்றீங்க. ஏதாவது பிரச்சினையா...?''

''நம்ம அம்மா நம்மளை விட்டுட்டு பொயிட்டாடா...'' போனில் உடைந்தார் அப்பா.

''அ... அப்பா... எ... என்ன சொல்றீங்க... அம்மா...'' வாரிச்சுருட்டி எழுந்தவனுக்கு பேச வரவில்லை.

''எப்படிப்பா...'' அழுகை பீறிட்டது.

''எப்பவும் போல எங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு, டி.வி. பார்த்துட்டு தூங்கப்போனா... மூணு மணியிருக்கும் என்னை எழுப்பி நெஞ்சுல ஏதோ அடைக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னா... நாங்க என்ன ஏதுன்னு பார்க்கிறதுக்குள்ளாற...''  பேசமுடியாமல் அழுகை தொண்டையை அடைத்தது.

''அண்ணனுக்கு போன் பண்ணிட்டிங்களா...?''

''ம்... பண்ணிட்டேன்... உடனே கிளம்பி வர்றேன்னான்.... நீ... எப்படிப்பா... உன்னால வரமுடியுமா...?''  கேட்கும் போதே அப்பாவின் குரல் உடைந்தது.

''நான் தெரியலைப்பா... பேசிட்டுப் போன் பண்றேம்பா... ஆனா அம்மா முகத்தை பார்க்கணும் போல இருக்குப்பா...'' அழுகையோடு கூறியவன் அதுக்கு மேல் பேசமுடியாமல் போனை கட் செய்தான்.

''அம்மா... எனக்காக எத்தனையோ தியாகங்கள் செய்தாயே அம்மா...'' என்று அரற்றியவனுக்கு அழுகை வெடித்தது.

அவனது அழுகுரல் கேட்டு சக நண்பர்கள் எழுந்தார்கள். 'ஏய்... மதி என்னாச்சு...?' என்று பதறினர்.

''அம்மா... அம்மா...'' அதற்குமேல் அவனால் கூறமுடியாவிட்டாலும் அவர்கள் புரிந்து கொண்டனர். எழுந்து அவனை ஆதரவாய் அணைத்துக் கொண்டனர்.

''இப்ப நீ போகணுமில்லயா..?''

''போகணும்... ஆனா...''

''விடிந்ததும் நம்ம சூப்பர்வைஸர்கிட்ட பேசுவோம். அவரு என்ன சொல்றாரோ அதுபடி செய்வோம்...''

''ம்...'' என்றவனின் கண்கள் மட்டும் அருவியாக.

 ***

''சார் நம்ம மதியோட அம்மா இறந்துட்டாங்களாம். ராத்திரி 2 மணிக்கு போன் வந்தது...''

''என்னப்பா நீங்க... எனக்கு அப்பவே இன்பார்ம் பண்ணவேண்டியதுதானே...'' என்றவர் மணியின் கைகளை ஆதரவாக பற்றிக்கொள்ள, மதி உடைந்தான்.

''மதி ஊருக்குப் போகணுமின்னு விரும்பப்படுறான் சார்... கடைசியாக ஒரு தடவை அம்மாவை பார்க்கணுமின்னு ஆசைப்படுறான்... அதுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் சார். இவன் வரவுக்காக ஊர்ல எல்லாரும் காத்திருக்காங்க சார்''

''எப்படிப்பா... நம்ம கம்பெனியில ஒரு வருடத்துக்கு ஒருமுறைதான் அனுமதி... அதுவும் மதி ஆறுமாசம் முன்னாலதான் ஊருக்குப் பொயிட்டு வந்தான். வளைகுடா நாடுகளோட சட்ட திட்டம்தான் உங்களுக்குத் தெரியுமேப்பா...  அதுவும் அவன் பார்க்கிற சைட்டோட வேலையை ஒரு மாசத்துக்குள்ளாற முடிக்கணும்ன்னு எம்.டி. சொல்லியிருக்காரு.... ம்...''

