மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 11 நவம்பர், 2010

நண்பேன்டா...

நெருக்கமாக... பாதியாக... பார்த்துப் பழகிய... பயணங்களில் வாய்த்த பக்கத்து இருக்கை நட்புக்கள் என நம்முடைய நட்புத்தான் எத்தனை ரகம்... மனதில் பூத்த நட்புக்கள் எல்லாம் மனசுக்குள் இறங்கி செல்லத்தான் செய்கின்றன நினைவுகளில்...

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்கு நட்பாய் இருந்தவர்கள் பலர் கல்லூரிக் காலத்தில் கரைந்து போனார்கள். புதிய நட்புக்கள் உதயமாயின... மூன்றாண்டுகளில் எத்தனையோ நட்புக்கள் எனக்குள் பதியமிடப்பட்டாலும் வெளியில் வரும்போது சில நட்புக்கள் மட்டுமே முளை விட்டிருந்தன.

எங்கள் வகுப்பில் மொத்தம் இருபது மாணவர்கள் பதினோரு மாணவிகள் எல்லாரும் முதல் மூன்று மாதங்கள் நட்பாய்த்தான் இருந்தோம். அதன்பின் மாணவர் அணியில் ஐந்து ஐந்தாய் இரண்டு பிரிவுகள் உதயமாகி அடிதடிகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. மிஞ்சிய பத்துப் பேரில் நானும் ஒருவன். நாங்கள் பத்துபேரும் நகமும் சதையுமாக இருந்தோம். ஒன்றாக கல்லூரி செல்வது... ஒன்றாக சாப்பிடுவது என்று இருந்தோம்... ஏனோ தெரியவில்லை கல்லூரி படிப்பிற்குப் பிறகும் தொடர்ந்த எங்கள் நட்புக்கள் இன்னும் மனசுக்குள் பூத்திருந்தாலும் சந்திப்புக்களும் பேச்சுக்களும் குறைந்து நாளாகிவிட்டன என்பதே உண்மை.

இன்றும் தேவகோட்டை கல்லூரிப் பக்கம் போகும்போது அந்த மரத்தடி அரட்டைகள் மனதை நனைக்கத்தான் செய்கிறது. இந்த நண்பர் வட்டத்தில் குறிப்பிடத்தக்கவன் ஆதிரெத்தினம், திருவாடானையில் இருந்து வந்த நண்பர்கள் வட்டத்தில் மிகவும் அன்னியோனமானவன். பெரும்பாலான நாட்கள் என் வயிற்றை நிரப்பியது அவன் கொண்டு வரும் சாதம்தான். எங்களுக்காகவே பெரிய டிபனில் கொண்டுவருவான். எங்கள் சாதத்தை அவன் சாப்பிடுவான். நல்லா கவிதை எழுதுவான். நாங்கள் நடத்திய 'மனசு' கையெழுத்துப் பிரதியில் ஆதவன் என்ற பெயரில் அவன் எழுதிய கவிதைகள் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.

கலாட்டாவுக்கு பெயர் போன நண்பன். போலீஸ் விசிலை வைத்துக் கொண்டு மதியவேளைகளில் அவன் செய்யும் ரகளைக்கு அளவேயில்லை. இன்றும் திருவாடானையில் அய்யப்பன் கோவிலில்தான் இருக்கிறான். அவனுக்கு குழந்தை பிறந்தப்போ தேவகோட்டையில் வைத்துப் பார்த்தது. தொடர்பு எல்லைக்கு உள்ளே இருந்தாலும் தொடர்புக்கான எண் இல்லை. ஒவ்வொரு முறை செல்லும் போதும் திருவாடனை சென்று ஆதி, திருநாவை சந்திக்க மனசு நினைக்கும் ஏனோ தட்டிக்கொண்டே போய்விடும்.

எங்களது துறையின் செயலராக இருந்தவன் நாச்சாங்குளம் ராமகிருஷ்ணன். இவனது வீட்டில நாள் கணக்காக தங்கியிருந்திருக்கிறோம். இவனது குடும்பத்தினர் வெள்ளந்தி மனிதர்கள். இவனுக்கு கல்லூரி முடியப் போகும்போது எங்களுடன் படித்த தோழியுடன் காதல் வந்தது. ஏனோ தெரியவில்லை சில மாதங்கள்கூட நீடிக்கவில்லை. இவனை செயலராக்கியதில் மட்டுமே எங்கள் சூரத்தனம் இருக்கும். மற்றவற்றில் நாங்கள் தலையிடுவதில்லை.

செயலர் தேர்தல் என்றதும் அஞ்சு குழு ரெண்டும் தனித்தனியே எங்களிடம் வந்து ஆதரவு கேட்டது. அப்பதான் யோசித்தோம். அவங்க அஞ்சு, நாம பத்து... நாம யாருக்கு சப்போர்ட் பண்றோமோ அவங்க ஜெயிப்பாங்க... அத ஏன் நம்மள்ள ஒருத்தன் நிக்கக்கூடாது என்று நாங்கள் முடிவெடுத்து இவனை நிறுத்தினோம். தோழியரின் ஆதரவும் எங்களுக்கே... அஞ்சு குழுக்களும் சரி நாம நின்னா ஜெயிக்க முடியாது என்று எங்களை ஆதரிப்பதென முடிவெடுத்ததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவன். இப்போது நினைவில் நின்றாலும் நிஜத்தில் நாங்கள் சந்தித்து காலங்கள் ஆகிவிட்டன.

