மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

மனசின் பக்கம்... II

நண்பர்களே... கடந்த ஒருவார காலமாக வலைச்சர ஆசிரியனாய் இருந்ததால் உங்களது பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியாத நிலையிலும் எனது பதிவுகளை படித்து பின்னூட்டமிட்ட உங்களுக்கு மிக்க நன்றி.

மாற்றுத் திறனாளி, இறைவனின் குழந்தை பதிவுலக நண்பர் அந்தோணி முத்து அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக வலைச்சரம் சீனா ஐயாவின் பதிவு பார்த்தேன். அன்னார் பூரண குணம் அடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்தேன். ஆனால் இறைவன் அவரது கஷ்டங்களைக் கண்டு அவரைக் கூட்டிக் கொண்டு போய்விட்டான் போலும். ஆம் நேற்று இரவு நண்பர் டோண்டு வின்  தளத்தில் அவரது மறைவு குறித்து படித்தேன். மனசு வலிக்கிறது மக்களே... அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

*****


உமா சங்கர்... நேர்மையின் உருவம். லஞ்சம் வாங்கி வாழ்க்கை நடத்தும் அதிகாரிகள் மத்தியில் கடந்த 27 வருடமாக நேர்மையான அதிகாரியாக வாழ்ந்து வரும் இவரை போலிச்சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாக அரசு பதவி நீககம் செய்துள்ளது. பதவியில் சேர்ந்த போதோ அல்லது சில வருடங்களிலோ அவரது ஏமாற்று வேலையை கண்டுபிடித்திருக்கலாம். அப்படி கண்டுபிடிக்காத அரசாங்கம் அவசரம் அவசரமாக இப்ப முடிவெடுக்க காரணம் அவர் ஆளும் குடும்பத்தை ஆட்டம் காணச் செய்துவிடுவாரோ என்ற பயம்தான்.

நேர்மையான அதிகாரி என்ற முறையில் எல்லாரும் அவருக்கு ஆதரவளிப்போம். இதில் எனக்கு வருத்தமளித்த விபரம் அவர் இன்ன சாதிக்காரர் என்பதால்தான் இந்த நிலை என்று பதிவெழுதுவதுதான். இது ஏற்றுக் கொள்ள முடியாது. திறமைசாலியான நேர்மையான அதிகாரி எங்கிருந்து வந்திருந்தாலும் அவருக்கு ஆதரவளிப்போம். இங்கு எதற்கு சாதி?

எனக்குத் தெரிந்த சம்பவம் ஒன்று... தேவகோட்டையில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இணை ஆட்சியராய் இருந்த திரு.ராகேஷ் குமார் யாதவ் அகற்ற உத்தரவிட்டதுடன் மட்டுமில்லாமல் தானே நின்று அந்தப்பணியை நடத்தினார். அவருக்கு எதிராக கிளம்பிய அரசியல் முதலைகள் அவருக்கு உடனடி மாறுதல் வாங்கினர். இவ்வளவுக்கும் ராகேஷ் குமார் அவர்கள் வட நாட்டில் இருந்து வந்தவர், தனது பெயரில் சாதியை ஒட்டிக் கொண்டவர்தான் இருந்தும் தேவகோட்டையில் இருந்த அனைத்து சமூக அமைப்புகளும் மனிதாபிமானமுள்ள மக்களும் போராடினர். ஜெயித்தது என்னவோ அரசியல்தான் என்றாலும் வாழ்ந்தது மனிதாபிமானம்தான். எனவே உமாசங்கர் அவர்களை பொதுவான மனிதராக பாருங்கள். தயவு செய்து அவரை சாதி என்ற வட்டத்துக்குள் இழுக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.

*****


நண்பர் வெறும்பய  அவர்கள் ஒரு முக்கியமான, நெஞ்சை வருடும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அது... பூஜா என்ற பூந்தளிரை கயவன் ஒருவன் கடத்தி வந்து கேரள பேருந்து நிலையங்களில் பிச்சையெடுக்க வைத்துள்ளான். அம்மா பசிக்குது... காசு போடுங்க என்று மழலையில் அழைத்து பிச்சையெடுத்த சிறுமியை மீட்டதுடன் மட்டுமல்லாமல் அவருடன் இருந்த பிச்சைக்காரனையும் கைது செய்து விசாரித்துள்ளார்கள். என்ன கொடுமை பாருங்கள் அவனும் வாய் பேச முடியாத ஊமை. அந்த பிஞ்சுதான் நாகலுப்பி என்ற ஊரில் பிறந்ததாகவும் அப்பா ராஜூ, அம்மா முன்னிதேவி என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இது போன்றதொரு இடத்தை யாருமே கேள்விப்பட்டதில்லையாம். இப்ப அந்தத்தளிர் திருவேந்திரத்தில் இருக்கும் நிர்மலா சிசுபவன் என்ற மையத்தில் பாதுகாப்பாய் வைக்கப்பட்டுள்ளாள்.

குஞ்சைப் பிரிந்த கோழி, கன்றைப் பிரிந்த மாடு, குட்டியைப் பிரிந்த ஆடு இன்னும் பல ஐந்தறிவு ஜீவங்களின் பிரிவுத்துயரை நாம் பார்த்து வருந்தியிருக்கிறோம். ஒரு தாயின் பிரிவையும் சேயின் பிரிவையும் எத்தனை சினிமாக்களில் பார்த்து வருந்தியிருக்கிறோம். சினிமா என்பது மாயையாக இருந்தாலும் உண்மையில் அந்தத் தாய் மற்றும் சேயின் வலி எப்படியிருக்கும் என்பதை நாம் அறிவோம்.