''சார்... அவங்க அம்மா முகத்தை ஒரு தடவை பார்க்கணும்ன்னு ஆசைப்படுறான்... ஒரு வாரம் மட்டும் லீவு வாங்கிக் கொடுங்க சார்... ப்ளீஸ்... எமர்ஜென்ஸியில போற மாதிரிப் பாருங்க சார்...'' மதிக்காக நண்பர்கள் கெஞ்சினர்.

''சரிப்பா... பத்துமணிக்கு எம்.டி. ரூமுக்கு வாங்க... எல்லோரும் வராதீங்க. யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் மட்டும் மதிகூட வாங்க... பார்க்கலாம். எப்படியாவது பேசி லீவு வாங்கித்தர முயற்சிக்கிறேன்''

***

எம்.டி.யிடம் பேச, துக்க விஷயம் என்பதால் எம்.டி.க்குள் இருக்கும் தாய்மை உணர்ச்சி ஒப்புக் கொண்டது பத்து நாள் எமர்ஜென்ஸி லீவுல பொயிட்டு வா என்று சொல்லிவிட்டார்.

விடுப்பு முடிவானதும்8 அவன் விரைவாக செல்லும் பொருட்டு விமான டிக்கெட்டும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.

நண்பர்கள் உதவியுடன் விமான நிலையம் வந்து விமானத்தில் ஏறினான். மனசு மட்டும் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தது.

மனசுக்குள் அம்மா தனக்காக பட்ட கஷ்டங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர, கண்கள் கண்ணீரை வடித்தபடி இருந்தன. எப்படியும் நாலு மணிக்கு திருச்சி போயிடலாம். ஆறு மணிக்குள்ள வீட்டுக்குப் போயிடலாம் என்று நினைத்துக் கொண்டான். எப்படியும் கடைசியாக அம்மா முகத்தை பார்த்துடலாம் என்று நினைத்தபோது அழுகை வெடித்தது.

அப்போது 'விமானம் ஒருசில காரணங்களால் சென்னையில் இறக்கப்படும். அங்கிருந்து திருச்சி செல்லும் பயணிகள் வேறொரு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அசௌகரியத்திற்கு மன்னிக்கவும்,  நன்றி.' என்ற அறிவிப்பு வெளியாக, 'அய்யோ... அம்மா...' என்று கத்திய மதியை அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர்.

சென்னையில் விமானம் இறக்கப்பட, திருச்சி செல்லும் பயணிகள் அனைவரும் ஒரு அறையில் தங்கவைக்கப்பட்டனர்.

அப்போதே மணி மூன்று ஆகியிருந்தது. அங்கிருந்த போன் மூலம் தனது அண்ணனை தொடர்பு கொண்டான்.

''அண்ணே...'' அழுகை முந்திக் கொண்டது.

"என்னப்பா... திருச்சி வந்துட்டியா...? உன்னைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்...''

"விமானத்துல ஏதோ பிரச்சினையாம் சென்னையில இறக்கிட்டாங்க அண்ணே.... வேற விமானத்துல திருச்சிக்கு அனுப்புறாங்களாம். ஒரு மணி நேரத்துல திருச்சி வந்துடுவேன். வீட்டுக்கு எப்படியும் ஏழு மணிக்குள்ள வந்துடுவேன்.

அம்மாவை தூக்கிட வேணாம்ணே...''

''சரிப்பா... கவலைப்படாம வா.'' அண்ணன் ஆறுதல் கூறினார்.

போனை வைத்தவன் விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் சென்று, ''எப்ப சார் திருச்சிக்கு அனுப்புவீங்க'' என்றான்.

''அஞ்சு மணியாகும்'' என்று சாதாரணமாக சொல்ல, ''அஞ்சு மணியா சார்... நான் எங்கம்மா இறந்ததுக்குப் போறேன் சார்...'' என்று கத்தினான்.

''நான் என்ன சார் பண்ணட்டும்... திருச்சியில இருந்து வந்துக்கிட்டு இருக்கிற விமானத்துலதான் அனுப்ப முடியும்.  எத்தனை மணிக்கு வருதோ வந்த உடனே அனுப்பிடுவோம்.'' என்றார்.

தனது ராசியை நொந்தபடி சோகமாய் ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.

***

ஊரில்...