அண்ணாத்துரை... எனக்கும் இவனுக்குமான நெருக்கம் சற்றேவித்தியாசமானது.. ஏனோ அப்படி ஒரு நெருக்கம்... பரமக்குடி ரோட்டில் சிலுக்குவார்பட்டியில் இருந்து தாயமங்கலம் போகும் ரோட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து வந்து அறை எடுத்து தங்கியவன் எனக்குள் ஐக்கியமாகிவிட்டான். அவன் என் வீட்டிலும் விடுமுறைகளில் நான் அவன் வீட்டிலும் தங்கிய நாட்கள் அதிகம். உறவுகள் விரிந்து அக்கா வீடுகள் வரை சென்றது. அவனது தந்தை விளையும் பொருட்களை எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வருவதும் என் தந்தை அவன் இல்லம் போய் வருவதும் தொடர்ந்தது. அவனது திருமணத்தில் பார்த்தது... பின்னர் போனில் சில காலம் வரை தொடர்பில் இருந்தோம்... அதன்பிறகு அதுவும் குறைந்து மனங்களில் மட்டுமே வாழ்கிறோம். கண்டிப்பாக எனக்குள் இருக்கும் அவனின் நினைவுகளைவிட அதிகமாய் அவன் இதயத்தை நான் ஆக்கிரமித்திருப்பேன். அண்ணாத்துரையுடன் இருந்த சேவியர், சிவகங்கையில் வழக்கறிஞராக இருக்கும் எனது ஒரே மாப்பிள்ளை உருவாட்டி நவனீதன் எல்லாரும் என் மனதுக்குள் ஓவியமாய் இருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப் போனால் எங்கள் நட்பில் தேவகோட்டையில் வழக்கறிஞராக இருக்கும் முத்தரசு பாண்டியனை மட்டுமே நான் ஊருக்குச் செல்லும் போது சந்தித்து வருகிறேன். ராம்நகர் பிரான்ஸிஸை அவன் மனைவியுடன் ஒருமுறை பார்த்தேன், இப்போ அவன் பெங்களூரில் இருப்பதாக கேள்விபபட்டேன். காளையார் கோவில் பச்சைமுத்து முன்பு அங்கு மெடிக்கல்ஸ் வைத்திருந்தான். இப்போ எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை.

கல்லூரி முடியும் காலத்தில் அவர்களெல்லாம் பக்கம் பக்கமாக வரைந்த ஆட்டோகிராப் டைரியை எடுத்து வாசிக்கும் போது என் சுவாசத்தில் இவர்களது வாசம் வீசினாலும் மனசுக்குள் மறுகும் நினைவுகளால் கண்களில் கண்ணீரின் ஊர்வலம் வருவதை தடுக்கவும் முடியவில்லை... தவிர்க்கவும் முடியவில்லை...

இவர்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நண்பர்கள் கல்லூரி வாசத்தில்... என்னுடன் பத்திரிக்கை நடத்திய இயற்பியல்துறை நண்பர்கள் இளையராஜா, அம்பேத்கார், பிரபாகர், கனிமொழி, சுபஸ்ரீ உள்பட இன்னும் நிறைய நண்பர்கள் மனதில் வாழ்கிறார்கள்.

இது தவிர ஐவர் குழுவில் இருந்த நண்பர்களில் என்னுடன் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிவரை இணைந்தே படித்த சிவபாலமூர்த்தியும் எனது ஆட்டோகிராப் நோட்டில் பரிட்சையில் பேப்பரை காட்ட மறுத்த கோவத்தில் ' நண்பா... நீதி நேர்மை என்று இருந்தால் நடுத்தெருவில்தான் நிற்பாய்' என்று எழுதிக் கொடுத்த ராசுவும் பசுமையாய்...

இவர்களெல்லாம் தவிர்த்து தனித்து என்னுள்ளே ஆக்கிரமித்து இருந்தவன்... என் நண்பன் என்பதைவிட என்னில் பாதியாய் வாழ்ந்தவன்... என்னவன் ஒருவன் இருக்கிறான்... இருந்தான்... அவனைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது எனவே தனிப்பதிவில் பார்ப்போம்.

சரி விஷயத்துக்கு வருவோம்... என் வலை நட்புக்களே தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார நட்புக்கள் எனது நண்பர்களை பார்க்க நேர்ந்தால் என் வலையில் அவர்களை கால் பதிக்கச் செய்யுங்கள். மனசுக்குள் மறுகும் நட்பை மீண்டும் மழைக்கால காளானாய் மட்டுமல்லாமல் ஆல விருட்சமாய் வளர்க்க முயல்கிறேன்... செய்வீர்களா?

பாசங்களுடன்...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 9 நவம்பர், 2010

சொல்ல மறந்த கவிதைகள்



மறக்கமாட்டேனென்று

மழைநாளில்

சொல்லிச் சென்றாய்...

மழைக்கால காளானாய்

நான் பூத்திருக்க...

மனைவி அணைப்பில்

குடைக்குள் நீ குழந்தையோடு..!




தண்ணீரில் விழும்

மழைத்துளியாய் நான்

சிலிர்த்து நிற்க...

முத்தச்சூடு கரையுமுன்

அடுத்த முத்தத்திற்கு

தயாராகிறாய் அவசரமாய்..!
 
    
 

மனைவிக்கு பூ வாங்கும் நீ

அருகில் நிற்கும்

என்னைப் பார்த்தபடி

எனக்கு எப்பவும் மல்லி

ராசியில்லை என்கிறாய்...

புரிந்து சிவக்கிறேன் நான்..!

புரியாமல் ரசிக்கிறாள் பூக்காரி...!
 
 
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 7 நவம்பர், 2010

கலைஞானி '56'

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ நட்சத்திரங்கள் மின்னினாலும் தனி நட்சத்திரமாய் ஜொலிப்பவர் கமலஹாசன். எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபத்திரத்திற்கு தகுந்தபடி தனது நடை, உடை பாவனைகளை மட்டுமல்லாது உடலையும் மாற்றிக் கொள்ளும் நாயகன். இன்றைய இளம் நடிகர்கள் எல்லாம் தங்கள் உடம்பை குறைக்கவும் கூட்டவும் செய்கிறார்கள் என்றால் அதற்கு முன்னோடி கமல்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இன்று பிறந்த நாள் காணும் கலைஞானி, கலைத்தாயின் செல்லப்பிள்ளை கமலஹாசன் 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி பரம்பக்குடியைச் சேர்ந்த சீனிவாசன் - ராஜலெட்சுமி தம்பதியரின் மகனாகப் பிறந்தார்.

1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 'அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என்ற பாடலில் அருமையாக நடித்ததில் ஆரம்பித்த அவரின் நடிப்பு மீதான காதல் இன்று வரை கூடிக்கொண்டேதான் போகிறது குறையவில்லை. களத்தூர் கண்ணம்மாவில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றவர்.