அந்தக் குழந்தை பற்றிய விவரம் யாருக்காவது தெரிந்திருந்தால் தயவு செய்து நிர்மலா சிசுபவனுக்கு 0471 - 2307434 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சொல்லுங்கள். இந்தப் பதிவை படிப்பதுடன் மட்டுமல்லாது உங்கள் வலைப்பூவிலும் உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

விரைவில் தாயும் சேயும் இணைந்து 'ஆராரோ... ஆரிரரோ...' பாட இறைவனை பிரார்த்திப்போம்.

*****

கடைசியாக நம்ம தலைவர் (அதாங்க நம்ம வாரிசு விஷால்) இப்பதான் கொஞ்சமா பேச ஆரம்பிச்சிருக்காரு நிறைய சேட்டைகளுடன்... இப்பல்லாம் அவருக்கு மூடு வந்தா அம்மாகிட்ட செல்போனை எடுத்து கொடுத்து 'அம்மா... அப்பா..' என்று போன் செய்யச் சொல்கிறாராம். எனக்கு அடித்துக் கொடுத்ததும் "அப்பாபாபா..." என்று ஒரு அழுத்தமான வார்த்தைப் பிரயோகம். அதன் பின் அவர் 'பாப்பா...ஆஆஆ லீலீ' - அதாவது பாப்பா ஸ்கூலுக்கு போயாச்சு என்று சொல்கிறார் . நான் தம்பி என்றதும் 'ந்னா' - அதாவது என்ன என்று கேட்கிறார். பின் 'ஆ... லூலூ... காகக்க்ககக்க்க.... மீஜகக்ரியக்க' என்ற சைன மொழிகள். அவர்கள் அம்மா நித்யா சொல்லு என்றதும் 'நித்தா' என்றழைக்கிறார். பேர் சொல்லத்தானே பிள்ளை... அம்மா... இப்ப நித்தா ஆயாச்சு. எல்லாம் முடிந்து கடைசியில் செல்போனுக்கு முத்தம். (அப்பாவுக்கு முத்தமாம்). மனசுக்கு சந்தோஷமான நொடிகள் இது.

கொசுறு: தம்பியிடம் நான் பேசினால் மூத்த செல்லத்துக்கு மூக்கில் மேல் கோபம். அவர்தான் பேச வேண்டும் என்பது அவரது எண்ணம். அவர்களின் சண்டையும் சில நேரம் சந்தோஷிக்க வைக்கிறது பல நேரம் சிந்திக்க வைக்கிறது.

நன்றி நண்பர்களே... மீண்டும் அடுத்த மனசின் பக்கத்தில் சந்திக்கலாம்.

-'பரிவை' சே.குமார்

படங்கள் உதவி : நண்பர்களின் வலைப்பூக்கள்

13 எண்ணங்கள்:

Chitra சொன்னது…

பதிவர் அந்தோணிமுத்து ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.

Chitra சொன்னது…

உங்கள் மகனுக்கு எத்தனை வயசாகிறது....
He seems to be very cute.
Our loving regards to your family.

vasu balaji சொன்னது…

அந்தோணிமுத்துவின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அந்தச் சிறுமி குறித்த செய்தி உண்மையல்ல என்று எல்.கே. எனக்குப் பின்னூட்டியிருந்தார். இன்றைய செய்தியில் உமாசங்கரின் மனுவின் ஆரம்பத்தைப் பார்க்கையில் வருத்தமாயிருக்கிறது.

தமிழ் உலகம் சொன்னது…

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

சுசி சொன்னது…

அந்தோணி முத்து அவர்களின்
ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

பூஜா பெற்றவர்கள் கிட்ட சேரணும். சீக்கிரமே.

சந்தோஷ நொடிகளை சேர்த்து வையுங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ரா மேடம்

ஆம். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

//உங்கள் மகனுக்கு எத்தனை வயசாகிறது.... //
இப்ப ஒன்றரை வயசாகுது. சேட்டை அதிகம். கண்டிப்பா உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் சார்...
பூஜா குறித்த செய்தி உண்மையில்லை என்று உங்கள் செய்தியில் பார்த்து அறிந்தேன். அப்படியிருந்தால் சந்தோஷம்தான்.
ஆம்... நேர்மையாளர்களுக்கு சோதனை காலம் வரத்தான் செய்யும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழ் உலகம் திரட்டி குழு நண்பரே...
செய்திக்கு நன்றி. கண்டிப்பாக இணைகிறோம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசி மேடம்...
திரு. அந்தோணி முத்து அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

பூஜா குறித்த செய்தி உண்மையில்லை என்பதாக வானம்பாடிகள் ஐயா சொல்லியிருக்கிறார்கள். அப்படியிருந்தால் சந்தோஷமே.

கண்டிப்பாக சேமித்து வைக்கிறேன்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

அவரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்

vanathy சொன்னது…

நண்பரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அரசியல்வாதிகள் சுயநலத்தோடு இருக்கும் வரை இந்தியாவுக்கு கஷ்டம் தான்.

பூஜா - இது பொய்யான தகவல் என்று வேறு வலைப்பூவில் படித்த ஞாபகம்.

மகனின் மழலை நல்லா இருக்கு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தங்கமணி...
ஆம்.... திரு.அந்தோணி முத்து ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
திரு.அந்தோணி முத்து ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

அரசியல்வாதிகள் மாறுவார்கள் என்பது கனவிலும் நடக்காது.

பூஜா குறித்த தகவல் பொய்யானது என்று வானம்பாடிகள் ஐயா தெரிவித்திருந்தார். அப்படியிருந்தால் சந்தோசம்.

மகனின் மழலை - அது சந்தோஷ தருணம்.