''என்ன மாணிக்கம்... மணி அஞ்சாயிடுச்சு இதுக்கு மேலயும் போட்டு வைக்கிறது நல்லா இல்ல... ஐஸ் வச்சிருந்தாலும் இனிமே தாங்காது. அதுவும் நாளைக்கு சனிக்கிழமை வேற... அதனால எவ்வளவு நேரம் ஆனாலும் இன்னைக்கே முடிச்சிடுறது நல்லது...'' என்றனர் ஊர்க்காரர்கள்.

''ஆதி... தம்பிக்கு போன் போட்டு எங்க வர்றான்னு கேளுப்பா...''

''எப்படிப்பா... அவன் கூப்பிட்டாத்தான் உண்டு... அவன்கிட்டதான் சிம்கார்டு இருக்காதே...'' என்றான்.

''சரி... ஆகவேண்டியதைப் பாருங்கப்பா... மதி வர்றபடி வரட்டும்... வந்தா நேர சுடுகாட்டுக்கு வரட்டும்...'' என்று சொல்ல, கடைசி யாத்திரைக்கு அம்மாவை தயார் செய்தார்கள்.

விமானம் திருச்சி வரும்போது மணி ஆறேகால். கையில் லக்கேஜ் எதுவும் இல்லாததால் வேகமாக வெளியேறி, போனில் அண்ணனை தொடர்பு கொண்டான்.

''அண்ணே... திருச்சி வந்துட்டேன். கார் பிடிச்சுத்தான் வாறேன்... வேகமா வந்துடுவேன்...''

''சரிப்பா... நேர சுடுகாட்டுக்கு வந்துடு''

''சுடுகாட்டுக்கா..?''

''ஆமா... எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு... இன்னும் கொஞ்ச நேரத்துல தூக்கப் போறோம்... உனக்காக அங்க காத்திருக்கிறோம்...  வேகமாக வந்துடு''

''ச...சரிண்ணே...''

விரைவாக வெளியேறி வாடகைக் காரில் பேரம் பேசாமல் ஏறிக்கொண்டான். டிரைவரிடம் ''எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவு வேகமாக போங்க...'' என்றவன் பணம் எவ்வளவு என கேட்டு அதை அவரிடம் கொடுத்துவிட்டு கண்களை மூடியபடி அழுகையை அடக்கினான். கண்ணீர் கன்னத்தில் வழிந்தபடி இருந்தது.

***

''என்ன ஆதி... மதி எங்க வர்றானாம்... நேரம் ஆயிக்கிட்டே இருக்கு... மேகம் வேற ஒரு மாதிரி இருட்டிக்கிட்டு வருது. மழை வந்துட்டா சிரமமாயிடும்பா... குழிக்குள்ளாற தண்ணி நின்னுக்கிச்சுன்னா... என்ன பண்றது. லைட் எதுவும் இல்ல... இருட்டுல காரியம் பண்ண முடியாதுப்பா... என்ன மாணிக்கம் ஆகவேண்டியதை பார்க்கலாமா...''

''இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்... அவங்க அம்மா முகத்தைப் பார்க்கிறதுக்காக அவன் துபாயில இருந்து வர்றான் சித்தப்பா...'' என்று மகனுக்காக கெஞ்சினார் மாணிக்கம்.

அப்போது ஒரு சில துளிகள் தூறல் விழ, ''மாணிக்கம் தூறல் வேற வந்துடுச்சு... பெரிய மழையாயிட்டா சிக்கலப்பா...''

''சரி ஆகவேண்டியதை பார்க்கலாம்... அவனுக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்...'' சம்மதித்தார் மாணிக்கம்.

சுடுகாட்டில் செய்ய வேண்டிய காரியங்கள் முடிந்து மனைவியை குழிக்குள் இறக்கும் போதாவது மதி வந்திடமாட்டானா என்று அவர் மனம் தவித்தது. அவர் கண்முன்னால் அவர் மனைவி குழிக்குள் இறக்கப்பட, அதை காண முடியாதவராய் கண்களை மூடியபடி, கதறியபடி மண் அள்ளிப்போட்டார்.