பணமே பிரதானம் என்று நடிக்காமல் மன நிறைவுக்காகவும் ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கும் மனிதர் இவர். ஆரம்ப காலங்களில் சூப்பர் ஸ்டாரும் இவரும் சேர்ந்தே நடித்தனர். பின்னர் பிரிந்து நடிப்பது என முடிவு செய்து இருவரும் இருவேறு வழிகளில் இமயத்தை தொட்டாலும் இன்னும் ஆரம்ப கால நட்பை ஆழமாய் வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

கமலின் படங்கள் எல்லாமே எதாவது ஒரு விதத்தில் நம்மை கவர்ந்து விடும். அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, நாயகன், சிப்பிக்குள் முத்து, அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம், விருமாண்டி, தேவர் மகன், அவ்வை சண்முகி, தசாவதாரம் என இன்னும் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கவர்ந்த படங்களில் மிகவும் பாதித்த, அதிகம் கவர்ந்த படம் 'அன்பே சிவம்', நகைச்சுவையை மட்டுமே மையமாய் வைத்துப் படமெடுத்து வந்த் சுந்தர்.சியின் இயக்கத்தில் கமல், மாதவன் நடித்த அருமையான படம். படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை என்றாலும் எடுத்துக் கொண்ட கதைக்களம் மிகவும் அருமை. அதிலும் குறிப்பாய் விபத்தில் உருக்குலைந்த ஒரு மனிதனின் முக நடை பாவனைகளை தத்ரூபமாக கொண்டு வந்திருப்பார் கமல்.

கமலுக்கு விருதுகளால் கௌரவம் இல்லை... கமலால் விருதுகளுக்கே கௌரவம். அவர் வாங்காத விருதுகளே இல்லை என்று சொல்லலாம். பிலிம்பேர் விருதுகளை பதினெட்டு முறை பெற்றிருக்கிறார். தேசிய விருதுகளை மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக பெற்றிருக்கிறார். பத்மஸ்ரீ விருதும் இவருக்கு கிடைத்துள்ளது. 2005ஆம் ஆண்டு சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.


கமல் தனது கனவுப்படமான மருதநாயகத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாய் இருக்கிறார். அதற்கான முயற்சிகளிலும் இருக்கிறார். சில நாட்களாக மருதநாயகம் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிவது போல் பேசி வருகிறார். சன் பிக்ஸர்ஸ் எடுக்கப் போவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன. இது உண்மையா அல்லது வதந்தியா என்று தெரியவில்லை. மருதநாயகம் வெளிவந்தால் அவரது ரசிகர்களுக்கு மறக்கமுடியாத மகிழ்வான நிகழ்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



நடிகர், பாடகர், இயக்குநர், கதாசிரியர், கவிஞர் என பல அவதாரங்களில் ஜொலிக்கும் கமல் அவர்கள் இன்று தனது 56வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி..!

வியாழன், 4 நவம்பர், 2010

கிராமத்து நினைவுகள் : தீபாவளியும் பட்டாசும்..!




சின்ன வயசுல பண்டிகைகள் என்றாலே சந்தோஷமான தினம்தான். அதிலும் கிராமத்து மண்ணில் பிறந்த எங்களுக்கோ ஒவ்வொரு பண்டிகையும் சந்தோஷத்தை விதைத்துச் செல்லும் என்று சொல்லத் தேவையில்லை.

தீபாவளி... ஒரு மாதத்திற்கு முன்னரே தித்திக்க ஆரம்பித்து விடும். பொட்டு வெடி, ரோல் கேப்பில் ஆரம்பித்து சீனி வெடி, லெச்சுமி வெடி எல்லாம் ஒரு மாதத்திற்கு முன்னரே வெடிக்க ஆரம்பித்து விடும். புதுத்துணி எடுத்து தைக்க கொடுத்துவிட்டு அதை வாங்கும் நாளை ஆவலுடன் எண்ணத் தொடங்கிவிடுவோம்.

தீபாவளிக்கு முதல் நாள் இரவே சங்கு சக்கரம் புஸ்வானம் எல்லாம் பூக்களைத்தூவும். இரவு தூக்கமும் வராது. இரவு முழித்து பலகாரங்கள் செய்யும் அம்மாவுக்கு உதவியாக இருக்கிறேன் என்று தூங்கமல் காத்திருக்கச் செய்யும் விடியலில் வர இருக்கும் தீபாவளி.

விடியற்காலை ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் வைத்துக் கொண்டு 'இன்னிக்கு கிழக்க சூலம் அதனால இப்படி உட்காரு' என்று அப்பா ஒவ்வொருவராக கூப்பிட்டு உட்கார வைத்து தலையில் நல்லெண்ணெய்யை மூன்று முறை வைத்து 'நற நற' என்று தேய்த்து விடுவார். சிறு வயதில் உடலெல்லாம் எண்ணெயில் குளித்தது போல் ஊற்றித் தேய்த்து விடுவார். கொஞ்சம் வளர்ந்தது ஒத்துக்க மாட்டாது என்ற கதையுடன் சிறிது எண்ணையை மட்டும் தலையில் வைத்துக் கொள்வதுடன் சரி.

நல்ல மழை பெய்து கண்மாயில் தண்ணீர் இருந்தால் இடுப்பில் துண்டுடன் கண்ணுக்குள் வழியும் எண்ணெயை துடைத்தபடி கையில் புலி மார்க் சீயக்காயுடன் (பின்னாளில் நாகரீக வளர்ச்சியால் புலி மார்க் மீரா சீயக்காய், கிளினிக் பிளஸ் ஷாம்பு என்று மாறியது) கண்மாய் நோக்கி அண்ணன், தம்பி, அத்தை பையன், சித்தப்பா பையன் என கூட்டமாக சென்று குளித்து வருவோம்.

