மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 19 மே, 2019

மனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...

ழுதி முடித்திருக்கும் 'கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி...

எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

************

னோ மனசுக்குள் யமுனா வந்தாள்.

இப்போது எங்கே இருப்பாள்…? ஊருக்குப் போயிருப்பாளா…? குடும்பம் குழந்தையின்னு சந்தோஷமா இருப்பாளா…? இல்லை இந்தச் சாக்கடையில்தான் இன்னும் கிடக்கிறாளா…? என்ற கேள்விகள் அவனுள் எழ, கணிப்பொறியை ஆப் பண்ணி வைத்துவிட்டு எழுந்தான்.

அறையின் ஏசிக்குள் பிரியாணியும் சரக்கும் கலந்த வாசனை அடித்தது.

குறட்டைச் சப்தம் மழைநாளில் அவன் ஊரில் இரவு நேரத்தில் வயல்களில் கத்தும் தொருக்கட்டையை ஞாபகப்படுத்தியது.

தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து ‘மடக்… மடக்…’கெனத் தண்ணீர் குடித்தான்.

ஏனோ தெரியவில்லை… சில வாரங்களாய் பிரியாணி சாப்பிட்ட பின் தண்ணீர் தாகமாய் இருக்கிறது. எதுவும் சேர்மானம் சரியில்லையோ என்னவோ… எவ்வளவு குடித்தும் அடங்கவில்லை… மீண்டும் தண்ணீர் பிடித்துக் குடித்தான்.

வயிறு நிறைந்தது… தாகம் அடங்கவில்லை.

மெல்ல வெளியில் வந்தான்.

ஹாலில் அன்பும் இலியாசும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

பால்கனிக்குப் போனான்… வெயில் அவனை விரட்டியடித்தது.

கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

வராண்டா வெறிச்சோடிப் போய்க் கிடந்தது… யாருமில்லை.

லிப்டில் கீழிறங்கி அருகிருக்கும் அபுதாபி மாலில் போய் சுற்றிவிட்டு வரலாமா எனத் தோன்றியது.

இந்த வெயில்ல… அங்க போகணுமா…? என்ற எண்ணம் அதற்குத் தடை போட்டது.

அதிக வெக்கையாக இருந்தது. ஏசியில்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்பதாய்ப்பட்டது. இந்த உடம்பு எப்படி மாறிவிட்டது என்று நினைத்துக் கொண்டான்.

மாடிப்படியில் போய் அமர்ந்தான்.

யமுனா ஞாபகத்துக்கு வந்தாள்.

பக்கத்தில் அவள் அமர்ந்திருப்பது போல் தோன்றியது.

தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

இதே போன்றோரு மாடிப்படியில்தானே அவளைப் பார்த்த கடைசித் தினத்தில்…

பெருமூச்சு விட்டான்.

எப்படியான வாழ்க்கைக்குள் மாட்டிக் கொண்டுவிட்டாள்.

அவளை அதிலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வரவில்லை.

அடுத்தவன் பொண்டாட்டிதானே என்பதாலா…?

அந்த வேலையை ஏற்றுக் கொண்டு விட்டாள் என்பதாலா…?

யாரோ ஒருத்திக்காக நாம் ஏன் போலீஸ் ஸ்டேசனுக்கு அலைய வேண்டும் என்பதாலா…?

யோசனைகள் அவனுக்குள் சுற்றிச் சுற்றி வந்தன.

ஊட்டிக்காரியும் சுதாகரும் இந்நேரம் என்ன செய்வார்கள்…? 

மனதை மாற்ற முயன்று தோற்றான்.

மீண்டும் யமுனா அந்த பச்சை நைட்டியில்…

படியில் இருந்து எழுந்தான்.

அவள் இழுத்து அணைத்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தாள்.

அவளிடமிருந்து விலகி, வேகவேகமாக படியிறங்கி வெளியே போனான்.

அருகிலிருந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து ஒரு லைம் மிண்ட் சூஸ் எடுத்து காசு கொடுத்து விட்டு, குடித்துக் கொண்டே நடந்து பார்க்கை அடைந்தான்.

அந்த நேரத்தில் அங்கே சில குடும்பங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள்.

மொபைலில் மணி பார்த்தான் 4.45 ஆயிருந்தது.

ம்… மணி ஆச்சு… இனி கூட்டம் வரும் என்று நினைத்தபடி ஒரு சேரில் அமர்ந்து வேள்பாரியை வாசிக்க ஆரம்பித்தான்.

அவனக்கு இருபுறமும் யமுனாவும் மலாமாவும் வந்து அமர்ந்தார்கள்.

அவர்களின் மூச்சுக்காற்று அவனைச் சுட ஆரம்பிக்க, அவனுக்குத் மெல்லத் தலை வலி ஆரம்பித்தது.
***********
இது சற்றே என் பணியில் இருந்து மாறியிருக்கும்...


சில உண்மைகள் கலந்த கதை...

நல்லா இருக்கா?
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகுதி கதையே அருமை...

Ramesh DGI சொன்னது…

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்லாருக்கு குமார். உங்கள் பாணியிலிருந்து சற்று வேறாகத்தான் இருக்கிறது. வாழ்த்துகள் குமார்.

துளசிதரன், கீதா