நெருக்கமாக... பாதியாக... பார்த்துப் பழகிய... பயணங்களில் வாய்த்த பக்கத்து இருக்கை நட்புக்கள் என நம்முடைய நட்புத்தான் எத்தனை ரகம்... மனதில் பூத்த நட்புக்கள் எல்லாம் மனசுக்குள் இறங்கி செல்லத்தான் செய்கின்றன நினைவுகளில்...
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்கு நட்பாய் இருந்தவர்கள் பலர் கல்லூரிக் காலத்தில் கரைந்து போனார்கள். புதிய நட்புக்கள் உதயமாயின... மூன்றாண்டுகளில் எத்தனையோ நட்புக்கள் எனக்குள் பதியமிடப்பட்டாலும் வெளியில் வரும்போது சில நட்புக்கள் மட்டுமே முளை விட்டிருந்தன.
எங்கள் வகுப்பில் மொத்தம் இருபது மாணவர்கள் பதினோரு மாணவிகள் எல்லாரும் முதல் மூன்று மாதங்கள் நட்பாய்த்தான் இருந்தோம். அதன்பின் மாணவர் அணியில் ஐந்து ஐந்தாய் இரண்டு பிரிவுகள் உதயமாகி அடிதடிகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. மிஞ்சிய பத்துப் பேரில் நானும் ஒருவன். நாங்கள் பத்துபேரும் நகமும் சதையுமாக இருந்தோம். ஒன்றாக கல்லூரி செல்வது... ஒன்றாக சாப்பிடுவது என்று இருந்தோம்... ஏனோ தெரியவில்லை கல்லூரி படிப்பிற்குப் பிறகும் தொடர்ந்த எங்கள் நட்புக்கள் இன்னும் மனசுக்குள் பூத்திருந்தாலும் சந்திப்புக்களும் பேச்சுக்களும் குறைந்து நாளாகிவிட்டன என்பதே உண்மை.
இன்றும் தேவகோட்டை கல்லூரிப் பக்கம் போகும்போது அந்த மரத்தடி அரட்டைகள் மனதை நனைக்கத்தான் செய்கிறது. இந்த நண்பர் வட்டத்தில் குறிப்பிடத்தக்கவன் ஆதிரெத்தினம், திருவாடானையில் இருந்து வந்த நண்பர்கள் வட்டத்தில் மிகவும் அன்னியோனமானவன். பெரும்பாலான நாட்கள் என் வயிற்றை நிரப்பியது அவன் கொண்டு வரும் சாதம்தான். எங்களுக்காகவே பெரிய டிபனில் கொண்டுவருவான். எங்கள் சாதத்தை அவன் சாப்பிடுவான். நல்லா கவிதை எழுதுவான். நாங்கள் நடத்திய 'மனசு' கையெழுத்துப் பிரதியில் ஆதவன் என்ற பெயரில் அவன் எழுதிய கவிதைகள் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.
கலாட்டாவுக்கு பெயர் போன நண்பன். போலீஸ் விசிலை வைத்துக் கொண்டு மதியவேளைகளில் அவன் செய்யும் ரகளைக்கு அளவேயில்லை. இன்றும் திருவாடானையில் அய்யப்பன் கோவிலில்தான் இருக்கிறான். அவனுக்கு குழந்தை பிறந்தப்போ தேவகோட்டையில் வைத்துப் பார்த்தது. தொடர்பு எல்லைக்கு உள்ளே இருந்தாலும் தொடர்புக்கான எண் இல்லை. ஒவ்வொரு முறை செல்லும் போதும் திருவாடனை சென்று ஆதி, திருநாவை சந்திக்க மனசு நினைக்கும் ஏனோ தட்டிக்கொண்டே போய்விடும்.
எங்களது துறையின் செயலராக இருந்தவன் நாச்சாங்குளம் ராமகிருஷ்ணன். இவனது வீட்டில நாள் கணக்காக தங்கியிருந்திருக்கிறோம். இவனது குடும்பத்தினர் வெள்ளந்தி மனிதர்கள். இவனுக்கு கல்லூரி முடியப் போகும்போது எங்களுடன் படித்த தோழியுடன் காதல் வந்தது. ஏனோ தெரியவில்லை சில மாதங்கள்கூட நீடிக்கவில்லை. இவனை செயலராக்கியதில் மட்டுமே எங்கள் சூரத்தனம் இருக்கும். மற்றவற்றில் நாங்கள் தலையிடுவதில்லை.
செயலர் தேர்தல் என்றதும் அஞ்சு குழு ரெண்டும் தனித்தனியே எங்களிடம் வந்து ஆதரவு கேட்டது. அப்பதான் யோசித்தோம். அவங்க அஞ்சு, நாம பத்து... நாம யாருக்கு சப்போர்ட் பண்றோமோ அவங்க ஜெயிப்பாங்க... அத ஏன் நம்மள்ள ஒருத்தன் நிக்கக்கூடாது என்று நாங்கள் முடிவெடுத்து இவனை நிறுத்தினோம். தோழியரின் ஆதரவும் எங்களுக்கே... அஞ்சு குழுக்களும் சரி நாம நின்னா ஜெயிக்க முடியாது என்று எங்களை ஆதரிப்பதென முடிவெடுத்ததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவன். இப்போது நினைவில் நின்றாலும் நிஜத்தில் நாங்கள் சந்தித்து காலங்கள் ஆகிவிட்டன.