வீட்டிற்கு வந்ததும் மஞ்சள் வைத்து சாமி முன் வைக்கப்பட்டிருக்கும் துணிகளை அப்பா எடுத்துக் கொடுக்க, அதை அணிந்து அந்த சந்தோஷத்தையும் துணிகளை மற்றவர் பார்வைக்கு வைக்கும் பொருட்டு கொள்ளிக்கட்டையை எடுத்துக் கொண்டு ஒரு சீனிச்சரத்தை வீட்டு வாசலில் பற்றவைத்து அது வெடிக்கும் சப்தத்தில் எல்லோரையும் பார்க்க வைப்போம்.

பின்னர் பலகாரங்கள் சாப்பிட்டு விட்டு அனைவரும் கோவிலில் வந்து அமர்ந்து வெடி போடவும் போடுவதை வேடிக்கை பார்க்கவும் ஆரம்பிப்போம். அரட்டைக் கச்சேரிகளுடன் சந்தோஷமாக நகரும் நாளில் மதிய வேளையில் நாட்டுக் கோழி சூப்பும் வறுவலும் வயிற்றை நிரப்பும். சிறிது நேர உறக்கம். பின்னர் மீண்டும் வெடி வைக்க வந்து விடுவோம்.

அணுகுண்டு வைப்பதில்தான் சுகம் அதிகம்... கொட்டாச்சிக்குள் வெடியை வைத்து அதன் திரியை ஓட்டை வழியாக வெளியே எடுத்து லேசாக் முனையை கிள்ளி பற்ற வைத்தால் வெடிக்கும் போது கொட்டாச்சி சில்லுச்சில்லாகி பறக்கும் பாருங்கள்... வாவ்... என்ன சந்தோஷம். சில நேரம் யாருடைய வீட்டுக்குள்ளாவது விழுகும்... அப்ப விழும் திட்டை கண்டு கொள்ளாமல் அடுத்த வெடியை வைப்பதில் தீவிரமாக இருப்போம்.

இதில் அதிகம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நாம வெடி வைக்கும்போது அருகில் மாட்டுச்சாணி இருக்கிறதா என்று... ஏன் என்றால் நாம் வெடி வைத்துக் கொண்டிருக்கும் போது நமக்கே தெரியாமல் யாராவது ஒருவன் சாணி மேல் வெடியை வைத்து விடுவான். அது வெடித்து சிதறும் போது தரையில் இருந்த சாணி நம்ம உடம்பில் இருக்கும்.

ராக்கெட்டெல்லாம் பாட்டில் துணையுடன் சர்.. சர் என்று பறக்கும். செட்டிநாட்டு பாலிடெக்னிக்ல வேலை பார்த்த எங்க ஊருக்காரரு ஒருத்தரோட பசங்கதான் அதிகமா வெடிப்போடுவாங்க... அதைப் பாக்கிறதுக்காக அவங்க வீட்டுக்கிட்டயே போயி இருப்போம். அப்புறம் வயசாக ஆக அவங்க வீட்டுல குறைஞ்சாச்சு.... மத்தவங்க அதிகமா போட ஆரம்பிச்சாங்க.

நாங்க எங்க ஐத்தான் (பெரியக்கா வீட்டுக்காரர்) வரவைதான் அதிகம் எதிர்பார்ப்போம். ஏனென்றால் அவர்தான் பெரிய பெரிய பாக்ஸில் வெடி கொண்டு வருவார். நிறைய வெடிகள் இருக்கும். சந்தோஷமாக வெடிப்போம். தீபாவளி அன்றோ அல்லது மறுநாளோ வெடித்த வெடிகளின் காகிதங்களை பொறக்கி குவித்து தீவைப்போம். இது வருட வருடம் நடக்கும்.

அந்த சந்தோஷ நாட்கள் வயதாக ஆக குறைய ஆரம்பித்தன. வெடியில் நாட்டம் குறைந்தது. புதுச்சட்டையுடன் வெடி வைக்க வருவதும் கோவிலிலும் வேப்ப மரத்தடியிலும் அன்று ஒரு நாள் அனைவரும் அமர்ந்து சந்தோஷமாக கழித்த தினங்களை எல்லாம் காலத்தின் வளர்ச்சியில் தொலைக்காட்சி தின்றுவிட்டது.

அன்று கிராமத்து தீபாவளியும் பட்டாசும் கொடுத்த ஆத்மார்த்த சந்தோஷத்தை தற்போதைய சூழலும் நகர வாழ்க்கையும் கொடுக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை.




எல்லாருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் கொண்டாடுங்க... குழந்தைங்களை எண்ணச்சட்டி பக்கமும் வெடிப்பக்கமும் விடாம கொண்டாடுங்க...


-'பரிவை' சே.குமார்.

புதன், 3 நவம்பர், 2010

தீபாவளிக் கதைகள்

கதை -1

தீபாவளிக்கு அப்பா ரெண்டு டிரஸ், அம்மா ஒரு டிரஸ், தாத்தா பாட்டி ஒரு டிரஸ் என நான் கு புது வரவுகளால் சந்தோஷத்தில் திளைத்த ரகு, எடுத்து எடுத்துப் பார்த்து சந்தோஷப்பட்டான்.


தீபாவளிக்கு முதல் நாள் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருக்காமல் வெளியே விளையாட ஓடிய ரகுவை, 'தெருப்பயக கூட விளையாட போகாதே... வீட்ல வீடியோ கேம் விளையாடு... அப்பா வந்தா அடிப்பாரு' என்று கடிந்து கொண்டாள் அம்மா. 'போம்மா போரா இருக்குது... நான் ரமேஷ் கூட விளையாட போறேன்' என்றபடி ஓடினான். அவனை நிப்பாட்ட முடியாது என்று தெரிந்து கொண்ட அம்மா, 'சீக்கிரம் வந்துடு' என்று சொல்லி வைத்தாள்.

விளையாடிவிட்டு திரும்பிய ரகு முகம் வாடியிருந்தது. அவனைப் பார்த்த அப்பா, 'என்ன வெயில்ல ஆட்டமா?' என்றார். 'இல்லப்பா நிழல்லதான் வெளாண்டோம்...' என்றவன் 'அப்பா...' என்று இழுத்தான். 'என்னடா... இங்க வா' அவனை இழுத்து உச்சி மோர்ந்த அப்பா ' உனக்கு என்ன வெடி வேணும் வாங்க போகலாமா..?' என்றார்.