அவரைத் தொடர்ந்து பெரியவன் அழுதபடி மண் அள்ளிப்போட மற்றவர்களும் மண் அள்ளிப்போட்டு விட்டு வெட்டியானிடம் நல்லா மூடிடப்பா என்று சொன்னார் ஒருவர்.

காரை ரோட்டில் நிறுத்தச் சொல்லி இறங்கி  இருட்டில் ஒற்றையடிப்பாதையில் ஒடியவன்... எதிரே அனைவரும் திரும்பி வருவது கண்டு ஸ்தம்பித்து நின்றான். அம்மாவை இனி பார்க்க முடியாது என்பது நினைவில் உதிக்க ''அம்மா...''  என்று அந்தப் பிரதேசமே அதிரும்படி கத்தினான். 

27/08/2009 - ல் சிறுகதைகள் தளத்தில் எழுதியது சற்று மாறுதலுடன்...
- பரிவை'சே.குமார்

17 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அருமை...

தொடர்க.... வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

இப்படியே என் நண்பன் வாழ்வில் நடந்துள்ளது
அதனால் கதையாகக் கொள்ளமுடியவில்லை என்னால்
படித்து முடித்ததும் கண்கள் கலங்குவதைத் தவிர்க்க
இயலவில்லை.மனம் தொட்ட பதிவுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 3

பெயரில்லா சொன்னது…

சோக முடிவாக தந்து இருப்பது
கஷ்டமாக உள்ளது .
ம்ம்.. கொடுத்து வைக்கவில்லை.

ஸ்ரீராம். சொன்னது…

என்ன கொடுமைங்க....

கார்த்திக் சரவணன் சொன்னது…

இம்மாதிரியான நிலைமை யாருக்கும் வரக்கூடாது... மதிக்கு அன்றைய பொழுது சரியில்லை...

Unknown சொன்னது…

நெஞ்சு கனத்தது!அவர் நிலையில் பல பேர்.என்னால் உயிருடன் கூடப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கவில்லை,ஹூம்.(ஈழத் தமிழ் இன அழிப்பு -2006 to 2009)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க ரமணி சார்...
அப்படியா?
இப்போ வெளிநாட்டு வாழ்க்கை பரவாயில்லை. நினைத்த மாத்திரத்தில் வரமுடிகிறது,
நான் படிக்கும் போதெல்லாம் சிங்கப்பூர் செல்பவர்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் வருவார்கள்... நல்லது கெட்டதுக்கு என்று எதற்கும் வருவதில்லை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரமணி சார்...
மறந்துட்டேன்...
தமிழ்மணம் வாக்குக்கு நன்றி.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரவாணி...

சோகமாய் முடித்தால்தான் கதையின் வலி தெரியவரும்...
அதனால்தான் இந்த முடிவு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீராம் அண்ணா....
இதுபோல நிறைய கொடுமை இருக்கண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க ஸ்கூல்பையன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

raamraam சொன்னது…

manathai pizhinthu vittathu

உஷா அன்பரசு சொன்னது…

இறுதியாக முகம் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற பயண அவஸ்தைகள் கொடுமை! வெளி நாட்டை விடுங்கள்.. உள் நாட்டிலே இருந்தாலும் 12 மணி நேர பிரயாண அளவு தொலைவில் உள்ள சொந்தங்கள் அழக்கூட நேரமில்லாமல் வழியில் கிடைக்கும் வாகனங்களை எல்லாம் அடித்து பிடித்து கிளம்பி வந்து ஐந்து நிமிடம் கூட அவகாசம் இல்லாத நிலையில் வந்து முகம் பார்த்து வெடிக்கிறார்கள். வேலை நிமித்தம் போய்விட்ட தூரங்கள் இப்படி ஒரு சோகங்களை சந்திக்கத்தான் வேண்டியதாயிருக்கு..!

செங்கோவி சொன்னது…

பலரின் வாழ்வில் நடந்த சம்பவம் என்பதால், இதை ஒரு நெஞ்சை உருக்கும் நிகழ்வாகவே பார்க்கிறேன்

கோமதி அரசு சொன்னது…

கதை மிகவும் உருக்கம்.
நெஞ்சை முட்டிக்கொண்டு அழுகை வந்து விட்டது.