அண்ணாத்துரை... எனக்கும் இவனுக்குமான நெருக்கம் சற்றேவித்தியாசமானது.. ஏனோ அப்படி ஒரு நெருக்கம்... பரமக்குடி ரோட்டில் சிலுக்குவார்பட்டியில் இருந்து தாயமங்கலம் போகும் ரோட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து வந்து அறை எடுத்து தங்கியவன் எனக்குள் ஐக்கியமாகிவிட்டான். அவன் என் வீட்டிலும் விடுமுறைகளில் நான் அவன் வீட்டிலும் தங்கிய நாட்கள் அதிகம். உறவுகள் விரிந்து அக்கா வீடுகள் வரை சென்றது. அவனது தந்தை விளையும் பொருட்களை எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வருவதும் என் தந்தை அவன் இல்லம் போய் வருவதும் தொடர்ந்தது. அவனது திருமணத்தில் பார்த்தது... பின்னர் போனில் சில காலம் வரை தொடர்பில் இருந்தோம்... அதன்பிறகு அதுவும் குறைந்து மனங்களில் மட்டுமே வாழ்கிறோம். கண்டிப்பாக எனக்குள் இருக்கும் அவனின் நினைவுகளைவிட அதிகமாய் அவன் இதயத்தை நான் ஆக்கிரமித்திருப்பேன். அண்ணாத்துரையுடன் இருந்த சேவியர், சிவகங்கையில் வழக்கறிஞராக இருக்கும் எனது ஒரே மாப்பிள்ளை உருவாட்டி நவனீதன் எல்லாரும் என் மனதுக்குள் ஓவியமாய் இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் எங்கள் நட்பில் தேவகோட்டையில் வழக்கறிஞராக இருக்கும் முத்தரசு பாண்டியனை மட்டுமே நான் ஊருக்குச் செல்லும் போது சந்தித்து வருகிறேன். ராம்நகர் பிரான்ஸிஸை அவன் மனைவியுடன் ஒருமுறை பார்த்தேன், இப்போ அவன் பெங்களூரில் இருப்பதாக கேள்விபபட்டேன். காளையார் கோவில் பச்சைமுத்து முன்பு அங்கு மெடிக்கல்ஸ் வைத்திருந்தான். இப்போ எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை.
கல்லூரி முடியும் காலத்தில் அவர்களெல்லாம் பக்கம் பக்கமாக வரைந்த ஆட்டோகிராப் டைரியை எடுத்து வாசிக்கும் போது என் சுவாசத்தில் இவர்களது வாசம் வீசினாலும் மனசுக்குள் மறுகும் நினைவுகளால் கண்களில் கண்ணீரின் ஊர்வலம் வருவதை தடுக்கவும் முடியவில்லை... தவிர்க்கவும் முடியவில்லை...
இவர்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நண்பர்கள் கல்லூரி வாசத்தில்... என்னுடன் பத்திரிக்கை நடத்திய இயற்பியல்துறை நண்பர்கள் இளையராஜா, அம்பேத்கார், பிரபாகர், கனிமொழி, சுபஸ்ரீ உள்பட இன்னும் நிறைய நண்பர்கள் மனதில் வாழ்கிறார்கள்.
இது தவிர ஐவர் குழுவில் இருந்த நண்பர்களில் என்னுடன் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிவரை இணைந்தே படித்த சிவபாலமூர்த்தியும் எனது ஆட்டோகிராப் நோட்டில் பரிட்சையில் பேப்பரை காட்ட மறுத்த கோவத்தில் ' நண்பா... நீதி நேர்மை என்று இருந்தால் நடுத்தெருவில்தான் நிற்பாய்' என்று எழுதிக் கொடுத்த ராசுவும் பசுமையாய்...
இவர்களெல்லாம் தவிர்த்து தனித்து என்னுள்ளே ஆக்கிரமித்து இருந்தவன்... என் நண்பன் என்பதைவிட என்னில் பாதியாய் வாழ்ந்தவன்... என்னவன் ஒருவன் இருக்கிறான்... இருந்தான்... அவனைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது எனவே தனிப்பதிவில் பார்ப்போம்.
சரி விஷயத்துக்கு வருவோம்... என் வலை நட்புக்களே தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார நட்புக்கள் எனது நண்பர்களை பார்க்க நேர்ந்தால் என் வலையில் அவர்களை கால் பதிக்கச் செய்யுங்கள். மனசுக்குள் மறுகும் நட்பை மீண்டும் மழைக்கால காளானாய் மட்டுமல்லாமல் ஆல விருட்சமாய் வளர்க்க முயல்கிறேன்... செய்வீர்களா?
பாசங்களுடன்...
-'பரிவை' சே.குமார்.
