'அப்பா... ரமேசுக்கு இன்னும் டிரஸ்ஸே எடுக்கலையாம்... பாவம்ப்பா அவன்... எனக்குத்தான் நாலு டிரஸ் இருக்கே... அவனுக்கு ஒண்ணு கொடுக்கலாமா... எல்லாரும் புது டிரஸ் போடுறப்போ அவன் மட்டும் பழைய டிரஸ்ஸோட... பாவமில்லைப்பா... ப்ளீஸ்ப்பா...'

பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் அடுத்தவனுக்கு இறங்கும் அந்த பிஞ்சின் பேச்சு அப்பாவுக்கு சில பல உண்மைகளை உணர்த்த, 'ம்... கொடுக்கலாமே... ஈவ்னிங் போயி நாம கொடுத்துட்டு வரலாம்' என்றதும், 'தாங்கஸ் அப்பா' என்று கட்டிக் கொண்டான்.

----------------------

கதை - 2

"என்ன வீரையா...புள்ளைகளுக்கெல்லாம் டிரஸ் எடுத்துட்டியா...?"

"இல்ல முதலாளி... இன்னைக்கு நீங்க கொடுக்கிற பணத்துல இருந்துதான் வாங்கிட்டுப் போவணும்... விடிஞ்சா தீவாளி... கொஞ்சம் சீக்கிரம் விட்டிங்கன்னா போயி புதுத்துணி வாங்கிட்டு கருக்கல்ல வீட்டுக்குப் போயிடுவேன்..."

"சரி... சரி... போகலாம்... இப்ப பாலைப் பாத்து எடயக்கட்டு... தண்ணியா வச்சிட்டின்னா எவனும் டீக்குடிக்க வரமாட்டான்... அழகர் வந்தோடனே போயி வாங்கிக்கிட்டு வந்துடு... முன்னப்பின்ன ஆனா கடைய அடைச்சாலும் அடச்சிடுவாங்க..." என்றபடி 200 ரூபாயை அவனிடம் நீட்டினார்.

"முதலாளி... வூட்டுக்காரிக்கும் பொடவை வாங்கணும்... இது பத்தாது... ஒரு 500 ரூபா கொடுத்தியன்னா..."

"ஏம்ப்பா... காசு என்ன கொடியிலயா காக்கிது... சம்பளம் போக இது தீபாவளிக்காசுதான்... இதுல வாங்கப் பாரு... தீபாவளிச் சாமான் வாங்கணுமுன்னு சம்பளத்தையும் பைசா பாக்கியில்லாம வாங்கிட்டே... ம்..." என்றபடி ஒரு 50 ரூபாயை எடுத்து "இந்தா இதுக்குள்ள வாங்கப் பாரு... சும்மா அதிக காசை துணியில போடாம.." என்றார்.

"சரி முதலாளி..."

'அப்பா' என்றபடி வந்தான் அவரது செல்ல மகன்.

"என்னப்பா... எதுவும் வாங்கணுமா?"

"வெடி வாங்கணும்... காசு வேணும்..."

"எவ்வளவு வேணும்... ஆயிரம் போதுமா..."

"ம்ம்ம்... போதுமுன்னு நினைக்கிறேன்..."

"இந்தா... அப்புறம்... இதை பெட் ரோல் போட வச்சுக்க... நாளைக்கு வெளிய தெருவ போவேயில்ல..." என்றபடி 1500 ரூபாயை கொடுக்க...

'காசை கரியாக்குனாலும் ஆக்குவாங்க... வேலை பாக்குறவனுக்கு கொடுக்க மனசு வராது... என்ன செய்ய எல்லாம் நம்ம தலையெழுத்து' என்று நினைத்தபடி பாய்லரை சூடாக்கியவன் மனசு கொதித்தது.


----------------------

கதை - 3

விடிந்தால் தீபாவளி... கடந்த ஒரு மாத காலமாகவே தையற்கடையில் இராப்பகல் பார்க்காமல் உழைத்த கிட்டு, தைத்த துணிகளெல்லாம் கொடுத்தவர்கள் வாங்கி சென்றதால் சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் விதமாக அமர்ந்து கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது பார்வையில் பட்டது அவனுக்கு நெருக்கமானவர்களும் பழகிய கடைக்காரர்களும் கொடுத்த சுவீட் பாக்ஸ்.

ஒவ்வொன்றாக எடுத்து சுவீட் கடையின் பேரை வாசித்து பிரபலக் கடைகளின் பாக்ஸ்களைஎடுத்து கீழே வைத்துவிட்டு மற்றவற்றை மேலே வைத்தான். அதை பார்த்துக் கொண்டிருந்தான் காசாப்பையன்.

தன்னிடம் வேலை பார்க்கும் வேலையாட்களுக்கு கணக்கு முடித்து அனுப்பும் போது அவன் வேண்டாமென்று ஒதுக்கிய சுவீட் பாக்ஸ் ஒன்றை கொடுத்து 'சந்தோஷமாக் கொண்டாடுங்க...' என்றான். எல்லாரும் போக, காசாப்பையனை அழைத்து அவனுக்கு பணம் கொடுத்து சுவிட் பாக்ஸ் கொடுக்க,

"வேண்டாண்ணே... யாரும் சாப்பிட மாட்டாங்க.. எதுக்கு வீணாவுல..." என்றான்.

"அட சும்மா புடிடா..." கட்டாயப்படுத்தி கையில் திணிக்க, போகும் வழியில் சாக்கடையில் வீசிவிட்டு 'கொக்காலி சுகருல்ல வேகுறான்... அவன் திங்கப்போற மாதிரி நெய் சுவிட்ட எடுத்து வச்சிட்டு... அந்து முறிஞ்சத நமக்கு தாரான்... கோத்தா எங்கம்மா சுடுவாங்கடா சூப்பரா... எனக்கெதுக்கு இந்த காஞ்சது..." என்று சத்தமாக சொல்லிக் கொண்டே தரையை உதைத்தான்.


-'பரிவை' சே.குமார்.

திங்கள், 1 நவம்பர், 2010

அப்பா


சொந்த ஊருக்கு போய் பல வருடங்களாகிவிட்டது. அமெரிக்கா வந்து சில வருடங்களில் உடன் வேலை பார்த்த லிசாவிடம் காதல் கொண்டு அப்பாவின் அனுமதியை எதிர்பார்த்து அது பொய்த்துப்போன ஒரு மழைநாளில் எனது நண்பர்களின் ஆதரவோடு அவளை கரம்பிடித்தேன். என் திருமணத்தை அப்பாவிற்கு தெரிவித்தபோது காட்டுக்கத்தலாய் கத்தினார்.இனி நீ எனக்கு மகனே இல்லை... இங்க சொந்தம் இருக்குன்னு நினைச்சுக்கிட்டு வராதே... எல்லாரும் செத்தாச்சு... என்று போனை வைத்தவர்தான் அதன் பிறகு நான் பலமுறை அழைத்தும் அவர் பேச மறுத்துவிட்டார். எனக்கு ஊர் நினைவுகளை அடிக்கடி அப்டேட் செய்பவன் எனது உயிர்த்தோழன் முருகன் தான்.

வாழ்வியல் மாற்றங்களோடு வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தன... எனது திருமண வாழ்க்கைக்கும் அப்பாவின் பிடிவாதத்திற்கும் ஆயிற்று பத்து வருடங்கள் ...

இந்த பத்து வருடத்தில் நான் என் ரத்த சொந்தங்களின் பேச்சைக்கூட கேட்க முடியாத பாவியாகிவிட்டேன். காதல் அவ்வளவு கொடியதா? என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. நம் மனதுக்குப் பிடித்தவளை மனைவியாக்கிக் கொள்வதை ஏன் இந்த பெற்றோர் விரும்புவதில்லை என்பது எனக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது... நாமும் நாளை அவர்கள் போல்தானோ என்பதும் தெரியவில்லை.

நானும் தினம் என் பெற்றோரை நினைக்காத நேரமில்லை. "ராம்... நீ வேணா ஒரு தடவை இந்தியா பொயிட்டு அப்பா, அம்மாவை பாத்துட்டு வா... உன்னைய நேர்ல பாத்தா அவங்க கோபம் மாறலாம்" என்று லிசா பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறாள். இருந்தும் அப்பாவின் பிடிவாதம் தெரிந்திருந்ததால் சொந்த ஊருக்குப் போய் அவமானப்பட மனதில்லாமல் மறுத்துவிட்டேன்.

என்ன செய்ய காதல் மனைவிக்காக காத்த பெற்றோரை இழந்தது தவறுதான்... அவர்களுக்காக இவளை ஒதுக்கியிருந்தால் நல்ல மனைவியை இழந்திருப்பேனே. என் அண்ணனுக்கு ஜாதகம் பார்த்து பத்துப் பொருத்தத்துடன் தான் கல்யாணம் செய்து வைத்தார் அப்பா. இருந்தும் மனம் ஒத்துப்போகாததால் விவாகரத்துப் பெற்று விட்டதாக முருகன் மூலம் அறிந்தேன். அப்படியிருக்கு மனம் மட்டுமே பார்த்த எங்கள் வாழ்க்கை நாளுக்கு நாள் அதிக அன்புடந்தானே மலர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நினைவுகளுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு லாப்டாப்பை எடுத்துக் கொண்டு

"லிசா டார்லிங்..."

"என்னப்பா..."

"நான் கிளம்புறேன்... நீ பசங்களை ஸ்கூல்ல விட்டுட்டு போறியா?"

"ஓகே... அதை நான் பார்த்துக்கிறேன்... நீ கிளம்பு..."

"ஓகே...பை..."

காரை சீரான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தவனின் செல்போன் சிணுங்கியது.

"அலோ முருகா... என்னடா இந்த நேரத்துல..."

"ராமா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... வீட்லயா... ஆபிஸ்லயா..."

"இப்பதான் ஆபிஸ் போறேன்.... என்ன விஷயம் சொல்லு...எனி திங் இம்பார்டண்ட்"

"ம்... காலையில அப்பா வந்திருந்தார்..."

காரின் வேகம் குறைந்தது... " என்ன விஷயமுடா... அவங்க உடம்புக்கு ஒண்ணுமில்லையே..."

"அதெல்லாம் இல்லடா..."

"அப்புறம் என்ன சொன்னார்... அண்ணன் வாழ்க்கைப் பிரச்சினை தொடர்பா வந்தாரா..."

"இல்லடா... உன் விஷயமா வந்தாருடா..."

"என் விஷயமா? என்னடா சொத்து தாராறாமா?" சிரித்துக் கொண்டே கேட்டான்.

"ஜோக்கடிக்கிறியா... அவருக்கு உன்னை பார்க்கணுமாம்..."

"எ... என்னடா...சொல்றே..." என்றவன் அதற்கு மேல் காரை செலுத்த முடியாமல் ரோட்டோர பார்க்கிங் பார்த்து நிறுத்தினான்.

"ம்... சொல்லுடா..."

"அதாண்டா... இப்ப அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியலை... அவங்க உன்னைய பார்க்கணுமின்னு நச்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்க... ஆரம்பத்துல மிடுக்கா இருந்த அப்பா இப்ப அம்மா சொல்றதை ஆமோதிக்க ஆரம்பிச்சிட்டார்... இன்னைக்கு காலையில வந்து தயங்கித் தயங்கி பேசினார்... உன்னைய பார்க்கணுமாம்... உடனே வரச்சொல்லுப்பா அப்படின்னு சொன்னார். நான் உங்கிட்ட அவரையே பேச சொன்னப்ப மறுத்துட்டார். "

"வந்தா பேசுவாராடா..." ஆவலாய் கேட்டான்.

"கண்டிப்பா பேசுவார்... இப்ப நீ கூப்பிட்டாலும் பேசுவார்..."

"மாட்டாருடா.... வந்தா பேசுவார்னு சொல்லு... ஆனா கூப்பிட்டா பேசமாட்டார்.... அவர் கௌரவம் தடுக்குமுடா.." பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

"இல்ல ராமா பேசுவாருடா... அண்ணன் வாழ்க்கை அப்படி ஆனதுல இருந்து அவரு மனசொடிந்து பொயிட்டாருடா... இப்பல்லாம் அவரு வெளியில கெத்தாக் காட்டிக்கிட்டாலும் மனசுக்குள்ள முழுக்க முழுக்க உன்னை சுமந்துக்கிட்டுதாண்டா இருக்காரு... நேத்து என்னை பார்க்க வந்தோப்பக்கூட நம்ம வீட்ல உன் குடும்ப போட்டாவை பெரிசா வச்சிருக்கேன்ல... அதை தடவிப்பார்த்து கண்கலங்கினாராம்... சந்தியா சொன்னா... அதோட இல்லாம அகிலாவை பார்த்து அப்படியே அப்பத்தா மாதிரியிருக்காலம்மான்னும் லாவண்யாவை பார்த்து கொஞ்சம் என்னமாதிரி இருக்கான்னும் சொல்லி பெருமைப்பட்டுக்கிட்டாராம்".

"என்னடா சொல்றே... அப்பாவா.... சாகுற வரைக்கும் பேச மாட்டேன்னு சொன்னவருடா... அதே மாதிரி பத்து வருஷமா ஒரு வார்த்தை பேசலையேடா..." அழுகை வந்தது.

"அதைவிடு... உங்க அப்பாவோட செல் நம்பரை குறிச்சுக்கோ... அவருக்கு கூப்பிடு "

"எப்படிடா... பேசலைன்னா..."

"அவரு பேசாட்டியும்... அம்மா பேசுவாங்கடா"

"சரி சொல்லுடா" என்றவன் அவன் சொல்லச்சொல்ல பதிந்து கொண்டான்.

"சரிடா நான் இப்ப டிரைவிங்ல இருக்கேன். ஆபீஸ் போனதும் அப்பாகிட்ட பேசிட்டு உனக்கு கூப்பிடுறேன் என்ன" என்றபடி போனை கட் செய்துவிட்டு காரை செலுத்தினான். மனசுக்குள் சந்தோஷமாய் இருந்தாலும் நெஞ்சை எதோ அழுத்துவது போல் இருந்தது.

அலுவலகம் சென்றதும் முதல் வேலையாக லிசாவை கூப்பிட்டான்.

"என்னப்பா... காலையில போன் பண்றே... எனி திங் சீரியஸ்"

"நோ சீரியஸ்... காலையில உங்க அண்ணன் போன் பண்ணினான்"

"யாரு முருகண்ணனா... என்னவாம்? அண்ணி, குழந்தைங்க எப்படியிருக்காங்கலாம்..."

"எல்லாரும் நல்லாயிருக்காங்களாம்... அவன் போன் பண்ணினது ஒரு இம்பார்ட்டண்ட மேட்டருக்காக..."

"பீடிகை போடாதப்பா... புராஜக்ட் மேனேஜர் வேற பக்கத்துல இருக்கான்... முறைச்சு முறைச்சு வேற பாக்குறான் கடுவன் பூனையாட்டம்..."

"ஏய் கேட்டுடப் போகுது..."

"கேட்டா என்ன அவனுக்குதான் மொழி புரியாதுல்ல.... அதானே நமக்கு அட்வான்டேஷ்... போன்ல அவனை திட்டிக்கிட்டே அவனைப்பார்த்து சிரிச்சா... அவனும் கையை உயர்த்தி சிரிப்பான். சரி நீ விஷயத்துக்கு வாப்பா"

"அப்பா அவனைப் பார்க்க வந்தாராம்"

"இதுல என்ன இருக்கு... அவரு அடிக்கடி முருகண்ணன் வீட்டுக்கு வருவாருன்னு அண்ணந்தான் அடிக்கடி சொல்லுமே"

"இரு முழுசா கேளு... அவருக்கு என்னைய பாக்கணுமாம்"

"எ... என்னப்பா சொல்றே... நிஜம்ம்ம்மா" திண்றினாள்.

"ஆமா... வரச்சொன்னாராம்"

"ஐய்யோ... உன்னோட பத்துவருஷ பரிதவிப்புக்கு பலன் கிடைச்சாச்சி.... அப்புறம் என்ன எப்பபோகலாம்?"

"நம்பர் குடுத்தான் அவர்கிட்ட பேசிட்டு முடிவெடுக்கலாம். அவரு எதாவது வேகத்துல சொல்லிட்டு அப்புறம் நாம போன் பண்றப்ப வரவேண்டான்னு சொல்லிட்டா..."

"அப்படியெல்லாம் சொல்லமாட்டரு... நீ பேசுப்பா..."

"எனக்கு நெர்வஸா இருக்கும்மா... நீ பக்கத்துல இருந்தா..."

"இங்க பாருப்பா... இதெல்லாம் தள்ளிப்போடுற மாட்டரே இல்லை. நான் இப்ப அங்க உடனே வரமுடியாது. பெர்மிஷன் கேட்டாலும் ஒன்னவர் டிராவல் பண்ணனும்... நாட் பாஸிபில்... சோ... நீயே பேசு... பேசிட்டு கூப்பிடு..."

"ஓகே... "



செல்போன் அடித்துக் கொண்டே இருந்தது யாரும் எடுக்கவில்லை. மூன்றாவது முறை எடுத்து அலோ என்றழைத்த குரலைக் கேட்டதும் அம்மா என்று தெரிந்து கொண்டார்.

"யாரு பேசுறியா... அவுக வெளிய போயிருக்காக... வந்தோடனே பேச சொல்றேன்..."

"அம்மா..." குரல் அடைத்தது.

"சந்திரா..." அம்மாவின் குரல் உடைந்தது. ராமச்சந்திரனான நான் எல்லாருக்கும் ராம் ஆனபோது அம்மாவுக்கு மட்டும் இன்னும் சந்திரன் தான்.

"அம்மா... நல்லாயிருக்கியா..?" அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டேன்.

"ம்... எப்படியிருக்கே சந்திரா... புள்ளைங்க நல்லா இருக்குங்களா?" நலம் விசாரித்த அம்மா ஏனோ லிசாவை தவிர்த்தாள்.

"எல்லாரும் நல்லா இருக்கோம்மா... அப்பா..." அதற்கு மேல் பேச வரவில்லை.

"வெளியில போனாரு... இப்ப வந்துடுவாரு..."

"சரிம்மா... அண்ணன் எப்படியிருக்கு..?"

"அவன் நிலமைதாண்டா ரொம்ப மோசம்... கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னுட்டு பிடிவாதமா இருக்கான்."

"ம்..."

"இந்தா அப்பா வந்துட்டாரு... என்னங்க நம்ம சந்திரன்..."

அங்கு அமைதி நிலவ, எனக்குள் பதட்டமானது.

"அப்பா.... அப்பா... அலோ அப்பா.." கத்திக் கொண்டேயிருந்தேன்.

"சந்திரா அவரு மாறினாலும் அவரோட வரட்டுக்கவுரவம் இன்னும் மாறலை எப்ப வாரேன்னு என்னைய கேக்கச் சொல்றாரு"

"அம்மா... அப்பா பேச மாட்டாராம்மா..." அழுகை வந்தது.

"இங்க வந்தியன்னா எல்லாம் சரியாகும்... அவருதானே உன்னை வரச்சொன்னாரு... பேசாம எங்க போகப் போறாரு... சரி எப்ப வாரே..?"

"கம்பெனியில லீவு வாங்கிட்டு போன் பண்றேம்மா..." என்றவன் சில விஷயங்களை பேசிவிட்டு போனைவைத்தான். பின்னர் முருகனுக்கும் லிசாவும் போன் செய்து விஷயத்தை சொன்னான்.



அடுத்த ஒரு வாரத்துக்குள் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணி இந்தியா செல்ல விமான டிக்கெட்டும் பதிவு செய்துவிட்டான். எப்ப வரும் என்று காத்திருந்த அவர்களுக்கு அந்த நாளும் விரைவில் வந்தது. அம்மா, அப்பா, அண்ணன், முருகன் குடும்பம் என எல்லாருக்கும் பாத்துப்பாத்து வாங்கிய பொருட்களுடன் சென்னை விமான நிலையத்தில் இறங்கியபோது ராமுக்கு அழுகையே வந்துவிட்டது.

"ப்ளீஸ் ராம் கண்ட்ரோல் யுவர்செல்ப்..." என்று ஆதரவாய் அவனைப் பற்றிக்கொண்டாள் லிசா.

வெளியே அவனுக்காக காத்திருந்தான் முருகன்...அவன் பின்னே அம்மா அப்பாவை தேடினான் ராம். அவர்களைக் காணவில்லை.

அவனை கட்டிப்பிட்த்துக் கொண்டவன், "என்னடா... அப்பா, அம்மாவைக் காணோம்" என்றான்.

"வீட்ல இருக்காங்க... வா போகலாம்..." என்றபடி காருக்கு அழைத்துச் சென்றான்.

"என்னடா இது... அவங்க வருவாங்கன்னு எவ்வளவு சந்தோஷமா வந்தேன். இப்படி பண்ணிட்டாங்களே..." என்று புலம்பியவன், "சாரிடா... உன் தங்கச்சி கூட போன்ல பேசியிருந்தாலும் இப்பதான் நேர்ல பாக்குறே... அறிமுகம்கூட செய்யலை..."

"எங்களுக்கு அறிமுகம் தேவையில்லை..." என்று இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல...

"இருந்தாலும் ஒரு முறை இருக்குல்ல... இவங்கதான் லிசா... மை டார்லிங்.... இவங்க அகிலா, அவங்க லாவண்யா... ஓகே"

"அகி, லாவ் இது உங்க மாமா முருகன்..."

"எங்களுக்கு நல்லா தெரியும்பா... இந்தியால எங்களுக்கு தெரிஞ்ச சொந்தம் எங்க முருகன் அங்கிள்தான்... "

"சரி... சரி... எதோ அறிமுகப்படுத்தினா எல்லாரும் காலை வாருறீங்களே" என்றான் ராம்.



காரை நேராக நகரின் மையப்பகுதியில் இருக்கும் பிரபல மருத்துவமனையான புனிதா மருத்துவமனைக்குள் நுழைத்தான் முருகன்.

"இங்க எதுக்குடா... யாரையாவது பார்க்கப் போறியா?"

"சாரிடா ராம்... அப்பாவுக்கு..." மேலே சொல்லுமுன்...

"அப்பாக்கு என்னடா ஆச்சு..." பதறினான் ராம்.

"ரெண்டு நாளைக்கு முன்னால கை, காலெல்லாம் இழுத்துக்கிச்சு... பேச்சும் வரலை... டாக்டர்ஸ் சரி பண்ணிடலாமுன்னு சொல்லியிருக்காங்க..."

"இதை ஏண்டா எங்கிட்ட அப்பவே சொல்லலை..." உடைந்தான்.

"பல வருஷத்துக்குப் பின்னால சந்தோஷமா வாரான்... அவனுக்கு எதுவும் தெரிய வேண்டான்னு அம்மாவும் அண்ணனும் சொல்லிட்டாங்கடா... அதான்"

"அப்ப அப்பா எங்கிட்ட பேச மாட்டாரா.... அவரு சொன்ன சொல்லு உண்மையாகிடுமா?" கதறினான். அவன் அழுவதைப் பார்த்து அனைவரும் அழுதனர்.

"இல்ல ராம்... அப்பா உங்கிட்ட பேசுவாங்க... காம்டௌன் ராம்... காம்டௌன்..." தேற்றினாள் லிசா.

அப்பா ராமான்னு கூப்பிடுவார் என்ற நம்பிக்கையில் கடந்த ஒரு வாரகாலமாக உறங்கும் சமயம் தவிர மற்ற நேரமெல்லாம் அவர் அருகிலேயே இருந்தான்.அவன் நம்பிக்கை வீணாகாமல் இருக்கட்டும்.

-'பரிவை' சே.குமார்.